Tuesday, May 14, 2013

டைலான் டாக் - தமிழில்!!

இத்தாலிய சித்திரக்கதை ரசிகர்களின் அபிமான ஹீரோக்களில் ஒருவராகிய டைலான் டாக் அவர்களின் கதையான ஜானி ஃப்ரீக் இப்போது தமிழாக்கம் செய்யப்பட்டு தரவிறக்கி படிப்பதற்கு வசதியாக இணையத்தில் கிடைக்கிறது. மிகவும் எளிமையான, எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாத இக்கதை மென்மையான உள்ளங்கள் கொண்ட வாசகர்களின் மனங்களை கனக்க வைத்து, விழிகளின் ஓரத்தில் துளியாய் ஒரு கண்ணீரை உருவாக்க வல்லது. ஆர்வம் உள்ளவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம், தங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம்.





Sunday, May 12, 2013

காவலர்களின் காலன்

வதனமோ சந்த்ர பிம்பமோ - 10

 எ நவஹோ சிக்ஸ்பேக் சிப்பெண்டெல் டெக்ஸ் குங்ஃபூ !

ஆக்‌ஷன் மசாலா அதிரடிக் காமிக்ஸ் கதையொன்றின் ஆரம்ப பக்கங்கள் அதன் வாசகர்களின் வாலிபவாசம் இழக்காத நரம்புகளை சூடேற்றும் வகையில் அமைந்திருப்பதென்பது அக்கதைக்கு வலிமை சேர்க்கும் அம்சங்களில் ஒன்றாக அமையும். அதுவும் அந்தக் கதையின் நாயகன் கதையில் தன் அறிமுகத்தை நிகழ்த்தும் தருணமானது அக்கதையின் சூடுபறக்கும் ஓட்டத்தோடு பொருந்திக் கொள்ளும் வகையில் அமைந்திருக்கையில் அந்த நாயக அறிமுகமானது கதைக்களத்தை மேலும் சூடேற்றி விடுவதாக இருக்கும். Les Justiciers de VEGAS எனத் தலைப்பிடப்பட்ட, டெக்ஸ் n°601, n°602 மாத இதழ்களின் சிறப்பு தொகுப்பானது நவஹோ திலகம் டெக்ஸிற்கு சிறப்பானதொரு நாயக அறிமுகத்தினை டெக்ஸ் ரசிகர்கள் பரவசமாகி விசில் அடிக்கும் வண்ணமாக தன்னில் தாங்கி நிற்கிறது என்றால் அது மிகையல்ல.
கதை ஆரம்பமாவது மெக்ஸிக்க எல்லையில் அமைந்திருக்கும் நகோ எனும் சிறுகிராமத்தின் விடுதியொன்றில். வறள்நில சுடுகாற்று நகோவின் உயிரற்ற தெருக்களினூடு அனலாய் சுழன்று கொண்டிருக்க, அந்த உயிரற்ற தன்மையை உயிர்க்க வைப்பது போல வெடிக்கும் துப்பாக்கி ஓசை. விடுதியினுள்ளே வெடித்த தோட்டாவின் புகையை இன்னும் பிரியாத துப்பாக்கியுடன் ஒரு மனிதன். விடுதியின் தரையில் உயிரைப் பிரிந்தவனாக ஒருவன். இச்சூழ்நிலை விதைப்பில் உடன் அறுவடையான பயத்தில் உறைந்துபோன இரு சிறுவர்கள். இவற்றை வேடிக்கையுடன் பார்க்கும், மரணத்தையும், மற்றவற்றையும் துச்சமென மதிக்கும் இன்னும் இருவர். விடுதியில் இந்த மூன்று கேடிகளின் பிரசன்னமும் அச்சத்தினதும், ஆபத்தினதும், பதட்டத்தினதும் சுவாசங்களின் நாடித்துடிப்பாக அதிர்கின்றன. அடுத்த நொடியில் என்ன கேடு நடக்கும் எனும் பரபரப்பில் நனைந்த தீமையின் பிரகாசத்தின் முன் கையறு நிலையில் அல்லாடும் அறம். மீண்டும் வெடிக்கும் தோட்டாவொன்றின் முத்தத்தில் தன் கன்னிமையை இழக்கும் டெகிலா புட்டி, தோட்டா வாசத்தில் தன் வாடையை கலந்து விடுதியில் கனக்கிறது. இவ்வாறாக தீமையின் நர்த்தன  சித்திரமொன்றினை அவ்விடுதியின் நடுவில் தன் தேர்ந்த கதைசொல்லல் வழியாக வாசக மனதில் பதிக்க ஆரம்பிக்கிறார் கதாசிரியர் Mauro Boselli.
உண்ட உணவானது திருப்தியானதாக இல்லை என்பதற்கு பதிலாக விடுதி உரிமையாளனின் உயிரை சன்மானமாக எடுத்துக் கொண்டவனையும், அவன் தோழர்களையும் பதட்டம் ததும்பும் சூழ்நிலை ஒன்றின் துடிப்போடு வாசகர்களிடம் எடுத்து வருகிறார் பொசெலி. அடுத்து என்ன நடக்கும், இந்த கேடிகளின் நகர்வு என்னவாக இருக்கும் எனும் கேள்விகள் வாசகர்களிடம் வியப்பாக எழும் நிலையில், எம்மை அசைக்க இக்கணத்தில் இவ்விடத்தில் எவரும் இல்லை என அம்மூன்று கேடிகளும் எண்ணுவதான உணர்வு வாசகனை வந்தடையும் நிலையில்.. அத்தருணத்தில்… அந்நொடியில்… அதிர்வுகள் வெடிநிலையில் துள்ளும் அக்கணத்தில்… அறமும், நீதியும், சத்தியமும் ஸ்தலத்தில் குற்றுயிராக துடிக்கும் அப்பொழுதில்… அவ்விடுதிக்குள் திரை விலக்கி புயலாய் நுழைகிறான் ஒரு மனிதன்… அவன்?!
jv1நான் இதுவரை படித்த டெக்ஸ் கதைகளில், இக்கதையில் உள்ளதுபோல சூடான டெக்ஸின் அறிமுகத்தை நான் கண்டது இல்லை என்பேன். எண்ட்ரி என்றால் எண்ட்ரி அப்படி ஒரு எண்ட்ரி. உங்கள் வீட்டு எண்ட்ரியா, எங்கள் வீட்டு எண்ட்ரியா, இல்லை இல்லை எமன் வீட்டு எண்ட்ரி என்பேன். மனிதர் விஷ்க் என்று மறைப்பு சீலை ஒன்றை ஒதுக்கி விட்டு விடுதி உள்ளே நுழைவார் பாருங்கள், பரட்டைக்கு ஒன் த ஸ்பாட் பேதி உறுதி. கொடூரமான முறையில் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட முதிய நவஹோ தம்பதிகளின் மரணத்திற்காக நீதி வேண்டி மெக்ஸிக்கோ எல்லையை மீறும் டெக்ஸ், அந்த சிறுவிடுதியில் பேசும் வசனங்களும், தரும் பதிலடிகளும், கதையின் தனித்துவமான பாணி கொண்ட ஓவியரான Corrado Mastantuono  அவரிற்கு வழங்கியிருக்கும் உடல் மொழியும், எந்த எச்சரிக்கையுமில்லாது வெடிக்கும் ஒரு வெடிகுண்டு போல வெடிக்கும் அந்த மோதலும்…. டெக்ஸ் கதைகளில் சூடான டெக்ஸ் எண்ட்ரிகளை பட்டியலிட்டால் இக்கதையும் அப்பட்டியலில் சிறப்பான ஒரு இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
கதையின் ஆரம்பத்தில் டெக்ஸ், கிட், டைகர் ஜாக் ஆகியோரே கதைக்களத்தில் பங்கு பெறுபவர்களாக இருப்பார்கள். கார்சன் கதையில் உடனடியாக அறிமுகமாகி விடுவது இல்லை. கிராமத்தில் நடந்து முடியும் மோதலின் பின்பாக கேடிகளின் உடமைகளின் மத்தியில் நீயு மெக்ஸிக்கோவை சேர்ந்த வங்கி ஒன்றின் பணமுடிப்புக்களை கண்டு கொள்ளும் டெக்ஸ் & கோ, அது குறித்த மேலதிக தகவல்களை அறிவதற்காக நீயு மெக்ஸிக்கோ நோக்கி தம் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள்.
நீயு மெக்ஸிக்கோவை வந்தடைந்த பின்பாக அந்நகர ஷெரீஃப்புடனான உரையாடலின் வழியாக, அங்கு இடம்பெற்ற வங்கிக் கொள்ளை குறித்தும், அதில் ஈடுபட்ட கொள்ளையர்கள் சிலரது பிரத்தியேக அடையாளங்கள் குறித்தும் டெக்ஸ் அறிந்து கொள்கிறார். ஆனால் வெகாஸ் நகரின் நீதியின் காவலர்கள் வங்கிக் கொள்ளையர்களை பரலோகத்திற்கு அனுப்பிவிட்டதாகவும் அவர்களில் எஞ்சியிருக்ககூடியவன் ஒருவனே எனவும் மேலதிக தகவல்களை டெக்ஸிற்கு வழங்குகிறார் நீயு மெக்ஸிக்கோவின் ஷெரீஃப். இந்நிலையில் வெகாஸ் நகரின் காவலர்கள் யார் எனக் கேட்டறிந்து கொள்ளும் டெக்ஸ் அவர்களை நேரில் சென்று காண்பது எனும் முடிவிற்கு வருகிறார். கதையின் இப்பகுதியில் குற்றங்கள் நிறைந்து, அமைதியே செத்துப் போயிருந்த நகரமான வெகாஸை எவ்வாறு தம் அதிரடி நடவடிக்கைகளால் அமைதிப் பூங்காவாக நீதியின் காவலர்கள் மாற்றினார்கள் எனும் விபரிப்பின் வழி அந்த நீதிக்காவலர் பாத்திரங்களை வாசகர் மனதில் புகுத்த ஆரம்பிக்கிறார் கதாசிரியர் பொசெலி.
கதாசிரியர் பொசெலியின் கதைகளில் என்னைக் கவரும் அம்சம் என்னவெனில் அவர் தன் கதைகளின் எதிர் நாயகர்களை சோப்ளாங்கிகளாக சித்தரிப்பது இல்லை என்பதுதான். திறமை மிக்கவர்களாகவும், தந்திரங்களில் தேர்ந்தவர்களாகவும், டெக்ஸ் எனும் நாயக பிம்பத்தின் விரைப்பைகளை தம் கைகளில் இறுக்கி சவால் விடுபவர்களாகவும் பொசெலி தன் எதிர்நாயகர்களை உருவாக்குவார். இவ்வகையான எதிர்நாயக உருவாக்கத்தின் வழியாக கதையில் வாசகர்களிடம் அவர் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். இக்கதையிலும் தன் பாணியிலிருந்து சற்றும் விலகிடாது கதையின் எதிர்நாயகர்களாக மாறிடப்போகும் வெகாஸின் நீதிக்காவலர்கள் பற்றிய சித்திரத்தை சிறப்பான ஒன்றாக தீட்டுகிறார் கதாசிரியர் பொசெலி.
jv2அதற்காக அவர் இரு இழைகளை தன் கதைசொல்லலினூடு ஓட விட்டிருப்பார். ஒன்று, கதையின் முதல் பாகத்தில் கார்சனிற்கு பதிலாக புலம்பும் பணியை எடுத்துக் கொள்ளும் கிட், வங்கிக் கொள்ளையர்கள் எல்லாம் ஏறக்குறைய பரலோகம் சென்றுவிட்ட நிலையில் நாம் ஏன் வெகாஸிற்கு வீணாக செல்ல வேண்டும் எனக் கேட்கும் கேள்விக்கு டெக்ஸ் சொல்லும் பதிலும், கதையும். இரண்டாவது வழிப்பறிக் கொள்ளை சம்பவம் ஒன்றில் உயிர்பிழைக்கும் வெல்ஸ் பார்கோ கம்பனி ஊழியனான மலோரி, வெகாஸ் நகரின் நீதிக்காவலர்களின் விசாரணையின் முடிவில் ஐயமுற்று நடாத்தும் விசாரணை.
இந்த இரு இழைவிபரிப்பின் மத்தியில் கதையின் எதிர்நாயகர்களின் திறமைகள், குணாதிசயங்கள் குறித்தும், அவர்கள் வெகாஸின் நீதிக்காவலர்களாக இருந்தாலும் அதனை ஒரு கவசமாக கொண்டு அவர்கள் மேற்கொள்ளும் நிழலான நடவடிக்கைகளுடனான அவர்கள் தொடர்புகளையும் சிறுகச் சிறுக கதையில் கொணர ஆரம்பிக்கிறார் பொசெலி. இந்த உத்தி வழியாக கதையில் கொள்ளையர்கள் யார் எனும் மர்மம் நீங்கிவிட, மிகவும் தந்திரமான, நீதிக்காவலர்கள் எனும் பெயரின் துணையுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை வெற்றிகரமாக நிகழ்த்தும் ஒரு குழுவை டெக்ஸ் & கோ எதிர்கொள்ளப் போகிறது எனும் பரபரப்பை பொசெலி வாசகர்களிடம் எளிதாக கடத்தி விடுகிறார்.
தலைமைப் பண்பும், தந்திரமும், வாழ்வின் இன்பங்களில் நுண்ணிய சுவையும் கொண்ட  நீதிபதியான Hoodoo Brown. வளைந்து கொடுக்காத உறுதியான ஷெரீஃபான Mysterious Dave, இவர்களின் உதவியாளர்கள் என டெக்ஸ் குழுவினர் முகம் கொடுக்கப் போகும் எதிராளிகள் சிறப்பான ஒரு எதிர்நாயகக் கலவை எனலாம். ப்ரவுனும் சரி, டேவும் சரி அமெரிக்க வரலாற்றில் தம் தடம் விட்டு சென்ற நிஜப் பாத்திரங்கள் ஆவார்கள். பொசெலி அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை தன் கதையுருவாக்கத்தில் தகுந்த விதத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இவ்வாறாக எதிர்நாயகர்கள் குறித்த தகவல்களை வாசகர்கள் உள்வாங்கிய நிலையில்தான் புலம்பல் மகாராஜான், வெள்ளிச்சிகையான் கிட் கார்சனின் அறிமுகம் கதையில் நிகழும். டெக்ஸின் அறிமுகத்திற்கு குறைவான அறிமுகமல்ல அது. நீதிக்காவலர்கள் எனும் போர்வையில் குற்ற ராஜாங்கம் நடத்தும் கொடியவர்களின் எல்லைக்குள் முதலில் காலடி எடுத்து வைப்பது கார்சனே, டெக்ஸ் அல்ல. அதற்கு தக்கவாறு அந்த தருணத்தில் சூட்டையும் ஏற்ற பொசெலி தவறவில்லை.
டெக்ஸ் சிக்ஸ்பேக்
அதேபோல கதையில் கார்சன் நிகழ்த்தும் அதிரடிகள் அபாரமானது. கார்சன் மேல் பொசெலிக்கு தனிப்பிரியம் இருக்க வேண்டும். கார்சனின் கடந்த காலம் போலவே இக்கதையிலும் கார்சனின் பாத்திரப்படைப்பானது டெக்ஸை விட சிறப்பான ஒன்றாக உணர்ந்து கொள்ளப்படக்கூடியதாக இருக்கிறது. அதுவும் கார்சன் தனியே நடத்தும் அந்த அதிரடி துப்பாக்கி மோதல் மிகச் சிறப்பாக இருக்கிறது. நான் முன்னமே எழுதியது போல மாஸ்டாண்ட்யூனோவின் சித்திரங்கள் சண்டைக்காட்சிகளிற்கு விறுவிறுப்பையும், உயிர்ப்பையும், பரபரப்பையும் சிறப்பாக வழங்குபவை. இக்கதையின் சண்டைக்காட்சிகளும் அதற்கு விதிவிலக்கானவை அல்ல.
கதையின் இரண்டாம் பாகத்தில் டெக்ஸ் குழுவும் வெகாஸிற்குள் நுழைய, விசாரணைகளை ஆரம்பிக்க, எதிர்நாயகர்கள் தந்திரமாக தம் ஆட்டத்தை ஆரம்பிக்க என டெக்ஸ் ரசிகர்களிற்கு ஏமாற்றம் அளிக்காத விருந்து ஒன்று அங்கு தன்னை பந்தி விரிக்கிறது. நிஜ வரலாற்றில் ப்ரவுன், டேவ் இருவரினதும் முடிவுகள் அவர்களிற்கு பெருமை தரக்கூடியவையாக இல்லாவிடிலும் கதாசிரியர் பொசெலி இங்கு அவர்கள் இருவரிற்கும் கவுரமான முடிவுகளை வழங்குகிறார். நிஜத்தில் வாழ்ந்திருந்த தன் எதிர் நாயகர்களிற்கு அவர் தன் கற்பனை முடிவு வழியாகவேனும் சிறிது ஆறுதலை தர முயன்றிருக்கிறார்.
டெக்ஸ் லாஜிக் மட்டுமே பொருந்திப் போகும் கதையிது. எனவே வேறு தர்க்கங்களை இக்கதையில் நாம் பொருத்திப் பார்த்தல் முடியாது. அது கதையை ரசிக்கவும் வைக்காது. ஓவியர் மாஸ்டாண்ட்யூனோ டெக்ஸையும், கார்சனையும் இளமையாக வரைந்திருக்கும் விதம் கதைக்கு தனி இளமையை வழங்கிவிடுகிறது. இவ்வளவு இளமையுடன் வேறு கதைகளில் நான் டெக்ஸையும் கார்சனையும் தரிசித்தது கிடையாது எனலாம். வழமையாக தீர்க்கமான கோடுகளுடன் தெளிவான சித்திரங்களை வழங்கும் மாஸ்டாண்ட்யூனோவின் சித்திரங்களில் கிறுக்கல்தன்மையை வாசகர்கள் உணரலாம். ஆனால் அவரின் இந்தப் பாணியையும் நான் மிகவும் ரசித்தேன். அதிகம் ஏமாற்றாத டெக்ஸின் ஆக்சன் என்பதற்காகவும் தன் மகனான கிட்டுடன் போட்டி போட்டுக் கொண்டு அவர் காட்டும் சிக்ஸ் பேக்கிற்காகவும் தவறாது படிக்க வேண்டிய டெக்ஸ் சாகசங்களில் ஒன்று இது என்பேன்.

Thursday, May 9, 2013

மனோவசியன்

ஸ்காண்டிநேவிய குற்றப்புனைகள் தம் பிரதான இழையான குற்றம் அதன் மீதான விசாரணை நடவடிக்கைகள் என்பவற்றுடன் கூடவே கதை நடைபெறும் சமூகத்தின் மீதான அழுத்தமான பார்வைகளையும் முன் வைப்பவைகளாக இருப்பது அவற்றின் சிறப்பு தன்மை எனக் கூறப்படுகிறது. இது உண்மையானதுதான். Lars Kepler ஜோடி எழுதியிருக்கும் The Hypnotist கதை, சுவீடிய சமூகம் தொடர்பாக எனக்கு வழங்கியிருக்கும் பார்வையை இங்கு சிறிது பார்க்கலாம்!!

- சுவீடியர்களிற்கு பிடித்தமான பானம் சூடான காப்பி, எப்போதும் காப்பி அருந்த அவர்களிற்கு பிடித்திருக்கிறது. கொலை, உடலுறவு, சச்சரவு போன்றவற்றிற்கு பின்பாக எல்லாம் காப்பி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. சுவிடியர்களின் வாழ்க்கையில் காப்பி வகிக்கும் பங்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
- காலையுணவாக சாண்ட்விச் பெரும்பாலும் உண்ணப்படுகிறது சாண்ட்விச்சுடன் துணையாக காப்பி இணைந்து கொள்கிறது
- டிசம்பர் மாதத்தில் சுவீடனில் கடும் குளிரும், பனி வீழ்ச்சியும் இருக்கிறது
- ஆண்கள் திருமணத்தின் பின் வேறு பெண்களுடன் உடலுறவு கொள்பவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்
- பெண்களும் ஆண்கள் இழைத்த துரோகத்திற்காக கணவர்களை தவிர்த்த வேறு ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள்
- திருமணமான ஆண் என்பது தெரிந்தாலும் சில இளம் பெண்கள் தம் காதலில் வெற்றி கொள்ள சகல வழிகளையும் கையாளுவார்கள்.... உடலுறவு உட்பட
- சுவீடிய சமுகத்தில் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மிகுந்திருக்கிறது
- பெண்களை ஆண்கள் தமக்கு சரிநிகராக கருதுவதிலும் சிக்கல் இருக்கிறது
- உளநல சிக்கல் கொண்டவர்கள் ஆற்றும் செயல்கள் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது
- சிறுவர் துஷ்பிரயோகம் கணிசமான அளவில் காணப்படுகிறது, இது சந்ததி சந்ததியாக தொடரும் ஒரு விடயம் போல் உணர்த்தப்படுகிறது
- சுவீடிய இளம் தலைமுறை தறிகெட்ட ஒன்றாக உருவாகி வருகிறது, அது எதையும், எவரையும் மதிப்பது இல்லை
- நாஸி தத்துவத்தை மதிப்பவர்கள் இன்னம் இருக்கிறார்கள்
- சுவீடிய பொதுநலத்துறைகளிலும் மூடிமறைப்பு சர்ச்சைகள் உண்டு
- சுவீடிய காவல்துறை செயற்திறன் நலிந்த ஒரு துறையாகும் 
லார்ஸ் கெப்லர் மற்றும் ஸ்காண்டிநேவிய குற்றப்புனை நாவலாசியர்களின் படைப்புக்களின் வாசிப்பின் முடிவில் சுவீடிய சமூகமும் பிற சமூகங்களைப் போலவே நலமற்ற ஒரு சமூகம் என்பதை ஒருவர் தெளிவாக உணரலாம். இவ்வகையான ஸ்காண்டினேவிய குற்றப்புனைகள் தவறாது தம்மில் கொண்டிருக்கும்  ஒரு பிம்ப சமூகத்தின் பார்வை என்பது வாசகனிற்கு என்ன புது அனுபவத்தை படைப்பின் வாசிப்பில் வழங்கிட முடியும் என்பதை நான் இங்கு ஒரு கேள்வியாக்குகிறேன். மேற்கூறிய அல்லது நான் தவறவிட்ட,சமூகம் மீதான பார்வைக் கூறுகள் இதே வடிவிலோ அல்லது பிற வடிவிலோ உலகெங்கும் உள்ள சமூகங்களில் பரவியே இருக்கிறது. ஸ்காண்டிநேவியாவிலும் இவை உள்ளன என்பதை ஒரு அல்லது இரு படைப்புக்கள் வழி சொல்லி ஓய்ந்தால் போதாது என்று ஸ்காண்டிநேவியப் குற்றப்புனைகள் பெரும்பாலும் தம் சமூகத்தின் அவலங்களை தாம் சொல்ல வந்த குற்ற புலனாய்வைவிட பிடிவாதமாக அதிகம் பேசுகின்றன,  அந்த சமூக அவலங்கள் அவற்றின் பொது தன்மையாக உருப்பெறுகின்றன, தொடர் வாசிப்பின்போது சலிப்பின் காரணிகளாக மாற்றம் கொள்கின்றன, ஸ்காண்டிநேவிய குற்றப்புனைகள் இன்று கண்டிருக்ககூடிய தற்காலிகமான அசாத்திய பிரபலத்தை அர்த்தமற்றது என உணரச் செய்கின்றன. 
த ஹிப்னோடிஸ்ட் கதையின் சாரத்தை, மனோவசியம் மூலம் தன் வாழ்க்கையில் பலவற்றை இழந்த ஒருவனிற்கு பத்து வருடங்களிற்கு பின்பாக அதே மனோவசியம்  மீண்டும் வெல்ல ஒரு வாய்ப்பை வழங்குகிறது என நான் சொல்வேன். இதை 600 பக்கங்களிற்கு மேல் எடுத்து சொல்வதற்கு துணையாக ஒரு குற்றம். ஆனால் இங்கு குற்றம் அது சார்ந்த விசாரணை போன்றவற்றை தனியே பிரித்து எடுத்தால் அவற்றை ஒரு 150 பக்கத்திற்குள் அடக்கி விடலாம். எ க்ரைம் நாவல் வகையறா நாவல் போல அது இருக்கும். ஆனால் லார்ஸ் கெப்லர் ஜோடி ஸ்காண்டிநேவிய குற்றப்புனை பராம்பரியத்தை பேணுவதற்காக வெகு சிரமப்பட்டு 450 பக்கங்களை வியர்வை சிந்தி எழுதியிருக்கிறார்கள். 
கதையின் பிரதான காவல் துறை அதிகாரி பாத்திரம் ஜூனா லினா. இவர் குற்ற விவகாரங்களை கையில் எடுத்தால் அவற்றினை தீர்க்காது ஓய மாட்டார். தேசிய குற்றப் புலனாய்வு பிரிவில் இவர் உள்ளுணர்வு தீர்த்து வைத்தது போல வேறு எதுவும் குற்ற விவகாரங்களை தீர்த்து வைத்தது இல்லை. இதை இங்கு நீங்கள் படிக்கும்போது ஒரு அதிரடியான அதிகாரியாக அவரை உருப்படுத்திக் கொண்டால் அது தவறு. ஜூனா லினா அதிராத ஒரு பாத்திரம், அவர் ஊகங்களும் சரி உள்ளுணர்வு வழி அவர் காணும் முடிவுகளும் சரி புல்லரிக்க வைக்கிறது. மன்னிக்கவும் ஜன்னலை மூடாது நாவலைப் படித்ததால் வந்த விளைவது. ஜூனா லினாவினால் அல்ல.
கிழிச்சீங்க !!
கதையின் முடிவில் தான் தொலைத்து விட்ட, தொலைத்து கொண்டிருக்கும் வாழ்க்கையை மீட்டெடுக்கும் நிலைக்கு வரும் ஹிப்னாட்டிஸ்டாக எரிக் மரியா பர்க். இவரின் வாழ்க்கையை சுற்றியே பெரிதும் கதை உலாவரும். இப்பாத்திரத்தின் மீது வாசகர்கள் பிடிப்பொன்றை உருவாக்கி கொள்ள வேண்டும் என்பதற்காக இவர் வாழ்க்கையின் மீது சோகரசம் ததும்புமாறு கதாசிரியர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இனிமையற்ற இல்லறம், வியாதி கொண்ட ஒரு மகன், பேர் கெட்டுப் போன ஒரு தொழில் என எரிக் வாழ்க்கை சோகமோ சோகம். எரிக் இவற்றை எல்லாம் வெல்ல காப்பி அருந்துகிறார். நிறைய மாத்திரைகளை போட்டுக் கொள்கிறார். மது அருந்துகிறார். மாத்திரைகளை போட்டுக் கொள்கிறார். இப்படி தொடர்ச்சியாக மாத்திரைகள் போடும் ஒரு பாத்திரம் குற்றப்புனைவில் எனக்கு இதுவே முதல் முறை. ஆனாலும் எரிக் தெளிவான நிலையிலேயே கதையில் நடமாடுகிறார்.
எரிக்கின் குடும்ப வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கையை மட்டும் சொன்னால் சலிப்பு ஏற்பட்டு இது ஒரு சமூகப்புனையாக ஆகிவிடும் அதில் சர்வதேச லெவலில் ரமணிசந்திரனுடன் போட்டி போட முடியாது என்பதை நன்றாக அறிந்திருந்ததால் கதையின் ஆரம்பத்தில் ஒரு கொலை, அதன் விசாரணைகள், அதனை தொடரும் ஆட்கடத்தல் என்பன வழியாக வந்து சேரும் எரிக் மரியா பெர்க் வாழ்வில் பத்து வருடங்களிற்கு முன்பாக நடந்த ஒரு சோகம், அதன் பின்பிருக்கும் மர்மம் போன்றவற்றையும் கதை தன்னில் கொண்டிருக்கிறது. பிரதான கொலைகளிற்கு காரணம் யார் என அறிந்த பின்னும், அந்தக் கொலையாளியின் உடல் நிலை இவ்வாறாக இருக்கிறது என்பது தெரிந்தபின்னும் வாசகன், லார்ஸ் கெப்லர் படைத்திருக்கும் அந்தக் கொலையாளி அவனுடைய அந்த உடல் நிலையுடன் ஆற்றும் செயல்களை நம்ப முடியும் எனில், இந்த நாவல் சுவீடனில் மட்டுமல்லாது சர்வதேசம் எங்கும் இதன் அட்டை பீற்றிக் கொள்வது போல விற்பனையில் கொடி கட்டிப் பறக்க முடியும் எனில், உலகெங்கும் தரமற்ற படைப்புக்களை வாசித்து புகழும் கலாச்சாரம் வேரூன்றி விருட்சமாகி நிற்கிறது என்பதை தவிர வேறு காரணங்கள் இருக்கவே வழியில்லை. இவ்வகையான படைப்புக்கள் விற்பனை உச்சத்தை தொடக் காரணம் மந்தைமேய்ச்சல் வாசிப்பு பழக்கமேயன்றி வேறல்ல.
இந்தக் கதையில் லார்ஸ் கெப்லர் ஜோடியால் ஆழமாக அலசப்பட்டது எது என ஒரு கணம் சிந்தித்தால் இந்த புத்தகத்தின் பக்கங்கள் இத்தனை வரவேண்டும் என்பதாகவே இருக்கும். மனோவசியமும் சரி, உளநலப்பிறழ்வுகளும் சரி, குற்றங்களும் சரி, பாத்திரப் படைப்பும் ஏன் கதை சொல்லும் முறையும் சரி சூவிடன் ஏரியொன்றின் மேற்பரப்பில் படிந்திருக்கும் பனிப்பாளத்தின் ஆழத்தை ஒத்த உறை நிலையிலேயே உள்ளன. லார்ஸ் கெப்லரின் எழுத்துக்கள் இவ்வளவு மோசமாக உள்ளதா அல்லது மொழிபெயர்ப்பாளர் இவ்வளவு மோசமாக மொழிபெயர்த்திருக்கிறாரா என்பதை இக்கதாசிரியர்களின் ஏனைய படைப்புக்களை படித்த நல்ல உள்ளங்கள் மட்டுமே அறியும். நான் அந்த சாகசத்தில் இறங்கப் போவது இல்லை.

Thursday, May 2, 2013

இரு காமிக்ஸ் கதைகள்

 தமிழாக்கம் செய்யப்பட்ட இரு காமிக்ஸ் கதைகள் தற்போது தரவிறக்கி படிப்பதற்கு வசதியாக இணையத்தில் கிடைக்கின்றன. விரும்புபவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலலாம்! நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம்.



பராகுடா
http://www.multiupload.nl/BI9AXXSX9G



லான்ஃபெஸ்ட்

Monday, April 29, 2013

கொலம்பஸிற்கு வந்த சோதனை !


கிறிஸ்டோபர் கொலம்பஸ் கடும் பிரயத்தனங்களோடு கடலோடி, வரலாற்றில் தனக்காக சேர்த்து வைத்திருந்த நல்ல அபிப்பிராயங்கள் எல்லாம் இன்று தொலைந்துபோய் விட்டன எனலாம். அமெரிக்காவை அவர் கண்டுபிடிக்கவில்லை, அமெரிக்காவில் முதல் காலடி வைத்த ஐரோப்பியர் அவரில்லை, அவர் பயணங்கள் இன அழிவிற்கும், அமெரிக்க நிலத்தின் வளங்கள் பிறதிசைகள் நோக்கி பயணிக்கவும் காரணமாக இருந்தன என அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பலவாறாக உள்ளன. அமெரிக்காவை முதல் முதலாக  வரைபடத்தில் பதிந்தவர் எனும் பெருமையாவது அவரிற்கு கிடைக்குமா எனில் 16ம் நூற்றாண்டில் காணாமல் போன அவரின் வரைபடம் இன்னம் யார் கைகளிற்கும் கிடைக்கவில்லை. ஆக கடலோடிகள் வரலாற்றில் மிக முக்கியமான ஒருவராக கருதப்படும் கொலம்பஸ் இழந்து கொண்டிருக்கும் பெயரைக் காப்பாற்ற யாரும் இல்லையா என கதறி ஒலித்துக் கொண்டிருந்த குரல் ஸ்டீவ் பெரியின் காதுகளில் விழுந்திருக்க வேண்டும்.

ஸ்டீவ் பெரி வரலாற்று மர்மக்கதைகள் எழுதுபவர். இதுவரை 10க்கு மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய The Columbus Affair சனி பகவான் அருளால் என் பார்வையில் பட்டது. கொலம்பஸ், நாஸ்ட்ராடமுஸ், டாவின்ஸி, மிக்கேல் ஏஞ்சலோ எனும் பெயர்களை கண்டவுடனேயே கவிழ்ந்துவிடும் எனக்கு இந்நாவலை படித்தேயாக வேண்டும் எனும் ஆசை வந்ததில் என்ன தவறு இருக்க முடியும். மேலும் என்னைப்போன்ற ஏமாளிகள் இல்லையெனில் ஸ்டீவ் பெரியின் நாவல்களை படிப்பது யார்?  உண்மையில் ஏமாளிகளை தவிர்த்து ஸ்டீவ் பெரியின் நாவல்களை தொடர்ந்தும் படிப்பவர்கள் அவர் ஜீவிதம் நடாத்த வேண்டும் எனும் நல்லவுள்ளம் கொண்ட உயர்ந்தவர்கள் எனவே நான் எண்ணுகிறேன். அவர்கள் மட்டும் சற்று கல்மனம் கொண்டவர்களாகவும் சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பதை இன்னம் மறக்காமலும் இருப்பவர்களாக இருந்தால் ஸ்டீவ் பெரி இன்று கொலம்பஸ் கண்டுபிடித்ததாக பீலா விட்டுக் கொண்ட நிலத்தில் புல்லு செதுக்கி கொண்டிருப்பார்.

கொலம்பஸ் செய்த பயணத்திற்கு காரணம் வணிகம் அல்ல எனவும் அதன் பின்பாக ஒரு இனம் அழியாது இருப்பது  தங்கியிருக்கிறது எனவும் தன் கற்பனையால் கோலம் போடுகிறார் ஸ்டீவ் பெரி. கொலம்பஸ் உண்மையில் யார் என்பதையும் அவர் இனவடையாளம் என்ன என்பதையும் மிகவும் சிரமப்பட்டு சொல்ல விழைகிறார் அவர். இதற்கு சான்றாக சில வரலாற்று தகவல்கள் கூடவே தன் அபாரமான வறட்டுக் கற்பனையால் படைத்த தகவல்கள். இவ்வாறு கொலம்பஸ் செய்த அப்பயணத்தின் காரணம் என்ன என்பதைக் கண்டறிய இன்றைய நாளில் ஒரு முக்கிய ஸ்தலத்தை தேடி தேடலில் இறங்கும் ஒரு கொடியவன். அவனை எதிர்க்கும் ஒரு அல்லது சில மனிதர்கள்.

கொலம்பஸ் குறித்த வரலாற்று தகவல்கள் இல்லை எனில் இந்நாவல் சுண்டல் சுற்றக்கூட உதவிடாது [ இருந்தாலும் உதவாது என்பதும் குறிப்பிடத்தக்கது]. ஆகவே கொலம்பஸ் குறித்த தகவல்களை அதிகம் தந்து சமாளித்து இருக்கிறார் ஸ்டீவ் பெரி. ஆனால் இந்நாவலில் வரும் கதாமாந்தர்கள் போன்ற அறிவிலிகளை நீங்கள் எங்கும் சந்திக்கப் போவது இல்லை. நம்ப இயலவில்லையா? நாவலை ஒரு முறை படித்துப் பாருங்கள். ஒரு முன்னாள் பிரபல பத்திரிகையாளன், யூத செல்வந்தன், இஸ்ரேலிய தூதரக இயக்குனர், அமெரிக்க உளவுத்துறை அதிகாரி, ஜமைக்கா தாதா என ஒருவரிற்கு ஒருவர் யார் சிறந்த அறிவிலி என்பதற்கு  கதையில் பெரும்போட்டியே நடக்கிறது. ஆனால் இப்போட்டியில் எளிதாக பரிசை வெல்வது பத்திரிகையாளன் மகளான ஆல். இப்படி ஒரு அறிவிலியை இக்கதையில் வரும் பாத்திரங்கள்கூட கண்டிப்பாக எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இவ்வகையான கதைகள் பல நாடுகளில் கதைக் களத்தை கொண்டிருக்க வேண்டும் எனும் வரைவிலக்கணப்படி அமெரிக்கா, ஆஸ்திரியா, ஜமைக்கா போன்ற நாடுகளில் இக்கதை சம்பவங்கள் நிகழ்கிறது.  உல்லாச வழிகாட்டி தகவல்களை பார்த்து பிரதி செய்து எழுதியதைப் போல் தகவல்களை அள்ளி வீசுகிறார் ஸ்டீவ் பெரி. ஆஸ்திரியா, ஜமைக்கா, மற்றும் வார இறுதியில் க்யுபா செல்பவர்கள் தங்கள் வழிகாட்டி ஏடாக இந்நாவலை பயன்படுத்தலாம். தகவல்கள் சரியாக இல்லை எனில் ஸ்டீவ் பெரிக்கு சரியான தகவல்களை நீங்கள் அனுப்பி வைத்தும் உதவலாம்.

அவன் கைகள் நடுங்கின.
அவன் துப்பாக்கியை நெற்றியில் வைத்தான்.
துப்பாக்கியின் முனை அவன் நெற்றியை அழுத்தியது.
அவன் விரல்கள் விசையை அமுக்கின.
வீட்டின் கதவு தட்டப்பட்டது.

இதுதான் ஸ்டீவ் பெரியின் அட்டகாசமான கதை சொல்லும் பாணி. அது மட்டுமல்லாது சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லும் உத்தி வேறு. வார்த்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பெரிக்கு இதைவிட வேறுவழி இன்னம் வசப்படவில்லை என்றே எண்ணுகிறேன்.

அவன் துப்பாக்கியை நெற்றியில் வைத்தான்.
அவன் விரல்கள் துப்பாக்கி விசையை அழுத்தின.
துப்பாக்கி வெடித்தது.

இது நான் எழுதியது. வெடித்த துப்பாக்கியின் முனையில் இருக்கும் நெற்றி ஸ்டீவ் பெரியினுடையதாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் தெரியுமா. ஸ்டீவ் பெரியின் எழுத்துக்களிற்கு ஒத்த சொல், மொக்கை!

Friday, April 19, 2013

நிற்றல்- சரிதல்

1936களில் சீனாவின் தெற்குபகுதியில் அமைந்திருக்கும் Foshan எனுமிடத்தில் ஆரம்பமாகிறது இயக்குனர் Wong Kar-wai ன் திரைப்படமான The Grand Master. கொட்டும் மழையில் தன்னுடன் பொருத வந்தவர்களை எதிர்ப்பவராகவும் திரைப்படத்தின் கதையை இறுதிவரை கூறிச்செல்பவராகவும் அறிமுகமாகிறார் Wing Chun எனும் தற்காப்பு கலைப் பாணியின் கலைஞரான Ip Man. ஆனால் திரைப்படம் இப் மேனை கதை சொல்லியாக கொண்டாலும் அவரை பிரதானமான ஒருவராக அது முன்னிறுத்த விழையவில்லை. கதையின் நாயகன் எனும் மயக்கத்தை தரும் விதமாக இப் மேன் பாத்திரத்தின் ஆதிக்கம் திரையிலிருந்தாலும  கதையானது குங்ஃபூவின் இன்னம் சில ஆசான்களையும் தன்னகத்தே எடுத்துக் கொண்டிருக்கிறது. ஓடிச் செல்லும் காலத்துடன், இப்மேனும் ஏனைய ஆசான்களும், அவர்களின் ஒப்பற்ற கலையான குங்ஃபூவும் எவ்வாறான முடிவுகளை நோக்கி நகர்ந்தன என்பதே திரைப்படத்தின் பிராதான இழையாக என்னால் உணரப்பட முடிகிறது.

ஃபோசானில் மிகுந்த வசதிபடைத்தவராக வாழ்ந்திருந்த இப்மேனின் வாழ்க்கை ஜப்பானிய ஆக்கிரமிப்பின் பின்பாக எவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டது. ஹாங்ஹாங்கிற்கு வந்து சேரும் இப்மேன் அங்கு எப்படியான ஒருவராக மாற்றம் கொள்கிறார் எனும் இருபுள்ளிகளிற்கு இடையில், மா சான், கொங் எர், ரேஸர் எனும் மூன்று பேராசான்களின் குங்ஃபூ பாணிகளையும், அவற்றுடன்  பொருதிக் கொள்ளும் அவர்களின் வாழ்க்கையையும் திரைப்படம் விபரிக்கிறது. கூடவே குங்ஃபூ என்பது  நாம் வழமையாக பார்ப்பதுபோல மலிவான சர்க்கஸோ அல்லது ஸ்டண்ட் வித்தையோ அல்லது பணத்திற்காக ஆடப்படும் கேளிக்கை கூத்தோ அல்ல என்பதையும் அது மிக ஆழமாக உணரச் செய்கிறது.

ஒரு குரு தான் ஓய்வு பெறும் நிலையில் தனக்கு பின் ஒருவனை நியமிப்பது வழக்கம். குங்ஃபூ எனும் கலை பல பள்ளிகளையும், பாணிகளையும், ஆசான்களையும் கொண்ட ஒரு பெருங்கலையாகும். இவற்றை ஒரு குடையின்கீழ் கொணர்ந்து சீன தற்காப்பு கலைகளின் பெருந்தலைவராக இருக்கும் பாவோசான், சீனாவின் மேற்குப் பகுதியில் தன் சீடனான மா சானை தனக்கு பின் தலைமைப் பதவிக்கு பொருத்தமானவனாக தேர்வு செய்கிறார். தெற்கு பகுதியின் தலைமைக்காக அவர் தன்னுடன் ஒருவர் பொருதி வெல்ல வேண்டும் என அறிவிக்கிறார். தெற்கு பகுதி குங்ஃபூ ஆசான்கள் அவர்களின் பிரதிநிதியாக இப்மேனை தேர்ந்தெடுக்கிறார்கள். இப்மேன் பேராசான் பாவோசான் அவர்களுடன் தன் நடனத்தை நிகழ்த்துகிறான்.

குங்ஃபூ கரங்களை ஆயுதமாக்குகிறது, சித்தாந்தங்களை தியானமாக்குகிறது, வன்முறை என்பதை வக்கிரம் ஆக்குகிறது, தற்காப்பு கலையினை ஒரு நடனம் போலவே அழகான ஒன்றாக்குகிறது. திரைப்படம் முழுதும் சண்டைக் காட்சிகளிற்கு பதில் அழகான நடனங்களை உருவாக்கி தந்திருக்கிறார் கலைஞர் Yuen Woo-ping. அவர் உருவாக்கி தந்திருக்கும் அந்த நடனக் காட்சிகள் விசிலடிக்க வைக்கவில்லை மாறாக அந்நடனங்களினுள் ஒருவனை தன்னை இழக்க செய்கின்றன, அந்த அசைவுகளின் நளினங்களிலும், அந்த நளினங்கள் பிறப்பிக்கும் உணர்வுகளிலும் கிடைத்திடும் திரையனுபவம் அலாதியானது. இதுவரை திரைகளில் பார்த்த குங்ஃபூ மோதல் காட்சிகளின் வக்கிரம் உறைக்கும் தருணமது. கலையென்பது  கலைஞர்களால் நிகழ்த்தப்படும்போது அதுவும் அதற்கென தம்மை அர்பணித்த கலைஞர்களால் நிகழ்த்தப்படும்போதும் அங்கு உருப்பெறும் ஆத்ம நடனத்தின் ஒரு சிறு சாட்சியாக இப்படத்தின் மோதல் காட்சிகள் உளப்புலன்களிற்கு விருந்தாகின்றன. இயக்குனர் வொங் கார் வாய் அவர்களின் நெறியாள்கையில் அக்காட்சிகள் திரையில் பெறும் பிரசன்னம் உன்னதமான ஒன்றாக இருக்கிறது.

 பேராசான் பாவோசானுடனான இப்மேனின் நடனத்தின் பின்பாக கதை பேராசனின் மகள் கொங் எர் இப்மேனிற்கு விடுக்கும் சவால், அதன் பின்பாக இப்மேனிற்கும் கொங் எரிற்குமிடையில் வாழ்ந்திருக்ககூடிய ஒரு மதிப்புணர்வு மற்றும் சொல்லப்படாத ஒரு காதல், மா சான் இழைக்கும் துரோகம், அந்த துரோகத்திற்கான வஞ்சத்தையும், தன் குடும்பத்தின் கவுரவத்தையும் மீட்க தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் கொங் எர், ஜப்பானிய ஆக்கிரமிப்பு, ரேஸர் எனும் ஆசானின் கதை, உள்நாட்டு யுத்தம், ஹாங்ஹாங்கில் மூன்று கதாமாந்தர்களின் நிலை என்பதாக கதை பயணிக்கிறது. ஆனால் இதில் என்னைக் கவர்ந்தது கொங் எர் பாத்திரமே. அந்த பெண் கலைஞியின் கதை மட்டுமே இப்படத்தில் முழுமை கொண்டது என்பேன் நான். இப்மேனும் சரி ஏனைய பாத்திரங்களும் சரி குங்ஃபூ எனும் தற்காப்பு கலையின் நகர்வை காலத்தின் ஒரு புள்ளிக்கு எடுத்து வர உதவும் காவிகளாகவே இப்படைப்பில் எனக்கு தெரிகிறார்கள். எனவேதான் அவர்களின் கதைகள் முற்றுப் பெறா ஒரு நிலையை அடைகின்றன. திரைப்படமும் முழுமை காணா ஒரு படைப்பின் அழகு போன்ற அலைகளை மனதிற்குள் நீர்வரிபோல எழுதுகிறது. அந்த அலைவரிகளின் மேல் தம் அற்புதமான திறமையால் அழகு செய்கிறார்கள் நடிகர்கள்.

 வொங் கார் வாய் மிகவும் அழகுணர்ச்சி கொண்ட இயக்குனர். அவர் படைப்பு அழகால் செதுக்கப்பட்டிருக்கிறது. படைப்பின் இன்னொரு ஜீவ நாடி இசை, படைப்பின் உயிர்வண்ணமாக ஒலிப்பதிவு, ஆன்மாவின் சிமிட்டலாக எடிட்டிங். இவ்வாறாக முழுமை தரா ஒரு படைப்பாக இருந்தாலும் அதன் படைப்பில் இவை யாவும் கலந்தே அதை சிறப்பான ஒரு திரையனுபவமாக்குகின்றன. வசனங்களில் கலந்திருக்கும் சித்தாத்தங்கள்  அவற்றை சாதாரண திரைவசனங்களாக கடந்து செல்ல தடைவிதிக்கின்றன. திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளில் இப்மேனிற்கு ஒரு சிறுவன் சீடனாக வந்து சேருவான். அவன் யார் என்பதை உங்களிற்கு சொல்ல தேவையில்லை. திரைப்படமும் சொல்லாது. வொங் கார் வாய் இம்முறை தந்திருப்பது குங்ஃபூ எனும் தற்காப்பு கலைக்குரிய ஒரு கவுரவத்தை. மிக மிக அழகாக. அது முழுமையாக இல்லை என்றாலும் கூட. நிற்றலிலிம்- சரிதலிலும் இருக்கும் அழகின் உணரனுபவமே அவரின் இப்படைப்பு.




Wednesday, April 17, 2013

ஜோன்ஸ் வடை !

முன்பெல்லாம் வீட்டில் எலித்தொல்லை அதிகமாகும்போது எலிப்பொறி எனும் அழிவாயுதத்தின் உதவியை நாடிச் செல்வதென்பது வழக்கமான ஒன்றாக இருந்தது. எலிப்பாசனங்கள் எனும் ரசாயான ஆயுதம் அறிமுகமாகியது எலிப்பொறியின் செயற்திறனில் எலியினவழிப்பாளர்களின் நம்பிக்கை குறைவடைய ஆரம்பித்த வேளையிலேதான். மேலும் எலிப்பொறியில் எலியைக் கவர அதற்கு பிடித்த ஏதாவது ஒன்றை லாகவமாக பொருத்தி பொறியை இழுத்துவிட வேண்டும். தேங்காய் துண்டு, வடையின் ஒரு பகுதி போன்றன நம்மூரில் எலிகளிற்கு பிடித்த விடயங்களில் முன்னணியில் இருந்தன. மேற்குலகில் இவற்றிற்கு பதிலாக பாற்கட்டி. இருப்பினும் எலிகளிற்கு புத்தகங்களையும் பிடிக்கும். ஆனால் அவற்றை யாரும் பொறிகளில் வைத்ததாக நான் அறிந்தது இல்லை. இப்படி பொறிகள் வைத்தாலும் அகப்படாது தண்ணி காட்டும் எலிகள் உண்டு. எல்லாப் பொறிகளையும், ரசாயனங்களையும், பூனை போன்ற உயிராயுதங்களையும் தாண்டி வென்று இயற்கை மரணத்தை ஹெமிங்வே எழுதிய நூலொன்றை சுவைத்தபடியே இறந்துபோன எலிகள் வரலாற்றில் உண்டு. மக்லேன், ஹெமிங்வேயை படித்ததாக வான்ஹாம் எழுதியது இல்லை ஆனால் எல்லா வகையான பொறிகளையும் சமார்த்தியமாக கடந்து வெல்லும் ஒரு எலியாக நாம் மக்லேன் மாமா அவர்களை உருவகப்படுத்தலாம்.

எனவே தங்கள் கைகளில் சிக்காது எஸ்கேப்பாகி இயற்கையில் கலந்துபோன மக் மாமாவை அவர் ஒளிந்திருக்கும் இடத்திலிருந்து வெளிக்கொணர வேண்டுமாயின் அவரிற்கு பிடித்தமான ஒரு பொருளை பொறி ஒன்றில் வைத்தால் போதும் என்பதுதான் XIII - L'Appat  கதையில் USAFE அமைப்பு பிரயோகிக்கும் ராஜதந்திரம். மக்லேன் மாமாவிற்கு பிடித்த பொருள் என்னவென்று தேடியதில் அவர்களிற்கு விடையாக கறுப்பு வைரம் ஜோன்சையும், பொறியை வைக்குமிடம் எது என்பதற்கு பதிலாக ஆப்கானிஸ்தானையும் கதாசிரியர் ஈவ்ஸ் செண்ட் வழங்கியுதவியிருக்கிறார்.

தனக்கு மிகவும் பிடித்தமான காலனல் ஜேம்ஸ், கொடிய தலீபான்கள் கையில் அதுவும் ஒற்றைக்கண்ணுடைய ஒருவரை தலீபான் அணி தலைவராக கொண்ட ஒரு குழுவின் பிடியில் மாட்டிக் கொள்ளும்போது, தலீபான்களும் வீடீயோ கமெராக்கள் வழியாக பயணக் கைதிகள் சிலரின் தலைகள் உருளுவதை வெளியுலகிற்கு அனுப்பி வைக்கும்போது, தன் உயிரிற்கு நெருக்கமான ஜோன்சை மீட்க ஓடிச் செல்கிறார் மக்லேன். மக்லேனை இந்த திட்டத்திற்குள் இழுக்கும் கயிறாக ஜெனரல் காரிங்டன். கதையின் இன்னொரு தளத்தில் Betty மக்லேன் கேட்டுக் கொண்ட சில ரகசியங்களையும், தகவல்களையும் கண்டறிய பயணிக்கிறாள். அவளை அமெரிக்க காவல்துறை, FBI, மற்றும் ஒரு மாஃபியா குழு துரத்துகிறது.

பிரான்சிலிருந்து எந்த சிக்கலுமில்லாது பாகிஸ்தான்
சென்றிறங்கி அங்கிருந்து உள்ளூர் நபர்களின் உதவியுடன் பனிசிஸ்தான் எனும் தலீபான்களின் மலைகோட்டை குகைக்குள் - இங்கு ஆப்கானிஸ்தானும் சரி பாக்கிஸ்தானும் சரி ஏன் அமெரிக்க படைகளும் சரி நெருங்கவே முடியாதாம் - காரிங்டனுடன் நுழைந்து அது USAFE ன் சதி என்பதை மக் மாமாவும், காரிங்டனும் அறிந்து கொள்ளும்வரை கதை என்பது நகைப்பிற்கிடமாகவே இருக்கிறது.  வழமைபோலவே தர்க்கம் எல்லாம் பார்க்காது கதையை படித்திட வேண்டியது ஒன்றுதான் வழி. அதேபோல தனியாளாக Betty நிகழ்த்தும் சாகசங்களை விழுங்கி கொள்ள திமிங்கலமாக இருந்தால் மட்டுமே முடியும். இவ்வளவு வருடமாக இக்கதையை படித்துக் கொண்டு வரும் ஒரு வாசகன் கதையில் இன்னம் கொஞ்சம் நம்பகத்தன்மையுள்ள களத்தையும், நிகழ்வுகளையும், சம்பவங்களையும் சிறிது புத்திசாலித்தனத்தையும் எதிர்பார்த்தால் அது இங்கு கிடைக்காது வேறிடம் பாருங்கள் என அடித்துக் கூறுகிறார் கதாசிரியர் ஈவ் சென்ட்.

ஆப்கானிஸ்தானில் அருமையான ப்ரியாணி ஒன்றை மக் மாமாவிற்கு அறிமுகப்படுத்தும் காரிங்டன், ஜோன்ஸ் தப்பிக்க வசதியாக பாரசூட்டை அவர் தப்பிச் செல்லும் வழியில் வைத்த தலீபான்கள், என் தண்ணீர் பாட்டிலிற்குள் இருப்பது நைட்ரோ கிளிசரின் என மிரட்டி தலீபான்களை நம்ப வைக்கும் காரிங்டன்-- இந்த தலிபான்களைத்தான் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் மற்றும் அமெரிக்க படையினரால் நெருங்கவே முடியவில்லை!!-- தன்னை பலர் பின் தொடரக்கூடும் என்பது குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாது மதுவை சுவைத்தபடியே உள்ளாடைகளுடன் ரிலாக்ஸாக ஸாக்காரியாஸ் காத்தவேயின் டைரியை படிக்கும் Betty, இப்படியாக செமையான காமெடிகள் இந்த ஆல்பத்தில் உண்டு.  மேலும் மக்லேன் முக்கியமான ஒரு பொருளை மறைத்து வைத்த டோரதி எனும் பூனை மேஃப்ளவர் எனும் அந்தக் கப்பலின் மாதிரியாக உருவாக்கப்பட்ட கப்பலில் Betty க்காக காத்திருப்பது.... என்ன ஒரு குறியீடு. பின்னிட்டாங்க.

ஒரே ஒரு ஆறுதல் ஜிகுனோவின் சித்திரங்கள். பனிசிஸ்தான் மலைப்பகுதிகளில் அவர் வரைந்து வழங்கியிருக்கும் காட்சிகள் அருமையாக இருக்கின்றன. அவர் சித்திரங்கள் நவீன நுட்பங்களுடன் மெருகேறியிருக்கிறது என்பது தெளிவு.

ஆப்கானிஸ்தானிலேயே மக் மாமாவிற்கு பொறி வைத்த USAFE அவனை தன் பக்கம் இழுத்திட எடுத்திடப் போகும் நடவடிக்கைகளுடனும், மக்லேன் கேட்டுக் கொண்ட தகவல்களை அறிய ரயிலில் பயணிக்கும் Betty யின் புதிர்கள் கோலமிட்ட முகத்துடன் விரையும் ரயிலின் முகத்துடனும் நிறைவு பெறும் இரண்டாம் சுற்றின் இரண்டாம் ஆல்பத்தினை வாசித்து முடிக்கையில் எம் முகத்தில் பூத்திருக்ககூடியது முட்டாள் களை மாத்திரமே !!

Friday, April 12, 2013

விடுமுறைக் கொலைஞன் !

மர்மக் கொலைஞன் ஒருவன் விடுமுறை தினங்களில்! கொத்தம் நகரில் கொலைகளை நிகழ்த்த ஆரம்பிக்கிறான். கொத்தம் நகர ஊடகங்கள் இவனை ஹாலிடே என அழைக்க ஆரம்பிக்கின்றன. கொத்தம் நகரின் முதன்மை மாஃபியா தலைவன் கார்மைன் பால்கனின் ஆதிக்கத்திலிருந்து நகரத்தை விடுவிக்க வேண்டும் என விரும்பும் பேட், விடுமுறைதின கொலைஞன் ஹாலிடே யார் என்பதையும் அறிய தன் விசாரணைகளை ஆரம்பிக்கிறார்….
கார்மைன் பால்கனின் சகோதரி கார்லா விட்டியின் மகன் ஜானி விட்டியின் திருமணத்தில் ஆரம்பமாகிறது Jeph Loeb ன் கதையான The Long Halloween. அங்கிருந்து நகரும் கதை முடிவை எட்ட பதின்மூன்று அத்தியாங்களை தனதாக்கி கொண்டிருக்கிறது. ஜெப் லீப்பின் கதை பேட்மேன் கொத்தம் நகரில் இயங்க ஆரம்பித்ததின் ஆரம்ப காலங்களில் கூறப்படுகிறது. மாஃபியா தலைவன் கார்மைன் பால்கனை எப்படியாவது சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வர வேண்டும் என பேட்மேன், ஹார்வி டென்ட், ஜிம் ஹோர்டான் கூட்டணி அமைத்துக் கொள்கிறார்கள். கேட் வுமனும் இதில் கார்மைனிற்கு எதிராக பேட்மேனிற்கு உதவ முன்வருகிறாள்.
கார்மைன் பால்கான் அசைக்க முடியாத குற்றத்தலைவனாக இருக்கிறான். அவன் இடத்திற்கு போட்டியாக மரோனி எனும் இன்னொரு தலைவன். இவர்களிற்கிடையில் இருக்கும் போட்டியும், நட்பும் சந்தர்ப்பங்களை பொறுத்து இடம் மாறிக் கொண்டே இருக்கும். கதையில் இந்த இடம் மாறலை லீப் சிறப்பாக பயன்படுத்தி இருப்பார். எதிரி நண்பனாவதும், நண்பன் குழிபறிப்பதும் என திருப்பங்களின் உருவாக்கத்திற்கு இந்த இரு மாஃபியா தலைவர்களிற்கும் இடையிலான உறவும் பயன்படுகிறது. அதே போல நீதியின் காவலர்களான பேட், ஹார்வி, ஹோர்டான் ஆகியோரிற்கு இடையிலான உறவும் கதையில் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கும். பேட் தான் நம்பிக்கை வைக்கும் இரு மனிதர்களாகவே ஹோர்டானையும், ஹார்வியைம் சித்தரிக்கிறார். இவர்களிற்கிடையே உள்ள நம்பிக்கையில் விரிசல் தன் ரேகைகளை பதிக்கும்போது அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட நம்பிக்கையின் உறுதி கொள்ளும் கோலங்களையும் கதாசிரியர் கதையில் வெளிக் கொணர தவறவில்லை.
ஹோர்டான், ஹார்வி இருவருமே தம் பணிக்காக தம் குடும்ப வாழ்க்கையை பெரிதும் இழப்பவர்களாக கதையில் காட்டப்பட்டு இருப்பார்கள். பேட்மேன் அல்லது ப்ரூஸ் வெய்ன் தனிமையிலும், கடந்தகால நினைவுகளிலும் மூழ்கி ஏங்குவதாக கதை சித்தரிக்கிறது. முன்னைய இருவரினதும் மனைவிகள் எவ்வளவு பொறுமை கொண்டவர்கள் என்பதை கதை பெரிதுபடுத்தாமல் அழுத்தமாக விதைக்கிறது. இல்லறத் துணைவர்களின் பணிச்சுமை அவர்களை ஓயாது அழுத்தும் இயந்திரமாக இயங்கி கொண்டிருக்க, வீடு திரும்பும் வேளைகளில் தம் குடும்ப கடமைகள் குறித்த குற்றவுணர்வு ஒரு கையாலாகா தீயாக அவர்களில் முகிழ, அதைக் கிள்ளி வீசி எறிந்து தம் துணைகளை பெரிதும் அணைத்துக் கொள்ளும் துணைவிகளாகவே அவர்கள் இருக்கிறார்கள். தம் துணைவர்கள் தம்முடன் வாழ வேண்டிய காலத்தை அவர்கள் பணி பறித்துக் கொள்கிறதே எனும் வேதனையை அவர்கள் முகங்களில் குடியேறி இருக்கும் அயர்ச்சியும், அவர்கள் உதிர்க்கும் அழுத்தம் கலந்த சொற்களும் தெளிவாக முன்னிறுத்துகிறது. ஏன் அவர்கள் இந்த கொத்தம் நகரை விட்டு சென்று விடக்கூடாது எனும் கேள்வியையும் அது கதையில் பிறப்பிகிறது. ஏன் எனும் கேள்விக்கு பதிலை பேட்மேன் வழியாகவே கதை அளிக்கிறது. அனைவரும் நீதிக்கு தரும் விலை என ஒன்று இருக்கிறது. இவர்கள் அனைவரும், பேட் உட்பட நீதிக்கும் சுதந்திரத்திற்கும் வழங்கும் விலை கொத்தம் நகரில் வாழ்ந்திருப்பதுதான்.
கதையின் பிரதான பாத்திரங்களிற்கும் அவர்களின் தாய், தந்தையர்களிற்கும் இடையிலான உறவையும் கதாசிரியர் விட்டு வைக்கவில்லை. அந்த உறவுகளே இன்று அப்பாத்திரங்களின் வாழ்நிலைக்கு காரணமாக அமைந்தது என்பதை வாசிப்பினூடு ஒருவர் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். பேட்மேனின் பெற்றோரின் மரணம் அவரை ஒரு நீதிக்காவலானக நிறுத்தியது எனும் அதே வேளையில் மரோனியின் தந்தையால் மரோனி வன்முறையினதும், அதிகார ஆதிக்கத்தினதும் உச்ச எல்லைகளை கையகப்படுத்த நோக்கி நகர்த்தப்படும் ஆடுகாயாகவே இருக்கிறான். தம் புத்திரர்களின் கொலைகளிற்கு பின்னாக கார்மைனும், கார்லாவும் எடுக்கும் அவதாரம் வன்முறையின் பாசக்கோலமே. இவ்வகையில் பேட்மேனும், ஹார்வியும் தமக்கென பெற்றோர் இல்லாத நிலையில் தம்முள் வாடும் நிலையை பக்கங்கள் சிறிதேனும் விபரித்தே செல்கின்றன. ஒவ்வொரு தனயனிற்காகவும் பெற்றோர் சிந்தும் கண்ணீரிலும் பெற்றோரிற்காக தனயர் சிந்தும் கண்ணீரிலும்தான் கல்லறை வளர் புற்களின் பசுமைநுனி பனித்துளிகள் உயிர்ப்பாக இருக்கின்றதா? சிந்த வைக்கப்படும் குருதியிலும், சிந்தும் குருதியிலும் பாசத்தின் வண்ணத்தை காண்பவர்கள் மனிதர்கள் இல்லையா? நீதியும், குற்றமும் மனிதர்கள்தானே.
tg1ஒவ்வொரு மாதமும் விடுமுறை தினமன்று கொலைகளை செய்யும் குற்றவாளி மிக புத்திசாலித்தனமாக தன் கொலைகளை ஆற்றுவான். குற்ற மனதானது நீதிக்கு விடும் அபாரமான சவாலாக இதை இங்கு எடுத்துக் கொள்ளலாம். புதினங்களை தவிர்த்து உலகில் எத்தனை கொலைகளின் உண்மையான ஆற்றுனர்களிற்கு நீதி வழி தீர்ப்பு வழங்கப்படுகிறது. நீதி ஒரு நகைச்சுவை நாடகம் என்பதை புரியாத மனங்கள் அல்லவே நாங்கள். புதினங்களிலாவது நீதியை உணரந்து ஆறுதல் கொள்ள வேண்டியதுதான். பிரான்சில் தற்போது மார்சைய், மற்றும் கோர்ஸ் எனும் இருபகுதிகளில் இடம்பெற்று வரும் தொடர் குற்ற உச்சங்களும் அதை தடுக்க முடியாது வேடிக்கை பார்த்துக் கொண்டு வேடிக்கை பொருளாகிப் போன பிரான்ஸ் நீதி, மற்றும் காவல் துறைகளும் இதற்கு மிக சிறப்பான ஒரு உதாரணம் ஆகும். நீதி வகுத்துள்ள வழிகளில் குற்றத்தை வெல்வது என்பதும் வேடிக்கையான ஒரு சவால் அல்லவா? ஆனால் இங்கு பேட்மேன் கூட்டணி நீதி வகுத்த வழிகளிலேயே பெரிதும் செயற்பட முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதற்கு தரும் விலை அதிகமானது. ஒரு மனிதன் இரு ஆளுமைகளாக பிளவுபட்டுப் போகும் பரிதாபமான முடிவை, பேட்மேன் கதையில் உறுதியாக தன் மனதின் வேதனையாக நிலை நிறுத்துவார்.
விடுமுறைதின கொலைஞனாகிய ஹாலிடே முதல் ஆற்றும் கொலை கார்மைனின் சகோதரி கார்லா விட்டியின் மகன் ஜானி விட்டியினுடையது. கொலை ஸ்தலத்தில் சில பொருட்களை விட்டு செல்வதன் மூலம் தான் ஒரு தொடர் கொலைஞன் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்வான் ஹாலிடே. கார்மைனிற்கு நெருக்கமானவர்களை ஹாலிடே கொல்வதன் வழி அவன் ஒரு வகையில் அந்த மாஃபியா தலைவனை பலவீனமாக்குகிறான். கார்மைனும் ஹாலிடே யார் என்பதை அறிய விளைகிறான். இங்கு குற்றங்கள் வழி குற்றத்திற்கு முடிவு காணும் செயற்பாட்டை வாசகர் உணரலாம். ஆனால் நீதியில் இதற்கு இடமில்லை எனும் வகையில் பேட்மேனும் அவர் சகாக்களும் சுழல்புதிரில் சிக்கி திணற வேண்டியே இருக்கிறது. பேட்மேன் சுழல்புதிரில் மட்டுமல்ல கேட்வுமன், பாய்சன் ஐவி ஆகிய பெண்களிடமும் மாட்டவே செய்கிறார். இருவருமே பேட்மேனை தம் கவர்ச்சிக்குள் இட்டு வர விரும்புவதை கதையில் காணலாம். இதுவே சில சமயங்களில் அவரின் மீட்சியாகவும் கதையில் செயற்படுகிறது.
tlh3கார்மைன் மட்டுமல்ல நீதியின் காவலர்களும் ஹாலிடே யார் என்பதை அறிய ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இங்கு பேட்மேன் ஆர்க்காம் காப்பகத்திலுள்ள காலண்டர் மேனிடம் சில தகவல்களை வேண்டுவார். ஆக குற்றத்தின் நகர்பாதையை குற்றமூளை வழியே குறுக்கு வழியால் சென்று கண்டடையவே பேட்மேன் உட்பட அனைவரும் விரும்புகிறார்கள். கார்மைன், ரிட்லரின் திறமையை இதற்காக பயன்படுத்திக் கொள்வான். ஆக குற்றம், நீதி என இரு எதிர்புள்ளிகளும் போட்டியிட்டு தேடும் ஒரு மர்மமாகவே ஹாலிடே கதையில் இருக்கிறான். குற்றமும், நீதியும் தேடி அறிய முடியா புதிராக அவன் கதையில் உருக்கொள்கிறான். இந்த இரு எதிர்புள்ளிகளினதும் எதிர்புள்ளியாக அவன் தன்னை நிறுத்திக் கொள்கிறான். அப்படியானால் நீதிக்கும், குற்றத்திற்கும் எதிரான அப்புள்ளிக்கு நீதியில் வழங்கப்படக்கூடிய பெயர் என்ன?! அவன் குறித்த கணிப்புக்கள் அடையாளங்கள் எல்லாம் ஒருவனைக் காட்டி நிற்பதற்கு பதிலாக பல சாத்தியங்களை முன்னிறுத்துகின்றன. இந்த சாத்தியங்கள் உருவாக்கும் சந்தேகங்கள் கதையின் புதிர்தன்மையை அதிகரிக்கின்றன. கதையின் நீட்சியை ஒரு கட்டத்தில் இழுவை என வாசகன் தீர்மானிக்கும் நேரத்தில் அவன் தீர்மானத்தை அவை விலக செய்கின்றன. வாசகனும் துப்பறிவாளனே என்பது குற்றப்புனைவுகளின் இன்னுமொரு பக்கம். வாசிப்பினூடு வாசகனும் குற்றவாளியை தேடுவான், நாயகர்களிற்கு முன்பாக அதை கண்டடைய முயற்சிப்பான், சில சமயங்களில் வெற்றியும் காண்பான். அது இந்தப் படைப்பிலும் நிகழும் ஆனால் அதற்கும் ஒரு பரிகாரத்தை ஜெப் லீப் வைத்திருக்கிறார். அதுவே இக்கதையை சுவாரஸ்யமான ஒன்றாக ஆக்குகிறது. குற்றவாளி இவர்தான் என யாவும் சுட்டிக் காட்டினாலும் வாசகன் மனதில் ஒரு முனையில் முளைத்து நிற்கும் ஒரு சந்தேகம்தான் இக்கதையை பேட்மேன் கதைகளில் தனித்து நிற்க வைக்க முயல்கிறது.
tlh 2தனித்து நிற்க வேண்டும் என்பதில் உச்ச ஆர்வம் கொண்ட ஜோக்கர், ஹாலிடே யார் என அறிவதற்காக ஆடும் ஆட்டம் ஜோக்கர் பாத்திரத்தினை இரு அத்தியாயங்களில் உறுதியாக நீரூபிக்க முயல்கிறது எனலாம். எந்த ஆணும் தன் கவர்ச்சியில் இருந்து தப்ப முடியாது என்பதை பாய்சன் ஐவியும் காட்டிச் செல்கிறாள். கேட் வுமன் செயல்களில் உள்ள மர்மம் கதையின் ஓட்டத்தில் தெளிவாக்கப்படவில்லை. கொத்தம் நகர காவல்துறையின் ஊழலிற்கு மனிதர்கள் தரும் விலையின் வலியும் கதையின் நெடுகே காட்டப்படுகிறது. இதுவே நீதியின் முகத்தையும் பதம் பார்க்கும் ஒரு காரணியாக இறுதியில் அமைந்து விடுகிறது. பேட்மேனின் பிரதான எதிர்நாயகர்களை சுவையான வகையில் கதையின் திருப்பங்களிற்காக ஜெப் லீப் பயன்படுத்தி இருப்பார். ஹார்வி டெண்டின் வாழ்க்கை மிகச் சிறப்பாக அவரால் சொல்லப்பட்டு இருக்கிறது எனலாம். கதையின் இறுதிப் பக்கம்வரை விசுவாசமாக வரும் ஒரு வாசகனே ஹார்வியின் வாழ்க்கையின் ஆழ்சோக நிழல்களின் வேதனையை உணர்ந்து கொள்ளமுடியும். நாணயங்களின் பக்கங்கள் தீர்மானிப்பதை முடிவாக எடுக்கும் ஒருவனின் வாழ்க்கையின் நாணயமான பக்கத்தின் அர்த்தம் எவ்விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தன்னுள்ளே இறக்கி கொள்ள முடியும்.
மனித உறவுகள், நீதி, குற்றம், தன்னிலை, தீர்ப்பு என்பவற்றை கொத்தம் நகர வாசிகளைக் கொண்டு அருமையாக களப்படுத்தி பார்வையாக முன்வைத்து இருக்கும் இக்கதையின் இரண்டாவது உயிர் இதன் சித்திரக் கலைஞர் Tim Sale. கதையின் இருள்மையை உயிர்க்க வைப்பவர் இவரே. அத்தியாயத்திற்கு அத்தியாயம் தன் திறமையை அட்டைப்படம் முதல், இறுதிப்பக்கம்வரை அவர் பல இடங்களில் நிரூபித்துக் கொண்டே இருப்பார். அவர் சித்திரங்களிற்காகவேனும் இதை நீங்கள் ஒருமுறை புரட்டிப் பார்த்திடலாம் . குற்றவாளி என நீங்கள் கருதும் ஒருவன் உங்கள் மனதில் விதைக்கும் சிந்திக்க வைக்கும் ஒரு கேள்வி உங்கள் கணிப்புக்களையும், முடிவுகளையும் மறுபடியும் விசாரணை செய்ய தூண்டும். ஹாலிடே யார் என்பதும் உங்கள் அகவிசாரணையிலேயே இருக்கிறது. பேட்மேன் படைப்புக்களில் நான் விரும்பும் ஆழத்தை இக்கதை எட்டாவிடிலும் இது பேட்மேன் ரசிகர்கள் தவிர்க்க கூடாத ஒரு படைப்பு என்பேன்.

Wednesday, April 10, 2013

அன்புள்ள வேற்றுக்கிரகவாசிகளே.....


எம் அறிவிலும் சிறந்த பெருமதிப்பிற்குரிய வேற்றுக்கிரகவாசிகளிற்கு....

எப்போது பார்த்தாலும் நீங்கள் வாழ்ந்திருந்த நிலமானது தன்னுயிரை நீத்த பின்பாக அண்டம் விட்டு அண்டம் பாயும் நீங்கள், வாழுயிரிகள் வாழ் நிலங்களின் வளங்களை உறிஞ்சி அவற்றையும் மரிக்க வைப்பதாக காண்படைப்புக்களில் அச்சுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் பூமியில் வாழ்ந்து வரும் முட்டாள்களாகிய நாங்களும் அவ்விடயத்தில் உங்களிற்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை அறிவுள்ள எவரும் உடனே உணர்ந்து கொள்ள முடியும். இயற்கை வளங்களை சகட்டு மேனிக்கு நுகர்வுட்குட்படுத்திய அறிவியல், தொழில் நுட்ப, தொழில் துறை, சனத்தொகை வளர்ச்சி காரணமாக ஏற்கனவே எம் நிலம் முக்கால்வாசி கற்பழிக்கப்பட்டு விட்டது எஞ்சியிருப்பது சொற்பமே, அதுவும் விரைவில் அழிக்கப்பட்டு விடும்.

மேலும் நீங்கள் நினைப்பது போல் எங்களை எதிர்க்க சிறப்பான ஆயுதம் எதையும் உங்களை பிரம்மா என சொல்லியாக வேண்டிய அவசியம் தவிர்த்து நீங்கள் உருவாக்க தேவை இல்லை. எங்களை நாங்களே அழித்துக் கொள்வோம். இன, நிற, மொழி, கலாச்சார ஆயுதங்கள் மட்டுமன்றி அணு ஆயுதங்களும் நம்மிடம் உள்ளன. இல்லையேல் இருக்கவே இருக்கின்றன அணு உலைகளும், பூகம்பங்களும், சுனாமிகளும். அவைகள் அடங்கி இருந்தாலும் வேடிக்கை வாரிசுகளின் எல்லை தகராற்றில் எங்காவது, எப்போதாவது ஒன்று சும்மாவேனும் வெடிக்காமலா போய்விடும்.

ஆக உங்களிற்கு ஏன் வீண் அலைச்சல், சிரமம். நீங்கள் செய்ய போகும் இந்த உட்டாலங்கடியைதான் எந்த கிராபிக்ஸும் இல்லாது நாமே செய்து கொண்டிருக்கிறோமே ! எந்தக் கிலேசமும் இல்லாமல் !

உங்கள் உள்ளூர் ஏஜெண்டான ஜோசப் கொஸின்ஸ்கி கிராபிக் நாவல்கள் எழுதுவார் போல. அதைத்தான் உங்களிற்கு அறிக்கையாக அனுப்பி வைத்திருக்க வேண்டும். அதை நம்பி நீங்கள் உங்கள் இயந்திர அறிவு சேனைகளுடன் களத்தில் குதித்து அசிங்கப்பட்டு போக வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உறிஞ்ச ஏதுமற்ற உடம்பில் கொசுவிற்கு என்ன வேலை. அதுவேதான் வரும் காலத்தில் உங்களிற்கும் மற்றும் இதே ஐடியாவில் கூடு கட்டிக் கொண்டிருக்கும் அனைத்து அறிவில் சிறந்த வே.கி.வாசிகளிற்கும்.

மேலும் இந்த ஏஜெண்டு நம்49 ஜாக் ஹீப்பர் போலவே ஒருவன் டாப் கன் எனும் படைப்பில் அதிவேக விமானத்தின் ஓட்டுனனாக எம்மை பழி வாங்கியிருக்கிறான். நம் 49 அச்சு அசல் அதே ஜாடை. என்ன இங்கு ட்ரான்களை ஓட்டுகிறான். அதுவும் ட்ரான்களை என்னவோ தானே ஓட்டுவது போல அவன் தரும் முக பாவங்கள் இருக்கிறதே அப்பப்பா. ஸ்டார் வார்ஸ் விண் ஓட துரத்தல்களை நான் பல தடவை பார்த்திருக்கிறேன். நீங்கள் நினைவூட்டியதற்கு அதனால்தான் நன்றி கூற முடியவில்லை. பெண் ஏஜெண்டுகள் எந்த கிரகத்தை சேர்ந்தவர்கள். இப்படி ஒரு திறமையா !

தயவு செய்து திரையரங்கு வாசலில் வைத்து ரசிகர்களின் நினைவுகளையும் ஒரு இரு மணி நேரத்திற்கு நீங்கள் அழித்து விடுவீர்களேயானால் டெட்டிற்கு நான் நன்றியுடையவனாக இருப்பேன்.

புண்ணியம் செய்யாத புவிவாசி.

Wednesday, April 3, 2013

அடிக்க முடியா மன்னன் !


வேங்கிக் கோட்டையின் கதவுகள் திறந்தே கிடந்தன! என மன்னன் மகள் நாவலின் இறுதிப்பகுதியின் ஒரு அத்தியாயத்தில் எழுதுகிறார் சாண்டில்யன். கங்கையை கொண்டபின் அரையன் ராஜராஜன் படைகளிற்கும் ராஜராஜேந்திரன் படைகளிற்கும் இடையில் தன் படையைக் காவு கொடுக்க விரும்பாத ஜெயசிம்ம சாளுக்கியன் மேலைச்சாளுக்கியத்திற்கு சோழர்படைக்கு எதிர்ப்பு ஏதும் காட்டாது சென்றுவிட்டதையே அவர் இப்படி எழுதுகிறார். ஆனால் இந்த எதிர்ப்பின்றிய பின்வாங்கலிற்கு காரணம் என்னவாக இருக்கக்கூடும் என்பதை கரிகாலன் எனும் கற்பனைப் பாத்திரம் வழியாக தன் நாவலில் தனக்கேயுரிய பாணியில் கூறுகிறார் சாண்டில்யன்.

சூடாமணி விகாரத்திலிருந்து தர்க்க மற்றும் பல சாஸ்திரங்களை கற்று வெளியேறும் கரிகாலன் தன் பிறப்பின் ரகசியம் குறித்து அறியும் ஆவல் கொண்டவனாக இருக்கிறான். அவனின் அந்த தேடலின் குறுக்கே வருகிறாள் வேங்கி நாட்டு மன்னன் மகள் நிரஞ்சனா தேவி. வேங்கி நாடோ சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன் ஆதிக்கத்தில். இதை தன் தந்திரத்தால் கரிகாலன் எப்படி முறியடிக்கிறான் என்பது கதையின் கற்பனை இழை. இது ராஜேந்திர சோழனின் பராக்கிரம விஸ்தரிப்பு எனும் வரலாற்று தகவலுடன் இணைந்து ஒரு வரலாற்று சாகச சித்திரமாகிறது சாண்டில்யனின் வரிகளில்.

கதையின் பெரும்பகுதி கரிகாலன் தன் தர்க்க வலிமையால் எவ்வாறாக வேங்கி நாட்டை ரத்தக் களரி அதிகமில்லாது ராஜராஜ நரேந்திரன் கைகளில் ஒப்படைக்கிறான் என்பதை பிரதான இழையாக கொண்டு ஓடுகிறது. அரையன் ராஜராஜன், பிரம்ம மராயன், வந்தியதேவன், ராஜராஜேந்திரன் எனும் முக்கியமான வரலாற்று பாத்திரங்களை தன் தர்க்க சாஸ்திர வலிமையால் கரிகாலன் வென்று செல்வதை இன்றைய வாசிப்பில் புன்னகையுடன் கடந்து செல்ல முடிகிறது. அதேபோல தர்க்கம் புகுந்து விளையாடும் நாவலில் நாம் தர்க்கம் பார்க்க ஆரம்பித்தோமானால் நாவல் நகராது ஆகவே கரிகாலன் மட்டும் நாவலில் தர்க்கம் பேசவிடுதலுடனும் தேடவிடுதலுடனும் நாம் நிற்பதுவே நலமாக இருக்கும்.

வரலாற்று நாவல் எனில் துறவிகள், ஓற்றர்கள் இல்லாமலா! இருக்கிறார்கள் கரிகாலன் பிறப்பு ரகசியம் அவனிற்கு தெரிந்துவிடக்கூடாது என அக்கறை கொண்ட பெளத்த துறவிகள் கூடவே கரிகாலனை எப்படியாவது பழிவாங்கிவிடுவது என அலையும் போலித்துறவி என துறவிகள் நாவலில் அங்கதசுவையை பதித்து செல்கிறார்கள்.

பிறப்பு ரகசியம் கதையின் இறுதிவரை சிறப்பாக கடத்தப்பட்டு இருக்கிறது. அது உடைபடும் வேளை ஒரே உணர்ச்சிகரம்தான். அன்றைய நாட்களில் குமுதம் இதழில் கதையை படித்த வாசகர்களின் மனக்கண்ணீரை இன்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. கதையில் வீரம், புத்திசாலித்தனம் போன்றவற்றை தாண்டி தியாகம் தனித்து நிற்கிறது. கரிகாலன் ஏன் கரிகாலன் குடும்பமே தியாகத்தின் வடிவாக சித்தரிக்கப்படுகிறது. வார வாசிப்பில் வாசக நெஞ்சங்களில் கரிகாலனை மறக்க செய்யாத பாத்திரமாக இது நிலைக்க செய்திருக்கலாம்.

காதல் இல்லாத சாண்டில்யனா! வேங்கி நாட்டு மன்னன் மகள் நிரஞ்சனா தேவி, அரையன் ராஜராஜன் மகள் செங்கமலச் செல்வி என இரு பருவ சிட்டுக்கள் சாண்டில்யனின் மகோன்னத வர்ணனைகளில் இன்றைய வாசிப்பிலும் இன்பம் ஏற்றுகிறார்கள். சாண்டில்யனின் கதையில் என்னால் ரசிக்க முடிந்தது அவரின் அடிக்க முடியாத அந்த வர்ணனைகளைத்தான். மனிதர் இரு பக்கத்தில் மார்புகளை வர்ணித்தாலும் களைப்பு அடையாத சிருங்கார வரி யோகி. சிருங்காரம் என்பது சாண்டில்யன் வரிகளில் அழகுறுகிறது அதுவே பலரின் வரிகளில் ஆபாசமாகிறது தேன் குடிக்கும் வண்டா இல்லை சகதியில் அமரும் கொசுவா எனும் கேள்விக்கு வாசகன் சாண்டில்யனின் சிருங்கார வர்ணனைகளில் தேன் குடிக்கும் வண்டாகவே உன்மத்தம் கொள்கிறான். இது அக்காலத்தில் ஆபாசம் என எதிர்க்கப்பட்டது என்பதை நினைக்கையில் இன்று அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்திலிருந்து சர்வதேசமெங்கும் ஒலிக்கும் நான் ஒன்னாங்கிளாஸ் படிக்கும்போது எனும் ஒப்பற்ற பாடலை என்னவென்பது.

சாண்டில்யனின் கதைகளில் எனக்கு பிடித்தது கடல் புறா. மன்னன் மகள் அதன் அளவிற்கு இல்லை எனினும் கூட சாண்டில்யனின் தமிழ் இன்னம் சில காலம் நிற்கும். அவ்வகையில் வரலாற்று சாகச நாவல்களின் அடிக்க முடியா மன்னன் அவர்.

ரகசியத்தின் காவலர்கள்


 வாழ்சமூகத்தின் அஸ்திவாரமான நம்பிக்கைகள் மீது ஐயம் உருவாக்கும் வகையில் கற்பனையான தர்க்கவாதங்களை முன்வைத்து அந்நம்பிக்கைகளை சிறிதேனும் ஆட்டம் காணச்செய்யும் உத்தியை வரலாற்றுத் தகவல்களையும், நம்பத்தகுந்த கற்பனை தரவுகளையும் கலந்து உருவாக்கப்படும் வரலாற்று மர்மப்புனைகள் தம்மில் கொண்டிருக்கும். காலகாலமாக நிறுவனங்களால் உறுதியாக்கப்பட்ட அந்நம்பிக்கைகளின் உண்மைநிலை என்ன எனும் கேள்வியையும், பரபரப்புநேச வாசகத்தளத்தில் சுறுசுறுப்பான விமர்சனங்களையும் இவ்வகையான படைப்புக்கள் உருவாக்கவும் செய்கின்றன என்றால் அது மிகையல்ல. சமகாலத்தில் Angels & Demons வழியாக டான் ப்ரவுன் இவ்வகையான புனைவுகளிற்கு ஒரு வாசலை திறந்துவைத்தார். ஆனால் அவர் பிரபலமானது The Da Vinci Code வழியாகவே.

The Guardians of Covenant ஐ எழுதிய நார்வேஜிய எழுத்தாளரான Tom Egeland அவர்கள் 2001 ல் எழுதிய Relic எனும் நாவலிற்கும் 2003 ல் வெளியாகிய டாவின்சி கோட் க்குமிடையில் தகவல் ஒற்றுமைகள் வியப்புதரும் வகையில் உண்டு என்கிறது விக்கி. டாம் எக்லேண்டின் நாவலை நான் படிக்கும்போது என்ன இவர் டான் ப்ரவுன் போல எழுத முயற்சிக்கிறாரே என்ற எண்ணமே என் மனதில் எழுந்தது. ஆனால் டாவின்சி கோட் டில் உள்ள தகவல்கள் உங்கள் நாவலில் உள்ள தகவல்களுடன் ஒத்தவையாக இருக்கிறதே, உங்கள் நாவல் காப்பி அடிக்கப்பட்டது என நீங்கள் எண்ணுகிறீர்களா என டாம் எக்லேண்டிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, நானும் , டான் ப்ரவுனும் நிகழ்த்திய தேடல்களில் கிடைத்த தகவல்கள் ஒத்துப் போவதாக இருக்கிறது அவ்வளவே எனக்கூறியிருக்கிறார் எக்லேண்ட்.

டாம் எக்லேண்டின் கதை ஐஸ்லாந்தில் ஆரம்பமாகிறது. சிரா மக்னேஸ் எனும் மதகுருவின் கைகளில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு ஆவணத்தொகுப்பு வந்து சேர்கிறது. அந்த ஆவணத்தொகுப்பில் சில ரகசிய தகவல்கள் இருக்ககூடும் என எண்ணும் மதகுரு தன் நண்பனும் தொல்லியலாளனுமான பிஜ்ஜோர்ன் பெல்டோவை துணைக்கு அழைக்கிறார்.... அங்கிருந்து ஆரம்பமாகும் தேடல் ஐஸ்லாந்து மற்றும் நார்வேயில் உள்ள புராதண ஸ்தலங்களில் ரகசியமாக விட்டு செல்ல்பபட்டிருக்கும் தகவல்கள் வழியாக இங்கிலாந்து, எகிப்து, இத்தாலி, அமெரிக்கா என ஓடி சென் டாமிங்கோவில் உச்சம் கண்டு, மறுபடியும் எகிப்தில் நிறைவு பெறுகிறது.

சங்கேத எழுத்துருக்கள், புனித வடிவியல் போன்றவை வழியாக ஸ்தலம் விட்டு ஸ்தலம் சென்று சங்கேத மொழி நிபுணர்களின் உதவியுடன் இன்று வாழ்சமூகம் நம்பியிருக்ககூடிய நம்பிக்கைகள் சிலவற்றை சந்தேகத்திற்குள்ளதாக்க விழைகிறார் டாம் எக்லேண்ட்.

அவரின் நாவல் ஆதி நார்வேஜிய கலாச்சாரத்திற்கும் பண்டைய எகிப்திய கலாச்சாரத்திற்குமிடையில் நிகழ்ந்திருக்ககூடிய பரிமாற்றங்களை எடுத்து வருகிறது. கொலம்பஸ் அமெரிக்க கண்டத்தில் காலடி வைக்கும் முன்பாகவே அங்கு வைக்கிங்குகள் சென்றிருந்திருக்கிறார்கள் என நிறுவுகிறது. முரட்டுத்தனமான கொள்ளையர்களான வைக்கிங்குகள் எகிப்து வரையில் பயணித்து அங்கிருந்து மிக முக்கியமானதொருவரின் பாடம் செய்யப்பட்ட உடலொன்றையும், அதனுடன் கூடவே இருந்த ஆவணங்களையும் நோர்வேக்கு இட்டு வந்தார்கள் எனக் கூறுகிறது.... அந்த ரகசியம் மிக முக்கியமான ஒன்றாக பாதுகாக்கப்பட்டும் வந்திருக்கிறது என்பதை விபரிக்கிறது.

கதையின் நாயகன் பிஜோர்ன் பெல்ட்டோ இந்த பாடம் செய்யப்பட்ட உடல் யாருடையது என்பதையும், அந்த ஆவணங்கள் என்ன என்பதையும் தன் தேடல் வழி கண்டடைகிறார். டாம் எக்லேண்ட் உலகின் மூன்று பெருமறைகளின் பிதாவாக இருக்ககூடிய ஒரு பாத்திரத்தின் வரலாற்றை தன் கற்பனையில் பிறிதொன்றாக காட்டுகிறார். புனித நூல்களில் உள்ளவற்றின் ஆதார வேர்கள் என்னவாக இருக்கலாம் என்பதை விளக்குகிறார். இதன் வழியாக முப்பெருமறைகளும் இதுவரை நிறுவியிருந்த நம்பிக்கைகளை மாற்றுப் பார்வையில் நோக்க செய்கிறார்.

 சிறிய சிறிய அத்தியாயங்களுடனும், வரலாற்று தேடல் தகவல்களுடனும், நம்பகத்தன்மை குறைந்த கற்பனை வாதங்களுடனும் உருவாக்கப்பட்டிருக்கும் இந்நாவலானது டான் ப்ரவுன் திறந்து வைத்த வாசல் வழியேயே பயணிக்கிறது. ஆனால் ஆழமும், ஆர்வமும் வாசகனின் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்காத வகையில். ஒரு கிண்ணம் திராட்சை மதுவிற்குள் ஒரு ஜாடி நீரைக் கலந்து சுவைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இதன் வாசிப்பு அனுபவம்.

Saturday, March 9, 2013

தாக்குதல் தருணம்

வதனமோ சந்த்ரபிம்பமோ - 9

அரிசோனாவிலுள்ள சிறு நகரமான சியரா விஸ்டாவின் சிறைச்சாலையில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஐந்து கைதிகளை நீதிவிசாரணைக்காக ஃபீனிக்ஸ் எனும் இடத்திற்கு அழைத்து செல்லும் பொறுப்பு டெக்ஸ் தலைமையில் செயற்படும் ரேஞ்சர்களின் குழுவிடம் கையளிக்கப்படுகிறது. கைதிகளை ஃபீனிக்ஸ் நகர் நோக்கி பாதுகாப்புடன் இட்டுச் செல்லும் டெக்ஸ் குழுவினர் வழியில் எதிர்பாராதவிதமாக தாக்கப்படுகிறார்கள். டெக்ஸை தவிர மீதி ரேஞ்சர்கள் மரணத்தை தழுவ, ஐந்து கைதிகளையும் ரேஞ்சர்களின் பாதுகாப்பிலிருந்து மீட்டுச் செல்கிறது அந்த மர்மக்குழு. தன் எதிரிகளை நரகத்தின் குகைகள் வரை விடாது தேடிச்சென்று நீதி வழங்கும் டெக்ஸ், விசாரணைக் கைதிகளையும் அவர்களை மீட்டுச் சென்றவர்களையும் தேடிச்செல்லும் ஒரு நீண்ட பயணத்தை ஆரம்பிக்கிறார்…….
மாட்டுத்தோலை விட வலிதான மாமிசத்திற்கும், சூடான பீரிற்கும் பிரபலமான நகரம்தான் சியரா விஸ்டா. வெம்புழுதியின் உறைநிலமான அந்நகரின் சிறைக்கு டெக்ஸ் வந்து சேரும் தருணம் முதலே அவர் பாதுகாவலில் எடுத்து செல்லப்படவேண்டிய கைதிகளின் குணாதிசயங்களை TEX MAXI n° 15 ஆக வெளியாகியிருக்கும் L’Or du Massacre கதையில் விபரிக்க ஆரம்பித்து விடுகிறார் டெக்ஸ் கதைகளின் குறிப்பிடத்தக்க கதாசிரியரான அண்டோனியோ செகுரா. கைதிகள் யார், அவர்கள் செய்த குற்றம் என்ன, சிறையில் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் போன்றவை வழியே தல டெக்ஸிற்கு கதையில் அவர்கள் தரப்போகும் தலைவலிக்கோலத்தின் ஆரம்ப வளைகோடுகள் அந்தப் பக்கங்களிலேயே எழுதப்பட்டு விடுகின்றன. கைதிகள் குறித்த தகவல்களை அறிந்து கொண்ட வாசகர்களும் ஆகா அடிதூள்பறக்கும் கதையாக அல்லவா இது இருக்கப்போகிறது எனும் ஆவலில் பக்கங்களை திருப்ப தவறமாட்டார்கள்.
மிகவும் கடுமையான தாக்குதல் ஒன்றில் தன் காவலில் வந்த கைதிகளை அடையாளம் தெரியாத நபர்களிடம் இழந்து நிற்கும் டெக்ஸின் மனதில் எழும் கேள்விகள் எதற்காக இந்த தாக்குதல்? யார் இந்த தாக்குதலை திட்டமிட்டு நடாத்தி இருப்பார்கள்? ஐந்து கைதிகளில் இத்தாக்குதலோடு தொடர்புள்ளவர்கள் யார்? என நீளுகின்றன. இக்கேள்விகளிற்கு உடனடியாக விடை தருவதற்கு பதிலாக கைதிகளை மீட்டுச் சென்ற குழு ஒரு கைதியை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டு ஏனைய நால்வரையும் திசைக்கொருவராக தம்மை தொடரக்கூடாது என எச்சரிக்கை செய்து விரட்டி விடுகிறது. இங்கு வாசகர்களிற்கும் தாக்குதல் நடாத்திய குழுவிடம் தங்கிவிடும் கைதியின் அடையாளத்தை அறியத்தராவகையில் கதையின் மர்ம இழையின் வலிமையை சற்றே உறுதியானதாக்குகிறார் செகுரா. இதனால் டெக்ஸ் மட்டும் அல்லாது வாசகனும் டெக்ஸின் விசாரணைகள் இட்டு வரும் தகவல்களிற்காக வேகமாக கதையின் பக்கங்களினூடாக பயணிப்பவன் ஆகிறான். இந்தக் கதையில் டெக்ஸின் வழமையான சகபாடிகள் யாரும் கிடையாது. டெக்ஸ், டெக்ஸ் மட்டுமே. மொத்த அதிரடிக்குத்தகையும் டெக்ஸ் கரங்களில். மலைகள், குன்றுகள், பள்ளத்தாக்குகள், கணவாய்கள், வெள்ளம் அதிசீற்றத்துடன் நடக்கும் ஆறுகள், அடித்துக் கொட்டும் பெருநிலமழை, உயிரைக் காயவைக்கும் சூரியன் என அவரின் தனித்த பயணம் இவை யாவற்றினூடாகவும் நீதியை நிலைநாட்டுவதில் பிடிவாதம் கொண்ட ரேஞ்சர் ஒருவனின் தேடலாக அமைந்துவிடுகிறது.
lor du m 1தன் குழுவின்மீதான தாக்குதலின் பின்பாக சியரா விஸ்டா திரும்பும் டெக்ஸ் அங்கு ஐந்து கைதிகள் குறித்த மேலதிக விபரங்களை அறிந்து கொள்கிறார். சியரா விஸ்டா நகரின் பத்திரிகையாளரான நோர்ட்டனுடன் அவர் கைதிகளில் இத்தாக்குதலை திட்டமிட்டு செயற்படுத்தக்கூடியவன் யார் என தரவுகளை வைத்து கணிக்கவும் செய்கிறார் இருப்பினும் அத்தரவுகள் வழி அவர் அடையும் விடையை விலக்கிவைத்து மனிதசாட்சியம் ஒன்றினதும் தன் உள்ளுணர்வின் மீதான நம்பிக்கையிலும் கைதிகளில் ஒருவனான Black Puma எனும் அப்பாச்சி செவ்விந்தியன் தஞ்சம் தேடியிருக்ககூடிய அவன் மக்கள் வாழும் குடியிருப்பை நோக்கி அவர் பயணிக்கிறார்.

சான் கார்லோஸிலிருக்கும் செவ்விந்திய குடியிருப்பின் ஏஜெண்டான சாமுவேல் க்ளோவரைக் கொலை செய்ய முயற்சித்தமைக்காக கைது செய்யப்பட்டவன் ப்ளாக் புமா. அவன் இனமக்கள் குடியிருக்கும் பகுதியினுள் சில கிறிஸ்தவ துறவிகளின் உதவியின் மூலமே டெக்ஸால் எந்த சிக்கலுமின்றி நுழைய முடிகிறது. இங்கு ஒரு கிறிஸ்தவ துறவி, பூர்வகுடி சித்தர்கள் மீது கொண்டிருக்கும் பார்வை கிறிஸ்தவ அதிகாரபீடம் அந்நாளில் அவர்கள்மீது கொண்டிருந்த பார்வைக்கு முரணான ஒன்றாக காட்டப்படுகிறது. செவ்விந்திய மதகுருவான பியர் ஃபீட் மதிக்கத்தக்க ஒரு ஞானி என்பதாகவே அந்தக் கிறிஸ்தவ துறவி எண்ணுகிறார். இவ்வகையான ஒரு பார்வையை இற்றைக்கு ஐம்பது வருடங்களிற்கு முன்பாக இத்தாலியில் வெளிவரும் ஒரு வெகுஜனக் காமிக்ஸ் கதையில் கூறிட இயலுமா என நான் எண்ணிப் பார்க்கிறேன். இன்றைய நிலையில் செகுரா, கிறிஸ்தவ மதம் பூர்வகுடிகள் மீது சிலுவையாக இறக்கிய ஒரு பார்வையிலிருந்து முரண்பட்ட துறவிகளும் இருந்தார்கள் என்பதைக் காட்ட இங்கு விழைந்திருக்கலாம்.

செவ்விந்தியக் குடியிருப்பில் தன் விசாரணைகளை ஆரம்பிக்கும் முன்பாகவே அங்கு வாழும் செவ்விந்தியர்களின் அவலநிலையும், அவர்களில் வாழ்ந்திருக்கும் வெறுப்பும் டெக்ஸால் உணர்ந்து கொள்ளப்படுகிறது. அம்மக்களிற்காக ஒரு கணமேனும் நிஜமாக வருந்தும் டெக்ஸாக அவரை அங்கு அந்தக் கணத்தில் ஒருவர் காணமுடியும். செகுராவின் கதைசொல்லும் அம்சங்களில் இது ஒன்று எனலாம். வழமையாக மதிக்கப்படாத உணர்வுகள் குறித்த கண்ணியமான வரி ஒன்று அவர் கதைகளில் எங்காவது ஒரு முடுக்கில் அமைந்து இருக்கும். வெள்ளையினம் கட்டுவித்த எதிரான பிம்பங்கள் சிலவற்றையேனும் அவரின் அந்த வரிகள் இந்தக் கதைகளிலாவது பொய்யெனெக் காட்டக்கூடும். டெக்ஸ் தொடரும் தன் விசாரணைகளில் ப்ளாக் புமா கைது செய்யப்பட்டதன் பின்னணியிலிருக்கும் உண்மைகளை அறிகிறார். நீதியை தன் பாணியில் நிலைநாட்டவும் முயல்கிறார். கதையின் இப்பகுதியில் முக்கியமான ஒரு மனிதனின் இறப்பு குதிரைகளின் காலடியிலிருந்து பிறக்கும். அந்த இறப்பின் பின்னிருக்கும் தர்மத்தை இலகுவில் உதறி சென்றிட முடியாது. விலங்குகளும் ஆத்மாக்களே எனும் எண்ணம் கொண்ட நிலத்தில் நிகழும் அந்த நிகழ்வில் அதிக ஆச்சர்யத்தை நாம் கண்டிட முடியாது. செகுரா இங்கும் கதை நிகழும் மண்ணிலிருக்கும் ஒரு நம்பிக்கையின் வழியாக தீமைகளிற்கு எதிரான தீர்ப்பை எழுதுகிறார். டெக்ஸ் அதற்கு சாட்சியமாக இருக்கிறார். ப்ளாக் புமாவிடம் தன் கேள்விகளை கேட்டு அதற்கு அவன் தரும் பதில்களை பெற்றுக் கொண்ட பின்பாக அவரின் அடுத்த இலக்கு செடோனா எனும் நகராக இருக்கிறது.

lor du m 2சியரா விஸ்டா சிறையிலிருந்த ஐந்து கைதிகளில் ஒருவனான ஹூவான் அலமீடா அந்த நகரின் வங்கியின் இயக்குனராக இருந்தவன். அதே வங்கியின் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடி மாட்டிக் கொண்டவன். அப்படியான ஒரு மனிதன்மீது அந்நகர மக்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயம் எப்படியாக இருக்கும் என்பது நகரில் டெக்ஸ் நுழைந்து அலமீடாவின் வீடு எங்கே என கேட்கும்போதே தெளிவாக கதையில் விபரிக்கப்படுகிறது. ஊர்ப்பணத்தைக் கொள்ளையடித்தவனிற்கு உலகெங்கும் ஒரே மரியாதைதான். இங்கு டெக்ஸ் அலமீடாவின் மனைவியிடமும், அவள் சகோதரனிடமுமே உரையாட முடிகிறது விசாரணையின் முடிவு அவரிற்கு திருப்தி தருவதாக இல்லை. ஆனால் விசாரணை என்பது எப்போதுமே திருப்தியான விடைகளின் வதிவிடமும் இல்லை. சியரா விஸ்டாவிற்கு திரும்பும் வழியில் டெக்ஸ், பத்திரிகையாளனான நோர்ட்டன் தனக்காக வெளியிட்டிருக்கும் முக்கியமான ஒரு தகவலை அறிந்து கொண்டு தன் தேடலை Safford நகர் நோக்கி திசை திருப்புகிறார்.

சஃபோர்ட் நகரில் தங்கம் தேடி செல்வம் சேர்க்கும் மனித வாழ்வின் அவலநிலையை சுருக்கமாக ஆனால் சிறப்பாக எழுதுகிறார் செகுரா. வல்லவர்கள் வைத்ததே சட்டம், நினைத்தவுடன் அரங்கேற்றப்படும் தூக்கு தண்டனைகள், திருட்டு, மோசடி என பூலோக பாவபூமி ஒன்றின் வருத்தமான நிலமது. தங்கம் தேடி செல்வந்தர்களாக வேண்டும் என எண்ணம் கொண்ட மனிதர்களை ஏமாற்ற செய்யப்படும் தந்திரங்கள், அதில் தம்மை வீழ்த்தி தம் வாழ்வையும், மற்றவர்களின் வாழ்வையும் நரகமாக்கிடும் மனிதர்கள் வாழ்வு தங்கத்தைபோல பிரகாசமானதாக இருந்திருக்கவில்லை. கதையின் இப்பகுதியில் உப்பு நிரப்பிய தோட்டா என்பது உபயோகிக்கப்படும். மனிதரைக் கொல்லாது கொடிய வலியை தரக்கூடிய இத்தோட்டா வகை இருந்தது என்பதே எனக்கு ஆச்சர்யம்தான். கதையின் இப்பகுதியில் டெக்ஸின் தந்திரங்கள், அடிதடிகள், துப்பாக்கி பாவனைகள் எல்லாம் அவருடைய ஆக்‌ஷன் ரசிகர்களை விசில் அடிக்க வைக்கும் வகையில் இருக்கும். சஃபோர்டில் அவர் தன்னிடமிருந்து மீட்கப்பட்ட டிக் கிராமர் எனும் கைதியை விசாரிக்க முயல்கிறார். போலி தங்க சுரங்க உரிமைகளை விற்று மாட்டிக் கொண்ட வேளையில் ஷெரீஃபை கொலை செய்ததிற்காக கைது செய்யப்பட்டவன் டிக் கிராமர். அவனிடம் டெக்ஸ் விசாரணை நடாத்தும்போது பெரும்பாலும் அவர் துப்பாக்கியே பேசுகிறது. அவர் தேடிய கேள்விக்கான விடை கிடைக்காத நிலையிலேயே சஃஃபோர்டை விட்டு விலகுகிறார் அவர்.

lor du m 3மீண்டும் சியரா விஸ்டா செல்லும் வழியில் செவ்விந்தியர்களிற்கு பயந்து மறைந்திருக்கும் ஒரு குடும்பத்தை பாதுகாப்பாக கிறிஸ்தவ துறவிகள் மடம் ஒன்றில் கொண்டு சேர்க்கிறார். அங்கு அவர் தன்னிடம் இருந்து மீட்கப்பட்ட கைதிகளில் ஒருவனான அல்பேர்ட் டெக்கர் மீண்டும் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட ஆரம்பித்து விட்டதை தெரிந்து கொள்கிறார். டெக்கரையும் அவன் கும்பலையும் தேடிச்செல்லும் ஷெரீஃப் குழுவினரோடு தன்னையும் டெக்ஸ் இணைத்துக் கொள்கிறார். டெக்கரிடம் இருந்தும் டெக்ஸ் தன் கேள்விக்கான பதிலை பெற்றுக் கொள்வது இல்லை. சியரா விஸ்டாவிற்கு திரும்பும் டெக்ஸ் அங்கு ஐந்தாவது கைதியான பால் லாருயூ குறித்த ஒரு அதிர்ச்சி தரும் தகவலை அறிந்து கொள்கிறார்.. மொத்தத்தில் டெக்ஸின் கேள்விகளிற்கு அவர் விசாரணையும் தேடலும் விடையளிப்பது இல்லை. அப்படியானால் யார் கைதிகளை மீட்டது? எதற்காக? …. மீதியிருக்கும் பக்கங்களில் இதற்கான விடையை வாசகர்களிற்கு தருகிறார் கதாசிரியர் செகுரா.

செகுராவின் மர்ம முடிச்சு சுவாரஸ்யமானது ஆனால் தேர்ந்த வாசகன் ஒருவன் ஏன் இப்பெயர் டெக்ஸின் விசாரணைகளில் இரு இடங்களில் வருகிறது எனும் ஒரு கேள்வியை எழுப்பும் பட்சத்தில் சுவாரஸ்யம் பணால் ஆகிவிடும். ஐந்து கைதிகளின் வாழ்வின் சிறு கூறுகளை டெக்ஸின் விசாரணை வழி சுவையுடன் சலிப்பில்லாமல் எடுத்து வரும் கதை அதன் இறுதிப்பகுதியில் அதன் வீர்யத்தை சற்று இழந்தும் விடுகிறது. டெக்ஸ் மேக்ஸி கதைகளில் மிகச்சிறிய கதை இது எனலாம். 303 பக்கங்கள்தான். வேகமாக வந்து முடியும் இறுதிப்பகுதி, யார் குற்றவாளி எனும் விடை, அக்குற்றவாளியின் வழமையான வில்லத்தனங்கள் போன்றன கதை உருவாக்கி வைத்த எதிர்பார்ப்பை பூரணமாக்க தவறி விடுகின்றன. கதையின் ஓவியர் எனக்கு மிகவும் பிடித்தமானவரான ஹோசே ஒர்ட்டிஸ். கதையின் சில பகுதிகளில் தீர்க்கமற்ற கோட்டு சித்திரங்களின் தீவிரமான எல்லையை தொட்டு விடுவது என அவர் தீர்மானம் கொண்டிருக்கிறார். சில பகுதிகளில் சித்திரங்கள் பூர்த்தியாகாத நிலையிலேயே அச்சிற்கு வந்து விட்டனவோ எனும் சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது எனினும் ஓர்ட்டிஸின் சித்திரங்களை வெறுக்க முடியாது. கதாசிரியர் அண்டோனியோ செகுரா எழுதிய இறுதி டெக்ஸ் கதை இது. 2012 ஜனவரியில் அவர் காலமாகிவிட்டார். டெக்ஸின் கதைகளிற்கு இது ஒரு பேரிழப்பே என்பது செகுராவின் கதைகளின் ரசிகர்களிற்கு மட்டுமே புரியக்கூடிய ஒன்று. கதையில் சஃபோர்டில் நடக்கும் துப்பாக்கி மோதலின்போது ஒரு வசனம் வரும் அது டெக்ஸிற்கு மட்டும் அல்ல செகுராவிற்கும் பொருந்தும்….. டேய் இவன் மனுஷன் இல்லேடா…. மிசின் கன்னுடா !!!!

Monday, February 18, 2013

கில்லிங் ஜோர்டான் - 3 - போக்கா போட்ட கியர்

தமிழ் காமிக்ஸில் அற்புதங்கள் தனித்து வருவது இல்லை. அதுவும் துப்பறிவாளர்களின் கதை எனில் உரையாடல் குமிழிகளில் அற்புதங்கள் கூடி நின்று கும்மி அடித்து குலவை எழுப்பும். துப்பறிவாளர் ஜெரோம் கதையில் ஏற்கனவே இது நடந்திருக்கிறது. ஜில் ஜோர்டானும் ஒரு துப்பறிவாளர் என்பதைக் கண்டு கொண்ட அற்புதங்கள் அவரையும் விட்டு வைக்கவில்லை எனலாம்.

198ம் பக்கத்தில் மூன்றாவது கட்டத்தில் ஹென்ரி கூறும்.... கரையிலிருந்து 4 கிமீ தொலைவில் பாலத்தின் மத்திய பகுதியில் கார் மாட்டிக் கொண்டிருப்பதால் வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.... என வாக்கியம் உருவாக்கப்பட்டு இருக்கிறது பாலத்தின் மத்திய பகுதியில் கார் மாட்டிக் கொண்டிருந்தால் கடல் இறக்கம் நிகழும்போது யானைப்படை குதிரைப்படையுடன் சென்று காரை கட்டி இழுத்து வந்துவிடலாம் அல்லவா... அட இந்த வாக்கிய உருவாக்க குளறுபடியை  விட்டுவிடலாம்!

பக்கம் 200 கட்டம் 5ல் அபெஸ் தெருவில் கருகியது என்னவென்பதை கண்டுபிடிக்க நாம் சங்கர்லாலைத்தான் அமர்த்திக் கொள்ளவேண்டும், அட இதையும் விட்டு விடலாம், பாரிஸில் 1960 களில் மிளாகாய்த் தூளை பயன்படுத்தி லிபெலூயுலின் கண்களை கண்ணீர்க் குளமாக்கிய குற்ற நுட்பத்தையும் நாம் விட்டுவிடலாம்!

பக்கம் 206 கட்டம் 10ல் பிரான்சின் தெற்குப்பகுதியான MIDI க்கு செல்கிறேன் என்பதை பிற்பகல் என அர்த்தம் கொண்டு [ மதியம் எனும் அர்த்தம் Midi எனும் சொல்லிற்கு உண்டு] பிற்பகலில் நான் இங்கிருந்து கிளம்பிவிடுவேன் எனச் சொன்னதையும் விட்டுவிடலாம்!

சைடரை அடித்த குஷியில் பக்கம் 213 கட்டம் 10ல்.. போகவர 8 கி.மீ தூரம் என அருள்வாக்கு கூறும் ப்ரொகார்டையும் மன்னித்து விட்டு விடலாம்!

பக்கம் 217ன் இறுதிக்கட்டத்தில் வித்தியாசியமான குணாதிசயம் கொண்ட இந்த பிரகிருதிகளை கணிக்கவே முடியவில்லை எனக் கடலில் மூழ்கிய காரிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் காணப்பட்ட டெம்பளர்களின் சங்கேதக் குறியீடுகளை சொல்கிறாரா இல்லை காரில் இருக்கும் நபர்களை சொல்கிறாரா எனும் மயக்கநிலை உருவாக்கத்தையும் விட்டுவிடலாம்!

குஜால் குதிரை வீரன் கோட்டைப் பகுதியில் பாத்திரங்களிற்கிடையில் நிகழும் உரையாடல்களின் பெரும் பகுதி தமிழ் வாசக ரசனையை இதமாக பதமாக வருடிக் கொடுத்திடும் விதமாக முற்றிலும் புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதையும் விட்டுவிடலாம்! [ மாரிஸ் திலியூதான் பூட்டாரே நைய்னா]

பக்கம் 229 கட்டம் 3ல் Phare எனும் சொல் காரின் முற்பகுதியில் அமைந்திருக்கும் விளக்குகளைக் குறிக்கிறது என்பதை புரிந்து கொள்ளாது கலங்கரை விளக்கம் என அர்த்தம் கொள்ளப்பட்டு காரின் முற்பகுதி விளக்குகளின் ஒளியால் எழுப்பப்படும் SOS  சமிக்ஞை அப்படியே பல்டி அடித்து கலங்கரை விளக்கத்தில் உள்ளவர்களிற்கான சமிக்ஞை ஆகியதையும், லாப்ரானில் ஒரு கலங்கரை விளக்கம் இருந்திருந்தால், அவ்வளவு உயரத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தில் ஒருவர் இருந்திருந்தால் கார் தாழ்வான பகுதியில் நிற்பதால் அது அவர்களிற்கு தெரியாது என கூறப்படும் அற்புதமான வரிகளையும் தூக்கி கடாசி விடலாம்!
கூடவே போக்கா வந்தது சிறு மோட்டார் படகில்தானா என்பதையும் அவன் கயிற்றில் கட்டி வைத்தது படகையா அல்லது பிளாஸ்டிக் பையில் போட்டு பாதுகாப்பாக கடலில் மூழ்க்கியிருக்க செய்த மோட்டாரையா என்பதையும் மறந்துவிடலாம்! குஜால் குதிரை வீரன் கோட்டைப் பகுதியில் தேடுதல் வேட்டை நடாத்திய ஜில் அண்ட் கோ மொக்கை பீஸ் எனும் முடிவையும் இதனால் நாம் உருவாக்கி கொள்ளலாம்!

ஆனால், பக்கம் 237ல் கட்டம் 11ல் ஹென்ரிக்கு விளக்கம் தரும் ஜில்.... பின்னர் காரை கியரில் போட்டு ஓடச் செய்திருக்கிறான் என்கிறார். நல்லது. அவர் யார் காரை என்ன கியர் போட்டு எங்கு ஓடச் செய்தார் என்பதை எனக்கு தயை கூர்ந்து யாரேனும் சொல்ல இயலுமா?! பாரிஸ், லண்டன், லாப்ரான் என ஓடி ஓடி விசாரணை செய்து விட்டு, குற்றவாளி எவ்வாறு குற்றங்களை நிகழ்த்தி இருப்பான் என்பதையும் கண்டுபிடித்து விட்டு தன் வாடிக்கையாளரிடம் துப்பறிவாளர் ஜில் ஜோர்டான் தரும் அந்த விளக்கம் ஒன்றுதான் உண்மையில் ஐரோப்பிய காமிக்ஸ்களின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்றாக கருதக்கூடிய ஜில் ஜோர்டான் பாத்திரத்தை தமிழில் கொன்று போட்டிருக்கும் அற்புதத்தை நிகழ்த்தி இருக்கிறது. தமிழில் விடிய விடிய ராமன் கதை விடிந்தால் ராமன் சீதைக்கு சித்தப்பா என்பார்கள் அல்லவா அதற்கு இதைவிட சிறப்பான உதாரணத்தை சமீபகாலத்தில் நான் கண்டிருக்கவில்லை!

அப்படியானால் அந்த உரையாடல் குமிழியில் இருக்க வேண்டிய வசனம் என்ன? உங்களிற்கு காமிக்ஸ் என்பதில் உண்மையில் ஆர்வமும், ப்ரியமும் இருந்தால் அதற்கான பதிலை நீங்களே தேடிக் கண்டடைந்து கொள்வீர்கள். அதை நான் இங்கு எழுதப்போவது இல்லை. மாறாக காமிக்ஸ் ஒரு டைம்பாஸ், ஜாலியாக படித்து விட்டு செல்ல வேண்டும், இப்படியான தீவிர அலட்டல்கள் எல்லாம் உடல் நலத்திற்கு தீங்கானது, இந்த மொழிபெயர்ப்பே இக்கதைக்கு மிக அதிகம், தட்டில் போடுவதை உண்டு விட்டு சூப்பராக இருக்கிறது எனச் சொல்லிவிட்டால் எல்லாம் சுபமாகி விடும் எனும் மனநிலையைக் கொண்டிடவும் உங்களிற்கு முழுமையான உரிமையும், சுதந்திரமும் இருக்கிறது.

நான் கூறிய மேலும் கூறிடாத அற்புதங்களை தன்னில் கொண்டுதான் அலைகளின் ஆலிங்கனம் எனும் ஜில் ஜோர்டான் கதை NBS ல் வெளியாகி இருக்கிறது. ஒரு கதையில் இவ்வகையாக முன்னெப்போதும் கண்டிராத அற்புதங்கள் நிறைந்திருப்பதால் NBS எனும் நாமம் மிகவும் பொருத்தமாக இங்கு அமைந்துவிடுகிறது. இந்த சமயத்தில் இக்கதையை தமிழில் படித்து முடித்தபின் என் மனதில் ஊற்றெடுத்து உந்தித் தள்ளிய சில கேள்விகளை இந்த சுபதின சுபவேளையில் இப்பதிவில் சேர்த்திடலாம் என விரும்புகிறேன்.

40 வருடங்கள் பராம்பரியம் கொண்ட ஒரு தமிழ் காமிக்ஸ் பதிப்பகம் தனது 40வது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழாக வெளியிடும் தொகுப்பில் அலைகளின் ஆலிங்கனம் எனும் இக்கதையையும் சேர்த்து வெளியிட்டு இருக்கிறது எனும் வகையில் இதன் ஆசிரியபீடம் இக்கதையில் இப்பதிவில் கூறப்பட்டு இருக்கும் விடயங்களை தெரிந்து கொண்டுதான் அதை அனுமதித்ததா?

அப்படி தெரிந்து கொண்டு இக்கதையை வெளியிட அனுமதிக்கும் நிலையில் தன் வாசகர்கள் சிந்தனைத்திறன் குறித்து அந்த ஆசிரியபீடம் கொண்டுள்ள மதிப்பீடுதான் என்ன?

இக்கதையின் வாசிப்பின் பின்பாக இந்த ஆசிரியபீடம் மீதும் அதன் வெளியீடுகள் மீதும் நான் உருவாக்கி கொள்ளும் மதிப்பீடு என்ன ?

கில்லிங் ஜோர்டான் நிறைவுற்றது.

Sunday, February 17, 2013

பனிநிலத்தின் துராத்மா

வதனமோ சந்த்ரபிம்பமோ - 8 

இலையுதிர் காலத்தின் ஆரம்பம் இலைகளின் அந்திமத்தின் உதயம். தம் உயிரின் அசைவென இருந்த இலைகளை உதிர்க்ககூடிய விருட்சங்கள் தம்மை புதியதொரு துளிர்ப்பின் முன்பான தியானத்தினுள் ஆழ்த்திட அடங்கிடும் பருவம். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியினுள் அமைந்திருக்கும் Salish செவ்விந்திய பூர்வகுடிகளின் குடியிருப்பு ஒன்றின் அருகே ஒடிச்செல்லும் அந்த ஆற்றில் இலையுதிர்காலத்தின் குளிர்காற்று தன் கோலங்களை கண்ணறியா விரல்களால் வரைந்து ஓடிச் செல்கிறது. காலம் போல ஆறும் தன்னைச் சுற்றியவை குறித்த பிரக்ஞையற்று தன் வழியில் வழுகி ஒடுகிறது. அதன் ஓட்டத்தில் தன்னை இழந்து மிதந்து வருகிறது ஒரு சிறுபடகு. ஆற்றின் ஓட்டமும், காற்றின் ஸ்பரிசமும் அப்படகை செவ்விந்தியக் குடியிருப்பின் கரைகளில் ஒதுங்க செய்கிறது. கரையொதுங்கிய சிறுபடகில் கிடக்கிறது ஒரு வெள்ளை மனிதனின் உடல். அம்மனிதனின் உடலை ஆராயும் பூர்வகுடிகளின் மதகுரு  கடிதம் ஒன்றைக் கண்டு கொள்கிறார். அக்கடிதம் ஜிம் பிராண்டன் எனும் கனேடிய குதிரைப் பொலிஸ் அதிகாரிக்கு முகவரி இடப்பட்டு இருக்கிறது. பூர்வகுடி மதகுரு வெள்ளை மனிதனின் சடலத்தையும், கடிதத்தையும் செண்ட் ஜான் கோட்டையில் கொண்டு சேர்க்கிறார்…
dtso1வாசகனை தன் முதல் பக்கத்திலேயே கதை நிகழும் பிரதேசத்திற்குள் இட்டுச் செல்வது என்பது அரிதான ஒரு நிகழ்வாகும். ஆனால் TEX MAXI n° 5 ஆக வெளியாகி இருக்கும் Dans les Territoires du Nord-Ouest கதையின் ஓவியர் Alfonso Font அதை நிகழ்த்திக் காட்டி விடுகிறார். தெளிவான நீர் கொண்ட ஏரியொன்றின் அருகில் அமைந்திருக்கும் சலிஷ் இன இந்தியர்களின் சிறுகிராமம். கிராமத்தின் பின்னணியில் இருக்கும் காடுகள். அக்காட்டில் உள்ள மரங்கள். அவற்றில் இல்லாது இருக்கும் இலைகள். நீண்ட தொலைவில் இருக்கும் பனிபூத்த மலைகள். அவற்றின் மேலாக உஷ்ன வலயம் நோக்கி வலசை பறக்கும் பறவை இனங்கள். சலிஷ்களின் தங்குமிடங்களிலிருந்து மேல் கிளம்பும் புகை. சலிஷ்களின் குலச்சின்ன நடுமரங்கள், அவர்களின் செதுக்கு மரச்சிற்ப வேலைப்பாட்டழகுகள். ஏரியின் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சிறு படகுகள். ஏரியின் தொலைவில் மிதந்து வரும் ஒரு படகு. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அனுபவம் கொண்ட வாசகன் கண்களின் வழியே ஆன்மாவில் நுழையும் இலையுதிர்காலத்தின் உதிரழகு. ஸ்பெயின் நாட்டவரான அல்போன்சோ ஃபொண்ட் தனது சித்திரங்களில் ஏராளமான தகவல்களை தருவதில் நாட்டம் உடையவர். டெக்ஸின் இக்கதையிலும் அவர் அதற்கு தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடவில்லை. செயிண்ட் ஜான் கோட்டையின் அதிகாரி மேஜர் டிக்கின்ஸின் அலுவலகத்தை அவர் தன் சித்திரத்தால் விபரிக்கும் விதம் அபாரமானது. சிறு சிறு பொருட்களையும் விடாது தன் சித்திரத்தினுள் சேர்த்துக் கொண்டு ஒரு சித்திரம் விபரிக்க விரும்பும் ஸ்தலத்தை அவர் பூரணமாக்கும் திறன் நின்றுபார்த்து நிதானமாக ரசித்துப் பின் கடந்து செல்ல வேண்டிய தன்மையை தன்னில் கொண்டிருக்கிறது.
அலாஸ்காவில் அமைந்திருக்கும் நகரான SKAGWAY க்கு டெக்ஸும், கார்சனும் வந்து சேரும்போது செயிண்ட் ஜான் கோட்டைக்கு விஜயம் செய்த கனேடிய பொலிஸ் அதிகாரி ஜிம் பிராண்டன், பின் எந்த தகவலுமின்றி மறைந்துபோய் மூன்று மாதங்கள் ஆகி விட்டிருக்கிறது. டெக்ஸையும், கார்சனையும் மறைந்துபோன அதிகாரியான பிராண்டனை கண்டுபிடித்து தரவே அங்கு வரவழைக்கிறான் அவர்களின் நண்பனான ஃபட் ஜான். கனேடிய குதிரைப் பொலிஸ், பிராண்டன் தன் பதவியை விட்டு சொல்லாது ஓடி விட்டான் எனக் கணிக்கிறது. ஆனால் பிராண்டனை நன்கறிந்த ரேஞ்சர்களான டெக்ஸும், கார்சனும் அதை நம்ப தயாராக இல்லை. எனவே பிராண்டன் சென்ற திசையில் பயணித்து அவனை தேடுவது எனும் முடிவிற்கு அவர்கள் ஃபட் ஜானுடன் உடன்படுகிறார்கள். இதற்காக அவர்கள் அலாஸ்கா எல்லையை தாண்டி பனிநிலமான கனேடிய வடமேற்கு பிரதேசத்தினுள் பயணித்தாக வேண்டியிருக்கிறது.
இக்கதையில் குதிரைகளை நாம் அதிகம் காண முடியாது. பிராண்டன் செயிண்ட் ஜான் கோட்டைக்கு வரும் நிகழ்வுகளுடன் கதையில் குதிரைகளும் காணாமல் போய்விடுகின்றன. கவ்பாய் கதாநாயகர் ஒருவர் குதிரையின்றி கொண்டெடுக்கும் சாகசம் என்பது ஒரு சிறு முரண்நகைதான். ஆனால் கதை இடம்பெறும் பகுதியில் பயணத்திற்கு நாய்களால் இழுத்து செல்லப்படும் இழுவை சறுக்கு வண்டிகளே பயன்படுத்தப்படும் குதிரைகள் அல்ல என்பது எதார்த்தம். குதிரையில் ஏறி சாகசம் செய்த நம் டெக்ஸும், கார்சனும் இழுவை வண்டியில் சாகசம் செய்ய கிளம்பும் அழகோ அழகு! அதிலும் தன் உடலில் இருக்கும் அனைத்து என்புகளிற்கும் உதிரிக்கட்டு இட்டு கட்டி வைத்திருக்கும் கார்சனிற்கு இவ்வகையான பயணமுறை எவ்வளவு சந்துஷ்டியை அளிக்கும் என்பது தெளிவு. டெக்ஸ் அண்ட் கோ பயணிக்கும் வழியும் இலகுவான வழியல்ல, உறுதியான மனமும், தேர்ந்த அனுபவமும் கொண்ட வழிகாட்டிகளால் மட்டுமே அவ்வழியால் அபாயங்களை தவிர்த்து பயணிக்க முடியும். எனவே ஃபட் ஜானின் பரிந்துரையின் வழியாக கேத்தி டாவ்ன் எனும் இளம் பெண்ணை தமக்கு வழிகாட்டியாக இணைத்துக் கொள்கிறார் டெக்ஸ். கார்சனிற்கு எலும்புகளில்தான் உதிரிக்கட்டு, பெருசு பெண்கள் விடயத்தில் ஒரு மன்மத மைனா என்பது ஊரறிந்த விடயம், கார்சன் தன் திறமைகளை டாவ்னிடம் காட்ட தயங்குவதோ தவறுவதோ இல்லை.
dtso2அடர்த்தியான பனிப்போர்வை மீது வழுக்கிப் பயணிக்க இழுவை வண்டி எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதை இழுத்து செல்லும் நாய்கள். கதாசிரியர் Mauro Boselli கதையில் இது குறித்து தரும் தகவல்கள் சுவாரஸ்யமானவை. ஜோடி ஜோடியாக வண்டியில் இணைக்கப்படும் நாய்களின் நிலைகள், அவற்றிற்கான காரணங்கள் என அவர் தர ஆரம்பிக்கும் தகவல்கள் கதை நெடுகிலும் அடர்பனி பிரதேசம் ஒன்றினூடாக பயணிக்கும் மனிதர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்களை தந்து கொண்டே இருக்கிறது. இவ்வகையில் பொசெலி ஒரு அற்புதமான கதாசிரியர் எனலாம். அதேபோல அருமையான கதைக்களத்தை உருவாக்கி அதில் வரும் எதிர்நாயகர்களை சோடை போகாத வகையில் சித்தரிக்கும் பண்பும் பொசெலியிடம் உண்டு. இதற்கு சிறந்த உதாரணம் அவர் எழுதிய சிறப்பான கதையான கார்சனின் கடந்த காலம்.
இம்முறையும் அவர் கதைக்களத்தில் தன்னை தாழ்த்திக் கொண்டிடவில்லை. பிராண்டனின் மறைவிற்கு ஒரு வகையில் காரணமான கடிதம் கொண்டிருக்கும் மர்மம், மனித ஆன்மாக்களை தன்வசமாக்கி அவர்களை நடைப்பிணங்களாக்கும் வெண்டிகோ எனும் துராத்மாவின் வடிவான தங்கவிழி மனிதன் போன்றவற்றை மனிதர்கள் முன் மாபெரும் சக்தியாக தன்னை நிறுத்தும் இயற்கையுடன் அவர் கதைப்படுத்தி இருக்கிறார். இந்தப் படத்தில் ரயில், நாவல்மரம், சொம்பு என்பவையும் ஒரு பாத்திரமே எனச் சொல்வதுபோல பொசெலியின் இக்கதையில் அவர் உருவாக்கி இருக்கும் பிரதான எதிர்நாயகன் இயற்கை. –30°C ல் குளிர் இறங்கி தாண்டவமாடும் வெண்பனி நிலத்தில் அவர் சாதாரண மனிதர்களின் நாயகத்தன்மையை பொருத செய்திருக்கிறார். கதையில் பரபரப்பிற்கும் விறுவிறுப்புக்கும் குறைவில்லை எனலாம்.
கதையின் பிரதான பெண்பாத்திரமான Kathy Dawn செவ்விந்திய தந்தைக்கும் வெள்ளையின தாய்க்கும் பிறந்தவள். ஆனால் அவள் செவ்விந்திய மரபிலேயே வளர்கிறாள். அவள் தந்தை பொலிசாரால் கொல்லப்பட்டது பொலிஸ் அதிகாரிகள் மீதான ஒரு வெறுப்பை அவளில் உருவாக்கி வைத்திருக்கிறது. பொலிஸ் அதிகாரிகள் என்றாலே தன் இனத்திற்கு கேடுதான் எனும் ஒரு எண்ணம் அவள் மனதில் பதிந்துபோய்க் கிடக்கிறது. ஆரம்பத்தில் அவள் டெக்ஸ், கார்சனுடன் பழகும் முறையில் ஒரு அந்நியத்தன்மை வெளிப்பட்டாலும் கதையின் நகர்வில் அவள் அவர்களுடன் இணைந்து போராடுபவளாக மாறுகிறாள். செவ்விந்தியக் குடிகளில் அடங்கியிருக்கும் ஒரு பெண்ணாக டாவ்ன் காட்டப்படுவது இல்லை மாறாக மிகுந்த மனத் தைரியத்துடன் இயற்கையையும், மனிதர்களையும் எதிர்த்துப் போராடும் பெண்ணாகவே அவள் சித்தரிக்கப்படுகிறாள். ஆனால் செவ்விந்திய மரபு அவளில் ஏற்றிவைத்த மூட நம்பிக்கைகளையும் அவள் தன்னில் கொண்டிருக்கிறாள். கதையின் ஒரு பரபர தருணத்தில் பெண் சொல்வதை ஆண் ஒரு போதும் நம்பக்கூடாது என டாவ்னின் துணைவனான ஜெரிக்கோ கூறுவதன் மூலம் செவ்விந்தியக் குடிகளில் பெண்ணின் நிலை எப்படியானது என்பதை வரிப்படுத்துகிறார் பொசெலி. அதேபோல பெண்ணின் இந்நிலை அல்லது தகுதியை வைத்தே எதிரிகளிடம் வாயைத் திறக்காத ஒரு செவ்விந்திய வீரனை டெக்ஸ் வில்லர் உடைப்பதாகவும் அவர் கதையை உருவாக்கி இருப்பார். பெண்ணினால் ஏற்படும் மரணம் வீர மரணம் அல்ல எனும் நம்பிக்கையை கொண்டதாகவும் சில செவ்விந்தியக் குடிகள் இருந்திருக்கவே செய்திருக்கின்றன. இதுதான் டெக்ஸ் கதைகளின் அழகு. எது ஒரு எதிர்மறை அம்சமோ அதை வைத்து கதையில் திருப்பங்களை உருவாக்குவது. இதுவே பரட்டை கதையாக இருந்தால் பரட்டையின் அலம்பல்கள் தாளாது வாசகர்கள் கண்ணீர் கடலில் படகு ஓட்ட ஆரம்பித்து இருப்பார்கள்.
dtso3மிகுந்த எதிர்பார்ப்புக்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி கதையில் உருவாக்கப்படும் பாத்திரம் தங்கவிழி மனிதன். அவன் சக்திகள், அவன் ஆற்றும் கொடூர செயல்கள், அவன் அடியாட்கள், அவன் பலம் என கதையின் நகர்வில் அவன் குறித்த பிம்பத்தை பெரிதான ஒன்றாக உருவாக்குகிறார் பொசெலி. டாவ்னிற்கும், பிராண்டனிற்கும் தங்கவிழி மனிதனைக் கொல்ல தகுந்த காரணங்கள் இருக்கிறது. பிராண்டனின் விதி அது எனவும், செவ்விந்தியர்களின் பேராத்மாக்கள் அவன் தங்கவிழி மனிதனை அழிக்க துணைபுரிவார்கள் என்பதாகவும் கதை அடுக்கி கொண்டே செல்கிறது. நழுவும் நிழல் எனும் செவ்விந்திய பாத்திரம் ஒரு செவ்விந்திய கிராமத்தின், மக்களின் அழிப்பிற்கு துணைபோகிறான் பின் ஒரு தருணத்தில் பனியில் பிணங்களுடன் ஆழ்ந்து போய்க்கிடக்கும் அதே கிராமத்தில் அவன் தன் மரணத்தை சந்தித்துக் கொள்கிறான். கதாசிரியர் பொசெலி தர்மம் ஒன்றன் வழி செயற்படும் நீதி எனும் கருத்தை இங்கு தன் கதையில் முன் வைக்கிறார். ஆனால் தங்கவிழி மனிதன் விடயத்தில் அனைத்தும் பொய்த்துப் போகிறது.
ஏனெனில் தங்கவிழி மனிதனைக் கொல்வது பிராண்டனோ, டாவ்னோ அல்ல. மேலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட பாத்திரமான தங்கவிழி மனிதனிற்கும் நாயகர்களிற்கும் எதிரான போராட்டம் உணர்வுபூர்வமாகவும் அதே சமயம் விறுவிறுப்பு குறையாமலும் இருந்திருக்க வேண்டும் மாறாக கதையில் அது டப் என முடிந்துபோய்விடுகிறது. கதையின் அனைத்து நல்ல அம்சங்களையும் இந்த மிகையான ஏமாற்றம் அடித்துப் போட்டு விடுகிறது. இப்படி அருமையாக ஒரு கதையை சொல்லி வந்துவிட்டு இறுதியில் இப்படி ஒரு நமத்துப் போன சீனிப்பட்டாசு வெடிப்பை தந்தால் யார்தான் திருப்தி கொள்வார்கள். இதுவே எதிரானதாக இருந்திருந்தால் கதை டெக்ஸின் டாப் கதைகளில் இடம் பெற்றிருக்கும். இருப்பினும் கதை சுவாரஸ்யமானது, ரசிக்க அனேக தருணங்கள் உண்டு. ஓயா புலம்பல் புகழ் கார்சன் பனியில் புலம்புவது ஒரு சுகம். லிண்ட்மேன் ஏரியின் அருகே நிகழும் நீண்ட சண்டைக் காட்சி வாரே வா. டெக்ஸா கொக்கா. கார்சனையும், டெக்ஸையும் அவர்களின் முகத்தில் இட்ட கோடுகள் வழியாக முதுமைத்தோற்றம் கொண்டவர்கள்போல தோன்ற வைத்தாலும் கதையின் பெரும்பான்மையான காட்சிகளில் அதிரடி செய்திருக்கும் அல்ஃபோன்சோ பொண்ட். கோஸ்ட், ஜெரிக்கோ, நழுவும் நிழல், கருமின்னல் போன்ற சுவாரஸ்யமான சிறு பாத்திரப் படைப்புக்கள் என கதை மோசம் எனும் நிலையிலிருந்து கணிசமான தொலைவில்தான் நிற்கிறது. இக்கதையில் குளிருக்குள் ஒரு சூடான Bourbon மதுவை அடித்த இன்பம் உண்டு ஆனால் முழுமையான கிக் எட்டிவிடாத நிலையில்.