Sunday, September 27, 2009

பாக்தாத்தில் பறக்கும் பட்டம்


பாக்தாத்தில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்க துருப்புகளின் ஒர் பிரிவாக இயங்கிக் கொண்டிருக்கிறது Bravo அணி. ப்ராவோ அணியின் பணி நகரத்தில் எதிரிகளால் வைக்கப்படும் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வதாகும். ப்ராவோ அணியின் தலைவனாக தாம்சன்(Guy Pearce) என்பவனும் அவனின் தலைமையின் கீழ் சான்போர்ன் (Anthony Mackie) மற்றும் எல்ரிட்ஜ் (Brian Geraghty) என இருவரும் கடமையாற்றி வருகிறார்கள்.

நகரில் வைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டு ஒன்றை செயலிழக்க வைக்கும் தருணத்தில் நிகழும் எதிர்பாராத ஒர் திருப்பத்தினால் அவ்வெடிகுண்டு வெடித்துவிட சம்பவ இடத்திலேயே தாம்சன் இறந்து போகிறான். தாம்சனின் மரணம் எல்ரிட்ஜின் மனதில் ஒர் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

ப்ராவோ அணியில் தாம்சனின் இடத்தை நிரப்புவதற்காக நியமிக்கப்படுகிறான் வில் ஜேம்ஸ். ப்ராவோ அணியின் சேவைக்காலம் பாக்தாத்தில் நிறைவு பெறுவதற்கு இன்னமும் 39 நாட்களே பாக்கி உள்ள நிலையில், வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வதை ஒர் பந்தயமாகக் கொண்டு அது தரும் தீவிர உணர்விற்கு சற்று அடிமையாகி விட்ட ஜேம்ஸின் செயல்கள் ப்ராவோ கம்பனியின் மற்ற இரு வீரர்கள் மனதிலும் திகிலை ஏற்படுத்துகின்றன. தாம் உயிருடன் வீடு திரும்புவோமா என்ற ஐயம் அவர்கள் மனதில் கேள்வியாக ஆரம்பிக்கிறது…..

அந்நிய நாடு, அங்கு தங்கள் நிலை கொள்ளலை தீவிரமாக வெறுக்கும் மக்கள், கிடைக்கும் தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டு கச்சிதமான வெடிகுண்டுகளைத் தயாரித்து அதனைப் பொறியாக்கி விடும் எதிரிகள், இவ்வகையான சூழ்நிலையில் தங்கள் கடமையை ஆற்ற வேண்டிய கட்டாயத்திலுள்ள மூன்று ராணுவ வீரர்களை சுற்றி சுழல்கிறது கதை.

hurtlocker_haut23 சான்போர்னும், எல்ரிட்ஜும் எப்படியாவது 38 நாட்களையும் சேதங்கள் எதுவுமின்றி கழித்து, பாதுகாப்பாக வீடு திரும்பி விட வேண்டும் என விரும்புகையில், அவர்களின் மனக்கனவுகளை கலைப்பது போல் வெடிகுண்டுகளுடன் கில்லி விளையாட்டு விளையாடுகிறான் ஜேம்ஸ்.

அவன் செயலிழக்கச் செய்யும் ஒவ்வொரு வெடிகுண்டும் அவனிற்கு ஒர் வெற்றிக் கேடயமே. தான் செயலிழக்க செய்யும் வெடிகுண்டுகளின் ட்ரிக்கர் பகுதிகளை ஞாபகப் பொருளாக சேகரிக்கும் வழக்கம் கொண்ட வெடிகுண்டுக் காதலன் அவன். வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தல் எனும் செயலில் கிடைக்கும் தீவிர உணர்ச்சிக்கு அடிமையான அவன், தன் பாதுகாப்பைப் பற்றி சிறிதும் கவலைப் படதாவன். அவனின் இவ்வகையான செயல்கள் ஏனைய வீரர்களையும் ஆபத்தின் எல்லைக்குள் பதட்டப்பட வைப்பதை அவன் உணராதவனாகவிருக்கிறான்.

தாம்சனின் மரணத்தின் பின், தீவிரமான சந்தர்பங்களில் கூடுதலாக பதட்டம் கொள்பவனாக இருக்கிறான் எல்ரிட்ஜ், அவன் மனநிலையை உணர்ந்தும் அவனை பிடிவாதமாக போரிற்குள் தள்ளி விடுவதில் கவனமாக இருக்கிறது அதிகாரம்.

எதிர்காலக் கனவுகள் குறித்து அதிக அக்கறை இல்லாத சான்போர்ன், தன் அணியின் பாதுகாப்பில் அக்கறை கொண்ட ஒர் நேர்மையான வீரன்,அந்த உறுதியான வீரனைக்கூட உடைந்து சிறு பிள்ளை போல அழவைத்து விடுகிறது ஒர் மனித வெடிகுண்டு ஏற்படுத்தும் பயங்கரம்.

படபடவென சீறிப்பாயும் துப்பாக்கி வேட்டுக்கள், ராக்கெட்டுகள், அதிர வைக்கும் விமானத் தாக்குதல்களை சற்று ஓய்வாக இருக்க வைத்து விட்டு, வெடிகுண்டுகளை பேச வைத்திருக்கிறது The Hurt locker எனும் இத்திரைப்படம்.

hurt_locker_24 வெடிகுண்டுகள் செயலிழக்க வைக்கப்படும் தருணங்களை அதன் தீவிரம் குறையாது அப்படியே காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார்கள். வெடிகுண்டை சுற்றிப் போடப்படும் பாதுகாப்பு வலயத்தின் உள்ளேயும், வெளியேயும் செயற்படும் வீரர்களின் பதட்டத்தையும், அவர்களில் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கும் பயத்தையும் திரையைக்கடந்து பார்வையாளனிடம் கடத்தி விடுவதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் Kathryn Bigelow.

வீரர்கள் தங்கள் உயிர் மேல் கொண்டுள்ள ஆசை, அவர்களின் பயங்கள், உளவியல் பாதிப்புக்கள், தீவிர செயல்கள் மேல் அவர்கள் கொண்டுள்ள போதை, பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கான ஏக்கம், இதை எல்லாம் அலட்டிக் கொள்ளாது தம் வாழ்வைப் பார்க்கும் பாக்தாத் வாழ் மக்கள், ஓயவே போகாத எதிரிகள் [ யார் எதிரி? யார் நண்பண் என்பதும் ஒர் பெரிய கேள்வியாக வீரர்கள் முன் நிற்கிறது] என இயலுமான வரை உண்மை நிலையைக் காட்ட முயன்றிருக்கிறார் பிஜ்லோ, இருந்தாலும் வெடிகுண்டுக் காட்சிகள் முன் இவை இலகுவாக மறக்கடிக்கப்படுகின்றன என்பதால் பார்வையாளன் மனதில் இவை அதிகம் பதிய மறுக்கின்றன. இதுவே படத்தின் பலவீனமாகி விடுகிறது.

2009-demineurs கார் வெடிகுண்டு, பிரேத வெடிகுண்டு, மனித வெடிகுண்டு, குப்பைகளிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டு என வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் காட்சிகள் மிகத் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உடலில் அதிரினலின் ஓட்டத்தை அதிகரிக்கும் காட்சிகள் இவை. பிஜ்லோவிற்கு இதற்கு சொல்லித்தர வேண்டியதில்லை என்பதை Point Break படத்தினை ரசித்தவர்கள் கூறுவார்கள்.

போர்க் களத்தை விட்டு பாதுகாப்பாக வீடு திரும்பி உறவுகளை அணைத்துக் கொள்ள விரும்பும் வீரர்கள் மத்தியிலும், போர் எனும் போதைக்கு அடிமையாகி, சாதாரண வாழ்வை வாழமுடியாத வேதனையான நிலையில் போரை நோக்கி விரைந்து ஓடும் பரிதாபமான வீரர்களும் இருக்கிறார்கள் என்பதை தெளிவாக்குகிறார் பிஜ்லோ.

வெடிகுண்டுகளை உருவாக்குவதும், செயலிழக்க செய்வதும், அதற்குப் பலியாவதும் மனிதர்கள்தான் இருப்பினும் பாக்தாத் நகரின் மீதாக சிறுவன் ஒருவன் ஆசையுடன் ஏற்றிய பட்டம் ஒன்றும் காற்றில் அலைந்தவாறே அதன் அழகுடன் பறந்து கொண்டுதானிருக்கிறது. வெடிகுண்டுகள் தாக்கி விடாத உயரத்தில். [***]

ட்ரெயிலர்

Saturday, September 26, 2009

வாழ்த்துக்கள் கோடி நண்பரே


ma2
ma1

அந்த அதிர்ஷ்டசாலி வேறு யாருமல்ல, வீரச் சிங்கமும், பிரபல கடற்கொள்ளையரும், ஜாவா மன்னன் காமாஜோஸ், சீனக் கடற்கொள்ளையன் ஸங்விங்லிங் ஆகியோரின் பரம வைரியும், காமிக்காலஜியின் நிறுவனருமான அன்பு நண்பர் ரஃபிக் அவர்கள்தான்.

wedding-flowers இல்லற இன் வாழ்வில் துணிச்சலுடன் காலடி எடுத்து வைக்கும் அவரிற்கு எங்கள் இனிய நல்வாழ்த்துக்கள்….

Sunday, September 20, 2009

தகரத்தில் பூக்கும் ரோஜாக்கள்


இருபது வருடங்களிற்கு முன்பாக தென்னாபிரிக்காவின் ஜோகானாஸ்பெர்க் நகரத்தின் மீது செயலிழந்து விடுகிறது வேற்றுக் கிரகவாசிகளின் ஒர் விண்கலம். செயலிழந்த விண்கலத்தின் உள்ளே நுழையும் அதிகாரிகள் அங்கு மிகப் பலவீனமான நிலையில் இருக்கும், இறால் போல் தோற்றமளிக்கும் வேற்றுக் கிரகவாசிகளைக் காண்கிறார்கள்.

வேற்றுக் கிரகவாசிகளின் கலம், அது அந்தரத்தில் நிற்குமிடத்தை விட்டு நகர முடியாததால், அதன் கீழே இருக்கும் ஒர் நிலப்பகுதியில் இறால்களை அடைக்கலம் தந்து தங்க வைக்கிறார்கள் அதிகாரிகள். அந்த முகாம் டிஸ்டிரிக் 9 என அழைக்கப்படுகிறது.

இருபது வருடங்களின் பின்பாக டிஸ்டிரிக் 9 ஒர் தகரக் கொட்டகைச் சேரியாகவே மாறிவிட்டிருக்கிறது. இறால்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இறால்கள் முகாமை விட்டு வெளியேறி விடாத வண்ணம் பலத்த காவல் அங்கு நிலவுகிறது. முகாமினுள் புகுந்து விட்ட கொடிய நைஜீரிய ஆயுதக் கும்பல் ஒன்று இறால்களின் அப்பாவித்தனத்தினால் பூனை உணவு வியாபாரத்தில் கொழித்து வளர்கிறது.

கால ஓட்டத்தில் இறால்கள் குறித்த நகர மக்களின் அபிப்பிராயம் இரக்கத்திலிருந்து இனவெறுப்பாக மாறிவிட்டிருக்கிறது. இறால்கள் நகரத்திலிருந்து வேறு எங்கேயாவது சென்று தொலையட்டும் என்ற மனநிலைக்கு வந்து விட்டிருக்கிறார்கள் அவர்கள்.

எனவே இறால்களை டிஸ்டிரிக் 9லிருந்து வெளியேற்றி, வேறு ஒர் பகுதியில் தங்கவைக்கும் பொறுப்பை MNU எனும் நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்கிறது. அந்நடவடிக்கைக்கு தலைமை தாங்க Wikus Van Der Merwe எனும் அதிகாரியையும் நியமிக்கிறது.

District600 MNUவின் ஆயுதப் பிரிவு, மற்றும் சில அதிகாரிகள் துணை வர டிஸ்டிரிக் 9க்குள் நுழையும் விக்கஸ், அங்கு பரிதாபமான நிலையில் வாழும் இறால்களிடம் அவர்களை அங்கிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லப் போகும் தகவலைக் கூறி அவர்களை அதற்கு இணங்க வைக்க முயல்கிறான்.

ஒர் இறாலின் தகரக் கொட்டகையில் நடக்கும் தேடலில், இறால்கள் ரகசியமாக மறைத்து வைத்திருந்த திரவக் குடுவையொன்றைக் கண்டெடுக்கும் விக்கஸ், அதனை திறந்து பார்க்க முயல்கையில் அதிலிருந்த திரவத்தை தன் முகத்தின் மீது தவறுதலாக தெளித்துக் கொள்கிறான்.

4a681f124e226 டிஸ்ரிக் 9 ஐ விட்டு வெளியேறும் விக்கஸின் உடல் மாற்றம் காண ஆரம்பிக்கிறது. மருத்துவமனையில் தன் உடலை பரிசோதித்துப் பார்க்கும் விக்கஸ் தான் ஒர் இறாலாக மாறிக் கொண்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறான்.

விக்கஸின் நிலை பற்றி அறிந்து கொள்ளும் MNU அவனை தன் பரிசோதனைக் கூடத்திற்கு எடுத்து வந்து, அவன் விருப்பத்திற்கு எதிராக அவன் மேல் ஆய்வுகளை மேற்கொள்ளுகிறது.

விக்கஸின் உடலில் வேற்றுக்கிரக உயிரினதும், விக்கஸினதும் மரபணுக்கள் சமனிலை அடைந்திருக்கும் தருணத்தில் அவன் உடல் உறுப்புக்களை அகற்றி கொள்ளை லாபம் பார்க்க விரும்புகிறது MNU. MNUவின் காவலிருந்து தப்பும் விக்கஸ், செல்ல வேறு இடம் எதுவுமின்றி அடைக்கலம் தேடிச் செல்லும் இடம் டிஸ்டிரிக்ட் 9 ஆகவிருக்கிறது..

ஒர் விபரணக்கதை போல், பேட்டிகள் மற்றும் ஆவண ஒளிப்பதிவுகள் வழி தம் பரிதாபமான நிலைகளிலிருந்து விடுதலை பெற விரும்பும் விக்கஸ் மற்றும் கிறிஸ்டோபர் எனும் இறால் ஆகியோரின் போரட்டத்தை திறம்பட திரையாக்கியிருக்கிறார் இயக்குனர் Neill Blomkamp.

நட்புக்கரம் நீட்டும் வேற்றுக் கிரக உயிர் அல்லது மனித குலத்தை அழிக்க வந்த வேற்றுக் கிரக உயிர் எனும் வழக்கத்தினை தவிர்த்து, மனிதருக்கு அடங்கிப் போய், அடக்கு முறைக்குள்ளாகும் வேற்றுக் கிரகவாசிகளை அறிமுகம் செய்திருக்கிறார் இயக்குனர்.

அவர்களிற்குரித்த தகுதியான வாய்ப்புக்கள் வழங்கப்படாது அவலத்தில் விடப்படும் ஒர் இனமானது தன் விடுதலைக்கு வழி தேடுவது இயல்பானது, இதில் விக்கஸும் தன் சுய நலம் கருதி இணைந்து கொள்வதை விறுவிறுப்புடன் படமாக்கியிருக்கிறார் ப்லம்காம்ப்.

வேற்றின வெறுப்பு, அகதி முகாம்களின் உள்ளே தனி ராச்சியம் நடத்தும் வன்முறைக் கும்பல், அகதிகளைக் தன் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் அமைப்பு போன்ற சமகால விடயங்களை திரைக்கதையில் நேர்த்தியாக சேர்த்திருக்கிறார் அவர்.

டிஸ்டிரிக்ட் 9க்குள் விக்கஸ் நுழைந்தபின் படத்தின் வேகம் அதிகரித்து விடுகிறது. சிறப்பான திருப்பங்கள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை படத்தின் பலம். ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் இருந்தாலும் மனதை நெகிழ வைக்கும் காட்சிகளும் இடையே வந்து படத்தினை கூடுதலாக ரசிக்க செய்து விடுகின்றன.

ஆரம்பத்தில் இறால்களை ஏமாற்றி, பின்பு அவர்களிடமே தஞ்சமடைந்து தன் சுயநலத்திற்காக எதையும் செய்ய தயாராகவிருக்கும் பாத்திரத்தில் சிறப்பாக செய்திருக்கிறார் நடிகர் Sharlto Copley. ஆரம்பத்தில் பார்வையாளனின் வெறுப்பையும், பின்பு இரக்கத்தையும் சம்பாதிக்கும் அவர் இறுதியில் மனங்களை நெகிழச் செய்து விடுகிறார்.

d9-christopher வேற்றுக்கிரக இறால்கள் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டவை என்று நம்புவது சிரமம். அவ்வளவு இயல்பாக [நடித்து] இருக்கிறார்கள். அவர்கள் கண்களில் கூட உணர்சிகளைக் காட்டி விடும் நுட்பம் பாராட்டுக்குரியது.

ஆகாயத்தில் ஒரு கமெரா, தோளில் பயணிக்கும் ஒர் கமெரா என வேகமான கதைக்கு ஏற்ற ஒளிப்பதிவும், எடிட்டுங்கும் சிறப்பாக இருக்கிறது. மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டாலும் தன் தரத்தினால் ரசிகர்களை அசத்திப்போட்டு விடும் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் தான் ஒருவராக இருப்பதில் பீட்டர் ஜாக்சன் பெருமைப்படுவார் என்பது நிச்சயம்.

தன் சொந்த இடத்திற்கு திரும்பிச் செல்லவே முடியாத இனங்களின் வேதனைகளை வேலிகள் கொண்டோ, எல்லைகள் மூலமோ தணித்திட முடியாது. இருக்கும் நிலத்திலேயே வேர் பிடித்து விருட்சமாகி விடும் வேதனையது. இறால் ஒன்று, குப்பைகளில் தேடி எடுத்த தகரங்களில் உருவாக்கும் ரோஜாக்களில் கூட தன் துணையின் மீதான அன்பும், அவளை அணைக்க முடியவில்லையே ஏக்கமும் கலந்தேதான் இருக்கிறது. (****)

நண்பர்களிற்கு என் ரம்ழான் பெருநாள் வாழ்த்துக்கள்.

Friday, September 18, 2009

துயில் கலையும் நதி


ஜெனொவா நகரின் யுத்தத்தில், யுத்தக் கைதியாக்கப்பட்ட மார்க்கோ போலோ, நகரின் சிறையில் அடைக்கப்படுகிறான். சிறையில் தன் பிரயாண அனுபவங்களை சக கைதிகளிடம் விடுவிக்கிறான் மார்க்கோ. கைதிகள் மத்தியில் மார்க்கோவின் பயணக் கதைகள் புகழ் பெறுகின்றன.

9782753300750 இந்நிலையில் சிறையில் மார்க்கோவை அணுகுகிறான் அதே சிறையில் கைதியாக இருக்கும் Luigi Rustichello De Pise. மார்க்கோவின் பயண அனுபவங்களை ஒர் புத்தகமாக எழுதலாம் எனப் பரிந்துரைக்கிறான் ருஸ்டிசெல்லோ. அவன் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளும் மார்க்கோ அவனிற்கு தன் நீண்ட பயணத்தின் அனுபவங்களை கூறுகிறான்.

1298ல் Devisement Du Monde [மார்க்கோ போலோவின் பயணங்கள்] எனும் பெயரில் பிரெஞ்சு மொழியில் அந்நூல் வெளியாகி பரபரப்பான வாசனைக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்படுகிறது. வெனிஸ் நகர மக்கள் அந்நூலில் விபரிக்கப்பட்ட எண்ணற்ற விபரங்களையும் விளக்கங்களையும் சந்தேகக் கண்ணுடனே பார்த்து அந்நூலை Il Millione [The million ] எனச் செல்லமாக அழைத்தனர். 13ம் நூற்றாண்டின் முக்கிய நூல்களில் ஒன்றாக அது கருதப்படுகிறது.

சில வருடங்களின் பின் முதியவனாகிவிட்ட மார்க்கோவிற்கு, ருஸ்டிசெல்லோவிடம் இருந்து ஒர் மடல் வருகிறது. மார்க்கோவின் பயண அனுபவங்களை மீண்டும் தான் எழுத விரும்புவதாக தன் விருப்பத்தை தெரிவிக்கிறான் ருஸ்டிசெல்லோ. ஆனால் இதுவரை மார்க்கோ சொல்லியிராத, சொல்லியிருந்தும் வாசகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்று கருதி விலக்கப்பட்ட விடயங்கள் யாவையும் இந்நூலில் அப்பட்டமாக தான் எழுத விரும்புவதாகவும் அவன் அறியத்தருகிறான்.

முதல் நூல் பெற்றுத்தந்த பிரபல்யமும், புகழும், புளுகன் என்ற பட்டப் பெயரும் மார்க்கோவிற்கு போதுமானதாக இருக்கும் நிலையில் மார்க்கோ தன் கதையை மீண்டும் கூற ஆரம்பிக்கிறான்..

பெற்றோரிற்கு ஒரே மகனான மார்க்கோ, வெனிஸ் நகரில் வணிகத்தில் சிறந்து விளங்கும் கவுரவமான போலோக்களின் குடும்பத்தை சேர்ந்தவன். தன் சகோதரன் மத்தியோ போலோவுடன் வெனிஸ் நகரை விட்டு வணிகத்திற்காக கிளம்பிச் சென்ற அவன் தந்தை நிக்கோலோ போலோ பல வருடங்கள் ஆகியும் வெனிஸ் திரும்பவில்லை. அவர்களைப் பற்றிய தகவல்களும் கிடைக்கவில்லை. தன் தாயின் மரணத்தின் பின் போலோ ஒர் ஆயாவினால் வளர்க்கப்படுகிறான்.

marco_polo-790ed சிறப்பான கல்வி மார்க்கோவிற்கு அளிக்கப்பட்டாலும் அதில் ஈடுபாடு காட்டாது, துறைமுகத்தின் சேரிப்பகுதிகளில் வாழும் சிறுவர்களுடன் தன் நாட்களை கழிக்கிறான் மார்க்கோ. அவர்களுடன் சேர்ந்து திருடவும் செய்கிறான். வனப்புமிகு வெனிஸின் வறிய மக்களின் வாழ்க்கையை அருகிலிருந்து பார்க்கிறான்.

ஒரு நாள் பாவமன்னிப்பு பெறுவதற்காக ஆலயத்திற்கு செல்லும் மார்க்கோ, அங்கு இலாரியா எனும் அழகியைக் காண்கிறான். அவள் மேல் மையல் கொண்டுவிடும் மார்க்கோவை மயக்கி, முதியவனான தன் கணவனை கொலை செய்யத் தூண்டுகிறாள் இலாரியா.

துரதிர்ஷ்டவசமாக மார்க்கோ அக்கொலையைச் செய்யாமலே பழி அவன் மேல் விழுகிறது. கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான் மார்க்கோ.

சிறையிலிருந்து மார்க்கோவின் திட்டத்தால் தப்பிய முதிய யூதன் ஒருவனின் உதவியாலும், நீண்ட காலத்திற்குப் பின் நாடு திரும்பியிருக்கும் தன் தந்தையின் செல்வாக்காலும் மார்க்கோவிற்கு சிறையிலிருந்து விடுதலை கிடைக்கிறது. ஆனால் மார்கோ வெனிஸ் நகரை விட்டு வெளியேறி விடவேண்டும் என்ற நிபந்தனையும் விடுதலைக்கு துணை வருகிறது.

மொங்கோலிய சக்கரவர்த்தியும், ஜெங்கிஸ் கானின் பேரனுமான குப்ளாய் கானின் வேண்டுகோளிற்கிணங்க நூறு கத்தோலிக்க மதகுருக்களை அவனிடம் அழைத்து செல்ல விரும்பும் நிக்கோலோ போலோ தன் சகோதரன் மத்தியோவுடன், மார்க்கோவையும் சேர்த்துக் கொண்டு நீண்டதொரு பயணத்தை ஆரம்பிக்கிறான்…..

Polo_Marco_CA_89986 வெனிஸிலிருந்து கடல் மார்க்கமாக ஜெருசலேமின் மேற்குக் கரையில் அமைந்திருக்கும் நகரான ஆக்ரை அடைந்து, பின் அங்கிருந்து கித்தாயில் [சீனா] அமைந்திருக்கும் மொங்கோலிய ராஜ்ஜியத்தின் தலைநகர் ஹான்பலிக் [பெய்ஜிங்]வரை மார்க்கோ போலோ குழுவினர் மேற்கொண்ட நீண்ட தரை வழிப் பயணத்தை, வாசகர்களை வசியம் செய்து விடும் தன் கதை சொல்லலினால் நாவலின் முதல் பாகத்தில் [ பிரெஞ்சு மொழிப் பதிப்பு] அனுபவிக்க வைத்திருக்கிறார் கதாசிரியர் Gary Jennings .

கதையின் நாயகன் மார்க்கோ போலோ அல்ல, மார்க்கோ விபரிக்கும் பயண அனுபவங்களே கதையின் நாயகனாகி விடுகிறது. கதாசிரியரும் மார்க்கோவை ஒர் கதாநாயகனாகக் காட்டவில்லை, நீண்ட ஒர் பயணத்தின் அனுபவங்களை வியப்புடனும், ஆர்வத்துடனும் உள்ளெடுத்துக் கொள்ளும் பயணியாகவே மார்க்கோ காணப்படுகிறான்.

நாவலின் முதல் பாகத்தின் முக்கிய பாத்திரங்களாக மார்க்கோ, நிக்கோலோ, மத்தியோ, மற்றும் இவர்களுடன் பயணம் செய்யும் மூக்குத்துளை எனும் பெயர் கொண்ட அடிமை ஆகியோரைக் குறிப்பிடலாம். நிக்கோலோ, மத்தியோ ஆகியோர் பணம் செய்வதில் கண் கொண்ட வணிகர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். மார்க்கோ, சாகசங்களையும், புதிய அனுபவங்களையும், பெண் அழகுகளையும் தேடி விரையும் இளைஞனாக காட்டப்படுகிறான். வினோதமான பழக்கங்களைக் கொண்ட அடிமையான மூக்குத்துளை, கதையில் வரும் மாந்தர்களையும், கதையைப் படிக்கும் மாந்தர்களையும் அவர்களின் அதிர்ச்சிகளின் எல்லைகளை விரிவாக்குவதற்கென்றே உருவாக்கப்பட்டிருக்கிறான்.

நீண்ட இந்தப் பயணத்தில் அவர்கள் கடந்து செல்லும் பல்வேறுபட்ட நகரங்கள், பாலைவனங்கள், நீர் நிலைகள், மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை முறை, மிருகங்கள், தாவரங்கள், வைத்திய முறைகள் என்பவை குறித்த, மிகுந்த தேடலுடனான தெளிவான தகவல்களைத் தந்து கதையின் பக்கங்கள் ஒவ்வொன்றையும் ருசித்துப் படிக்க செய்திருக்கிறார் ஜென்னிங்ஸ். இந்நாவலிற்காக அவர் மார்க்கோ போலோ பயணம் செய்த வழியே பயணித்து அனுபவங்களையும், தன் தேடலையும் செறிவாக்கினார்.

சாகசம், நகைச்சுவை, சிருங்காரம், தீர்க்கமான தகவல்கள் எனும் கலவையுடன் வரலாற்றையும், தன் அற்புதமான கற்பனையையும் சேர்த்து ஜென்னிங்ஸ் தந்திருக்கும் நாவல் பிரம்மிக்க வைக்கிறது.

[சிலுவைப்போரின் எச்சமாக இருக்கும் ஆக்ர் நகரின் அலங்கோலங்கள், துர் மாந்தீரிகம், ஹானின் சிற்றரசரிற்கு தங்கள் காலில் கட்டிய சிறிய பட்டுப் பைகளில் பாக்தாத்தின் சுவையான செர்ரிப் பழங்களை எடுத்து செல்லும் புறாக்கள், பிரம்மிக்க வைக்கும் பாக்தாத்தின் அழகு, மலைக்க வைக்கும் பாக்தாத் சந்தை, சிறுவர் தொழிலாளர்களைக் கொண்ட கம்பள தொழிற்சாலை, குற்றவாளிகளை எண்ணையில் பொரித்தெடுக்கும் பாக்தாத்தின் சட்டங்கள், பசி தாங்காது தங்கள் காதுகளையே வெட்டிப் புசிக்கும் பாலைவனக் கொள்ளையர், காதல் விளையாட்டுக்களில் கனவுலகம் திறக்கும் மருந்து, ரசவாதம், ஆட்டுத்தோலில் செய்த காற்றுப்பைகளில் மிதக்கும் தெப்பங்கள், சமர்க்கண்டுவிற்கு உப்பு விற்க செல்லும் சோழ நாட்டவர் இப்படி ஏராளமான தகவல்களை பக்கத்திற்கு பக்கம் தந்து வாசகனை மயக்கிவிடுகிறார் ஆசிரியர்.]

Gary வாசகர்களை பிரம்மிக்க வைப்பதோடு மட்டுமல்லாது அதிர்ச்சி அடையவும் வைக்கிறார் ஜென்னிங்ஸ். வெனிஸ் நகர மக்களினதும், கத்தோலிக்க மதத்தினதும் கட்டுப்பாடான மத மற்றும் வாழ்க்கை ஒழுக்க நெறிகள், மார்க்கோ தன் பிரயாணத்தில் கடந்து செல்லும் பிரதேசங்களில் அர்த்தமிழந்து அடிபட்டு போவதை தெளிவாகக் காட்டுகிறார் ஜென்னிங்ஸ்.

நாவலில் மதங்கள் குறித்த, சில இனங்கள் குறித்த, சில கருத்துக்களும், சம்பவங்களும் மென்மையான உள்ளம் கொண்ட வாசகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன. ஆனால் இவற்றை எளிதாக தூக்கி எறிந்து விடவும் முடியாது என்பதுதான் சிக்கல்.

சிருங்காரம் என்பது ஒர் கலை எனில், அதனை வர்ணிப்பதிலே, அதனை வக்கிரமின்றி அதன் பூரண அழகுடன் எழுதுவதிலே ஜென்னிங்ஸ் ஒர் மகா கலைஞன். ஆனால் பயணத்தில் கடந்திடும் பகுதிகளில் காணக்கிடைக்கும் வேறுபட்ட சிருங்கார வகைகளும், வழக்கங்களும் வாசகனை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்பது தெளிவு.

சில சிருங்கார வகைகள் எல்லை மீறியது என்று எண்ண வைத்தாலும், உலகத்தில் இல்லாத [இன்றும்] ஒன்றை ஜென்னிங்ஸ் கற்பனை செய்து வாசகனின் இச்சையை தீர்க்க முயலவில்லை என்பதை உறுதியாக கூறிடலாம். சிருங்காரத்தை தாண்டிப் பார்க்கையில் ஒர் அற்புதமான, சுவையான வாசிப்பனுபவம் தரும் நாவல் இது என்பதில் ஐயமில்லை.

ஹரி ஜென்னிங்ஸ் அமெரிக்காவை சேர்ந்த ஒர் நாவல் ஆசிரியர் ஆவார். இவர் எழுதிய அஸ்டெக் எனும் நாவலிற்கு கிடைத்த வரவேற்பும் விமர்சனங்களும் இவரை பிரபலத்தின் பிரகாசத்தினுள் இட்டு வந்தது. இவரின் நாவல்கள் தீர்க்கமான தகவல்களிற்கும், சரித்திர விபரங்களிற்கும் பெயர் போனவையாகும். மிகுந்த தேடல்களின் பிண்ணனியில் தன் கதைகளை இவர் உருவாக்கியிருக்கிறார். அஸ்டெக் நாவல்களிற்காக பன்னிரெண்டு வருடங்கள் மெக்ஸிக்கோவில் தங்கியிருந்தார். அமெரிக்காவை சேர்ந்த வரலாற்று நாவலாசிரியர்களில் முக்கியமான ஒருவராக கருதப்படும் ஜென்னிங்ஸ், 1999ல் இதய நோயால் காலமானார்.

aztec journeyer raptor

ஜென்னிங்ஸ் 1984ல் ஆங்கிலத்தில் வெளியிட்ட The Journeyer எனும் இந்நாவல் இருபத்தி நான்கு வருடங்களின் பின் பிரெஞ்சு மொழியில் MARCO POLO – Les Voyages Interdits எனும் தலைப்பில் இரு பாகங்களாக வெளியாகியிருக்கிறது [பதிவு முதல் பாகம் தந்த அனுபவத்தில் எழுதப்பட்டது]. காலத்தின் ஓட்டத்தில் கதையின் சுவை அதிகரித்திருக்கிறதே தவிர சற்றும் குறையவேயில்லை. தரமான எழுத்தின் சிறப்பம்சம் அதுதானே நண்பர்களே.

மனிதர்களின் மனங்களிலே ரகசியப் பயணங்கள் மலரிதழ்களின் அடியில் மறைந்திருக்கும் நுண்ணிய நீர்த்திவலைகள் போல் ஒளிந்திருக்கின்றன. தங்கள் கனவுப் பயணங்களை செய்து முடித்தவர்கள் பேறு பெற்றவர்கள். அதனை நிறைவேற்ற இன்னமும் வாய்ப்புக் கிடைக்கப் பெறாதவர்களின் கனவுகள் அவர்கள் செய்ய விரும்பும் பயணங்களைப் போலவே நீண்டவைதானே.

உலகத்தின் கூரை என அழைக்கப்பட்ட Buzai Gumbad எனும் உயர்ந்த மலைப்பகுதியில் பனிக்காலம் முடிவடைந்து, இலைதுளிர் காலம் ஆரம்பித்திருக்க, குளிரில் விறைத்திருந்த அமு தாரியா நதி அதன் துயில் கலைந்து ஓட, அந்த நதியை தேடி வந்திருக்கும் பருவ காலப் பறவைகளின் குரல்களில் உண்டாகும் சங்கீதத்தை, அவற்றின் சிறகுகளின் அசைவில் உருவாகும் காற்றில் கலந்திருக்கும் உவகையையும், மென்குளிரையும் மார்க்கோ உணர்ந்ததைப்போலவே நானும் உணர்ந்தேன். அந்த நதியின் அருகில் நானும் கண்மூடி இருந்தேன். [*****]

நண்பர் ஜோஸிற்கு என் சிறப்பு நன்றிகள்.

Friday, September 11, 2009

கலீஃபோட 1001 ராவுகள்


izno2 மாண்புமிகு கலீஃப் ஹரூன் எல் புஷா அவர்களின் நல்லாட்சியில், மாதம் நான்கு வாரங்களுடன் அழகு கெடாது இருக்க, வார இறுதிகளில் ராஜ்ஜியத்தின் பதிவர்கள் பதிவுகளை இயற்ற, இதனையெல்லாம் பொருட்படுத்தாத கலீஃப், தன் அண்டை நாட்டு ஜனாதிபதியான ஹாமையும், ஹாமின் சகோதரரும் முதல் மந்திரியுமான ரிக்கையும் வரவேற்க தன் மாளிகையுடன் விழாக்கோலம் பூணுகிறார்.

ஹாம், மற்றும் ரிக்கிற்கு விமரிசையான வரவேற்பு அளிக்கிறார் கலீஃப். ஜனாதிபதி ஹாமுடன் அவர் செல்லப்பிராணியான நோலூஸும், ஜனாதிபதியின் பிரம்மாண்டமான தலைப்பாகையும் கூடவே வருகின்றன. போக்கேமோன் போன்ற தோற்றம் கொண்ட விசித்திரப் பிராணியான நோலூஸ், விசீர், கலீஃப் ஆகிய சொற்களை கேட்டால் தன்னிலை இழந்து, அது என்ன செய்கிறது என்பது அதற்கும், மற்றவர்களிற்கும் தெரியாத ஒர் நிலையை அடைந்து விடும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

கலீஃப்பும், ஜனாதிபதியும் வழமையான உரையாடல்களை முடித்தபின், ஜனாதிபதி ஹாம், தங்கள் நாட்டு வழக்கப்படி இன்னமும் ஒன்பது நாட்களில் தான் தன் பதவியை தங்கள் நாட்டின் முதல் மந்திரியான தம்பிற்கு அளித்துவிட்டு, தம்பியின் முதன் மந்திரி பதவியை தான் ஏற்றுக் கொள்ளப் போவதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். ஒவ்வொரு 1001 இரவுகளிற்கும் ஒரு முறை இந்தப் பதவி மாற்றம் தொடர்ந்து இடம் பெறும் என்பதனையும் அவர் அறியத் தருகிறார்.

தன் ராஜ்ஜியத்திற்கு வருகை தந்த விருந்தினர்களை மசாலா மீன் விருந்து தந்து அசத்துகிறார் கலீஃப். உணவு உண்ணும் வேளையில் இடம்பெறும் உரையாடல்கள் வழி தங்கள் ராஜ்ஜியத்திலும் கூட 1001 இரவுகளிற்கு ஒர் முறை பதவிகளை மாற்றிக் கொள்ளக்கூடிய சாத்தியங்கள் உண்டு என்பதை கலீஃபும் அவர் பேரன்பிற்குரிய மந்திரி இஸ்னோகுட்டும் அறிந்து கொள்கிறார்கள்.

மிகக் கடினமான பணிகள்!!! நிறைந்த தன் கலீஃப் பதவியை தன் அன்பிற்கும், நம்பிக்கைக்குமுரிய மந்திரி இஸ்னோகுட்டிற்கு தந்துவிட்டு தான் சற்று இளைப்பாறலாம் என மனதில் திட்டம் போடும் கலீஃப், ரகசியமாக அதற்குரிய நடவடிக்கைகளில் இறங்குகிறார்.

கலீஃபின் மனதை அறியாத இஸ்னோகுட், மாளிகை நூலகத்தில் சட்டப்புத்தகம் ஒன்றை தேடி எடுத்து, 1001 இரவுகள் தோறும் பதவியை மாற்றிக் கொள்வதற்கான சட்ட நுணுக்கங்களை ஆராய்கிறான். ஏற்கனவே ஒர் முறை கலீஃப் பதவியில் இருந்திருந்தால் மட்டுமே 1001 இரவுகள் முறையில் தான் கலீஃபாக பதவியேற்கலாம் என்பதை அறிந்து கொள்ளும் இஸ்னோகுட் மனதில் புதிய திட்டம் ஒன்று பாலைவனத்தில் தோன்றிய பம்ப் செட்டாக உருவெடுக்கிறது.

izno3 தன் மனதில் ரகசியத் திட்டத்தை அடைகாத்துக் கொண்டிருக்கும் கலீஃப்பை அணுகும் இஸ்னோகுட், கலீஃபின் ராஜ்ஜியத்தை சற்று விரிவு படுத்த வேண்டிய அவசியத்தை அவரிற்கு விளக்குகிறான். இஸ்னோகுட்டின் விளக்கங்களால் திருப்தி அடையும் கலீஃப், அவன் புதிய நாடுகளை வெல்வதற்கு அவனிற்கு அனுமதி வழங்குகிறார்.

கலீஃபின் ராஜ்ஜிய உளவுத்துறையில் பணியாற்றும், வரைபடங்களை படிப்பதிலும், மொழிபெயர்ப்பதிலும் வல்லவனான!! மலிக், பறக்கும் கம்பள ஓட்டியும், தீர்க்கதரிசியுமான!! டிராடமுஸ், தம்மை சுற்றியிருக்கும் சூழலில் கலந்து மறைந்து கொள்வதில் எத்தர்களான!! காம் மற்றும் லியோன் [ லியோன் பறவைகளைக் கொலை செய்யும் பித்துப் பிடித்தவன் ] ஆகிய நால்வருடன், தன் வலது கையான டிலா லாரத், ஜனாதிபதி ஹாமின் செல்லப் பிராணியான நோலூஸ் ஆகியோரையும் சேர்த்துக் கொண்டு புதிய நாடு ஒன்றைப் பிடித்து விடக் கிளம்புகிறான் இஸ்னோகுட். கலீஃபின் மனதில் இஸ்னோகுட் ஒன்பது நாட்களிற்குள் திரும்பிவிட வேண்டுமே எனும் பதட்டம், இஸ்னோகுட்டின் உள்ளத்தில் ஒன்பது நாட்களிற்குள் கலீஃபாகி திரும்ப வேண்டுமே எனும் உதறல், இவர்கள் ஆசைகள் நிறைவேறுமா?

1962ல் கொச்சினியுடன் ஆரம்பித்த இஸ்னோகுட் எனும் உலகப்புகழ் பெற்ற காமிக்ஸ் நாயகனின் சாகசப் பயணத்தை தன் வாரிசுகளிடம் பொறுப்பாக கையளித்திருக்கிறார் ஜான் தபாரி. வாரிசுகளின் கூட்டணி முயற்சியில் இஸ்னோகுட்டின் இருபத்தியெட்டாம் ஆல்பமான Les Mille Et Une Nuits De Calife [ கலீஃபின் 1001 இரவுகள் ] அக்டோபர் 2008ல் வெளியாகியது.

தந்தையின் பெயரைக் காப்பாற்றுவதோடு மட்டுமல்லாது, தங்களின் பெயர்களையும் நிலைநாட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் என்பது வாரிசுகளிற்கு சவால்தான். ஆனாலும் கொஞ்சம் சாதித்திருக்கிறார்கள். ஆகா, ஒகோ என்று வியந்து பாராட்ட முடியாவிடிலும் கூட தங்களிடமும் சிறிதளவு சரக்கு இருக்கிறது என்று காட்டியிருகிறார்கள்.

ஜனாதிபதி ஹாம், கலீஃபின் ராஜ்ஜியத்திற்கு வருகை தரும் ஆரம்பக் காட்சிகள் ஆமைகளே நாணம் கொள்ளும் வேகத்தில் நகர்கின்றன. இப்பக்கங்களில் நகைச்சுவையை தேட வேண்டியுள்ளது. ஆனால் பறக்கும் கம்பளத்தில் நாடு பிடிக்க கிளம்பும் இஸ்னோகுட் குழுவினரின் அட்டகாசங்களை ரசிக்க முடிகிறது.

izno4 இந்த நாடு பிடிக்கும் வேட்டையில் கொரில்லா ராணுவத்தை தன்வசம் கொண்ட ஒர் தனியரசன், தென்னமரிக்க காடு ஒன்றில் இருக்கும் விந்தையான கேள்வி கேட்கும் மரம், சூதாட்ட விடுதிகளின் சொந்தக்காரனாகிய இத்தாலிய காட்ஃபாதர் ஒருவன், பிரான்சில் வாரம் ஒரு முறை நடக்கும் ஜனாதிபதி தேர்தல் போன்ற சவால்களை இஸ்னோகுட் குழுவினர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இத்தருணங்களில் இஸ்னோகுட் குழுவினர் அடிக்கும் கூத்துக்கள்தான் வாசகனை சிரிக்க வைக்கின்றன.

இஸ்னோகுட் நாடு பிடிக்க ஓடிவிட, அரண்மனையில் அவனை வரவேற்பதற்கு தடபுடலான ஆயத்தங்களை செய்கிறார் கலீஃப். நகைச்சுவையின் வறுமையை இப்பகுதிகளில் தாராளமாக சுவைத்திடலாம்.

இறுதியில் யாருமே எதிர்பார்த்திராத ஒர் புதிய கலீஃபுடன் இஸ்னோகுட் மோத வேண்டிய நிலை ஏற்படுகிறது. இறுதிக்காட்சிகள் சற்று வேகம் கொண்டவையாக இருக்கின்றன. சஸ்பென்ஸையும் ஒரளவு பேணியிருக்கிறார்கள் கதாசிரியர்கள். எதிர்பாராத ஒர் முடிவுடன் நிறைவு பெறுகிறது கதை.

ஆல்பத்தின் சித்திரங்களிற்கு பொறுப்பேற்றிருப்பவர் Nicolas Tabaray[1966], தந்தையின் நுட்பம் இன்னமும் முழுமையாக கைகூடவில்லை எனிலும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். ஆரம்ப பக்கங்களின் பின் இஸ்னோகுட்டின் உலகில் இயல்பாக இணைய வைத்து விடுகிறார். இவ்வகையான தொடர்களில் தன் பாணியையோ, புதுமைகளையோ ஒர் ஓவியர் நுழைத்திட முடியாதது என்பது ஒர் சாபக்கேடாகும்.

izno1 கதை இலாகாவை கையில் எடுத்து இருப்பவர்கள் Muriel Tabary [1965], மற்றும் Stéphane Tabary[1971]. சிறப்பாக செய்ய வேண்டும் என விரும்பி, மிகையாக செய்து சறுக்கியிருக்கிறார்கள். கதையில் இடம்பெறும் நீண்ட உரையாடல்கள் கதையின் வேகத்திற்கு எதிராக செயற்பட்டுவிடுகிறது. நகைச்சுவைக்கு பக்கம் பக்கமாக டயலாக் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்கள் போலும்.

ஆச்சர்யம் என்னவெனில் ஆல்பம் ஜான் தபாரியின் மேற்பார்வையில்தான் உருவாகியது என்பதாகும். வழமை போலவே காதாசிரியர்கள், ஓவியர் கதையின் நடுவில் வந்து போகிறார்கள். இது அளவிற்கு மீறும் போது எரிச்சல்தான் உண்டாகிறது. இந்த ஆல்பம் வாசகர்களிடம் நல்ல வரவேற்பையோ, பாராட்டுக்களையோ பெருமளவில் பெற்றுக்கொள்ளவில்லை. மாறாக கொச்சினியினதும், இஸ்னோகுட்டினதும் தீவிர ரசிகர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களை இது பெற்றிருக்கிறது.

தரம் குறைந்த சொல் விளையாட்டுக்கள், “நாற்றமடிக்கும்” நகைச்சுவை, சலிக்க வைக்கும் பாத்திரபடைப்பு போன்றன, மேலுலகில் இருக்கும் கொச்சினி, இவ்வால்பத்தை படித்தால் இஸ்னோகுட் என்பார் எனக் கிண்டல் பண்ணுகிறார்கள் விமர்சகர்கள். இறுதிப் பக்கத்தில் தங்கள் திறமைகளை தாங்களே பாராட்டிக் கொள்கிறார்கள் வாரிசுகள். என்ன ஒர் தீர்கதரிசனம். அவர்களே தங்களைப் பாராட்டிக் கொள்ளாவிட்டால் வேறு யார் பாராட்டுவதாம். ஆனால் நான் அவர்களைப் பாராட்டுகிறேன். அடுத்த தடவை இதனை விடச் சிறப்பாக செய்யுங்கள் என்று.

ஆல்பத்தின் தரம் **

ஆர்வலர்களிற்கு

ஏனைய ஆல்பங்கள்

ரஃபிக்கின் அட்டகாசமான பதிவுகள்

காமிக்ஸ் பிரியரின் திரைப்பார்வை

Thursday, September 3, 2009

காலணிக்குள் உறங்கும் கடல் மணல்


ஆறு வருடங்கள் சிறைத் தண்டனை பெற்ற பத்தொன்பது வயது இளைஞனான மலிக், பிரான்சின் மத்திய சிறைச்சாலை ஒன்றிற்கு மாற்றப்படுகிறான். மலிக் ஒர் அனாதை. பதினொரு வயது வரை பள்ளி சென்றவன் என்பதால் நன்கு எழுதவோ, படிக்கவோ அறியாதவன். அவன் மதம் இஸ்லாம் எனினும் அதன் நெறிகளை அவன் பின்பற்றுபவனாக இல்லை.

முதன் முதலாக புதியதோர் சிறைக்குள் நுழையும் ஒர் கைதிக்கு ஏற்படும் பய உணர்வும், அடுத்து என்ன என்ற கேள்வியும் துணையாகவிருக்க, மத்திய சிறைக்கு வந்து சேர்கிறான் மலிக். ஒர் சாதரண கைதிக்குரிய அறை அவனிற்கு வழங்கப்படுகிறது. அவ்வறையின் ஜன்னலினூடு வரும் ஒளி, சில சமயங்களில் அவன் முகத்தையும் ஒர் சிறை அறையாக மாற்றிவிடும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

சிறை வாழ்க்கையில் ஐக்கியமாகவிருக்கும் மலிக், சிறையில் என்ன செய்ய விரும்புகிறான் என்பதை விசாரிக்கும் சிறை அதிகாரி, மலிக் இஷ்டப்பட்டால் அவன் தன் கல்வியை தொடரலாம் எனவும், சிறையின் தொழிற்சாலையில் வேலைக்கு சேர முடியும் என்பதையும் அவனிற்கு விளக்குகிறார்.

அவர் ஆலோசனையைப் பின்பற்றும் மலிக் சிறைப் பள்ளியில் தன் கல்வியைத் தொடர்கிறான். சிறையில் அமைந்திருக்கும் துணிகளை தைத்துக் கொடுக்கும் தொழிற்சாலையிலும் வேலைக்கு சேர்ந்து கொள்கிறான்.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை, காவலுடன் கூடிய திறந்த வெளிப்பகுதியில் இளைப்பாற அனுமதிப்பது வழக்கம். இப்பகுதியில் கைதிகள் ஓய்வாக இருக்கவோ, உடற்பயிற்சியில் ஈடுபடவோ, தங்களிற்குள் உரையாடிக் கொள்ளவோ, போதைப் பொருட்களை வாங்கிக் கொள்ளவோ முடியும்.

சிறை என்பது வன்முறை நிரம்பியது. கைதிகளை விட வன்முறை சிறைக்கு நெருக்கமானது. இந்த வன்முறை மிகவும் தந்திரமானது. சிறையின் சட்டங்களிலிருந்து தப்புவதற்கு பழக்கப்பட்டது. இத்திறந்த வெளிக்கு முதன் முதலாக வரும் மலிக், அவன் காலில் அணிந்திருக்கும் புதிய காலணிகளை கவர்ந்து கொள்ள விரும்பும் இரு கைதிகளால் தாக்கப்படுகிறான். அவனை காப்பாற்ற யாரும் இல்லை. காவலர்கள் கூட இதனைக் கவனிக்காதது போல் இருக்கிறார்கள். சிறையில் ஒன்று வலியவனாக இருக்க வேண்டும் அல்லது வலியவன் ஒருவனது பாதுகாப்பின் கீழே இருக்க வேண்டுமென்பது மலிக்கிற்கு புரிய ஆரம்பிக்கிறது.

5-photos-festival-de-cannes-beautes-cachees-de-cannes-Tahar-Rahim-Niels-Un-prophete_articlephoto இந்த திறந்த வெளிப்பகுதியே ஒர் சிறையில் வாழும் கைதிகளின் அரசன் யார் என்பதை எடுத்துக்காட்டும் பகுதியாகவும் உள்ளது. செஸார் எனப்படும் கோர்ஸிக்கா [பிரான்ஸின் தென்கிழக்கில் உள்ள ஒர் தீவு] தீவைச் சேர்ந்த மாஃபியா தலைவன் ஒருவனின் தலைமையின் கீழ் இருக்கும் கோர்ஸியக் கைதிகள் அச்சிறையில் பலம் பொருந்தியவர்களாக இருக்கிறார்கள்.

சிறையின் உயர் அதிகாரிகளையும், காவலர்களையும், சிறைக்கு வெளியே உள்ள சில அதிகாரங்களையும் ஊழல் மூலம் தன் கைக்குள் போட்டுக் கொண்டு, சிறைக்குள் ஒர் ராஜாங்கத்தை நடாத்தி வருகிறான் செஸார். அவன் சொன்னதுதான் அங்கு சட்டம். கைதிகள் இளைப்பாறச் செல்லும் திறந்த வெளியில் இருக்கும் ஒர் வாங்கில் செஸாரையும், அவன் சகாக்களையும் தவிர வேறு யாரும் அமர்ந்து விட முடியாது. செஸார் மன்னரின் அரியணை அது.

இதேவேளையில் செஸாரின் கூட்டத்திற்கு எதிரான ஒர் வழக்கில் அவர்களிற்கு எதிராக சாட்சி சொல்வதற்காக அயூப் எனும் கைதியை சிறையின் மற்றொரு பிரிவில் தற்காலிகமாக தங்க வைக்கிறார்கள் சிறை அதிகாரிகள். இத்தகவலுடன் கூடவே அயூப் அச்சிறையை விட்டு உயிருடன் வெளியே வரக்கூடாது எனும் தகவலும் செஸாரை வந்தடைகிறது.

அயூப், சிறையில் அரபு இனக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் பகுதியில் உள்ள ஒர் பிரத்தியேக அறையில் தங்க வைக்கப்பட்டிருக்கிறான். அயூப்பின் கதையை எவ்வாறு முடிக்கலாம் என சிந்தித்துக் கொண்டிருக்கிறான் செஸார். தன் சகாக்களை இவ்விவகாரத்தில் சம்பந்தப்படுத்த அவன் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்.

19138477_w434_h_q80 அரபுக் கைதிகள் இருக்கும் பிரிவின் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருக்கும் மலிக்கிடம் ரகசியமாக உரையாடும் அயூப், மலிக் தன் இச்சைகள் சிலவற்றை தீர்த்து வைத்தால் மலிக் புகைப்பதற்கு போதைப்பொருள் தருவதாகக் கூறுகிறான். இதனால் கோபம் கொள்ளும் மலிக், அயூப்பை திட்டி விட்டு சென்று விடுகிறான்.

சிறையில் எப்போதும் திறந்திருக்கும் காதுகள் வழியாக, அயூப் குளியலறையில் மலிக்கை நெருங்கினான் எனும் தகவலை தெரிந்து கொள்ளும் செஸார், சிறையின் திறந்த வெளிப்பகுதியில் மலிக்கை தன் அடியாட்கள் மூலம் இழுத்து வரச் செய்கிறான்.

அயூப்புடன் நெருங்கிப் பழகி, அவன் இச்சைகளை தீர்த்து வைப்பதாக ஆசைகாட்டி, அவன் கிறங்கியிருக்கும் தருணத்தில் அவனை மலிக் கொலை செய்ய வேண்டும் என மலிக்கிடம் மிரட்டலாக கூறுகிறான் செஸார். இல்லையேல் அயூப்பை தாங்கள் கொலை செய்ய முயலும் தகவலை அறிந்த மலிக்கை தான் தீர்த்துக் கட்டி விடுவதாகவும் எச்சரிக்கிறான்.

article_prophete இக்கொலையை மலிக் வெற்றிகரமாக செய்து முடித்தால் சிறையில் அவன் பாதுகாப்பிற்கு தான் பொறுப்பேற்பதாகவும் செஸார் கூறுகிறான். அவர்களிடமிருந்து தப்ப வேறு வழியின்றி கொலையை தான் செய்வதாக கூறிவிடுகிறான் மலிக்.

செஸார் தன்னை நெருக்கடி செய்ததை சிறை உயர் அதிகாரியிடம் தெரிவிக்க விரும்பும் மலிக்கை, அவ்வுயர் அதிகாரியே செஸாரிடம் மாட்டி விடுகிறான். மலிக்கை, அவன் சிறை அறையிலேயே வைத்து பிளாஸ்டிக் பை ஒன்றினால் அவன் தலையை இறுக்க மூடி மூச்சுத் திணற வைக்கிறார்கள் செஸாரின் குண்டர்கள்.

சக கைதிகளுடன் சேர்ந்து இன்னொரு கைதியை தாக்கி சிறப்பு தண்டனைப் பிரிவிற்கு மாற்றலாகி செல்ல முயற்சிக்கும் மலிக்கின் நடவடிக்கையும் தோல்வியில் முடிகிறது. இதனை அறிந்து கொண்ட செஸார் மலிக்கை சிறை வாராந்தாவில் வைத்து நையப் புடைக்கிறான்.

தொடரும் நாட்களில் செஸாரின் அடியாள் ஒருவன், கன்னக் கதுப்புகளில் எப்படி ரகசியமாக பிளேட்டைப் பதுக்குவது என்பது பற்றிய பயிற்சியை மலிக்கிற்கு அளிக்கிறான். அயூப்பை எப்படி வெட்ட வேண்டும் என்பதும் அவனிற்கு கற்றுத்தரப்படுகிறது. தன் நாக்கும், கன்னக் கதுப்புகளும் வெட்டப்பட்டு ரத்தம் ஒழுக, ஒழுக தன் வாய்க்குள் கூரான பிளேட்டை வைத்து பயிற்சி எடுக்கிறான் மலிக். குறித்த ஒர் நாளில் அயூப்பின் அறைக்கு அவனைத் தேடிச்செல்லும் மலிக் அவனைக் கொலை செய்து விடுகிறான்.

கொலையைத் தொடர்ந்து செஸார் கோஷ்டியின் பாதுகாப்பின் கீழ் வந்து விடுகிறான் மலிக். அக்கோஷ்டியின் எடுபிடி வேலைகளை செய்பவனாகவும் அவன் செயல்படுகிறான். சிறையிலிருக்கும் அரபுக் கைதிகள், மலிக் செஸாரின் நாய் எனக்கூறி அவனை வெறுக்கிறார்கள். செஸாரின் இனவெறி கொண்ட கோர்ஸிக்கா முரடர்களோ மலிக் அரபு இனத்தை சேர்ந்தவன் என்பதால் அவனை ஒர் புழுப் போல் நடாத்துகிறார்கள். காலத்தின் ஓட்டத்தில் மலிக் எவ்வாறு செஸாரின் அரியணையைக் கவிழ்த்து, அச்சிறையின் பெரும் பலமாக மாறுகிறான் என்பது மீதிக்கதை.

un-prophete-2009-17386-327198369 ஒர் சாதரண குற்றவாளியாக சிறைக்கு வரும் ஒர் அரபு இளைஞன், சிறையிலிருந்தவாறே வெளியே தனக்கென ஒர் குற்ற சாம்ராஜ்யத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாது சிறையின் பெரும் பலமாக ஆட்சி செய்த மாஃபியா தாதா ஒருவனை எவ்வாறு வீழ்த்துகிறான் என்பதை எந்த விட்டுக்கொடுத்தலும் இன்றி Un Prophète [தீர்க்கதரிசி] எனும் படமாக அருமையாக திரைப்படுத்தியிருக்கிறார் Jacques Audiard.

சிறையின் உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் ஊழல்கள், சிறையில் காணப்படும் இனவெறிப் போக்குகள், கைதிகளின் தில்லு முல்லுகள், சிறையில் ஆயுள் கைதியாக வாழ்ந்து வரும் வன்முறை, சிறையொன்றின் உள் அரசியல், நிபந்தனைக்குட்பட்ட விடுதலையைக் கூட குற்றச் செயல்களின் பேரங்களிற்காக பயன்படுத்திக் கொள்ளும் குற்ற அமைப்புக்கள் என பிரான்சின் தற்கால சிறைச் சூழலொன்றை கூறு போட்டிருக்கிறார் இயக்குனர்.

நிபந்தனையுடன் கூடிய ஒரு நாள் விடுதலையின் பின் சிறைக்கு திரும்பும் மலிக், தன் காலணிகளை கழட்டும் போது அதனுள் நுழைந்திருந்த கடல் மணலைக் கண்டு அதனைத் தன் கரங்களில் கொட்டி மெளனமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்தத் தருணம் சிறைக்கு வெளியே இருக்கும் வாழ்வின் மீதான ஏக்கத்தை சத்தமின்றி உரக்கச் சொல்லி செல்கிறது.

தான் தனியே இருப்பதாக உணரும் வேளைகளில் எல்லாம் மலிக், அயூப்பை தன் அருகில் கற்பனையாக உருவாக்கி கொண்டு உரையாடுவதும், சிறை அறையின் சிறிய ஒர் ஜன்னலின் வெளியே கொட்டிக் கொண்டிருக்கும் பனியை விரல்களால் அயூப்பும், மலிக்கும் தொட்டுச் சிலிர்ப்பதும் என ஒரு வன்முறை செறிந்த படத்தை சிறு கவிதைகளால் அழகாக்கி பார்வையாளனின் மனதை மெதுவாக தொட்டு விடுகிறார் ஜாக் ஒடியார்.

image-10163 வன்முறைச் செறிவுகளை நகைச்சுவை கலந்தும், கவர்ந்திழுக்கும் வசனங்களைப் புகுத்தியும் பிரம்மாண்டம் எனக் கொண்டாடும் சர்வதேசத் திரையுலகில் ஜாக் ஒடியார்ட் ஒர் எளிமையான கலைஞனாக எனக்குத் தெரிகிறார். 2009ம் ஆண்டின் கான் திரைப்பட விழாவில் இத்திரைப்படத்திற்கு Grand Prix Du Jury ஐ [ஜூரிகளின் சிறப்பு விருது] வழங்கிச் சிறப்பித்தார்கள். தங்கப் பனை விருதிற்கு அடுத்த அங்கீகாரம் வழங்கும் விருது இதுவாகும். ஜாக் ஒடியார், தற்கால பிரெஞ்சு சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

பிரெஞ்சு திரையுலகில் அரபு இனக் கலைஞர்களிற்கு தரப்படும் பாத்திரங்கள் பெரும்பாலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதில்லை. அவ்வழமையை உடைத்திருக்கிறது மிக வலிமையான மலிக் பாத்திரம். கனமும், உறுதியும் நிறைந்த இப்பாத்திரத்தை ஏற்றிருப்பவர் இளம் நடிகர் Tahar Rahim.

வெள்ளித்திரையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சவாலாக ஏற்றுக் கொண்டு எம்மைப் பிரம்மிக்க வைக்கிறார் ரஹீம். ஓடும் கண்களுடனும், தடுமாற்றத்துடனும் சிறையில் நுழையும் மலிக், படிப் படியாக மாற்றம் பெறுவதை தன் அபாரமான நடிப்பாலும், வித்தியாசம் காட்டும் உடல் பாஷையாலும் ரசிக்கச் செய்திருக்கிறார் அவர்.

செஸார் பாத்திரத்தில் வரும் Niels Arestrup, தான் ஒர் சிறந்த நடிகர் என்பதை தன் இயல்பான நடிப்பின் மூலம் தெளிவுபடுத்தி விடுகிறார். அவரது முக உணர்ச்சிகள் மிக அருமையாக வெளிப்பட்டிருக்கின்றன. அமைதியாக இருக்கும் அவர் சீறும் தருணங்களில் பார்வையாளன் கூடக் குறுகிப் போய்விடுகிறான்.

தண்டனை பெற்று சிறைக்கு செல்லும் குற்றவாளி ஒருவன், தன் சிறை வாழ்க்கையின் மூலம் திருந்தி, மீண்டும் சாதாரண வாழ்க்கையில் கலந்து கொள்ள முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கும் சமூகத்தையும், சிறை அமைப்புக்களையும் பார்த்து ரகசியப் புன்னகை பூக்கிறான் மலிக் எனும் இத் தீர்க்கதரிசி. [****]

பிரெஞ்சு ட்ரெய்லர்

Saturday, August 29, 2009

காற்றின் நிழல்


1945, ஸ்பெயின் நாட்டின் சிவில் யுத்தத்திற்கு பின்பான காலப்பகுதி. சிறுவன் டானியல் தன் குழந்தைப் பருவத்திலேயே தன் அன்னையை இழந்தவன். புத்தகசாலை ஒன்றை நடத்தி வரும் தன் தந்தையுடன் அவன் வாழ்ந்து வருகிறான்.

தாயின் மரணத்தின் பின்னும் டானியலால் தன் தாயை மறக்க முடியவில்லை. ஒவ்வொரு இரவிலும் உறங்கப் போகுமுன்பாக அறையில் உறையும் இருளில், தன் கண்களை மூடியவாறே தன் தாயுடன் அவன் மெல்லிய குரலில் உரையாடிக் கொள்கிறான்.

ஒர் நாள் அதிகாலையில் தன் படுக்கையில் விழித்தெழும் டானியல், தன் தாயின் முகத்தை தன்னால் நினைவுக்கு கொண்டு வரமுடியவில்லையே எனத் தேம்பி அழுகிறான். அவனை தன் அரவணைப்பில் எடுத்துக் கொள்ளும் அவன் தந்தை, டானியலை ரகசியமான ஒர் இடத்திற்கு தான் அழைத்துச் செல்லப் போவதாக தெரிவிக்கிறார்.

பனிமூட்டம் மூச்சு முட்ட ஆக்கிரமித்திருக்கும் தெருக்களின் வழியாக, டானியலை அழைத்து செல்லும் அவன் தந்தை, மிகப்பழமையான தோற்றம் கொண்ட கட்டிடம் ஒன்றிற்கு அவனை இட்டுச் செல்கிறார். அந்தக் கட்டிடம்தான் மிகச் சிலரிற்கே தெரிந்த, மறக்கப்பட்ட நூல்களின் கல்லறை என்றும் அவனிற்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

அக்கல்லறைக்கு முதல் தடவையாக வருபவர்கள் எவரும் அங்கிருந்து தனக்கென ஒர் புத்தகத்தை சுவீகரித்துக் கொள்ள வேண்டுமென்பது ஒர் முறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. பரந்து கிடக்கும் சமுத்திரமாக தோன்றும், தூசி படிந்த புத்தகத் தட்டுக்களில் ஆர்வத்துடன் தன் தேடலை ஆரம்பிக்கிறான் டானியல். அவன் தேடலின் முடிவாக அவன் ஒர் புத்தகத்தை தேர்ந்தெடுக்கிறான். அப்புத்தகத்தின் பெயர் காற்றின் நிழல் என்பதாகும்.

யூலியன் கராக்ஸ் எனும் எழுத்தாளனால் எழுதப்பட்ட அப்புத்தகத்தை தன் வீட்டிற்கு எடுத்து வரும் டானியல் அதனைப் படிக்க ஆரம்பிக்கிறான். புதிய விடியலொன்றின் துவக்கம் வரை டானியல் அந்நாவலைப் படிக்கின்றான். அக்கதை அவனை மயக்கி விடுகிறது.

சில வேளைகளில் ஆர்வம், எங்களையும் மீறி முன்னே ஓடும் தன்மை கொண்டதாக இருக்கும். காற்றின் நிழல், டானியலிற்கு தரும் வாசிப்பு அனுபவம் அவனை கராக்ஸ்ஸின் ஏனைய நாவல்களைத் தேடி ஓடச்செய்கின்றது. ஆனால் கராக்ஸின் நாவல்களோ எங்கும் கிடைக்காதவையாக இருக்கின்றன. ஒர் மர்மமான ஆசாமி கராக்ஸின் நாவல்களை எவ்வழியிலாவது பெற்று, அப்பிரதிகளை எரித்து அழித்து விடுகிறான் என்பதும் புத்தக ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விடயமாக இருக்கிறது.

நாவல்களை நாடி ஓடும் டானியலின் தேடல் கராக்ஸ் பற்றி அறிந்து கொள்வதாக திசை மாறும் போது, அது உதிர்ந்து போன சுவர்களுடன் முடிவதாக இருக்கிறது. அத்தேடல் அவனை பார்வையிழந்த அழகி கிளாரவின் மேல் அவன் கொள்ளும் முதல் மையலுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. சாத்தியமற்ற அம்மையலின் தோல்வி அவனை பெண்களை விட்டு விலகியிருக்க செய்கிறது. கராக்ஸ் குறித்த அவன் தேடலும் தற்காலிகமாக ஒர் ஓய்வை அடைகிறது.

0753819317.01.LZZZZZZZ இம்மையல் டானியல் மீது வரைந்து விட்ட வடுக்களும், காயங்களும், பார்சலோனா தெருக்களில் மதுவில் தன்னை மறந்து வாடும் பெர்மானை அவனிற்கு நண்பனாக தருகின்றன. பெர்மான் தன் வாழ்வின் குரூரமான ஞாபகங்களையும், அனுபவங்களையும் தாண்டி மகிழ்வுடன் வாழ முயற்சிக்கிறான்.

ஸ்பெயின் நாட்டின் சிவில் யுத்த காலத்தில் நிகழ்ந்த கொடூரங்களின் சாயம் பெர்மானின் மனதில் இன்னமும் அகலாது அதன் ஈரத்துடன் இருக்கிறது, தெருவில் முடங்கிக் கிடந்த தன் வாழ்வை மீண்டும் துளிர்க்க வைத்த டானியலிற்கும், அவன் தந்தைக்கும் அவன் மிக விசுவாசமாக நடந்து கொள்கிறான். டானியலின் தந்தையின் புத்தகசாலையில் இவர்கள் பணி அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. வருடங்கள் நகர்கின்றன. ஆனால் வஞ்சம் என்பது என்றுமே தீராத தாகம் அல்லவா. ஒர் நாள் தந்தையின் புத்தகசாலையில் யாரோ ஒருவன் விட்டுச் செல்லும் ஒர் கருகிய போட்டோ அவர்கள் அனைவரின் வாழ்வையுமே புரட்டிப் போட்டு விடுகிறது.

காதல், மர்மம், நட்பு, கொஞ்சம் வரலாறு என சுவையாக செல்கிறது கதை. கதையில் தொடரும் டானியலின் வாழ்க்கையை, காராக்ஸின் வாழ்கையோடு ஒப்பிடாது வாசகர்கள் பக்கங்களை நகர்த்த முடியாது. கராக்ஸின் கதை, டானியலின் கதை என இரு காலங்களில் பயணிக்கிறது கதை. கதையில் வரும் அனேகமான பாத்திரங்கள் உண்மையான அன்பை தொலைத்தவர்களாகவும், அதனைக் கண்டடைய விரும்புவர்களாகவும் இருக்கிறார்கள்.

முதியவர்கள் சக்கை போல் ஒதுக்கப்பட்டிருக்கும் முதியோர் இல்லங்களிலும் சரி, பணியாட்கள் நிறைந்த செல்வந்த மாளிகைகள் ஆனாலும் சரி, உண்மையான அன்பும், காதலும், அக்கறையும் சில சமயங்களில் அவற்றின் கட்டுப்பாடுகளையும், எல்லைகளையும் தாண்டித்தான் இருக்கின்றன போலும்.

கதையில் அனைவராலும் அஞ்சப்படும் கொடிய பொலிஸ் அதிகாரியாக வருபவன், ஃப்யூமெரோ. தன் லாபம் கருதி சந்தர்பங்களிற்கு ஏற்ப தான் சேர்ந்திருக்கும் அமைப்புக்களை அவன் மாற்றிக் கொண்டேயிருக்கிறான். அவன் வாழ்வில் உண்மையான அன்பு என்றுமே அவனிற்கு கிடைத்ததில்லை. கதையில், அவன் தனக்கு கிடைத்திருக்க வேண்டியது என்று நம்பிய அன்பை தன்னிடமிருந்து பறித்தவர்களை அழித்து விடுவதற்காக ஓயாது ஓடுகிறான். இந்த ஓட்டம் அவனை அன்பு என்பதனையே முற்றாக மறக்கச் செய்துவிடுவது எவ்வளவு வேதனையானது.

4 கவிதை தோய்த்த வரிகளாலும், மிக அழகான கதை சொல்லும் பாணியாலும், எதிர்பாராத திருப்பங்கள் வழியாகவும் கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார் நாவலாசிரியர் Carlos Ruiz Zafon. நாவலின் இறுதிப் பகுதி வரை அவர் கராக்ஸ் குறித்த மர்மத்தை இறுக்கமாக எடுத்து செல்வதில் சிறப்பான வெற்றி கண்டிருக்கிறார். முதலில் ஸ்பானிய மொழியில் வெளியான இந்நாவல் பின்பு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு சர்வதேச அளவில் வாசகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஒர் படைப்பாகும்.

ஸ்பெயின் நாட்டில் இடம் பெற்ற சிவில் யுத்தத்தின் கொடூரங்களையும், அதன் பின்பான காலப்பகுதியில் காவல் துறையின் வன்முறைகளையும் கதாசிரியர் நாவலின் பாத்திரங்களின் நினைவுகள் வழி சித்தரித்து செல்கின்றார். கதையில் இடம் பெறும் துணைப்பாத்திரங்களை மிகச்சிறப்பான முறையில் படைத்து அவர்களை மறக்க முடியாத பாத்திரங்களாக உருவாக்கியிருக்கிறார் அவர். பெர்மான் பாத்திரம் தும்பைப் பூ போல் எம் மேல் ஒட்டிக்கொள்ளும் இயல்பு கொண்டதாக இருக்கிறது.

தோட்டாக்களை விடவும் ஞாபகங்கள் கொடியவை. ஆனால் ஒருவர் மீது நாம் கொள்ளும் உண்மையான அன்பும், அக்கறையும், அவர்களை எந்த ஒர் இருண்ட நரகத்திலிருந்தும் மீட்டு வரக்கூடிய ஒர் மந்திர இழையை அவர்களிற்கு அளித்து விடுகிறது என்பதை அழகாக சொல்லிச் செல்கிறது காற்றின் நிழல். அன்பின் நிழலும் காற்றின் நிழலைப் போன்றதுதானா?

Saturday, August 22, 2009

நாஸி வேட்டை


1941, நாஸிக்களின் ஆதிக்கத்தில் ஆழ்ந்து போயிருக்கும் பிரான்ஸ் நாடு. நாஸிக்களின் கண்களில் இருந்து மறைந்து வாழும் யூதர்களை கண்டுபிடிப்பதற்காக ஹிட்லரால் நியமிக்கப்பட்டிருக்கிறான் காலனல் ஹான்ஸ் லாண்டா ( Christophe Waltz ).

லாண்டா மிகுந்த புத்திசாலி. நயமாகப் பேசி தகவல்ளைப் பெற்றுக் கொள்வதில் வல்லவன். ஜெர்மானியர்கள் போன்று சிந்திக்காது யூதர்கள் போல் சிந்திப்பவன். கொலை செய்யத் தயங்காதவன்.

ஒர் வீட்டில் நடைபெறும் தேடுதல் வேட்டையின் போது சொஸானா (Mélanie Laurent) எனும் யூத இனத்தை சேர்ந்த இளம் பெண் அவன் பிடியிலிருந்து தப்பி ஒடி விடுகிறாள். அப்பெண்ணின் குடும்பத்தையே தன் வீரர்களால் கொன்று குவித்து விடுகிறான் ஹான்ஸ் லாண்டா.

அமெரிக்க லெப்டினண்ட் அல்டோ ரெய்ன் (Brad Pitt) தலைமையில் பிரான்ஸிற்கு ரகசியமாக வருகிறது ஒர் அமெரிக்க யூத வீரர்கள் குழு. இவர்கள் நோக்கம் இயலுமானவரை நாஸிக்களை கொன்று குவிப்பது. வருடங்கள் ஓட ஓட வெற்றிகரமாகவும், ரகசியமாகவும், நாஸிக்களின் வயிறுகளில் இவர்களின் பெயரைக் கேட்டாலே சிலவித மாற்றங்களை உண்டாக்கி விடும் வண்ணம் இயங்கிக் கொண்டிருக்கும் அல்டோவின் குழு, ஒர் ரகசிய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஆங்கிலேய உளவாளிகளுடன் கை கோர்க்கிறது.


இங்கிலாந்திற்காக ரகசியமாக உளவு பார்க்கும் ஜெர்மன் நடிகையான பிரிட்ஜிட்டின் தகவல் படி, பாரிஸில் இடம்பெறவிருக்கும் ஒர் திரைப்படத்தின் முதல் திரையிடலில் நாஸிக்களின் பல உயர் அதிகாதிரிகள் கலந்து கொள்வார்கள் என்பது அல்டோ குழுவிற்கு தெரிய வருகிறது. இவ்வுயர் அதிகாரிகள் குழுவில் டாக்டர் கேய்பல்ஸ், ஹிட்லர் ஆகியோரும் அடங்குவர்.

inglourious-basterds-20090813091738991_640w திரைப்படம் திரையிடப்படும் திரையரங்கு இமானுவல் எனும் பெண்ணொருத்தியால் நிர்வகிக்கப்படுகிறது. பிரிட்ஜிட்டின் உதவியுடன் திரையரங்கினுள் நுழைந்து அதனை டைனமைட்கள் மூலம் வெடிக்க வைத்து தவிடு பொடியாக்கி விடுவது என திட்டம் தீட்டுகிறான் அல்டோ. படம் திரையிடப்படும் திரையரங்கின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக ஹான்ஸ் லாண்டா நியமிக்கப்படுகிறான். தன் மனதில் ஹான்ஸ் லாண்டா குறித்த ஆறாத வஞ்சத்தை வளர்த்துக் கொண்டே, இம்மானுவல் எனும் பெயரில் திரையரங்கை நிர்வகித்து வரும் யூதப் பெண்ணான சொஸானா இத்தருணத்தினை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தனக்கென ஒர் ரகசிய திட்டத்தை உருவாக்குகிறாள்.

ஒர் தனி வீடு, காற்றில் அசையும் கொடிகளின் மீது துவைத்த துணிகளைக் காயப் போடும் ஒர் இளம் பெண், அருகில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அவள் தந்தை, தீடிரென தூரத்தில் புழுதியைக் கிளப்பியவாறு வீட்டை நோக்கி வரும் நாஸி ஜீப்புக்கள் என செர்ஜியோ லியோனின் வெஸ்டர்ன் படங்களினை நினைவூட்டும் ஆரம்பக்காட்சி, பிண்ணனி இசை, காட்சி அமைப்பு என வெஸ்டர்ன் படங்களின் சாயல் படத்தில் தாராளமாக உண்டு.

படத்தின் கதை ஜந்து அத்தியாயங்களில் கூறப்படுகிறது. முதல் அத்தியாயத்தில் வீடொன்றிற்கு விசாரணைக்காக வரும் ஹான்ஸ் லாண்டா வீட்டின் உரிமையாளனை விசாரிக்கும் அந்தக் காட்சியே லாண்டாவைப் பற்றி முழுதும் கூறிவிடுகிறது. அதே போல் படத்தினைப் பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரிக்க வைக்கிறது.

inglourious-basterds-20090813091743397_640w புத்திசாலித்தனமான வசனங்களாலும், நீண்ட உரையாடல்கள் மூலமாகவும் காட்சித் தருணங்களின் அழுத்தத்தை அதிகரிப்பதுடன், பார்வையாளர்களையும் அந்த அழுத்தத்தினை உணர வைத்து விடுகிறார் இயக்குனர் Quentin Tarantino. ஆனால் இது எல்லா அத்தியாயங்களிற்கும் பொருந்திப் போகவில்லை என்பது வேதனை. வன்முறைக் காட்சிகளின் உக்கிரத்தை அவற்றினுள் இழையும் நகைச்சுவை மூலம் தணியச் செய்திருக்கிறார் டாரண்டினோ. இறுதி அத்தியாயம் ரசிகர்களை பரபரக்க வைக்கும் ஒர் அத்தியாயம். எண்ணற்ற எதிர்பாராத திருப்பங்கள் மூலம் ரசிகனை அதிர்ச்சியில் உறைய வைக்கிறார் இயக்குனர். எந்த ஒர் கணத்திலும் பார்வையாளன் மனதில் நினைத்திருக்கும் ஒவ்வொர் முடிவையும் தகர்க்கிறது திரைக்கதை. இறுதியில் வரலாற்றையும் சற்று மாற்றி விடுகிறது.

நாஸிக்களை கொல்வதற்காக பிரான்ஸ் வரும் அல்டோ குழுவினரின் வீரதீர செயற்பாடுகளான, நாஸிக்களின் மண்டைத்தோலை வெட்டி எடுத்தல், பேஸ்பால் பேட்டால் தலையை அடித்து மூளையை சிதறச் செய்தல் போன்றவை நாஸிக்கள் மீது பார்வையாளர்களை இரக்கம் கொள்ள வைத்து விடுகின்றன. அல்டோ பாத்திரத்தில் வரும் பிராட் பிட் எவ்வளவு முயன்றாலும் அப்பாத்திரத்துடன் ஒன்றிப் போகாது அன்னியப்படுகிறார்.

inglourious-basterds-20090629050820665_640w படத்தில் மிக முக்கியமான பாத்திரம் ஹான்ஸ் லாண்டா. மென்மையான பாவனையும், குள்ள நரித்தனமும், மயக்கும் சிரிப்பும் சற்றுக் கோமளித்தனமும் ஒருங்கே இணைந்த அப்பாத்திரத்தினை சுவைத்து சுவைத்து செய்திருக்கிறார் ஆஸ்திரிய நடிகரான கிறிஸ்டோப் வால்ட்ஸ். இவ்வருட கேன்ஸ் விழாவில் சிறந்த ஆண் நடிகரிற்கான விருதினை இப்படத்தில் நடித்ததற்காக அவர் பெற்றிருக்கிறார். இத்தாலிய திரைப்படக் கலைஞர்களாக திரையரங்கில் நுழையும் அல்டோ குழுவினர்க்கும், ஹான்ஸ் லாண்டாவிற்குமான உரையாடல் காட்சியில் அவர் நடிப்பில் பின்னி எடுத்திருப்பார். அவர் உடல் மொழி அவரை ஒர் அப்பாவி போன்று தோற்றுவித்து அவர் ஏற்றிருக்கும் வில்லன் பாத்திரத்தை சிறப்பாக்குவதில் பெரும் பங்கு வகித்திருக்கிறது.

திரையிடப்படும் திரைப்படத்தில் ஜெர்மனிய வீரனொருவனின் துப்பாக்கி குண்டுகளிற்கு பலியாகி விழும் அமெரிக்க வீரர்களைக் கண்டு ஹிட்லர் மகிழ்ச்சியுற்று இவ்வருடத்தின் சிறந்த திரைப்படம் இதுதான் என கேய்பல்ஸைப் பாராட்ட கேய்பல்ஸ் ஆனந்தக் கண்ணீர் விடும் காட்சி செம காமெடி. படத்தில் மனதினை நெகிழ வைக்கும் ஒரே ஒர் பாத்திரம் யூதப் பெண்ணாக வரும் மெலானி. அவளின் வாழ்க்கை அவளை புன்னகைக்க வைத்த தருணங்கள் மிக அரிதே. வஞ்சத்தின் மூலம் புன்னகைக்க நினைத்த அவளின் முடிவு எதிர்பாராதது.

இறுதிக்காட்சியில், வழமையான டாரண்டினோ பாணியில் அல்டோ ஒர் காரியத்தை ஆற்றி விட்டு இதுதான் என் மாஸ்டர் பீஸ் என்பார். ஆனால் இத்திரைப்படம் நிச்சயமாக டாரண்டினோவின் மாஸ்டர் பீஸ் அல்ல. (**)