Sunday, June 1, 2014

Gone Girl

திருமண நினைவுநாளன்று மனைவி வீட்டிலிருந்து காணாமல் போனால் ஒரு கணவனின் நிலை எவ்வாறாக இருக்கும்? எல்லா கணவர்களின் உணர்வுகளும் ஒரே மாதிரியாக இருக்காது என்பது உண்மையாயினும் திருமணாகி ஐந்து வருடங்கள் பூர்த்தியான நிலையில் வீடு திரும்பும் நிக் டன் தன் மனைவி காணாமல் போய்விட்டாள் என்பதை அறியும்போது அக்கறையான கணவன் ஒருவன் கொள்ளக்கூடிய நிலையை விட சற்று குறைந்த அதிர்ச்சி நிலை கொண்டவனாகவே Gone Girl நாவலில் கதாசிரியை  Gillian Flynn ஆல் சித்தரிக்கப்படுகிறான். அவனை சூழ்ந்திருப்பவர்களும் தொடரும் நாட்களில் அதையே உணர்கிறார்கள். மனைவி காணாமல் போகும் நிகழ்வுகளில் முதல் சந்தேக நபராக கணவர்களே காவல்துறையால் கருதப்படுகிறார்கள். கணவனை சந்தேகத்திற்கு இடமற்ற ஒருவன் என தெளிவு செய்த பின்பாகவே விசாரணைகள் ஏனைய திசைகளில் முனைப்பு பெறுகிறது. ஆனால் நிக் டன்னை பொறுத்த வரையில் அவனை சுற்றி சந்தேகங்கள் வலுப்பெறவே செய்கின்றன.

நிக் டன் ஒரு இதழியலாளன். விருந்து ஒன்றில் அமியுடன் அறிமுகமாகி பின் அது திருமணத்தில் முடிகிறது. அமி இதழ்களில் உளவியல் கணிப்புக்களை கேள்வி பதில் வடிவ புதிர்களாக எழுதுபவள். வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவள். இணைய ஊடகத்தின் வளர்ச்சி இருவரையுமே அவர்களின் வேலையை இழக்க வைக்கிறது. அவர்கள் வாழ்க்கை அதன் அர்த்தமிழக்கும் ஆரம்பத்தை நோக்கி நகர்கிறது. இந்நிலையில் நிக்கின் தாய் புற்றுநோய்க்குள்ளாக அவளை தன் தங்கையுடன் சேர்ந்து பராமரிக்கும் முகமாக தன் பிறந்த ஊரான காத்ஹேஜிற்கு தன் மனைவியுடன் நீயூயார்க் நகரை விட்டு வந்து சேர்கிறான் நிக்.

நிக்கும், அமியும் கதையின் ஆரம்பத்தில் மிகப் பொருத்தமான ஒரு ஜோடியாகவே காட்டப்படுகிறார்கள். வாழ்க்கையும் மகிழ்வான ஓன்றாகவே இருக்கிறது. இணைய ஊடகத்தின் ஆதிக்கம் எப்படி அச்சு ஊடகத்தை பலவீனமாக்கியதோ, அப்பலவீனம் எப்படி பல இதழியலாளர்களை வேலையை விட்டு நீக்கியதோ, அவ்வூடகவியலாளர்கள் தம் நாட்களை பின் எப்படி கழித்தார்களோ என்பது இங்கு நிக், அமி ஜோடி வழியாக சொல்லப்படுகிறது. குறிப்பாக அமியின் நாட்குறிப்புக்கள் வழியாகவே அவர்களின் வாழ்க்கை பற்றி அதிகம் அறிந்து கொள்ள  முடிகிறது. ஒரு புறம் அமி காணாமல் போனதன் பின்னான நிகழ்வுகள் பயணிக்க மறுபுறம் அமியின் நாட்குறிப்புக்கள் நிக்கிற்காக அவள் என்ன சமரசங்கள் செய்தாள் என்பதை கூறுகிறது. தம் திருமணம் தோல்வியுறக்கூடாது என்பதற்காக அவள் எடுத்த முடிவுகளை விபரிக்கிறது. நிக் எப்படியான ஒரு சுயநலக்காரன் எனும் பிம்பத்தை தன் சொற்களால் செதுக்குகிறது. படிப்படியாக அமியின் நாட்குறிப்பு நிக் எனும் பாத்திரத்தின் மீதான எதிர்மறை உணர்வுகளை நாவலில் உருவாக்க ஆரம்பிக்கிறது.

மறுபுறம் நிக் தன் மனைவி காணாமல் போனது முதல் சில விடயங்களை ஏனையவர்களிடமிருந்து மறைப்பவனாகவே இருக்கிறான். பொய்களையும் சொல்கிறான். இருப்பினும் அவன் மனைவி காணாமல் போன நிகழ்வு அவனிடம் அச்சத்தை உண்டு பண்ணுகிறது. அவளுக்கு என்ன ஆயிற்று எனும் கேள்வி அவனிடம் எழவே செய்கிறது. ஆனால் தொடரும் விசாரணைகளும் சாட்சிகளும் அவனுக்கு சாதகமாக இருப்பது இல்லை. அவன் கூறக்கூடிய பொய்களையும், மறைக்க விரும்பும் தகவல்களையும் மறுபுறம் அமியின் நாட்குறிப்பு தெளிவாக்கி கொண்டே இருக்கிறது. காவல்துறையின் சந்தேகம், ஊடகங்களில் நிக் மீதான வெறுப்பு அலை, கார்த்ஹேஜ் எனுமிடத்தில் வாழ்ந்திருப்பவர்களின் எண்ணங்கள் எல்லாம் நிக்கையே அவன் மனைவியின் மறைவுடன் தொடர்பு படுத்தி நிற்கின்றன... நிக்கிற்கும் அவன் மனைவி அமியின் மறைவிற்கும் தொடர்பு உண்டா?! நிக் என்ன ஆனான்? அவன் மனைவி அமி என்ன ஆனாள்?! இக்கேள்விகளிற்கான விடைகளாக நீளும் கதை வழமையான வெகுஜன திரில்லர்கள் வழங்கும் முடிவிலிருந்து விலகியே நிற்கிறது.

அச்சு  ஊடகத்தின் மடிவு, வாசகர்களை இழந்த வெற்றி பெற்ற நாவலாசிரியர்கள் நிலை, வீட்டுக் கடன் திட்டத்தால் முடங்கிப்போன ஒரு நகர், வேலையிலா திண்டாட்டத்தின் விளைவுகள், ந்யூயார்க் மற்றும் காத்ஹேஜ் எனும் இரு நகரில் வாழ்ந்திருக்க கூடிய மனிதர்களின் வாழ்வியல் முறைகள் இவற்றினூடு தன் கதையை சிறப்பாக சொல்கிறார் கதாசிரியை ஜில்லியன் ஃப்ளைன். ஆரம்ப பக்கங்களில் கதை சற்று வேகமின்றி நகர்ந்தாலும் படிப்படியாக அது புதிர்களையும், சுழல்களையும், அவற்றால் சூழப்பட்ட திருமண உறவுகளையும் கச்சிதமாக விபரிக்கிறது. கதையின் பாதியில் வரும் ஒரு திருப்பத்தின் பின் கதை எடுக்கும் வேகம் அபரிமிதமானது. வாசிப்பதை நிறுத்த இயலாத ஒரு நிலை ஏற்படுவதை என்னால் உணர முடிந்தது. இக்கதையில் வரும் ஒரு பாத்திரம் என்னை மிகவும் அச்சத்துக்கு உள்ளாக்கியது. எம் சமூகம் எவ்வகையான மனிதர்களை உருவாக்கி செல்கிறது எனும் அச்சமே அது.

புத்திசாலித்தனமும், அவதானிப்பும், திட்டமிடலும் எவ்வகையான விளைவுகளை ஒரு மனிதன் வாழ்வில் ஏற்படுத்தகூடும் என்பது நாவலின் முடிவுவரை திகிலை தரக்கூடியதாகவே இருக்கிறது. தகவல் கிட்டங்கிகளாக மட்டும் மாறிவிட்ட இன்றைய ஊடகங்கள் எவ்விதமான திறமைசாலிகளை உருவாக்க முடியும் என்பதும் இங்கு ஒரு பார்வையாக விரிகிறது. காவற்துறையின் இயலாமை, காட்சி ஊடகங்கள் ஒரு மனிதன் மீது உருவாக்ககூடிய வெறுப்பு அலை, அதன்மீது சுகமாக பயணிக்கும் பாமர சமூகம், சமூகத்தின் அபிமானத்தின் வழி இன்று மனம் தடுமாறக்கூடிய ஜூரிகள் என ஒரு குற்றத்தின் பின்பான சிறப்பான ஒரு அலசலாகவும் இந்நாவலை பார்க்கலாம். Gone Girl நம்ப முடியாத எதார்த்தம் ஒன்றின் சமரசங்கள் நம் சமூகத்தின் விழுமியங்கள், அறங்கள் மீது எள்ளலான புன்னகையுடன் வேரூன்றுவதைக் காட்டி நிற்கிறது.

4 comments:

  1. க.காதலரே,

    இந்த புத்தகத்தின் அட்டையில் A Novel என்று போட்டிருக்கிறதே? அப்படியானால் என்னை போன்ற சிறுவர்கள் படிக்க கூடாதா (A) ? என்று உங்கள் வாசகர் குஜிலி கும்பான் கேட்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. அப்படி போட்டதே நம்மை போன்ற பால்மணம் மாறா பாலகர்கள் படித்து இன்புறுவதற்காகதான் குஜிலி :)

      Delete
    2. இதில் இப்படி ஒரு உள்ளர்த்தம் இருப்பது தெரியாமல் போயிற்றே? :)

      Delete