Thursday, February 11, 2010

ஓநாய் மனிதன்


அமெரிக்காவில் இருந்து லண்டன் நகரிற்கு தன் நாடகக் குழுவுடன் விஜயம் செய்து, மேடை நாடகங்களில் திறம்பட நடித்துக் கொண்டிருக்கிறான் லாரன்ஸ் டால்பாட் [Benicio Del Toro].

லாரன்ஸ், லண்டன் நகரில் இருப்பதை அறிந்து கொள்ளும் க்வன் கொன்லிஃப் [Emily Blunt] எனும் இளம் பெண் அவனிற்கு ஒரு மடலை எழுதுகிறாள். லாரன்ஸின் சகோதரனாகிய பென் டால்பாட்டிற்கு திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணாக தன்னை அறிமுகம் செய்து கொள்கிறாள் க்வன். பிளாக்மூர் கிராமத்தில் பென் மர்மமான முறையில் காணாமல் போய்விட்டதை கடிதத்தில் தெரிவிக்கும் க்வன் அக்கடிதத்தின் வழி லாரன்ஸின் உதவியையும் வேண்டுகிறாள்.

தன் தாயின் மரணத்தின் பின்பாக சிறு வயதிலேயே தான் பிறந்த ஊராகிய பிளாக்மூரை விட்டு கசப்பான நினைவுகளுடன் அமெரிக்கா சென்றவன் லாரன்ஸ். அவனிற்கும் அவன் தந்தைக்கும் இடையிலான உறவில் ஒரு குளிர் உறைந்திருந்தது. தன் சகோதரன் மேல் கொண்ட அன்பால் தன் பிறந்த ஊரான பிளாக்மூரிற்கு பல வருடங்களிற்கு பின் திரும்புகிறான் லாரன்ஸ்.

பிளாக்மூர் கிராமத்தில் இருக்கும் அவன் குடும்பத்தின் இருள் அடர்ந்த பிரம்மாண்டமான மாளிகையில் அவனை எந்தவித ஆரவாரமுமின்றி வரவேற்கிறார் லாரன்ஸின் தந்தை ஜான் டால்பாட் [Anthony Hopkins]. ஒழுங்கற்ற நிலையில் இருக்கும் அம்மாளிகையின் வரவேற்பறையில் வைத்து, காணாமல் போன பென்னின் இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்ட தகவலையும் எவ்வித உணர்சிகளையும் காட்டாது அவனிற்கு தெரிவிக்கிறார் அவர்.

இறந்து போன தன் அன்புச் சகோதரனின் உடலைப் பார்வையிடுவதற்காக அது வைக்கப்பட்டிருக்கும் கசாப்புக் கடைக்கு செல்கிறான் லாரன்ஸ். கசாப்புக் கடையில் பென்னின் உடலைப் பார்வையிடும் லாரன்ஸ் தன் சகோதரனின் உடல் மிகக் கொடூரமான முறையில் கிழித்துக் குதறப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறான்.

wolfman-2010-11906-1465874295 பென்னை ஒரு கொடிய மிருகம்தான் அடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார்கள் ஊர்மக்கள். ஸ்காட்லாண்ட்யார்டின் பொலிஸ் அதிகாரியோ மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவனின் கைங்கர்யம்தான் இது என்கிறார். ஊரின் மிக முக்கியமான கேந்திரப் புள்ளியான மதுபான விடுதியில்! வம்பு பேசுபவர்கள் இது ஊரில் தற்காலிகமாக முகாமிட்டிருக்கும் ஜிப்சிகளிடம் இருக்கும் கரடியின் விளையாட்டாகவே இருக்க வேண்டும் என அடித்துச் [ தண்ணியை] சொல்கிறார்கள்.

தன் வீட்டின் இருளில் தங்கியிருக்கும் லாரன்ஸை அவனது பழைய நினைவுகள் வந்து தாக்குகின்றன. வலி நிறைந்த நினைவுகள் அவை. தன் தாயின் மரணம் என்றும் அவன் மனதில் தங்கியிருக்கிறது; அவளின் அழகான முகம் போல. தன் சகோதரனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் லாரன்ஸ், அக் கொடிய மரணத்தின் பின் ஒளிந்திருக்கும் மர்மத்தை கண்டறிவது எனும் தீர்மானத்திற்கு வருகிறான்.

wolfman-2010-11906-22863848 ஊர் மக்கள், முழு நிலவு வரும் இரவில் கொடிய மிருகம் தன் அட்டகாசத்தை நிகழ்த்தும் என்று திடமாக நம்புகிறார்கள். பிளாக்மூர் கிராமத்தை சேர்ந்த மூன்று நபர்களின் கல்லறைகள் இதற்கு மெளன சாட்சிகளாக இருக்கின்றன. இவ்வாறான முழு நிலவு வரும் ஒரு இரவில், தன் தந்தை ஜானின் எச்சரிக்கையும் பொருட்படுத்தாது, ஊரில் முகாமிட்டிருக்கும் ஜிப்சிகளிடம் தன் சகோதரன் பென் குறித்து விசாரிப்பதற்காக செல்கிறான் லாரன்ஸ்.

தீயின் பிரகாசத்தினால் சூழப்பட்ட தங்கள் வண்டில்களிலும், கூடாரங்களிலும் தங்கியிருக்கும் ஜிப்சிக் கூட்டத்தில், எதிர்காலம் உரைக்கும் பெண் ஒருத்தியுடன் தன் சகோதரனிடமிருந்த மர்மமான பதக்கம் குறித்து கேள்விகளை எழுப்புகிறான் லாரன்ஸ். இவ்வேளையில் ஜிப்சிக் கூட்டத்தை தாக்க ஆரம்பிக்கிறது ஒரு மூர்க்கமான மிருகம். மிக வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் மனிதர்களை குதற ஆரம்பிக்கிறது அந்த விலங்கு. மனித உடல்கள் துண்டு துண்டாகின்றன. தலைகள் பந்துகள் போல் குருதியைக் கொப்பளித்தவாறே உருள்கின்றன.

இக்குழப்பத்தின் மத்தியில் தரையில் கிடந்த ஒரு துப்பாக்கியை கையில் எடுத்துக் கொள்ளும் லாரன்ஸ், மூர்க்கமான அவ்விலங்கை குறிபார்த்து சுட ஆரம்பிக்கிறான். அந்த மிருகத்தின் வேகம் அதனை துப்பாக்கிக் குண்டுகளிலிருந்து காப்பாற்றுகிறது. முழு நிலவின் ஒளி தயங்கியவாறே எட்டிப்பார்க்கும், புகார் உலவும் மரங்களினூடு அவ்விலங்கை விரட்டிச் செல்கிறான் லாரன்ஸ். ஆனால் அம்மிருகமோ மிகத் தந்திரமாக மறைந்திருந்து லாரன்ஸை மேல் பாய்ந்து அவன் தோளைக் கடித்து கிழித்து விடுகிறது.

wolfman-2010-11906-2016278394 லாரன்ஸை பின் தொடர்ந்து வந்த ஊர்மக்களின் துப்பாக்கி பிரயோகத்தால் அந்த மிருகத்தின் பிடியிலிருந்து காப்பாற்றப்படுகிறான் அவன். படு காயத்திற்கு உள்ளான லாரன்ஸ் அவன் மாளிகைக்கு எடுத்து வரப்படுகிறான். அவன் கதை முடிந்தது என்று நம்பியிருந்தவர்களின் எண்ணங்களை உடைக்கும் வண்ணம் விரைவாக குணம் அடையும் லாரன்ஸ், புதுப் பலம் வந்தவன் போல் உணர்கிறான். இந்நிலையில் இன்னொரு முழு நிலவு நாள் வந்து சேர்கிறது.

கொடிய மிருகத்தினால் கடிக்கப்பட்ட லாரன்ஸ், முழு நிலவு தோன்றும் இரவில் அவனும் ஒரு விலங்காக உருமாறுவான் என்று அச்சம் கொள்ளும் கிராம மதகுருவும், மக்களும் அவனைத் தங்கள் காவலில் வைத்திருக்க விரும்புகிறார்கள். இதற்காக அவன் மாளிகைக்கு வந்து அவனை பலவந்தமாக அழைத்து செல்ல முயலும் ஊரவர்களை தன் துப்பாக்கியைக் கொண்டு மிரட்டி விரட்டுகிறார் அவன் தந்தை ஜான். ஆனால் அன்றிரவு லாரன்ஸை தந்திரமாக மாளிகையின் நிலவறையொன்றில் வைத்து பூட்டி விடுகிறார் அவர்.

இரவில் முழு நிலவு தன் பூரணமான வடிவை அடையும் வேளை, நிலவறையில் அடைக்கப்பட்ட லாரன்ஸின் உடல் மாற்றம் கொள்ள ஆரம்பிக்கிறது. அவனது உடல் ஒரு மிருக வடிவைப் பெற ஆரம்பிக்கிறது. நடக்கும் நிகழ்வின் மீது எந்த சக்தியுமற்றவனாக அதன் வலியான ஒட்டத்தில் கரைகிறான் லாரன்ஸ். அவன் ஒரு நர ஓநாயாக உருமாறுகிறான் ஆனால் அதன் பின் அவன் அறிந்து கொள்ளும் ஒரு ரகசியம் அவனை வஞ்சத்தின் பாதையில் கொண்டு சென்று தள்ளுகிறது….

1941ல் இதே பெயரில் வெளியாகிய ஒரு திரைப்படத்தின் படு மோசமான ரீமேக்தான் The Wolfman எனும் திரைப்படம். படத்தை சலிப்பூட்டும் வகையில் திறமையாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் Joe Johnston.

wolfman-2010-11906-1706137334 படத்தின் ஆரம்பக் காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும், லாரன்ஸ் நர ஓநாயிடம் கடி வாங்கிய பின்பு ரசிகர் மனதில் ஒரு சிறிய எதிர்பார்ப்பு உருவாகிறது. அந்த எதிர்பார்ப்பின் டிகிரியை இன்னும் கொஞ்சம் கூட்டி விடுவதாக இருக்கிறது நர ஓநாயாக மாறிய லாரன்ஸ் தெரிந்து கொள்ளும் அந்த ரகசியம்! ஆனால்!!

அதற்குப் பின் திரைக்கதை லாரன்ஸை மனநல விடுதிக்கு அனுப்பி வைத்து கொடுமையான சிகிச்சை முறைகளை அனுபவிக்க வைக்கிறது, அறிஞர்கள் முன் உளவியல் விஞ்ஞானத்தின் காட்சிப் பொருளாக்குகிறது, ஒரு பூரண நிலவில் லண்டன் நகரக் கூரைகளிலும், தெருக்களிலும் உறுமிக் கொண்டும், ஊளையிட்டுக் கொண்டும் ஓட வைக்கிறது, ரசிகர்களை அரங்கை விட்டு எப்போது கிளம்பலாம் என்று எண்ண வைக்கிறது. படத்திற்கு திரைக்கதை எழுதியிருப்பது Se7en புகழ் Andrew Kevin Baker என்று நம்பவே முடியவில்லை!

திரைக்கதையில் புதுமையோ, விறுவிறுப்போ, திருப்பங்களோ சொல்லிக் கொள்ளுமளவிற்கு கிடையாது. மிருகக் காட்சி சாலையில் இருக்கும் ஒரு போரடித்த ஓநாய் கூட கதையின் மர்மத்தை இலகுவாக கண்டுபிடித்து விடும். 2010க்கு ஏற்ப திரைக்கதையில் நல்ல மாற்றங்களை கொணர்ந்திருக்க வேண்டாமா?

Underworld ல் வரும் கெத்தான ஓநாய்களைப் பார்த்து விட்டு இப்படத்தில் வரும் ஓநாய்களைக் காணும் போது கேவி அழலாம் போலிருக்கிறது. நவீன கிராபிக்ஸ் நுட்பங்களை அதிகம் நாடாது மரபு ஒப்பனை முறைகளை நாடியது எதிர்மறையான விளைவுகளை திரைப்படத்திற்கு அளித்திருக்கிறது. நர ஓநாயாக உருமாறும் காட்சிகள் காமெடி என்றால் ஓநாய்கள் காட்டும் நளினங்கள் செம காமெடி. லண்டன் நகரில் நடக்கும் நர ஓநாயின் ரவுடித்தனம் காமெடியின் உச்சம்.

அதிர வைக்கப் போகிறது என எதிர்பார்த்த அந்தனி ஹாப்கின்ஸின் பாத்திரம் பாதியில் வெடித்த பபிள் கம் குமிழ் போல் சிதறிச் சிதைகிறது. மிரட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த பெனெசியோ டெல் டொரொ ஏமாற்றத்தையே தருகிறார். இவ்விரு பாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் தங்கிவிடாது ஓடுகின்றன. லாரன்ஸிற்கும், க்வனிற்குமிடையில் உருவாகும் அந்தக் காதல் எந்தவித சலனங்களையும் ஏற்படுத்த தவறுகிறது. இக்காதலை வைத்து முடிவில் ரசிகர்கள் மனதை நெகிழ வைக்க முயற்சித்திருக்கும் இயக்குனர்தான் மனதை நெகிழ வைக்கிறார்.

wolfman-2010-11906-624747735 படத்தில் வரும் பின்னனி இசை ஒரு கொடிய தொல்லை. மரண வீட்டில் தமிழ் நாட்டு ஸ்பீல்பெர்க் டி.ராஜேந்தர் அவர்களை பிறந்த நாள் வாழ்த்துப் பாடக் கேட்டுக் கொண்டதுபோல் அந்த இசை பொருத்தமற்ற ஒன்றாக ஒலித்து ஓய்கிறது.

யூனிவெர்சல் ஸ்டூடியோவிடமிருந்து இப்படி ஒரு வெளியீடா! மலிவான கிராபிக்ஸ், ஒப்பனை, அலங்காரம், இசை, திரைக்கதை, இயக்கம் என ஒரு மலிவான படைப்பாக உறுமுகிறது திரைப்படம். இதற்கு விலையாக இரு அருமையான நடிகர்கள் வீணடிக்கப்பட்டது மகா அநியாயம்.

மொத்தத்தில் ஓநாய் மனிதன், ரசிகர்களை கடித்துக், குதறி, கடாசி விடுவதில் சிறப்பான வெற்றி கண்டு எக்காளமாக ஊளையிடுகிறது!

[க்ர்ர்ர்ர்க்ரொர்ர்ர்க்ர்ர்ர்ர்ர்ர்—இது திரையரங்கில் ஒரு புண்ணியவான் வழங்கிய குறட்டை ஒலி. இம்முறை படத்திற்கு ஸ்டாரும் இதுதான்!]

ட்ரெயிலர்

Tuesday, February 9, 2010

நாணல்களுடன் ஆடும் நடனம்


பரந்து விரிந்த நாணல் புற்பரப்பு. காற்று, நாணல்களுடன் நடனமாடிக் கொண்டிருக்கிறது. காற்றின் முனகல் கடல் அலைகள் போல் ஒலிக்கிறது. அந்தப் பழுப்பேறிய புற்பரப்பினூடாக தயங்கிய அடிகளில் நடந்து வருகிறாள் அந்தப் பெண். சற்று வயதானவள். கண்களில் அயர்ச்சி கலந்த சோகம். தன் நடையை ஒரு கணம் நிறுத்தி அழுக்கேறிய தன் கைகளைப் பார்க்கிறாள் அவள். புற்களிற்குள் உறையும் பூச்சிகளின் கீறிய குரல் காற்றுடன் சேர்ந்து கொள்கிறது. மனதில் ஏற்படும் ஏதோ ஒரு உந்தலில் திடீரென நடனமாட ஆரம்பிக்கிறாள் அவள். அந்த நடனத்தில் மெதுவாக அவள் தன்னை மறக்கிறாள். நாணல்களும், காற்றும், அவளும் இணைந்த பெரு நடனத் தருணமது………

டோ யூன், தென்கொரியாவின் ஒரு சிறிய நகரில் தன் தாயுடன் வாழ்ந்து வரும் மன நலம் குன்றிய ஒரு இளைஞன். மூலிகைக் கடை ஒன்றை பிழைப்பிற்காக நடாத்தி வரும் அவன் தாய், அவன் மேல் நிறைந்த பாசமும், அக்கறையும் கொண்டவளாக இருக்கிறாள். மூலிகைக் கடையின் மூலமாக வரும் வருமானம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லாவிடினும் கூட தனது மகனை மிகுந்த ஆதரவுடன் பராமரித்து வருகிறாள் அந்தத் தாய்.

டோ யூனின் சிறந்த நண்பணாக ஜின் டே இருக்கிறான். துடிதுடிப்பான இளைஞன் அவன். டோ யூனின் தாய் அவனை ஜின் டேவுடன் பழக வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டாலும், ஜின் டேவுடன் தன் காலத்தைக் கழிப்பதை டோ யூன் தொடர்கிறான்.

ஒரு நாள் தெருவில் ஜின் டே சகிதம் நாய் ஒன்றுடன் விளையாடிக் கொண்டிருக்கும் டோ யூன்னை பென்ஸ் கார் ஒன்று மோதிவிட்டு நிறுத்தாமல் சென்று விடுகிறது. டோ யூன் அடிபடாது தப்பி விடுகிறான். பென்ஸ் கார் நிற்காமல் சென்றதால் கோபம் கொள்ளும் ஜின் டே, டோ யூனுடன் டாக்ஸி ஒன்றில் பென்ஸை தொடர்ந்து செல்கிறான்.

800px-Mother-05 பென்ஸ் கார் நுழைந்த கோல்ஃப் மைதானத்திற்குள் நுழையும் நண்பர்களிருவரும், மைதானத்தின் கார் நிறுத்தும் பகுதியில் அந்த பென்ஸைக் கண்டு கொள்கிறார்கள். பென்ஸ் காரின் பின்காட்டி ஒன்றை கோபத்துடன் உடைத்து விடுகிறான் ஜின் டே. இதன் பின்பு நண்பர்களிருவரும் காரில் வந்த நபர்களை மைதானத்தில் தேட ஆரம்பிக்கிறார்கள்.

இந்த தேடலின்போது கோல்ஃப் மைதானக் குளத்தில் அமிழ்ந்து கிடந்த கோல்ஃப் பந்துகள் சிலவற்றை தன்னுடன் எடுத்து வைத்துக் கொள்கிறான் டோ யூன். சில மணிநேரத் தேடலின் பின்பாக பென்ஸ் காரில் வந்தவர்களை கண்டு கொள்ளும் நண்பர்களிருவரும் அவர்களுடன் கைகலப்பில் இறங்குகிறார்கள்.

மைதானத்தில் ஆரம்பித்த கைகலப்பு பொலிஸ் நிலையத்தில் வந்து முடிவடைகிறது. இரு தரப்பின் முறைப்பாடுகளையும் பொலிஸ் விசாரிக்கிறது. விசாரணை நடந்து கொண்டிருக்கும் வேளையில் பொலிஸ் நிலைய மேசையிலிருந்த ஒரு அழியா மைப் பேனாவை எடுக்கும் டோ யூன், தன் பெயரை அப்பேனாவினால் கோல்ஃப் பந்துகள் மேல் எழுதுகிறான்.

காரால் ஒருவரை மோதிவிட்டு நிறுத்தாமால் சென்றது தவறு என்று பொலிஸ் கூறும்போது, பென்ஸ் காரில் வந்தவர்கள், தங்கள் காரின் பின்காட்டி உடைக்கப்பட்டுள்ளதை ஆத்திரத்துடன் தெரிவிக்கின்றனர். ஜின் டே, பின் காட்டியை உடைத்த பழியை டோ யூன் மீது சுமத்தி விடுகிறான். இதனால் பென்ஸ் காரில் வந்தவர்களிற்கு நட்டஈடு கொடுத்தாக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான் டோ யூன்.

டோ யூன் பொலிஸ் நிலையத்தில் இருப்பதை அறிந்து கொள்ளும் அவன் தாய், அவனைத்தேடி பொலிஸ் நிலையத்திற்கு வருகிறாள். பொலிசாரிடம் பேசி டோ யூனை ஒருவாறாக வீட்டிற்கு அழைத்து வருகிறாள். பொலிஸ் நிலையத்திலிருந்து திரும்புவர்கள் நன்றாக சாப்பிட வேண்டும் எனக்கூறியவாறே அவனிற்கு உணவு பரிமாறுகிறாள் அவள்.

800px-Mother-10 இருவரும் சாப்பிட்டவாறே உரையாடுகிறார்கள். அவர்கள் உரையாடல்கள் டோ யூனின் பெண் நண்பி மீதாகத் திரும்புகிறது. தனக்கு ஒரு பெண் நண்பி இருப்பதாக தாயிடம் பிடிவாதமாகக் கூறுகிறான் டோ யூன். டோ யூனின் வெற்றுப் பிரதாபங்களைக் கேட்கும் அவள் தன் மகனைப் பார்த்து ஆதரவுடன் சிரிக்கிறாள்.

அன்று மாலை ஜின் டேயைத் சந்திப்பதற்காக மன்ஹாட்டன் எனும் மதுபான விடுதிக்கு செல்கிறான் டோன் யூ. அங்கு ஜின் டேவின் வரவிற்காக காத்திருக்கும் அவன் பீர்களைக் குடித்து சற்றுப் போதையேறி உறங்கிவிடுகிறான். ஜின் டே அன்று அங்கு வரவில்லை. விடுதியில் வாடிக்கையாளர்களுடன் உரசும் பெண்ணுடன் ஒரு விடயத்தை முயன்று பார்க்க விழைகிறான் டோ யூன். ஆனால் அவனது அம்முயற்சி பலனளிக்கவில்லை.

வித்தைகள் அறியாத டோ யூனை ஒதுக்கி விட்டு வேறு வாடிக்கையாளர்களுடன் உரசச் செல்கிறாள் அவள். இரவு பறக்கிறது, மதுபான விடுதியை மூட விரும்பும் பெண், டோ யூனை அங்கிருந்து வெளியேற்றுகிறாள். குடித்த பீர்களிற்காக தன் பெயர் எழுதிய கோல்ஃப் பந்துகளை அந்தப் பெண்ணிற்கு தரவிரும்புகிறான் டோ யூன், ஆனால் அவள் அதை மறுத்து விடுகிறாள்.

தெரு விளக்குகளில் இருந்து ரகசிய இழையாக வழியும் காமத்தினூடு, பீர் தந்த மயக்கமும், பெண் சுகம் கேட்கும் உடலும் சேர்ந்து, அந்த இரவில் தெருக்களில் தள்ளாடியவாறே நடந்து செல்கிறான் டோ யூன். செல்லும் வழியில் ஒரு இளம் மாணவியைக் கண்டு கொள்கிறான் அவன்.

அழகான அப்பெண்ணை உடனடியாகப் பின்தொடர ஆரம்பிக்கிறான் அவன். அப்பெண்ணை பின் தொடர்ந்தவாறே அவளை நோக்கி சில அழைப்புக்களை விடுக்கிறான் டோ யூன். ஆனால் அவளோ எந்தப் பதிலையும் தராது இருள் தழுவிய குறுகிய சந்துகளினுள் நடந்து செல்கிறாள்.

800px-Mother-17 ஒரு சிறிய சந்தில் நுழையும் இளம் பெண்ணை தொடர முயலும் டோ யூனை, அந்த சந்திலிருந்து வேகமாக அவனை நோக்கி வந்து விழும் ஒரு கல் தடுத்து நிறுத்துகிறது. இந்நிகழ்வால் உருவாகும் அச்சம் காரணமாக அப்பெண்ணைப் பின் தொடராது தன் வீடு திரும்பும் டோ யூன், தன் தாயின் அருகில் அவளை அணைத்தவாறே படுத்து உறங்கிப் போகிறான்.

மறுநாள் காலை டோ யூன் பின் தொடர்ந்த இளம் பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், ஒரு பழுதடைந்த வீட்டின் மொட்டை மாடிச் சுவரின் மீது குறுக்காக போடப்பட்டிருக்கிறாள். இக்கொலை தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்கும் பொலிஸ் அதிகாரிகள் டோ யூனின் பெயர் எழுதப்பட்ட கோல்ஃப் பந்தை கொலை நிகழ்ந்த இடத்தில் கண்டெடுக்கிறார்கள்.

இதன் விளைவாக டோ யூனை பொலிசார் கைது செய்கின்றனர். பொலிஸ் விசாரணையில் அப்பெண்ணை தான் கொலை செய்யவில்லை என டோ யூன் மறுத்தாலும் அவனிடம் தந்திரமாகப் பேசி கொலையை செய்ததை அவன் ஒப்புக் கொண்டதாக விரல் ரேகை ஒப்பத்தை வாங்கி விடுகின்றனர் பொலிஸ் அதிகாரிகள்.

பொலிஸ் நிலையம், வக்கீல், என ஓய்வின்றி கண்ணீருடன் அலைகிறாள் டோ யூனின் தாய். தனது மகன் ஒரு சிறு உயிரிற்குகூட தீங்கு செய்ய மாட்டான் என்று அழுகிறாள் அவள். ஆனால் கொலைக்கேஸை தகுந்த விசாரணைகளின்றி விரைவில் முடித்துவிட ஆர்வம் காட்டும் திறமையற்ற பொலிசார், டோ யூனின் விவகாரம் முடிந்து விட்டது என்று கையை விரிக்கிறார்கள்.

மதுபான விடுதிகளில் இளம் பெண்களுடன் சல்லாபம் கொஞ்சும் அவள் வக்கீலோ, டோ யூனின் சிறைத்தண்டனை மனநல மருத்துவமனையிலேயே கழியும் என்பதால் தண்டனையை ஏற்றுக் கொள்வதே நல்லது என அவளிற்கு ஆலோசனை வழங்குகிறார். தன் மகன் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க வறுமையில் வாடும் அந்த தாய் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவேயில்லை.

800px-Mother-08 800px-Mother-16 ஆனால் டோ யூனின் தாய், தன் மகன் மேல் கொண்ட பாசத்தாலும், நம்பிக்கையாலும் கொலை செய்யப்பட்ட இளம் பெண் குறித்து விசாரிக்க ஆரம்பிக்கிறாள். அவள் தேடல்களும், அவள் அறிந்து கொள்ள ஆரம்பிக்கும் தகவல்களும் அவளை ஒரு அதிரவைக்கும் உண்மையை நோக்கி அழைத்து செல்ல ஆரம்பிக்கின்றன…..

தன் மகன் மேல் கொண்ட பாசத்தினால் ஒரு தாய் செல்லக்கூடிய எல்லைகளை திரையில் வடிக்கிறது Mother எனப்படும் இந்த தென் கொரியத் திரைப்படம். படத்தை இயக்கியிருப்பவர் Memories of Murder எனும் சிறப்பான படைப்பை வழங்கிய Joon-ho Bong.

ஒரு கொலையைத் துப்பறியும் படத்திற்குரிய மிகைப்படுத்தப்பட்ட பரபரப்புக்கள் எதுவுமின்றி இயல்பாக நகர்கிறது திரைக்கதை. அந்த இயல்பான நகர்விலும் திரைக்கதை தனக்கேயுரிய திருப்பங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது.

மெதுவான நகர்தலால் மிக நீண்ட படம் போல் தோற்றம் தந்து, வேகப்பட ரசிகனை ஏமாற்றிவிடக்கூடிய இத்திரைப்படம், திறமையான இயக்குனர் ஜூன் வோங்கின் கைகளில் சிறப்பான ஒரு படைப்பாக உருமாறி, அழகான தருணங்களை தன் மடிப்புகளில் ஒளித்து வைத்திருக்கிறது.

ஜூன் வோங், படமாக்கலில் அழகியலை தூரமாக தள்ளி வைத்து விட்டு, எந்த வித அலங்காரங்களுமின்றி தென் கொரியாவின் சிறு நகரமொன்றின் நடப்பு நிலைகளை யதார்த்தமாக படம் பிடித்துள்ளார். நவீன அலங்காரங்கள், பிரம்மிக்க வைக்கும் ஒளியமைப்புக்கள் மூலம் காட்சிகளை மெருகு படுத்தாது கதை நிகழும் சூழலோடும், பாத்திரங்களோடும், முக்கியமாக கதையோடும் பார்வையாளனை ஒப்பனையின்றி நேர்கொள்ள செய்கிறார் அவர்.

Mother வசதியற்ற ஒரு தாயின் போராட்டம், வேலையற்ற இளைஞர்களின் நிலை, பணம் ஈட்ட மாணவிகள் தேடும் வழிகள், பணம் படைத்தவர்களினதும், அதிகாரம் கொண்டவர்களினதும் உண்மை முகங்கள், தங்கள் கடமைகளை சரிவரச் செய்யத்தவறும் பொலிஸ், வக்கீல் என ஒரு சிறிய கொரிய நகர சமூகத்தின் அவல நிலையின் சில கூறுகளை கூச்சமின்றி எம்முன் வைக்கிறார் இயக்குனர்.

படத்தின் மர்ம முடிச்சு விலகும் தருணம் மிகுந்த அதிர்ச்சியை தரும். அதே போன்று அதனைப் பின் தொடரும் காட்சிகள் மனதை உறையவும், நெகிழவும் செய்யும். அக்காட்சிகளை கவிதை போல் அழகாகக் கோர்த்திருக்கிறார் ஜூன் வோங். குறிப்பாக பொலிஸ், கொலைக் குற்றவாளி என டோ யூனின் தாய் முன்பாக நிறுத்தும் பிறிதொரு மனநலம் குன்றிய இளைஞனுடன் அத்தாய் நிகழ்த்தும் உரையாடலும், பின் தன் மனதில் அழுத்தும் பாரம் தாங்காது வெடித்து அவள் அழுவதும் அற்புதமான ஒரு தருணம்.

டோ யூனின் தாயாக வேடமேற்றிருக்கும் நடிகை Kim Hye-ja அபாரமான தெரிவு. இரக்கம் கலந்த பார்வையும், குறுகிய தோள்களும், தளர்ந்த mother-1 நடையுமாக அவர் வழங்கும் நடிப்பு அருமை. கண்களிலும், முகத்திலும் உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தி அசத்துகிறார் அவர். மன நலம் குன்றிய முட்டாள் இளைஞன் டோ யூனாக நடிகர் Won Bin அப்பாவித்தனமாக கச்சிதமாக நடித்து விடுகிறார். வேலையில்லா இளைஞனாக வரும் ஜின் டே பாத்திரத்தில் நடிகர் Jin Ku கம்பீரமான நடிப்பில் மிளிர்கிறார்.

நிதானமாக நகரும் ஒரு படத்தை ரசிக்க வேண்டிய பொறுமையும், ஆர்ப்பாட்டமில்லாத மெதுவான கதை சொல்லல் ஒன்றினுள் பொதிந்திருக்கக்கூடிய உள்ளழகைக் கண்டு கொள்ளும் பக்குவமும் உள்ள ரசிகர்களிற்கு Mother பிடித்துக் கொள்ளும் ஒரு படைப்பாக அமையும்.

பாசத்திற்காக மனிதர்கள் கடந்துவிடக்கூடிய எல்லைகளின் தீவிரங்களை தொட்டு விடுபவளாக அதிர வைக்கும் இந்தத் தாய், தன் பாசத்தாலும், பலவீனத்தாலும் ரசிகர்களின் மனங்களை நெகிழவும் வைக்கிறாள். நாணல்களுடன் அவள் ஆடும் நடனம், வலி நிறைந்த பாசத்தின் ஓவியம். [***]

ட்ரெயிலர்

Wednesday, February 3, 2010

முத்தம் கேட்கும் தவளை


கேளிக்கைகளிற்கும், ஜாஸ் இசைக்கும் பெயர் போன நியூ ஆர்லியன்ஸ் நகரம். அந்நகரின் பிரபல்யமான செல்வந்தர்களில் ஒருவராக பிக் டாடி லா வுஃப் திகழ்கிறார். அவரது ஒரே செல்ல மகள் சார்லொட். தன் அன்பு மகளை அவள் கேட்பதற்கும் மேலாக பரிசுகளால் மூழ்கடிக்கிறார் பிக் டாடி.

சிறு வயதில் தேவதைக் கதைகளைக் கேட்டு மகிழும் சார்லொட் மனதில் ஒரு இளவரசனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனும் ஆசை இறுக்கமாக ஒட்டிக் கொண்டு விடுகிறது.

la-princesse-et-la-grenouille-2010-16870-1932302936 சார்லொட்டிற்கு நல்லதொரு நண்பியாக டினா இருக்கிறாள். வசதிகளற்ற கறுப்பின குடும்பத்தைச் சேர்ந்தவள் அவள். டினாவின் தந்தைக்கு ஒரு தரமான உணவு விடுதியை ஆரம்பித்து நடத்த வேண்டுமெனும் ஒரு கனவு இருக்கிறது. டினாவும் சிறு வயதிலேயே சமையல் கலையில் சிறந்தவளாக விளங்குகிறாள். தன் தந்தையின் கனவை தன் மனதிலும் இருத்தி வளர்க்கிறாள் அவள்.

காலங்கள் கனவுகளிற்காக காத்திருப்பதில்லை. ஆர்லியன்ஸின் அழகான மிசிசிபி நதியோடு அதுவும் நிற்காது ஓடிச் செல்கிறது. டினாவின் தந்தை தன் கனவை நனவாக்காது இவ்வுலகை விட்டு நீங்கி விடுகிறார்.

பெரியவளாகியிருக்கும் டினா, அந்தக் கனவை தான் நனவாக்கிக் காட்டுவேன் எனும் வைராக்கியத்தில் இரவு, பகல் பாராது உணவு விடுதி ஒன்றில் பணிபுரிகிறாள். தன் இளம் வயதிற்குரிய சுகங்களை தன் கனவிற்காக தியாகம் செய்கிறாள்.


la-princesse-et-la-grenouille-2010-16870-1806884052 நியூ ஆர்லியன்ஸ் நகரில் பிரபல்யமான Mardi Gras [ கிறிஸ்தவர்களின் நோன்பு காலம் ஆரம்பமாவதற்கு முதல் வரும் செவ்வாய்க் கிழமை] கேளிக்கைக் கொண்டாட்டம் நெருங்குகிறது. இவ்வேளையில் அங்கு மால்டினியா நாட்டின் இளவரசன் நவீன் வருகை தருகிறார். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களில் அதிகம் பிரியம் கொண்ட நவீன், எந்த வேலையையும் செய்யத் தெரியாதவன்.

நவீனின் இந்தப் போக்கை கண்டிக்கும் அவன் பெற்றோர், அவனிற்கு தாங்கள் வழங்கி வந்த பண உதவியை நிறுத்தி விடுகிறார்கள். செல்வந்தர் பிக் டாடியின் மகள் சார்லொட்டை திருமணம் செய்து அதன் மூலம் கிடைக்கும் சொத்துக்கள் வழி சுக வாழ்வு வாழும் ஆசை நவீன் மனதிலிருக்கிறது. நவீனின் உதவியாளர் லாரன்ஸ், காலகாலமாக பிறரிற்காக உழைத்தே களைத்துப் போனவர். நவீனிற்கு எடுபிடியாக நியூ ஆர்லியன்ஸிற்கு அவரும் வருகிறார்.

இளவரசன் நவீன் நியூ ஆர்லியன்ஸிற்கு வருவதை அறியும் சார்லொட் துள்ளிக் குதிக்கிறாள். பிக் டாடி, தன் வீட்டில் ஏற்பாடு செய்யும் பெரும் விருந்து ஒன்றிற்கு இளவரசனை அழைத்திருப்பதும் இதற்கு ஒரு காரணம். எப்படியாவது நவீனின் இதயத்திற்குள் இடம் பிடித்து விட வேண்டுமென்பதில் சார்லொட் அக்கறை கொண்டவளாகவிருக்கிறாள்.

la-princesse-et-la-grenouille-2010-16870-293513387 ஆனால் நவீனின் வரவு நியூ ஆர்லியன்ஸ் நகரின் இன்னொரு நபரின் மனதிலும் கனவுகளை விரிக்கிறது. அவர்தான் டாக்டர் பசிலியர். டாக்டர் பசிலியர் ஒரு வூடு மந்திரவாதி, கெட்ட ஆவிகளின் தோஸ்த். பிக் டாடியைக் கவிழ்த்து அவன் சொத்துக்களை எல்லாம் தான் ஆண்டு அனுபவிக்க வேண்டும் என விரும்பும் பசிலியர், தன் மனதில் ஒரு கொடிய திட்டத்தை உருவாக்குகிறான்.

தன் கடின உழைப்பால் தான் சிறுகச் சிறுக சேர்த்த பணத்தைக் கொண்டு, தன் தந்தை உணவு விடுதியாக மாற்றக் கனவு கண்ட சீனி ஆலையொன்றை வாங்குவதற்கு சிறிதளவு முன் பணத்தை சொத்து தரகர்களிடம் கையளிக்கிறாள் டினா. தன் கனவுகள் நிறைவேறும் நாள் வந்ததே எனும் எண்ணம் அவள் களைப்பை சிறிதளவு போக்குகிறது.

நியூ ஆர்லியன்ஸிற்கு வந்து சேர்ந்த இளவரசன் நவீன், வீதிகளில் ஆடிப் பாடி நேரத்தைக் கழிக்கிறான். லாரன்ஸ் இதனை அதிகம் விரும்பவில்லை. நியூ ஆர்லியன்ஸிற்கு வந்த காரியத்தை பார்க்கும்படி நவீனிற்கு ஆலோசனை தருகிறார் அவர். இவ்வேளையில் தெருவில் நவீனை அணுகும் டாக்டர் பசிலியர் அவனுடன் நயமாகப் பேசி தன் வூடு சூனிய வீட்டிற்கு நவீனையும், லாரன்ஸையும் அழைத்துச் செல்கிறான்.

la-princesse-et-la-grenouille-2010-16870-505218150 நவீன், லாரன்ஸ் இருவரிற்கும் தன் மந்திரச் சீட்டுக்களால் வித்தை காட்டும் பசிலியர், இருவரது மனங்களையும் மாற்ற ஆரம்பிக்கிறான். நவீனிற்கு பசிலியரின் சதி புரியவில்லை. ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கஷ்டப்பட்ட லாரன்ஸ், நவீனிற்குப் பதிலாக தான் இளவரசனாக மாறி சுக வாழ்வு வாழலாம் எனும் ஆசையில் பசிலியரின் சதியில் கூட்டுச் சேர்கிறான். இதன் முடிவாக நவீனை ஒரு தவளையாக உருமாற்றி விடுகிறான் பசிலியர். லாரன்ஸ், இளவரசன் நவீனின் தோற்றத்தைப் பெறுகிறான்.

பிக் டாடி வீட்டில் விருந்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. சார்லொட் தன்னை அழகு செய்வதில் மும்முரமாக ஈடுபடுகிறாள். விருந்திற்கான உணவு வகைகளைத் தயாரிப்பதும், பரிமாறுவதற்குமான பொறுப்பை டினா ஏற்றுக் கொண்டிருக்கிறாள்.

உணவு வகைகளை விருந்தினர்களிற்குப் பரிமாறிக் கொண்டிருக்கும் டினாவை நெருங்கும் சீனி ஆலையின் சொத்து தரகர்கள், வரும் புதன் கிழமைக்கு முன்பாக சீனி ஆலைக்குரிய மொத்தப் பணத்தையும் டினா செலுத்தாவிடில் சீனி ஆலையானது வேறு ஒருவரின் கைக்கு மாறிவிடும் என்று ஒரு அதிர் குண்டைப் போடுகிறார்கள். இச்செய்தியால் உடைந்து போகிறாள் டினா.

இத்தருணத்தில் நவீனாக உருமாற்றம் பெற்றிருக்கும் லாரன்ஸ், பிக் டாடியின் மாளிகைக்கு சமூகமளிக்க, விருந்து களை கட்டுகிறது. சார்லொட், போலி இளவரசனுடன் நடனம் ஆடுகிறாள். தன் கனவுகள் சிதறிய சோகத்தில் மாளிகையின் மாடியிலிருந்து வானத்தில் மின்னும் அதிர்ஷ்ட நட்சத்திரத்தை பார்த்து தனக்கு உதவுமாறு வேண்டுகிறாள் டினா. அவள் வேண்டி முடித்த கணத்தில் அவள் அருகில் வந்து நிற்கிறது நவீன் தவளை.

la-princesse-et-la-grenouille-2010-16870-1525048751 தவளையை தன் அருகில் காணும் டினா, உனக்கென்ன முத்தமா வேண்டும் என அதனிடம் கிண்டலாகக் கேட்க, டினாவின் ஆடையலங்காரத்தைப் பார்த்து அவள் ஒரு இளவரசியென தவறாகப் புரிந்து கொள்ளும் நவீன் தவளை ஆம் எனப் பதிலளிக்கிறது.

பேசும் தவளையைக் கண்டு ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடையும் டினா, தவளையை விரட்ட முயன்று தோற்கிறாள். தன் சோகக் கதையை டினாவிடம் கூறும் நவீன் தவளை, தேவதைக் கதைகளில் வருவது போல் ஒரு இளவரசி முத்தம் தந்தால் தான் மீண்டும் மனித உருப் பெறலாம் என்று கூறுகிறது.

டினாவின் கதையைக் கேட்கும் நவீன் தவளை, தான் மனித உருப் பெற்றதும் டினா தன் உணவு விடுதியை ஆரம்பிப்பதற்கு தேவையான பணத்தை தான் வழங்குவதாக டினாவிடம் உறுதியளிக்கிறது. தன் கனவை நிறைவேற்றும் ஒரே ஒரு காரணத்திற்காக நவீன் தவளையை முத்தமிடுகிறாள் டினா. ஆனால் நவீனைப் போன்றே டினாவும் ஒரு தவளையாக உருமாறி விடுகிறாள்!!

தவளைகளாக உருமாறிய நவீனும், டினாவும் பிக்டாடியின் மாளிகைக்கு வந்த பசிலியரிடம் அகப்படாது தப்பிக்கிறார்கள். தங்கள் மேல் நிகழ்த்தப்பட்ட துர் மந்திரத்தைக் கலைப்பதற்காக அவர்கள் நியூ ஆர்லியன்ஸின் சதுப்பு ஏரிக் காடுகளிற்குள் வசிக்கும் மந்திரவாதி மம்மா la-princesse-et-la-grenouille-2010-16870-902173703 ஓடியைத் தேடிச் செல்கிறார்கள். இவர்களின் இந்த சாகசப் பயணத்தில் இவர்களிற்கு துணையாக வந்து சேர்கிறார்கள் குண்டு முதலையான லூயிஸ், மற்றும் பல் விழுந்த மின்மினிப் பூச்சி ரேய் ஆகியோர்.

நவீன், டினா மனித உருவத்தை மீளப் பெற்றார்களா? அவர்கள் இருவரது மனக் கனவுகள் நிறைவேறியதா? என்பதை படத்தின் மீதிக் கதை அட்டகாசமாக விபரிக்கிறது.

தன் கனவை நிறைவேற்றுவதற்காக, நம்பிக்கையும் கடும் உழைப்பும் கொண்டு, தன் முன் விழும் தடைகளை தகர்த்தெறியும் ஒரு கறுப்பின இளம் பெண்ணின் கதையை, மயக்கடிக்கும் இசை நிறைந்த பாடல்கள், நடனம், காமெடி, சாகசம், மென்மையான காதல் என்பவற்றை கச்சிதமாகக் கலந்து சொல்கிறது வால்ட் டிஸ்னியின் The Princess And The Frog எனும் அனிமேஷன் திரைப்படம்.

நியூ ஆர்லியன்ஸ் நகரின் [1920] கிறங்கடிக்கும் அழகையும், கொண்டாட்ட உலகையும், சதுப்பு ஏரிக் காடுகளின் மர்மமான அழகையும் அசர வைக்கும் அழகுடன் விருந்தாக வழங்குகிறது திரைப்படம்.

la-princesse-et-la-grenouille-2010-16870-299738659 படத்தின் இன்னொரு முக்கிய அம்சம் இசை. காட்சிகள் கண்ணிற்கு விருந்தெனில், இசையும், பாடல்களும், செவிகளிற்கும், மனதிற்கும் மாவிருந்து படைக்கின்றன. ஜாஸ், ஃப்ளூஸ், கிரியோல் இசை என்பவற்றுடன் கரீபியன் ரம் கலந்து கலக்கி விட்டிருக்கிறார் இசையமைப்பாளார் Randy Newman.

குண்டு முதலை லூயிஸ் தன்னை டிரம்பெட் [Trumpet] கலைஞனாக தவளைகளிடம் அறிமுகம் செய்து கொள்ளும் When We’re Human பாடல் டிரம்பெட் சரவெடி. நவீன், டினா தவளைகளிற்கு சதுப்பு ஏரிக் காட்டிற்குள்ளாக வழிகாட்டியவாறே மின்மினி ரே, தன் குடும்பத்துடன் வழங்கும் Gonna Take you There பாடல் சதுப்பு ஏரிக் காட்டை நட்சத்திரக் காடாக்கி விடுகிறது. ரம்யமான இரவில் தன் காதலியைப் பார்த்து ரேய் பாடும் Ma Belle Evangeline[ என்னழகே ஏவாஞ்சலின்] பாடல் மனங்களில் வண்ணத் தாமரைகளை சுற்றி ஓட வைக்கும் தேன் கலந்த ரொமான்ஸ் மெட்டு. மம்மா ஓடியின் மர வீட்டில் இடம்பெறும் Dig A Little Deeper பாடலும், செந்நாரைகளின் நடனமும் அக்மார்க் ஆர்லியன்ஸ் கொஸ்பல் குத்து.

la-princesse-et-la-grenouille-2010-16870-709924432 வூடு மந்திரவாதி டாக்டர் பசிலியரின் நடனத்தில் பிரபல பாடகர்கள் பிரின்ஸ், மைக்கல் ஜாக்சன் ஆகியோரின் நளினத்தைக் காணமுடிகிறது.[ பாடகர் பிரின்ஸ் கூட டாக்டர் பசிலியர் போல் கையில் ஒரு கோலை வைத்திருந்தாக ஞாபகம் இருக்கிறது]

கதையில் பிரதான பாத்திரங்களான டினா, நவீன், பசிலியர் ஆகியோரை எகிறித்தாண்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள் சாப்பாட்டுப் பிரியரும், டிரம்பெட் வித்தகருமான நடன மாமணி குண்டு முதலையார் லூயிஸ் மற்றும் ஷேக்ஸ்பியரின் ரோமியோவை காமெடி ஹீரோவாக்கி விடுமளவிற்கு தன் காதலி ஏவாஞ்சிலினை உயிராகக் காதலிக்கும் மின்மினி ரேய். இவர்களில் முதலிடம் மின்மினி ரேய்க்குத்தான்.

கறுப்பினத்தவர்களிற்குரிய கவர்ச்சியான மொழி உச்சரிப்புடன் பேசிக் கொண்டு ரேய் வரும் காட்சிகள் யாவும் மிளிர்கிறது. ரேய் தன் காதலியை யார் என்று வெளிப்படுத்தும் காட்சி நெகிழ வைக்கும். இறுதிக் காட்சிகளில் ரேய் யாரிற்காவது கண்ணீரை வரவழைக்கத் தவறினால், அவர்களிற்கு உலகின் மகா கல் நெஞ்சர்கள் என்ற பட்டத்தை தாராளமாகத் தரலாம். படம் நிறைவடையும்போது வானத்தில் ஒளிரும் பிரகாசமான நட்சத்திரமென மனதில் நிறைந்து விடுகிறது ரேயின் பாத்திரம்.

la-princesse-et-la-grenouille-2010-16870-827018211 இந்த 2D அனிமேஷன் படத்தை திறம்பட இயக்கியிருப்பவர்கள் Ron Clements மற்றும் John Musker. 2Dயில் இன்னமும் மந்திரம் மாயம் காட்ட எங்களால் முடியும் என்று வால்ட் டிஸ்னி வல்லுனர்கள் இப்படத்தின் மூலம் நிருபித்திருக்கிறார்கள். இது தொடர வேண்டும் என்பதே என் அவா.

நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து பார்த்து மகிழ வேண்டிய படமிது. காதலர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்! படத்தின் முடிவில் காதலியிடமிருந்து ஒரு முத்தமாவது கிடைக்காவிடில், காதலர்கள் அந்தக் காதலியைக் கழட்டி விடுவது நல்லது!! [***]








ட்ரெயிலர்

Sunday, January 31, 2010

நட்சத்திரங்களின் தனிமை


upintheairhardcover440x663 தம்மிடம் பணிபுரியும் ஊழியர்களை, தாம் வேலை நீக்கம் செய்யவிருக்கும் தகவலை அவர்களிடம் தாமே நேரடியாகத் தெரிவிக்க தயங்கும் நிறுவன நிர்வாகங்கள் ரையான் பிங்ஹாம் பணிபுரியும் நிறுவனத்தின் சேவைகளை நாடுகிறார்கள்.

நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களிடம், உங்கள் வேலை காலி என்பதை மிகுந்த மரியாதை மற்றும் கண்ணியத்துடன் தெரிவிப்பதே ரையான் போன்றவர்களின் வேலை. ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கப்படும் அதிர்ச்சி தரும் செய்தியுடன் அவர்களிற்கு புது ஆரம்பம் ஒன்றிற்கான நம்பிக்கை கலந்த ஆலோசனைகளை வழங்கலும் ரையான் வழங்கும் சேவையில் இடம்பிடிக்கிறது. ரையான் இந்த விளையாட்டில் மிகத் தேர்ந்த ஒருவனாக மிளிர்கிறான்.

தன் பணி நிமித்தம் இடைவிடாது அமெரிக்காவின் பல பகுதிகளிற்கும் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ரையானிற்கு இருக்கிறது. ரையான், தரையில் இருப்பதை விட விமானத்தில் பறப்பது அதிகம். விமான நிலையங்களே அவன் இனிய இல்லங்கள். எந்தவிதமான உறவுகளையும் விரும்பாத ஒரு சுதந்திரப் பறவையாக வானில் பறந்து திரிகிறான் அவன். தன் தனிமை குறித்து அவன் என்றுமே சிந்தித்ததில்லை.

இவ்வாறான பயணம் ஒன்றின்போது ஒரு ஹோட்டலில் அலெக்ஸ் என்ற பெண்ணுடன் அறிமுகமாகிறான் ரையான். அலெக்ஸும் அவனைப் போலவே பறந்து திரிபவள் என்பதை ரையான் அவளுடன் உரையாடுவதன் மூலம் தெரிந்து கொள்கிறான். அலெக்ஸிற்கும், ரையானிற்குமிடையில் ஏற்படும் ஈர்ப்பு, இருவரையும் தயக்கமின்றி அவர்கள் சந்தித்துக் கொண்ட அந்த இரவிலேயே தங்கள் உடல் தாகங்களை தீர்த்துக் கொள்ள வைக்கிறது, அவர்களிடம் ஒரு புதிய தொடர்பை உருவாக்குகிறது.

in-the-air-2010-17415-1414723604 தங்கள் பரபரப்பான வேலை நேர அட்டவணைகளிற்கு மத்தியிலும், தங்களிற்கு நேரம் கிடைக்கும் வேளைகளில் இருவரும் சந்தித்துக் கொண்டு, மகிழ்வாக அந்தத் தருணங்களை கழிக்க ஆரம்பிக்கிறார்கள்.

ரையான் பணிபுரியும் நிறுவனமானது புதிதாக நத்தாலி எனும் திறமை வாய்ந்த இளம் பெண்ணொருத்தியை பணிக்கு சேர்த்துக் கொள்கிறது. நத்தாலி, உங்கள் வேலை காலி என்பதை ஊழியர்களிடம் நேரில் சந்தித்து தெரிவிக்கும் முறையை மாற்றி, அதனை இணையத்தின் வழியாக அறிவிக்கும் ஒரு திட்டத்தை தன் நிறுவன ஊழியர்கள் முன் வைக்கிறாள்.

இத்திட்டத்தை விரும்பாத ரையான் இது குறித்து தன் பாஸிடம் உரையாடுகிறான். பாஸோ, புதிய வரவான நத்தாலி தொழிலில் அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்காக, ரையான் செய்யவிருக்கும் உங்கள் வேலை காலி அறிவிப்பு பயணத்தில் அவளையும் இணைத்து விடுகிறார். நத்தாலியுடன் தன் பயணத்தை ஆரம்பிக்கும் ரையான் தன் தொழில் நுணுக்கங்களை அவளிற்கு சொல்லித்தர ஆரம்பிக்கிறான்…..

in-the-air-2010-17415-857991226 தன் பணிக்காக தன்னையே அர்ப்பணித்து விட்ட, வீடு என்பதே அர்த்தமிழந்த ஒருவனிற்கு உறவுகளின் தேவை அவசியமானதா எனும் கேள்விக்கு விடை காண விழைகிறது Up In The Air எனும் திரைப்படம். தொழில் வாழ்க்கையின் வேகமான ஓட்டங்களிற்கிடையில் தற்காலிகமாக உருவாக்கிக் கொள்ளக்கூடிய கானல் உறவுகளின் எல்லைகளையும் கதை விபரிக்கிறது. இத்திரைப்படத்தின் கதை Walter Kirn எனும் அமெரிக்க எழுத்தாளரின் நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது.

உறவுகளை அண்டாது எந்தப் பொறுப்புகளுமற்ற சுதந்திர மனிதனாக வாழும் ரையான், கானல் உறவுகளில் திருப்தி காண்பவனாக இருக்கிறான். தேவையற்ற எந்தப் பாரத்தையும் அவன் தன் தோள் பைகளில் சுமக்க விரும்புவதில்லை. மாறாக அப்பாரங்களை எரித்துவிட்டு எதுவுமில்லாத ஒருவனாகவே அவன் பிறக்க விரும்புகிறான். இதனையே அவன் தான் வழங்கும் கருத்தரங்குகளிலும் போதிக்கிறான்.

ஆனால் ரையான், அலெக்ஸை சந்தித்த பின், அவளுடன் ஆடிக், குடித்து, காதல் செய்தபின்னும்கூட அவளை நோக்கி ஈர்க்கப்பட ஆரம்பிக்கிறான். அலெக்ஸோ நிஜவாழ்வையும், தொழில்முறையின் அழுத்தமிகுந்த தருணங்களை பாரமின்றிக் கழிப்பதற்காக அவள் உருவாக்கிய கானல் வாழ்க்கையையும் சிறப்பாக பிரித்துக் கையாளும் பக்குவம் கொண்டவளாக இருக்கிறாள். அவளிற்கு தன் குடும்பம் முக்கியம். அதே வேளையில் சந்திக் காதல்களையும் அவள் வரவேற்கிறாள்.

அலெக்ஸிற்கு இது குறித்த எந்த மனக்கிலேசமும் இருப்பதில்லை. ஒரு முதிர்ச்சியடைந்த பெண்ணாகவே அவள் நடவடிக்கைகள் இருக்கின்றன. தான் உரையாற்றப் போகும் கருத்தரங்கையே அலெக்ஸிற்காக உதறித்தள்ளி விட்டு அவள் வீட்டைத் தேடி வரும் ரையானின் முகத்தில் தன் வீட்டின் கதவுகளை மூடுவதில் அவள் தயக்கம் காட்டுவதில்லை. மறு நாள் ரையானை தொலைபேசியில் அழைத்து நீ விரும்பினால் என்னைத் தொடர்பு கொள்ளலாம் என்று எந்த தயக்கமுமின்றிச் சொல்லும் ஒரு குடும்பத்தலைவி அவள்.

up-in-the-air-2010-17415-1864088282 முகத்தில் கதவு மூடப்பட்ட ரையானும் கண்ணியமாக, ஒரு விஸ்கி குவளையுடனும், தனிமையுடனும் மெளனமாகத் தன் ஏமாற்றத்தையும் வேதனையும் விழுங்கிக் கொள்ளத் தெரிந்தவனாகவேயிருக்கிறான். அவன் விரும்பி ஏற்படுத்திக் கொள்ள விழைந்த உறவொன்றின் மரணம் அவனைச் சாய்த்து விடவில்லை.

ரையானுடன் தொழில் அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள வரும் நத்தாலி புதிய தலைமுறையைச் சேர்ந்த இளம் பெண்ணாக இருப்பினும், குடும்பம், கணவன். குழந்தைகள் எனும் கனவு அவளிற்கு இருக்கிறது. இவை பற்றி சற்றுச் சிந்தித்தும் பார்க்காத ரையான் குறித்து அவள் ஆச்சர்யம் கொள்கிறாள்.

தன் காதலனிற்காக தனக்கிருக்கும் சிறப்பான வாய்ப்புக்களை தவிர்த்து அவனைத் தொடர்ந்து வந்தவள் நத்தாலி. அந்தக் காதலன் அவளை விட்டு தான் பிரிந்து செல்வதை குறுஞ்செய்தியாக அனுப்பும் போது அவள் உடைந்து போகிறாள். ஆனால் தொடரும் வாழ்க்கையை இறுகப் பற்றிக் கொள்கிறாள்.

நத்தாலி, வேலை நீக்க தகவலை வழங்கிய ஒரு பெண் அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வதை அறியும் அவள் தன் வேலையை ராஜினாமா செய்கிறாள். ரையான் பணிபுரியும் நிறுவனம் நத்தாலி முன்மொழிந்த திட்டத்தைக் கிடப்பில் போடுகிறது. ரையான் மீண்டும் வானத்தில் அதிக காலம் வாழ இனி எந்தத் தடையுமில்லை..

அலெக்ஸ் அளித்த ஏமாற்றத்தை தாண்டி, நத்தாலியை புதிய நிறுவனம் ஒன்றிற்கு பரிந்துரைத்து கடிதம் எழுதுகிறான் ரையான். சமீபத்தில் திருமணம் முடிந்த, வசதிகள் அதிகமற்ற தன் தங்கைக்கு தான் விமானத்தில் வாழ்ந்த தூரங்கள் மூலம் ஒரு சுற்றுப் பயணத்தை ஒழுங்குபடுத்த முயற்சிக்கிறான். மேகங்களால் செய்த இதயம் கொண்ட மனிதன் அவன்.

திரைப்படத்தில் ரையானாக வருபவர் ஜார்ஜ் க்ளூனி. பின்னியிருக்கிறார் என்பதற்கு சரியான அர்த்தத்தை இப்படத்தில் அவரின் நடிப்பை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அவரின் கவர்ந்திழுக்கும் உடல் மொழியை ரசிக்காமல் இருப்பதென்பது அசாத்தியமானது. அலெக்ஸ் வீட்டிற்கு அவர் வந்து செல்லும் அந்தத் தருணத்தில் அவர் வழங்கும் நடிப்பு அற்புதமானது.

up-in-the-air-2010-17415-963862436 அலெக்ஸ் பாத்திரத்தில் Vera Farmiga, அலட்டிக் கொள்ளாத இயல்பான நடிப்பு. ரையானை விட பார்வையாளர்களை அதிகம் அதிர்ச்சி அடைய வைக்கும் பாத்திரத்தை அமைதியாகச் செய்திருக்கிறார்.

நத்தாலியாக Anna Hendrick, தனது காதலன் தன்னை விட்டு பிரிந்து விட்டான் என்பதை அறிந்து ஹோட்டல் வரவேற்புப் பகுதியில் கதறி அழுவதும், அன்றிரவே இன்னொரு பையனுடன் சேர்ந்து நடனமாடிவிட்டு, அவனுடன் இரவைக் கழிப்பதும், தன் பணியில் உறுதியாக நிற்பதும் என புதிய தலை முறைப் பாத்திரம் இவரிற்கு நன்கு பொருந்தியிருக்கிறது.

படத்தில் வரும் வேலையிழக்கும் ஊழியர்கள் வழங்கும் உணர்வு குறிப்பிடத்தக்கது. திரைப்படத்தின் முடிவில் அவர்கள் வழங்கும் சாட்சியங்கள் அவதானிக்கப்பட வேண்டியவை.

நகைச்சுவை, மென்சோகம், நவீன வாழ்க்கை முறையின் அவலம் என அட்டகாசமாக படத்தை வழங்கியிருக்கிறார் இயக்குனர் Jason Reitman. ஹாலிவூட்டின் நம்பிக்கை தரும் இயக்குனர்கள் பட்டியலில் அவரிற்கு இனி ஒரு இடம் இருக்கும். படத்தில் ரையான் பாத்திரம் சொல்வதாக வரும் இறுதி வரிகள் தனிமையையே கலங்க வைக்கும் தன்மை கொண்டவை.

ரையானின் பயணங்கள் தொடர்கின்றன. வானில் தெரியும் நட்சத்திரங்களிற்கும் ரையானிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது தனிமை. [****]

ட்ரெயிலர்

Wednesday, January 27, 2010

பெர்சியன் பூனைகள்


ஈரானின் தற்போதைய அதிகாரமானது மேலைத்தேய இசை குறித்து கொண்டுள்ள பார்வை வேறானது. ராக் போன்ற இசை வகைகளை கேட்பதற்கோ, இசைப்பதற்கோ ஏறக்குறைய தடை விதிக்கபபட்டுள்ள ஒரு நிலை அங்கு நிலவுகிறது.

ஆஷ்கானும், அவனது காதலி நேகாரும் மேலைத்தேய இசை குறித்த ஈரான் அதிகாரத்தின் ஒழுங்கு விதிகளை மீறியதால் சிறையில் அடைக்கபட்டு சிறிது கால தண்டனையின்பின்பாக விடுதலையாகிறார்கள்.

ராக் இசை மீது ஆர்வம் கொண்ட அந்த இரு இளம் கலைஞர்களும், ஈரானில் தமது இசைத்திறமையை அவர்களிற்கு விருப்பமான வகையில் வெளிப்படுத்த முடியாத நிலை நிலவுவதை எண்ணி மிகுந்த மன வேதனை அடைகிறார்கள்.

ராக் பாடகியான நேகார், கெடுபிடிகள் நிரம்பிய ஈரானை விட்டு கலைச் சுதந்திரம் நிரம்பிய ஐரோப்பிய நாடுகளிற்கு சென்றுவிட வேண்டுமெனும் எண்ணம் கொண்டவளாக இருக்கிறாள். லண்டனில் நடக்கவிருக்கும் ஒரு இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவதற்காக ஆஷ்கானுடன் இங்கிலாந்துக்கு செல்ல விரும்புகிறாள் அவள். [இவ்வாறு செல்லும் பெரும்பாலான இளைஞர்கள் பின்பு ஈரான் திரும்புவதில்லை]

சட்டரீதியாக பாஸ்போர்ட்டுக்களையும், விசாக்களையும் தாங்கள் பெற்றுக் கொள்வது என்பது நடவாது என்பதை அறிந்திருக்கும் ஆஷ்கானும், நேகாரும் இவ்விடயத்தில் உதவி வேண்டி தங்கள் நண்பன் பாபாக்கை சென்று சந்திக்கிறார்கள்.

பாபாக் ஒரு இசைக்கலைஞன், ஈரானின் அதிகாரத்தால் அனுமதி மறுக்கப்பட்ட இசை வடிவங்களை பதிவு செய்வதற்காக, ஒரு ரகசியமான நிலவறை ஒலிப்பதிவு நிலையத்தை அவன் நடாத்தி வருகிறான். நேகார் சொல்வதை அக்கறையுடன் கேட்கும் பாபாக், காதலர்களை தனக்கு தெரிந்தவனான நாதேரிடம் அறிமுகம் செய்து வைக்கிறான்.

les-chats-persans-2009-18772-758573165 நாதேர், ஈரானில் தடைசெய்யப்பட்டவைகளின் முகவர்களில் ஒருவன். மேற்கு நாட்டு திரைப்படங்களின் குறுந்தட்டுக்கள், இசைத்தட்டுக்கள், போலிப் பாஸ்போர்ட்கள், மற்றும் விசாக்கள் போன்றவற்றை வினியோகித்தல், இசை நிகழ்சிகளை நடாத்த அதிகாரிகளிடம் அனுமதியைப் பெற்றுத்தரல் என அவன் தெஹ்ரானின் இளம் இசைக்கலைஞர்கள் வட்டத்தில் பிரபலமானவன். இசை என்பது நாதேரிற்குப் பிடித்தமான ஒன்று.

அதிகாரத்தின் ஒடுக்கு முறையால் திறமையான படைப்பாளிகள் நாட்டை விட்டு நீங்குவது அவனிற்கு வேதனையளிக்கும் விடயமாக இருக்கிறது. ஆஷ்கான், நேகாருடன் உரையாடும் நாதேர் அவர்கள் ராக் இசைக்கலைஞர்கள் என்பதை அறிந்து கொள்கிறான். அவர்கள் ரகசியமாக பதிவு செய்த பாடல் ஒன்றை தன் வீட்டில் கேட்கும் நாதேர், அவன் கேட்ட இசையிலும், குரலிலும், வரிகளிலும் அவர்களின் திறமையைக் கண்டு கொள்கிறான்.

ஆஷ்கானும், நேகாரும் இசைக்குழு ஒன்றுடன் இங்கிலாந்து செல்வதற்கு தேவையான பாஸ்போர்ட், மற்றும் விசாக்களை தான் எப்படியும் பெற்றுத்தருவதாகக் கூறும் நாதேர், இங்கிலாந்து கிளம்பும் முன்பாக தெஹ்ரானில் அவர்கள் ஒரு இசை நிகழ்சியை நடாத்த வேண்டும் என கனிவுடன் வேண்டுகோள் விடுக்கிறான். அந்த இசை நிகழ்சிக்கான அனுமதியை அதிகாரிகளிடமிருந்து தான் பெற்றுத்தருவதாகவும் கூறுகிறான். முதலில் சிறிது தயங்கும் ஆஷ்கானும், நேகாரும் பின்னர் இசை நிகழ்சியை நடாத்த சம்மதம் தெரிவிக்கிறார்கள்.

இங்கிலாந்து பயணத்திற்குத் தேவையான போலிப் பாஸ்போர்ட், மற்றும் விசாக்களை ஒழுங்கு செய்வதற்காக நாதேர், ஆஷ்கானையும், நேகாரையும் மாஷ் டேவிட் எனும் முதியவனிடம் அழைத்துச் செல்கிறான். மிகக் குறைந்த வசதிகள் கொண்ட குறுகலான அறை ஒன்றில் தன் ரகசிய அலுவலகத்தை இயக்கி வருகிறான் மாஷ் டேவிட். அமெரிக்கன் விசா, பச்சை அட்டை, ஐரோப்பிய விசா, ஆப்கானிஸ்தான் விசா!! பல நாடுகளின் கடவுச் சீட்டுக்கள் என டேவிட்டிடம் கிடைக்காத நாடுகளே இல்லை.

les-chats-persans-2009-18772-6212110 ஹாலிவூட் நடிகர் நிக்கோலாஸ் கேஜின் ஆக்‌ஷன் படத்தின் சிடியை கொண்டு வரவில்லை என்பதற்காக நாதேரிடம் செல்லமாக கோபித்துக் கொள்ளும் டேவிட், ஒரு வார காலத்தில் ஆஷ்கானிற்கும், நேகாரிற்கும் தேவையான பாஸ்போர்ட், மற்றும் விசாக்களை தயாரித்து தருவதாகக் கூறுகிறான்.

ஆஷ்கானும், நேகாரும் டேவிட்டின் அலுவலகத்திலிருந்து நாதேரிடம் விடைபெற்றுக் கொள்கிறார்கள். பாஸ்போர்ட் செலவுகளிற்காக டேவிட்டிற்கு தர வேண்டிய பெருந்தொகைப் பணம் குறித்து கவலை கொள்கிறாள் நேகார். பணவிடயத்தில் தன் தாயார் தனக்கு உதவி செய்வாள் என்று நேகாரை ஆறுதல் செய்கிறான் ஆஷ்கான்.

இங்கிலாந்து செல்வதற்கு முன் ஒரு இசைக்குழுவை உருவாக்கி கொள்ள வேண்டுமென்பதால், இசைக் கலைஞர்களைத் தேடி தெஹ்ரானில் வேட்டையை ஆரம்பிக்கிறது நாதேர், ஆஷ்கான், நேகார் கூட்டணி. தெஹ்ரானின் மூலை முடுக்களில் எல்லாம் இசைக்கலைஞர்களை தெரிந்து வைத்திருக்கிறான் நாதேர். நிலவறைகள், மாட்டுக் கொட்டகைகள், மொட்டை மாடி மறைவிடம், கைவிடப்பட்ட கட்டிடங்களின் தளங்கள் என ஒளிந்து கொண்டிருந்து ஒலிக்கும் இசையினைத் தேடிச் செல்கிறார்கள் அவர்கள்.

அவர்கள் சந்திக்கும் பெரும்பாலான இளம் கலைஞர்களிற்கு பாஸ்போர்ட், விசா, இவற்றை ரகசியமாகப் பெற்றுக் கொள்ளத் தேவையான பணம் பிரச்சினையாகவிருக்கிறது. சிலரிற்கு கடமைகள் குறுக்கே நிற்கின்றன, வேறு சிலரிற்கோ தங்கள் இசை ஈரான் மண்ணிலேயே தடைகளின் செவிகளிற்குள் ஒலிக்க வேண்டும் எனும் ஆசை.

நீண்ட தேடல் ஒன்றின் வழியாகச் சில இசைக்கலைஞர்களை இசைக்குழுவில் இணைய சம்மதிக்க வைக்கிறது மூவர் கூட்டணி. இங்கிலாந்து செல்வதற்கு முன்பாக நடக்கவிருக்கும் இசைநிகழ்ச்சியால் கிடைக்கும் பணம், பாஸ்போர்ட் மற்றும் விசாக்களைப் பெற்றுக் கொள்ளப் போதுமாக இருக்கும் என்று அவர்களை தைரியப்படுத்துகிறான் நாதேர்.

இதனை தொடர்ந்து ரகசியமான இடமொன்றில் தங்கள் ஒத்திகையை ஆரம்பிக்கிறது ஆஷ்கான், நேகார் இசைக்குழு. இங்கிலாந்துப் பயணம் குறித்தும், தங்கள் விருப்பங்கள் குறித்தும் கனவுகளைக் காண்கிறது அந்த இளம் இசைக் குழு. இவ்வேளையில் நாதேரைத் தொடர்பு கொள்ளும் ஒரு அதிகாரி ஆஷ்கானின் இசைக்குழு இசைநிகழ்ச்சியை தெஹ்ரானில் நிகழ்த்த அனுமதி வழங்கப்படமாட்டாது என்பதை அறிவிக்கிறார்.

les-chats-persans-2009-18772-52042181இத்தகவலால் சோகமாகும் நாதேர், ஆஷ்கானிடம் விடயத்தை தெரிவிக்கிறான். நேகாரிற்கு இதனை தெரிவிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறான். ஆஷ்கான் மற்றும் நேகாரின் திறமையில் நம்பிக்கையும் அவர்களில் நேசமும் கொண்ட நாதேர், அனுமதியின்றியாவது இந்த இசை நிகழ்ச்சியை நடாத்தி அவர்களை எப்படியாவது இங்கிலாந்திற்கு அனுப்பி வைப்பதற்கு உதவ வேண்டும் என விரும்புகிறான்.

இருப்பினும் இசைநிகழ்ச்சி மீது முழு நம்பிக்கை வைக்காது தான் மிகவும் நேசிக்கும் மோட்டார் சைக்கிளை விற்று விடுகிறான் நாதேர். அதில் கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு ஆஷ்கானிற்கும் நேகாரிற்குமான பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை பெற்றுக் கொள்வதற்காக மாஷ் டேவிட்டை சந்திக்க செல்கிறான் அவன்.

மாஷ் டேவிட்டின் அலுவலகத்தை அவன் நெருங்குகையில் அந்தக் கட்டிடத்திற்கு முன்பாக ஒரு கூட்டம் கூடியிருப்பதையும், பொலிஸ் கார் ஒன்று கட்டடத்தின் வாசலில் முறைப்பாக தரித்து நிற்பதையும் கண்டு நாதேர் உஷாராகி ஒரு சிறிய சந்தில் மறைந்து கொள்கிறான்.

சிறிது நேரத்தின் பின்பு மாஷ் டேவிட்டை பொலிஸார் கைது செய்து வந்து காரில் ஏற்றுவதை சந்திலிருந்து ரகசியமாகப் பார்கிறான் நாதேர். நாதேர் தன்னை ஒளிந்திருந்து பார்பதைக் காணும் டேவிட் எந்தச் சலனமுமின்றி பொலிஸ் காரில் ஏறிக் கொள்கிறான். தான் மறைந்திருந்த சந்திலிருந்து மனமுடைந்து ஓடிப்போகிறான் நாதேர்.

மூன்று நாட்களிற்கு மேலாக நாதேரிடமிருந்து எவ்விதமான தகவல்களும் கிடைக்காத நிலையில் ஆஷ்கானும், நேகாரும் பதட்டம் கொள்கிறார்கள். அவர்களின் இசைநிகழ்ச்சி, இங்கிலாந்து செல்வதற்கான பாஸ்போர்ட் போன்றவை குறித்த அச்சம் அவர்களை ஆக்கிரமிக்கிறது. நாதேரின் நண்பர்கள் அவர்களிற்கு ஆறுதல் கூறி உற்சாகப்படுத்துகிறார்கள்.

நாதேர் இல்லாமலேயே தங்கள் இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொள்கிறது ஆஷ்கானின் இசைக்குழு. இசைநிகழ்சி நடக்கவிருக்கும் இரவில் அதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கும் ஆஷ்கானிற்கு வரும் ஒரு தொலைபேசி அழைப்பு, நாதேர் தெஹ்ரானில் ரகசியமாக இடம்பெறும் ஒரு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் தகவலை அவனிற்கு தெரிவிக்கிறது. இசைநிகழ்ச்சியின் பொறுப்புக்களை தன் இசைக்குழுவினரிடம் ஒப்படைத்து விட்டு நேகாரையும் அழைத்துக்கொண்டு நாதேரை தேடிச் செல்கிறான் ஆஷ்கான்.

les-chats-persans-2009-18772-1929960640 கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கும் வீட்டை நெருங்கும் ஆஷ்கானும், நேகாரும் அவ்வீட்டிலிருந்து அதிகாரத்தால் தடைசெய்யப்பட்ட இசையானது சுதந்திரமாக தெருவில் கசிந்து கொண்டிருப்பதை அவதானிக்கிறார்கள். தான் மட்டும் உள்ளே சென்று நாதேரை அழைத்து வந்துவிடுவதாக கூறுகிறான் ஆஷ்கான். அவனை எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறாள் நேகார்.

வீட்டினுள் நுழைவதற்கான சங்கேத வார்த்தையைக் கூறி உள்ளே நுழைகிறான் ஆஷ்கான். வீடெங்கும் டெக்னோ இசை பெருத்த சத்தமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படிகளில் மதுக் கிண்ணங்களுடன் இளைஞர்கள் போதையில் கரைந்திருக்கிறார்கள். வீட்டின் மத்தியில் இளைஞர்களும், யுவதிகளும் டெக்னோவின் வீச்சிற்கு தங்களை நடனத்தின் மூலம் இணைத்துக் கொண்டு அதிர்கிறார்கள். அதிகாரம் தடைசெய்த உலகம் அங்கு ஆவேசமாக உயிர் கொண்டு ஆட, அதனூடு நாதேரைத் தேடிச் செல்கிறான் ஆஷ்கான்.

வீட்டின் இரண்டாவது மாடியிலுள்ள அறையொன்றில் போதையோடு கட்டிலில் வீழ்ந்து கிடக்கும் நாதேரைக் கண்டு கொள்ளும் ஆஷ்கான், அவனை உலுப்பி எழுப்புகிறான். ஆஷ்கானை தன் முன்னே காணும் நாதேர் குலுங்கி அழ ஆரம்பிக்கிறான். எல்லாவற்றையும் தான் சிதைத்து விட்டதாக ஆஷ்கானை அணைத்துக் கொண்டு அழுகிறான் அவன்.

நாதேரை நட்புடன் அணைத்துக் கொள்ளும் ஆஷ்கான் போதையில் இருப்பதற்காக நாதேரைக் கடிந்து கொள்கிறான், நாதேரை அவ்வீட்டிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் ஆயத்தமாகிறான். இவ்வேளையில் அவ்வீட்டின் முன் சைரனை ஒலித்தவாறே வந்து நிற்கிறது ஒரு பொலிஸ் வாகனம்.

பொலிஸ் வாகனத்திலிருந்து இறங்கும் காவலர்கள் வீட்டினுள் நுழைகிறார்கள். பொலிஸ் வீட்டினுள் நுழைவதைக் காணும் ஆஷ்கான் மாடி ஜன்னல் வழியே வெளியே துரிதமாக கீழே இறங்க முயல்கிறான். துரிதகதியில் இறங்கும் பதட்டத்தில் கால் இடறி கீழே வீழ்ந்து விடுகிறான் ஆஷ்கான்.

ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கும் நாதேர் தரையில் ஆஷ்கானின் உடல் எந்த அசைவுமற்றுக் கிடப்பதைக் காண்கிறான். வெறி கொண்டவனாய் வீட்டிற்குள் நுழைந்த காவலர் மேல் பாயும் நாதேரை அவர்கள் அடக்கி வீழ்த்துகிறார்கள்.

les-chats-persans-2009-18772-2090845041 ஆஷ்கானிற்கு நடந்ததை அறிந்து கொள்ளும் நேகார் அவ்விடத்தை விட்டு விலகி, ஆஷ்கானும் அவளும் அற்புதமான தருணங்களை இனிமையாகக் கழித்த மொட்டை மாடிக்குச் செல்கிறாள். மொட்டை மாடியிலிருந்து இருளில் மூழ்கியிருக்கும் தெஹ்ரானை அவள் விழிகள் வெறிக்கின்றன. அடக்கு முறையின் ரகசிய கண்கள் அந்த இரவினூடு அவளைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கின்றன. நேகாரின் கண்கள் திரையில் இருந்து விலக, அவள் உடல் மாடியிலிருந்து மெதுவாகப் பின்னோக்கி சரிகிறது.

மருத்துமனையில் ஒரு ட்ராலியில் ஆஷ்கான் தள்ளிச் செல்லப்படுகிறான். அவன் தலையிலிருந்து ரத்தம் வடிந்தபடியே இருக்கிறது. அவனது வலி நிரம்பிய முகம், அவனைத் தள்ளிச் செல்வோர், மருத்துவமனை என யாவும் தெளிவற்றுக் கலங்கலாக தெரிகின்றன. அந்தக் கலங்கலினூடாக திரை இருள்கிறது, நிலவறையில் வாழும் இசை ஒளிர்கிறது.

இளமை, இசை, துள்ளல், கொண்டாட்டம், நகைச்சுவை, சோகம் என ஈரானில் ஒடுக்கப்பட்டிருக்கும் இளம் இசைக்கலைஞர்களின் வாழ்க்கையை அற்புதமாக படம் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறது Nobody Knows About the Persian cats எனும் இந்த ஈரானியத் திரைப்படம். படத்தை அற்புதமாக இயக்கியிருப்பவர் இயக்குனர் Bahman Ghobadi.

இயக்குனர் பாமன் கோபாடி ஒரு படத்தை இயக்குவதற்காக ஈரானிய அதிகாரிகளிடம் அனுமதிக்காக விண்ணப்பித்திருந்தார். மூன்று வருட இழுத்தடிப்புக்களின் பின்னர் அவரிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. கோபாடி தளராமல் ஒரு இசை ஆல்பத்தை பதிவு செய்வதற்கு விண்ணப்பித்தார் அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. சற்றும் தயங்காது கோபாடி அனுமதி பெறப்பாடாத இசை ஆல்பங்களை பதிவு செய்யும் ஒரு நிலவறை ஒலிப்பதிவு மையத்தில் தனது ஆல்பத்தை பதிவு செய்தார்.

அந்த நிலவறையில் அவர் சந்தித்த இளம் இசைக்கலைஞர்களின் ஒரு புதிய உலகை அவர் திரைக்கு எடுத்து வந்திருக்கிறார். அந்த இளைஞர்களின் வாழ்க்கை, அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள், சந்திக்கும் அபாயங்கள், அயலவர்களின் தொல்லைகள், பொலிஸ் ரெய்டுகள், சவுக்கடித் தண்டனைகள் என பல விடயங்களை திரைப்படம் பேசுகிறது. இவையெல்லாவற்றையும் இசை எனும் ஒன்றிற்காகவே அந்த இளைஞர்கள் அனுபவிக்கிறார்கள் என்பது சிறப்பாக திரைப்படத்தில் கூறப்படுகிறது. ஈரான் அதிகாரத்தின் அனுமதி இல்லாமலேயே இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தில் வரும் பல சம்பவங்கள் உண்மை நிகழ்வுகளே.

Indie Rock, பாப் ராக், பெர்சியன் ராப், மெட்டல், நாட்டார் பாடல், மரபுப் பாடல், என படத்தில் வரும் பாடல்களும் இசையும் ரசிகர்களைக் கிறங்கடிக்கின்றன. குறைந்த வசதிகளுடன் செயற்படும் இந்த இளம் கலைஞர்களின் படைக்கும் திறமை பிரம்மிக்க வைக்கிறது.

கண் விழித்தெழு கடவுளே எனும் பெர்சியன் ராப் பாடலின் மிளகாய் வரிகள் ஈரானின் இன்றைய சமூக நிலையை குறுக்காக வெட்டி உண்மை நிலையைப் பாடுகின்றன. நாதேர் பாடும் மரபுப் பாடலின் இசை, ஒளிப்பதிவு, நடனம் என்பன ஒன்று சேர்ந்து, எல்லைகள் கடந்து அரங்கிலிருக்கும் ரசிகனின் மனதைக் கட்டி அணைக்கின்றன.

823ae03 திரைப்படத்தில் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்ததும் கமெரா தெஹ்ரானின் தெருக்களில் இறங்கிவிடுகிறது. நிலவறையில் உருவாகும் அப்பாடல்களால் எட்ட முடியாத தொலைவிலுள்ள தெருக்களையும், மக்களையும் ஊடுருவியவாறே கமெரா வேகமாகப் பறக்கிறது. அக்காட்சிகள் வழியே தெஹ்ரானின் வறுமையையும், செல்வத்தையும், வாழ்வையும் நுட்பமாகக் காட்டியிருக்கிறது கமெரா.

படத்தின் மற்றொரு முக்கிய அம்சம் நகைச்சுவை. ஷோலே படத்தில் கதாநாயாகி கண்ணாடித் துண்டுகளின் மேல் நடனமிடும் காட்சியைக் கண்டு கண்ணீர் சிந்தும் குருவி, இளைஞர்கள் இசைக்கும் மெட்டல் இசையைக் கேட்டபின் உணவு உட்கொள்ள மறுக்கும் மாடுகள், கண்பார்வை இல்லாவிடிலும் ஈரானை விட்டு நீங்கி வேறு நாடுகளில் அழகை ரசிக்க விரும்பும் தம்பதிகள் என இயல்பான, செறிவான நகைச்சுவை.

படத்தில் தன் சிறப்பான நடிப்பால் மனதைக் கவர்பவர்களில் முதலிடம் பிடிப்பவர் நாதேர் பாத்திரத்தில் பின்னியெடுத்திருக்கும் Hamed Behdad. தடை செய்யப்பட்ட திரைப்பட சிடிக்களை விற்றதற்காக நடக்கும் விசாரணையில் அவர் வழங்கும் நடிப்பு அரங்கையே சிரிப்பில் ஆழ்த்திவிடுகிறது. நேகார், ஆஷ்கான் ஆகிய இருவரும் நிஜ வாழ்வில் இசைக்கலைஞர்கள். படப்பிடிப்பு நிறைவடையும் முன்பே இவர்கள் இருவரும் இங்கிலாந்துக்கு சென்று விட்டார்கள்.

ஈரானில் ஒடுக்கப்படும் இளம் இசைக்கலைஞர்களின் உண்மைநிலை குறித்து வெளிப்படையாக துணிச்சலுடன் பேசும் ஒரு பதிவாக இப்படம் அமைந்திருக்கிறது. ஈரானில், வீட்டில் பூனைகள், நாய்களை வளர்க்கலாம் ஆனால் அவற்றை வெளியே எடுத்துச் செல்ல அங்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதே போன்ற நிலையில்தான் இளைஞர்கள் இசைக்க விரும்பும் இசையும் அடைபட்டுக்கிடக்கிறது. நீண்ட நாட்களின் பின் நான் மிகவும் ரசித்துப் பார்த்த படமிது. தரமான படங்களை விரும்பும் நண்பர்களிற்கு நான் இத்திரைப்படத்தை தயங்காது பரிந்துரை செய்கிறேன். [****]

ட்ரெயிலர்


கடவுளே கண்விழி !
























நாதரின் பாடல்