Monday, August 15, 2011

சீசரின் வீடு


மூளையின் சிதைவுற்ற திசுக்களை மீளுற்பத்தி செய்யும் ஆய்வுகளை வாலில்லா குரங்குகளில் மேற்கொண்டு வருகிறான் விஞ்ஞானியான வில். அவன் ஆய்வுகள் சாதகமான முடிவுகளை வழங்கும் நிலையை எட்டும்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்ட வாலில்லாக் குரங்கு ஒன்று முரட்டுத்தனமாக நடந்து கொள்ள ஆரம்பிக்கிறது. இதனால் அக்குரங்கு சுட்டுக் கொல்லப்படுகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட குரங்கு ஈன்ற குட்டியை ஆய்வுகூடத்திலிருந்து ரகசியமாக எடுத்து வந்து தன் வீட்டில் பராமரிக்க ஆரம்பிக்கிறான் வில். சீசர் எனப் பெயரிடப்பட்ட அந்த வாலில்லாக் குரங்கின் மூளைச் செயற்பாடுகள் வில்லை வியப்பிற்குள்ளாக்கும் எல்லைகளை தொட்டு நிற்கின்றன…..

பிரெஞ்சு அறிபுனைக் கதாசரியரான Pierre Boulle அவர்கள் 1963ல் படைத்த La Planete Des Singes எனும் நாவலைத் தழுவி அதன் சினிமா, தொலைக்காட்சி, காமிக்ஸ் வடிவங்கள் உருவாகி இருக்கின்றன. பீய்ர் வூல் கற்பனை செய்த, மனிதர்களை அவர்களின் பரிணாம அதிகார மற்றும் அறிவடுக்குகளிலிருந்து கீழிறக்கி விட்டு குரங்குகள் ஆதிக்கம் செய்யும் உலகொன்று தோன்றுவதற்கு காரணமான ஆரம்பங்களை முன்வைப்பதாகவே இயக்குனர் Rupert Wyatt வழங்கியிருக்கும் Rise of the Planete of the Apes திரைப்படம் அமைகிறது.

புரட்சியையோ எழுச்சியையோ ஒரு விதைக்கு ஒப்பிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வகையில் எதிர்காலமொன்றில் மனிதர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்து பூமியில் விழும் விதையாக சீசர் எனும் சிம்பன்ஸி உருவாக்கப்பட்டிருக்கிறது. சீசர் எனும் அவ்விதைக்கு நீருற்றி வளர்த்ததில் மரபணுவியல் விஞ்ஞானத்திற்கும், தனக்கு கீழான விலங்குகள் என மனிதன் கருதும் ஜீவன்கள்மீது அவன் நிகழ்த்தும் அடக்குமுறையுடன் கூடிய வன்முறைக்கும் முக்கிய பங்கிருக்கிறது. பீர் வூலின் நாவலில் குரங்குகள் என்பது மனிதனின் மனதில் வாழும் மிருகத்தனமான உணர்ச்சிகளை குறிப்பதாகவும், அடக்குமுறை, வன்முறை, இன நிற துவேஷம் என்பன அவனை மனிதன் எனும் ஸ்தானத்திலிருந்து துரத்தி பரிணாம ஏணியில் அவன் மிருக குணங்கள் ஆதிக்கம் பெறுவதை உணர்த்துவதாகவும் அமைந்தது.

ரூப்பர்ட் வைய்யேட்டின் இயக்கத்தில் குரங்குகளின் எழுச்சியைவிட அவை மனிதனுடன் கொண்டிருக்கும் உறவே பிராதனப்படுத்தப்படுகிறது. ஆய்வுகூடங்களில் பரிசோதனக்காகவும், மிருககாட்சி சாலைகளில் காட்சிப் பொருளாகவும், சர்க்கஸுகளில் வித்தை காட்டும் மிருகமாகவும் சித்தரிக்கப்படும் குரங்குகள் சில வேளைகளில் மனிதர்களின் இல்லங்களில் செல்லப்பிராணிகளாகவும் இடம் பிடித்துக் கொள்கின்றன. அவ்வகையான வாய்ப்பு பெற்ற சீசரிற்கும் அவனை தன் வீட்டில் பராமரிக்கும் வில்லிற்கும், அல்ஸெய்மர் நோயால் பாதிக்கப்பட்ட வில்லின் தந்தை சார்ல்ஸிற்கும் இடையில் உருவாகும் பாசம் மிகுந்த உறவு படத்தின் பலம் வாய்ந்த அம்சமாகும்.

rise-of-the-planet-of-the-apes-2011-20170-634715338rise-of-the-planet-of-the-apes-2011-20170-153087889சிறு குட்டியாக வில்லின் வீடு வந்து சேரும் சீசர் அங்கு படிப்படியாக வளர்வதும், தன் தாய் வழியாக அவன் மரபணுவில் கடத்தப்பட்ட அலகுகள் வழி அவன் மூளை அறிவு விருத்தியில் வியக்கதகு எல்லைகளை தொடுவதும் ஒரு சிறு குழந்தையின் குறும்புகளை ரசிக்க வைக்கும் விதத்தில் காட்சியாக்கப்பட்டிருக்கின்றன. விஞ்ஞானி வில் இங்கு நோயால் பீதிக்கப்பட்ட தன் தந்தைக்கும், சீசரிற்கும் ஒரு தந்தையாக ஆகி விடுகிறான். மனதை தொட வைக்கும் காட்சிகளால் திரைப்படத்தின் இப்பகுதி ரசிகர் மனதை தொட்டுக் கொண்டே இருக்கிறது. சீசரின் அரவணைப்பும், அவன் தொடுதல்களும் பாசத்தின் நீட்சிகளாக மனதில் படர்கின்றன. சீசர் பாத்திரம் ரசிகர்கள் மனதை வெகுவாக ஆக்கிரமிப்பது வில்லின் வீட்டில்தான்.

சீசர், வில்லையும், அவன் தந்தையும் தன் குடும்பமாக நினைத்துக் கொள்கிறான். அவன் தான் ஒரு சாதாரண வளர்ப்பு பிராணி அல்ல என்றே கருதுகிறான். இதனால்தான் தன் கழுத்துப் பட்டியை கழட்டி விட்டு வில்லின் காரில் பயணிகள் இருக்கையில் அவன் வந்து அமர்ந்து கொள்கிறான். வில்லின் தந்தைக்கு துன்பம் தரும் அயலவனையும் சீசர் தாக்குவது அவர்கள் தன் குடும்பம் எனும் எண்ணத்தினாலே ஒழிய வளர்ப்பு பிராணி காவலன் எனும் ஸ்தானத்தினால் அல்ல. தான் குடும்பத்தில் ஒருவன் என்பதை சீசர் நிரூபிக்கும் காட்சிகள் யாவும் மிகவும் உணர்ச்சிகரமாக படமாக்கப்பட்டிருக்கின்றன.

இருப்பினும் சீசர் அவன் வீட்டிற்குள்ளேயே இருக்க பணிக்கப்பட்டிருக்கிறான். சாளரம் ஒன்றின் வழியே அவன் வெளியுலகை, பரந்த உலகை எண்ணி ஏங்குவது உணர்த்தப்படுகிறது. வீடு ஒரு சிறை ஆனால் அன்பு நிறைந்த சிறை. பரந்த வெளியில் விருட்சங்களினூடாக தாவிப் பாயும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது சீசர் தன்னை விடுவித்துக் கொள்கிறான். விருட்சங்களும், சுவர்கள் அற்ற வெளிகளும் அவனிற்கு பிடித்திருக்கின்றன. சாளரம் என்பது சீசரிற்கு அன்பான சிறையின் அடையாளம். அதனால்தான் தான் அடைக்கபபடும் கூண்டின் சுவரில் அவன் அன்பை வரைந்து கொள்கிறான். அதிகாரங்கள் மற்றும் நீதித்துறையின் கெடுபிடிகள் என்பவற்றின் நத்தை வேக நகரல் அவனிற்கு தன் இனத்தின் மீது மனிதன் காட்டி வரும் குரூரத்தை காட்டி விடுகிறது, தன் இனத்திற்கிடையில் நிலவும் வன்முறையின் பிடியை அனுபவிக்க செய்கிறது, தன் இனத்தை இதே நிலையில் தொடர்ந்தும் நீடிக்க விடக்கூடாது எனும் தீர்மானத்திற்கு சீசரை இட்டு வருகிறது. நம்பிக்கை ஒன்றின் முறிதலும், அவன் மனதில் எழும் சுதந்திர கனவும் அவனை தான் அடைபட்ட கூட்டில் அவன் வரைந்த சாளரத்தை அழிக்க செய்கின்றன. தமக்குரித்தான வீட்டை தாம் தேடிச் செல்ல வேண்டும் என்பதை அவனிற்கு உணர்த்திவிடுகின்றன. மனிதகுலத்துடன் இணைந்து வாழ்தல் என்பது தம் இயல்பிற்கு மாறானது என்பதை சீசர் உணர்வதுதான் எழுச்சியின் முதல் முளை.

la-planete-des-singes-les-origines-2011-20170-807017264சீசர் எனும் குரங்கு Motion Capture எனும் நுட்பத்தால் உருவாக்கப்பட்டாலும் அக்குரங்கின் நடிப்பிற்கு மூலமாக இருந்தவர் நடிகர் Andy Serkis. இணையத்தில் அவர் நடிப்பு எவ்வகையாக சீசராக பரிமாணம் பெற்றது என்பதை நீங்கள் பார்க்க முடியும். மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். திரைப்படத்தின் சிறந்த நடிகர் ஆண்டி செர்கிஸ் எனும் சீசர்தான் என்பதில் ஐயமே இல்லை. அதே போல் நவீன தொழில் நுட்பத்தின் வழி உருவாக்கப்பட்டிருக்கும் குரங்குகள், அவைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் யாவும் வியக்க வைக்கின்றன. குரங்குகளை அடைத்து வைக்கும் நிலையத்தில் குரங்குகளினிடையே நிகழும் சம்பவங்கள் நல்ல ஆய்வின் பின்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பது தெளிவு. பபூனிற்கும் சீசரிற்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் நகைச்சுவை கலந்து உருவாக்கபபட்டிருக்கின்றன.

திரைப்படத்தின் இறுதிப் பகுதியான குரங்குகளின் எழுச்சி, பரபரபிற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. என்னை அக்காட்சிகள் பெரிதும் கவரவில்லை. ஆய்வுகூட அழிப்பு, வன்முறை என்பன திரைப்படத்தை வழமையான வசந்த வசூல் அள்ளி சூத்திரத்தினுள் தள்ளி விடுபவையாக அமைகின்றன. இவ்வளவு சிறிய இடைவெளியில் இவ்வகையான ஒரு சிறையுடைப்பை குரங்குகள் ஒருங்கமைக்க முடியுமா எனும் கேள்வி எழாமல் இல்லை. இருப்பினும் மிக மென்மையான மனித உணர்வுகளை தழுவியணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் படத்தின் முன்னைய பகுதிகள் இத்திரைப்படத்தை ஒரு நல்ல அனுபவமாக மாற்றி அடிக்கின்றன. மனிதகுலத்தின் அழிவு மனிதனாலேயே என்பதாக படம் நிறைவு பெறுகிறது. ஆனால் சீசர் தன் இனத்துடன் தன் வீட்டிற்கு திரும்பி விடுகிறான். அழியப்போகும் மனிதகுலத்தை உயர்ந்த விருட்சமொன்றின் உச்சத்தில் நின்றவாறே அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். தன்னை கொல்ல வருபனையும் கொல்லத் தயங்கும் அவன் கண்கள் எம் கண்களுடன் இணைந்து கொள்கின்றன. [***]

Monday, August 8, 2011

சூப்பர் 8


லிலியான் எனும் புறநகரொன்றில் நிகழும் ரயில் விபத்தொன்றின் பின்பாக அந்த சிறிய நகரில் மர்மமான சில சம்பவங்கள் அரங்கேற ஆரம்பிக்கின்றன. இச்சம்பவங்கள் அந்நகர மக்களின் அமைதியான வாழ்வை சீர்குலைப்பவையாக அமைகின்றன. இந்த ரயில் விபத்தைக் குறித்த ஒரு ரகசியத்தை வெளியே விடாது காத்து வருகிறது ஒரு சிறார் குழு….

அமைதியான ஒரு புறநகர், சூட்டிகையான ஒரு நண்பர் குழு, துவிச்சக்கரவண்டி உலாக்கள், சிறு நகரை சல்லடை போட்டுத் தேடும் ராணுவம், இவற்றின் மத்தியில் மறைந்திருக்கும் ஒரு மர்மம் போன்ற அம்சங்கள் Super 8 திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், இயக்கிய அருமையான படைப்பான E.T. யிலும் காணக்கிடைக்குமெனினும் சூப்பர் 8 திரைப்படமானது அதன் பார்வையாளர்களிற்கு வழங்கிடும் திரையனுபவம் அதனின்றும் வேறுபட்ட ஒன்றாகவே இருக்கிறது.

சூப்பர் 8, திரைப்படத்தின் முக்கிய கவர்ச்சி அம்சங்களாக அதன் இயக்குனர் J.J. Abrams திரையில் கொணர்ந்திருக்கும் மனித உறவுகள் குறித்த மென்மையான விபரிப்பு, உற்சாகம் துள்ளும் ஒரு சிறுவர் குழு அதன் நடவடிக்கைகள், இனிமையான பின்னனிப் பாடல்களுடன் அழகாக படமாக்கப்பட்டிருக்கும் 70களின் அந்திமம் என்பவற்றைக் கூறலாம்.

மைக்கல் பே மற்றும் ரோலன்ட் எமிரிக்தனங்கள் அற்ற திரைப்படத்தின் மர்மமுடிச்சுகூட ஒரு ஆறுதல் எனலாம். ஆனால் அந்த மர்மமுடிச்சை சூப்பர் 8ன் சிறப்புக்களில் ஒன்றாக கருத இயலாதவாறே அதன் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. குடும்ப உறவு, நட்பு, காதல் எனும் பிரதான வீதிகளில் நகரும் கதையை விறுவிறுப்பாகவும் வேகமாகவும் நகர்த்திட அந்த மர்மமுடிச்சு இயக்குனரிற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது. அதில் பிரம்மித்திட ஏதும் இல்லை. இயக்குனரின் பிரதான இலக்கு ரசிகர்களின் மனங்களின் ஆழத்தில் துயிலும் மென்மையான உணர்வுகளிற்கு தூண்டில் போடுவதாகவே அமைகிறது. அவரின் அத்தூண்டில் சரியாகவே வீசப்பட்டிருக்கிறது எனலாம். மாறாக மர்மமுடிச்சிற்கும் மனிதர்களிற்குமிடையில் இருக்ககூடிய உறவானது மனதை தொடும் ஒன்றாக திரைக்கதையில் உருவாக்கப்படவில்லை.

தனக்கான ஒரு இடத்தை நோக்கி திரும்பல் அல்லது வீடு செல்லல் என்பதனை திரைக்கதையின் இழைகளில் ஒன்றாக கொண்டிருக்கிறது சூப்பர் 8. திரைப்படத்தில் வரும் சிறுவன் ஜோ, சிறுமி ஆலிஸ் ஆகிய இருவரும் தம் அன்னையரை இழந்தவர்கள். ஜோவின் தாய், தொழிற்சாலை விபத்தொன்றில் பலியாகிவிடுகிறாள். ஆலிஸின் தாய் தன் குடிகாரக் கணவனுடன் வாழ விரும்பாது அவனை விட்டு விலகிச் சென்று விடுகிறாள். தாயன்பு வெறுமையான இரு வீடுகளில் வாழும் இரு சிறார்களாக இவ்விரு பாத்திரங்களும் கதையில் காட்டப்படுகிறார்கள்.

ஜோவிற்கும், ஆலிஸிற்கும் அவர்களின் தந்தைகளிற்குமிடையில் இருக்கும் புரிந்துணர்வின்மை என்பதன் அரூப சுவர்களை கொண்டதாகவே அவர்கள் வீடுகளும் அமைந்திருக்கின்றன. இச்சுவர்களுடனான மோதலே இவ்விரு சிறுவர்களையும் அச்சுவர்களிற்கு வெளியே அல்லது அச்சுவர்கள் மறையும் தருணத்தில் உற்சாகமாக இயங்க செய்கின்றன. தம்மிருவர் இடையேயும் ஒரு அந்தரங்க வெளியை உருவாக்க உந்துகின்றன.

super-8-2011-20233-1562492729இயக்குனர் ஏப்ராம்ஸ் இச்சிறார்கள் எதிர்கொள்ளும் வெறுமையான கணங்களையும், சிறுவர்களின் தந்தைகளிற்கும் சிறுவர்களிற்குமிடையில் உரையாட முடியாமல் துடிக்கும் பாசத்தையும், அக்கறையையும், இவ்விரு சிறார்களும் சந்திக்கும் போதெல்லாம் அவர்கள் இடையில் முளைவிடும் ஈர்ப்பையும் மிகவும் அழகாக திரைப்படுத்தியிருக்கிறார்.

கனமான வெறுமை அழுத்தும் வீடுகளிலிருந்து விடுபட்டு நட்பையும், சாகசத்தையும், விருப்புடன் தேடி ஒடும் இந்த இரு சிறுவர்களும் ஒருவரை ஒருவர் நோக்கி ஈர்க்கப்படுவது என்பது இயல்பான ஒன்றாகவே தெரிகிறது. தம் தந்தைகள் இடும் தடைகளைத் தாண்டியும் அவர்கள் தம் சந்திப்புக்களை தொடர்வதற்கு காரணம் அந்த சந்திப்பில் அவர்கள் உணரும் அன்பான ஒரு வெளியே. இந்த அன்பும் அக்கறையுமே இறுதியில் ஆலிஸை காப்பாற்றுவதற்காக ஜோவை ஓட வைக்கிறது. அதற்காக அவன் எதிர்கொள்ள வேண்டிய ஜீவன் அவன் உயிரை எடுத்துவிடலாம் என்பதை அவன் அறிந்தே தன் நண்பர்களுடன் ஆலிஸை தேடிச் செல்கிறான்.

இவ்வாறான ஒரு நண்பர் குழுவில் இடம்பெறும் ஒவ்வொருவரையும் அவர்களின் குணாதிசயங்களுடன் ரசிக்க வைத்து விடுகிறார் இயக்குனர் ஏப்ராம்ஸ். அவர்கள் கூடும் போதெல்லாம் உற்சாகம் அங்கு கும்மியடிக்க ஆரம்பித்து விடுகிறது. சூப்பர் 8 கமெரா ஒன்றின் உதவியுடன் குறும்படத்தை இயக்கும் சார்ல்ஸ், வெடி நிபுணன் கேரி, குறும்படத்தில் டிடெக்டிவ் பாத்திரமேற்று நடிக்கும் மார்ட்டின் என ஒவ்வொருவரும் தனி ரகமாக சிரிக்க வைக்கிறார்கள். வயதிற்கு மீறிய உரையாடல்களை நிகழ்த்தி உயிரை வாங்கும் சிறுவர்கள் நிறைந்த படைப்புக்களில் இருந்து சூப்பர் 8 வேறுபடுவது ரசிகனிற்கு கிடைத்த அதிர்ஷ்டம்தான். இச்சிறார்களின் குடும்பங்கள் வழியேயும், நகரில் வாழும் மக்கள் வழியேயும் சிறிய புறநகர் சமூகமொன்றின் வேறுபட்ட மனநிலைகளையும் ஏப்ராம்ஸ் மெலிதாக காட்டியிருக்கிறார்.

திரைப்படம் நிறைவடைந்த பின்பாக சிறுவன் சார்லஸ் இயக்கிய திகில் குறும்படம் பார்வைக்கு வரும். அது அட்டகாசமான ஒரு அனுபவமாக அமையும். அதேபோல் சிறுமி ஆலிஸாக வேடமேற்றிருக்கும் Elle Fanning, சார்ல்ஸின் திரைப்பட காட்சி ஒன்றிற்கான ஒத்திகையில் தன் துணைவனான டிடெக்டிவ்வை பிரிய மறுத்து உரையாற்றுமிடத்தில் அவர் முகத்தில் வந்துவிழும் உணர்வுகளின் தொகுப்பு அசர வைக்கிறது.

இழப்புக்களின் பின்பாகவும் வாழ்க்கையை தொடர்ந்திட வேண்டியதன் அவசியத்தையும், அன்பான உறவு மற்றும் நட்பின் பெறுமதிகளையும் வலியுறுத்துவதாக சூப்பர் 8 திரைப்படத்தின் இறுதிப்பகுதி அமைந்திருக்கிறது. நெருக்கடிகள் சில வேளைகளில் உறவுகளை எதிர்பாராத வகைகளில் புதுப்பித்து தருகின்றன. கையெட்டும் தூரத்தில் இருந்த பாசத்தை எட்டியணைக்கவும், ஆரத்தழுவிடவும் செய்கின்றன. தனக்கான ஒரு கூட்டை நோக்கி திரும்பும் எந்த ஜீவனும் அங்கிருக்கும் வெறுமைக்காக வேகம் காட்டுவதில்லை. தனக்கென அங்கிருக்கும் அன்பும், பாசமுமே அதன் வீடு திரும்பலை காலகாலத்திற்கும் இனிமையான ஒரு அனுபவமாக ஆக்ககூடும். ரசிகர்களின் மனதில் ஏக்கம் சுற்றிப் புதைத்திருந்த ஒரு ரகசியமான வீடு திரும்பலை மீண்டும் மேற்பரப்புகளிற்கு இட்டு வருவதிலும், அவர்கள் தம் பால்யகால நினைவுகளை மீண்டும் அசைபோட வைப்பதிலும் சூப்பர் 8 சுபமாக வீடு திரும்பியிருக்கிறது. [**]

ட்ரெய்லர்

Friday, August 5, 2011

டீச்சரம்மா


வசதிபடைத்த ஆசாமி ஒருவனுடன் திருமண நிச்சயத்தை ஏற்படுத்திக்கொண்ட சிறுவர் பள்ளி ஆசிரியையான எலிசபெத் [Cameron Diaz], அவள் வகித்து வரும் ஆசிரியை பதவியை திருமணத்திற்காக ராஜினாமா செய்கிறாள். ஆனால் வசதி படைத்த அந்த ஆசாமியோ தன் பணத்தையே எலிசபெத் அன்பு செய்கிறாள் என்பதை கண்டு கொண்டு அவளுடனான தன் திருமண நிச்சயத்தை முறித்துக் கொள்கிறான்.

இந்த நிச்சய முறிவால், இன்னுமொரு வசதிபடைத்த ஆண் கிடைக்கும் வரையில் மீண்டும் தன் ஆசிரியைத் தொழிலை செய்யும் நிர்பந்தத்திற்குள்ளாகிறாள் எலிசபெத். தன் மார்புகளை பெரிதாக்கி கொள்வதும், பசையுள்ள பார்ட்டி ஒன்றை விரைவில் மடக்கி விடுவதும் அவள் மனதில் இருக்கும் மிக முக்கிய குறிக்கோள்கள் ஆகும். இவற்றிற்காக எந்த வழிமுறைகளிலும் இறங்க எலிசபெத் தயாராக இருக்கிறாள். ஆனால் எலிசபெத்தின் இந்த குறிக்கோள்கள் நிறைவேறுதற்கு ஒரு தடையாக வந்து சேர்கிறாள் அவளுடன் பணிபுரியும் சக ஆசிரியையான அமி…..

சற்றுக் கவர்ச்சியாக உடையணிந்து வரும் ஒரு ஆசிரியை. தன் வகுப்பு மாணவர்களிற்கு பாடங்களை நடாத்த விருப்பமின்றி அவர்களை வகுப்பறையில் திரைப்படங்களை பார்க்க செய்யும் ஒரு ஆசிரியை. வகுப்பறையில் தூக்கம் போடும் ஒரு ஆசிரியை. மது, போதைப் பொருள் போன்றவற்றை தன் வகுப்பறையிலேயே ரகசியமாக பதுக்கி வைத்திருக்கும் ஒரு ஆசிரியை. தன் மார்க்கச்சையை தன் மாணக்கனிடம் கழட்டி அன்பளிப்பாக தரும் ஒரு ஆசிரியை [ இதில் வக்கிரம் ஏதும் இல்லை என்றாலும்].

இப்படியான, சற்றே வயதான ஒரு கவர்ச்சி ஆசிரியையை ஒரு சிறுவர் பள்ளி நிர்வாகம் ஆசிரியப் பணியில் தொடர்ந்து நீடித்திருக்க அனுமதிக்குமா என எழும் கேள்வியை, கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கும் விமலா டீச்சர் + கணேசன் = டாய்லெட்டில் கிச்கிச் எனும் வரிகளை பிரின்ஸிபால் கணேசன் வேகமாக துடைத்துப் போடுவதைப்போல் நீங்கள் துடைத்துப் போட முடிந்தால் Jake Kasdan இயக்கியிருக்கும் Bad Teacher எனும் இப்படத்தை நீங்கள் தாராளமாக ரசித்திடலாம்.

bad-teacher-2011-17974-1875525872ஃபரெலி சகோதரர்கள் இயக்கிய There’s Something about Mary திரைப்படத்திற்கு பின்பாக இவ்வளவு மோசமான குணங்கள் கொண்ட ஆனால் ரசிக்க வைக்கும் ஒரு பாத்திரமாக பெரியம்மா கமரூன் டயஸை திரையில் காண்பதே அலாதியாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர் க்ளோஸப் காட்சிகளை தவிர்த்தல் அவரிற்கும், அவர் ரசிகர்களிற்கும் எதிர்காலத்தில் நன்மை பயக்கும் என்றே நான் கருதுகிறேன். வாய் நிறையப் பொய், அண்டப் புளுகு, கெட்ட வார்த்தை, தன் மனதில் நினைப்பதை கன்னத்தில் அறைவதுபோல் சொல்லும் பண்பு என திரையில் அவரின் வயது உறுத்தலாக இருந்தாலும் ரசிகர்களை தான் ஏற்றிருக்கும் ஆசிரியை பாத்திரத்தை விரும்ப செய்து விடுவதில் உற்சாகாமான வெற்றி கமரூன் டயஸிற்கு வந்து சேர்கிறது. மிகவும் கொண்டாட்டமான உணர்வுடன் படத்தை நடித்துக் கொடுத்திருக்கிறார் பெரியம்மா.

தன் மார்புகளை பெரிதாக்க தேவைப்படும் பணத்திற்காக அவர் செய்யும் தில்லுமுல்லுகள், சக ஆசிரியனான ஸ்காட்டை தன் கவர்ச்சி வலையில் வீழ்த்த அவர் நிகழ்த்தும் சதிகள், வகுப்பறையில் தன் மாணக்கர்களிற்கு அவர் செய்யும் கொடுமைகள் என அவர் செய்திடும் எல்லாவற்றையும் சலிப்பின்றி ரசிக்க கூடியதாகவே இருக்கிறது. தன் மார்புகளை பெரிதாக்க விரும்பி சத்திர சிகிச்சை நிபுணரிடம் செல்லும் கமரூன் அங்கு ஒரு நங்கையின் ஒரு ஜோடி சத்திர சிகிச்சை மார்புகளை வருடி சாம்பிள் பார்ப்பது அவரின் ஜாலியான கெட்ட குணத்திற்கு ஒரு உதாரணம்.

நல்ல நாயகிக்கு ஏற்ற எதிர் நாயகியாக, கமரூன் டயஸிற்கு இத்திரைப்படத்தில் அருமையான ஒரு எதிர்பாத்திரமாக அமைகிறார் அமி எனும் சக ஆசிரியை வேடமேற்றிருக்கும் நடிகையான Lucy Punch. கமரூன் எவ்வளவிற்கு ஒரு கெட்ட ஆசிரியையாக இருக்க முடியுமோ அவ்வளவிற்கு ஒரு முன்மாதிரியான நல்லாசிரியையாக இருக்கிறார் அமி. அந்தப் பாத்திரம் வரும் காட்சிகளில் எல்லாம் கமரூனின் ரசிகர்கள் மனதில் கிளர்ந்தெழும் அந்த மெலிதான எரிச்சலே போதும் நடிகை லுசி பன்ச்சின் திறமையை சொல்ல. கமரூனின் தில்லுமுல்லகள் குறித்து பிரின்ஸிபால் கணேசனிடம் போட்டுக் கொடுத்து கமரூனின் சீட்டைக் கிழித்து வீட்டிற்கு அனுப்ப அவர் முயலும் போதெல்லாம் அவரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. கமரூன் மடக்க விரும்பிய ஸ்காட்டை தான் மடக்கிய பின் லுசி அடிக்கும் காதல் கூத்துக்களும், கமரூனிற்கும் அவரிற்குமிடையில் நிகழும் குளிரான மோதல்களும் வாய்விட்டுச் சிரிக்க வைப்பவை. லுசியின் நடிப்பு கமரூனை மேலும் ரசிக்க செய்கிறது என்றால் அது மிகையல்ல. மாறாக ஸ்காட் வேடத்தில் வரும் நடிகர் Justin Timberlake ன் பாத்திரம் ரசிகர்களிற்கு ஏமாற்றத்தை வழங்கும் ஒரு பாத்திரமாக அமைகிறது.

படம் நெடுகிலும் நன்றாக வாய்விட்டு சிரிக்ககூடிய காட்சிகள் கொண்ட, சலிப்பை தராத ஒரு திரைப்படமாகவே Bad Teacher அமைந்திருக்கிறது. இருப்பினும் பயங்கரமான ராவடிகளில் ஈடுபட்டு பின் தனக்கென ஒரு பொருத்தமான பாதையை கமரூன் தேர்ந்தெடுத்துக் கொள்வதாக படத்தை நிறைவு செய்வது அப்பாத்திரத்தைக் குலைப்பது போல் உள்ளதாக நான் உணர்கிறேன். இத்திரைப்படம் ஒரு தரமான காமெடியா…இல்லை. புத்திசாலித்தனமான காமெடியா…. இல்லை. இத்திரைப்படம் உலகிலுள்ள அக்மார்க் ஜொள்ளு ஜமீந்தார்களிற்கு என அளவு எடுத்து உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு படைப்பு. Bad Teacher கையில் சிக்கிய ஜொள்ளு ஜமீந்தார்கள் ஏமாற வாய்ப்பில்லை. [**]

ட்ரெய்லர்

Thursday, August 4, 2011

கோளியா கொக்கா


கோளிக் காமிக்ஸ் எடிட்டரு அய்யா கொக்ராஜ் அவர்களின் சூட்டாம் வரி எதிர் வினை.

cockraj1கடந்த சில தினங்களாக மிகுந்த மனவுளைச்சலிற்கு உள்ளான ஒருவனாக நான் மாறியிருக்கிறேன். நம் லோக்கல் வைரம் கோயாவி, லோக்கல் கோமேதகம் வவ்வாலான் சாகசக் கதைகளின் சூப்பர் ஹிட் வெற்றி என்பது என் மனதிற்கு பெருமகிழ்ச்சியை தந்தாலும், சமகாலத்தின் சாபமும் வரமுமான இணைய தொழில்நுட்பத்தின் துணையுடன் சில விஷமிகள் கோளிக் காமிக்ஸ் குறித்து அரங்கேற்றும் மலிவு நாடகமும், ஒரு லோக்கல் காமிக்ஸ் இதழ் மீது குறிவைத்து கண்மூடித்தனமாக வீசப்படும் ஈனத்தனமான பல்தேசிய அதிகாரங்களின் அடக்குமுறை கணைகளும் என்னை சீறத் தயாராகிவிட்ட ஒரு எரிமலையாக உருவாக்கிவிட்டிருக்கிறது.

எமது முகவர்களிடம் இருந்து வரும் தகவல்கள் ஆனந்தத்தையும், வேதனையும் எமக்கு ஒருங்கே அளிப்பவையாகவே உள்ளன. காமிக்ஸ் இதழ்கள் தீர்ந்து போனதன் பின்பாக முகவர்களை தேடி வரும் அன்பு வாசகர்கள், இதழ்கள் தீர்ந்துபோன ஏமாற்றத்தினை தாங்கிக் கொள்ளவியலாத நிலையில் முகவர்களின் மீதான கட்டற்ற வன்முறையில் இறங்கியிருக்கிறார்கள்.

இவ்வன்முறையானது உலகின் பல மூலைகளிலும் ஒரு பொல்லாத தொற்றுநோய் போல பரவியிருப்பதையே மருத்துவமனைகளில் இருந்து தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பாடல் வழியாக வலியுடன் ஒலிக்கும் எம் முகவர்களின் குரல்கள் தெளிவான ஒரு காமிக்ஸ் பக்கம் போல் எமக்கு படம் பிடித்து காட்டுகின்றன. வன்முறையால் மட்டுமே சிக்கல்களிற்கு உடனடித் தீர்வு கண்டடையப்படக்கூடும் எனும் இன்றைய காலகட்டத்தின் மோசமான புரையேறி கருத்தாக்கம் எம் சமூகத்தை வெகுவாக பாதித்திருப்பதை நாம் இன்னமும் மறுத்துக் கொண்டிருக்க முடியாது.

kcom 1எமது காமிக்ஸ் இதழ்கள் வெளிவரும் தருணங்களில் தவறாமல் அதற்கான அறிவிப்புக்களை நாம் முன்கூட்டியே வழங்கி வருகிறோம். ஒரு லோக்கல் காமிக்ஸ் என்ற வகையில் அதன் ஆசிரியன் என்ற நிலையில் இதையிட்டு நான் பெருமைபட்டுக் கொள்வதில் நாணப்படப் போவதில்லை. ஆனால் உங்கள் செயல்வேகமே நீங்கள் கோளிக் காமிக்ஸை கையகப்படுத்துவதை தீர்மானிக்கும் முக்கிய காரணி என்பதை தீட்சண்யமாக நீங்கள் உங்கள் நினைவில் இருத்திக் கொள்ளல் வேண்டும். வேகமற்ற வேங்கை வேங்கையாக இருக்க முடியாது வேண்டுமானால் அது ஒரு கொங்கையாக நீடித்திடலாம். கடந்தவாரம் எம் முகவர்களின் மீது ஜமைக்காவில் இடம்பெற்ற வன்முறையில் இறங்கிய ஒருவரின் பெயர் உசைன் போல்ட் என்பதை இங்கு எழுதி செல்ல விரும்புகிறேன்.

எம் வாசகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இதழ்கள் அவர்கள் கைக்கு கிட்டாமல் போகும் ஏமாற்றத்தின் வலியை வன்முறை அலையாக உருமாற்ற கூடாது என்று அவர்களிடம் நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் உள்ளத்தில் வன்முறை கொப்புளிக்க ஆரம்பிக்கும் தருணங்களில் நீங்கள் காந்தி, மார்ட்டின் லூதர் கிங், டொமினிக் ஸ்ட்ராஸ்கான் போன்றவர்களை உங்கள் மனத்திரையில் ஒரு அழகான கறையாக உருவாக்கிக் கொள்ளுங்கள் என உங்களை நான் அன்புடன் வேண்டி நிற்கிறேன். முகவர்களை தாக்குவதை தயவுசெய்து நிறுத்துங்கள். நீங்களே ஒரு முகவராகி விடுங்கள். நீங்கள் விரும்பும் இதழ்கள் உங்களிற்கு தவறாமல் கிடைக்க இதைவிட வேறு என்ன சிறப்பான வழி இருக்க முடியும். ஆனால் எதற்கும் ஜூடோ பழகிக் கொள்ளுங்கள். நீங்களும் முகவராகலாம் எனும் தலைப்பில் இதற்கான விபரங்கள் அடுத்த இதழின் 69ம் பக்கத்தில் வெளியாக உள்ளது என்பதை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே.

vavalanவானதுர்கா பதிப்பகத்தின் ஓயாத பெருங்குரல் கோளிக் காமிக்ஸ் வெளியீடுகள் வருங்காலத்தில் சர்வதேச சந்தையில் ஏற்படுத்தப்போகும் தாக்கங்களின் முன்சங்கொலியாகவே என் காதுகளில் ஒலிக்கிறது. பல போலிப் பெயர்களிலும், அடையாளங்களிலும் அந்த ஐரோப்பிய பதிப்பகம் ஒரு குடிசைத் தொழிலிற்கு ஒப்பிடக்கூடிய நிலையில் இன்று இருக்கும் கோளிக் காமிக்ஸ் மீது நடாத்தும் அபாண்டமான தாக்குதல்களும், எந்தவிதமான ஆதாரங்களுமற்ற பிரச்சாரங்களும், வழங்கும் மூலக்கதையின் விபரங்களும், இணையத்தில் அவற்றைக் கண்டடையக்கூடிய முகவரிகளும் எம் வெளியீடுகள் மீது அவர்கள் கொண்டுள்ள அச்சத்தையே காட்டுகிறது. வானதுர்கா பதிப்பகம் சில ஐரோப்பிய காமிக்ஸ்களுடன் என்னை பிராங்ஃபர்ட் விமானநிலையத்தில் வைத்து கைது செய்ய மேற்கொண்ட முயற்சி பெரும் தோல்வியில் முடிந்தது அவர்கள் அடிவயிற்றில் விழுந்த ஒரு பலமான உதையாகவே இன்று அவர்களால் உணரப்படும். இருப்பினும் பெருநிறுவனமான வானதுர்காவின் லாபியிங் காரணமாக ஐரோப்பாவில் கோளிக் காமிக்ஸ் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பது வருத்தமான ஒரு செய்தியே.

ஆனாலும் இவ்வகையான தடைகளையும் மீறி ஐரோப்பிய கறுப்பு சந்தையில் கோளிக் காமிக்ஸ் தங்கு தடையின்றிப் புழங்குவதற்கு நான் தக்க ஏற்பாடுகளை செய்திருக்கிறேன். இதனால் கோளிக் காமிக்ஸிற்கு கிடைக்ககூடிய அவப்பெயரை வாசகர்களின் அபாரமான வரவேற்பு சுத்தமாக துடைத்துப் போட்டுவிடும் என நான் எண்ணுகிறேன். கள்ளக் காமிக்ஸ் கொக்ராஜ் என சரித்திரம் அதன் வரிகளில் என்னை நினைவுகூரட்டும்.

pvppநோர்வே உளவுத்துறையில் இருந்து என்னை வந்து சந்தித்த அதிகாரி ஒருவர், தலைகீழாக ஒரு தம் பீடி கதையில் இடம்பெற்றதைப் போலவே அண்மையில் தம் நாட்டை ஒரு நிகழ்ச்சி கலக்கிப் போட்டதை சுட்டிக் காட்டி நோர்வேயைச் சேர்ந்த சில ரகசிய அமைப்புக்களுடன் எனக்கு தொடர்பிருக்கிறதா என அறிய முயன்றார். ஆர்ஜெண்டினாவில் இரு பிரெஞ்சு பெண்கள் கடத்தப்பட்டு கொடூரமாக [ பாலியல் வன்கலவிக்கு பின்பாக] கொலை செய்யப்பட்ட சம்பவம் அச்சு அசலாக பாலைவனத்தில் பத்மா! பத்மா! கதையில் வரும் காட்சியை ஒத்திருப்பதாக கூறி பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் ஒரு நாள் முழுதாக என்னை வறுத்தெடுத்தார்கள். பாட்டு வாத்தியாரைக் கடத்திய பறக்கும் தட்டு கதையில் தனக்கு பீடியை கடன் தர மறுக்கும் பொட்டிக்கடை பாஸை பார்த்து கோயாவி சீற்றத்துடன் கூறும் வரிகளான “ஆனானப்பட்ட அமெரிக்காவே கடனில் நொடிந்து போகும் நாள் தொலைவில் இல்லை” என்பது குறித்த ஒரு நீண்ட விளக்கத்தை நான் அமெரிக்க அதிகாரத்திற்கு அளிக்க வேண்டியிருந்தது. வவ்வாலான் அணியும் டைட்டான ஆடைகள் மேட் இன் சைனா என தெரிய வந்ததிலிருந்து சீனாவில் கோளிக் காமிக்ஸ் தடை செய்யப்பட்ட இதழாகியிருக்கிறது. ஆனால் வவ்வாலான் அணியும் டைட்டான ஆடைகளின் ஏற்றுமதியை அந்நாடு தடை செய்யவில்லை!

இவ்வாறான பல்முகசிக்கல்களிற்கு முகம் கொடுக்கும் ஒரு ஏழைக் காமிக்ஸ் எடிட்டரின் தொழில் வாழ்க்கையின் ஒரு நாளை ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள். சில வேளைகளில் காமிக்ஸ் வெளியிடுவதை நிறுத்திவிட்டு போர்னோ துறையில் இறங்கிவிடலாமா என்றுகூட பயங்கரமான சிந்தனைக் குட்டைகளிற்குள் நான் வீழ்ந்து போயிருக்கிறேன். இருப்பினும் உலகெங்கும் உங்கள் கைகளில் கோளிக் காமிக்ஸ் எனும் என் இலட்சிய தாகம் தீரும்வரை போராடுவது என தீர்மானித்திருக்கிறேன். புரட்சியின் விதை நிலத்தில் விழும்போது அது புரட்சியின் விதை என்பது யாரிற்கும் தெரிந்திருப்பதில்லை என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

palivankumarkidஇவ்வகையான சர்வதேச அழுத்தங்களின் கொடூரப்பிடியில் நெருக்கப்பட்டிருக்கும் எனக்கு கோளிக் காமிக்ஸ் வெளியீடான பாட்டு வாத்தியாரைக் கடத்திய பறக்கும் தட்டின் முன் அட்டை ஸ்கேன், கோளிக் காமிக்ஸின் கோமேதகம் வவ்வாலனின் பெயர் போன்றவற்றை என் அனுமதி இன்றி பிரசுரித்ததோடு மட்டுமில்லாது சர்வதேச பரிசு வழங்கி விடுவார்கள் என என் வெளியீட்டைக் கிண்டலும் அடித்து கொக்ராஜ் செய்வதை செய்து கொள்ளட்டும் என சவடால் விட்டிருக்கும் அந்தப் பாஸிசப் பதிவரை நினைத்தால் பரிதாபமாகவே இருக்கிறது. வானதுர்கா பதிப்பகத்திற்கு மிக நெருங்கிய அப்பாஸிசப் பதிவரிடமிருந்து இதைவிட நான் வேறு எந்த தரத்திலும் ரசனையிலும் கருத்துக்களை எதிர்பார்த்திட முடியும். அந்த வானதுர்கா பாஸிச சொம்பர் கால்விரல்களால் பதிவெழுதி சாதனை படைக்கும் நாள் வெகு அருகிலேயே உள்ளது என்பதை இக்கணத்தில் அவரிற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மிகத் தந்திரமாக அப்பாஸிசப் பதிவர் சொல்லாமல் சென்ற விடயம் என்னவெனில் பழிவாங்கும் ஆர்க்கிட் எனும் வரவிருக்கும் எம் கதையின் தலைப்பை சீனக் கணணி வல்லுனர்களின் உதவியுடன் தெரிந்து கொண்டு அதனை தன் சமீபத்திய பதிவின் தலைப்பாக இட்டிருக்கிறார் என்பதுதான். சாகஸ மங்கை செக்ஸி குயின் சக்கி, தன் கணவன் மரணத்திற்கு காரணமானவர்களை நவீன முறைகளில் பழிவாங்கிடும் கதைதான் பழிவாங்கும் ஆர்க்கிட். கோளிக் காமிக்ஸ் ரசிகர்களை பல கோணங்களில் இக்கதை திருப்திப்படுத்தும் என்பதை இப்போதே என்னால் உறுதியாக கூறமுடியும். இதேவேளையில் என்னை மீண்டும் மீண்டும் சீண்டும் மிகையதிகாரங்களிற்கும், வான்துர்காவின் வாய்தா பதிவரிற்கும் நான் கூறிக்கொள்வது இது ஒன்றுதான், உலைமூடியை வைத்து எரிமலையை மூட முடியாது. ஐ வில் வி பேக்.

பி.கு: நாளை பேஸ்புக்கின் தமிழ் காமிக்ஸ் குழும முகவரியில் சூடாக வெளியாக இருக்கும் கோளிக் காமிக்ஸ் எடிட்டரு அய்யா மேன்மைதகு கொக்ராஜ் அவர்களின் சூட்டாம் வரி எதிர்வினை இன்றே சீன கணனி வல்லுனர்கள் உதவியால் வானதுர்கா பாஸிச சொம்பரால் இங்கு பிரசுரமாகி உள்ளது. இந்த முயற்சியில் உதவிட்ட குத்து டைம்ஸுக்கு என் நன்றிகள் உரித்தாகுக.

Wednesday, August 3, 2011

பழிவாங்கும் ஆர்க்கிட்


முன்பொரு காலத்தில் நான் சிறுவனாக இருந்தபோது கண்டுகளித்த சில திரைப்படங்களில், தன் குடும்பத்தை பூண்டோடு அழித்த கொடியவர்களை பிரதான பாத்திரங்கள் எவ்வழியிலாவது பழிவாங்கிவிடுவது என்பது மிகவும் முக்கியமானவொரு அம்சமாக இடம்பெற்றிருந்தது.

கதையின் நாயகன் அல்லது நாயகியின் அன்பு உறவுகள் கொடியவர்களால் கறுப்பு வெள்ளையில் துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருக்க, இந்த நாயகனோ அல்லது நாயகியோ ஒரு பொட்டியின் அல்லது அருகில் இருக்கும் மர்ம அறையொன்றின் சாவித்துவாரம் வழியாகவோ, அல்லது கட்டிலின் கீழிருந்தோ[…அய்யய்யோ மெத்தை பையன் தலைல முட்டிடப் போகுதே மாரியாத்தா காப்பாற்றும்மா…..] அல்லது வைக்கோல் போரிற்குள் மறைந்திருந்தோ தங்கள் உறவுகளின் கொடூரமான முடிவை பயம், கண்ணீர், கிளிசரின்,பரிதாபம், கையாலாகமை என்பன தம் முகத்தில் தாண்டவமாடிட பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

இந்த கொடிய செயலில் ஈடுபட்ட நீசர்களை நயகனோ நாயகியோ அல்லது திரையரங்கில் வீற்றிருக்கும் ரசிகர்களோ எதிர்காலத்தில் இலகுவாக அடையாளம் கண்டுகொள்ளும் வண்ணம் சில அடையாளங்கள் அந்த நீசர்களிற்கு வழங்கப்படிருக்கும். மண்டையோடு பச்சை, முகத்தின் குறுக்கே ரயில் தண்டவாளம் போல் ஒரு தழும்பு, ஓநாய் தலையை பூணாக கொண்ட ஒரு கைத்தடி என்பன இவ்வகையான அடையாளங்களிற்கு சில உதாரணங்களாகும். ஜாலியாக தம் வாழ்வை கழித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த அடையாளங்கள் பழிவாங்குதல் எனும் கடமையை நாயகன் அல்லது நாயகிக்கு நினைவூட்டும். அவர்களும் தம் கடமையை ஆற்ற புறப்படுவார்கள். அரங்கில் விசிலடியும், பலகை இருக்கைகளின் தட்டலும் பட்டையைக் கிளப்பும்.

நல்ல வேளையாக Olivier Megaton இயக்கியிருக்கும் Colombiana எனும் திரைப்படத்தில் சிறுமி Cataleya வின் குடும்பத்தை அவள் கண்கள் முன்பாகவே அழித்தொழிக்கும் கொடியவர்களிற்கு மேற்கூறப்பட்ட சிறப்படையாளங்கள் ஏதும் வழங்கப்படவில்லை. அந்தக் கொடியவர்களின் பிடியிலிருந்து தப்பி அமெரிக்கா வந்தடைந்து, ஆளாகி, கறுப்பு ஆர்க்கிட்டாக பூத்து நின்ற போதிலும் கத்தலியாவின் மனதில் அந்தக் கொடியவர்களின் முகம் மறைந்திடவில்லை. துரதிர்ஷ்டவசமாக இதுமட்டுமே இத்திரைப்படத்தின் ஆறுதலான ஒரு அம்சம்.

மனிதர்கள் அறிந்தும் தவறு செய்பவர்களே. ஆனால் இத்திரைப்படம் ஆரம்பமாகும்வரை நான் அறியாமல் ஒரு தவறு செய்வது எனக்கு தெரிந்திருக்கவில்லை. வழமையான விளம்பரங்கள் ஓடித் தீர திரைப்படம் ஆரம்பமாகி இத்திரைப்படம் Europa Corp தயாரிப்பு என்பது தெரியவந்தபோது என் அடிவயிற்றில் பகீரொன்றின் ப உருப்பெற ஆரம்பித்திருந்தது.

colombiana-2011-20332-1345479037இயூரோபா கார்ப் தயாரிப்பாக இருந்தாலும் சிலவேளைகளில் அந்த நபர், திரைக்கதை, வசனம் எழுதாத திரைப்படமாக இருக்க வாய்ப்புகள் உண்டு என மனதை தேற்றிக் கொள்ள ஆரம்பித்தேன். ஆனால் திரைக்கதைக்கு பொறுப்பாக அந்த நபரின் பெயரும் வந்து திரையில் விழுந்தபோது ஏற்கனவே உருப்பெற்ற ப வுடன் கீரும் முழுமை பெற்று சேர்ந்து கொண்டது. அடக் கடவுளே என மனதில் எண்ணிக் கொண்டேன். யார் சொன்னது கடவுளிற்கு காது கேட்பதில்லை என!!

1- கொலம்பியா: சிறுமி கத்தலியாவின் குடும்பத்தை அழிக்க அவள் வீட்டிற்கு வருகிறது முரடர் படை. அவர்களிடமிருந்து கத்தலியா தப்பி ஓடுகிறாள், முரடர்கள் துப்பாக்கியால் அவளை நோக்கி தாறுமாறாக சுடுகிறார்கள். அப்போது முரடர்களின் தலையான மார்கோ கூறுகிறான் சூடாதீங்கடா, அவ எனக்கு உயிரோட வேணும்… இந்த துரத்தல் முடிவிற்கு வருகையில் சிறுமி கத்தலியா பாதாள சாக்கடை ஒன்றினுள் புகுந்துவிட அவளை நோக்கி தன் துப்பாக்கியால் சராமாரியாக சுட ஆரம்பிப்பது மேற்கூறிய அறிவுறுத்தலை தந்த அதே மார்கோதான்.

2- அமெரிக்கா: பொலிஸ் கார் ஒன்றின் மீது வேகமாக வரும் ஒரு கார் மோதுகிறது. மோதியது ஒரு பெண். மிகையான போதை. ஆரம்ப விசாரணைகளின் பின் பொலிஸ்நிலையத்தில் அப்பெண் தடுத்து வைக்கப்படுகிறாள். அப்பெண்ணின் மிகை போதையை தெளிவிப்பதற்காக அவளிற்கு காப்பி!!!! வழங்கச் சொல்கிறார் பொலிஸ் அதிகாரி. அப்பெண்ணிற்கு ஒரு கிண்ணத்தில் காப்பி எடுத்துச் செல்லும் ஒரு பெண் பொலிஸ், அக்கிண்ணத்தை காப்பி கலக்கிய உலோகக் கரண்டியுடனே!!!! காவல் அறை கதவின் மீது வைத்து விட்டு அசால்ட்டாக திரும்புகிறார்.

மேலே எழுதிய இரண்டும் சிறு உதாரணங்களே. பக்கம் பக்கமாக எழுத படத்தில் உதாரணங்கள் இருக்கிறது. Luc Besson திருந்தவே போவதில்லை, ரசிகர்களை மடச் சாம்பிராணிகளாகவே எண்ணிக்கொண்டு அவர் எழுதி வழங்கும் படைப்புகள் வருடத்திற்கு வருடம் மேலும் தரம் கெட்டவையாகவே உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஒரு ஆக்‌ஷன் படத்தில் எதற்கு தர்க்கரீதியான சம்பவங்களை நான் தேட வேண்டும் எனும் கேள்வியை நான் கேட்டுப் பார்த்து விட்டேன். ஆனால் இத்திரைப்படத்துடன் ஒப்பிட்டால் பாட்டு வாத்தியாரைக் கடத்திய பறக்கும் தட்டு கதைக்கு ஏதாவது சர்வதேச விருதை வழங்கி விடுவார்களோ எனும் பயம் உருவாகி இருக்கிறது.

kcom 1அவதார் எனும் படத்தில் நீலப்பூச்சு பூசி நடித்த நடிகையான Zoe Saldana இப்படத்தில் நீலப்பூச்சின்றி கத்தலியாக வேடமேற்றிருக்கிறார். Cattleya எனும் ஆர்க்கிடு வகையின் பெயரை தழுவி கத்தலியாவின் பெயர் உருவாக்கப்பட்டதாம். தன் பழிவாங்கும் ஆட்டத்தில் கத்தலியா மேற்குறித்த ஆர்க்கிட்டினை ஒரு அடையாளமாக வரைவாராம் அல்லது விட்டுச் செல்வாராம். நடிகை ஸோவே சல்டானாவிற்கு அதிரடியான இந்த ஒப்பந்தக் கொலைகாரி பாத்திரம் பொருந்தவேயில்லை. அவர் அடிதடிகளில் இறங்கும்போது இரக்கம்தான் வருகிறது. குளியல் காட்சியில் அவர் கரங்களிற்கு சோப்பு போடுவதை தெளிவாக காட்டுகிறார்கள். ஆனால் அவர் மார்புகள் சிறிதானவை என்பதை ரசிகர்கள் அறிந்து கொள்ள அவர் அனுமதித்திருக்கிறார். சிக்காகோவில் இருக்கும் கத்தலியாவின் மாமாவாக வரும் நடிகர் Cliff Curtis க்கு ராபர்ட் டிநீரோ போல நடிக்க வேண்டும் எனும் விபரீத ஆசை ஏற்பட அந்த ஆசையை இத்திரைப்படத்தில் நிறைவேற்றியிருக்கிறார். வேதனையான முகபாவம் காட்டும் ராபார்ட் டிநீரோவின் முகத்தில் முட்டைத்தோசை போட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது க்ளிஃப் கர்ட்டிஸின் நடிப்பு.

சரி படத்தில் புதிதாக ஏதாவது இருக்கிறதா எனப் பார்த்தால், கொலம்பியப் பவேலாக்களின் கூரை உச்சிகள் வழியே நடக்கும் துரத்தலில் Yamakasi, அமெரிக்கா வரும் கத்தலியா தான் ஒரு கொலைகாரியாக வேண்டும் என தன் மாமாவிடம் கேட்கையில் Léon, உறவுகளை விலத்தி தனியே வாழும் ஒப்பந்தக் கொலைகாரி ஒருத்தியின் வாழ்க்கை முறை, உளவியல்! அவளின் விசித்திரமான காதல்!!! போன்றவற்றில் Nikita என லுக் பெசனின் பழைய படைப்புக்களின் நிழல்கள் கொலம்பியான திரைப்படத்தில் நிழல் நடனம் புரிகின்றன. இப்படி ஒரு முட்டாள்தனமான ஒப்பந்தக் கொலைகாரியை லுக் பெசனால் மட்டுமே உருவாக்க முடியும் என்பதற்கு அவளின் அந்த விசித்திரமான காதலே சான்று. லுக் பெசன் படித்த கடைசி க்ரைம் நாவல் பாங்காக்கில் தமிழ்வாணானாக இருக்குமோ எனும் சந்தேகம் எழாமல் இருக்க முடியுமா என்ன.

ஹாலிவூட் மகாராஜாக்கள் வழங்கும் அதிரடி ஆக்‌ஷன்களைப்போல் தன் படைப்புக்கள் இருக்க வேண்டும் எனப் பிடிவாதமாக முயலும் லுக் பெசன் இப்படத்திற்கு எழுதியிருக்கும் வசனங்கள் அமெச்சூர் நாடக வசனங்கள் போலிருக்கின்றன. ஆனால் லுக் பெசன் ஓய மாட்டார். உலகெங்கிலும் சூப்பர் ஹிட்டாகும் ஒரு அதிரடி ஆக்‌ஷனை தரும் வரையில் அவர் கற்பனை நதி நிற்கப்போவதில்லை, அந்த வேட்கை அவரை தன் கைக்குள் வைத்து விபரீத விளையாட்டு காட்டியபடியே இருக்கும். நான்தான் அவதானமாகவும் ஜாக்ரதையாகவும் இருக்க வேண்டும். வவ்வாலான் மட்டும் லுக் பெசனை கடத்திச் சென்று கண்காணா இடத்தில் மறைத்து வைத்தால் அவரிற்கு மேட் இன் சைனா ஹிட் சூட் ஒன்றை நான் வாங்கிப் பரிசளிப்பேன். வஞ்சம் அழகானது என்பதால் நான் கண்ணை மூடிக் கொண்டு இருக்க இயலுமா. வேட்டைக்காரன், வேங்கை வகையான திரைப்படங்களை எள்ளி நகையாடும் முன் கொஞ்சம் கொலம்பியானா பாருங்கள் ராஜாக்களே.

பி.கு: பாட்டு வாத்தியாரைக் கடத்திய பறக்கும் தட்டு ஸ்கேன், வவ்வாலன் பெயர் போன்றவற்றின் உபயோகத்திற்கு கோளிக் காமிக்ஸ் எடிட்டரு கொக்ராஜிடம் நான் அனுமதி பெறவில்லை அவர் செய்வதை செய்து கொள்ளட்டும்.

ட்ரெய்லருங்கோ

Sunday, July 31, 2011

எறும்புகள்


பூட்டுக்கள், மற்றும் சாவிகள் சம்பந்தமான திருத்தல் வேலை நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஜோனதன், பாரிஸின் அபாயம் நிறைந்த புறநகர்ப் பகுதிகளில் இரவு வேளைகளில் பணியாற்ற மறுத்தமைக்காக வேலை நீக்கம் செய்யப்படுகிறான்.

இவ்வேளையில் அவனது மாமா எட்மொண்ட், அவரது இறப்பிற்குப் பின் அவனிற்கு உரித்தாக எழுதிச் சென்ற வீடு அவனிற்கு கிடைக்கிறது.

ஜோனதனின் மாமா எட்மொன்ட் உயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றியவர். மர்மமான முறையில் குளவிகளால் தாக்கப்பட்டு மரணமடைவதற்கு முன்பாக எறும்புகள் குறித்த தீவிர ஆராய்ச்சிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். எறும்புகளின் மீதான அவதானிப்புக்களின் விளைவாக அவர் ஒரு கலைக் களஞ்சியத்தை உருவாக்கினார் ஆனால் அதனை பிறர் கண்களில் படாது மிக ரகசியமாக பாதுகாத்திருந்தார்.

வேலையற்ற நிலையில் வாடகைச் செலவைக் குறைக்கும் முகமாக தன் மாமா எட்மொண்டின் வீட்டிற்கு தன் மனைவி லூசி, மகன் நிக்கோலா, மற்றும் அவனது வளர்ப்பு நாய் சகிதம் குடி வருகிறான் ஜோனதன்.

தனது மாமா எட்மொண்ட் எதற்காக அவர் வீட்டை தனக்கு உயிலில் எழுதி வைத்தார் என்பது ஜோனதனிற்குப் புதிராகவே இருக்கிறது. தன் மாமாவைக் குறித்து விரிவாக அறிந்து கொள்வதற்காக தனது பாட்டியை சென்று பார்க்கிறான் அவன்.

பாட்டி கூறும் விபரங்களிலிருந்து எட்மொண்ட் குறித்து சில தகவல்களை தெரிந்து கொள்கிறான் ஜோனதன். பாட்டியிடமிருந்து அவன் விடைபெறும் வேளையில் ஜோனதனிடம் கையளிக்கச் சொல்லி எட்மொண்ட் விட்டுச் சென்றிருந்த ஒரு கடிதத்தை அவனிடம் தருகிறாள் பாட்டி. அக்கடிதத்தை திறந்து பார்க்கும் ஜோனதன் அதில் "என்ன நிகழ்ந்தாலும் நிலவறைக்குள் மட்டும் நுழையாதே” எனும் ஒரே ஒரு வரி தன் மாமா எட்மொண்டின் கைகளால் எழுதப்பட்டிருப்பதை கண்டு வியப்பும், அச்சமும் கொள்கிறான்.

9782226061188FS வீடு திரும்பும் ஜோனதன் தன் மனைவியிடமும், மகனிடமும் எக்காரணம் கொண்டும் யாரும் நிலவறைக்குள் நுழையக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறான். அங்கே முரட்டு எலிகள் அதிகம் வாழ்வதாகவும் அவர்களை எச்சரிக்கிறான்.

எட்மொண்டின் வீட்டில் ஜோனதன் குடும்பத்தினரின் வாழ்க்கை அதன் வழமையான நிகழ்வுகளுடன் நகர்கிறது. புதிய வேலையொன்றை ஜோனதன் விரைவில் தேடிக் கொள்ள வேண்டும் என அவனை நிர்பந்திக்கிறாள் லூசி. ஜோனதனிற்கும், லூசிக்கும் இடையில் பிரிவு என்னும் சொல்லின் ஆரம்பம் உருவாகத் தொடங்கிய வேளையில் அவர்களது வளர்ப்பு நாயானது காணாமல் போய்விடுகிறது.

காணாமல் போன நாயை பல இடங்களில் தேடிப்பார்த்தும் அதனைக் கண்டு பிடிக்க முடியாததால், வீட்டிலிருக்கும் நிலவறைக்குள் இறங்கி அதனை தேடிப்பார்க்கும்படி ஜோனதனை அவனது மனைவியும் மகனும் பிடிவாதமாகக் கேட்டுக் கொள்கிறார்கள்.

முதலில் தயங்கும் ஜோனதன், அவர்களின் தொடர்ந்த வற்புறுத்தல் காரணமாக நிலவறைக்குள் நுழைகிறான். நீண்ட நேரத்திற்கு பின்பு நிலவறையிலிருந்து வெளிவரும் அவன் கைகளில் அவர்களினது வளர்ப்பு நாய் குருதி தோய்ந்த நிலையில் பிணமாகக் கிடக்கிறது.

இந்நிகழ்விற்கு பின்பாக ஜோனதனின் நடத்தைகள் சிறிது சிறிதாக மாற்றம் கொள்ள ஆரம்பிக்கின்றன. வீட்டுச் செலவிற்கே பணம் போதாத நிலையிலும் எறும்புகள் சம்பந்தமான நூல்களை வாங்கிக் குவிக்கிறான் அவன். நிலவறைக்குள் தனது நாட்களை கழிக்கிறான். இது அவனிற்கும் லூசிக்கும் இடையில் மேலும் சிக்கல்களை உருவாக்குகிறது.

ஒரு நாள் நிலவறைக்குள் வழமை போலவே நுழையும் ஜோனதன் அங்கிருந்து திரும்பி வராது போகிறான். அவனைத் தேடி செல்லும் அவனது மனைவியும் மறைந்து போகிறாள். இவர்களைத் தேடி நிலவறைக்குள் நுழையும் ஒரு பொலிஸ் அதிகாரியும், தீயணைப்பு படை வீரர்களும் காணாமல் போய்விடுகிறார்கள். இதனைத் தொடர்ந்து பொலிஸ் நிலவறையை சீல் வைக்கிறது. நிக்கோலா ஒரு அனாதை விடுதியில் சேர்க்கப்படுகிறான்..

9782226086365FS ஜோனதன் தன் மாமாவின் வீட்டிற்கு குடிவரும் அதே வேளையில் Bel o Kan எனப்படும் எறும்பு நகரில்[ புற்றில்], தன் பனிக்கால தூக்கத்திலிருந்து விழித்தெழுகிறது ஆண் எறும்பு 327.

நகரில் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட ஏனைய சில எறும்புகளுடன், நகரை விட்டு வெளியேறும் 327, சூரிய ஒளியில் குளித்து தன் சக்தியைப் புதுப்பித்துக் கொள்கிறது. சூரிய ஒளியிலிருந்து தேவையான சக்தியைப் பெற்ற பின் கடமையே கண்ணாக தன் நகரிற்குள் திரும்பும் 327, அங்கு இன்னமும் உறக்கம் கலையாமல் இருக்கும் எறும்புகளை தொட்டு, அவற்றின் துயில் கலைக்க ஆரம்பிக்கிறது. இவ்வாறாக நீண்ட உறக்கத்திலிருந்து செவ்வெறும்புகளின் நகரமான பெல் ஒ கான் உயிர் பெறுகிறது.

நகரில் விழித்தெழும் செவ்வெறும்புகள் அவரவர்க்குரிய பணிகளில் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்க, 327க்கு உணவு வேட்டைக்கு போகும்படி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. வேட்டைகளில் ஏற்கனவே அனுபவம் பெற்ற எறும்புகளுடன் உணவு வேட்டைக்கு கிளம்பிச் செல்கிறது 327. அவர்களின் உணவு வேட்டையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பெல் ஒ கானிற்கு திரும்பும் வழியில் அந்த எறும்புக் கூட்டம் மிக மர்மான ஒரு முறையில் தாக்கப்பட்டு அழித்தொழிக்கப்படுகிறது. இத்தாக்குதலில் 327 மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி விடுகிறது.

உயிர்தப்பிய 327 பெல் ஒ கானிற்கு விரைவாக வந்து சேர்கிறது. எவ்வகையான தாக்குதல், தாக்குதல் யாரால் நடாத்தப்பட்டது என்பது தெரியாத நிலையில் 327ன் முறைப்பாடுகளையும், எச்சரிக்கைகளையும் நகரில் குடிமக்கள் அலட்சியம் செய்கின்றார்கள்.

நகரின் அதிகார உச்சமான எறும்பு ராணியும்[ 327, மற்றும் பெல் ஒ கான் எறும்புகளின் தாயார்] 327ன் புலம்பல்களை பொருட்படுத்தாது விடுகிறாள். வேறு பணிகளில் ஆர்வம் செலுத்தும்படி ராணி, 327க்கு ஆலோசனையும் தருகிறாள். ஆனால் 327க்கு அதன் நகரத்திற்கு ஏதோ ஒரு அபாயம் வரவிருக்கிறது எனும் அச்சம் தொடர்ந்தபடியே இருக்கிறது. இதனால் 327 இம்மர்மம் குறித்து தனியாக தனது தேடலை ஆரம்பிக்கிறது. அதன் தேடல்கள் பெல் ஒ கான் நகரினுள்ளேயே அதன் குடி மக்களிற்கு தெரியாது நிகழும் ஒரு சதியை அது கண்டுகொள்ள வைக்கிறது…..

ஜோனதனிற்கும் மற்றவர்களிற்கும் நடந்தது என்ன? நிலவறையின் ரகசியம்தான் என்ன? 327 கண்டுகொண்ட சதிதான் என்ன?

இரு வேறு தளங்களில் விறுவிறுவென ஒரு த்ரில்லர் போல் பயணித்து, இரு தளங்களையும் ஒரே புள்ளியில் மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து இணைக்க செய்கிறது Les Fourmis [எறும்புகள்] எனும் இச்சிறு நாவல். நாவலை எழுதியவர் பிரெஞ்சு மொழியின் பிரபல நாவலாசிரியரான Bernard Werber.

BernardWerber ஒரு எறும்பின் பனிக்கால துயில் கலைதலிலிருந்து ஒரு எறும்பு புற்றினுள் நிகழும் பல்வேறுவகையான நிகழ்வுகளை சுவையாக விபரிக்கிறது நாவல். எறும்புகள் எவ்வாறு தமக்குள் உரையாடிக் கொள்கின்றன, உணவு வேட்டை, எதிரிகளை எதிர்த்து தாக்குதல், யுத்த தந்திரங்கள், காதல் கலப்பு பறத்தல், புதிய நுட்பங்களின் கண்டுபிடிப்பு, எறும்பு புற்றின் உருவாக்கம், அதன் அபிவிருத்தி, அதன் ஆதிக்க விரிவு என நாவலில் படிக்க கிடைக்கும் விடயங்கள் வாசகனை மயங்கடிக்கின்றன.

நாவலைப் படிக்க படிக்க எறும்புகள் மீதான அபிப்பிராயம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தச் சின்ன உருவங்களிற்குள் இவ்வளவு பெரிய அறிவா என உருவாகும் வியப்பு சுள்ளென்று கடிக்கிறது. நாவலாசிரியர் தன் கற்பனைகளில் இருந்த தகவல்களை உருவாக்காது நிஜமான தகவல்களை வழங்கியிருப்பது கதையின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது.

கதையில் அடிக்கடி குறுக்கிடும் எட்மொண்ட்டின் கலைக்களஞ்சியப் பக்கங்கள், உலகில் பூச்சி இனத்தின் தோற்றம், தொடர்ந்து அவற்றிற்கு எதிராக நிகழும் அழிப்பு செயல்களிலிருந்து நீடிக்கும் அவைகளின் இருத்தல், மனித சமூகத்திற்கும், எறும்புகள் கூட்டத்திற்குமிடையிலான ஒப்பீடுகள், சித்தாந்தம் என சிறப்பான குறிப்புக்களை வழங்குகின்றன.

எறும்புகளின் டிராகன் [ஓணான்] வேட்டை, சிலந்தியின் வலை வீடு நிர்மாணம், நத்தைகளின் காதல் என சுவையான பல தகவல்கள் நாவலில் இருக்கின்றன.

உன் எதிராளி தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் வரை காத்திருப்பதை விடச் சிறந்த யுத்த தந்திரம் எதுவுமில்லை” இப்படி ஒரு பஞ்ச் சித்தாந்தத்தை உதிர்ப்பவர்; வலையைப் பின்னி விட்டு அதில் விழுந்த இரை, உயிரிற்காக துடிப்பதை அவதானிக்கும் ஒரு சிலந்தியார். இவ்வகையான பூச்சி சித்தாந்தங்களிற்கு கதையில் குறைவில்லை.

71YDW4MXSBL._SS500_.gif பெர்னார் வெர்வேயின் எளிமையான கதை சொல்லல் நாவலின் முக்கிய பலம். சாதாரண வாசகன் அதிகம் அறிந்திராத எறும்புகளின் உலகிற்கு அவனை அழைத்துச் சென்று அதன் பிரம்மாண்டத்தில் அவனை திக்குமுக்காட வைக்கிறது கதை. அறிவியல் சொற்களை அதிகம் புகுத்திக் கதையோட்டத்தை தடுக்காது, தெளிவாக, மென் நகைச்சுவையுடன் கதையை நகர்த்துகிறார் வெர்வே. கதையின் விறுவிறுப்பு பக்கங்களை தொய்வின்றிக் கடத்திச் செல்கிறது.

வெர்வே, பிரெஞ்சு மொழியில் புகழ் பெற்ற ஒரு நாவலாசிரியர். இவரது நாவல்கள், அறிவியல், தொன்மம், ஆன்மீகம், சித்தாந்தம், சாகசம், எதிர்காலம் குறித்த பார்வைகள் பற்றிப் பேசுபவையாக இருக்கின்றன. 1991ல் எறும்புகள் நாவல் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. எறும்புகளின் தொடர்ச்சியாக Le Jour des Fourmis[ நாளை எறும்புகளின் நாள்], La Revolution des Fourmis[ எறும்புகளின் புரட்சி], என மேலும் இரு நாவல்களை அவர் எழுதினார். நாவல்கள், சினிமா, சித்திரக்கதை, நாடகம், என பல தளங்களில் இயங்குபவர் வெர்வே. 35 மொழிகளில் இவரது நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன. உலகில் அதிகம் வாசிக்கப்படும் பிரெஞ்சு எழுத்தாளர்களில் ஒருவராக வெர்வே இருக்கிறார். எறும்புகள் நாவல் ஆங்கிலத்தில் Empire Of The Ants எனும் தலைப்பில் வெளியாகியிருக்கிறது.

கதையின் முடிவானது அறிவு கொண்ட இரு இனங்களிற்கிடையிலான ஒரு புதிய ஆரம்பத்தை முன் வைக்கிறது. அதன் சாத்தியம் குறித்த கேள்விகளை இது ஒரு புனை கதை எனும் எண்ணம் அடக்குகிறது. ஆனால் மனதில் கேள்விகள் எட்டிப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றன. மனிதர்களை விட எறும்புகள் பராக்கிரமம் மிகுந்தவை, இந்த உலகின் உண்மை ஆண்டகைகள் அவைகளே என்பதாக கதை நிறைவு பெறுகிறது. அதனை நம்பால் இருப்பதுதான் சற்றுக் கடினமான செயலாக இருக்கிறது. [***]

Saturday, July 16, 2011

ஹாரிபொட்டரும் ஏமாற்றக் குவளையும்!


உணவு உண்ணும் போதும், உறங்கச் செல்லும் முன்பாகவும் தொலைக்காட்சியில் அன்றைய செய்தி நறுக்குகளைப் பார்ப்பது எனக்கு வழக்கமாகிக் கொண்டு வருகிறது. கடந்த இரு வாரங்களில் ஹாரிபொட்டர் திரைப்படத்தின் நிறைவுப் பகுதியின் வரவு குறித்தும், அதன் வரவின் முன்பாகவும் பின்பாகவும் தவறமால் தொற்றிக்கொள்ளும் அந்த ஹாரிஜூரம் குறித்தும் குறிப்பிடத்தக்க நறுக்குகளை தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் தவறாத பிரார்த்தனைபோல் ஒளிபரப்பி தம்மையும் ஹாரிஜூரத்தின் பரப்பிகளாக மாற்றி அகமகிழ்ந்தன.

அந்நறுக்குகளின் வழி ஹாரி மிகப்பிரம்மாண்டமான ஒரு ரசிகர் உலகத்தை இன்னமும் தன் கைக்குள் வைத்திருப்பது ஆச்சர்யமான ஒன்றாகவே எனக்கு தோன்றியது. ஹாரிபொட்டரின் நிறைவுப்பகுதியின் சர்வதேச முதற்காட்சிக்கு இங்கிலாந்தில் கூடிய சர்வதேச ரசிகர் கூட்டம், அதனைத் தொடர்ந்து பல நாடுகளில் இடம்பெற்ற நள்ளிரவுக் காட்சிகளின் பின்பான ரசிகர்களின் எதிர்வினைகள் யாவும் ஹாரிபொட்டரின் இறுதிப்பகுதியின் புகழை மட்டுமே பாடின அல்லது தொலைக்காட்சி ஊடகங்கள் புகழ் பாடப்பட்ட எதிர்வினைகளை மட்டுமே காட்டின. யாவரும் ஒரு உலகலாளவிய வியாபாரத்தில் அறிந்தோ அறியாமலோ பங்கு பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பது ஆச்சர்யமான ஒன்றாக எனக்கு தோன்றியது ஆனால் இவ்வியாபாரத்தின் லாபத்தில் மட்டும் யாவர்க்கும் பங்கு கிடைப்பது இல்லை.

ஹாரிபொட்டர் இறுதி நாள் படப்பிடிப்பின் பின்பாக தான் கண்ணீர் விட்டு அழுததாக ஹாரிபொட்டர் வேடமேற்ற நடிகர் டானியல் ராட்க்ளிஃப் ஒரு பேட்டியில் கூறுவதை நான் பார்த்தேன். டானியல், நீங்கள் மட்டும் அழவில்லை என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் உங்கள் கண்ணீர் ஆனந்தக் கண்ணீரா இல்லை அனுதாபக் கண்ணீரா என்பது குறித்து எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. ஆனால் இத்துடன் திரைப்படத்தொடர் முடிந்ததே என்பது என்னைப் பொறுத்த வரையில் ஆனந்தக் கண்ணீரிற்கான ஊக்கிதான்.

இவ்வளவு புகழ்ச்சிகளின் மழையிலும், பாராட்டுக்களின் அரவணைப்பிலும், ரசிகர்களின் பித்துவத்திலும் ஊறித்திளைத்த ஹாரிபொட்டர் திரைப்படத்தின் நிறைவுப் பகுதி, வரைகலை உதவியுடன் உருவாக்கப்பட்டிருக்கும் சில காட்சிப் படைப்புக்களையும், செவ்ரெஸ் ஸ்னேப் சம்பந்தமான உணர்சிகரமான தருணங்களையும், அவ்வப்போது அருமையாக ஒலிக்கும் இசையையும் தவிர்த்து என்னைப் போன்ற ரசிகன் ஒருவனின் எதிர்பார்ப்பின் இறுதிக் குவளையையும் ஏமாற்றத்தால் மட்டுமே நிரப்பும் மந்திரத்தையே தன்னில் கொண்டிருக்கிறது. வோல்டெர்மோரின் உயிர்க்கூறுகள் அழிக்கப்படுகையில் அவன் பலவீனமுறுவதைப் போலவே இத்திரைப்படமும் தன் பலத்தை இழந்து கொண்டே இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்கிறது.

இடிந்து நொறுங்கிக் கொண்டேய்ய்ய்ய்ய்ய்ய்யிருக்கும் மந்திரவாதிகளின் கல்லூரி, விறுவிறுப்பற்ற மோதல் காட்சிகள், முகத்தில் இழுப்பொன்று இழுத்துக் கொண்டே குச்சிப்பொடி மந்திரம் காட்டும் ஹாரி மற்றும் அவன் சகாக்கள், பெண் சாயம் பூசிய குரலில் தன் மேலங்கியை தடவிக் கொண்டு நாகினிப் பாம்பை தன் பின்னால் இழுத்துச் செல்லும் அபத்தமான ஒரு வோல்டெர்மோர், இழு இழுவென இழுக்கப்படும் உச்சக்கட்டக் காட்சிகள் என மேலதிகமாகவும் சில குவளைகளை ஏமாற்றத்தால் நிரப்பும் சக்தி வாய்த்திருப்பது இத்திரரைப்படத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று. அன்புத் தம்பி ஹாரி, RIP. [*]

6a00e5510dc3dd88330120a5718d0f970b-800wiகடந்த நாட்களில் Tim Powers எழுதிய The Anubis Gates எனும் புதினத்தை படித்து முடிக்கும் வாய்ப்புக் கிட்டியது. காலத்தில் பயணித்தல் எனும் கருவை எடுத்துக் கொண்டு டிம் பவர்ஸ் ஒரு சுவையான நாவலை 1983 களில் எழுதியிருக்கிறார் என்பதுதான் இந்நாவலைப் படித்து முடித்த பின்பாக எனக்கு தோன்றிய எண்ணமாகும்.

1983ல், டாரோ கொச்ரான் எனும் செல்வந்தனால் இங்கிலாந்திற்கு வருவிக்கப்படுகிறான் 19ம் நூற்றாண்டு இங்கிலாந்துக் கவிஞர்கள் குறித்து நூல்களை எழுதும் பிராண்டேன் டொய்ல் எனும் எழுத்தாளன், காலத்தில் பயணிக்கும் ஒரு உத்தியை அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கண்டு பிடித்திருக்கும் செல்வந்தன் டாரோ, 19ம் நூற்றாண்டை நோக்கி சில தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களை காலத்தில் பின்னோக்கி அனுப்பி வைக்க விரும்புகிறான். இப்பயணிகளிற்கு 19ம் நூற்றாண்டின் இங்கிலாந்துக் கவிஞர்கள் குறித்த ஒரு வழிகாட்டியாக இருக்க பிராண்டேன் டொய்ல் வேண்டிக் கொள்ளப்படுகிறான். செல்வந்தன் டாரோவின் நிபந்தனைகளிற்கு சம்மதித்து காலத்தில் பின்னோக்கிப் பயணிக்கும் [ கதையில் தாவுதல் எனும் சொல்லே பிரயோகிக்கப்படுகிறது] பிராண்டன் டொய்ல், எதிர்பார்க்க முடியாத சம்பவங்களின் நிகழ்வுகளால் மீண்டும் 1983க்கு திரும்ப இயலாது 1811ல் இங்கிலாந்தில் அகப்பட்டுக் கொள்கிறான். பிராண்டன் டொய்லின் கதை என்னவானது என்பதை மரபான கதை சொல்லலில், விறுவிறுப்பு கலந்து சொல்லியிருக்கிறார் கதாசிரியர் டிம் பவர்ஸ்.

காலத்தில் பயணம் செய்தல் குறித்த தர்க்க பூர்வமான வாதங்களை நாவலில் – ஒரு அத்தியாயம் தவிர்த்து- அதிகமாக முன்வைக்காதது என் போன்ற வாசகனிற்கு டிம் பவர்ஸ் வழங்கியிருக்கும் ஒரு வரம். மிகவும் தெளிவான எளிமையான ஆனால் புத்திசாலித்தனமான கதை சொல்லலை நகைச்சுவையுடன் இந்நாவலில் கையாண்டிருக்கிறார் டிம் பவர்ஸ்.

எகிப்திய கடவுள்கள் மற்றும் தொன்மம், மந்திரவாதிகள், கறுப்பு மாந்தீரிகம், நரநாய்கள், கூடுவிட்டு கூடு பாய்தல், ரகசிய சகோதரத்துவங்கள், 18ம் நூற்றாண்டு இங்கிலாந்தின் பிச்சைக்கார மற்றும் திருடர் குழு தலைவர்களின் அட்டகாசமான நடவடிக்கைகள், மந்திரத்தால் உருவாக்கப்படும் மனித நகலிகள் என படிக்க படிக்க சுவையையும் வியப்பையும் அத்தியாத்திற்கு அத்தியாயம் தவறாமல் கதையை நகர்த்துகிறார் டிம் பவர்ஸ். கதையின் இறுதி அத்தியாயம் வரை பிராண்டேன் டொய்ல் குறித்த மர்மத்தை அவர் வாசகனிடம் சரியாக ஊகிக்க விடுவதேயில்லை. 19ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த நிஜக் கவிஞர்களையும், 19ம் நூற்றாண்டின் முன்பான எகிப்தின் வரலாற்றையும் தகுந்த வகையில் அவர் கதைகூறலில் உபயோகித்துக் கொண்டிருக்கிறார். ஆங்கில மரபிலக்கிய பாணியில் கூறப்பட்டிருக்கும் இக்கதை ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை வழங்கும் என்பது என் தாழ்மையான கருத்து. டிம்பவர்ஸ் மாயப்புனைவு எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் என்பதுடன் இவர் எழுதிய On Stranger Tides எனும் நாவலே பிரபல கடற்கொள்ளையன் ஜாக் ஸ்பாரோவின் சமீபத்திய திரைப்படத்தின் திரைக்கதைக்கு உதவியாக அமைந்தது என்பதும் உபரியான தகவல்களாகும்.

Sunday, July 10, 2011

அரியணை ஆட்டம்


மாயப்புனைவு ஒன்றினது ஆரம்ப பக்கங்கள் அதனைப் படிக்க ஆரம்பிக்கும் வாசகன் மனதை விளைச்சலிற்கு தயாராகவுள்ள உள்ள ஒரு நன்னிலம் போல் அரவணைத்துக் கொள்ளல் வேண்டும். வாசகன் மனதில் அந்த ஆரம்ப பக்கங்கள் விதைக்கும் எதிர்பார்ப்புகளே அவனை ஆர்வத்துடன் தொடரும் பக்கங்களை நகர்த்திட பெரிதும் உதவுகின்றன. பரந்த ஒரு வாசகப் பரப்பை கொண்டிருக்கும் மாயப்புனைவுவானது தன்னை ஏனைய மாயப்புனைவுகளில் இருந்து வேறுபடுத்திக் கொள்ளவும், அந்த வேற்றுமைகளை வாசகனிடம் சரியான முறையில் எடுத்து செல்ல வேண்டிய தன்மையை கொண்டதாகவும் இருத்தல் அதன் வெற்றிக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். George R.R. Martin படைத்திருக்கும் A Song of Ice and Fire நாவல் தொடரின் முதல் புத்தகமான A Game of Thrones மாயப்புனைவொன்றின் பணியை கச்சிதமாக செய்து முடிக்கிறது.

ஏழு ராஜ்யங்களின் மன்னனாக முடி சூடிக்கொண்ட ராபார்ட் பராத்தியோன் அகால மரணமடைந்துவிட, அவன் அரியணையை கைப்பற்றி அதிகாரத்தை தம் வசப்படுத்திக் கொள்ள பிரபுக் குடும்பங்களினிடையே நடக்கும் போட்டியே இம்முதல் பாகத்தின் பிரதான அம்சமாகும். ஆனால் அப்போட்டியானது மன்னன் ராபார்ட்டின் மரணத்தின் முன்பே ஆரம்பமாகி இருக்கிறது.

பனிக்காலமோ, வசந்த காலமோ எல்லைகள் இன்றி நீண்டு செல்லக்கூடிய ராஜ்யமொன்றின் வடக்குப் பகுதியில் பனிக்கட்டியாலான எல்லைச்சுவரிற்கு அப்பால் இருக்கும் அடர் வனமொன்றில் ஆரம்பிக்கும் கதை, அவ்வனத்தில் நிகழும் அசம்பாவிதங்கள் மூலமாக வாசகன் மனதில் மாயத்தின் மர்மத்தை மெல்லிய இழையொன்றால் முடிச்சாக்கி விடுகிறது. வழமையான மாயப்புனைவுகளில் காணக்கிடைப்பது போல் விந்தை மனிதர்களும், அதிசய சக்திகளும், வினோத சிருஷ்டிகளும் பக்கத்திற்கு பக்கம் ஜார்ஜ் மார்ட்டினின் கதையில் காணக்கிடைப்பதில்லை. ஆனால் மாயமும் மந்திரமும் உண்டு என்பதை வாசகன் மனதில் ஒரு சந்தேகமாக ஊன்றி விட்டு, யதார்தமாக கதையை நகர்த்த ஆரம்பித்து விடுகிறார் கதாசிரியர் மார்ட்டின்.

பிரபுக்களின் குடும்பங்கள் வழியாக நாவலில் கதையை நகர்த்தி செல்கிறார் மார்ட்டின். பாத்திரங்களின் பெயர்களே அத்தியாயங்களின் தலைப்பாக இடம்பிடித்துக் கொள்ள ஏழு ராஜயங்களின் ஆரம்ப வரலாற்றையும், அதன் ஆதிகுடிகளான வனக்குழந்தைகள் எவ்வாறு அழிக்கப்பட்டார்கள் என்பதையும், வனக்குழந்தைகளின் அழிப்பின் பின்பாக ஏழு ராஜ்ஜயங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த ராஜ குடும்பமான டார்காரெயன்களினது அழிப்பையும், ஏழு ராஜ்யங்களின் தற்கால மன்னனான ராபார்ட் பராத்தியோன் எவ்வாறு இறுதி டார்காரெயன்களை வெற்றி கொண்டு அரியணையைக் கைப்பற்றினான் என்பதனையும் தொய்வுகள் ஏதுமின்றி விறுவிறுப்பாக கூறிச்செல்கிறார் மார்ட்டின்.

வழமையாக மாயப்புனைவில் காணப்படாத குரூரமும், ரத்தமும், காமமும், அதிகாரத்திற்கான வெறியும் வெகு இயல்பாக கதையின் வரிகளில் குடியேறி வாசகன் ஆர்வத்துடன் பக்கத்தை திருப்ப செய்து விடுகிறது. வார்த்தைகளையும், வரிகளையும் கண்டிப்பான முறையில் கதையிலிருந்து விலகாதவாறு எழுதுவதில் மார்ட்டின் அபார வெற்றி விடுகிறார். மிக முக்கிய நாயகர்களாக அறிமுகமாபவர்களிற்கு அவர் வழங்கும் முடிவுகள் வாசகர்களிற்கு அதிர்ச்சியை எதிர்பாராச் சுவையாக வழங்குமெனில் அவையே அடுத்து நடக்கப்போவது என்ன எனும் ஆர்வத்தனலையும் அவர்கள் மனதில் உப்பி ஊதி விடுகின்றவையாக அமைகின்றன.

A_Game_of_Thrones_Genesis_Art01

கதையின் முதல் பாகத்தில் பலபாத்திரங்கள் அறிமுகமானலும் என் மனதைக் கவர்ந்த சில பாத்திரங்கள் குறித்து சில வரிகளை எழுதி விடுகிறேன். கதை ஆரம்பிக்கும் வடக்கு ராஜயத்தின் ஆண்டகையான ஸ்டாக் பிரபுவிற்கு திருமண பந்தம் இன்றி பிறந்த பையான ஜொன் ஸ்னோ, கதையின் ஆரம்ப பக்கங்களிலேயே என் மனதைக் கவர்ந்து விட்டான். திருமண பந்தமின்றி பிறக்கும் குழந்தைகளிற்கு குடும்ப பெயரிற்கு பதிலாக ஸ்னோ [ Snow ] எனும் பெயர் பொதுவான ஒரு பெயராக வடக்கு பகுதி ராஜ்யத்தில் வழக்கத்தில் இருந்து வருகிறது. தன் தந்தையின் அருகில் வாழ்ந்தாலும் கூட தான் முழு உரிமைகளும் அற்ற ஒருவன் என உணர்ந்த நிலையில் வாழ்ந்து வரும் ஜொன் ஸ்னோ பாத்திரம் மனதில் இலகுவாக பதிந்து விடுகிறது. அதேபோல் கதையில் இடம்பிடிக்கும் அமானுடங்களை எதிர் கொண்டு வெல்லும் முதல் பாத்திரமாக ஸ்னோ சித்தரிக்கப்படுகிறான். கதையில் மாயத்தின் மந்திரத்தின் பங்கு சிறிதுதான் ஆனால் அவை பிரசன்னமாகும் தருணங்கள் அருமையாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. மன்னன் ராபார்ட்டின் அகால மரணத்தின் பின்பாக நிகழும் அரியணைக்கான போட்டியில் நிகழும் யுத்தங்களில் கலந்து கொள்வதை தெரிவு செய்யாது பனியாலான நீண்ட எல்லைச் சுவரின் பின்பாக காத்திருக்கும் அடர்ந்த ஒரு குளிர்காலத்தையும் அது தன்னுடன் எடுத்து வரக்கூடிய அபாயங்களையும் அமானுடங்களையும் எதிர்த்துப் போராட தயாராகி நிற்கும் ஸ்னோ கதையின் சிறப்பான பாத்திரங்களில் ஒருவன் ஆவான்.

டார்காரெயன்கள் ராஜ வம்சத்தின் இறுதி இளவரசியாக அறிமுகமாகும் டேனி [Daenerys] , தன் சகோதரனுடன் ஒடுங்கிய கடல் தாண்டிய பென்டோஸ் எனும் தேசத்தில் வாழ்ந்து வருபவள். தான் மூதாதையர் இழந்த ஏழு ராஜ்ஜயங்களையும் மீண்டும் வென்று மன்னனாக முடிசூட வேண்டும் என்பது டேனியின் சகோதரனான விசெரிஸில் ஒரு வெறியாகவே வளர்ந்து வருகிறது. பதின்மூன்று வயதான தன் தங்கையை குதிரைப் பிரபு ஒருவனிற்கு மணம்முடித்து வைத்து குதிரைப்பிரபுவின் வீரர்களையும் உதவியையும் பெற்று ஏழு ராஜ்யங்களை கடல் கடந்து சென்று வென்றிடும் வெறியோடு அலையும் இறுதி ட்ராகன் என தன்னைக் கூறிக் கொள்ளும் விசெரிஸ், அதற்காக தன் தங்கையை குதிரைப் பிரபுவோடும், அவன் வீரர்களோடும், அவ்வீரர்களின் குதிரைகளோடும் புணர வைக்க சிறிதும் தயங்காதவன். ஆனால் குதிரைப் பிரபுவை திருமணம் செய்து கொள்ளும் டேனி மாற்றம் கொள்ள ஆரம்பிக்கிறாள். திருமணப் பரிசாக அவளிற்கு வழங்கப்பட்ட மூன்று ட்ராகன் முட்டைகள் தம்மில் ஒரு ரகசிய மர்மத்தை வசீகர வண்ணமாக பொதித்து வைத்திருக்கின்றன. டேனி எதிர்பார்த்த எல்லாம் அவளிற்கு கிடைக்கிறதா என்பதை விட டேனி எவ்விதமான ஒரு ஆளுமையாக மாற்றம் கொள்கிறாள் என்பதுதான் இப்பாகத்தின் உச்சபட்ச ஆச்சர்யம். குதிரை பிரபுக்களை தொடரும் ஜனங்களின் வினோத பண்பாடுகள், பென்டோஸ் தேசத்தின் பல இன மக்களின் ஆச்சர்யமான வழக்கங்கள், கறுப்பு மந்திரம், காமம், ரத்தம் என அட்டகாசமாக செல்லும் இப்பகுதி கதையில் தனியாகவே கூறிச்செல்லப்பட்டாலும் நாவலின் அனைத்துப் பகுதிகளையும் அடித்துப் போட்டு விடும் சுவையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. கதையில் ட்ராகன்கள் இருக்கிறதா என என் நண்பர் ஒருவர் கேள்வி எழுப்பினார், படு அட்டகாசமான, நாவலின் இறுதி அத்தியாயத்தில் அதற்கு விடை இருக்கிறது என்பதுதான் அவரிற்கு என் பதில். இந்நாவலின் மிகச்சிறப்பான பாத்திரமாக டேனி உருப்பெற்று நிற்பதும் அந்த இறுதி அத்தியாயத்தில்தான்.

iron-throneமன்னன் ராபார்டின் மனைவி செர்ஸி, லேனிஸ்டர் எனும் பிரபுக்கள் குடும்பத்தை சேர்ந்தவள். லேனிஸ்டர் குடும்பம் கதையில் வீரமும், சதிக்குணமும் கொண்ட ஒரு குடும்பமாகவே சித்தரிக்கப்படுகிறது. செர்ஸியுடன் கூடப் பிறந்த சகோதரன்களில் ஒருவன் குள்ளன். அவன் பெயர் தியோன். குள்ளனாக இருப்பதால் தன் தந்தையால் ஒதுக்கப்படும் தியோன் கதை நெடுகிலும் வாசகன் மனதில் உயர்ந்தவனாகிக் கொண்டே செல்வான். ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்துக் கொள்ளும் அவன், தனக்குரிய அங்கீகாரத்தை ஒதுக்கபட்ட இனத்தின் வழியாகவே வென்றெடுப்பான். நகைச்சுவையும், யதார்த்தமும், மனதை தொடும் உணர்வுகளுமாக இப்பாத்திரம் அருமையான ஒன்றாக கதையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஜார்ஜ் மார்டினின் எழுத்துக்கள் சற்று அவதானத்தை வேண்டும் வகையை சார்ந்தது. அவரின் வரிகளின் பின்னால் ஒளிந்திருக்கும் அர்த்தங்களையும் உணர்ந்து படிக்கையில் கதையைப் படித்தல் ஒரு சுகமான அனுபவமாக மாறி புத்தகத்தை பிரியமான ஒன்றாக மாற்றியடிக்கிறது. கதையின் ஆரம்ப பக்கங்களிலேயே மான் கொம்புகள் வயிற்றில் புதைந்து உடைந்த நிலையில் இறந்து கிடக்கும் பனி ஓநாய் ஒன்றினதும் அதன் பரிதவிக்கும் குருளைகளையும் வைத்தே கதை எப்படி நகரும் என்பதை காட்டியிருப்பார் மார்ட்டின் [ ஓநாய் மற்றும் மான் ஆகியவை கதையில் இடம் பிடிக்கும் இரு பிரதான குடும்பங்களின் இலச்சினைகள் ஆகும் ]. யார் நல்லவர், யார் கெட்டவர் எனும் எண்ணங்களிற்கே இடம் தராத வகையில் அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியின் முன்பாக எந்த மனிதனும் ஞானியல்ல என்பதை தெளிவாக்குகிறார் மார்டின். ஓற்றர்கள், தளபதிகள், யுத்தங்கள், யுத்த தந்திரங்கள், விலை மாதர்கள், சதிகள், எதிர்பாரா திருப்பங்கள், அமானுடங்கள், வேறுபட்ட கடவுள் நம்பிக்கைகள் என வாசகனை முழுமையாக திருப்திபடுத்தும் இந்நாவல் மாயபுனைவுகளை விரும்பும் ரசிகர்கள் தவற விடக்கூடாத ஒன்று என்பேன். [****]

மார்டினை படித்து முடித்ததும் அவர் தொடர் நாவலின் இரண்டாம் பாகத்தை படிக்க மனம் விரும்பினாலும் மாயப்புனைவை படிக்காது வேறொன்றை படிக்கலாம் எனும் தீர்மானத்திற்கு வந்திருந்தேன். ஸ்டீபன் கிங்கை நான் தற்போது படிப்பது இல்லை. அவரின் சில நாவல்கள் எனக்கு பிடித்தவையாக இருந்தாலும் அவர் தற்போது எழுதும் நாவல்கள் என் ரசனையை தாண்டியுள்ளவையாக இருக்கின்றன என்பதை நான் அனுபவத்தால் உணர்ந்திருந்தேன். ஆனால் இன்றும் அவர் நாவல்கள் பெஸ்ட் செல்லர்களாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அவரின் எழுத்தை ரசிப்பதற்கென நிரந்தரமாக ஒரு மாபெரும் ரசிகர் படையே உள்ளது போலும். நண்பர் ஒருவர் கிங்கின் Bag of Bones படித்துக் கொண்டிருக்கிறேன் அதன் ஆரம்ப பக்கங்கள் சிறப்பாக இருக்கின்றன என அந்நாவலை எனக்கு பரிந்துரைத்தார். நல்ல நாவல் என ஒன்றை ஒருவர் பரிந்துரைக்கையில் அதனை முயற்சி செய்து பார்ப்பது எனக்கு பிடித்தமான காரியங்களில் ஒன்றாக எப்போதும் இருக்கிறது. எனவே அந்நாவலைப் படிக்க ஆரம்பித்தேன்.

9780340951422Bag of Bones நாவலின் கதை, தன் மனைவியை பறிகொடுத்த ஒரு கதாசிரியனின் உணர்வுகளை அதன் ஆரம்ப பக்கங்களில் விரிக்கிறது. தன் மனைவியின் மரணத்தின் பின்பாக அவள் தன்னிடம் கூறாது மறைத்திருந்த ஒரு விடயம் கதாசிரியன் மைக் நூனான் மனதை சந்தேகத்தால் அரித்தாலும் தன் மனைவியைப் பிரிந்த ஏக்கமும், அவள் மீதான அவன் அன்பும் அப்பக்கங்களில் சிறப்பாக கூறப்படுகின்றன. இந்நிலையில் கதாசிரியனான மைக் நூனானிற்கு கற்பனை தடை உருவாகி அவனால் புதிய படைப்புக்களை உருவாக்க முடியாத சூழ்நிலை ஒன்று உருவாகிறது. ஓய்வை நாடும் மைக், தான் வாழும் நகரத்தை விட்டு தன் விடுமுறைக்கால வாசஸ்தலமான Sara Laughs எனும் வீட்டிற்கு செல்கிறான். அங்கு சென்ற சிறிது காலத்திலேயே அவ்வீட்டில் அவன் தனியாளாக இல்லை என்பதை நிரூபிக்கும் சில சம்பவங்கள் நிகழ்ந்தேறி விடுகின்றன.

இந்த முதல் திருப்பத்திற்கு வருவதற்கே வாசகன் ஏறக்குறைய 170 பக்கங்களை தாண்டி வர வேண்டியிருக்கிறது, அதன் பின்கூட வேகமாக சில தருணங்களிலேயே கதை நகர்கிறது என்பது வேதனையானதே. மனதை தொடும் சில பக்கங்கள் இருந்தாலும், குழந்தை ஒன்றின் மீதான ஏக்கத்தை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தும் அருமையான சில தருணங்கள் இருந்தாலும், சாரா லாஃப்ஸ் எனும் அவ்வீட்டில் இருக்கும் மர்மங்கள் விடயத்திலும் திகிலிலும், அதற்கான காரணங்களிலும் சலிக்க வைத்து விடுகிறார் ஸ்டீபன் கிங். மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி எம்மை அழைத்து செல்லும் ஒருவர் ஒரு மோசமான சிட்டை எமக்கு அறிமுகப்படுத்தும் போது உருவாகும் அந்த உணர்வு ஸ்டீபன் கிங்கின் பாக் ஆஃப் போன்ஸின் இறுதிப் பக்கங்களில் உத்தரவாதமாக கிடைக்கிறது. இக்கதையை படித்ததால் ஏற்பட்ட ஒரு நன்மை என்னவெனில் ஸ்டீபன் கிங் எனும் பிரபல எழுத்தாளரின் படைப்புக்களை இனி நான் படிக்கவே போவதில்லை எனும் உறுதியான தீர்மானம்தான். [*]

Saturday, June 11, 2011

காலச்சக்கரம்: உலகத்தின் விழிகள் முதல் ஒளியின் நினைவுகள் வரை

wot02-the-great-hunt

எழுதியவர்.....ஜோஸ்ஷான்

காலச் சக்கரம் சுழல்கிறது, யுகங்கள் வந்து செல்கின்றன, நினைவுகள் வரலாறாகின்றன.. வரலாறு தொன்மமாக மாறுகிறது, தொன்மம் பழங்கதைகளாகிறது. பழங்கதைகள் மறைந்து புதிய யுகம் துவங்குகிறது. மூன்றாம் யுகம் என சிலரால் அழைக்கப்பட்ட ஒரு யுகத்தில், வரவிருக்கும் ஒரு யுகத்தில், ஏற்கனவே கடந்து சென்ற ஒரு யுகத்தில் பாண்டிச்சேரியின் பொந்து ஒன்றின் மீதாக ஒரு காற்று எழுந்தது. அந்த காற்று ஆரம்பம் அல்ல. காலச்சக்கரத்தின் சுழற்சிகளிற்கு ஆரம்பம் என்பதோ முடிவென்பதோ கிடையாது. ஆனால் அது ஒரு ஆரம்பமே…..

பாண்டிச்சேரியில் ஒரு பொந்து இருக்கிறது. அதில் என் நண்பர் ஒருவர் வசித்து வருகிறார். பொந்து என்றவுடன் முயல், கிளி, ஹாபிட்டுகள், ஆந்தைகள் வாழும் பொந்தாக அந்தப் பொந்தை கற்பனை செய்து கொள்ளாதீர்கள். என் நண்பர் வாழ்ந்து வரும் பொந்தில் பயங்கரமான வசதிகள் உண்டு. ஹோம் சினிமா, காபரே, காசினோ, காக்டெயில் பார், குளியல் அறை… காவல் துறையில் முறையீடு செய்யாத பணிப்பெண்கள், ஒரு அரிய நூலகம் என அப்பொந்தில் சொகுசிற்கு குறைவில்லை. அங்குள்ள பஞ்சணையின் மென்மை அறியா உலகப் பைங்கிளிகளும் உண்டோ என்பது மூன்றாம் யுகத்தின் முதுமொழி.

wotcoverநல்லதொரு இளம் மழைநாளில் மழையைப் பார்க்காமலேயே அதை தன் அகக் கண்களால் கண்டவாறு நூல்களை படிப்பது அவரிற்கு பிடித்தமானது. அவ்வேளையில் அவர் புகைக்கும் சுங்கானிலிருந்து வெளியாகும் புகையானது கற்பனையின் மேகக்கூட்டமாக பொந்தின் மேல் உலாச்செல்வதுண்டு. மழைமேகங்களும், புகைமேகங்களும் இணைந்து இழைய உருவாகும் அந்த மங்கிய ஒளியில் அவர் இதழ்கோடிகளில் பூக்கும் சிறு புன்னகை கவர்ச்சியின் இலக்கணமாக கொள்ளப்படலாம். ஆனால் அதை அவர் மென்மையாக மறுத்துவிடுவார். அவரிடம் இருக்கும் சுங்கான் நீண்டது. அழகிய வேலைப்பாடுகள் நிறைந்தது. ஆதிமொழியில் அதில் வரிகள் உண்டு.

மழை தெரியும் ஜன்னலின் அருகில் சரா கண்டத்து விந்தை மிருகமொன்றின் தந்தத்தால் உருவாக்கப்பட்ட சாய்வு நாற்காலியில் அமர்ந்து அவர் கற்பனை உலகினுள் வாழ்ந்திருப்பார். அருகில் உள்ள சிறிய மேசையில் நிலாக்கல்லில் உருவாக்கப்பட்டு வண்ணக் கற்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட ஒரு கிண்ணத்தில் வாசனைச் சரக்குகள் கலக்கப்பட்ட இதமான சூடு கொண்ட திராட்சை மது அவர் இதழ்களின் ஸ்பரிசத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும். இவ்வாறான அவரின் இனிய வாழ்க்கையில் ஒரு இடையூறு சிதறிய ஒரு எரிமலைக்குழம்புத் துளியாக அவர் மேல் வந்து இறங்கியது.

அரிய நூல்களை, ஓய்வுநாள் சந்தைகளில் தேடிப் பார்த்து வாங்குவதில் அவர் ப்ரியம் கொண்டவர். நூல்களின் பின்னட்டைகளின் இருக்கும் பெண் நாவலாசிரியைகளின் நிழற்படங்கள் அழகாக இருக்கும் பட்சத்தில் அந்நூல்கள் அருமையானவை என்பதை தீர்க்கதரிசனமாக கூறும் திறமை அனுபவத்தால் அவரிடம் கைகூடியிருந்தது. இவ்வாறாக அவர் சேகரித்த அரிய நூல்கள் பொந்து நூலகத்தின் இடப்பரப்பை முழுமையாக பிடித்துக்கொண்டு, பொந்தின் பொதுவெளியில் தன் ஆக்கிரமிப்பை நிகழ்த்த ஆரம்பித்த வேளையில்தான் பொந்தில் நீ அல்லது புத்தகங்கள் எனும் ஒரு எல்லையை அவர் அன்பு அன்னை கொண்டு வந்தார். பின்னட்டை நாவலாசிரியைகளை பிரிய வேண்டிய வேதனை அவரை புதிய விதையொன்றின் நுண்ணிய வேர்களாக துளைபோட ஆரம்பித்த கணமது. பின்னட்டையில் நிழற்படங்கள் இல்லாத அரிய நூல்களை அவர் தானம், விற்பனை, தகனம் செய்ய ஆரம்பித்தார். சந்தைகளிலும், ஆதி நூலகங்களிலும் தேடித் தேடி அவர் சேகரித்து வைத்திருந்த நூல்களை பிரிவதென்பது காதலியைப் பிரிவதை விட வலியை தருவதாகவே அவர் உணர்ந்தார். இந்த சந்தர்ப்பத்தில்தான் அவரது சேகரிப்பில் இருந்த The Wheel of Time எனும் பெருந்தொடர் நாவலின் மீது அவர் கவனம் வீழ்ந்தது.

459px-Re-learning_the_sword_03gallery_19580_109_156923Perrin_wolvesசுவைக்காமல் கனியை எறியாதே, ருசிக்காமல் கன்னியை துரத்தாதே, படிக்காமல் நூலை வீசாதே என முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். கனி என்றால் ஒரு அல்லது இரு கடி, கன்னி என்றால் ஒரு அல்லது இரு….., நூல் என்றால் ஒரு பத்து அல்லது நூறு பக்கம் என்பதை அவர் எல்லையாக கொண்டிருந்தார். காலச்சக்கரத்தை அவர் படிக்க ஆரம்பித்தார். முதல் ஐம்பது பக்கங்களை தாண்டியபின்பாக அவர் மீளாப்பிரமை ஒன்றில் நுழைந்திருந்தார். அதன் சுழற்சியில் இருந்து அவர் இன்னமும் வெளிவரவில்லை. சிட்டு ஆய்வாளாராக மரங்களின் மென்பச்சை பாசி படர்ந்த கிளைகளில் தன் உடலைக் கிடத்தி விழியை அகல விரித்துக் காலத்துடன் காய்ந்து கொண்டிருந்த தன் நண்பரும் இந்த புதிய உலகில் வாழ வேண்டி அவரிடம் காலச்சக்கர சுழலில் சிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

பங்குனியில் கிளைகளில் சிட்டுக்கள் அமர்வது அரிதான ஒன்றாக மாற ஆரம்பித்திருந்தது. நான் ஒளிந்திருக்கும் கிளைகளை சிட்டுக்கள் ஏனோ தவிர்க்கின்றன எனும் ஒரு உணர்வு இலைகளின் நாடிகளில் ஊர்ந்து செல்லும் எறும்பின் பாதத்தின் குறுகுறுப்பாய் என்னுள் ஊர்ந்தது. இதனால் என் வாசிப்பில் ஒரு வெறுமை உருவாகி இருந்தது. தொடர்சியாக நீளும் ஒரு வரியில் விழும் வெட்டுப்போல. என்ன வாசிக்கலாம் என்பதை என்னால் தீர்மானிக்க முடியாத ஒரு நிலை. அப்போது நண்பர் கூறினார், காலச்சக்கரத்தை படியுங்களேன் என்று. இன்றுவரை அதன் சுழற்சியில் இருந்து என்னால் மீண்டு வர இயலவில்லை…..

ஒளிக்கும், இருளிற்குமான போராட்டம் என்பது மிகைபுனைவுகளின் ஒரு முக்கிய கூறாக இருந்து வருகிறது. ஒளி என்பதை நன்மை என்பதாகவும் இருள் என்பதை தீமையாகவும் ஒருவர் உருவம் செய்து கொள்ளக்கூடும். அதுவே சரியாகவும் இருக்கக்கூடும். இப்போராட்டம் பல்வேறு வடிவங்களில் வெவ்வேறு கதைகளாக வடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒளியின் ஆசிபெற்று போராடுபவர்கள், இருளின் ஆக்கிரமிப்பில் போராடுபவர்கள், இவை இரண்டிற்குமிடையில் சிக்கி கொண்டவர்கள், இருள், ஒளி, நன்மை, தீமை என்பதன் கருத்தாக்கத்தால் பாதிக்கப்படாதவர்கள் என பாத்திரங்கள் பல வகைகளாக உருவாக்கப்படுகிறார்கள். எம் ரசனைக்கேற்ப பாத்திரங்களை எம்மால் ரசிக்கவோ அல்லது அப்பாத்திரத்தை சிறப்பான ஒன்றாகவோ நாம் கருதிக்கொள்ள முடிகிறது. இங்கு ஒளியும் இருளும் ஒருவரின் ரசனைக்கும் தேர்விற்கும் தடையாக வருவதில்லை. ஒளியைப் போலவே இருளிலும் உயிர் இருக்கிறது. அதுவும் ஒரு வாழ்க்கைதான். ஆனால் பெரும்பாலான போராட்டங்கள் ஒளியின் பார்வையிலேயே விவரிக்கப்படுகின்றன. ஒரு வாசகனின் ரசனை அவனை ஒளியின் பிரகாசமான வீதிகளிலோ அல்லது இருளின் ரகசிய நிலவறைகளினுள்ளோ அவன் காத்திருந்த சுவையைக் காட்டிடக்கூடும்.

180px-Min622px-ElayneAviendhaநகரங்களின் சுவடு படாத ஒரு மலையோர கிராமத்தில் வாழ்ந்து வரும் சாதாரணமான மூன்று இளைஞர்கள், இரு இள நங்கைகள் ஆகியோரின் வாழ்க்கையானது விதி இழைக்கும் கோலத்தால் எவ்வாறு மாற்றம் கொள்ள ஆரம்பிக்கிறது என்பதும் அந்த விதிக்கோலத்தில் இழைக்கப்படும் நெய்தல்களால், அது உருவாக்கும் வடிவங்களால் அவர்களை சுற்றியுள்ள உலகம் எவ்வாறு உருமாற்றம் கொள்கிறது என்பதும் The wheel of Time எனும் மிகைபுனைவு நாவல் வரிசையின் மையமான அம்சமாக உள்ளது என்பது என் புரிதல். ராண்ட் அல்தோர், மாத்ரிம் கோதன், பெரின் அய்பேரா எனும் இளைஞர்கள், எக்வின் அல்வெர், நிய்னெவ் அல்மெய்ரா எனும் நங்கைகள், இவர்களை பிரதான பாத்திரங்களாகக் கொண்டே எமொன்ட்ஸ் ஃபீல்ட் எனும் கிராமத்தில் கதையை தன் மாய வரிகளில் ஆரம்பிக்கிறார் கதாசிரியர் Robert Jordan.

பனிக்காலம் முடிவடையாமல் நீண்டு சென்று முன்வசந்தத்தை உறைய வைத்துக் கொண்டிருக்கும் காலம். தங்கள் பண்ணையில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் மதுவை எமொண்ட்ஸ் ஃபீல்டில் கொண்டாடப்படவிருக்கும் முன்வசந்த வருகை விழாவிற்காக ராண்டும் அவன் தந்தையும் குதிரைகளில் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆளரவமற்ற மலைப்பாதையில் வீசும் குளிர்காற்றானது அவர்கள் இருவரும் அணிந்திருக்கும் மேலங்கிகளினுள் தம் உறைந்த கரங்களை செலுத்தி அவற்றைக் களைந்துவிட முயன்று கொண்டிருக்கிறது. ராண்டின் உள்ளுணர்வில் தான் கண்கானிக்கப்படும் உணர்வானது அந்தக் குளிரையும் தாண்டிய நுண்ணிய வருடலாக உணரப்படுகிறது. தான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் ராண்ட், நள்ளிரவை அங்கியாக அணிந்து கரும்புரவி ஒன்றன் மீது அமர்ந்திருக்கும் ஒரு உருவத்தைக் காண்கிறான். தன் தந்தைக்கும் அவ்வுருவத்தை அவன் காட்ட முயற்சிக்கும்போது அந்த உருவம் காணாமல் போய்விடுகிறது. அந்த உருவமானது அவன் கண்களிற்கு மட்டுமே புலனாகக்கூடிய ஒன்றாகவே வாசகனிற்கு அறிமுகமாகிறது. ஆனால் காலச்சக்கரத்தின் ஆரம்பம் இதுவல்ல ஏனெனில் அதற்கு ஆரம்பமோ முடிவுகளோ கிடையாது…..

645px-NynaeveEgwene645px-Siuan2இருளிற்கும் ஒளிக்குமான போராட்டம் ஒன்றில் மனம் பிறழ்ந்த நிலையில் லுஸ் தெரென் தான் வாழும் உலகை சிதைத்துப் போடும் நிகழ்வுடனேயே காலச்சக்கரத்தின் அந்த ஆரம்பம் தொடங்குகிறது. அந்த ஆரம்பத்தை படிக்கும்போது இது என்ன குழப்ப வலையாக இருக்கிறதே எனும் எண்ணங்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். ஆனால் அதை சில பக்கங்களில் ஆசிரியர் முடித்துவிட, விதியின் கோலத்தினுள் வாசகன் அப்பாவியாக காலடி எடுத்து வைக்கிறான்.

தர்க்கமோ, வாதமோ இப்பெருந்தொடரை அனுபவிக்க உதவப்போவதில்லை. ஏனெனில் சறுக்கல்கள் கொண்ட தொடர்தான் இது. மாறாக ஆசிரியர் தன் வரிகளில் வடிக்கும் உலகத்தை அதில் வாழும் மனிதர்களை, விந்தையான ஜீவன்களை எம்மால் கற்பனையில் உயிர்கொடுக்க முடிந்தால் இத்தொடரின் சுவை சிறப்பான ஒன்றாக இருக்கும்.

வேகக்கதைப் பிரியர்களிற்கானதல்ல இக்கதை. இக்கதையின் வேகம் வாசகனின் கற்பனையின் வேகவீச்சாலேயே தீர்மானிக்கப் படக்கூடிய ஒன்றாக அமைந்து விடுகிறது. அந்த உலகின் அழகும் கவர்ச்சியும் அதில் பொதிந்திருக்கும் இருளும் சாகசங்களும் அவனால் உருவாக்கப்படுவதே. ராபார்ட் ஜோர்டானின் வரிகள் அவன் கற்பனையில் அந்த உலகை சிருஷ்டிப்பதை இலகுவாக்கின்றன. அவன் தன் மனத்திரையில் தீட்டும் கற்பனைக் காட்சிகளின் எழிலை ஜோர்டானின் வரிகள் மெருகூட்டி தருகின்றன. வசியம் நிரம்பிய புதை மணலில் சிக்குபவனை போல ஒரு மாய உலகிற்குள் வாசகன் அனுவனுவாகச் சிக்குகிறான். அம்மாயவுலகத்தின் அறிமுகத்தில் சற்றே மூச்சுத் திணறும் அவன் பின் முழுமையாக அதை உள்வாங்க ஆரம்பிக்கிறான். அம்மாயவுலகத்தில் அவனும் ஒரு பிரஜையாகிப் போகிறான்.

ஜோர்டான் சிருஷ்டித்திருக்கும் அம்மாயவுலகம் மூன்று திசைகளில் கடலை எல்லையாகக் கொண்ட ஒரு பெரும் நிலப்பரப்பாக விரிகிறது. அவ்வுலகில் கடவுள் என்ற சொல்லை ஜோர்டான் உபயோகப்படுத்துவதில்லை. தெய்வங்களோ, தெய்வ வழிபாடுகளோ, ஆலயங்களோ அப்பெரு நிலத்தின் அடையாளங்களாக காணக்கிடைப்பதில்லை. ஆனால் சாத்தான் அவ்வுலகில் இருக்கிறான். உலகை படைத்தவர் எவரோ அவரே காலச் சக்கரத்தையும் இயக்குபவர் என ஒருவரை குறிப்பிடுகிறார் ஜோர்டான். அவரை சிருஷ்டிகர்த்தா என அவ்வுலகம் குறிப்பிடுகிறது.

சிருஷ்டிகர்த்தாவினால் அவன் சீடர்களுடன் சிறைவைக்கப்படுகிறான் இருளன். அவன் சிறையின் கதவுகள் பல பாதுகாப்பு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டு மூடப்பட்டிருக்கின்றன. அவன் கரங்கள் உலகை தீண்டாது யுகங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் யுகங்களின் கடப்புடன் இருளனின் சிறையின் முத்திரைகள் தம் வலிமையை இழக்க ஆரம்பிக்கின்றன. இருளனின் கரங்கள் வலிமை இழந்த முத்திரைகளை தாண்டி உலகினை தொட்டுப் பார்க்க தொடங்குகின்றன. காலச்சக்கரத்தை உடைத்து யுகத்தினை நிறுத்தி இருள் யுகத்தினை தனதாக்கும் தருணம் நெருங்கிவிட்டதை உணர ஆரம்பிக்கும் இருளன், தன் சீடர்களையும், அழிவை விரும்பும் இருளுயிரிகளையும், கொடூர பிறப்புக்களையும் தன் கனவின் ஆரம்ப கோலங்களை வரைபவர்களாக உலகில் உலாவரக் கட்டளையிடுகிறான். தன் திட்டத்திற்கு தடையாக இருக்கக்கூடிய மூன்று இளைஞர்களை தன் பக்கம் இழுத்துக் கொள்வதே அவன் நோக்கம். இருளன் எவ்வாறு அந்த மூன்று இளைஞர்களையும் தன் பக்கம் இழுக்க விரும்புகிறானோ அதேபோல் அந்த இளைஞர்களை ஒளியின் பாதையில் இட்டுச் செல்ல போராட தயாராகிறார்கள் ஒளியின் போராளிகள். ஒளியின் ஆசி பெற்ற போராளிகளிற்கும், இருளனின் ஏவலர்களிற்குமிடையிலான இப்போராட்டம் ஆரம்பிக்கும் இடம்தான் எமொண்ட்ஸ் ஃபீல்ட் கிராமம்.

Moiraine_Damodred672px-Lan_salibaகாலசக்கரத்தின் ஒவ்வொரு பாகமும் அதன் முக்கிய நாயகர்களான ராண்ட், மாத், பெரின், எக்வின், நிய்னெவ் ஆகியோரின் வியக்கதகு ஆளுமை மாற்றங்களையும், அவை உருவாக்கும் விளைவுளையும் சுவையுடன் எடுத்து வருகிறது. இந்தக் கதையின் முக்கிய பாத்திரமாக ராண்டையே ஜார்டான் முன்னிறுத்துகிறார். முன்னொரு யுகத்தில் தன் சொந்தங்களை அழித்து, உலகைச் சிதைத்தவனான லுஸ் தெரெனின் புதிய பிறப்பாக ராண்ட் கதையில் சித்தரிக்கப்படுகிறான். நாவல் தொடரின் மூன்றாம் பாகத்தில் அவன் குறித்த தீர்க்கதரிசனங்கள் சிலவற்றை நிகழ்திக்காட்டும் ராண்ட், த ட்ராகண் ரீபார்ன் ஆகவே பின்பு அழைக்கப்படுகிறான். அந்த பெயரைப் பெறவும் அதனை தக்க வைத்துக் கொள்ளவும் ராண்ட் நிகழ்த்தும் சாகசங்கள் சிறிதல்ல.

காலச்சக்கரத்தின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று முழுமுதற்சக்தி. சிருஷ்டியின் இயங்கு சக்தியாக இது கொள்ளப்படுகிறது. இந்த முழுமுதற் சக்தியானது எப்போதுமே இருவகையாக பிரிந்திருக்கிறது. ஆண்களால் கையாளப்படும் ஒரு பங்கு, பெண்களால் கையாளப்படும் ஒரு பங்கு என்பதாக அது பிரிக்கப்படுகிறது. ஆண்களினால் கையாளப்படும் சக்தியின் பங்கானது சைடின் எனவும், பெண்களால் கையாளப்படும் சக்தியின் பங்கானது சைடார் எனவும் பெயர்கொள்ளப்படும். பாதாளத்தில் புதையும் முன்பு இருளன் ஆண்கள் கையாளும் சக்தியில் தீமையை கலந்து விடுகிறான்.

ஆண்கள், பெண்கள் சிலரில் மட்டுமே இச்சக்தியை பயன்படுத்தி அதன் ஆற்றலை உபயோகப்படுத்தும் இயல்பு காணக்கிடைக்கும். ஆண்களால் கையாளப்படும் சக்தியின் பகுதியில் இருளனின் கறை படிந்திருப்பதால் அதன் தொடர்சியான உபயோகமானது ஒருவனை மனப்பிறழ்வு கொள்ளச் செய்து, விபரீதமான செயல்களிற்கு அது வழி வகுக்கும். லுஸ் தெரெனினால் நடாத்தப்பட்ட உலக சிதைப்புக்கு இதுவே காரணமாக கொள்ளப்படுகிறது. ராண்ட் அவனின் புதிய பிறப்பாக இருக்கும் பட்சத்தில் அவனை இருள் வழி இழுத்து தன் பக்கத்தை உறுதிப்படுத்த இருளன் முயல்கிறான் அதேபோலவே ராண்டிற்கு மனப்பிறழ்வு ஏற்படாத வகையில் அவன் முழுமுதற்சக்தியை உபயோகிக்க அவனை வழிநடத்தி இருளனை எதிர்த்துப் போராட வருபவர்கள் தான் ஏஸ் செடாய்க்கள். அதற்காக எவ்வித வழிமுறைகளையும் உபயோகிக்க தயங்காதவர்கள் அவர்கள். ஏஸ் செடாய்க்கள் முழுமுதற் சக்தியின் பெண்பங்கு சக்தியை உபயோகப்படுத்தி நீர் நிலம் நெருப்பு காற்று ஜீவஆவி என்பவற்றை தமக்கு சாதகமாக வளைத்து பயன்படுத்தும் திறமை படைத்தவர்கள். இவர்களின் பகடையாட்டத்தில் சிக்கிய ராண்ட் என்னவாகிறான், அவன் பால்யகால சிநேகிதங்கள் என்னவாகிறார்கள் என்பதை ஒரு வாசகன் மனக்கண்களில் உணரும் அளவிற்கு ஜார்டானின் வரிகள் அமைகின்றன.

296px-MyrddraalSeamas583px-Trolloc_salibaஒரு மலையோர கிராமத்தில் ஆரம்பிக்கும் இக்கதையானது அக்கிராமத்தை விட்டு வெளியேறிய பின்பாக அதன் எல்லைகளை விரித்துக் கொண்டே செல்கிறது. புதிய நிலங்கள், ராஜ்யங்கள், மனிதர்கள், தொன்மங்கள் அவர்களின் வேறுபட்ட பண்பாடுகள் என பரந்த வாசிப்பை இக்கதையின் வாசகர்களிற்கு ஜார்டான் அளித்துக் கொண்டேயிருக்கிறார். நீர் என்பது அரிதான ஒன்றாக இருக்கும் அய்ல் தேச மக்கள், எந்த இடத்திலும் நிரந்தரமாக தங்காத டிங்கர்கள் எனப்படும் ஜிப்சிகள், விருட்சங்களை பாடல் பாடியே குணப்படுத்தும் கட்டிடக் கலை வல்லுனர்களான ராட்சத ஓகியர்கள், கடல் மீதே தம் வாழ்வின் பெரும்பகுதியை நிகழ்த்தும் ஆழிசனங்கள், இருளனின் அடிபொடிகளை எல்லையை மீற விடாது போராடும் பிலைத் எல்லை கோட்டை நாடுகளை சேர்ந்த வீர இனங்கள், தமக்குரிய மண்ணை உரிமைகோரியபடியே கடல்கடந்து வரும் சீன்சான் ராஜ்யத்தினர் என பலதேச மக்களின் பண்பாடு மிகவும் விரிவாக கதையில் விபரிக்கப்படும்.

ஒரு நாட்டு மக்களின் பண்பாடுகள் குறித்து, அவர்கள் வாழ்வியல் குறித்து விபரமான தகவல்களை தருவதன் மூலம் அம்மக்களை மிக ஆழமாக வாசகன் மனதில் பதித்து விடுகிறார் ஜார்டான். ஒருதேசத்தின் நிலவியல் மீதான அவரின் வரிகள் அம்மண்ணின் சுவாசத்தை படிப்பவர்கள் மேல் படர வைக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. திருமணமான பெண்கள் பொட்டு வைத்துக் கொள்ளும் பண்பாடு மல்கிய்ர் எனும் பிரதேசத்தில் இருந்ததாக கதையில் ஒரு பகுதி இருக்கிறது. கருணா நாச்சிமான் எனும் ஏய்ஸ் செடாய் ஒரு பாத்திரமாக இடம் பெறுவார். பிலைத் எல்லை நாடொன்றின் மன்னனின் சகோதரி இவர். இவ்வாறாக பலவின மக்கள் மீதான கலாச்சார பண்பாட்டு வாழ்வியல் முறை ஒப்பீடுகளை நிகழ் உலகத்துடன் வாசகர்கள் நிகழ்த்தி மகிழலாம்.

அய்ல் தேசத்தில் ஒரு ஆண் பல பெண்களை மணந்து கொள்வது சாதாரணமான ஒன்று, நிர்வாணம் என்பது அய்ல்களிற்கு சங்கடம் தராதது. அய்ல் இனத்தவர் நிர்வாணத்தையும் உடையாகவே கருதுகிறார்கள். சீய்யெனார் தேசத்தில் குளியல் தொட்டியில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே நீராடலாம், நிர்வாணமாக. இவ்வகையான உயரிய பண்பாடுகள் படைத்த பல தேசங்கள் எம்முலகில் இல்லாமல் போய்விட்டதே என நல்ல மனம் கொண்ட வாசகர்களை விம்மச்செய்துவிடுகிறார் கதாசிரியர் ஜோர்டான்.

409px-Fain_salibaஅய்ல் தேசத்தை சேர்ந்தவர்களின் கவுரவம் மற்றும் கடமை குறித்த பண்பாடுகள் தலையை கிறுகிறுக்க வைப்பவை. கதைத்தொடரில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. பெண்கள் அதிகாரம் கொண்டவர்களாக, சக்தி படைத்தவர்களாக, வீரத்துடன் எதிர்த்துப் போராடுபவர்களாக, புத்தியும் தந்திரமும் கொண்டவர்களாகாவே பெரிதும் சித்தரிகப்படுகிறார்கள். பெண்களை பெருமைப்படுத்தும் ஒரு கதைத்தொடராக இது இருக்கிறது என்றால் அது மிகையான ஒன்றல்ல. ஏய்ஸ் செடாய்களின் சதிகளும், திட்டங்களும் வியக்க வைப்பவை. ஏறக்குறைய சிஐஏ போல் இயங்கும் தன்மையை ஏஸ் செடாய்களின் தலைமையகமான வெள்ளைக்கோபுரம் கொண்டிருக்கிறது. மன்னர்களிற்கு, ராணிகளிற்கு ஆலோசனை, ஒப்பந்தங்களை இயற்றல், வேவு, ஆள்கடத்தல், கொலை என நல்லவர்களா தீயவர்களா என முடிவெடுக்க இயலாத பண்புகளை கொண்டவர்களாக அவர்கள் பாத்திரப்படுத்தப்பட்டிருப்பார்கள். இவ்வகையில் எதிர்பாராத பல திருப்பங்களை கதைக்கு தருபவர்களாக ஏய்ஸ் செடாய்க்கள் இருக்கிறார்கள். எமொண்ட் ஃபீல்டில் இருந்து வெளியேறும் இரு இளநங்கைகளும் பலமான சக்தி கொண்ட ஏய்ஸ் செடாய்களாக பின் உருப்பெறுவார்கள். அவர்கள் நிகழ்த்தும் சாகசங்கள் சில சமயங்களில் கதை நாயகர்களின் சாகசங்களை விட சிறப்பாக இருக்கும்.

கதையின் முக்கிய நாயகனாக ராண்ட் காட்டப்பட்டாலும், அவன் விதியிழையுடன் பின்னிப் பிணைந்த தோழர்களான பெரின் மற்றும் மாத் அவனைவிட சில பாகங்களில் வாசகர்களை கவர்ந்து விடுவார்கள். பெரின், ஓநாய்களுடன் உரையாடும் சக்தி கொண்டவன். அவன் உரையாடல்கள் எண்ணப் பரிமாற்றம் மூலமே நிகழும். மனிதத் தன்மை அதிகம் கொண்ட ஒருவனாகவே பெரின் சித்தரிக்கப்படுகிறான். அவனில் உள்ளிருக்கும் மிருகத்தை அவன் கட்டுப்படுத்த முயன்று கொண்டே இருப்பான். அவன் காதலி பின் மனைவியாக வரும் பைய்லுடனான அவன் ஊடல்கள் ரசிக்கப்படக்கூடியவை. அவன் முரட்டு ஆகிருதிக்கு எதிரானதாக அவன் உள்ளம் அமைந்திருக்கும்.

786px-Jeremy_Saliba_aiel_take_2Ogier_elder_rpgதொடரில் என் அபிமான பாத்திரமாக மாறிப்போனவர் மாத். சூதாட்டம், மது , மங்கை , மோதல் என பின்னி எடுக்கும் பாத்திரம் இது. மாத்தின் பாத்திரம் இப்படி ரசிக்கப்படும் ஒன்றாக மாறும் என்பது எதிர்பார்க்கவியலாத ஒன்று. கூடவே மாத் வரும் பகுதிகளில் நகைச்சுவையும் சிறப்பாக இருக்கும். இக்கதை வரிசையில் மாத்தை விட சிறப்பான நாயகனாக யாரும் எனக்கு தோன்றவில்லை. பகடையால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாயகன், தன் வாழ்க்கையையே சூதாட்டமாக எண்ணி விளையாடுவதை ஜோர்டான் தன் மாய வரிகளால் எழுதி செல்கிறார். அதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டமும் பகடைக் காயைப் போல மாத்தை உருட்டி விளையாடிக் கொண்டே இருக்கும், இவ்விளையாட்டில் இருந்து மாத் வெற்றி வீரனாக வெளிவரும் காட்சிகள் அதிரடியானவை, விசிலடிக்க வைப்பவை. அல்ட்டாராவின் ராணியான டைலின் மாத்துடன் கொள்ளும் காதல் அபாரமான ஒன்றாக இருக்கும். மாத் பாத்திரத்திற்கு இப்படியான ஒரு வரவேற்பு கிடைக்கும் என ஜார்டானே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

Darkhound532px-Draghkarநாயகர்கள் இப்படி எனில் அவர்களை தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு வில்லன்கள் இருக்க வேண்டுமே. வெள்ளையங்கியிணர், ட்ரொலொக்குகள் [மனித விலங்கு கலப்பினம்], இவர்களை வழி நாடாத்தும் மிர்ட்ரெய்ல்கள் எனும் விழிகளற்ற பிறப்புக்கள், ரத்தக்காட்டேரிகளை ஒத்த டிராக்ஹார்கள், கொல்லவே இயலாத கொலம் எனும் பிறவி, சாம்பல் மனிதர் எனும் உயிரற்ற கொலைஞர்கள், பாதாள நாய்கள் என பலர் நாயகர்களை கலங்க அடிப்பார்கள். இதில் ஆரம்ப நாவல்களில் கலக்கி எடுத்த ட்ரொலொக்குகள் பின்னையவற்றில் ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்பது ஒரு குறை. ட்ரொலொக்குகள் முதல் பாகத்தில் அறிமுகமாகும் காட்சிதான் கதையையே ஒரு திருப்பத்திற்கும் வேகத்திற்கும் இட்டுச் செல்லும். அவர்களின் ரசிகனான எனக்கு இது திருப்தியை அளிக்காவிடிலும் பலவகையான சக்திகளை கொண்ட இருளனின் சீடர்கள், மொரிடின், சைதார் கெரான், படான் ஃபெய்ன் எனும் பாத்திரங்களினால் ஜார்டான் வாசகர்களை வியக்க வைக்க தவறுவதேயில்லை. அதேபோல் கதையில் இடம்பெறும் சிறிய பாத்திரங்களைக்கூட எதிர்பாராத விதத்தில் மறக்கமுடியாத பாத்திரங்களாக்கி விடுவதும், அவர்களை பிரதானமான பாத்திரங்களாக மாற்றிவிடுவதிலும் ஜார்டானிற்கு நிகர் ஜார்டான்தான். 1880 பாத்திரங்கள் இத்தொடரில் உண்டு என்கிறது ஒரு தகவல். ஆனால் அந்த உலகில் வாழ்பவர்களுக்கு அந்த எண்ணிக்கை ஒரு பொருட்டேயில்லை. எதிர்பாராத சந்தர்பங்களில் படு அதிரடியான திருப்பங்களை மிகவும் எளிதாக தந்து விடும் வல்லமையும் ஜார்டானிற்கு உண்டு. அது அவர் கதைகூறலின் தனித்தன்மை. அதேபோல் பல சமயங்களில் அவரின் வரிகள் அடடா போடப் படக்கூடிய அர்த்தங்களை தரக்கூடியவையாக இருக்கும்.

auteurs-robert-jordanஜார்டானின் கதையுலகில் அரூப உலகம் அல்லது கனவு உலகம் என அழைப்படக்கூடிய தெல்லொரென்ரெய்ட் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கனவுகளில் பயணித்தல், கனவுகளில் சந்தித்தல், தேடுதல் வேட்டை நடாத்தல், வேவு பார்த்தல் என அது ஒரு மயங்கவைக்கும் பகுதியாக அமையும். ஸ்தூல உடலுடன் கனவுலகில் நுழையும் வித்தைகூட இருக்கிறது. தர்க்கங்களில் இறங்காது படித்து செல்ல வேண்டிய பகுதியிது. மிகைபுனைவில் தர்கம் என்ன தர்க்கம்!! மாற்றுலகில் நுழையக்கூடிய வாயிற்கதவுகள், ஒரிடத்திலிருந்து பிறிதொரு இடத்திற்கு தனியாக அல்லது ஒரு சேனையுடன் பயணிக்ககூடிய பயணவாயில்கள், வாளில்லாத வாள், காலநிலையை மாற்றியமைக்ககூடிய பாத்திரம் இப்படியாக எத்தனையோ எத்தனையோ. எழுதித் தீராது. அது என்னால் இயலாத காரியம்.

மொத்தத்தில் இன்று நான் மூன்றாம் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றுகூட சொல்லலாம். ஜார்டானின் வர்ணனைகள் என்னை அந்த உலகில் ஒரு பிரஜையாக்கி விட்டன. அவரின் வர்ணனைகள் நீண்டவை. இது அவரின் பலம் அதேபோல் சில சமயங்களில் பலவீனம். ஆனால் அவரின் எழுத்தை சுவைத்தவர்கள் அச்சுவையை வேறெங்கும் காண்பது என்பது சிரமமான ஒன்று. மொழியை அழகாக்கி, ருசியூட்டி அதில் வாசகனை கரைத்துவிடும் மந்திரவாதம் ஜோர்டானின் எழுத்துக்களில் இருக்கிறது. அவரின் இழப்பு மாயபுனைவுகளின் பேரிழப்பு. இக்கதைதொடரில் இதுவரை வெளியாகிய பகுதிகளை படித்து முடித்துவிட்டுத்தான் வேறு படைப்புக்களை படிப்பது என்பது என் தீர்மானம். அத்தீர்மானத்திலிருந்து நான் நழுவிச் செல்லாதவாறு கதை என்னைக் கட்டிப்போட்டிருக்கிறது. இக்கதை தொடரின் பதினொரு பகுதிகளை எழுதி முடித்தபோது ஜார்டான் இயற்கை எய்தி விட்டார். முழுமுதற்சக்தியில் அவர் ஆன்மா சாந்தியடையட்டும். அன்னார் விட்டுச் சென்ற குறிப்புக்களுடன் இத்தொடரை தற்போது எழுதி வருபவர் பிராண்டான் சாண்டர்சன் எனும் மிகைபுனைவு எழுத்தாளர் ஆவார். மொத்தம் 14 பாகங்கள் கொண்ட இத்தொடரின் சுழற்சி அதன் பின்பாக நின்று விடுமா என என்னைக் கேட்டால் இப்பதிவின் முதல் பராவை பதிலாக நான் உங்களிற்கு வழங்குவேன். ஜார்டானின் வரிகளை தழுவியவை அவை. காலச்சக்கரம் வாசிப்பில் ஒரு புதிய அனுபவத்தின் சுவையை எனக்கு அளித்து வருகிறது. இது என் அனுபவம். வாசகர்களின் சுவைகளும் அனுபவங்களும் வேறுபடக்கூடியவையே. The Wheel weaves as the Wheel wills