Sunday, November 7, 2010

புதைக்கப்பட்டவன்


மயக்கமுற்ற நிலையிலிருந்து சுயநினைவுக்கு திரும்பும் பால் கான்ராய் [Ryan Reynolds], இறுக மூடப்பட்ட சவப்பெட்டி ஒன்றினுள் வைத்து தான் நிலத்திற்குள் புதைக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்கிறான். அவனிற்கு துணையாக அந்த சவப்பெட்டியினுள் ஒரு ஸிப்போ லைட்டர், ஒரு கைத்தொலைபேசி கூடவே 90 நிமிடங்கள் மட்டுமே அவன் உயிர் வாழத்தேவையான ஒக்சிஜன் என்பனவும் புதைக்கப்பட்டிருக்கின்றன….

இறுக மூடப்பட்ட ஒரு சவப்பெட்டியினுள் அடைக்கப்பட்ட ஒரு மனிதனின் உணர்வுகளையும், அதிலிருந்து வெளியேறிவிட அவன் நடாத்தும் போராட்டங்களையும் மட்டுமே திரையில் காட்டி 90 நிமிடங்களிற்கு பார்வையாளர்களை சஸ்பென்ஸால் திணற அடிக்க முடியுமா எனும் கேள்விக்கு, ஆம் எனும் பதிலாக அமைந்திருக்கிறது ஸ்பானிய இயக்குனர் Rodrigo Cortés ஆங்கில மொழியில் உருவாக்கியிருக்கும் Buried எனும் இத்திரைப்படம். மிகக்குறைந்த செலவில் விறுவிறுப்பான படைப்பினை வழங்க முடியும் என்பதனையும் இத்திரைப்படம் தெளிவாக்குகிறது. திரைப்படம் ஆரம்பித்து அது நிறைவு பெறும்வரை பார்வையாளன், பால் கான்ராயுடன் மூடப்பட்ட சவப்பெட்டியினுள் இருந்தாக வேண்டிய கட்டாயம்! ஒரு கணம்கூட கமெரா சவப்பெட்டியின் உள்வெளியை விட்டு விலகுவதில்லை.

இருண்ட திரையுடனும், ஆழமான மூச்சு ஒலிகளுடனும் ஆரம்பிக்கும் திரைப்படம், ஸிப்போ லைட்டரை எரியவிட்டு தான் ஒரு புதைக்கப்பட்ட சவப்பெட்டியினுள் அடைபட்டிருப்பதை ஒரு மனிதன் தெரிந்து கொள்ளும் திகில் கணங்கள் வழியாக பார்வையாளனிற்கு முதல் அதிர்ச்சியை எடுத்து வருகிறது. அம்மனிதன் அடைக்கப்பட்டிருக்கும் அந்த ஒடுங்கிய வெளியினுள், அவனது குழப்பமும், அச்சமும், கையறுநிலையும், சவப்பெட்டியை ஸிப்போவின் ஒளி நிரப்புவதைபோல் ரசிகனின் மனதை இருளும் ஒளியும் கலந்த பரப்பாக நிரப்புகின்றன. ஸிப்போவின் ஒளியிலும், கைத்தொலைபேசியின் மிளிர்விலும், மூச்சுத்திணற வைக்கும் கோணங்களிலும் ஒளிப்பதிவானது அடைபட்ட உணர்வை திரைக்கு அப்பால் கடத்த, இசை; திகிலை செவி வழி ஊதுகிறது. இந்த மனிதன் யார்? எதற்காக அவன் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கிறான்? எனும் கேள்விகளிற்கான விடைகள் குறுகிய வெளியினுள் ஆரம்பமாகும் தொலைபேசி உரையாடல்கள் மூலம் ரசிகனை எட்டுகின்றன.

buried-2010-18948-624553307 2006ம் ஆண்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் கனரக வாகன சாரதியாக ஈராக்கில் பணிபுரியச் சென்ற ஒரு சாதாரண அமெரிக்க பிரஜையே பெட்டிக்குள் அடைக்கப்பட்ட மனிதன் என்பதையும், அவன் பெயர் பால் கான்ராய் என்பதையும் தொலைபேசி உரையாடல்கள் வழியாக பார்வையாளன் அறிந்து கொள்கிறான். பால் கான்ராய் ஏற்படுத்தும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும், உரையாடலும் அவற்றிற்கேயுரிய திகிலை பார்வையாளனிடம் கடத்த தவறுவதில்லை. ஒவ்வொரு முறையும் தொலைபேசி உரையாடல் ஏதோ ஒரு காரணத்திற்காக துண்டிக்கப்படும்போதும் இதயம் தன் துடிப்பை சற்று உயர்த்தி இறக்குகிறது.

தன்னைப் புதைத்த மனிதனுடன்[ அல்லது பயங்கரவாதியுடன்!] பால் கான்ராய் உரையாடும் தருணங்களில், இரு பக்கங்களிலும் இருந்து பரிமாறப்படும் வாதங்களும், நியாங்களும் இந்த இரு மனிதர்களையும் பெரும் அரசுகளின் யுத்த அரசியலிற்கு பலியான இனமாகவே அடையாளம் காட்டுகின்றன. பால் கான்ராய் தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக பணம் சம்பாதிக்க அமெரிக்காவிலிருந்து ஈராக்கிற்கு பணிபுரிய வந்த ஒரு மனிதன். பால் கான்ராயை புதைத்தவனிற்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. அவனும், அவன் குடும்பமும், அவன் தேசமும்கூட எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாத யுத்தமொன்றினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை வலிமையாக முன்வைக்கிறார் இயக்குனர். விரும்பத்தகாத இந்த நிலைக்கு இவ்விரு மனிதர்களையும் இட்டு வந்த பணத்தின் பிரசன்னம் அரூபமாக ஒடுங்கிய வெளிக்குள் நகைக்கிறது.

நிலத்திற்குள் புதைக்கப்பட்ட நிலையில் தன் மீட்பிற்காக போராடும் ஒரு மனிதனை, அவன் நாட்டின் அரசின் பிரதிநிதிகளும், அவன் பணிபுரியும் நிறுவனத்தின் அதிகார உச்சங்களும் எவ்விதமாக புதைக்கமுடியும் என்பதை வலி ததும்ப இன்னொரு பக்கமாக திரையில் விரிக்கிறார் இயக்குனர் ராட்ரிகோ கோர்டேஸ். அரச பிரதிநிதிகளின் மெத்தனமும், கையாலாகத்தனமும், பொய்களும், இக்கட்டான சூழ்நிலைகளில் தம் பொறுப்புகளிலிருந்து கழன்றுவிடத்துடிக்கும் முதலாளிகளின் நரித்தனமான தந்திரங்களும் மனங்களை அதிரச் செய்யும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

திரைக்கதையில் தொலைபேசி உரையாடல்கள் மூலம் மனித உறவுகளின் பல்வேறுபட்ட முகங்களை சவப்பெட்டியின் மீது மோத வைத்திருக்கிறார் இயக்குனர். உரையாடல்களை மட்டும் நம்பியிராது திரைக்கதையில் வரும் எதிர்பாராத திருப்பங்கள் மூலம் பார்வையாளனை அசர அடிக்கிறார் அவர்.

படத்தின் ஒரே ஒரு நடிகரான! ரையான் ரெனோல்ட்ஸ், ஒரு குறுகிய வெளிக்குள் அடைப்பட்ட மனிதனின் உணர்வுகளை மிகவும் சிறப்பாக திரையில் காட்டியிருக்கிறார். ஒரு சில தருணங்களில் அவரின் நடிப்பும், உரையாடல்களும் மிகையானதாகவும், பொருத்தமற்றதாகவும் உணரப்படக்கூடும் எனிலும் படத்தின் இறுதித்தருணங்களின் வேகமும், திகிலும் சவப்பெட்டியின் பிளவுகளினுடாக வந்து விழும் மணல் போல் பார்வையாளனை திக்கு முக்காட வைக்கின்றன. Buried திரைப்படம் சஸ்பென்ஸ் பிரியர்களை மூச்சடைக்க வைக்கும். [***]

ட்ரெயிலர்

Friday, November 5, 2010

ரேப் ட்ராகன் - 26


காதல் கடல், கண்ணீர் அலை

கலெக்டிக் ரோமியோ காமா ஜோஸ் அவர்களின் காதல் இம்சை

நலம்தானா என்னுயிர்க் காதலரே என்ற காதல் ஜீவக் கேள்வியை காதல் கணையாக காமா ஜோஸை நோக்கி ஏவிய மொனிக்காவை பதறிப் போனவனாக தன் பாதங்களில் இருந்து அள்ளி எடுத்தான் காமா ஜோஸ்.

- மொனிக்கா, என் அன்பே, என்ன இது, என் பாதங்களில் உன் இதழ்கள் பதிவதற்கு நான் தகுதியானவன் இல்லை. என்னைப் போன்ற ஒரு கயவனிற்காகவா நீ உன் கண்ணீரை செம்முத்துக்களாக உதிர்க்கிறாய். கூடாது பெண்ணே கூடாது. உன்னை விட்டு, உன் உயிர் காதலைவிட்டு விலகிச் சென்றவன் நான் என்பதனை மறந்துவிடாதே.

- இருக்கலாம், ஆனால் நீங்கள் உங்கள் உள்ளத்திலும், உணர்வுகளிலும் என்றும் என்னையும் நம் காதலையும் பரிசுத்தமாக காத்து வந்திருக்கிறீர்கள். என் காதலரே, உங்களை என் கண்களில் கண்டதும் எனக்குள் நிகழும் மாற்றங்கள் வேதியியலையும் வெல்கின்றனவே.

- என் உயிரே, கட்டிக் கரும்பே, காதல் எறும்பே உன்னைவிட்டு நான் பிரிந்த நாள் முதலாய், உன் கொடிய சாபத்தை நீக்குவதற்கான வழிகளை கண்டறிய விழைந்தேன். உன் சாபத்திலிருந்து உன்னை விடுவிக்கும் விமோசனத்தைக் கண்டறியாது உன்னைக் காண்பதில்லை என தவமிருந்தேன். ஆனால் கண்கள் காணாவிடிலும், என் கரங்கள் உன் அழகை தழுவாவிடிலும் என் இதயத்தின் நினைவுகளின் ஏகபோக ராணி நீ. மொனிக்கா என் பேரின்பக் காதல் மோகினி.

- அத்தான்

- அப்படி அழைக்காதே, கூசுகிறது.

- அத்தான், அத்தான், அத்தான்

- ஹொய், ஹொய், ஹொய்

இவ்வாறாக இரு காதல் புறாக்களிற்குமிடையில் நடைபெற்றுக் கொண்டிருந்த குலவல் காதல் சம்பாஷணையைக் காது கொடுத்துக் கேட்ட குந்தவியும், டேனியும் மனம் நெகிழ்ந்து கண்ணீர் உகுக்க ஆரம்பித்தார்கள்.

- டேனி, எமக்கு மட்டும் இப்படி ஒரு காதலர் கிடைக்காமல் போய் விட்டாரேயடி, ஆகா….காதல் என்றால் இதுவன்றோ அமர காதல் என்றவாறே டேனியைக் கட்டிப்பிடித்து கண்ணீரை சொரிந்தாள் குந்தவி.

- ஆம் இளவரசி, கொடுத்து வைத்தவள் இந்த மொனிக்கா. காட்டேரியாக இருக்க சபிக்கப்பட்டாலும், ஒரு உண்மையான ஆண்மகனின் காதலில் அவள் உயிர் வாழ்கிறாள் என்றவாறே மூக்கை உறிஞ்சினாள் டேனி.

மென்னிக்கடி மொனிக்காவிடம் மரண அடி வாங்கிய சீனன் ஷங்லிங், காதல் புறாக்களின் பரிபாஷனையை வெறுப்புடன் பார்த்தான்… உலக மா கவி செக்ஸ்பீர் மட்டும் உங்கள் காதல் நாடகத்தை காண்பார் எனில் காதல் காவியங்களை எழுதுவதை நிறுத்திவிட்டு பிச்சை எடுக்க ஆரம்பித்து விடுவார். என்ன உருக்கம், என்ன நெருக்கம். காமா, இன்றுடன் இந்த மொனிக்காவின் கதையை முடித்து உன்னை இந்த கொடூரமான காதல் சிறையிலிருந்து விடுவிக்கிறேன். ம்ம் அவளை விட்டு விலகு என்றவாறே வெள்ளிக் குறுவாள் ஒன்றை உருவினான் சீனன்.

- அத்தான், தயவுசெய்து உத்தரவு தாருங்கள் மொட்டையின் இருப்பிற்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்கிறேன்…

- முற்றுப்புள்ளி வைப்பது நீயல்ல அழகுப் பெண்ணே, நான்…. ரஃபிக்கின் குரல் அறையை அதிர வைத்தது. பஞ்சணையில் இருந்த தன் உடலை அப்படியும் இப்படியுமாக முறுக்கிய ரஃபிக்…. அடேய், பச்சைக் கண்ணா, நீ ஒர் உண்மையான ஆண்மகன் என்றால் என் விலங்குகளிலிருந்து என்னை அவிழ்த்து விடு. மதம் கொண்ட களிறுகள் பொருதுவதுபோல் நாம் பொருதுவோம், உன் காதலிற்கும், ஆயுளிற்கும் நான் முற்றுப்புள்ளி இடுகிறேன். மொனிக்கா… என் காதல் மொனிக்கா, உன் காதலனை நான் அழிக்கப் போகிறேன் என்று என்னை வெறுக்காதே, உன் மேல் நான் கொண்ட காதலிற்காகவே இந்த செயலை நான் செய்யப் போகிறேன். இது காதல் யுத்தம். அதன் வெற்றிச் சங்காக ஒலிக்கப் போவது என் இதயத்தின் சத்தம்…. யாரங்கே… அடேய் மொட்டைத் தலை சீனா என் விலங்குகளிலிருந்து என்னை விடுவியடா, என்னுள் இருக்கும் விலங்கை நான் விடுவிக்கிறேன்… ரஃபிக்கின் சொற்கள் தீ அம்புகளாக நாலா திக்கிலும் பறந்தன.

- ஒஹோ, இவன்தானா அந்தப் புரட்சிக்காரன். காமா, இவனைக் கொன்று விடவா, அதிகம் துள்ளுகிறான் என்றான் சீனன்.

- வேண்டாம், அவனை நம் கப்பலிற்கு எடுத்துச் சென்றுவிடலாம்..

- சபாஷ், அருமையான யோசனை காமா, இவனை அடிமை வியாபாரிகளிடம் விற்று அழகான பெண் அடிமைகளை வாங்கிக் கொள்ளலாம்…

- அத்தான், இந்த சீனனுடன் சேராதீர்கள். இவன் ஒரு நாசக்கிருமி.

vampire - அழகியே, அத்தான், அத்தான் என்று நீ அந்தக் கோழையை அழைக்கும்போது, அவன் செத்தான் செத்தான் என்று என் மனம் பாடுகிறது… இடையில் புகுந்தான் புரட்சிக்காரன். ரஃபிக் இருந்த பஞ்சணையை சில எட்டுக்களில் நெருங்கிய சீனன், ரஃபிக்கின் கழுத்தில் ஓடிய நரம்பொன்றினை தன் விரல்களால் ஊன்றி அழுத்தவே மொனிக்.. என்றவாறே தன் நினைவை இழந்தான் ரஃபிக்.

- ஷங்லிங், ராஜமாந்தீரிகனும், இலுமினாட்டியும் ஓட்டி வரும் புஷ்பக் விமானத்தில் குந்தவியை ஏற்றியனுப்பு. என்னை சற்று தனிமையாக மொனிக்காவுடன் இருக்க விடு. ம்ம்ம்.. கிளம்பு சீனா என்றான் காமா

- ஆமாம், கிளம்படா மொட்டைத்தலை சீனா என்றாள் கேலியாக மொனிக்கா.

- மொனிக்கா, அவனை வையாதே, அவன் ஒரு நாசக்கிருமிதான் ஆனால் அவன் உருவாக்கும் அழிவுகள் கொஞ்சமே…மொனிக்காவின் காதுகளில் மென்மையாக கிசிகிசுத்தான் காமா

- காமா, இந்த அழகியையும் கப்பலிற்கு இட்டுச் செல்லவா என்றவாறே டேனியை நோக்கி தன் தலையை நீட்டிச் சிரித்தான் சீனன்.

- அதனை விட நான் இறப்பதே மேல் என்றவாறே குந்தவியை அணைத்த டேனி... இளவரசி, பிறந்தால் அடுத்த பிறப்பில் உங்களிற்கு தோழியாக நான் பிறக்க வேண்டும் என்று கூறி இளவரசியை ஆரத்தழுவி கண்ணீர் வடித்து அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.

ரஃபிக்கை விலங்குகளிலிருந்து விடுவித்த சீனன், அடடா இந்தக் கனம் கனக்கிறானே என்றவாறே அவனை அந்த அறையிலிருந்து இழுத்துக் கொண்டு சென்றான். அறையிலிருந்து வெளியேறுமுன்.. ஆகா என்ன அருமையான பஞ்சணை என்று கூறி காமாவை பார்த்து தன் கண்களை சிமிட்டினான். மொனிக்கா நாணினாள்.

மயங்கிய நிலையிலிருந்த ரஃபிக்கை ஆதரவுடன் நோக்கிய குந்தவி.. என் அன்பே, என் காதலே, என் விளையாட்டு இப்படி விபரீதத்தில் முடிந்துவிட்டதே, உன்னை நான் மீண்டும் காணும் நாள் வருமா என்று மனதினுள் அழுதாள். மனம் வடித்த கண்ணீர் அவள் விழிகளில் அரும்ப ஆரம்பித்த கணத்தில் அறைக்குள் சிதறிக் கிடந்த தன் ஆடைகளை எடுத்துக் கொண்டு வேகமாக அறையை விட்டு வெளியேறினாள் அவள். அறையில் காதலும், காதலரும் தனியே நின்றனர்.

- அத்தான் இனியும் உங்களை என்னால் பிரிந்திருக்க முடியாது, என்னுடன் வந்து விடுங்கள்.

- இல்லை மொனிக்கா. உன் காட்டேரி சாபத்தை போக்க வழிகள் உண்டு என்பதாக அறிகிறேன். மன்மதக்குகை தீவுகளை தேடுபவையாகவே என் பயணங்கள் அமைந்திருக்கின்றன. அதுவரை பொறுத்திரு பெண்ணே.

- நீங்கள் திரும்பாவிடில்..

- என் இதயத்தில் உன்னையும், உன் உயிரில் என்னையும் கொண்டு இந்தக் காற்றில் உன் காதல் தேடி வருவேன்..

- அய்யகோ, அத்தான் என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள்..

- பெண்ணே, பிரியும் நேரமிது, விடைகொடு.

மொனிக்காவின் இதழ்கள் காமாவின் இதழ்கள்மேல் பதிந்தன, காமாவின் கரங்கள் மொனிக்காவை அள்ளி அணைத்தன, அவர்கள் இருவரினதும் நாக்குகளும் ஆரத் தழுவிக் கொண்டன. சொர்க்கம் என்பது இதுதானே என்பதை இருவரும் உணர ஆரம்பித்த நிலையில் காமாவிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அறையின் கூரை வழியாக வெளியே பறந்தாள் மொனிக்கா.

சொகுசு விடுதியை விட்டு கனத்த மனதுடன் வெளியே வந்த காமா, வானில் ராஜமாந்தீரிகனின் புஷ்பக் விமானம், குத்து நகரின் திசையில் வேகமாக பறந்து கொண்டிருபதைக் கண்டான். புஷ்பக் விமானத்தை விழி வெட்டாது பார்த்த அவன் தோளின் மீது, மேலேயிருந்து வந்த ஏதோ ஒன்று விழுந்து உருண்டது. தன் கைகளில் அதனைப் பற்றிய காமா, நிலவு வெளிச்சத்தில் அது என்னதென்று நோக்கினான். அந்த செங்கண்ணீர் முத்து அவன் கண்களை காதலுடன் பார்த்தது. தன் கண்களை மேலே உயர்த்தினான் காமா. நிழலான ஒரு உருவம் அவனை விட்டு தூரமாக வானில் பறந்து சென்று கொண்டிருந்தது கலங்கலாக அவன் கண்களில் வீழ்ந்தது.

=================

கப்பலில் ரஃபிக்கிற்கு ஒதுக்கப்பட்ட அறையில் தூக்கம் வராது புரண்டு கொண்டிருந்தான் ரஃபிக். இரவு நன்றாக ஏறிவிட்ட வேளையில் அவனது எதிர்காலமானது அந்த இரவைவிட இருளாக அவனிற்கு காட்சியளித்தது. கொடிய சீனன் தன்னை அடிமை வியாபாரிகளிடம் விற்று விடுவான் என்பதை ரஃபிக் உறுதியாக நம்பினான். இவ்வேளையில் அவன் இருந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. கையில் விளக்குடன் அறையினுள்ளே நுழைந்தாள் ஒரு அழகி. அவள் கண்கள் கடலினதும், ஆகாயத்தினதும் நீலத்தைக் கலந்த வண்ணத்தைக் கொண்டிருந்தன. அவள் உடலெங்கும் அழகு தோரணம் கட்டி குதூகலித்துக் கொண்டிருந்தது. விளக்கை கீழே வைத்த அவள் ஏதும் பேசாது தன் ஆடைகளை களைய ஆரம்பித்தாள். அந்த அழகி தன் ஆடைகளை களைந்ததால் பதறிப்போன ரஃபிக், பெண்ணே நீ யார், ஏன் ஆடைகளைக் களைகிறாய் என்றான்.

- ஆணழகே, இந்த துர்பாக்யவதியின் பெயர் நீல அழகி. கொள்ளையர் கப்பலில் இருக்கும் கொடியவர்களிற்கு என் உடலை பரிமாற வேண்டியது என் சாபம். அழகியின் வார்த்தைகளை கேட்ட புரட்சிக்காரனின் ரத்தம் சூடாக ஆரம்பித்தது. உள்ளம் கொதித்தது. மீசை துடித்தது.

- அழகியே, இந்தக் கொடிய செயலை உன்னை செய்யத் தூண்டியவர் யாரோ.

- வேறு யார், குரூர மனம் கொண்ட சீனன் ஷங்லிங்.

- பெண்ணே, பேரழகே, நீலப்புஷ்பமே நான் சொல்வதை நன்றாகக் கேள். கொடிய கடற்கொள்ளையர்களான காமா ஜோஸையும், ஷங்லிங்கையும் கடல் அரக்கன் புட்டுக் கிறுக்கனின் பலிபீடத்திற்கு அனுப்பி வைப்பேன். இந்தக் கப்பலை எனதாக்குவேன். உன்னை என் ராணியாக்குவேன். இது இந்த வானின் மீது ஆணை, இந்த வையத்தின் மீது ஆணை, இந்தக் கடலின் மீது ஆணை, ஏன் நான் உன் மேல் கொண்டிருக்கும் உயிர்க் காதல் மீது ஆணை…

ரஃபிக்கின் ஆவேசக் குரல் இருளில் ஓடிய காற்றில் கலந்து, கடலில் சென்று கொண்டிருந்த கப்பலை தழுவியது. இதைப்போல பல சபதங்களையும், காதல்களையும் தன் உடல் மேல் தழுவவிட்ட அந்தக் கப்பல், சிருங்காரமாக ஆடிய அலைகளில் தன் உடலை நளினமாக நகர்த்தியது. தன் முன்பாக பிரம்மாண்டாமாக உருவெடுத்த அலையைக் கிழித்து உடைக்க வேகமாக முன்னே பாய்ந்தது ரேப் ட்ராகன்.

rdfin

ராஜமாந்தீரிகன் கருந்தேள், இளவரசன் இலுமினாட்டி, அரண்மனை வைத்தியர் அய்யா ஏழு அவர்கள், புரட்சிக்காரன் ரஃபிக், காமா ஜோஸ் ஆகியோரிற்கு என் அன்பான நன்றிகள்.

நண்பர்கள் அனைவரிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

Sunday, October 31, 2010

விட்டத்தில் மலர்ந்த வண்ணத்திகள்


மனச்சிக்கல்கள் கொண்ட தன் மனைவியை விட்டு பிரிந்து, தன் இரண்டு குழந்தைகளுடனும் வாழ்ந்து வருகிறான் Uxbal [ Javier Bardem ]. தனக்காகவும், தன் குழந்தைகளினது ஜீவிதத்திற்காகவும் அவன் கடுமையாக பாடுபட வேண்டியிருக்கிறது. இந்நிலையில் மருத்துவ பரிசோதனை ஒன்றின் முடிவுகள் உக்ஸ்வாலிற்கு புற்றுநோய் முற்றிய நிலையில் உள்ளது என்பதையும், அவன் இன்னமும் சில மாதங்கள் மட்டுமே உயிர்வாழ முடியும் என்பதையும் அவனிற்கு அறியத்தருகிறது….

மெக்ஸிக்க இயக்குனரான Alejandro Gonzalez Inarritu, Amores Perros முதல் Babel வரையிலான தன் திரைப்படங்கள் வழி, திரையில் கவித்துவமாக கதையை நகர்த்தும் தன் திறமையை சினிமா ரசிகர்களிற்கு நிரூபித்தவர். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நடிகரான Javier Bardem, Mar Ardentro, No Country for Old men போன்ற திரைப்படங்கள் வாயிலாக தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்ட ஒரு சிறப்பான கலைஞன். இந்த இரு திறமைசாலிகளின் கூட்டணியிலும் உருவான திரைப்படமான Biutiful குறித்து ரசிகர்கள் மத்தியில் பலமான எதிர்பார்ப்புகள் உருவானதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

பார்சலோனாவின் புறநகர் ஒன்றில், வசதி குறைந்த மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலேயே Biutiful படமாக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதியில் வாழும் ஒரு மனிதனாகவே உக்ஸ்வால் அறிமுகமாகிறான். உக்ஸ்வாலின் தினசரி வாழ்க்கையானது சிரமமானது. தனது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது முதல், பார்சலோனாவில் வதிவதற்கு தகுந்த ஆவணங்கள் கிடைக்கப் பெறாமல் சட்டவிரோதமாக வாழும் சீன, ஆபிரிக்க இனத்தவர்களை, முதலாளிகளிடம் வேலைக்கு அனுப்பி அதில் சிறிது பணம் ஈட்டுவதுவரை, உக்ஸ்வால் ஒவ்வொரு கணத்திலும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இயக்குனர் இன்னாரிட்டு, பல மனிதர்களின் வாழ்க்கைகள் ஒன்றுடன் ஒன்று குறுக்கிடும் கதை சொல்லலை தவிர்த்து, கதையின் மாந்தர்கள் யாவரும் உக்ஸ்வாலுடன் ஏதோ ஒரு வகையில் நேரடித் தொடர்பை கொண்டிருப்பவர்களாக சித்தரித்திருக்கிறார். கதையும் நேர்கோட்டு பாதையில் பயணிக்கிறது. கதையின் மாந்தர்களை பாதிக்கும் எந்த ஒரு சம்பவமும் உக்ஸ்வாலையும் பாதிக்கவே செய்கிறது. அவர்களின் புன்னகையிலும், கண்ணீரிலும் உக்ஸ்வாலிற்கு பங்கு தவறாது கிடைத்துவிடுகிறது.

பார்சோலானவில் தகுந்த ஆவணங்கள் இன்றி வாழ்ந்து வரும் சீன மற்றும் ஆபிரிக்க இனத்தவர்கள் மீது நிகழ்த்தபடும் சுரண்டல்களும், தம் நாட்டில் இல்லாத சொர்க்கமொன்றை அந்நிய மண்ணில் தேடி வந்து, நரகம் ஒன்றில் மாட்டிக் கொண்டு அவர்கள் படும் இன்னல்களையும், அவலங்களையும் அவற்றிற்கேயுரிய வலிகளுடனும், கனவுகள் சிதைந்த விழிகளுடனும் திரைப்படுத்துவதில் பின்னியிருக்கிறார் இயக்குனர் இன்னாரிட்டு. சர்வதேச அரங்குகளில் மனித உரிமைகள் குறித்து பீற்றிக் கொள்ளும் ஐரோப்பிய நாடுகள் நிச்சயமாக பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் ஐரோப்பாவில் இன்று அந்நிய நாட்டு மக்கள் குறித்த உண்மை நிலையானது இன்னாரிட்டு திரைப்படுத்தியதை விட மோசமான எல்லைகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை ஐரோப்பாவில் வதியும் அந்நியர்கள் மறுக்க மாட்டார்கள்.

biutiful-2010-18524-475996845 உக்ஸ்வாலிடம் இறந்துபோனவர்களின் ஆவிகளுடன் தொடர்பாடக்கூடிய ஆற்றல் இருக்கிறது. இந்த ஆற்றலையும் சிறிது பணம் ஈட்ட அவன் பயன்படுத்திக் கொள்கிறான். இறப்பின் பின் இருக்கக்கூடிய ஒரு வாழ்வின் மீது பரிச்சயம் கொண்ட உக்ஸ்வால், தான் இவ்வுலகை விட்டு நீங்கி மறுவுலகிற்குள் நுழையும் முன், தன் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வை சிறப்பாக்க விழைகிறான், தன் தவறுகளிற்கு பிராயசித்தம் காண ஓடுகிறான், தான் தவறிழைத்த ஆன்மாக்களிடம் மன்னிப்பை வேண்டுகிறான், தன் மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ முயல்கிறான். ஆனால் வாழ்வின் எதிர்பாராத அழகுகள் அவனை சுற்றி சுற்றி அடிக்கின்றன. அவன் மீது பாரங்களை படிப்படியாக ஏற்றி விட்டத்தில் மலர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் போன்ற மரணத்தின் பிரசன்னத்தின் முன் அவனை முடங்க வைக்கின்றன. பார்சோலானாவின் அந்நியர்களின் முகங்களினதும், அடையாளங்களினதும், வாழ்கைகளினதும் ஊடு அவர்களைப்போலவே வாழ்வின் நுண்ணிய அழகுகளை தரிசிக்க வேண்டி மரணத்துடன் போட்டி போட்டு இயங்குகிறான் உக்ஸ்வால். பொறுப்பான தந்தை பிம்பத்திற்காக உக்ஸ்வால் அயராது செயற்படுகிறான். இயக்குனர் இன்னாரிட்டுவும் தன் தந்தைக்கு இப்படத்தை சமர்பித்திருக்கிறார்.

மிகவும் சிக்கலும், கனமும் நிறைந்த உக்ஸ்வால் பாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகர் ஹாவியர் பார்டெமின் அர்பணிப்பை பாராட்ட வார்த்தைகளை தேடுவது சிரமமான ஒன்று. படம் முழுக்க நிறைந்து நிற்கிறார் அவர். அவரின் உழைப்பும், சக்தியும், திறமையும், நடக்க அடம்பிடிக்கும் ஒரு குழந்தையை தோளில் ஏந்திச் செல்லும் ஒரு பாசமான தந்தைபோல் திரைப்படத்தை ஏந்திச் செல்கின்றன. அவரது திறமையின் வீச்சு ரசிகனை திகில் கொள்ள வைக்கிறது.

ஆனால், அற்புதமான ஹாவியர் பார்டெம்மின் திறமை இருந்தும் கூட திரைப்படமானது அதன் பிடியிலிருந்து பார்வையாளனை இழக்க ஆரம்பித்து விடுகிறது. இயக்குனர் இன்னாரிட்டுவின் கவித்துவமான மனம் நெகிழ வைக்கும் இயக்கம்கூட இந்த பிடியிழத்தலிலிருந்து ரசிகர்களை மீட்க முடியவில்லை. திரைப்படத்தின் துன்பங்களும், வேதனைகளும், அழுத்தங்களும் திரையிலிருந்து ரசிகனை அமுக்கி திணற வைக்கின்றன. சலிப்பின் எல்லையையும் சற்று எரிச்சலையும் அவன் உணர ஆரம்பிக்கிறான். அளவிற்கதிகமாகவே பரிமாறப்படும் வேதனைகள் எதிர்பார்பிற்கு எதிரான விளைவுகளை மனதில் உண்டாக்குகின்றன. திரையரங்கை விட்டு வெளியேறும்போது ஒரு மனவுளைச்சலுடன் வெளியேறிச் செல்லும் உணர்வை திரைப்படம் வழங்குகிறது. தன் பெயரிற்கேற்ற அழகை காட்ட இன்னாரிட்டுவின் படைப்பு திணறுகிறது. ஹாவியர் பார்டெம் மட்டுமே தெரிகிறார், பெரும் அழகுடன். [**]

ட்ரெயிலர்

Friday, October 29, 2010

ரேப் ட்ராகன் - 25

சீனன் சம்ஹாரம்

ஆதிஜோக்களின் பிரதிநிதியும் பிங்பிங் மன்மதக்கலையில் வல்லவருமான மொட்டைப்பருந்து சீனன் அவர்களின் கும்மாங்கு குத்து

தன் உயிர் அவள் கைகளால் நீங்கினால் அது ஒரு பாக்யம் என்று வேண்டிய ரஃபிக்கின் கலங்கரை விளக்கில் தன் நீண்ட வேட்டைப் பற்களைப் பதித்து அவன் குருதியை உறிஞ்ச மென்னிக்கடி மொனிக்கா தயாரான தருணத்தில், பலத்த ஓசையுடன் அறையின் கூரைகளைச் சிதைத்த வண்ணம் தரையில் வந்து விழுந்து வெடித்து திறந்த பாதுகாப்புக் கவசங்கள் கபிலவிழியாளின் கவனத்தை ரஃபிக்கிடமிருந்து திசை திருப்பின.

ஆனால் பாதுகாப்பு கவசங்களிலிருந்து முதலில் வெளியேறிய அந்த உருவத்தைக் கண்டதும் மொனிக்காவின் கரங்கள் அந்த உருவத்தின் தலையை உடனடியாக கொய்து வீச பரபரக்க ஆரம்பித்தன. மேலும் தான் அந்த அறையில் இருப்பதை அவதானிக்காது தம் உடல் அழகை வெட்கம் ஏதுமின்றி உலகிற்கு காட்டி நின்ற இரு அழகுகளையும் தன் கண்களால் மேய்ந்தவாறே அந்த உருவம் நாடக பாணியில் செய்த சலாமும் மொனிக்காவினை எரிச்சல்படுத்தவே சற்றுக் கடூரமான குரலில்…அடேய், மொட்டைத்தலை சீனா என்று கத்தினாள் அவள்.

அழகுப் பதுமைகளை நோக்கி நளினமாக சலாம் வைத்த நிலையில் மொனிக்காவின் கடூரமான குரல் எதிர்பாராமல் வந்து தாக்கவே சற்று அதிர்ந்துபோன சீனன், நிமிர்ந்தான். திரும்பினான். மென்னிக்கடி மொனிக்காவை அங்கு கண்ட சீனனின் விழிகள் அச்சம் கலந்த வியப்புடன் விரிந்தன. தன் மொட்டைத்தலையில் எஞ்சியிருந்த நுரையை தடவிய சீனன்… வந்தனம் மொனிக்கா, உன்னை என் கண்கள் கண்டு காலங்கள் ஆகிவிட்டன என்றான்.

- அது உன் அன்னை செய்த புண்ணியம்… கபிலவிழியாளிடமிருந்து பதில் வெடுக்கென வந்தது…. டேய் சீனா, என் காதலை நிறைவேறாமல் செய்தது மட்டுமல்லாது என் காதலனையும் தவறான பாதையில் இட்டு செல்ல தூபம் போடுகிறாயாமே…தொடர்ந்தாள் கபிலவிழியழகி.

- உன் காதலை நான் நிறைவேறமால் செய்தேனா! இது என்ன புதுக்கதை மொனிக்கா.

- படுபாவி, நானும் அவரும் மாலைமாற்ற வேண்டிய வேளையில் நீ என் காதலரை கடத்தி செல்லவில்லையா.

- நீ உன் காதலனிடம் ஒரு முக்கிய உண்மையை தெரிவிக்காது மாலை மாற்றத் துணிந்தாய், மேலும் உன் காதலன் என் நண்பன்.

- என்ன உண்மையை நான் மறைத்தேன் சண்டாள மொட்டைப் புழுவே.

- நீ ஒரு ரத்தக்காட்டேரி எனும் உண்மையை..

சீனனின் பதில் கூரிய கட்டையாய் மொனிக்காவின் இதயத்தில் பாய்ந்தது. சீனனிற்கு எதிர் பதில் ஏதும் தர இயலாத ஒரு வெளிக்குள் தான் அடைபடுவதை கபிலவிழியாள் உணர்ந்தாள்.

- ரத்தம் உறிஞ்சும் உயிரற்ற பிறவியுடன் என் நண்பன் வாழ்ந்திருக்க நான் அனுமதியேன்… இன்றும், அன்றும், என்றும்… தன் முகத்தில் ஏளனப் புன்னகை ஒன்றை தவழ விட்டான் மொட்டைத் தலை சீனன்.

- ஏன்…ஏன்.. காதல் எனும் உணர்வை நீ எனக்கு மறுக்கிறாய். அதனைப் பருகுவதற்கு எனக்கு உரிமையில்லையா. என் காதலிற்கு குறுக்கே நிற்கும் உன்னை இன்றுடன் ஒழித்துக்கட்டுகிறேன்… ஆவேசமாக கத்திய மொனிக்கா தன் கால்களை தரையில் ஓங்கி அடிக்கவே அவள் அதி குட்டைப் பாவாடைக்குள் இருந்து சில வவ்வால்கள் அரண்டு வெளியே பறந்து சென்றன.

- ஹாஹாஹா…. உன் காதல் கோவிலில் வவ்வால்கள் வாழ ஆரம்பித்து விட்டனவா. சபாஷ், உன் காதலை நீ கோட்டை கட்டி பாதுகாத்திருக்கிறாய் மொனிக்கா.

- என் உடலும், உள்ளமும் என் காதலரிற்கு மட்டும்தான் சொந்தம்.

- அப்படியானால் உன் உயிர் யாரிற்கோ… சீனனின் இந்தக் கேள்வியால் மீண்டும் நிலைகுலைந்தாள் மொனிக்கா.

- அற்ப பதரே, என் மரணம்கூட என் காதலரிற்காகவே இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள். ஆனால் அதன் முன்பாக உன்னை நடைபிணமாக அலைய வைக்கிறேன். நள்ளிரவு வேளைகளில் உன்னை ரத்தப் பிச்சை எடுக்க செய்கிறேன். மொட்டைப் பேயாக உலாவ பண்ணுகிறேன். என் மீது விழுந்த இந்த சாபத்தின் வேதனையின் ஒரு கூறை உன்னை உணர வைக்கிறேன்… இதனைக் கூறியவாறே சீனனின் மீது வெகுவேகமாகப் பாய்ந்த மொனிக்கா, சீனனின் கால்களைப் பிடித்து அவனை தலை கீழாக தூக்கி எறிந்தாள்.

Rape Dragon அறையின் குறுக்கே வல்லூறு பாய்ச்சலில் பறந்து சென்ற சீனன் சுவரொன்றில் பலமாக மோதி கீழே விழுந்தான். கீழே வீழ்ந்த சீனனின் மீது தாமதிக்காது பாய்ந்த மொனிக்கா, தன் கரங்களால் சீனனின் தலையை அழுத்தியபடியே அவளது கூரான பற்களை சீனன் மேல் அழுத்திப் பதித்தாள்.

சுவரில் மோதியதால் கலங்கிப்போன சீனன் தன்னால் இயன்றவரை மொனிக்காவின் அசுரப்பிடியிலிருந்து தன்னை விடுவிக்க திமிறினான். ஆனால் மொனிக்காவின் பலத்தின் முன் அவன் திமிறல்கள் பஸ்பமாகின. தன் கழுத்தில் ஊசியாக ஏறிய மொனிக்காவின் பற்களை உணர்ந்தான் சீனன். தன் முடிவு நெருங்கிவிட்டதை அறிந்த சீனன், வாழ்கையில் தான் கண்ட அழகான பெண்களை நினைவில் கொண்டுவர முயன்றான். ஆனால் அந்த வேளையில்…. மொனிக்கா, அவனை விட்டுவிடு எனும் சொற்கள் அறையில் ஒலித்தன.

அந்த அறை கொண்டிருந்த வன்மத்தையெல்லாம் போக்கிவிடும் மென்மையுடன் எழுந்த அந்தக் குரலில் வாழ்ந்திருந்த இனிமை அறையிலிருந்த பெண்களின் இதயங்களை எல்லாம் ஆதுரமாக வருடிக் கொடுத்தது. அக்குரலைக் கேட்ட மாத்திரத்தில் ஒரு கணம் உறைந்தாள் மொனிக்கா. சீனனை தன் தலைக்கு மேல் தூக்கி அப்பால் வீசியெறிந்தாள். சிட்டுக்குருவிபோல் பறந்தான் சீனன்.

தன் நீண்ட கூந்தலை அழகாக கோதிவிட்ட மொனிக்கா, இனிமையான அந்தக் குரல் வந்த திக்கில் திரும்பினாள். குரலிற்கு சொந்தமான உருவத்தைக் கண்டாள். அந்த உருவத்தின் முன் மண்டியிட்டாள். தன் தலையை தாழ்த்தியவாறே அந்த உருவத்தின் பாதங்களை நோக்கி நகர்ந்து அவற்றை தன் இதழ்களால் முத்தமிட்டாள். அவள் இதயத்தின் ஆழமான ஊற்றுக்களிலிருந்து பீறிட்டு பொங்கி அவள் விழிகள் வழி வழிந்த கண்ணீர், அப்பாதங்களை செங்கண்ணீர் முத்துக்களால் குளிப்பாட்டியது.

- நலம்தானா என்னுயிர் காதலரே….. காமா ஜோஸின் பாலைவன இதயத்தை நோக்கி காதல் மழை அம்புகளாக பாய்ந்தன மொனிக்காவின் வார்த்தைகள்.

Sunday, October 24, 2010

ஐநூறு மில்லியன் நண்பர்கள்


Mark Zuckerberg, உலகின் மிகவும் இளவயது கோடீஸ்வரன். இன்னமும் சிகரங்களை வெல்லப்போபவன். பில்கேட்ஸையை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடப்போபவன். இன்று ஐநூறு மில்லியன் அங்கத்தினர்களை எட்டிவிட்ட ஃபேஸ்புக்கை உருவாக்கிய கர்த்தா!! The Social Network திரைப்படத்தை David Fincher இயக்குகிறார் என்பதை நான் அறிந்திராவிடில் மார்க் ஸுக்கர்பெர்க் என்பது எனக்கு பரிச்சயம் ஆகாத ஒரு பெயராகவே நீடித்திருக்கக்கூடும்.

The Social Network திரைப்படமானது இன்றைய காலத்தின் தவிர்க்க முடியாத இணைய சமூக உறவாடல் வலை அமைப்பான ஃபேஸ்புக் எவ்வாறு உருவானது என்பது குறித்தும், அதன் உருவாக்கத்தின் பின்னணியில் இருந்திருக்கக்கூடிய மனிதர்கள் குறித்தும் பேசுகிறது.

பல்கலைக்கழக இணையத்தளங்களினுள் அத்துமீறி நுழைந்து, மாணவிகளின் போட்டோக்களைத் திருடி அவற்றை தன் வலைப்பூவில் இட்டு கவர்ச்சிக் கன்னி யார் எனும் போட்டி நடாத்திய இளம் மாணவன் மார்க் ஸுக்கர்பெர்க் [Jesse Eisenberg] எவ்வாறு உலகின் இளம் கோடிஸ்வரன் எனும் நிலையை அடைந்தான் என்பதை பிரம்மாண்டங்கள் ஏதுமின்றி அருமையான ஒரு திரைக்கதையின் வழியாக சலிப்பின்றி திரையில் விரிக்கிறது தேர்ந்த இயக்குனர் டேவிட் பின்ச்சரின் சிறப்பான இயக்கம். Ben Mezrich என்பவர் எழுதிய The Accidental Billionaires எனும் நூலைத் தழுவி திரைக்கதையானது உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஃபேஸ்புக் என்பது மார்க் ஸுக்கர்பெர்க்கின் மனதில் உதித்த கருவா இல்லை அதை அவன் வேறு யாரிடமாவது இருந்து திருடிக் கொண்டானா? ஃபேஸ்புக்கை உருவாக்குவதில் ஆரம்பநிலைகளில் மார்க் ஸுக்கர்பெர்க்கிற்கு உறுதுணையாக நின்ற அவன் ஒரே நண்பன் Eduardo Saverin [Andrew Garfield] க்கு மார்க் துரோகம் இழைத்தானா? மார்க் ஸுக்கர்பெர்க் என்பவன் எவ்வாறான ஒரு மனிதன்? எனும் கேள்விகளை திரைக்கதையின் ஓட்டமானது மனதில் எழவைக்கிறது. அதற்கேற்ப திரைப்படமானது, சட்டவல்லுனர்களும், முக்கிய கதாபாத்திரங்களும் கூடியிருக்கும் ஒரு விசாரணை அறையிலிருந்து காலத்தில் பின்னோக்கி பாய்ந்து மனதில் எழுந்த கேள்விகளிற்கு விடைதர விழைகிறது.

the-social-network-2010-17423-365668668 தங்கள் சிந்தனையில் உதித்த கருவை மார்க் ஸுக்கர்பெர்க் திருடிவிட்டான் என குற்றம் சாட்டும் Winklevoss சகோதரர்கள், தனக்கு துரோகம் இழைத்து ஏமாற்றி விட்டான் என மார்க்கை குற்றம் சாட்டும் அவன் முன்னை நாள் நண்பன் எடுவார்டோ, இவர்களின் குற்றச்சாட்டுக்களை அமைதியாக எதிர்கொள்ளும் மார்க் என பாத்திரங்கள் அனைத்தும் தமது பக்க நியாயங்களிற்காகவும், உண்மைகளிற்காகவும் போராடுபவர்களாகவே காட்டப்பட்டிருக்கிறார்கள். இவன் நல்லவன், இவன் மோசமானவன் என யாரையுமே இயக்குனர் சுட்டிக் காட்டவில்லை. ஒவ்வொருவரும் தத்தமது கதைகளை கூறுவதன் மூலம் ஃபேஸ்புக்கின் வரலாறு சுவையான வகையில் பார்வையாளனுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்கிறது. இந்த இளம் கதாபாத்திரங்கள் வழி இன்றைய சக்தி மிகுந்த புத்திசாலித்தனம் நிரம்பிய இளம் தலைமுறையின் வெற்றிப் போட்டியையும், அதற்காக அவர்கள் செல்லக் கூடிய எல்லைகளையும் காணக்கூடியதாகவிருக்கிறது.

முக்காடுபோட்ட குளிர் மேலங்கியுடனும், காலில் அணிந்த செருப்புக்களுடனும் வலம் வரும் மார்க் ஸுக்கர்பெர்க், ஹர்வார்ட் மாணவ சமூகத்திலிருந்து சற்று ஒதுங்கியவனாக, கேளிக்கைகளை பெரிதும் தவிர்த்து தன் லட்சியத்திற்காக இரவு பகல் என்று கடுமையாக உழைக்கும் ஒருவனாகவே சித்தரிக்கப்படுகிறான். சமூகத்திடமிருந்து முற்றிலுமாக தொடர்பை துண்டித்து விட்ட ஒருவனாக இப்பாத்திரப் படைப்பு இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தன் மனதில் உறவிற்கு இடம் ஒன்றை வைத்திருப்பவனாகவே மார்க் ஸக்கர்பெர்க்கை உணர்ந்துகொள்ள முடிகிறது. இப்பாத்திரத்தை ஏற்றிருக்கும் இளம் நடிகர் ஜெஸ் ஐஸன்பெர்க் மிகவும் சிறப்பான ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார்.

the-social-network-2010-17423-341819701 ஃபேஸ்புக்கினை மார்க் ஸுக்கர்பெர்க்குடன் இணைந்து உருவாக்கியவனாக அறியப்படும் எடுவார்டோ சேவரின் பாத்திரம் நட்பு, துரோகம், தோல்வி என அனைத்தையும் சுமந்து நின்று மனதை தொடுகிறது. எடுவார்டோவின் பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் Andrew Garfield தன் திறமையால் ரசிகர்களை கலங்கடிக்க வைக்கிறார். ஃபேஸ்புக்கின் எல்லைகளை விரிவிப்பதில் பெரிதும் முன்னின்ற தொழில் முனைவனான Sean Parker பாத்திரத்தை ஏற்றிருக்கும் பிரபல பாடகர் Justin Timberlake அலட்டிக் கொள்ளாத நடிப்பில் அசத்துகிறார். எடுவார்டோவிற்கும் ஷோன் பார்க்கரிற்குமிடையில் உருவாகும் பொறாமை கலந்த வெறுப்பும், மார்க் ஸுக்கர்பெர்க்கின் அருகில் தான் மட்டுமே நெருங்கியிருக்க வேண்டும் எனும் அவர்களின் விருப்பும் இயல்பான முறையில் திரைப்படத்தில் டேவிட் பின்ச்சரால் படமாக்கப்பட்டிருக்கிறது. மூன்று இளம் நடிகர்களிடமிருந்தும் அட்டகாசமான விளைவுகளை பெறுவதில் இயக்குனர் தவறவேயில்லை.

படத்தின் திரைக்கதையோடு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொரு அம்சம் பின்னணி இசை. அருமை என்பதை தவிர சொல்ல வேறொன்றுமில்லை. வழமைபோலவே டேவிட் பின்ச்சரின் இயக்கம் திரைப்படத்தை ஒரு த்ரில்லர்போல் நகர்த்தி செல்கிறது. உரையாடல்கள் அதிகம் நிரம்பிய இத்திரைப்படத்தின் இரண்டு மணிநேரம் கடந்து செல்வதை உணர முடியாத வகையில் அவரின் இயக்கம் கச்சிதமாக அமைந்திருக்கிறது.

The Social Network திரைப்படம் போரடிக்குமா? இல்லவே இல்லை. பிரமிக்க வைக்குமா? நிச்சயமாக இல்லை. ஆனால் ஒரு தரமான படத்தை பார்த்த திருப்தி மனதை நிச்சயமாக ஆக்கிரமிக்கும்.

திரைப்படத்தின் இறுதிக் காட்சிகள் இளம் கோடிஸ்வரன் மார்க் ஸுக்கர்பெர்க்கை சுற்றியிருக்ககூடிய ஒரு தனிமையை மெளனமாக உணர்த்துகிறது. ஐநூறு மில்லியன் நண்பர்கள் நிறைந்த ஃபேஸ்புக்கில் மார்க்க்கிற்கு ஒரு உயிர் நண்பனாவது இல்லாமலிருந்தால் அது பரிதாபமான ஒன்றுதான். [****]

ட்ரெயிலர்

Friday, October 22, 2010

ரேப் ட்ராகன் - 24


1008 நைட்ஸ்

- பின்பு என்ன நடந்தது? சிந்துபாத்திடம் இருந்து வந்த கேள்வி உவர்ப்பு பூசிய கடல் காற்றோடு வந்து புரட்சிக்காரன் ரஃபிக்கை மெதுவாக தீண்டியது. கப்பலின் மேற்தளத்தில் கயிற்றுச் சுருள்கள் மத்தியில் அமர்ந்திருந்த ரஃபிக்கின் கண்கள் முடிவற்று பரந்திருந்த கடலை நோக்கிய வண்ணமிருந்தன.

கடல் வழமைக்கு மாறாக அன்று அமைதியுடன் இருந்தது. ரஃபிக்கின் மனம், அமைதியை கடலில் கரைத்து விட்டிருந்தது. அந்தி நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையின் சூரியன், அடிக்கும் செவ்வண்ணத்தில் ஓடிக் கொண்டிருந்தான். காற்றின் இசையும், அலைகளின் சங்கீதமும் அந்தக் கணத்திற்கு மேலும் ரம்யம் சேர்த்தன.

- புரட்சிக்காரா, உன்னிடத்தில் நானிருந்தால் சிந்துபாத்திடம் கதைகள் கூறுவதில் எச்சரிக்கையாக இருப்பேன்… தன் மொட்டைத் தலையை தடவியபடியே கூறினான் அவர்களை நெருங்கிய சீனன்.

- சீனா, என்ன இது! ஏன் இப்படிக் கூறுகிறாய்! நான் என்ன தவறு செய்தேன்.. சிந்துபாத் சற்று வருத்தம் கலந்த குரலில் கேட்டான்.

- இப்படியாக நீ கேட்ட கதைகளைத்தான் சிந்துபாத்தின் சாகஸங்கள் என்ற வகையில் 1008 நைட்ஸ் தொகுப்பிற்கு நீ விற்றுவிடவில்லையா, சாகசங்களை செய்தது வேறொருவர் ஆனால் காலத்திற்கும் நிலைத்திருக்கும் பெயரைப் பெறுபவர் வேறொருவர். ஏன் காமா ஜோஸின், முன்னைநாள் கன்னிகளின் தீவு சாகஸத்தைக்கூட உன் அதிரடியென நீ அளந்து கட்டி விற்கவில்லையா.

- சீனா, புகழின் போதைக்கு அடிமையாகாத உயிர்கள் இங்கு உண்டா, பிறந்த குழந்தையிலிருந்து தள்ளு வண்டியில் மரணத்தின் இதழ் முத்தம் காத்து நிற்கும் முதியவர்வரை அதனை யாசிக்கிறார்களே. மேலும் இந்த வகையிலாவது இந்த சாகசங்கள் காலத்தில் என்றென்றைக்கும் பதியப்பட்ட கணங்களாகுமே. இந்த நல்லெண்ணத்தில்தான் என் பெயரில் ஏனையோர் சாகசங்களை கதையாக்கி விடுகிறேன்.

- சிந்துபாத், நீ கூறுவதுபோல் புகழ் உயிரின் பின்னும் நிலைத்திருப்பதுதான். ஆனால் பிறரை நாம் முட்டாள் ஆக்குகிறோம் என்பதை நாம் மறந்து விடலாகாது. ஆனால் நீ என்ன செய்ய முடியும், தாம் படிப்பதை எல்லாம் அசல் என்று நம்பிவிடும் அப்பாவி உலகம் இது…என்று கூறியவாறே மேற்தளத்தின் ஒரு பகுதியில் அந்திச் சூரியனை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த பச்சைக் கண்ணனை நோக்கி நகர்ந்தான் சீனன்.

- காமா… தன் அழைப்பிற்கு பச்சைக் கண்ணனிடமிருந்து பதில் ஏதும் கிடைக்காததால் சீனன் தன் பேச்சைத் தொடர்ந்தான்… கைகூடமுடியாக் காதலை நினைத்து உருகுவதில் என்ன பயன். இனியாவது நீ அவளை உன் இதயத்தின் துடிப்புகளிலிருந்து உதறிவிட்டு உன் வாழ்கையில் இன்பத்தின் தழுவல்களை அனுமதிக்க வேண்டும். இந்தக் குறுகிய வாழ்க்கையில் நீ அனுபவிக்க தவறுவதையெல்லாம் சற்று எண்ணிபார் காமா. காலம் முழுவதையும் இப்படியே கரைக்கப் போகிறாயா. போகிற போக்கில் காதலிற்காக கோவில் ஒன்றை கட்டினாலும் கட்டுவாய் போலிருக்கிறதே.

- சீனா, நீ காதலித்திருக்கிறாயா?

- அந்தக் கருமாந்திரம் எனக்கெதற்கு. காமம் அறிந்தவன் காதலை தேடுவதில்லை, காதலை தேடுபவன் தன் காமத்தை உரைப்பதில்லை. மேலும் ஒரே ஒரு பெண்ணிற்கு மட்டும் என் இதயத்தில் இடம் தருமளவிற்கு கஞ்சனல்லவே நான்.

- என்னால் அவளை மறக்க முடியவில்லையே சீனா. என் உறக்கத்தினுள் சூரியனாக விடிகிறாளே அவள். என் விழிப்பிலே உயிரென துடிக்கிறாளே அவள். அவள் கண்ணீரிற்கு காரணம் அவள் என்மேல் கொண்ட திவ்ய காதல் அல்லவா. ஒரு வேளை அவள் என்னுயிரை எடுத்துக் கொண்டாள் எனில்..ஹாஆஆஆ…. இப்போது மட்டும் அவள் என்னுயிரை எடுத்துக் கொள்ளவில்லையா என்ன… என் மனம் அதன் அமைதியின் கருவறையை கண்டு கொள்ளும்.

- காமா என்ன உளறுகிறாய், காதலிற்காக உயிரை விடுவது முட்டாள்தனம்.

- இருக்கலாம். காதலில் வீழ்ந்தபின் எவன் புத்திசாலியாக இருக்கமுடியும். அவளிற்காக நான் முட்டாளாகவே இருந்துவிடுகிறேன் என்று கூறிய பச்சைக் கண்ணன் தன் வலது கையைத் திறந்தான். அந்திச் சூரியனின் கதிர்களின் ஜாலத்தில் ஒரு சிறிய தீப்பிழம்பாய் அவன் உள்ளங்கைகளில் எரிந்தது அந்த சிவப்பு முத்து.

- புரட்சிக்காரனே உன் கதையைத் தொடர்ந்து கூறு, பின்பு என்ன நடந்தது என்பதை அறிந்தால்தான் இக்கதையை நான் யாரிடமாவது விற்கலாம் என்றான் சிந்துபாத்.

புரட்சிக்காரன் ரஃபிக்கின் எண்ணங்கள் சொகுசு விடுதியின் அறையை நோக்கி நீந்தின. இதோ இந்தக் கொள்ளையர் கப்பலில் அவன் வந்து சேர்ந்திருக்க காரணமான நிகழ்வுகள் ஆரம்பித்த அந்த அறையை அவ்வளவு இலகுவாக அவனால் மறந்துவிடமுடியுமா என்ன.

- என் கண்களை நான் மீண்டும் திறந்து மேலே பார்த்தபோது, இரு ராட்சத ஆமைகள் அந்த அறையை நோக்கி விழுந்து கொண்டிருந்தன. ஆனால் அவை ஆமைகள் அல்ல….

ஆமை ஒட்டு வடிவத்தில் உருவாக்கப்பட்டிருந்த பாதுகாப்புக் கவசங்கள் இரண்டும் அந்த அறையின் கூரையினை உடைத்த வண்ணம் பலத்த சப்தத்துடன் தரையில் மோதின. மோதிய வேகத்தில் பாதுகாப்புக் கவசத்தின் காற்றுப்பைகள் வெடித்து வீங்கின. கவசம் பாதியாக திறந்தது. முதலாவதாக திறந்து கொண்ட கவசத்திலிருந்து வெளியேறிய உருவம் எழுந்து நின்று, விழுந்த அதிர்வால் சற்று தள்ளாடியது. சிறிது கணத்தின்பின் தன்னிலைக்கு வந்த அந்த உருவம் தன் உடலில் வழிந்த பாதுகாப்பு நுரையை வழித்துவிட்டபடியே… ராஜமாந்தீரிகன் கருந்தேளின் கண்டுபிடிப்பு அற்புதம். புஷ்பக் விமானத்தை எவ்வளவு சிறப்பாக அவன் ஓட்டி வந்தான். ஆனால் இந்த இலுமினாட்டிக்குதான் வாய் ஓயாத பேச்சு. யாரையாவது வெட்ட வேண்டும் என்ற வெறி, விதேசி மோகம்..என்று புலம்ப ஆரம்பித்தது. அறையினுள் தன் பார்வையை ஓட விட்ட அந்த உருவம் அங்கிருந்த அழகுகளை கண்டதும் உடனே உஷாரானது. தன் சிரிப்பு வகைகளில் ஓடித் தேடி மன்மத சிரிப்பை கண்டுபிடித்தது. அதனை அறைக்குள் நுரைகளுடன் தூவியவாறே… அழகுச் சிலைகளே தங்கள் அந்தரங்க நாடகத்தில் அத்துமீறி கூரையை உடைத்து நுழைந்ததிற்காக என்னை மன்னியுங்கள் என்றவாறே அறையிலிருந்த பெண்களை நோக்கி நாடக பாணியில் சலாம் வைத்தது மொட்டைத் தலை சீனன் ஷங்லிங்கின் உருவம்.

Sunday, October 17, 2010

உள்ளே வரலாமா


விவாகாரத்துப் பெறவுள்ள தன் தாயுடன் வாழ்ந்து வருகிறான் 12 வயது சிறுவன் ஓவன். நண்பர்கள் யாருமற்ற ஓவன், மாலைநேரங்களில் தனியாக தன் பொழுதை பனிபெய்யும் கணங்களில் கரைக்கிறான். பாடசாலையில் அவனை துன்புறுத்தும் முரட்டு மாணவர்களை எதிர்த்து ஏதும் செய்ய அவனிடம் தைரியம் என்பது இல்லை. இந்நிலையில் அவன் பக்கத்து வீட்டிற்கு ஆபி எனும் சிறுமி குடிவந்து சேர்கிறாள். முதலில் ஓவனுடன் நண்பியாக மறுத்த சிறுமி ஆபி, பின் அவனுடன் நட்பாக ஆரம்பிக்கிறாள். ஆனால் ஓவன் வாழும் நகரத்தில் மர்மமான முறையில் திடீரென மனிதர்கள் காணாமல் போக ஆரம்பிக்கிறார்கள்….

நட்பு குறித்த திரைப்படங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மனதை நெகிழ வைத்துவிடுவதுண்டு. அதிலும் தனிமையில் வாடும் சிறுவன் ஒருவன் கொள்ளும் நட்பு என்பது நிச்யமாக உள்ளத்தை தொட்டுவிடும். இங்கு சிறுவன் ஓவன் சிறுமி ஆபியுடன் கொள்ளும் நட்பு படம் நெடுகிலும் மனதை நெகிழ வைக்கிறது. சிறுமி ஆபி ஒரு ரத்தக் காட்டேரியாக இருந்தாலும் கூட.

சுவீடன் நாட்டுத்திரைப்படமான Morse என்பதன் ஆங்கில ரீமேக்தான் இயக்குனர் Matt Reeves இயக்கியிருக்கும் Let Me In. நீயு மெக்சிக்கொவிலுள் லாஸ் பலாமோஸின் பனிபெய்யும் புறநகர்பகுதிகளிற்கு திரைப்படம் பார்வையாளனை அழைத்து செல்கிறது. அங்கு தீவிர மதபக்தி நிறைந்த ஒரு தாயுடன் தனிமை உணர்வுடன் வாழும் சிறுவன் ஓவன் அறிமுகமாகிறான். அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் தனிமையை மிகவும் சிறப்பாக திரையில் கொணர்ந்திருக்கிறார் இயக்குனர். அயலவர்களை வேவு பார்ப்பவனாகவும், கண்ணாடியுடன் உரையாடுபவனாகவும், பள்ளியில் சக மாணவர்களிடம் அடிவாங்குபவனாகவும் ஓவன் வலம் வருகிறான்.

LET ME IN அதேபோல் ஒவனிற்கும் ஆபிக்கும் உருவாகும் நட்பையும் அற்புதமாக இயக்குனர் திரைப்படுத்தியிருக்கிறார். ரத்தக் காட்டேரிக்கு வயதாவதில்லை. தான் ஒரு ரத்தக் காட்டேரி என்பதை ஓவனிற்கு கூற விரும்பாத சிறுமி ஆபி, அவனை விலகி செல்லவே விரும்புகிறாள். ஆனால் அவன் தனிமையும் அவள் காலகாலமாக வாழ்ந்திருக்கும் தனிமைக்கும் வித்தியாசங்கள் அதிகமில்லை. அவர்களிற்கிடையில் மெல்ல மெல்ல நட்பு முளைவிட ஆரம்பிக்கிறது ரூபிக்ஸ் க்யூப்பில் ஆரம்பமாகும் நட்பு படிப்படியாக ஊர் சுற்றல், ரோமியோ யூலியட் நாடக வாசிப்பு என நகர்ந்து வீட்டு சுவர்களின் வழியாக மோர்ஸ் சங்கேத பாஷையில் உரையாடுவது வரை வளர்வது அவர்கள் வீட்டை சுற்றி வீழ்ந்து கொண்டிருக்கின்ற பனியைவிட மென்மையாக இருக்கிறது.

ஒரு காட்டேரிப்படத்திற்குரிய திகிலும், பயங்கரமும், ரத்தமும் திரைப்படத்தில் இருந்தாலும் கூட ஒவனிற்கும் ஆபிற்குமிடையில் உருவாகும் நட்பே படத்தை ரசிகனுடன் கட்டிப் போடுகிறது. இந்த விந்தையான நட்பு அந்த இரு சிறுவர்களையும் ரத்தத்தை தாண்டி பிணைத்துவிடுகிறது. ஓவனாக வரும் Kodi Smit McPhee யும் ஆபியாக வரும் Chloe Mortez ம் மனதைக் கொள்ளை கொள்கிறார்கள். படத்தை விறுவிறுப்பாகவும் நெகிழ்வுடனும் சலிப்பின்றி நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குனர் மாட் ரீவ்ஸ். சுவீடன் திரைப்படமான Morseஐ நான் பார்க்கவில்லை எனிலும் இத்திரைப்படம் என் மனதை திருப்தி செய்தது.

பொலிஸ் விசாரணையின் நெருக்கம், இனியும் ஓவனிற்கருகில் வாழ முடியாத நிலை. சிறுமி ஆபி என்ன செய்தாள்? சிறுவன் ஓவன் தனித்து விடப்பட்டானா? மனதை நெகிழவைக்கும் முடிவுடன் நிறைவடையும் இத்திரைப்படம் நட்பு என்பது நல்லவர்களையும், நல்லவற்றையும் மட்டும் சார்ந்தது அல்ல அது உறவையும் அன்பையும், தீமையையும் தாண்டி நித்தியத்தின் சாத்தியங்கள் வரை நிலைபெறச் செய்வது என்பதை அழகாகக் கூறுகிறது. காட்டேரிப் படங்களில் இது ஒரு அழகான கவிதை. [***]

ட்ரெயிலர்

Friday, October 15, 2010

ரேப் ட்ராகன் - 23


வவ்வால் குடில்!

கபிலவிழியழகி, அசிங்கமான மொட்டைத் தலை சீனனை எண்ணிக் கொதித்து தன் வாழைத் தண்டுக் கால்களை தரையில் ஓங்கி அடித்ததால் அந்த அழகுப் பெண்ணின் காதுகளில் தொங்கிக் கொண்டிருந்த இரு வவ்வால்களும் அவள் தலைக்கு மேலாக பறக்க ஆரம்பித்ததோடு மட்டுமல்லாமல் கீய்ய்ய்..கீய்ய்ய் என்ற தம் கீறுப்பட்ட குரலில் தம் எஜமானியம்மாவை சாந்தப்படுத்தவும் முயன்றன.

வவ்வால்களின் கிய்ச்சாங், கிய்ச்சாங் ஒலியை தாங்கிக் கொள்ள முடியாத விரகதாப காதல் பொறாமையிலிருந்த புரட்சிக்காரன்… பீடைகளே ஒழிந்து போங்கள் இங்கிருந்து என்று வவ்வால்களை நோக்கி உரக்க கத்தினான். ஆனால் நடந்ததோ வேறு.

ரஃபிக்கின் குரலினால் கவரப்பட்ட அந்த இரு வவ்வால்களும் கபிலவிழியாளை விட்டு விலகி ரஃபிக்கின் கலங்கரை விளக்கின்மேல் வட்டமிட ஆரம்பித்தன. அவ்வாறு வட்டமிட்டவாறே அந்த இரு குறும்புக்கார வவ்வால்களும் தங்களிற்குள் பேசிக் கொண்டதை வவ்வால் மொழியிலிருந்து மொழிபெயர்த்து வாசக வெள்ளத்திற்கு வழங்குவது எமது கடமையன்றோ.

வவ் 1: மீ த பஸ்டு

வவ் 2 : மீ கடித்து விட்டு வருகிறேன்

- இந்தக் கோபுரம் சிறியதாக உள்ளது

- அளவைப் பார்த்தால் நாம் பிழைப்பு நடத்த முடியாது

- சிட்டியினதைவிட கெட்டியாக இருக்குமோ

- முட்டிப் பார்த்தால் தெரிந்துவிடும்

- கலங்கரை விளக்கின் அடிவாரத்தில் வட்டப் பாறைகள் தென்படுகின்றன

- ஆமாம், ஆமாம், அடிவாரத்தையும், பாறைகளையும் சூழ்ந்து புற்தரை ஒன்றும் இருக்கிறது

- எமக்கு ஒரு குடிலை அங்கு நாம் அமைத்து சல்லாபம் செய்து மகிழலாம்

- ச்ச்சீசீசீகீய்ய்ய்ய்…. உங்களிற்கு எப்போதும் இதே நினைப்புத்தான்

- தலை கீழாக தொங்குவதால் வந்த வினை, உனக்கு மட்டும் இஷ்டமில்லையா என்ன

- குறும்புக்காரர் நீங்கள்

- என் தலைகீழ் அன்பே, வா அந்தக் பாறைகளினுள் மறைந்திருந்து கொஞ்சி விளையாடலாம்

- எனக்கு வெட்கமாக இருக்கிறது

- வெட்கத்தைப் பார்த்தால் விளையாட முடியாது…ஹிஹிகீய்ய்ய்ய்ய்

இவ்வாறாக தமக்குள் உரையாடிய அந்த இரு வவ்வால்களும் புரட்சிக்காரனின் அடிவாரப் புற்தரையினுள் குடிசை கட்ட முயன்றதோடு மட்டுமல்லாது பாறைகளின் உறுதியை சோதிப்பதற்காக தமது பற்களையும், விரல்களையும் அவற்றின் மீது பதித்துவிடவே , நுண்ணிய ஊசிகள் பல தன் உயிரில் குத்தும் வலியை உணர்ந்த புரட்சிக்காரன், தன் இடுப்பை முன்னே உந்தி உந்தி வவ்வால்களை புற்தரையிலிருந்து உதறிவிட முயன்றான். குட்டிச் சாத்தான்களே, உங்களை உயிரோடு நசுக்காது நான் விடமாட்டேன் என்று குரலெடுத்துக் கத்தினான் அவன்.

ஆனால் அவனது கூச்சல்களை அந்த அறையிலிருந்த எவரும் மதித்ததாக தெரியவில்லை. கபிலவிழியாளின் கவர்ச்சியில் கட்டுண்டு கிடந்த டேனி, தன் ஈரமான உதடுகளை திறந்து… பச்சைக் கண்ணனை பற்றி இவ்வளவு நன்றாக அறிந்து வைத்திருக்கிறீர்களே உங்களிற்கும் அவரிற்குமிடையில்…. டேனியின் வார்த்தைகள் முடியும் முன்பாகவே…. ஏதுமில்லை, இருந்ததுமில்லை, இருக்கப் போவதுமில்லை, அப்படி இருக்கவும் விடமாட்டேன் எனச் சீறியது புரட்சிக்காரனின் குரல்.

ரஃபிக்கை ஒரு மயக்கும் புன்னகையுடன் பார்த்த கபிலவிழியாளின் உதடுகள் அவர் என்ற சொல்லை அன்புடன் உச்சரித்தது. அவர்.. அவர்தான் என் வசீகரன், இதயத்திருடன், உள்ளம் கவர் கள்வன், காதலன், வருங்கால கணவன்… இதனைக் கூறிய கபிலவிழியாள் ஒரு கனவு நிலையை அடைந்திருந்தாள். அவள் கனவை வெட்டும் வாளாக உயர்ந்தது புரட்சிக்காரனின் குரல்.

- உன் வருங்கால கணவன் இதோ இங்கிருக்கிறான் அழகியே என்ற ரஃபிக்… உன் பச்சைக் கண்ணன் மட்டும் என் கைகளில் சிக்கினான் எனில் உன் காதலை நான் கைம்பெண்ணாக்குவேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முடித்தான்.

ரஃபிக்கின் இந்த வார்த்தைகள் கபிலவிழியாள் மீது விஷ அம்புகள் போல் பாய்ந்தன. அவள் முகத்தில் படிந்திருந்த மென்மையான உணர்ச்சிகள் அவளை விட்டு நீங்கின. டேனியை தன் கைகளிலிருந்து நழுவவிட்ட கபிலவிழியாள், ரஃபிக் இருந்த பஞ்சணையை நெருங்கினாள். தமது எஜமானியம்மா பஞ்சணையை நெருங்கியதைக் கண்ட தொங்கட்டான் வவ்வால்கள் இரண்டும் பாறைகளிலிருந்து சல்லாபம் செய்வதை விடுத்து கபில விழியாளின் காதுகளில் போய் தொங்க ஆரம்பித்தன.

- அடேய், புரட்சிக்காரா என் காதலையா நீ கைம்பெண்ணாக்குவேன் என்றாய்?

- மன்னித்துவிடு அழகே, அதைவிட்டால் எனக்கு வேறு வழி தெரியவில்லை.. ரஃபிக் வருத்தம் தோய்ந்த குரலில் பதில் தந்தான்.

- நான் யார் தெரியுமா?

- என் கைவிலங்குகள் கழட்டப்பட்டதும் என்னால் தழுவப்படப்போபவள் என்று கூறி ஒரு முழு மன்மத சிரிப்பை உதிர்த்தான் ரஃபிக்.

- நீ தழுவப்போவது என்பது உண்மை, ஆனால் என்னை அல்ல அற்பனே, கொடிய மரணத்தை. மென்னிக்கடி மொனிக்காவிடம் அகப்பட்ட எவரும் உயிருடன் மீண்டதில்லை என்று கூறிய கபிலவிழியாள் தன் உதடுகளை சற்று அகல திறந்தாள். அவளது நீண்ட வேட்டைப்பற்களும் சிறு குறுவாள்களைப் போல் ரஃபிக்கை பார்த்து புன்னகைத்தன.

- அழகே உன் கையால் என் ஜீவன் பிரிந்தால் அது என் பாக்யம், நீ என்னை உன் காதலனாக ஏற்காதது உன் அபாக்யம், பச்சைக் கண்ணன் என் கையில் சிக்கினால் அது அவன் துர்பாக்யம் என்று தளராமல் தொடர்ந்தான் ரஃபிக்.

- முதலில் நீ, அதன்பின் இந்த இரு பெண்கள், என் தீராத ரத்த தாகம் இன்று பூரண திருப்தியை எட்டட்டும். என் காதலின் கீர்த்திக்கு உங்கள் காமம் கரைந்த ரத்தம் அபிஷேகம் ஆகட்டும்… இதனைக் கூறியவாறே ரஃபிக்கை நோக்கி குனிந்தாள் மென்னிக்கடி மொனிக்கா.

மொனிக்காவின் அருகாமை ரஃபிக்கை எங்கோ கொண்டு சென்றது. ஒரு பெண்ணின் அருகாமை இவ்வளவு சுகத்தை வழங்க முடியுமா என வியந்தான் புரட்சிக்காரன். மொனிக்காவின் அழகிய உதடுகள் வழியாக நீண்ட அந்த இரு வேட்டைப் பற்கள்தான் எவ்வளவு அழகு.. ஆஹா.. அவை என் உடலில் பதியாதா என ஏங்க ஆரம்பித்தான் ரஃபிக்.

புரட்சிக்காரனின் அந்த ஏக்கத்தை உடனடியாக தீர்த்து வைப்பது போல் மொனிக்காவின் பற்கள் அவன் கலங்கரை விளக்கின் மீது பதிந்தது. ஆஹா என்ன சுகம் என்றவாறே திறந்திருந்த கூரையின் வழியாக தெரிந்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் ஒரு புன்னகையுடன் நோக்கினான் ரஃபிக். மொனிக்காவின் கூரான பற்கள் அவன் கலங்கரை விளக்கில் பதிந்து தந்த சுகத்தில் மயங்கிக் கண்களை மூடினான் புரட்சிக்காரன். ஒரு நொடி… இரு நொடி… சடார் என அவன் கண்கள் திறந்தன. ஆகாயத்தை மீண்டும் நோக்கின. அகல விரிந்தன. ஆகாயத்திலிருந்து அறையை நோக்கி வெகு வேகமாக விழுந்து கொண்டிருந்தன இரு ராட்சத ஆமைகள்.

Monday, October 11, 2010

நிலவைத் திருடியவன்


க்ரூ, அகில உலகின் வில்லாதி வில்லானாக, பிறர் கண்டு அஞ்சி நடுங்கும் பொல்லாதவனாக இருக்க விரும்புகிறான். அவனது இந்த விருப்பை நிறைவேற்ற வயதுபோன டாக்டர் நெஃபாரியோவின் கில்கில் கண்டுபிடிப்புக்கள் துணை நிற்கின்றன. ஆனால் க்ரூவின் லட்சிய பாதையில் குறுக்கே வருகிறான் வெக்டர். புதிய தலைமுறையின் இளம் பிரதிநிதியான வெக்டரின் ஜிகிடித்தனங்கள் க்ரூவை உலகின் மாபெரும் வில்லானகும் லட்சிய பாதையில் பின்னடைய செய்கின்றன. வெக்டரை போட்டியில் பின்னுக்கு தள்ள விரும்பும் க்ரூ, நிலவைத் திருடி விட திட்டம் தீட்டுகிறான். கில்லாடி வெக்டரை கவிழ்க்கும் திட்டத்தில் பயன்படுத்தும் நோக்கில் மூன்று அனாதை சிறுமிகளையும் க்ரூ தத்தெடுத்துக் கொள்கிறான்….

பிறர் மனதில் இடம்பிடிப்பதற்கு வில்லத்தனத்துடன் கூடிய அசரவைக்கும் சாகசங்களை விட பாசம் நிறைந்த அன்பு போதுமானது என்பதை நகைச்சுவையுடனும், நெகிழவைக்கும் தருணங்களுடனும் பார்வையாளர்களிடம் எடுத்து வருகிறது யூனிவெர்சல் ஸ்டுடியோ வெளியீடாகிய Despicable Me எனும் இந்த 3D அனிமேஷன் திரைப்படம். இயக்குனர்கள் Chris Renaud மற்றும் Pierre Coffin இயக்கத்தில் இத்திரைப்படமானது சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

கண்களை அகல விரித்து வியக்க வைக்கும் அனிமேஷன் உத்திகளோ, அதிரடியான காட்சி அமைப்புக்களோ இன்றி காதல் கொண்ட அருவிபோல் நிதானமான வேகத்தில் நகரும் இத்திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் தங்கள் மென்மையால் ரசிகர்கள் மனதை வேகமாக வந்தடைகிறார்கள்.

moi-moche-et-mechant-2010-19154-383120991 சிறுவயது முதல் நிலவிற்கு செல்லும் ஆசையை தன் மனதில் இருத்தி வளரும் க்ரூ, அதற்காக நிகழ்த்தும் கண்டுபிடிப்புகளிற்கும், கனவுகளிற்கும் அவன் சொந்த தாயிடமிருந்துகூட ஊக்கம் கிடைப்பதில்லை. சிறுவயதில் அவனின் ஒவ்வொரு முயற்சிக்கும் கிடைப்பது ஏளனப் புன்னகையுடன் கூடிய க்ர்ர்ர்ர் எனும் உறுமல் மாத்திரமே. ஆனால் அவன் தன் கனவைக் கைவிடுவதாக இல்லை. உதாசீனங்கள் அவன்மீது ஏற்படுத்திய வடு அவனுடன் கூடவே வளர்ந்துவிடுகிறது. பிறர் கவனத்தை தன் பக்கமாக திருப்ப வேண்டும் எனும் ஏக்கத்தை மெளனச் செடியாக தன்னுள் வைத்திருக்கிறான் க்ரூ. இதனால் பிறர் தன்னைக் கண்டு அஞ்சும் அளவிற்கு அவன் தன்னை மெல்ல மெல்ல மாற்றிக் கொள்கிறான். அச்சம் மூலம் அவன்மீது பிறரின் கவனத்தை திருப்ப முனைகிறான் க்ரூ. ஆனால் அவன் மனதிலோ தீமை இல்லை. தன்னை ஒரு பொல்லாதவனாக காட்டி பிரபலமாக இருப்பதே அவன் நோக்கம். இந்தப் போலி பொல்லாதவன் பாத்திரத்திற்கு உருவம் தந்திருக்கும் க்ரூ ஒரு சிறப்பான படைப்பு.

பெங்குவின் போல் தோற்றம் தரும் க்ரூவும், அவனது நடையும், உடையும், வில்லத்தனங்களும் சிரிக்கவே வைக்கின்றன. க்ரூவின் வில்லத்தனங்களோடு கைகோர்த்துக் கொண்டு வரும் Despicable Me எனும் பாடலின் இசை, ஜேம்ஸ்பாண்ட் தீம் இசைபோல் ரசிக்க வைக்கிறது. பிரெஞ்சு மொழியில் க்ரூ பாத்திரத்திற்கு குரல் வழங்கியிருக்கும் கலைஞரான Gad Elmaleh பிய்த்து உதறியிருக்கிறார். அவரது தனித்துவமான மொழி உச்சரிப்பு க்ரூவின் மீதான கவர்ச்சியை கணிசமாக அதிகரிக்க செய்கிறது.

ஜேம்ஸ்பாண்டிற்கு புதிய புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்கி தரும் Q போலவே க்ரூவிற்கு வாய்த்த அரிய பொக்கிஷம்தான் டாக்டர் நெஃபாரியோ. அவரின் கண்டுபிடிப்புக்கள் எல்லாம் பார்வையாளனை சிரிப்பு டைனமைட்டுகளாக கொளுத்துகின்றன. க்ரூ கேட்பதை சரியாகப் புரிந்து கொள்ளாது அவர் உருவாக்கும் அயிட்டங்கள் கலகலக்க வைக்கின்றன. படு சீரியஸாக டாக்டர் நெஃபாரியோ ஆராய்ச்சியில் ஈடுபடும் காட்சிகள் கிச்சுகிச்சு மூட்டுகின்றன. க்ரூவிற்கும், டாக்டர் நெஃபாரியோவிற்கும் அடிபொடிகளாக வரும் மஞ்சள் வண்ண மினியோன்கள் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வணக்கம் வரை அடிக்கும் அபத்த லூட்டிகள் ரசிக்கவைக்கின்றன.

moi-moche-et-mechant-2010-19154-1114349760 மிகவும் கூலான வாலிப வில்லனாக அறிமுகமாகும் வெக்டர் பாத்திரம் துரதிர்ஷ்டவசமாக அதிக ஈர்ப்பை ஏற்படுத்த தவறிவிடுகிறது. ஆனால் க்ரூவின் வாழ்வின் போக்கையே மாற்றி அமைக்கப் போகும் அனாதை சிறுமிகளில் அன்னியெஸ் எனும் சிறுமியின் பாத்திரப் படைப்பு அருமை. உடனே அள்ளிக் கொஞ்ச வேண்டும்போல் மென்மையான தேவதைக் குறும்புகளோடு உலாவரும் அன்னியெஸ் பல தருணங்களில் மனதை நெகிழ வைத்து விடுகிறாள்.

அந்த மூன்று அனாதைச் சிறுமிகளிற்கும் க்ரூவிற்கும் இடையில் பிடிவாதமாக வேர்விட ஆரம்பிக்கும் உறவுதான் படத்தின் பலமான அம்சம். தத்தெடுக்கப்பட்ட சிறுமிகளால், அன்பு என்பது அரிதான ஒன்றாக இருக்கும் க்ரூவின் வாழ்க்கை மெதுவாக மாற்றம் பெற ஆரம்பிக்கிறது. அன்பையும், அரவணைப்பையும் வேண்டும் சிறுமிகளிற்கு அதனை தர மறுக்கும் க்ரூ, அவனையறியாமலே அவற்றை அச்சிறுமிகளிற்கு வழங்க ஆரம்பித்து விடுகிறான். படிப்படியாக ஒரு பொறுப்பான தந்தையாக அவன் மாற்றம் கொள்கிறான். சிறு வயதில் அவனிற்கு கிடைத்திருக்காத அன்பை அவனிடமிருந்து எதிர்பார்த்து அவனை சந்தேகத்துடன் பார்க்கும் மூன்று சிறுமிகளும் இயல்பாகவே அவனை நேசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். சிறுமி அன்னியெஸ், க்ரூ மீது காட்டும் அன்பு அசர வைக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இந்த அழகான உறவின் மலர்ச்சி ரசிகனை மென்மையாக ஆனால் உறுதியான வகையில் இபாத்திரங்களுடனும், திரைப்படத்துடனும் பிணைத்துவிடுகிறது. ஆனால் தன் லட்சியக் கனவா இல்லை பாசமா எனும் கேள்வி க்ரூ முன் எழுகையில் அவன் எடுக்கும் முடிவு அவன் வாழ்வையே மாற்றி விடுகிறது.

வெக்டரின் மாளிகைக்குள் பொருட்களை சிறிதாக்கும் துப்பாக்கியை திருடப்போகும் காட்சிகள், நிலவைத் திருடியபின் நடக்கும் உச்சக்கட்டக் காட்சிகள் என்பன நல்ல விறுவிறுப்பை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சிறுமிகளிற்கும், க்ரூவிற்கும் இடையில் வரும் புத்தகம் படிக்கும் காட்சிகள் மனதை அள்ளி எடுக்கின்றன. க்ரூவின் நடனம்கூட ரசிக்ககூடியதாகவே இருக்கிறது. க்ரூ நிலவைத் திருடியவன்தான் ஆனால் அவன் வாழ்வை பூரணமான ஒன்றாக மிளிர வைப்பது அன்பு மட்டுமே. Despicable Me, ஆர்பாட்டங்கள் அற்ற, தொடுவது தெரியாமல் உங்களைத் தொட்டுவிடும் ஒரு நுண் தென்றல். [***]

பிரெஞ்சு ட்ரெயிலர் [ காட் எல்மலேயின் மொழி உச்சரிப்பிற்காக]

Friday, October 8, 2010

ரேப் ட்ராகன் - 22


பச்சைக்கண் மச்சான் அல்லது எந்திரனை வெல்லும் சுந்தரன்

பஞ்சணையில் விலங்கிடப்பட்ட நிலையில், குந்தவி மற்றும் டேனி ஆகிய இரு பருவ அழகிகளின் உலக ஒழுக்க நெறிகளிற்கு ஒவ்வாத, நீதிமான்களால் சபிக்கப்படுகின்ற, சான்றோர்களால் ஒதுக்கப்படுகின்ற, கலாச்சாரக் காவலர்களால் நிந்திக்கப்படுகின்ற மன்மத இச்சைகளிற்கு இணங்குவதற்கு எதிராக மனவுறுதியுடன் போராடிய ரஃபிக், கூரையிலிருந்து குதித்த குளிர் நிலவைக் கண்டதும் தன் உள்ளம் நிலையிழந்து உதிர்த்த காதல் வார்த்தைகளையோ அல்லது பச்சைக் கண்ணன் மீது கொண்ட பொறாமையினால் உதிர்த்த வீர சபதங்களையோ அந்த கபிலவிழியழகி பெரிதும் பொருட்படுத்தினாள் இல்லை.

தன் காதுகளில் அலங்காரத் தோடுகளிற்குப் பதிலாக தொங்கிய இரு வவ்வால்களை ஆதுரமாகக் தடவிக் கொடுத்தவாறே அந்தக் கபிலவிழியழகி, தன் கவர்ச்சியால் புரட்சிக்காரனை மட்டுமல்ல அந்த அறையில் இருந்த இரு இளம் அழகிகளையும் தன் அழகுப்புலத்திற்குள் ஈர்க்க ஆரம்பித்தாள்.

மேலும் அவர், அவர் என ஒவ்வொரு தடவையும் அவள் உச்சரித்த அவர்கள், அவள் குரலின் இனிமையையும், அவள் அழகின் திரட்சியையும் மேன்மேலும் அதிகரித்தன. அவர் என்று அவள் அழைக்கையில் கபிலவிழியாளின் மீது ஒரு சாந்தம் சரிந்து கொள்ள ஆரம்பித்தது. டேனியிடம் தன் விசாரணையை தொடர்ந்தது அந்த கபிலவிழியழகு.

- அவரின் பச்சைக் நிறக் கண்கள், மரகதக் காடுகளின் குளிர்ச்சியையும், கடல் தேவன் பொசைடனையே தோற்கடிக்கச் செய்யும் காந்த சக்தியையும் கொண்டிருக்குமே..

- ஆம்

- அவரது கேசங்கள், ஓடிக் களைக்காத அஸ்வமேதப் புரவியின் பிடரி முடிகளின் அழகை கொண்டிருக்குமே…

- ஆம்… அழகியே… பதிலளித்தவாறே டேனி, கபிலவிழியாளை நோக்கி நகர ஆரம்பித்தாள்.

- பாபிலோனின் மன்மதக் காதல் களியாட்ட பூந்தோட்டங்களின் சுகந்த நறுமணம் அவர் சரீரத்திலிருந்து இயற்கையாக கமழுமே…..

- ஆம்

- எந்திரனை வெல்லும் சுந்தரன் அவர்...[ காப்பிரைட்- பாண்டி மைனர்]

- ஆம்

- ஸ்பார்ட்டானின் முந்நூறு தீர வீரர்களை தனியே அடித்து விழுத்தும் மாவீரர் அவர்….

- ஆமாம், ஆமாம், ஆமாம்… நீங்கள் கூறும் அத்தனை லட்சணங்களையும் கொண்டவர்தான் அவர். ஆனால்….. என இழுத்தாள் டேனி.

- ஆனால் என்ன பெண்ணே…. தன்னை நெருங்கிய டேனியின் ஆடையற்ற உடலின் அழகுகளை ரசித்த கபிலவிழியாள், தனது விரலின் கூரிய நகத்தால் டேனியின் மார்புகளின் இடுக்கிலிருந்து அவள் அடிவயிறுவரை ஒரு கோடிழுத்தாள்.

- ஆஹாஹா…ஆஆஆஆ என மென்மையாக, விலங்குபோல் முனகினாள் மராக்கோ மாதுளை டேனி. கபிலவிழியாள் அவள் உடலில் வரைந்த கோடு, குருதிக் கோடாகியது. அந்தக் குருதிக்கோட்டில் தன் நாக்கை மெதுவாக ஊர விட்டாள் அந்தக் கபிலவிழியழகி. குருதிக்கோட்டினை முழுமையாகச் சுவைத்த அவள்… என் கேள்விக்கு நீ விடை தரவில்லை பெண்ணே என்றவாறே டேனியை அவள் கண்களில் நோக்கினாள். கபிலவிழியாளின் காந்தக் கண்களில் தன்னை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருந்த டேனி…

- அழகியே மீண்டும் உன் நாக்கு என் உடலில் ஊரட்டும். அது தரும் சுகம் இன்றுவரை நான் சுகிக்காதது என்று கபிலவிழியாளிடம் மெதுவாக கிசுகிசுத்தாள்.

- என் கேள்விக்கு விடையளி, அதன்பின் நீ இதுவரை கண்டிராத சுகத்தை என் பற்களினால் உனக்கு வழங்குகிறேன் என்றாள் கபிலவிழியாள்.

- இவ்வளவு லட்சணங்களைக் கொண்டிருந்தாலும் அந்தப் பச்சைக் கண் மனிதர் பெண்களிடம் தன் மனதை இழப்பதில்லை. மேலும் அவர் விரல்கள் தப்பித் தவறிக்கூட பெண்களின் மீது விழுவதில்லை என்று மயக்கமான குரலில் கூறினாள் டேனி.

இதைக் கேட்ட கபிலவிழியாளின் நெஞ்சங்கள் பெருமையால் எழுந்து இறங்கின. அவள் கண்களில் எங்கிருந்தோ வந்து ஒரு பெருமிதம் குடிபுகுந்தது.

- பெண்களை விரும்பாமல், ஆண் சினேகம் விரும்புவரா என்று கூட நாங்கள் அவரை சந்தேகித்தோம்… கபிலவிழியாளின் கரங்களின் அணைப்பில் தன்னை இறுக்கிக் கொண்டிருந்த டேனி தொடர்ந்தாள்… ஆனால் அந்தப் பச்சைக் கண்ணன் தன் மனதை ஒரு பெண்ணிடம் தந்துவிட்டதாலேயே, அவர் மனதில் நூறுகோடி எரிமலைகளாக கொதித்து நிற்கும் ஒரு காதலாலேயே அவர் வேறு பெண்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்பதை பின்பு அறிந்து தெளிந்தோம்.

டேனியின் வார்த்தைகளைக் கேட்க கேட்க, கபிலவிழியாளின் கண்கள் கலங்கின, அவள் அழகிய கபில விழிகளில் திரண்ட செந்நிறக் கண்ணீரானது அவள் கன்னங்கள் வழியே மெளன அருவியாக வழிந்தது. வழிந்த செங்கண்ணீர் இறுகி சிவப்பு கண்ணீர் முத்துக்களாக தரையில் விழுந்து உருண்டு ஓடி அடங்கியது.

- இந்த தகவல்களையெல்லாம் யாரிடமிருந்து நீ அறிந்து கொண்டாய் பெண்ணே…என்று வினவிய கபிலவிழியாளின் குரல் தழுதழுத்தது.

- மொட்டைத் தலை சீனன்… சற்றும் தயங்காது பதிலை தந்தாள் டேனி.

- ஆஆஆஆஆஆஆஆஆ…. அந்த அசிங்கமான மோசக்கார சீனன் இன்னமும் அவருடன்தான் இருக்கிறானா… கபிலவிழியாளின் குரல் சூடாக ஆரம்பித்தது.

- ஆம் அழகியே, அவருடன் இருப்பது மட்டுமல்ல, ஒரு உண்மைக்காதலை எண்ணி ஏங்கி உருகும் அந்த உத்தம பச்சைக் கண் மச்சானை காமக் களியாட்டங்களில் ஈடுபடச் சொல்லி இடைவிடாது தூண்டுவதும் அந்த அசிங்கமான சீனன்தான் என்று இழுத்தாள் டேனி.

- அடேய் அற்பப் பதரே, மொட்டைத் தலை சீனா, நூடுல்ஸ் மீசைக்காரா, சொர்க்கத்தின் முகவரியில் கட்டெறும்பை வைத்திருப்பவனே, அவரையா எனக்கு துரோகமிழைக்க தூபம் காட்டுகிறாய்… அது நடக்காதடா அப்பனே… உன் மென்னியைத் திருகி, உன் ரத்தத்தை உறிஞ்சி, நட்ட நடு ராத்திரியில் காமத்திற்கு அலையும் வவ்வால் போல் உன்னை உலவவிடாமல் நான் ஓயப்போவதில்லையடா… சீற்றமாகச் சூளுரைத்த கபிலவிழியாள் தன் காலை தரையில் அடித்தாள். அந்த அடியின் அதிர்வில் அவள் காதுகளில் தொங்கிக் கொண்டிருந்த தொங்கட்டான் வவ்வால்கள் இரண்டும் அரண்டு கபிலவிழியாளின் காதை விட்டு மேலே எழுந்து பறந்தன.

Monday, October 4, 2010

வேகமாய் விரையும் ரத்தம்


முதல் தடவையாக ஜேம்ஸ் எல்ரோயின் நாவலை நான் படித்தபோது, அதுவரை நான் படித்திருந்த த்ரில்லர் நுவார் வகை க்ரைம் எழுத்துக்களிலிருந்து அவரின் எழுத்தானது வீர்யமான, விறுவிறுப்பான, அதிர வைக்கும் உணர்வை எனக்களித்தது. புதியதொருவகை கதையுலகினுளும், கதை சொல்லலினுளும் நுழைந்து விட்ட அனுபவத்தை நான் அடைந்தேன். அது ஒரு போதையைப்போல் என்னை பீடித்தது. இன்றைய நாள்வரையில் எல்ரோயின் எழுத்துக்கள் என் போதையை தீர்க்காது ஏமாற்றி ஏய்ப்பவையாக அமைந்ததேயில்லை.

நான் முதலில் படித்த எல்ரோயின் நாவல் American Tabloid என்பதாகும். அதன்பின், சுவை கண்ட வெறியனாக அவரது நாவல்களை தேடித் தேடி நான் படித்திருக்கிறேன். Black Dahlia மற்றும் L.A. Confidential ஆகிய எல்ரோயின் நாவல்கள் அவரது L.A. Quartet ல் அடங்குபவை. இந்நாவல்கள் திரைப்படங்களாகவும் உருவாகியிருக்கின்றன. ஆனால் எல்ரோயின் எழுத்துக்களை நாவலில் படிப்பது போன்ற அந்த கச்சிதமான போதையுணர்வை திரைப்படங்கள் வழங்கவில்லை என்பதே என் தாழ்மையான கருத்து. குறிப்பாக அவரது அட்டகாசமான நாவலாகிய Black Dahlia திரையில் அதன் அடையாளத்தையே முற்றாக இழந்தவிட்ட ஒரு தோற்றத்தை எனக்களித்தது.

Underworld USA Trilogy எனப்படும் நாவல் தொடரின் முதலாவது நாவலாக அமைந்ததுதான் American Tabloid. ஜான் கென்னடி அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு முன்பாக ஆரம்பிக்கும் இந்நாவல் அவரின் படுகொலையின் சில நிமிடங்களின் முன்பாக நிறைவு பெறும். ஜான் கென்னடியை பதவிக்கு வராமல் தடுப்பதற்கு நிகழும் சதி மற்றும் அவரது படுகொலை எவரால், எவ்வாறு, ஏன் திட்டமிடப்பட்டது என்பன இந்நாவலில் பிரதான பங்கு வகிக்கும்.

இந்நாவல் தொடரின் இரண்டாம் பாகமான The Cold Six Thousand, ஜனாதிபதி ஜான் கென்னடியின் படுகொலை நடந்த சில நிமிடங்களின் பின்பாக ஆரம்பமாகி, வியட்னாம் யுத்தம், அதற்காக நடாத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல், ராபர்ட் கென்னடி மற்றும் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் படுகொலைகளின் பின்னான சதிகள் என விரிகிறது. இந்த இரு நாவல்களும் படு வேகமாக வாசகனை பக்கங்களை திருப்ப வைக்கும் கதைக்களனையும், கதை நகரும் வேகத்தையும் கொண்டவையாகும்.

வரலாற்றில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை எடுத்துக்கொண்டு, தன் கற்பனை பாத்திரங்கள் மற்றும் அந்த சம்பவங்களுடன் தொடர்பு கொண்ட நிஜ பாத்திரங்கள் வழி தன் அருமையான கற்பனை திறனால் அந்த சம்பவங்களின் பின் ஒளிந்திருக்ககூடிய உண்மைகளையும், சதிகளையும், மர்மங்களையும் வாசகர் முன் விடுவிப்பதாக அவரது கற்பனைக் கதைகள் அமைந்திருக்கின்றன. ஜான் கென்னடி, ராபர்ட் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரின் படுகொலைக்கு காரணமானவர்கள், க்யூபாவிற்கு எதிரான ரகசிய கெரில்லா யுத்தங்கள் போன்ற நிகழ்வுகளை தன் கற்பனை வழியே பரபரப்பான அதிர்வை உருவாக்கும் நாவல்களாக இவர் வாசகனிற்கு வழங்குகிறார்.

Couv இவரது கதை சொல்லும் முறையானது அதிகமான வர்ணனைகள் அற்றது. சுருக்கமான தந்தி உரைநடை பாணியில் உருவாவது. ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்துவது. இவரது கதை சொல்லல் முறைக்கு பழக்கப்பட்டபின்னர் மாத்திரமே எல்ரோயின் எழுத்துகள் எவ்வளவு வீர்யமானவை என்பதை ஒருவர் உணர்ந்து கொள்ள முடியும். அதேபோல் இவரது கதைகளில் இடம்பெறும் இனத்துவேஷமும், வன்முறையும், வக்கிரமும் பழக்கப்படாத வாசகர்களை சங்கடத்துடன் நெளிய வைக்கும் தன்மை கொண்டவை. ஆனால் எல்ரோயின் பலமும், தனித்துவமும் மேற்கூறியவை யாவும் சேர்ந்து உருவானவையே.

வாசகர் மத்தியில் தனது கற்பனைக் கதைகளின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் உத்தியாக அத்தியாயங்களின் இடையே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்கள், கடிதங்கள், அந்தரங்க டயரிகளின் பக்கங்கள், செய்திப் பத்திரிகைகளில் பிரசுரமாகிய செய்திகள் மற்றும் கட்டுரைகளை எல்ரோய் இணைப்பதுண்டு. Underworld USA Trilogyன் மூன்று நாவல்களிலும் இந்த உத்தி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அமெரிக்க குற்ற குழுக்களிற்கும்[மாஃபியா], அரசியல் புள்ளிகளிற்கும், காவல்துறைக்கும், பிரபலங்களிற்கும்,CIA மற்றும் FBI போன்றவற்றிற்கும் இடையில் ரகசியமாக இருந்து வந்த தொடர்புகள், அதனால் ஏற்பட்டிருக்ககூடிய விளைவுகள் என்பவற்றை தன் கற்பனையில் அதிர்வை தரும் விதமாக வடித்தெடுத்து வழங்குபவையாகவே Underworld USA Trilogy ன் மூன்று நாவல்களும் அமைந்திருக்கின்றன. நாவல் தொடரின் இரண்டாம் பாகமான The Cold Six Thousand வெளியாகி எட்டு வருடங்களின் பின்பாகவே தொடரின் இறுதிப்பாகமாகிய Blood’s a Rover வெளியாகியது.

இந்நாவலில் மூன்று பிரதான பாத்திரங்களாக Wayne Tedrow Junior, Dwight Holly, Donald Crutchfield ஆகியோர் முன்னிறுத்தப்படுகிறார்கள். 1968 முதல் 1972 வரையிலான காலப்பகுதியில் கதை நகர்கிறது. வாட்டர்கேட் விவகாரத்தை எல்ரோய் தவிர்த்திருக்கிறார்.

A.E. Housman என்பவர் எழுதிய Reveille எனும் கவிதையின் வரிகளிலிருந்தே நாவலின் தலைப்பு உருவாகியிருக்கிறது[Clay lies still, but blood’s a rover]. 1964ல் தெற்கு லாஸ் ஏஞ்சலீஸீல் கறுப்பின மக்கள் செறிந்து வாழும் பகுதியில் நிகழும் ஒரு கவச வாகனக் கொள்ளையின் படு அட்டகாசமான விபரிப்புகளுடன் Blood’s a Rover நாவல் ஆரம்பமாகிறது. பின் கதை 1968ற்கு ஒரே தாவில் தாவுகிறது. இந்நிலையில் நாவலின் மூன்று பிரதான பாத்திரங்களும் வாசகர்களுடன் அறிமுகமாகிக் கொள்கிறார்கள். Wayne Tedrow மற்றும் Dwight Holly நாவல் தொடரின் இரண்டாம் பாகத்திலேயே அறிமுகமான நாயகர்கள்தான். புதிய வாசகர்களிற்காக இவர்கள் இருவரையும் குறித்த சுருக்கமான ஆனால் தெளிவான அறிமுகம் நாவலில் முன்வைக்கப்படுகிறது.

JamesEllroy_TheBlackDahlia Dwight Holly, ஒரு FBI ஏஜெண்ட். FBIன் இயக்குனர் John Edgar Hoover ன் பணிப்பின் நிமித்தம் கறுப்பின புரட்சி அல்லது கலகக் குழுக்களினிடையே வேறுபாடுகளையும் மோதல்களையும் தோற்றுவித்து அக்குழுக்களை மக்கள் முன்னிலையில் மதிப்பிழக்க செய்யும் திட்டத்தை மேற்கொள்ளுபவன். கறுப்பின குழுக்கள் வழி போதைப்பொருள் விற்பனையை நிகழ்த்தி அச்சமூகத்தை சீரழிக்க வேண்டுமென்பது Hooverன் விருப்புக்களில் ஒன்று. இதற்காக Dwight கறுப்பின குழுக்கள் பற்றிய தகவல் தரும் நபர் ஒருவரையும், கறுப்பின குழுக்களினுள் ஊடுருவி அவர்களை வேவுபார்த்து அவர்களிடையே பிரிவினைகளை உருவாக்ககூடிய நபர் ஒருவரையும் பணிக்கமர்த்துகிறான். Wayne க்கு குடும்ப நண்பனாகவும் Dwight இருக்கிறான்.

Wayne Tedrow Junior, மார்ட்டின் லூதர் கிங்கை கொலை செய்தவனாக இவன் சித்தரிக்கப்படுகிறான். தீவிர இனவாத குடும்பத்தின் வாரிசான இவன், தனது மனைவியின் கொலையின் பின் கறுப்பின குற்றவாளிகள் மீது கொலைவெறியுடன் மோதுபவன். கறுப்பின சமூகத்தினரால் அச்சத்தோடு நோக்கப்படுபவன். மாஃபியா குழுக்களிற்காகவும், செல்வந்தன் Howard Hughes க்காகவும் காரியங்கள் ஆற்றுபவன். மேற்கூறியவர்களிற்கும் ஜானாதிபதி தேர்தலில் போட்டியிடும், தேர்ந்தெடுக்கப்படும் Richard Nixon க்குமிடையில் சூட்கேஸ் நகர்த்தி காரியங்கள் சாதிப்பவன். மாஃபியாக்களின் கறுப்பு பண முதலீட்டிற்கும், நிர்வாகத்திற்கும் பொறுப்பானவன். டொமினிக் குடியரசில் மாஃபியாக்களிற்காக சூதாட்ட விடுதிகளை உருவாக்கும் திட்டத்தின் பிரதான தூண்.

Donald Crutchfield, தனியார் துப்பறியும் நிபுணர்களிற்காக வேவு பார்க்கும் வேலைகளை செய்பவன். சிறுவயதில் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்ட தன் தாய் மீதான ஏக்கம் கொண்டவன். மறைந்திருந்து ரகசியமாக பெண்களை நோட்டம் விட்டு ரசிக்கும் இயல்பு கொண்டவன். ஒரு வாடிக்கையாளானிற்காக மோசடிக்கார பெண் ஒருத்தியை தேடும் வேட்டையை ஆரம்பிக்கிறான் இவன்.

james-ellroy நான்கு வருட காலப்பகுதியில் இந்த மூன்று நாயகர்களும் கதையின் ஆரம்பத்தில் அவர்கள் கொண்டிருந்த கருத்துக்களை படிப்படியாக மாற்றிக்கொண்டு வேறு மனிதர்களாக ஆக முயல்வதை அற்புதமாக சொல்லியிருக்கிறார் எல்ரோய். கறுப்பினத்தவர்களையும், இடதுசாரிகளையும் நசுக்க உழைக்கும் Dwight, மாஃபியாக்களிற்காக பணியாற்றும், கறுப்பின சமூகத்தின் சிம்ம சொப்பனமாக இருக்கும் Wayne, காஸ்ட்ரோவின் ஆதரவாளர்களை சுட்டுத் தள்ளும் Crutchfield ஆகிய மூவரும் நான்கு வருடங்களில் அடையும் மாற்றங்களும், அவர்களின் முடிவுகளும் நெகிழ வைப்பவையாக இருக்கின்றன. நாவலில் இந்த நாயகர்களிற்கும் பெண்களிற்குமிடையிலான உறவுகள் மனதை மென்மையாக தொட்டு விடுகின்றன.

கறுப்பின மக்களின் மீதான ஒடுக்குமுறை, இனவாத அமைப்புக்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள், இடதுசாரி அமைப்புக்களின் ரகசிய நடவடிக்கைகள், காவற்துறையின் ஊழல் மற்றும் அராஜகம், டொமினிக்கன் குடியரசில் ஜனாதிபதி நிக்சனின் தயவில் நிகழும் அமெரிக்க மாஃபியாக்களின் சூதாட்ட விடுதி கட்டுமானப் பணிகள், டொமினிக்கன் குடியரசில் மக்கள் மீதான அடக்குமுறை, க்யூபாவின் கரைகளில் நிகழ்த்தப்படும் காஸ்ட்ரோ ஆதரவாளர்களின் கொலைகள், செல்வந்தன் Howard Hughesன் இனவாத மனப்பிறழ்வுகள், FBI இயக்குனர் Hoovern மனக்கனவுகள், வக்கிரங்கள், வூடு மூலிகை ரசாயனம், வூடு மாந்திரிகம் என எண்ணற்ற விபரங்களுடன் வாசகனை சுற்றி சுற்றி அதிர அடிக்கிறது நாவல். இவற்றினூடு 1964ல் இடம்பெற்ற அந்த கவசவாகனக் கொள்ளைச் சம்பவமும், மரகதக்கற்களும் நாவல் நெடுகே கொடும் மர்மமாக பயணிக்கின்றன. ஒரு பெண் பாத்திரம் மிக முக்கிய திருப்பங்களை கதையோட்டத்தில் ஏற்படுத்துபவளாக படைக்கப்பட்டிருக்கிறாள்.

எல்ரோயின் நாவலின் நாயகர்கள், அகவழுத்தங்களும், பதட்டங்களும், உள்ளே வெடிக்க தருணம் பார்த்திருக்கும் வன்முறையையும் உடையவர்கள். தங்கள் தீவிர எல்லைகளை எப்போதும் மீறிச் சென்று ரட்சணியத்திற்காக தம்மைத் தாமே அழிக்க முற்படுபவர்கள். இந்நாவலின் நாயகர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. மகிழ்ச்சியான முடிவு என்பது எல்ராய்க்கு பிடிப்பதில்லை என்பதை இந்நாவல் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. கதையின் செறிவும், வேகமான நகர்வும், தகவல்களும் நாவலை வேகமாக படித்து முடித்து மர்மத்தையும், முடிவையும் அறிய விழையும் வாசகனை களைக்கச் செய்யும் அளவிற்கு கடுமையாக உழைத்திருக்கிறார் எல்ரோய். அசத்தலான கற்பனை, அற்புதமான லேசர் வெட்டு எழுத்து நடை, இறுதிவரை நீண்டு செல்லும் மர்மம், நெகிழ வைக்கும் தருணங்கள், கலங்கவைக்கும் முடிவு என Underworld USA Trilogy க்கு Blood’s a Rover மூலமாக மிகவும் கச்சிதமான நிறைவை வழங்கியிருக்கிறார் எல்ரோய்.