Sunday, March 18, 2012

டாய்லெட்டிலிருந்து டிவிலைட்வரை: போன் பீரோ, ஓவியம் வரைந்த கலைஞன்!

bee-on-yellow-flowerகண்ணீரும் கம்பலையுமாக எழுதியவர் ஜோஸ்ஷான்.

இன்று வழமைபோலவே என் சொம்பாருயிர்களிற்கு போட வேண்டிய பதிவை எழுதிடலாம் என முகட்டைப் பார்த்து என் எண்ணங்களை சாரைப்பாம்பின் லாவகத்துடன் ஊர விட்ட தருணத்தின்போதுதான் பிரான்சிலிருந்து என் நண்பர் எனக்கு அந்த மின்மடலை அனுப்பி வைத்திருந்தார். அத்துடன் நிறுத்திவிடாது தொலைபேசிமூலம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு “ தல எனக்கு என்ன செய்றது ஏது செய்றதுன்னே தெர்ல, இப்படி ஒரு துக்கமான செய்திய கேட்க நான் ஏன் உயிரோட இருக்கணும், ஆனா ஒன்னு தல, நீங்க தமிழ்ல எழுதுற வரைக்காச்சும் நான் உசிரோட இருக்கனும், உங்க தமிழ் பதிவுகளப் பார்த்தப்புறம்தான் நான் என் தமிழ் வாத்திய நன்றியோட நெனைச்சுக்கிறேன், அப்டி சூப்பரா டோட்டல் லிட்டர்ரேச்சரா எழுதுறீங்க தல, அதுவும் லேட்டஸ்ட் நாஸ்டாலியா பதிவு, அழ வெச்சிட்டீங்க, இப்ப பாருங்க இந்த சேதி, எல்லாத்துக்கும் அழுறதுக்கு கண்ணீரிற்கு எங்கே போறதுன்னே தெரியல தல, சரி தல, நீங்க செய்திய பார்த்திட்டு போஸ்ட போடுங்க, தகவலைப் படிச்சிட்டு உடைஞ்சிடாதீங்க, அப்புறமா பேசலாம், பை தல” என்றான். அப்படி என்னதான் உயிர் போகும் செய்தி அதில் இருக்கிறது எனப் பார்த்துவிடலாம் என என் மின்னஞ்சல் பெட்டியை திறந்தேன். மடலின் மேல் சுண்டினேன். திரையில் விரிந்த மடலில், தல Bone Biraud எனும் Beer எம்மை விட்டு போய்ட்டார் தல… என்னும் ஒரு வரித் தகவல். அந்த இருள் தருணத்தின் மரணவிநாடியின் துடிப்பை என் இருதயம் சொல்லவியலாக் கவிதையொன்றின் லத்தீனமெரிக்க மொழிபெயர்ப்பாய் துடிக்க வைத்தது.

வண்டு மலர்களில் அமர்கிறது, ஈ மலங்களில் அமர்கிறது, அவரவர் அவரவர்க்கு இஷ்டமான இடங்களில் அமர்வதென்பது அவரவர் இஷ்டம்- போன் பீரோ

போன் பீரோ, சிறுவனாக இருந்த காலத்தில் கவ்பாய் கதைகள் மீது பிரியம் கொண்டவனாக இருந்தான். அவனிற்கு அப்பிரியத்தை ஏற்படுத்திக் கொடுத்தது அவன் தந்தை. ஏனெனில் படிக்க வேண்டிய சிறுவனை கழுத்தில் மணிகட்டிய மாடுகளை பராமரிக்க வைத்த பெருமை அவரையே சாரும், இருப்பினும் கவ்பாய் கதைகள்மீது போன் பீரோ கொண்ட மோகம் அவனைப் படிக்க வைத்தது. அவனது பள்ளி ஆசிரியையான மேரி அவனைப் பற்றி நினைவுகூர்கையில் ரொம்பக் கட்டையா காற்சட்டை போட்டுக்கினு வருவான், ஏன்னு கேட்டா மாடுகள கலைச்சுப் பிடிக்க அதுதான் வசதிம்பான், ஏன்யா மாடுகள பிடிக்கப் போற, படி ராசான்னா, டீச்சரு பள்ளிக்கூடத்தில நீங்க பாடம் கற்று தாரீங்க ஆனா மாடுக எனக்கு ஒலகத்த கற்று தருதுங்கன்னு முத்தின பேச்சு பேசுவான், ஆனா ஒன்னு கரும்பலகைன்னா அவனிற்கு உசிரு, சாக்கை கைல எடுத்தான்னா வகுப்பறை ஒவியகூடம் ஆகிடும், அப்டி ஒரு தெறம….என கண்ணீருடன் நினைவுகளை மீட்கிறார். ஆனால் கரும்பலகையில் தன் திறமையின் உதயத்தை வரைந்த அந்தக் கலைஞனை ஒரு டாய்லெட் புரட்டிப் போட்டது.

redchassingcowபோன் பீரோ வசித்து வந்த கிராமம் நகரிற்கு சற்று தள்ளியே அமைந்திருந்தது. அக்கிராமத்திற்கு இரு பெருமைகளும் தேசிய மட்டத்தில் இருந்தது. ஊரை விட்டு ஓடும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ள கிராமம் என அது புகழ் பெற்றிருந்தது. இந்த தகவலே பின்னாளில் பீரோ படைத்திட்ட ஊரை விட்டு ஓடிய பெண் காமிக்ஸ் கதை வரிசைக்கு மூலமாக இருந்தது. ஊரை விட்டு ஓடிய பெண் கதை வரிசை உலகின் அனைத்து நாடுகளிலும் தடை செய்யப்படவில்லை எனினும் கணிசமான நாடுகளில் தடைக்குள்ளானது. பீரோவின் சொந்தக் கிராமத்தில் அப்புத்தகத்தை ஊரைவிட்டு ஓட இருந்த பெண்கள் தீயீட்டுக் கொளுத்தி விட்டு ஓடினார்கள். பீரோவின் கிராமத்தில் இன்றும் வசித்து வரும் முதியவரான ழான் ழார் ழாக், உண்மையை அதன் உணர்வுகளுடன் எடுத்து வந்து ஓவியங்களாக பரிமாறிய அக்கதையை இக்கிராம பள்ளியில் பாடப் புத்தகமாக வைக்க வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்தார். மேலும் தன்னை தனியே விட்டு விட்டு ஓடிய தன் குடும்ப பெண்மணிகள் தனக்கு அதனால் நன்மையே செய்திருப்பதாக ழான் ழார் ழாக் தெரிவித்தார். ழான் ழார் ழாக் தேசிய அளவில் அதிக எண்ணிக்கையில் மறுமணம் செய்தவர் எனும் சாதனைக்குரியவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த ழான் ழார் ழாக்கிற்கு ஒரு புத்தகத்தை வாங்கி வருவதற்காக அருகிலிருந்த நகரிற்கு சென்ற சமயத்தில்தான் போன் பீரோவிற்கு அது நிகழ்ந்தது.

போன் பீரோ நகரிற்கு சென்று புத்தகத்தை வாங்கி விட்டு தன் கிராமம் திரும்புவதற்காக பஸ்தரிப்பில் தனியாக நின்றான். பெண்கள் விட்டு விட்டு ஓடும் கிராமத்திற்கு செல்ல பஸ்கூட விரும்பவில்லை போலும். அன்று குறித்த நேரத்திற்கு வரவேண்டிய பஸ், நடுவழியில் ஒரு பயணி மாயாவியும் மன்மதன் மாக்னோவும் கதையைப் படித்தநிலையில் மாரடைப்புக்குள்ளாகியதால் தாமதத்திற்குள்ளாகியது. பஸ் வருவதற்கு இன்னமும் ஒரு மணி நேரம் ஆகலாம் என்பதை அறிந்த பீரோ, பஸ்நிலையத்தை சுற்றி வரலாம் என நினைத்தான். அருகில் இருந்த ஒரு பழக்கடையில் ஆப்பிள் ஒன்றை வாங்கிக் கடித்தபடியே சுற்ற ஆரம்பித்த பீரோவின் மனதில் அவனை சுற்றி விழுந்த காட்சிகள் இனம்புரியா ஒரு உற்சாகத்தை ஏற்படுத்த ஆரம்பித்தன.

மிக உற்சாகமாக சுற்றிக் கொண்டிருந்த பீரோ அருகில் திறந்திருந்த ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தான். அங்கே! சம்போகம் என்பதன் முதல் சித்திரம் தன் வரிகளை ஜன்னல் வழியாக பீரோவின் விழிகளிற்குள் ஏற்றியது. தன் கையிலிருந்த புத்தகத்தில் பீரோவின் விரல்கள் கோலமிட ஆரம்பித்தன. விரல்களின் வேகமும் சம்போகத்தின் வேகமும் கலை வேகம் கொண்டன. பஸ்நிலைய டாய்லெட்டை நோக்கி விரைவாக ஓடினான் பீரோ. அங்கிருந்த ஒரு கழிவறையில் உள்ளே நுழைந்து கதவை மூடினான். அவன் கண்கள் அந்தக் கழிவறையின் சுவரில் பார்வையை தெறிக்கவிட்டன. சற்று நேரத்திற்குமுன்பாக அவன் கண்ட காட்சியும், கழிவறை சுவரில் கிறுக்கப்பட்டிருந்த கலைக் கிறுக்கல்களும் வார்த்தைகளும் அவனை ஒரு மோன நிலையின் உன்மத்த உச்சத்திற்கு எடுத்து சென்றன. டாய்லெட்டில் கிடந்த சில கரித்துண்டங்களை கொண்டு தன் உணர்வுகளை அங்கிருந்த சுவர்களில் பதிக்க ஆரம்பித்தான் பீரோ. டாய்லெட்டை உபயோகிக்க வந்தவர்கள் பீரோவின் திறமையில் தம்மை தொலைத்தார்கள். அவன் விரல்களின் வேகம், அவன் கிறுக்கல்களில் ஒளிந்திருந்த உண்மை, அவன் கிறுக்கல்களில் புலப்பட்ட தனித்தன்மை என்பன அவர்களை ஆக்கிரமித்தன. தாம் செய்ய வந்த காரியத்தை அவர்களை மறக்கடிக்க வைத்தன பீரோவின் ஆரம்ப கிறுக்கல்கள். பின்னாட்களில் கழிவறை சுவர்களிலிருந்து பீரோவின் கிறுக்கல்களை துப்பரவு செய்து நீக்கியமைக்காக போக்குவரத்துதுறை பெரும்வருத்தம் தெரிவித்தது. போன் பீரோவை தம் பஸ்நிலைய கழிவறை சுவர்களில் கிறுக்கித்தரும்படியும் வேண்டுகோள் விடுத்தது. பெருந்தன்மையாக தன் ரசிகர் படையை அங்கு போய் கிறுக்க சொனனார் பீரோ. மீ த பஸ்டு, படித்து விட்டு வருகிறேன், பின்னிட்டீங்க தல, போன்ற பல வாசகங்கள் இன்றும் கழிவறைகளின் சுவர்களை கலைக்கூடங்களாக அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

thalaஇந்நிகழ்வின் பின்பாக கழிவறை சுவர்கள் எல்லாம் பீரோவின் சித்திரவாங்கிகளாகின. கிராமத்தின் ஒரு கழிவறைவிடாது கிறுக்கினான் பீரோ. கிராம மதகுருவின் கழிவறையில் சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள் என சில சித்திரங்களுடன் அவன் கிறுக்கிய கிறுக்கல்தான் அவர் கைதுக்கு காரணம் என்பதையும் கிராம முதியவர் ழான் ழார் ழாக் ஒரு மென்புன்னகையுடன் கசிய விட்டார். மேலும் பீரோ முன்னொருநாளில் அவரிற்காக வாங்கி வந்த புத்தகத்தில் பதிந்திருந்த விரல் கீறல்களை உலகின் பார்வைக்கு வைத்த அந்த முதியவர், கலையின் முதல் விரலடிப் படிமம் இந்நூல் என்றார். தல வங்கி கெரங்கு எனும் அந்த காமிக்ஸ் கதை இன்றும் மறுபதிப்புக்களை கண்டு கொண்டிருக்கிறது. விரைவில் கலைத்தாளில் கறுப்பு வெள்ளையில் பீரோவின் விரல் படிமங்களோடு வெளிவரவிருக்கும் அக்காமிக்ஸ் புத்தகத்தை வெளியிடும் பதிப்பாளாரிற்கு பீரோவின் மரணம் இன்னம் இரு மாத கால அவகாசத்தை வழங்கியிருக்கிறது என்பதோடு மட்டுமல்லாது வழமையாக அவர் இடவேண்டிய முகட்டை நோக்கும் பதிவையும் கண்ணீர் அஞ்சலிப் பதிவாக்கி காலம் ஓட்டிட உதவியது. செத்தும் கொடுத்தான் பீரோ எனும் வார்த்தை இவ்வாறாக நிறைவேறிற்று.

சுவர்களில் மட்டுமே கிறுக்கிக் கொண்டிருந்த பீரோ, இறுதிவரை சுவர்களிலே மட்டுமே கிறுக்கினார். பிரபலம் பெற்ற பல காமிக்ஸ் தொடர்களை அவர் தன் நினைவாக இந்தப் பாழுமுலகில் விட்டுச் சென்றிருக்கிறார். தனது அலுவலகத்தை டாய்லெட்போல் வடிவமைத்து அதன் சுவர்களில் கிறுக்குவதன் மூலமே தன் தொடர்களிற்கு சித்திரங்களை உருவாக்கினார் பீரோ. ஒரு முறை தன் அலுவலகத்தில் ஒரு கதையின் ஓட்டத்திற்கு இடம் போதாது போக அலுவலகம் இருந்த கட்டிடத்திலிருந்த கழிப்பறைகளின் சுவர்களில் எல்லாம் கிறுக்கி அக்கதையை முடித்து வைத்த பெருமை பீரோவிற்குண்டு. இருப்பினும் அவர் அலுவலகத்தை விட்டு வெளியே சென்று அவர் வரைந்த கிறுக்கல்கள் தங்களிற்கு சொந்தமானவை என கழிவறை உரிமையாளர்கள் முறையிட்டது அவரிற்கு ஒரு பெருத்த அடியாக அமைந்தது. புயல் தேடிய புற்று எனும் அக்கதையினை முழுமையாக பிரசுரிக்க பீரோ மிகவும் சிரமப்பட்டார். பிற கழிவறை உரிமையாளர்களிற்கு காப்பிரைட்டில் ஒரு கணிசமான தொகையை அவர் தர வேண்டியிருந்தது. இருப்பினும் புயல் தேடிய புற்றின் இறுதிப்பக்கம் இன்றுவரை வெளிவரவேயில்லை. அதற்கு காரணம் கலைக்குஞ்சாமணி Kickasso.

கிக்காசோவிற்கும் போன் பீரோவிற்கும் நிகழ்ந்து வந்த போட்டி சூரியனிற்கும் சூரியனிற்கும் இடையில் நிகழ்ந்த மோதல் ஒன்றிற்கு ஒப்பானதாகவே உதாரணம் காட்டப்படக்கூடும். கிக்காசோ மெழுவர்த்தியின் சுடரில் விரல்களை வைத்தால் மாயாமாகும் ஒரு நாயகனை உருவாக்கினால், பீரோ பசுக்களின் பிறப்புறுப்பில் உடலின் எந்தப் பாகங்களை நுழைத்தாலும் மாயாமாகும் ஒரு ஹீரோவை உருவாக்கினார். மேலும் அந்நாயகனின் கதை ஒன்றில் பசு ஒன்று சுடர் கொண்ட மெழுகுவர்த்திமீது சிறுநீர் கழிப்பது போல ஒரு கட்டத்தை வரைந்து மாபெரும் சர்ச்சையை உருவாக்கவும் பீரோ தவறவில்லை. இதுவே ஒளிரும் சிறுநீர் சர்ச்சை என இன்றும் பரவலாக அறியப்படுகிறது. ஆனால் கிக்காசோ சளைத்தவரல்ல ஒரு பசுவின் வடிவில் மெழுகுவர்த்தியை உருவாக்கிய அவர் அதன் பிறப்புறுப்பில் திரியை அமைத்தார், இன்றும் அவர் அலுவலக காட்சியறையில் அவ் அல்குல்திரிமெழுகுப்பசு பார்வைக்கு கிடைக்கும். தன் கதையின் நாயகனின் அபிமான துணைக்கருவியாக கிக்காசோ அம்மெழுகுப் பசுவை உருவாக்கினார். கிக்காசோவின் ரசிகர்கள் அம்மெழுகுப் பசுவின் மாதிரிகளை சளைக்காது வாங்கிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் இவர்களிடையே இருந்து வந்த தொழில் போட்டி எல்லை மீறியதற்கு முக்கிய காரணம், படைப்பூக்கத்தின் உன்மத்த நிலையில் தன்னை மறந்து கிக்காசோவின் அலுவலக கழிவறையில் புயல் தேடிய புற்றின் இறுதிப் பக்கத்தை பீரோ கிறுக்கியதுதான். கிக்காசோ எந்த சமரசத்திற்கும் உடன்படவில்லை. தன் கழிவறை சுவரில் பீரோ வரைந்த பக்கங்களை வெளியிட அவர் கண்டிப்பாக மறுத்தார். வெறுத்துப் போன பீரோ இறுதிப்பக்கம் இல்லாத நிலையிலேயே புயல் தேடிய புற்று கதையை வெளியிட்டார். புயல் தான் தேடிய புற்றைக் கண்டடைந்ததா, புற்றின் உள்ளே நுழைந்ததா என்பது இன்று சிலர் மட்டும் அறிந்த ரகசியமே. போனால் போகிறது இன்னொரு சுவரில் கிறுக்கி கதையை முடியுங்கள் என பதிப்பகத்தார் அவரை சற்று கடுமையுடன் கேட்டுக் கொண்டபோது, ஒரு குழந்தையைப் போல் என்னால் இன்னொரு குழந்தையை உருவாக்க முடியாது இது படைப்பு, அச்சிடுவது அல்ல என கண்டிப்பாக மறுத்து விட்டார் பீரோ. ஆனால் இறுதிப்பக்கம் இல்லாத பீரோவின் கதையான புயல் தேடிய புற்றுதான் இன்றும் வாசகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. இதைவிட சிறப்பான ஒரு முடிவை எந்தக் கிக்காசோவாலும் வழங்கிவிட முடியாது என்கிறார்கள் கதையைப் படித்தவர்கள்.

Munich_crash_tribut_431575aஎவ்வளவு புகழ் பெற்றாலும் பொதுக் கழிவறைச்சுவர்களில் கிறுக்குவதை போன் பீரோ நிறுத்தவேயில்லை. அவ்வகையான கிறுக்கல்கள் வாய்க்கபெற்ற கழிவறைகள் இன்று நல்ல பார்வையாளர்களை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் டிவிலைட் திரைப்படம் காண்பிக்கப்பட்ட ஒரு திரையரங்கின் கழிவறையில் அவர் விரல்கள் கிறுக்கியவையே அவரின் அந்திக் கிறுக்கல்களாக அமைந்து விட்டன. டிவிலைட் திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது படைப்பாக்க உன்மத்தம் தன்னுள் குடிகொண்ட நிலையில் திரையரங்க கழிவறையை நோக்கி சென்ற போன் பீரோ உன்மத்தநிலை கலையாது சுவர்களில் கிறுக்க ஆரம்பித்தார். ஆனால் அவரின் திறமை மீது பொறாமை கொண்ட ஒரு ரத்தக் காட்டேரி அவர் உயிரை அன்று எடுத்து சென்றது. அவர் கழுத்தில் இருந்த துளைகளும் மேலும் உடலின் பல பாகங்களில் காணக்கிடைத்த அறிகுறிகளும் அவரை தாக்கியது ஒரு ரத்தக் காட்டேரியாகவே இருக்க வேண்டும் என்பதை இன்று உறுதிப்படுத்தியிருக்கிறது. திரையரங்கின் வாகனங்கள் தரிப்பிடக் காவலர் நடிகர் ராபார்ட் பேட்டின்சன் இந்த சந்தால் ஓடினார் எனத் தெரிவித்த தகவலை அவர் குடித்துவிட்டு உளறுகிறார் என்று எவருமே பொருட்படுத்தவில்லை. பல கலைஞர்களின் மரணத்தின் மீது நீடிக்கும் மர்மம் போலவே பீரோவின் மரணத்தின் பின்பாகவும் ஒரு மர்மம் நீடிக்கும். பீரோவின் முற்றுப்பெறா இறுதிக் கிறுக்கல்களை பார்வையிட்ட கிக்காசோ வாழ்க்கை என்பது ஒரு முற்றுப்பெறா கிறுக்கல், பீரோ அதன் உண்மை ரூபத்தை தன் கிறுக்கல்கள் வழி உணர்வின்றி விட்டுச் சென்றிருக்கிறார் என வருத்தத்துடன் தெரிவித்தார். மேலும் இந்நிலையில் சீனர்கள், ஜப்பானியர்கள் போலிருக்கிறார்கள் எனப் பீரோ கூறியதற்காக பீரோவின் நூல்களை பிரான்சு தடை செய்தது ஏன் எனும் கேள்வி ஏன் இப்போது என் நினைவில் வந்து சுடருகிறது என்றும் அவர் வருந்தினார். டாய்லெட்டில் தன் கலையை ஆரம்பித்த ஒரு கலைஞன் இன்று டிவிலைட்டில் அதனை நிறுத்திக் கொண்டான். அவன் உடல் அழிந்தாலும் ஆன்மாவான அவன் கலை அழியாது. பீரோ ஓவியங்களை வரைந்த கலைஞன் அல்ல ஓவியங்கள் வரைந்த கலைஞன் அவன். உலகெங்கிலும் இருக்கும் கழிவறைகளின் சுவர்கள் இன்று வழமையை விட ஈரலிப்பாக இருக்ககூடும். சுவர்களின் கண்ணீரை உணர்ந்த கலைஞன் நினைவுகள் ரசிகர்கள் மனதிலும் ஈரமாக இருக்கட்டும்.

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது என் கைகள் பதறின, உதடுகள் துடித்தன, கால்கள் டங்கு டங்கு என்று ஆடியது, என் உயிரே போய்விடும் போலிருக்கிறது. இதற்குமேல் என்னால் எழுத முடியவில்லை. பீரோவின் கிறுக்கல்களோடு நான் ஆழ்ந்திடப் போகிறேன். போன் பீரோவின் மறைவிற்காக உங்கள் உணர்ச்சிகரமான கண்ணீர் அஞ்சலிகளை நீங்கள் கீழே இருக்கும் கருத்துக் களத்தில் ஆற்றலாம். தமிழில் டைப் அடிக்க விரும்புவர்கள் தமிழ் தெரிந்தவர்களாக இருப்பது நல்லது. இது ஒரு காட்சிப் பதிவே ஒரு மெகா கண்ணீர் அஞ்சலிப் பதிவை பீரோவின் மறைவு தந்த பாதிப்பு நீங்கிய பின்பாக எழுதி வெளியிடுகிறேன் அன்பு காமிக்ரேட்ஸ்சுகளே. பீரோவின் ஆன்மா சாந்தியடைவதாக. RIP BONE BIRAUD :( –!:/_!

Sunday, March 11, 2012

ஆபிரகாம் லிங்கன், காட்டேரி வேட்டையன்!!


Rhinebeck எனுமிடத்தில் பல்பொருள் அங்காடியொன்றில் விற்பனையாளானாக இருக்கும் செத் கிரஹாம் சிமித்திற்கு ஹென்ரி எனும் வாடிக்கையாளன் வழி சில நாட்குறிப்புக்கள் கிடைக்கின்றன. அந்நாட்குறிப்புக்களை படிக்க ஆரம்பிக்க முன்பாக ஹென்றி விதிக்கும் சில நிபந்தனைகளை செத் ஏற்றுக் கொள்ள வேண்டியாகிறது. ஹென்றியையும் அவன் வழங்கிய பட்டியலில் உள்ள 11 நபர்களையும் தவிர நாட்குறிப்புக்களில் உள்ள விடயங்களை செத் யாருடனும் கலந்து பேசக் கூடாது, மேலும் அந்நாட்குறிப்புக்களில் உள்ள தகவல்களை கொண்டு செத் ஒரு ஆவணத்தை தயாரித்தல் வேண்டும் என்பன இந்நிபந்தனைகளுள் அடங்கும். ஆர்வத்தின் உந்தலால் ஹென்றியின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் செத், குறிப்பிட்ட ஒரு நபர் குறித்து அன்றுவரை அவன் நம்பியிருந்த பல தகவல்கள் பொய்யாக மாறிக்கொள்ளும் ரஸவாதத்தை அந்நாட்குறிப்புகளின் வாசிப்பு உருவாக்குவதை உணர ஆரம்பிக்கிறான்.

பட்டியலில் உள்ள 11 நபர்களையும் சந்தித்து உரையாடும் செத், அமெரிக்க தேசத்தில் வாழ்ந்திருந்த!! ரத்தக்காட்டேரிகளின் மறைக்கப்பட்ட வரலாற்றை அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறான். தேசத்தின் பிறப்பில், வளர்ச்சியில், அதனை நாசமாக்குவதில் ரத்தக் காட்டேரிகள் வகித்த பங்கு மற்றும் காட்டேரிகளின் கொடுங்கோன்மையின் பிடியிலிருந்து தேசத்தை காக்கப் போராடிய ஒரு மனிதன் குறித்தும் அவன் தெரிந்து கொள்கிறான். ரத்தக்காட்டேரிகள் கட்டுக்கதையல்ல, நிஜம்! அமெரிக்காவின் ஜனாதிபதியான ஆப்ரகாம் லிங்கன் அவன் காலத்தில் ஒரு சிறப்பான காட்டேரி வேட்டையன்! காலகாலமாக ஆப்ரகாம் லிங்கன் குறித்து சொல்லப்பட்டு வரும் தகவல்களால் கட்டப்பட்ட பிம்பம் நேர்மையற்றது! ஆப்ரகாம் லிங்கன் குறித்த நூல்கள் அவரின் உண்மையான போராட்டம் என்ன என்பது குறித்து பேசவேயில்லை! எனும் முடிவுகளை தன் ஆய்வுகள் மூலம் உருவாக்கி கொள்கிறான் செத்.

உண்மையில் ஹென்றி வழங்கிய ஆவணங்களை போலி அல்லது ஹென்றியின் உருவாக்கம் என்பதாகவே செத் கருதிக் கொள்கிறான் ஆனால் ஹென்றி தன் சுயரூபத்தைக் காட்டும்போது செத் தன் கருத்தை மாற்றியாக வேண்டியிருக்கிறது. ஆப்ரகாம் லிங்கன் நைனாவின் நாட்குறிப்பு என உங்களிடம் ஒரு நபர் சில பழைய குறிப்பேடுகளை தந்தால் உங்கள் மனநிலையில் உருவாகும் எண்ணங்களின் சித்திரங்கள் எவ்வாறானதாக இருக்கும்….எவ்வாறு பிரதி உருவாக்கப்பட்டது என்பதற்கு செத் வழங்கும் இந்த ஆரம்ப அறிமுகமே நாவலில் அவர் உட்பொதித்துள்ள கற்பனை வளத்தை நன்கு எடுத்துக்காட்டுகிறது. செத் ரைன்பெக்கில் வாழ்ந்தாரா அவர் விற்பனையாளராக இருந்தாரா அவர் வாழ்க்கை ஹென்றி தந்த நாட்குறிப்புக்களால் சிதைக்கப்பட்டதா எனும் கேள்விகளிற்கெல்லாம் விடைகள் என்ன என்பதை வாசகர்கள் இலகுவில் ஊகித்துக் கொள்ளலாம், தன் கற்பனையின் நம்பகத்தன்மையை அங்கதமாக உறுதிப்படுத்த விழையும் செத்தின் நகைச்சுவை உணர்வு பின் தொடரும் வரிகளிலும் தனக்கென ஒரு இடத்தை சுவீகரித்து கொண்டிருக்கிறது. இதன் பின்பாக வரலாற்றில் எழுதப்பட்ட தகவல்களுடன் பதமாக குழைக்கப்பட்ட சுவையான கற்பனை எளிமையான ஒரு கதை சொல்லலில் பங்கேற்கையில் உண்மைகளை ஒரு கணம் ஒதுக்கி வைத்துவிட்டு தொடரப்போகும் கதையில் லயிப்பதில் என்ன தவறுதான் இருக்க முடியும்.

Abraham-Lincoln-Vampire-Hunter-4தான் திரட்டிய தகவல்கள், மற்றும் லிங்கனின் நாட்குறிப்புக்கள், கடிதங்கள், அவருடன் பழகியிருந்த மனிதர்களின் கூற்றுக்கள் என்பவற்றைக் கொண்டு அவர் உருவாக்கியிருக்கும் நாவலான Abraham Lincoln: The Vampire Hunter ஐ மூன்று பாகங்களாக பிரித்திருக்கிறார் செத் கிரஹாம் ஸ்மித். முதல் பாகமான Boy, லிங்கனின் பிறப்பிலிருந்து அவன் 19 வயதை எட்டும் வரையிலான காலப்பகுதியில் நிகழ்ந்திருக்ககூடிய சம்பவங்களை வாசகனிடம் எடுத்து வருகிறது. ஏழு வயதான லிங்கன், வான் கோழிகளை வேட்டையாடும் காட்சியில் ஆரம்பமாகிறது கதை. லிங்கன் வேட்டையாடிய வான்கோழியின் குரூரமான மரணம் அவன் மனதில் பெரும் தாக்கத்தை உருவாக்குகிறது. தனக்கு தீங்கு நினைக்காத ஒரு உயிரைப் பறித்தது குறித்து சிறுவனான லிங்கன் மனதில் குற்றவுணர்வு உருவாகிறது. அவ்வான்கோழியின் மாமிசத்தை உண்ணாது விடுகிறான் லிங்கன். மேலும் தான் வேட்டையாடப் போவதில்லை என்பதில் உறுதியானவனாகிறான். அவன் தந்தை இதற்காக மரக்கட்டைகளை கோடாரியால் பிளக்கும் பணியை ஒரு தண்டனையாக லிங்கனிற்கு வழங்குகிறார். லிங்கனிற்கும் கோடாரிக்குமான நெருக்கத்தின் ஆரம்பம் இதுவே. மரக்கட்டைகளை பிளந்த அனுபவம் பின்னாட்களில் காட்டேரிகளின் இதயங்களை பிளக்க அவனிற்கு கைகொடுக்கும் என்பதை அவ்வயதில் லிங்கன் அறிந்தானில்லை.

1809ல் ஸிங்கிங் ஃபீல்டில் பிறந்த லிங்கனிற்கும் அவர் தந்தைக்கும் இடையில் மிகவும் ஒரு பெரிய இடைவெளி இருந்து வந்திருக்கிறது. எழுதப் படிக்க தெரியாத நபரான தாமஸ் லிங்கன், தன் குடும்பத்தின் ஆகக்குறைந்த தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும் ஒரு குடும்பத்தலைவனாகவே இருந்தார். இதுவே லிங்கன் தன் தந்தை மீது கொண்டிருந்த பற்றற்ற தன்மைக்கு மூலமாக இருந்தது. காலம், லிங்கன் தன் தந்தை மீது கொண்டிருந்த மெலிதான வெறுப்பை அதிகரிக்க அதிக வாய்ப்புக்களை எடுத்து வந்து கொண்டிருந்தது. தன் தந்தை தாமஸின் இறுதிச்சடங்கில்கூட லிங்கன் பங்கேற்கவில்லை எனுமளவிற்கு லிங்கனிற்கு அவர் முக்கியமற்றவராக மாறிப்போயிருந்தார். மாறாக தன் தாயாராகிய நான்சி லிங்கன் மீது பெரும் அன்பு கொண்டவராக இருந்தான் லிங்கன்.

கதைகள் கேட்பதில் ஆர்வமுள்ள லிங்கனிற்கு கதைகளைப் படித்துக் காட்டியும், கூறியும் வாசிப்பில் லிங்கனின் ஆர்வத்தை தூண்டினார் நான்சி. மேலும் லிங்கனை எப்போதும் எந்நிலையிலும் அன்புடன் வாரித்தழுவிக் கொள்பவராகவும் அவர் இருந்திருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக 1818ல் Milk Sickness என அழைக்கப்பட ஒரு வியாதியால் அவர் மரணத்தை தழுவிக் கொள்கிறார். மரணப்படுக்கையில் நான்சியின் அருகில் விலகாது இருந்த லிங்கனிற்கு அவன் தாயார் கூறிய இறுதி வார்த்தைகள் அவன் மரணம்வரை அவன் வாழ்வின் மீது கொண்டிருந்த பிடிப்பை இழக்காதிருக்க உதவின என்பதை நாவலில் பல இடங்களில் காணமுடிகிறது. நேசம் கொண்ட ஒருவரின் மரணம் வாழ்வின் மீதான பிடிப்பை அதிகரிக்க செய்கிறது அல்லது அதன் மீதான பிடியை நழுவச் செய்கிறது. லிங்கன் தன் தாயின் இறுதி வார்த்தைகளிற்காக வாழ்ந்து செல்பவனாக இருக்கிறான். அதேபோல் அவன் தாயின் மரணம் குறித்து பின் அவன் தெரிந்து கொள்ளும் உண்மைகளும் அவன் வாழும் வாழ்க்கைக்கு ஒரு இலட்சியத்தை எடுத்து வருகின்றன. லிங்கன் எனும் ஆளுமையின் உருவாக்கத்தில் அவன் தாய் வகித்த பங்கு என்ன என்பதை நாவலின் இப்பகுதி சொல்லாமல் சொல்கிறது. லிங்கன் பள்ளி சென்ற மொத்த நாட்களின் எண்ணிக்கை ஒரு வருடத்தைக்கூட தாண்டாது என்பது மிகவும் ஆச்சர்யத்தை எடுத்து வரும் ஒரு தகவலாக இருக்கிறது.

Abraham-Lincoln-Vampire-Hunter-1நான்சியின் மரணத்தின் பின்பாக சாரா எனும் பெண்மணியை மறுமணம் செய்து கொள்கிறார் தாமஸ். தன் சொந்தப் பிள்ளைகளைவிட ஆப்ராகம் லிங்கனில் பரிவு கொண்டவராக இருந்தார் சாரா. வாசிப்பின்மீது லிங்கனின் ஆர்வத்தை உணர்ந்த சாரா அதனை ஊக்குவிக்க தவறியதேயில்லை. பைபிளின் பழைய ஏற்பாட்டிலிருந்த கதைகள் லிங்கனை பெரிதும் கவர்ந்தன. தன் தந்தையைப் போலவே கதைகள் கூறுவதில் சிறப்பான ஆற்றல் கொண்டவனாக லிங்கன் உருவாக ஆரம்பித்தது இக்காலப்பகுதியில்தான். அதேபோல் பப்டிஸ் மதப்பிரிவை சேர்ந்த தாமஸ் லிங்கன், அமெரிக்க மண்ணில் புழக்கத்திலிருந்த அடிமைமுறை குறித்து எதிரான கருத்துக்களை கொண்டிருந்தார், அதை தீமையின் ஒரு வடிவாகவே அவர் கருதினார். தன் தந்தையிடமிருந்து லிங்கன் வரித்துக் கொண்ட பண்புகளாக மேற்கூறிய இரண்டையும் கருதிக் கொள்ளலாம். இதை தவிர்த்து தன் தந்தைக்கு நேர் எதிரான பிம்பமாக உருமாறினார் லிங்கன். தன் பிள்ளைகள் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகவும் அவர்கள் நலன்களை சிரத்தையுடன் கவனித்துக் கொள்ளும் தந்தையுமாகவே அவர் இருந்தார்.

1820ல் லிங்கனின் 11வது பிறந்ததினத்திற்கு பரிசாக சாரா அவனிற்கு ஒரு நாட்குறிப்பை வழங்குகிறார். அதே வருடத்தில் இலைதுளிர்காலத்தின் இரவொன்றில் தன் தாயின் மரணம் குறித்த சில உண்மைகளை தன் தந்தை வழியாக அறிந்து கொள்கிறான் லிங்கன். Milck Sickness என்பது உண்மையில் என்ன என்பதும் அவனிற்கு அந்த இரவில் தெளிவாகிறது. அவன் அறிந்து கொண்ட உண்மைகள் தன் தந்தையையுடன் அவன் கொண்டிருந்த உறவின் இடைவெளியை மேலும் அதிகரிக்கின்றன. அமெரிக்காவில் வாழ்ந்துவரும் காட்டேரிகளை பூண்டோடு ஒழிப்பேன் எனும் சபதத்தையும் அவன் கொள்ள காரணமாகவிருக்கின்றன. கடவுள் என்பவர் மீது லிங்கன் கோபம் கொண்டவனாகிறான். தன் தாய்மீது அவன் கொண்டிருந்த பாசமும், அவன் இளரத்தமும் காட்டேரிகள் குறித்த அபாயங்களை அவன் கண்களிற்கு காட்ட தடையானவையாகவிருந்தன. காட்டேரி வேட்டை பற்றிய தன் அனுபவங்களை தன் நாட்குறிப்பில் பதிவது என்றும் அந்நாட்குறிப்பை மிகவும் ரகசியமாக வைத்திருப்பது எனவும் லிங்கன் தீர்மானிக்கிறான். ஆனால் லிங்கனின் இந்த தீர்மானமானது பிற்காலத்தில் உறுதியற்ற ஒரு தீர்மானமாக மாறிப்போவதை தொடரும் நாட்குறிப்புக்களின் பதிவுகள்வழி வாசகன் அறிந்து கொள்ளமுடியும். தனது பலதரப்பட்ட உணர்வுகளையும் அனுபவங்களையும் லிங்கன் இந்த நாட்குறிப்புக்களில் பதிந்து வந்திருக்கிறார். இந்த வரிகள்தான் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் எனும் பிம்பத்தின் மீதான உடைப்பை சிற்றுளிபோல் நிகழ்த்துகிறது. நாவலின் முக்கியமான தளமும் லிங்கன் குறித்த கற்பனையான மாற்றுப்பார்வைதான். அதுவேதான் லிங்கன் குறித்த ஒரு சுருக்கமான கட்டுரைபோல் நகரும் இந்நாவலின் வாசிப்பனுபவத்தை ஓரளவிற்கேனும் சுவையான ஒன்றாக மாற்றியமைக்கிறது.

காட்டேரி வேட்டையனாக மாறிவிட்ட லிங்கன் அபாயங்களை தேடிப் போகிறான். அபாயத்தில் மாட்டிக் கொள்கிறான். காட்டேரிகள் குறித்து அதிக தகவல்கள் தெரிந்திராத நிலையில் அவர்களை எதிர்த்துப் போராடுவது அறிவற்ற செயலாக லிங்கனிற்கு தோன்றுவதேயில்லை. ஒரு காட்டேரி வேட்டையின்போது வசமாக ஒரு காட்டேரியின் பிடியில் மாட்டிக்கொண்டு உயிர்போகும் நிலையிலிருக்கும் லிங்கனை காப்பாற்றுகிறான் ஹென்றி ஸ்டேர்ஜெஸ். லிங்கனை மிகவும் சிறப்பான ஒரு காட்டேரி வேட்டையனாக மாற்றுவது ஹென்றி அவனிற்கு அளிக்கும் பயிற்சிகளே. காட்டேரிகள் குறித்து நன்கு அறிந்தவனாக இருக்கும் ஹென்றி தரும் தகவல்களைக் கொண்டு தன் வேட்டைகளை வெற்றிகரமானதாக நிகழ்த்த ஆரம்பிக்கிறான் லிங்கன். ஹென்றிக்கும் லிங்கனிற்குமிடையில் உறுதியான ஒரு நட்பு உருவாக ஆரம்பிக்கிறது. மரணம் என்பதை அர்த்தமற்ற ஒன்றாக ஆக்குவதாக இந்நட்பு நாவலில் சித்தரிக்கப்படுகிறது.

3244545680காட்டேரி வேட்டை மும்முரமாக நடந்தாலும் அதிலிருந்து எந்த வருமானமும் கிடைப்பதில்லை. இதனால் லிங்கன் தனக்கு கிடைக்ககூடிய வேலைகள் அனைத்தையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவனாக இருக்கிறான். இதில் கிடைக்கும் வருமானத்தை அக்காலகட்ட வழக்கப்படி அவன் தந்தையிடம் லிங்கன் தந்தாக வேண்டும், இது லிங்கனிற்கு உவப்பான ஒன்றாக இருந்ததில்லை. தன் தந்தையிடமிருந்து தூர விலகி இருக்கலாம் எனும் காரணத்திற்காகவே ஜேம்ஸ் ஜெண்ட்ரி எனும் வணிகன் தரும் வேலையை ஏற்றுக் கொள்கிறான் லிங்கன். ஜெண்ட்ரியின் சரக்குகளான பதப்படுத்தப்பட்ட பன்றி மாமிசம், சோளம் போன்றவற்றை தானே உருவாக்கிய தட்டைப்படகொன்றில் மிசிசிபி ஆற்றின் வழியாக அமெரிக்க தெற்கின் ஆழங்களை நோக்கி கொண்டு செல்லும் நீண்ட பயணத்தை தொடக்குகிறான் லிங்கன். இப்பயணம் அமெரிக்காவில் புழக்கத்திலிருந்த அடிமைமுறையின் குரூரம் குறித்த ஒரு பார்வையை லிங்கனில் அழுத்தமாகப் பதிக்கிறது. காட்டேரிகள் போலவே அமெரிக்காவை பிடித்த மற்றுமொரு கேடு அடிமைமுறை என்பதாக அவன் எண்ணங்கள் இருக்கின்றன. அடிமைமுறையை புழக்கத்தில் கொண்ட மனிதர்களுடன் லிங்கனின் வியாபார தொடர்புகள் இருந்தாலும் அதுகுறித்த சலனங்களை லிங்கன் எங்கும் காட்டிக் கொள்வதில்லை. நீயூ ஆர்லியன்ஸ் நகரில் சுதந்திரமாக பயமற்று உலவும் காட்டேரிகள் லிங்கனிற்கு வியப்பை தருபவர்களாக இருக்கிறார்கள். தன்னை வேவுபார்க்கும் ஒரு காட்டேரியை தீர்த்துக் கட்ட தொடர்ந்து செல்ல்லும் லிங்கன் ஒரு வித்தியாசமான சந்திப்பை உருவாக்கி கொள்கிறான். அந்த சந்திப்பின் பெயர் எட்கார் ஆலன் போ!

காட்டேரிகள் குறித்த லிங்கனின் பார்வைக்கு எதிரான பார்வை கொண்டவராக இருக்கிறான் எட்கார் ஆலன் போ. மதுவை சுவைத்தபடியே தன் காட்டேரி நண்பன் ஒருவன் குறித்து லிங்கனிடம் பகிர்ந்து கொள்ளும் போவின் கருத்துக்கள் லிங்கனை வியப்படைய வைக்கின்றன. ஆலன் போ ஒரு வித்தியாசமான மனிதன் எனும் எண்ணத்தை தன் மனதில் லிங்கன் உருவாக்கி கொள்கிறான். ஆலன் போவின் கவிதைகளில் மயங்கிய ஒரு காட்டேரி, மரணத்தையும், அதன் இருள்மையையும் குறித்து இவ்வளவு நுட்பமான உணர்வுகளுடன் எழுத ஒரு காட்டேரியால் மட்டுமே முடியும் எனக்கருதி பின் ஆலன்போ ஒரு காட்டேரி அல்ல என்பதை அறியும்போது அடையும் வியப்பு நாவலின் வரிகளில் சுவையாக சொல்லப்படுகிறது. காட்டேரிகள் அதிசயமான , மேன்மையான படைப்புக்கள் எனும் கருத்தைக் கொண்டவராக இருக்கிறான் ஆலன் போ. ஆலன் போ இரு தடவைகள் லிங்கனை சந்தித்து உரையாடும் தருணங்கள் நாவலில் இடம்பிடிக்கின்றன, இவை இரண்டிலும் ஆலன் போ மீதான ஒரு அருமையான சித்திரத்தை ஒரு சில வரிகளில் உருவாக்கும் வித்தையை செத் சாதித்து இருக்கிறார். அமெரிக்க காங்கிரஸிற்கான தேர்தலில் வெற்றி பெற்று வாஷிங்டனில் வாழ்ந்து வரும் லிங்கனை 1849ன் பிப்ரவரியில் மீண்டும் சந்திப்பார் ஆலன் போ. அந்த சந்திப்பின்போது காட்டேரிகள் திட்டமிட்டுள்ள ஒரு சதி குறித்து லிங்கனிடம் பேசும் ஆலன் போ, அதே வருடத்தில் அக்டோபர் மாதத்தில் பால்டிமோர் நகரின் தெருக்களில் மனநிலை குழம்பியவராக நடந்து திரிந்து பின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இறந்து போகிறார். நாவலில் காட்டேரிகள் தாக்கி மரணமானவர்களின் நோய் அறிகுறிகளும் ஆலன் போவின் நோய் அறிகுறிகளும் ஒத்தவையாக இருக்கின்றன. ஆலன் போவின் மரணத்தின் மீது படிந்திருக்கும் மர்மத்தின் இருளை இந்தக் கற்பனை மூலம் இங்கு தெளிவாக்க விழைகிறார் செத். 1829ல் நீயூ ஆர்லியன்ஸில் ஆப்ரகாம் லிங்கன் காணும் அனுபவங்களுடன் நாவலின் முதல் பாகத்தை நிறைவிற்கு இட்டு வருகிறார் செத். சாதாரண வாசகன் ஒருவன் அதிகம் அறிந்திராத ஆப்ரகாம் லிங்கனின் இளமைக்காலம், மற்றும் அவர் வாழ்ந்திருந்த காலத்தின் மக்களின் வாழ்க்கை முறை என்பவற்றை சுருக்கமாக சொல்வதன் மூலம் இப்ப்குதியை விறுவிறுப்பானதாக செத் உருவாக்கியிருக்கிறார்.

abraham-lincoln-and-edgar-allen-poe-1311735603-8913செத்தின் நாவலின் இரண்டாம் பாகமான Vmpire Hunter, லிங்கனின் வாழ்வின் மிக முக்கியமான சில நிகழ்வுகளை தொட்டுச் செல்கிறது. 1830களில் இலினாய்ஸிற்கு தன் குடும்பத்துடன் இடம்பெயர்கிறான் தாமஸ் லிங்கன். தன் தந்தையுடன் இலினாய்ஸில் மேலும் இரு வருடங்களை கழிக்கும் லிங்கன், தன் இருபத்தி இரண்டாவது வயதில் தன் வழியில் தனித்து செல்ல ஆரம்பிக்கிறான். தான் ஏற்றுக் கொண்ட வேலைகளில் சிரத்தையுடன் உழைக்கும் அவனது திறமையை வியக்கும் டெண்டன் ஒஃபுட் எனும் வியாபாரி நீயூ சலேம் எனும் குடியேற்றத்தில் அவன் உருவாக்கும் பல்பொருள் அங்காடியில் லிங்கனை சிப்பந்தியாக பணிக்கு அமர்த்திக் கொள்கிறான். இங்குதான் லிங்கனிற்கு வில்லியம் மெண்டெர் கிரஹாம் எனும் பள்ளி ஆசிரியரின் நட்பு கிடைக்கிறது. பிற்காலத்தில் மிகச் சிறந்த ஒரு பேச்சாளனாக லிங்கன் திகழ்வதற்குரிய ஆரம்பகட்ட பணிகளிற்கு மெண்டெர் கிரஹாம் அதிக பங்களிப்பு செய்திருக்கிறார். அமெரிக்க மண்ணில் வாழும் காட்டேரிகள் குறித்த எண்ணங்கள் லிங்கனில் இருந்து கொண்டே இருக்கின்றன. அமெரிக்காவில் காட்டேரிகள் எந்த பயங்களுமின்றி சுதந்திரமாக வாழ்வதையும், அவர்கள் ஆற்றும் உயிர்க்கொலைகள் மீதான தண்டனைகள் குறித்த அச்சங்கள் ஏதும் அவர்களிடம் இல்லை என்பதும் லிங்கனால் உணரப்படுகிறது. மேலும் காட்டேரிகளிற்கும் அடிமை வியாபாரிகளிற்கும் இடையில் உருவாகி இருக்கும் மெளனமான ஒரு புரிந்துணர்வும் லிங்கனால் அறியக்கூடிய ஒன்றாகவிருக்கிறது. அடிமைகளின் ரத்தம் மனிதர்களாலும், காட்டேரிகளாலும் உறிஞ்சப்படுவதில் அமெரிக்க மண்ணில் வேற்றுமை இல்லை எனும் உண்மையை செத் வாசகனிடம் இங்கு எடுத்து வர ஆரம்பிக்கிறார். காட்டேரி எனும் தீமைக்கு எதிரான போராட்டம் அடிமைமுறைமைக்கு எதிரான, அமெரிக்க மண்ணில் வாழும் மனிதனின் நிறம் எவ்வாறானதாக இருந்தாலும் அது அவன் சுதந்திரத்திற்கான போராட்டம் எனும் மாயவரிகளை வாசகன் இங்கு காண ஆரம்பிக்கிறான். இந்நிலையில் ஆப்ரகாம் லிங்கன் தன் அரசியல் வாழ்வின் முதல்படியில் காலடி எடுத்து வைப்பதையும் செத் நாவலிற்குள் இட்டு வருகிறார்.

1832ல் இலினாய்ஸ் மாநில தேர்தலில் நீயு சலேம் குடியிருப்பு பகுதி வேட்பாளாராக தன்னை அறிவித்துக் கொள்கிறான் லிங்கன். இக்காலகட்டத்தில் Black Hawk எனும் செவ்விந்திய உரிமைப் போராட்ட தலைவன், அமெரிக்க அதிகாரத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையை மீறி கலகத்தில் ஈடுபட ஆரம்பிக்கிறான். இந்தச் செவ்விந்தியப் போராளியையும் அவனது குழுவையும் எதிர்த்துப் போராட தன்னார்வ வீரர்களாக சேர்ந்து கொள்பவர்களில் ஒருவராக இருக்கிறார் லிங்கன். போர் மீது அக்காலத்தில் லிங்கன் கொண்டிருந்த மோகம், தலைவனாகி அமெரிக்கர்களை வழிநாடத்தி செல்வதில் அவரிற்கிருந்த பிரியம் எனபன நாவலின் இப்பகுதியில் புலனாக ஆரம்பிக்கின்றன. இப்பகுதியில் அதிர்ச்சி தரும் சில வரிகளை லிங்கனின் எண்ணமாக எழுதுகிறார் செத். காட்டேரிகளை விட வேகமும், வலிமையும் குறைந்த செவ்விந்தியர்களை எளிதாக அதிக எண்ணிக்கையில் கொன்று குவிக்க முடியும் என லிங்கன் கருதுவதாக அமையும் வரிகள் இங்கு அதிர்ச்சி தருகின்றன. அடிமைமுறையை கேடாக கருதும் லிங்கன் எவ்வாறு செவ்விந்திய மக்களின் உரிமைப்போராட்டத்தை அமெரிக்க மண்ணிற்கு எதிரான ஆபத்தான ஒன்றாக விளங்கிக் கொண்டான் போன்ற கேள்விகளை வாசகன் எழுப்பாது இப்பகுதியிலிருந்து நகர முடியாது. அரசியல் வாழ்க்கையில் ஆப்ரகாம் லிங்கனின் முதல் வெற்றி 1834 ஆகஸ்டில் அவனை வந்தடைகிறது. இலினாய்ஸ் மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுகிறான் லிங்கன். எதிர்காலத்தில் ஒரு வக்கீலாவதற்கும், வெள்ளை மாளிகையில் நுழைவதற்குமான முதல் படி இந்த வெற்றியில்தான் ஆப்ரகாம் லிங்கனிற்கு கட்டி தரப்படுகிறது. அது மட்டுமல்ல இக்காலகட்டத்தில்தான் தன் முதல் காதலையும் சந்தித்துக் கொள்கிறான் லிங்கன்.

இந்த உலகை பாழாக்கும் அனைத்து இருள்மைகளிற்கும் எதிரான ஒரு ஒளடதமாக அவள் இருந்தாள்.”என தன் காதலியான ஆன் ருட்லெட்ஜ் குறித்து தன் நாட்குறிப்பில் பதிகிறான் லிங்கன். இவ்வரிகளை லிங்கன் எழுதிய காலத்தில் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பெரும் கடனில் சிக்கியிருந்தான் லிங்கன். ஆன் ருட்லெட்ஜின் நினைவுகள் லிங்கனை கடன் தந்த அழுத்தத்திலிருந்தும், காட்டேரிகளின் மீதான அவன் வஞ்சத்திலிருந்தும் தூரத் தள்ளி வைத்திருந்தன. கதாசிரியர் செத் இங்கு லிங்கனை அசாதரணமான ஒரு பிறவியாக சித்தரிக்காது வழமையாக காதலின் கொடூர பிடியில் சிக்கித் தவிக்கும் ஒரு இளைஞனாகவே காட்ட விழைகிறார். காதலியின் அருகாமையை எப்போதும் வேண்டும், அவள் தந்த முதல் முத்தத்தை தன் மரணமூச்சின்போதும் நினைவுகூரும், காதலியின் அழகை ஓயாது புலம்பும் ஒருவனாகவே லிங்கன் இருக்கிறான். ஆனால் லிங்கனின் சாபம் அவனை விடுவதாக இல்லை அவன் உயிர்க்காதலியான ஆன் ருட்லெட்ஜ் 1835ல் அகால மரணமடைகிறாள். லிங்கன் சற்று அடக்கி வாசிக்க ஆரம்பித்திருந்த காட்டேரி வேட்டையை மீண்டும் முடுக்கி விடுவதாக இச்சம்பவம் அமைகிறது. தாய், காதலி எனும் இரு அன்புகளையும் தன்னிடமிருந்த பறித்த தீமைக்கு எதிரான போராட்டத்தை லிங்கன் தீவிரமாக நடாத்துவதின் வழி சாதாரண பழிவாங்கும் படல கதையமைப்புக்களை ஒத்ததாக நாவலின் கதையமைப்பு மயக்கத்தை உருவாக்கும் தருணமிது. ஆனால் லிங்கனை ஒரு காட்டேரியின் பிடியிலிருந்து முன்பொருமுறை காப்பாற்றிய ஹென்றி, ஆனின் இறுதிச் சடங்குகளின் பின்பாக லிங்கனிடம் சில உண்மைகளை விளக்க ஆரம்பிக்கிறான். லிங்கனை பிரதான பாத்திரமாக கொண்டு ஒரு தேசத்தை கொடுங்கோன்மையின் பிடியிலிருந்து மீட்க ஒரு குழு வகுக்கும் திட்டங்களை லிங்கன் இத்தருணத்தில் அறிந்து கொள்கிறான். காலம் அவனை காதலியை இழந்த வேதனையிலிருந்து மீட்டெடுக்கிறது. 1839ல் லிங்கனிற்கு அறிமுகமாகும் மேரி டோட்டை 1842ல் திருமணம் வாயிலாக கரம் பற்றுகிறான் லிங்கன். லிங்கனை சாதாரண ஒரு மனிதனின் உணர்வுகளோடும் குழப்பங்களோடும், சிக்கல்களோடும் இப்பகுதியில் வடித்திருக்கும் செத், ஆப்ரகாம் லிங்கன் மீது வாசகன் பார்வையை தன் கற்பனையால் மறுபுனைவு செய்கிறார். 1857 வரை தொடரும் இப்பகுதியில் செத், லிங்கனின் குடும்ப வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, வக்கீல் வாழ்க்கை போன்றவற்றை வாசகனிடம் எடுத்து வருகிறார். 1843ல் அவரிற்கு முதல் மகன் பிறக்கிறான், தன் மனைவிமீதும், குழந்தைமீதும் கொண்ட பற்றால் காட்டேரி வேட்டையை நிறுத்துகிறான் லிங்கன். ஆனால் 1857ல் ஹென்றி, நீயூயார்க்கிற்கு வருமாறு லிங்கனிற்கு ஒரு அழைப்பை விடுக்கிறான். அவன் அழைப்பை ஏற்று அங்கு செல்லும் லிங்கன் பல அதிர்ச்சி தரும் உண்மைகளை அறிந்து கொள்கிறான். அந்த உண்மைகள் தந்த பாதிப்பில் லிங்கன் எடுக்கும் முடிவானது அமெரிக்க வரலாற்றையே மாற்றியமைத்த ஒன்றாக அமைந்தது.

assassination-President-Lincoln-Ford-Theatre-April-14-18651858ல் ஆரம்பிக்கும் நாவலின் மூன்றாம் பகுதியான President ஆனது லிங்கனின் படுகொலைவரை தொடர்கிறது. லிங்கன் எவ்வாறு அமெரிக்க ஜனாதிபதியானார் என்பதற்கு தன் கற்பனை வழி காரணங்களை புகுத்துகிறார் செத். ஹென்றியும் அவன் நண்பர்களும் எவ்வாறு லிங்கனிற்கு பின்னிருந்து காய் நகர்த்தினார்கள் என்பதை நாவலின் வரிகள் சுவாரஸ்யமாக வாசகனிடம் எடுத்து வர முயல்கின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாவலின் விறுவிறுப்பு குறைந்த பகுதியாக இந்த இறுதிப் பகுதி அமைந்து விடுகிறது. தேர்தல், அரசியல் வெற்றிக்கான காய்நகர்த்தல், காட்டேரிகளின் சதிகளை முறியடித்தல் என இருந்தாலும் வேகம் இந்தப் பகுதியில் காணாமல் போய்விடுகிறது. 1861ல் ஆரம்பமாகிய அமெரிக்க உள்நாட்டுப் போரின் பின்பாகவுள்ள உண்மையான காரணங்கள் என்ன என்பதை செத் தன் கற்பனையில் வடிக்க விழைகிறார். அப்போரில் பங்கு பற்றியவர்களின் கடிதங்கள் வழி தன் கற்பனையின் நம்பகத்தன்மையை செத் இங்கு நிரூபிக்க முனைகிறார். அமெரிக்காவில் வாழும் ஒவ்வொரு மனிதனும் முழுச் சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக முனைப்புடன் போராடிய ஒரு மனிதனின் கதையை அவரால் நாவலில் சுவையாக தர முடிந்திருக்கிறது. லிங்கனின் மனைவியான மேரி டோட் மனநிலை சிதைந்த ஒரு பெண்ணாக நாவலில் இறுதிப் பகுதியில் சித்தரிக்கப்படுகிறார். இறந்துபோன தன் இரு புதல்வர்களின் ஆவிகளுடனும் அவர் தொடர்பு கொள்ள முயற்சித்த சந்தர்ப்பங்களும், லிங்கனிற்கும் அவரிற்குமிடையிலான உறவு சில சுமூகமான நல விசாரிப்புக்களுடன் தேங்கிவிட்டதும் மெலிதாக இப்பகுதியில் கோடிட்டு காட்டப்படுகிறது. லிங்கன்கூட உறுதி குலைந்தவராகவும், தளர்ந்து போனவராகவும், சிரிப்பை தொலைத்தவராகவுமே சித்தரிக்கப்படுகிறார். லிங்கனை படுகொலை செய்த ஜான் வில்க்ஸ் பூத் குறித்த சில நம்பவியலா தகவல்களை கதையின் இறுதிப்பகுதியில் சேர்த்து காட்டேரிகள் எனும் உருவகத்தினை உறுதிப்படுத்த விழைகிறார் கதாசிரியர். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் 1963 ஆகஸ்டில் லிங்கன் நினைவுச்சின்னத்திற்கு முன்பாக ஆற்றும் உரையுடனும், மிகையான கற்பனை உண்மைகளுடனும் நாவல் நிறைவு பெறுகிறது.

மிக எளிதான நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவல், வேகமான வாசிப்பை வழங்கக்கூடியது. இருப்பினும் நாவலின் தரம் சுமாரான ஒன்றே. நாவலின் பல பக்கங்களிலும் போட்டோஷாப் உதவியுடன் உருவாக்கப்பட்டிருக்கும் படங்கள் நகைச்சுவையை மேலும் கூட்டும் தன்மையுடையவையாக இருக்கின்றன. ஸ்டார்பக் காப்பியகம், கூகிள், விக்கி என தன் நன்றியை செலுத்தும் செத்தின் எழுத்துக்கள் ஆன்மாவை உள்வைத்து இருக்கும் ரகத்தை சேர்ந்தவை அல்ல. பரபரப்பான மாத நாவல் ஒன்றை படிப்பது போல ஒரு அனுபவத்தை வழங்கும் இந்நாவல் லிங்கன் எனும் மனிதன் மீதும் அவர் எடுத்துக் கொண்ட அடிமைமுறையொழிப்பு போராட்டத்தின் மீதுமான மதிப்பை புதுப்பிக்க வைக்கும் பணியை சிறப்பாக நிகழ்த்தி விடுகிறது. இவ்வருடத்தின் ஜூன் மாதத்தில் இந்நாவலின் திரைவடிவம் வெள்ளித்திரைகளை அலங்கரிக்கும் என்பது உபரித்தகவல். நாவலை படித்தால் டிக்கட் காசு மிச்சம் என்பது கூடுதல் தகவல்!!

Sunday, February 19, 2012

மறக்கப்பட்ட ஆன்மாவும் கொண்டாடப்படும் சடலமும்


சில சமயங்களில் நாவல் வடிவிலிருந்து திரைக்கு எடுத்து செல்லப்படும் படைப்புக்கள் அவற்றின் மூலத்தை விட அதிக திருப்தியை ரசிகர்களிற்கு அளிப்பது உண்டு. பெரும்பாலான சமயங்களில் நாவலைப் படித்த அன்பர்கள் திருப்தியுறாத நிலையிலேயே ஒரு திரையரங்கை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். நாவலிலிருந்து திரைக்கு எடுத்து செல்லப்படுகையில் ஒரு படைப்பிலிருந்து நீக்கப்படும், அல்லது சேர்த்துக் கொள்ளப்படும் அம்சங்களும், திரைப்படைப்பின் நீளத்தை கருத்தில் கொண்டு சுருக்கி செறிவாக்கப்படும் அல்லது நீர்த்துப்போக செய்யப்படும் கதையும் நாவல் வடிவில் படைப்பு அளிக்கும் உணர்வை திரையில் வாசகர்களிற்கு அளிக்க தவறியிருக்கின்றன. இவ்வகையின் சிறந்த ஒரு விதி விலக்காக அண்மையில் வெளியாகிய The girl with the dragon tattoo வைச் சொல்லலாம். 2011ல் மூலப்படைபொன்றிலிருந்து தழுவப்பட்ட திரைக்கதைக்கான ஆஸ்கார் பரிந்துரையை பெற்றிருக்கும் Tinker Tailor Soldier Spy திரைப்படம் நாவலைப் படித்த வாசகர்களை விருதை வென்றாலும் திருப்திப்படுத்தப் போவதில்லை.

imageஉளவாளி என்றதும் உடனடியாக நினைவிற்கு வருவது 007 படைப்புக்கள். நிச்சயமாக அப்படைப்புக்களில் வரும் பெரும்பாலான நிகழ்வுகள் போன்று உளவுகளும் அதனுடன் சார்பான சாகசங்களும் நிகழ சாத்தியங்கள் இல்லை என்பது பக்குவமானவர்களிற்கு நன்கு தெரிந்த ஒன்றே. இருப்பினும் பாண்ட் கதைகளிற்குரிய அம்சங்கள் ரசிகர்களை குசிப்படுத்த தவறுவதில்லை. பாண்ட் திரைப்படங்களிற்கு இன்றும் இருக்கும் எதிர்பார்ப்பே அதன் பிரபலத்திற்கு சான்றான ஒன்று. ஆனால் பாண்ட் வகையறா உளவு சாகசங்களிலிருந்து விலகி அமைதியான ரகசியமான சங்கேதமான வழிகளில் நடைபெறும் உளவு சாகசங்களே நடைமுறை உலகில் சாத்தியமான ஒன்றாகவிருக்கிறது. John Le Carré இவ்வகையான அமைதியான உளவுப் புனைவுகளை படைத்த படைப்பாளி. பனிப்போர் காலத்தில் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்ற இவ்வகையான உளவுப் புனைவு படைப்பாளிகளில் இன்றும் சிறப்பான சில நாவல்களை தந்து கொண்டிருப்பவர் ஜான் லு கார் மட்டுமே.

1974ல் அவர் எழுதிய Tinker Tailor Soldier Spy நாவல் வெளியாகியது. இங்கிலாந்து உளவுத்துறையின் உயர்மட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு துரோகியை கண்டு பிடிக்கும் நிகழ்வுகளே கதையின் மையவிழை. திரைப்படத்தின் மையவிழையும் இதுதான். ஆனால் அந்த மையவிழையை சுற்றி ஜான் லு காரே தன் நாவலில் அழகாக நெய்த இங்கிலாந்து உளவாளிகளின் வாழ்வியல் சிக்கல்களை Tomas Alfredson இயக்கியிருக்கும் திரைப்படமானது வெகுவாக இழந்து நிற்கிறது. செக்ஸோஸ்லாவாக்கியவில் இடம்பெறும் ரகசிய நடவடிக்கை ஒன்று தவறிவிட அதன் விளைவுகளிற்கு காரணமான உளவுத்துறை தலைவர் கண்ட்ரோலும் அவரிற்கு நெருக்கமான ஊழியனான ஜார்ஜ் ஸ்மைலியும் பதவி நீக்கம் செய்யப்படுவதாக நாவலில் வரும். திரைப்படத்தில் செக்கோ, புடப்பெஸ்டாக மாறியிருக்கும் அதேபோல் உளவுத்துறையின் அழுக்கு வேலைகளை நிறைவேற்றும் ஏஜென்டான ரிக்கி டார், சோவியத் ஏஜெண்டான இரினாவை அறிமுகமாக்கி கொள்ளும் இடம் நாவலில் ஹாங்காங் ஆகவும் திரைப்படத்தில் இஸ்தான்புல் ஆகவும் மாறியிருக்கும். சம்பவங்கள் நிகழும் ஸ்தலங்களின் மாற்றங்கள் கதையில் மாற்றத்தை கொணரவில்லை எனினும் திரைக்கதையானது நாவலின் சம்பவங்கள் எட்டிச்செல்லும் ஆழத்தை அதன் முனையில் கூட தொட்டுப்பார்த்திடவில்லை.

நாவலின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான ஜிம் பிரிடோ, இங்கிலாந்தின் ஒரு அமைதியான பகுதி ஒன்றில் ஆசிரியராக பணியில் சேரும் நிகழ்வுடனேயே லு காரின் நாவல் ஆரம்பமாகும். ஜிம் பிரிடோ பாடசாலைக்கு வருவதை அவதானிக்கும் மாணவனான பில் ரோச்சிற்கும் ஜிம் பிரிடோவிற்குமிடையில் உருவாகும் மழை ஈரத்தின் தன்மை கொண்ட உறவையும் அந்த உறவின் வழியாகவே ஜிம் பிரிடோ மீதான மர்மம் குவியும் உருவாக்கமும் நாவலில் அருமையாக கை வந்திருக்கும். ஜிம் பிரிடோவிற்கு இழைக்கப்பட்ட துரோகம் எவ்வளவு வலி நிறைந்தது என்பதை லு காரின் நாவலைப் படிக்காது உணர்ந்து கொள்ளவே முடியாது. நாவலை மிகக் கண்ணியமான சீமான்களிற்குரிய இயல்புடன் முடித்து வைக்கும் கதாபாத்திரமான ஜிம் பிரிடோவிற்கு திரைப்படத்தில் தரப்பட்டிருக்கும் அமுக்கியத்துவம் வியக்க வைக்கும் ஒன்றாகும். மீண்டும் ஒரு முறை தனித்துவமான நடிகர் மார்க் ஸ்ட்ராங் மிகவும் சிறப்பான முறையில் வீணடிக்கப்பட்டிருக்கிறார். துப்பாக்கி தோட்டா துளைத்து விழிகளின் கீழ் கண்ணீர் போல் வடியும் குருதியும், அத்தோட்டாவை எய்த துப்பாக்கியை ஏந்தியவன் விழிகளிலிருந்து வடிந்திடும் கண்ணீரிற்கும் உள்ள அர்த்தங்கள் திரைப்படத்தில் உணர்வு மரித்த நிலையிலே வீழ்கின்றன.

la-taupe-2012-20430-1561252877ஜான் லு கார் தன் கதை மாந்தர்களை நாயகர்கள் ஆக்க முயற்சிப்பதில்லை. கதாபாத்திரங்களை அவர்களின் இயல்புகளிற்கேற்ப இயங்கவிடுபவர் அவர். அவர் கதைகளில் பரபரப்பு என்பது அரிதானது ஆனால் மர்மம் மிக இறுக்கமான ஒரு பிடியை ஏற்படுத்திக் கொள்ளும். அவசரமேயற்ற கதியில் நகர்வதை போல நகரும் அவர் எழுத்துக்கள் வாசகர் மனதையும் நகர்த்திடும் இயல்பை கொண்டவை. மனைவியால் துரோகம் இழைக்கப்பட்ட, பதவி நீக்கம் செய்யப்பட்ட ஸ்மைலியின் வாழ்வை மிகவும் அமைதியாக தன் நாவலில் விபரிப்பார் லு கார். படிப்படியாக, செயல்படாநிலையில் உள்ள உளவுத்துறை ஊழியனின் வாழ்வை அவர் வாசகனிற்குள் ஒரு தேர்ந்த மதுவிடுதிப் பரிசாரகன் போல் ஊற்றுவார். நாட்டிற்கு அவர்கள் ஆற்றியிருக்ககூடிய கடமைக்காக உளவாளிகளும் உளவுத்துறை அதிகாரிகளும் அவர்கள் வாழ்க்கைகளில் தந்த விலையையும், பதவியிலுள்ளபோதும், பதவி நீக்கத்தின் பின்னுமாக அவர்கள் எதிர்கொள்ளும் அகச்சிக்கல்களையும் லு கார் வாசகனின் பார்வைக்கு எடுத்து வருவார். குறிப்பாக ஹானி சாக்ஸ் எனும் பெண் ஏஜெண்ட்டின் மீதான அவர் வரிகள் வாசகன் மனதை ஈரமண்ணை உழுது முடிப்பது போல் உழுது முடிப்பவை. ஹானி சாக்ஸ் பாத்திரம் திரைவடிவில் மிக விரைவாக திறந்து மூடும் மின்தூக்கி கதவுபோல் இயங்குகிறது. இயந்திரத்தனமாக.

மனைவியின் துரோகம், சகாவின் துரோகம் இவற்றினூடு இங்கிலாந்து உளவுத்துறையிலிருந்து ரஷ்ய உளவுத்துறைக்கு தகவல்கள் தந்து கொண்டிருக்கும் துரோகியை கண்டுபிடிக்கும் பொறுப்பு ஸ்மைலிக்கு. மிகவும் அமைதியான பாத்திரம் ஸ்மைலி. அதிர்ந்து பேசாத தகவல்கள் வழி உண்மையை தேடும் உளவுத்துறை அதிகாரி ஸ்மைலி. மீண்டும் தன் மனவியுடன் சேர்ந்திட வேண்டும் எனும் உள்மன ஆசை அவனுள் என்றும் இருந்து கொண்டே இருக்கும். தில்லியில் ரஷ்ய உளவுத்துறையின் ஒரு ஏஜெண்டை தன் பக்கம் இழுக்க செல்லும் ஸ்மைலி அங்கு தன் வாழ்வை தொலைக்க வைக்கும் வித்தை அந்த ரஷ்ய உளவாளியின் சிந்தனைகளில் புதைத்து விட்டு வருவான். அந்த உளவாளி கர்லா எனும் பெயருடன் தன் சதுரங்க ஆட்டத்தை ஆரம்பிக்கும்போது அதில் வெட்டி வீழ்த்தப்ப்படும் காய்களில் ஒன்றாக ஸ்மைலி இருப்பான். கர்லா, தன் திறமைக்கு நிகராக காய்நகர்த்த கூடியவனாக ஸ்மைலியை பார்க்கிறான். ஸ்மைலியை இங்கிலாந்தின் உளவுத்துறையில் இருந்து வெளியேற்றல் அவன் சதுரங்க ஆட்டத்தின் தலையாய நகர்வு. நாவலில் லு கார் வடிக்கும் இங்கிலாந்து நாட்டிற்கு எதிரான உளவாளிகள் குறித்த பார்வையின் முழுமை திரைவடிவில் இல்லை. கர்லா எனும் அசாத்திய உளவாளியின் நிஜரூபம் புடபெஸ்ட் காப்பிசாலைகளிலிருந்து வத்தைகளை தன் கைவிரல்களில் உருட்டுவதில் அடங்கிவிடுவதில்லை. திரையில் ஸ்மைலி பாத்திரத்தை ஏற்றிருக்கும் ஹாரி ஓல்ட்மேனிற்கு நல்ல வாய்ப்பு ஆனால் திரையில் ஸ்மைலி பாத்திரம் முழுமை பெறுவதில்லை. காலின் ஃபர்த் எனும் பண்பட்ட நடிகரும் பில் ஹெய்டன் எனும் பாத்திரத்தில் சிதைக்கப்பட்டிருப்பார். ரிக்கி டார் எனும் ஏஜெண்ட் இரினா எனும் ரஷ்ய உளவாளியுடன் உருவாக்கும் உறவை நாவல் ஒரு மதத்தின் புனிதத்திற்கு ஏற்ப விரிக்கும். திரையில் அந்த உறவு வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டிருக்கும். பீட்டர் ஹில்லாம் எனும் உளவுத்துறை அதிகாரியாக, ஷெர்லாக் தொலைக்காட்சி தொடரில் அசத்தும் பெனடிக்ட் கம்பர்பச் அழகான கோட் சூட் அணிந்து வந்து சந்தேகக் கேள்விகள் எழுப்பிச் செல்கிறார். நாவலில் பீட்டர் ஹில்லாம் ஒரு காதல் சிக்கலை எதிர்கொள்வதாக இனிதாக லு காரே அம்முக்கியமான பாத்திரத்தை உருவாக்கியிருப்பார். எழுபதுகளில் நிகழும் கதைக்கு ஒரு போலி மோஸ்தரை உருவாக்கியிருப்பது வெளிப்படையாகவே திரையிலிருந்து உணரப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

உளவுத்துறையின் அதிகார மட்டத்தில் இருக்ககூடிய சிக்கல்கள் மற்றும் போட்டிகள் அதன் மூலம் உருவாகும் குழுமனப்பான்மை, அரசியல் மட்டத்திலிருந்து உளவுத்துறைக்கு ஊட்டமான உளவுத்தகவல்கள் மீதான வறட்ச்சி குறித்து தொடர்ந்து வழங்கப்படும் அழுத்தங்கள், துடைத்தெறியும் அழுக்கு துணியைப்போல் எறியப்படும் உளவாளிகள், எதிர் நாட்டு உளவாளிகளுடன் நிகழ்த்தப்படும் கண்ணியமான ஆட்டம் , தாம் நம்பிக்கை கொண்ட சித்தாந்தங்களின் தோல்வியால் திசை மாறும் மனிதர்கள் அவர்கள் சிதறச்செய்யும் சகவாழ்க்கைகள் என லுகாரின் நாவல் ஒரு உளவுமென்சுழி. வாசகர்களை அதன் ஆழத்திற்கு எடுத்து செல்லும் அச்சுழி அருமையான ஒரு முடிவுடன் அவர்களை மேலெழச்செய்யும். லு காரை உளவுப் புனைவுகளின் அசைக்க முடியா படைப்பாளி என நிரூபிக்கும். மாறாக திரைவடிவம் வேககதியில் உண்ணப்படும் ஒரு பர்கர் போல உட்கொள்ளப்படக்கூடியது. பசியும் தீராது சுவையும் போதாது சில வேளைகளில் உண்ட உணர்வே இருக்காது. லு காரின் நாவல் ஆன்மா எனில் அதன் திரைவடிவம் அலங்கரிக்கப்பட்ட ஒரு சடலம். சடலம் அழகாக இருக்கிறது எனச் சொல்வதற்கு எனக்கு இஷ்டமில்லை ஆனால் அச்சுதந்திரம் இந்த உலகிற்கு இருக்கிறது. ஆன்மாவை மறந்து சடலங்களை கொண்டாடுவோமாக!!

ட்ரெய்லர்

Wednesday, February 1, 2012

அமெரிக்க காட்டேரி


உலகில் அதிகமாக விற்பனையாகும் புதினங்களை உற்பத்தி செய்திடும் படைப்பாளிகளில் ஒருவராகவே இன்னமும் திகில் கதை மன்னன் ஸ்டீபன் கிங் திகழ்கிறார். அவர் எவ்வளவு மோசமாக எழுதினாலும் அந்த எழுத்துக்களை ரசித்துப் படித்துவிட்டு தல பின்னிட்டார்ல என்று பாராட்டும் ரசிகர் கூட்டம் அவரிற்கு சர்வதேச ரீதியாக உண்டு. உண்மையில் இன்றைய ஸ்டீபன் கிங் எழுத்துக்களில் உள்ள திகில் மற்றும் பயங்கரம் என்னவென்றால் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நூல்களை அவர் எழுதி வெளியிட்டு வருவதுதான். அவரின் சில படைப்புக்கள் காமிக்ஸ் வடிவத்திற்கும் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் அவர் ஒரு காமிக்ஸ் படைப்பிற்காக பிரத்தியேகமாக எழுதியது American Vampire க்குதான் என இக்காமிக்ஸின் அறிமுகப் பக்கங்கள் தெரிவிக்கின்றன.

American-Vampire-2-variantScott Snyder என்பவரின் எண்ணத்தில் உதித்திட்ட கதைக்களமே அமெரிக்கன் வம்பயர் ஆகும். கிங்கிற்கு தெரிந்தவர் ஸ்னைடர் என்பதால் கிங் அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். கிங் கூறியிருப்பதுபடி கதையின் பிரதான பாத்திரமான Skinner Sweet ன் பூர்விகத்தின் அடித்தளங்களை முழுமையாக அவர் உருவாக்கியிருக்கிறார். அந்த வகையில் அதிர்ஷ்டம் செய்தது வாசகர்களாகிய நாங்கள் மட்டுமல்ல அமெரிக்கன் வம்பயர் கதையும்தான்.

லாஸ் ஏஞ்சலீஸிற்கு கிழக்கே ஐம்பது கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஆளரவமற்ற வனாந்தரமான பகுதி ஒன்றில் குவிந்திருக்கும் இருளை முரட்டுத்தனமாக குலைத்தவாறே வருகிறது ஒரு மோட்டார்வண்டி. வனாந்தரத்தின் ஒதுக்கமான ஒரு பகுதியில் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும் மோட்டார் வண்டியிலிருந்து கையில் விளக்குடன் இறங்குகிறது முக்காடு அங்கி அணிந்த ஒரு உருவம். அந்த உருவத்தின் நகங்களின் கூர்மை வனாந்தரத்தின் இருளைக் குத்திக் கிழித்துக் கொண்டிருக்கிறது. உருவத்தின் முக்காட்டினுள் நுழைந்த இருள் அங்கிருக்கும் இருளைக் கண்டு வேகமாக தன்னிடம் திரும்புகின்றது.

மோட்டார் வண்டியின் கதவை மெல்ல திறக்கிறது அந்த உருவம். திறந்த கதவினூடாக உயிரற்ற விழிகளுடன் வனாந்தரவெளியை வெறிக்கின்றன வண்டியில் அடுக்கப்பட்டிருக்கும் சடலங்கள். அருகில் இருக்கும் பள்ளமொன்றில் சடலங்களை இழுத்து வந்து வீசுகிறது முக்காடு உருவம். வண்டியிலுள்ள சடலங்களை தள்ளி முடித்த நிலையில் கிளம்ப தயாராகிறது முக்காடு. அப்போது பள்ளத்திலிருந்து இருளின் ஒரு விழுதை பற்றிக் கொண்ட முணுமுணுப்பாக ஏறிவருகிறது நலிந்த ஒரு குரல். ஒரு பெண்ணின் மரணவாசல் முனகல். இரக்கம் காட்டுங்கள் நான் சாகவில்லை என ஒலிக்கிறது அக்குரல். குரல் வந்த பெண்ணின் உடலில் ஆழமான காயங்கள். துளையிட்ட, கடித்துக் குதறிய, ஆழமாகக் கிழித்த. அவள் கண்மணி வானத்தில் மிதக்கும் பிறைபோல தோற்றம் கொள்கிறது. வான்பிறையும், நட்சத்திரங்களும் அவள் குரலைக் கேட்காதவைபோல மெளனமாக விழித்திருக்கின்றன……

AV1இப்படியாகத்தான் ஆரம்பமாகிறது அமெரிக்கன் வம்பயரின் கதை. புது ரத்தம் என பிரெஞ்சுமொழியில் பெயரிடப்பட்டிருக்கும் இத்தொகுப்பில் அமெரிக்கன் வம்பயர் கதையின் முதல் ஐந்து இதழ்களும் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இதழிலும் இரு கதைகள். ஒன்று 1925ல் நிகழ்வது. மற்றையது 1880ல் ஆரம்பமாகி 1925களை நோக்கி வேகமாக நகர்வது. இத்தொகுப்பின் முக்கிய பாத்திரங்களாக ஸ்கின்னர் ஸ்வீட்டையும், பேர்லையும் முன்வைக்க முடியும். புதிய வகை காட்டேரி ஒன்றின் தோற்றம், இருவகை காட்டேரிகளிற்கு இடையிலான வன்முறை, இவற்றின் மத்தியில் அகப்பட்ட நல்மனம் கொண்ட ஒரு சாதாரண துணைநடிகையின் வாழ்க்கையின் பிறழ்வு என்பவற்றை சுவையாக கதை விபரிக்கிறது.

இருளான ஆரம்ப பக்கங்கள் கடந்தபின் பிராகசமான விளக்குகள் ஒளிரும் தாரகையுலகமான ஹாலீவூட்டிற்குள் வாசகர்களை கதையின் பக்கங்கள் அழைத்து செல்கின்றன. பேர்ல், ஹாதி எனும் இரு துணை நடிகைகளின் வாழ்க்கை அப்பக்கங்களில் விபரிக்கப்படுகிறது. சினிமா அவர்கள் மீது செலுத்தும் கவர்ச்சி. ஒரு சிறுவேடத்திற்காகவேனும் காத்திருக்கும் அவர்கள் ஆர்வம். பிரபலமான நடிகர்கள் மீது அவர்கள் கொண்டிருக்கும் மையல். நாளாந்த வாழ்க்கையின் சுமைகளை இவற்றை தாண்டியும் தாங்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் என 1925களில் வாழ்ந்திருக்ககூடிய இரு துணைநடிகைகளின் வாழ்வின் ஒரு சிறியகூறை அதிக வேகமின்றி கதை கூறுகிறது. வேகமற்ற கதையின் முக்கிய திருப்பமாக பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரின் இல்ல விருந்திற்கு பேர்ல் எதிர்பாராதவிதமாக அழைப்பு பெறும் நிகழ்வு அமைகிறது. இரவு விருந்திற்கு செல்லும் பேர்ல் அங்கு ரத்தவெறி கொண்டு காத்திருக்கும் சினிமா தயாரிப்பு பிரபலங்களிற்கு இரையாகிறாள். சினிமா தயாரிப்பில் இருப்பவர்கள் காட்டேரிகள் என்று சொல்லப்படுவதில் தவறேதும் இல்லையல்லவா.

இதன் பின்பாகத்தான் ஆரம்பப் பக்கங்களில் வரும் அந்தப் பிறை போன்ற கண்மணிகள் யாருடையவை என்பது தெரியவரும். அது அந்தக் கண்களினால் தெரியவருவதில்லை மாறாக பேர்ல் அவள் முதுகில் குத்திக் கொண்ட சூர்யகாந்தி மலர் பச்சையினால் அது வாசகர்களிற்கு புரியவைக்கப்படும். அந்த தருணம் கதையின் அருமையான திருப்பத் தருணங்களில் ஒன்று. ஆனால் பேர்லிற்கு அதிர்ஷ்டம் இன்னொருவன் வழியாக வருகிறது, அதை ஒருவர் அதிர்ஷ்டம் என அழைப்பது சரியாக இருக்குமேயெனில். அவன் தான் Skinner Sweet. அவன் தான் இப்பதிவின் தலைப்பு. அவன் தான் பேர்லையும் ஒரு காட்டேரியாக மாற்றுகிறான்.

ஆகவே ஸ்கின்னர் ஸ்வீட் எவ்வாறு ஒரு காட்டேரியாக மாறினான் என்பதை வாசகர்களிற்கு 1925லிருந்து 1880 க்கு காலப்பாய்ச்சல் மூலம் தாவி அவன் கதையைக்கூற ஆரம்பிக்கிறார்கள் கதாசிரியர்கள். கொள்ளை ,கொலைகளை தயங்காமல் செய்யும் ஒரு கூட்டத்தின் தலைவனான ஸ்கின்னர் காட்டேரியாக மாற வழிவகுத்த நிகழ்வுகள் அக்காலப் பகுதியில் கதையில் விபரிக்கப்படுகிறது. இப்பகுதியில் வெஸ்டெர்ன்களின் பாணியில் கதைகூறப்படுகிறது, இக்காமிக்ஸ் தொகுப்பின் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்றாக அதைக் குறிப்பிடலாம். அமெரிக்க மண்ணில் உருக்கொண்ட முதல் காட்டேரியாக கதையில் அறிமுகப்படுத்தப்படும் ஸ்கின்னர் ஸ்வீட்டிற்கும், அவனை தற்செயலாக காட்டேரியாக மாற்றிவிட்ட, ஐரோப்பியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த காட்டேரிகளிற்குமான பகையும், வெறுப்பும் அங்கிருந்து காலாகாலமாக தொடர ஆரம்பிக்கிறது. 1880களில் காட்டேரிகள் வங்கி உரிமையாளர்களாகவும், புகையிரதப்பாதையின் சொந்தக்காரர்களாகவும், அதிகாரம், தங்கம், பணம், போன்றவற்றின் மீதான தீர்க்கவியலாத் தாகம் கொண்ட முதலாளித்துவ வர்க்கமாக சித்தரிக்கப்படுகிறார்கள். இக் காட்டேரி முதாலளித்துவத்திற்கு எதிரான வன்முறை அராஜகவாதியான ஸ்கின்னர் ஸ்வீட் அறிமுகமாகும் தருணத்திலிருந்து கதை வேகம் கொள்ள ஆரம்பிக்கிறது.

AV2கொள்ளை, கொலை, குண்டு வெடிப்புக்கள், துப்பாக்கி மோதல்கள், எதிர்பாரா திருப்பங்கள் என திகிலும் விறுவிறுப்பும் கதையில் கூடிக்கொள்கிறது. ஐரோப்பிய புலம்பெயர் காட்டேரிகள் தம்மை தூய குருதி கொண்ட இனமாக காண்கிறார்கள். ஸ்கின்னர் அவர்களை பொறுத்தவரையில் களங்கமான குருதி கொண்டவன். களங்கமான குருதி கொண்டவனை தூய குருதி கொண்டவர்களால் அழிக்கவே முடிவதில்லை. ஏனெனில் ஸ்கின்னர் ஒரு புதுவகைக் காட்டேரி. ஆதிக் காட்டேரிகளின் பலவீனங்கள் அவனிடத்தில் இருப்பதில்லை. அவன் பலவீனங்கள் வேறானவை. அப்பலவீனங்களை கண்டுகொள்ள பெரும் தேடல் கொள்கிறார்கள் தூயகுருதிக் காட்டேரிகள். ஸ்கின்னர் ஸ்வீட் காட்டேரிகளின் பரிணாமத்தின் முதல்படியாக கதையில் சித்தரிக்கப்படுகிறான்.

காலஓட்டத்தில் தொடர்ந்து செல்லும் காட்டேரிகளிற்கிடையான யுத்தத்தில் பேர்லை தன் யுத்தத்தில் பயன்படும் ஒரு சதுரங்க சிப்பாயாக உபயோகித்துக் கொள்கிறான் ஸ்கின்னர். அவன் கடந்து வரும் பாதைகளில் எல்லாம் அவன் எதிரிகளின் கல்லறைக் கற்கள் சிறு செடியாக முளைத்து நிற்கின்றன. அவன் எதிரிகளின் பெயர்கள் வாடா மலர்களாக அவற்றின் மேல் பூத்திருக்கின்றன. அவன் மனமெல்லாம் புது எண்ணங்கள் வியூகங்கள் கொப்பளிக்கின்றன. அவற்றின் நிறைவின் வழி வழிந்தோடப்போகும் குருதி அவனை அக்கணமே மேலும் தாகம் கொண்டவனாக்குகிறது. பில் பண்டிங் எனும் எழுத்தாளர் கூறுவதாக ஸ்கின்னர் ஸ்வீட்டின் கதை காமிக்ஸில் அமைந்திருக்கிறது. ஸ்கின்னரின் சாகசங்களை அல்லது கொடூரச் செயல்களை நேரில் பார்த்த சாட்சியமாக பில் பண்டிங் இருக்கிறார். பில் பண்டிங்கின் நண்பனான காவல்துறை அதிகாரி கிம் புக்கும் கதையில் வரும் சிறப்பான ஒரு பாத்திரமே. உனக்கு வயதாகி விட்டது, நான் நித்யத்திற்கும் இளைஞன், மெதுவாக, இயல்பாக மனிதர்கள் இறப்பது போலவே நீ இறந்து போ, இதைத்தவிர சிறந்த வஞ்சம் என் கண்களிற்கு தெரியவில்லை என்று குறிப்பெழுதி பில் பண்டிங்கை ஸ்கின்னர் உறைய வைக்கும் தருணம் காட்டேரிக் கவித்துவமான தருணம்.

1206416-american_vampire_02_cover_by_rafaelalbuquerqueart_super1பேர்ல் தன் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகளில் எல்லாம் ரத்தம் தனக்கு பிடித்த சித்திரங்களை அருகே வரைந்து கொள்கிறது. ஓவியர் Rafael Albuquerque படு அட்டகாசமாக சித்திரங்களை படைத்திருக்கிறார். குறிப்பாக ஒவ்வொரு இதழின் இறுதிப்பக்கத்திலும் வரும் சித்திரம் அசரவைக்கும் தன்மையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இம்முயற்சியில் அவர் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றிருக்கிறார் என்று கூறிடலாம். அவள் எதிர்கொள்ளும் தருணங்கள் வழி தன் பலவீனங்கள் என்ன என்பதை அறிந்து கொள்கிறாள் பேர்ல். ஆனால் ஸ்கின்னரை சுற்றியிருக்கும் மர்மங்கள் இக்கதை தொகுப்பில் முற்றிலுமாக கூறி முடிக்கப்படவில்லை. அசைக்க முடியா நம்பிக்கையுடன் ஸ்கின்னர் தெருவொன்றில் நடந்து செல்கையில் இன்னுமொரு அசத்தலான திருப்பத்தை அறிமுகம் செய்து வைத்து கதையை நிறைவு செய்கிறார் கதாசிரியர். இருப்பினும் பேர்ல் இயல்பாகவே ரத்த வெறி கொண்ட ஒரு காட்டேரியாக கதையில் சித்தரிக்கப்படுவதில்லை. அவள் காட்டேரியாக மாற்றம் கொள்ளும்முன் அவளிடம் இருந்த மனிதநேயம் அவளை விட்டு நீங்காமலே இருக்கிறது. தன் எதிரிகளை துவம்சம் செய்து தீர்த்தபின் அமைதியான ஒரு இடம் தேடி ஒதுங்கி கொள்ளவே விரும்புகிறாள் பேர்ல். ஆனால் ஸ்கின்னர் அழிவு என்பதை அறிமுக அட்டையாக வினியோகிக்கும் ஒரு வெறியன். இனத்துவேஷன். இப்படியாக பேர்லிற்கும் ஸ்கின்னரிற்குமிடையில் அவர்கள் இறப்பதற்கு முன்பாகவே இருந்திட்ட மனித இயல்புகள் இறந்த பின்னும் மாறிடவில்லை என்பதாக கதை நகர்கிறது.

பீற்றிக்கொள்ளும் முன்னுரையில் கிங், ஒரு ரத்தக் காட்டேரி ஒருபோதும் இவ்வாறு இருத்தல் ஆகாது என பின்வருபவற்றைக் குறிப்பிடுகிறார். ப்ளடிமேரிகளை சுவைத்துக் கொண்டு இரவில் மட்டும் பணியாற்றும் தோல் வெளிறிய ஒரு துப்பறிவாளனாக. நீயூ ஆர்லியன்ஸை சேர்ந்த துக்கத்தில் தோய்ந்த ஒரு ஆண்விபச்சாரியாக. மனவழுத்தம் கொண்ட ஒரு விடலையாக. ஒளிகடத்தும் தோலும் மான்களை போல் கண்களையும் கொண்ட ஒரு வாலிபனாக. ஸ்கின்னரில் இந்தப் பண்புகள் இல்லை என்பது உண்மை. கிங் யார் யாரை குறிவைக்கிறார் என்பதும் ஓரளவு புரிகிறது. ஆனால் கிங் தனித்துக் கதையை உருவாக்கி இருப்பேரயானால் கதை இவ்வளவு விறுவிறுப்புடன் நகர்ந்திருக்காது என்பது அணில் ரத்தம் அருந்தி வாழும் காட்டேரிகளிற்கும் தெரிந்த விடயம். ஐந்து காமிக்ஸ் இதழ்கள் கொண்ட முதல் தொகுப்பை படித்து முடிக்கையில் அடுத்த தொகுப்பையும் படிக்கவேண்டும் எனும் எண்ணத்தை ஏற்படுத்துவதற்கு காரணமானவர் ஸ்காட் ஸ்னைடர் என்பதில் எனக்கு ஐயமில்லை. சித்திரங்களும் தரமாக இருக்கின்றன. ஆங்கில மொழியில் மூன்று தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. காட்டேரி + வெஸ்டெர்ன் அதிரடி விரும்பும் வாசக உள்ளங்கள் இம்முதல் தொகுப்பிற்காக டவுன்லோட் அய்யானாரை தாராளமாக நாடுங்கள். கதை உங்கள் ரத்தத்தினை அதிகம் உறிஞ்சாது. [***]

Sunday, January 22, 2012

யாழி சூடிய நங்கை [ அல்லது கம்பேக் ஒரு காலப்பிரளயம்]


பிரபல தொழிலதிபர் வென்னெர்ஸ்ட்ரம் தொடுத்த வழக்கில் தனக்கெதிரான தீர்ப்புகளை சந்திக்கும் பொருளியல் பத்தியாளன் மிக்கேல் ப்ளொம்க்விஸ்ட் அவன் பணியாற்றிவரும் பத்திரிகையான மில்லேனியத்தில் இருந்து விலகிச்செல்கிறான். இந்நிலையில் அவனைத் தொடர்பு கொள்ளும் சூவிடனின் பெரும் வியாபார புள்ளியான ஹென்ரிக் வேன்ஞ்சரின் வக்கீல் ஃப்ரோட், அவனை வேன்ஞ்சர் மாளிகைக்கு வரும்படி அழைப்பை விடுக்கிறான். அழைப்பை ஏற்று அங்கு செல்லும் ப்ளொம்க்விஸ்டிடம் நாற்பது வருடங்களிற்கு முன்பாக மர்மமான முறையில் காணாமல் போய்விட்ட தன் சகோதரனின் மகளான ஹாரியட்டின் மறைவின் பின்பாக இருக்ககூடிய மர்மங்களை ஆராய வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறார் ஹென்ரிக் வேன்ஞ்சர்……

உலகின் 46 நாடுகளில் 65 மில்லியன் பிரதிகள் விற்றுத்தீர்த்த மில்லேனியம் வரிசை நாவல்களின் பிறப்பிடம் சூவீடன். 2009 களில் சூவீடிய மொழியில் நாவலை தழுவி திரைப்படங்கள் வெளியாக ஆரம்பித்தன. நாவலை எழுதிய Stieg Larsson தன் படைப்புகளின் வெற்றியை ருசிக்காமலே இந்த இன்னுலகை விட்டு நீங்கி விட்டார். நவலின் சிறப்பான வெற்றி ஹாலிவூட் நவாப்கள் மனதில் குத்தாட்டம் போடாமல் இல்லை. The Girl with the Dragon Tattoo எனும் பெயரில் வெளியான நாவலின் ஹாலிவூட் வடிவம் அதே பெயரில் வெளியாகி இருக்கிறது. குரங்கு கைகளில் பூ மாலையை தராதீர்கள் என்று சொன்ன பெரியவர்கள் பூமாலையை யாரிடம் தரவேண்டும் என்பதை சொல்லவில்லை. ஆனால் ஹாலிவூட் நவாப்கள் இத்திரைப்படைத்தை இயக்க தேர்ந்தெடுத்த நபர் குறித்த கணிப்பில் தப்பே செய்யவில்லை.

உலகளாவிய வெற்றி பெற்ற திகில் நாவல் ஒன்றின் திரைவடிவைக் காணச்செல்கையில் மனதில் வரும் முதல் எண்ணம் நாவலைவிடத் திரைப்படம் நன்றாக உருவாக்கப்பட்டிருக்குமா அல்லது பெரும்பான்மையான தழுவல்கள் போல் சொதப்பலாக இருக்குமா என்பதேயாகும். இயக்குனர் தேர்ந்த ஆசாமியாக இருந்தாலும் கூட நாவல்களின் திரைவடிவங்கள் ஏமாற்றத் தவறுவதில்லை. இயக்குனர் Brian De Palma இயக்கிய The Black Dahlia வை இதற்கு சிறப்பான ஒரு உதாரணமாக கொள்ளலாம். ஜேம்ஸ் எல்ராய் எனும் மகத்தான எழுத்தாளன் எழுதிய மகத்தான படைப்பு திரையில் தன் மகத்தை எல்லாம் தொலைத்து விட்ட ஒரு படைப்பாய் உயிர் கொண்டிருக்கும். இயக்குனர் டேவிட் ஃபின்ஞ்சர் இயக்கிய Zodiac திரைப்படமானது நல்ல வசூலை சம்பாதிக்கவில்லை எனிலும் நல்லதொரு படைப்பாய் அமைந்திருந்தது. ஒரு தொடர்கொலைஞனைப் பற்றிய இரு நபர்களின் விசாரணை மீது நகரும் அத்திரைப்படம் ஏமாற்றம் தந்திடாத ஒரு திரையனுபவம். ஃபின்ஞ்சர் இயக்கியுள்ள மில்லேனியத்தின் முதல் நாவலின் திரைவடிவம் ரசிகர்களை ஃபின்ஞ்சரிற்கே உரித்தான பாணியுடனான குற்றசூழ்நிலைக்குள் அதன் வண்ணங்களுடன் தவறாமல் எடுத்து செல்கிறது.

படம் ஆரம்பித்து எழுத்துக்கள் திரையில் உருக்கொள்ளும் தருணத்தில் எழுத்துக்களுடன் தோன்றும் செயற்கைவரைதோற்றங்களும், Led Zeppelin பாடலான Immigrant song ஆனது சமகாலத்தின் Trent Reznor & Atticus Ross & karen o திறமைகளில் விளைந்து ஒலிக்கும் பாடலும் இசையும் அட்டகாசமாக இருக்கின்றன. நாவலின் ஆன்மாவை தொலைத்து விடாது அதன் கதைக்களம் நடமாடும் ஸ்வீடன் நாட்டிலேயே இயக்குனர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். கதை இடம்பெறும் ஒரு வருட காலத்தின் ஓட்டம் பருவகால ஓட்டங்களாக பாத்திரங்களுடன் உருக்கொள்கிறது திரையில். உறைந்து விறைத்த பனியும், பச்சை வண்ண வசந்தமும் அவற்றிற்கேயுரிய வனப்புடன் காட்சிகளினூடு கண்காட்டுகின்றன. சிறப்பான படத்தொகுப்பும், சூழ்நிலையின் உணர்வுகளை பார்வையாளனிற்கு கடத்திடக்கூடியதான ஒளிப்பதிவும் திரைப்படத்துடன் ஒன்றச்செய்கின்றன.

millenium-les-hommes-qui-n-aimaient-pas-les-femmes-2011-20033-893632067நாவலில் ப்ளொம்க்விஸ்ட் தன் விசாரணைகளை மேற்கொள்ளும் பகுதி சற்று வேகம் குறைந்த ஒன்றாக இருக்கும். திரைப்படத்தில் திரைக்கதை அதற்கு வேகத்தை கூட்டி தந்திருக்கிறது. சூவீடிய சமூகத்தின் மேற்பூச்சு அழகின் அடியில் ஒளிந்திருக்கக்கூடிய அவலங்கள் சிலவற்றை கதை கூறிச்செல்கிறது. கதையின் மிக முக்கியமான அம்சம் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை. திரையில் ஃபின்ச்சர் அதை உயிருடன் எடுத்து வந்திருக்கிறார். பலியாளாகவும் பழிவாங்குபவளாகவும், சமூகத்தின் நெறிகள் மீது காறி உமிழ்பவளாகவும், அதன் கணிப்புக்களை சாக்கடைக்குள் வழியச் செய்பவளாகவும் அசத்தலாக உருமாறி நிற்கிறாள் தோளில் ட்ராகன் பச்சை அணிந்த இளநங்கை லிஸ்பெத் ஸ்லாண்டர். திரைப்படம் எங்கும் அழிக்கமுடியா பச்சையாக நிறைகிறது ஸ்லாண்டர் பாத்திரம். பெண்கள் மீதான வன்முறையில் ஒட்டுமொத்த எதிர்குரலாக, பதிலடியாக அது வேகம் கொண்ட காற்றாக எதிர்படும் தடைகளை தூக்கி வீசுகிறது. நாவலில் இருந்ததைவிட அபாரமான முறையில் இப்பாத்திரத்தை உருவாக்கியிருகிறார் இயக்குனர் ஃபின்சர். இப்பாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்பட்ட நடிகை Rooney Mara சமூகத்தால் விளிம்புநிலை ஆளுமை என தீர்க்கப்பட்ட ஒரு பெண்ணை சிறப்பாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். ஒரு பெண் எவ்வளவு சுதந்திரமானவள், எவ்வளவு உறுதியானவள், அவளுள் சூல் கொண்டு வாழ்ந்திருக்கும் காட்டுத்தனம் வெளிப்படும்போது அவள் எவ்வளவு அழகானவள் என்பவற்றை தன் பாத்திரம் மூலம் அவர் பிரதிபலித்து செல்கிறார். இந்தப் பாத்திரத்துடன் ஒப்பிடுகையில் நடிகர் க்ரெக் டேனியல் ஏற்றிருக்கும் ப்ளொம்க்விஸ்ட் பாத்திரம் திரையில் அடிபட்டு ஒதுங்கி சென்றுவிடுகிறது. முகத்தில் நுன்னுணர்வுகளை அவற்றின் அழகுடன் வெளிப்படுத்த இயலாத நடிகராக இருக்கிறார் க்ரெக் டேனியல்.

திரைப்படம் ஆரம்பித்து சரியாக ஒருமணி நேர அளவில், ஸ்லாண்டரிற்கும், ப்ளொம்க்விஸ்டிற்குமான அறிமுகம் ஏற்படுகிறது. அதுவரையில் ப்ளொம்க்விஸ்டின் கதை ஒரு பக்கமாகவும், ஸ்லாண்டரின் கதை ஒரு பக்கமாகவும் பக்குவமான வேகத்தில் திரையில் எழுதிச்செல்லப்படுகிறது. இந்தக் காலநேரத்தில் இரு ஆளுமைகள் குறித்த அறிமுகங்கள் பார்வையாளனை சிறப்பாக வந்தடைந்து விடுகின்றன. இருவரிற்குமிடையில் இருக்கக்கூடிய வயது, தொழிற்படு, செயல்முறை, தொழிநுட்ப அனுகு வேற்றுமைகள் எதிர் எதிர் முனைகளாக இந்த இரு ஆளுமைகளையும் சிறப்பாக ஒட்ட வைக்கின்றன. அவர்கள் இணைந்து செயலாற்றும் தருணங்களில் வேகம் கதையில் சிறகு கட்டிக்கொள்கிறது. படிப்படியான விசாரணைகளும் அவை தரும் ஏமாற்றங்களும் பின்னர் பலன் தரக்கூடிய தரவுகளாக மாறி மர்மத்தின் முடிச்சை அவிழ்க்க விரைகின்றன. அந்த முக்கிய உண்மையை ஸ்லாண்டரும், ப்ளொம்க்விஸ்டும் கண்டுகொள்ளும் தருணமும் அதற்கு பின்வரும் காட்சிகளும் இதயதுடிப்பை மூச்சுவிட அனுமதிப்பதில்ல. முக்கியமான குற்றவாளிக்கும் ப்ளொம்க்விஸ்டிற்குமிடையில் அந்நிலையில் வரும் உரையாடல் எவ்வளவு குளிரையும் விஞ்சிவிடும். அத்தருணத்தில் அக்குற்றவாளி பாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகரின் நடிப்பை அவதானியுங்கள். சில நிமிடங்கள் ஆனாலும் தன் நடிப்பால் அள்ளிக்கொள்கிறார் அந்த நடிகர்.

இயக்குனர் ஃபின்ச்சர் மீளத் தம்மை இத்திரைப்படம் மூலம் குற்றசினிமாவில் புதுப்பித்திருக்கிறார். இரண்டரை மணி நேரத்தில் சிறிய ஏமாற்றம் என்பது படத்தின் இறுதி தருணங்களே. அவை தொழிலதிபர் வென்னெர்ஸ்ட்ராம் மீதான எதிர் நடவடிக்கையாக இருக்கின்றன. ஹாரியட்டின் தந்தை மீதான பிரேத பரிசோதனையில் அவர் தலையில் வீழ்ந்த அடி பற்றி ஏதும் இல்லையா என்ன!!!!! இறுதியில் அன்பளிப்பு பரிசாக வாங்கிய தோல் ஜெர்க்கினை குப்பை தொட்டியில் விசி எறிந்து விட்டு சென்றாலும் கூட ட்ராகன் பச்சை அணிந்தவள் ஆழமாக பதிகிறாள் மனதில். [***]

பி.கு...அடைப்புக்குள் உள்ள தலைப்புக்கள் தம்மை மீளமாற்றும் தன்மை கொண்டவை...

ட்ரெய்லர்

Saturday, January 14, 2012

மேன்மைதகு மேஃப்ளவரின் நாள் - XIII - 20


XIII-Le-jour-du-soleil-noir-232x300XIII ன் முதலாவது ஆல்பமான கறுப்பு சூரியனின் நாளினது அட்டைப்படத்தினையும் அதன் இருபதாவது ஆல்பமான மேஃப்ளவரின் நாளினது அட்டைப்படத்தினையும் ஒரு துவிச்சக்கர சிற்றிடைவெளி தந்திடும் அவகாசத்தில் ஒப்பிட்டு பார்த்திடுவோமேயானால், அவ்விரு ஆல்பங்களிற்கும் இடைப்பட்ட 27 வருடங்களின் தடமானது மக்லேன் மாமாவில் அழகான முதிர்ச்சியாக உருப்பெற்றிருப்பது பட்டென உறைக்கும்.

பணப்பெட்டிக்கு முன்பாக ஐயமும் ஆச்சர்யமும் கலக்கிய பார்வையுடன் உத்தரத்திலிருந்து தொங்கி வழியும் ஒளியின் கசிவில் அதிரடிக்குள் தன்னை இறக்கி கொள்ளவிருக்கும் மக்லேனையும் அவனை சுற்றியிருக்ககூடிய மர்மங்களையும் கேள்விகளையும் கறுப்பு சூரியனின் நாளினது அட்டைப்படமானது மங்கிய இருள் தன் தடத்தினுள் பொதித்து வைத்திருக்கும் ரகசியங்களின் கசியலாக ஒழுகவிட்டுக் கொண்டிருக்கிறது. XIII தொடரின் அறிமுகமற்ற வாசகன் ஒருவன் அறிந்திராத மக்லேனின் வாழ்க்கைபோல மக்லேனின் முகம் மங்கிய ஒளி தூவும் அந்த இருளில் சற்று நனைந்திருக்கிறது. பத்தொன்பது ஆல்பங்களின் கதை சொல்லல் வழியே மக்லேன் தான் யார் என்பதனை அடையாளம் கண்டபோதிலும் அவன் நினைவுகள் முற்றாக அவனிடம் திரும்பி வந்திடவில்லை. மக்லேன் தன் நினைவுகளை தேடும் வேட்டையின் ஆரம்பமாக வெளியாகியிருக்கும் இருபதாம் ஆல்பமான மேஃப்ளவரின் நாளின் அட்டைப்படத்தில் மக்லேன் மாமா ஷோக்காகத்தான் இருக்கிறார்.

பணப்பெட்டிக்கு பதிலாக பக்குவமானதொரு மடிக்கணிணி. கால்சட்டை பைகளிற்குள் நுழைத்திட்ட கைகள். பிரகாசம் ததும்பும் மக்லேன் மாமா வதனத்தில் புதியதொரு அதிரடிப் பயணத்திற்கு தயாரான உறுதி. அப்பயணத்தின் மிக முக்கியமானதொரு புள்ளியாக இருந்திடக்கூடிய மேஃப்ளவர் கப்பல் அலைகள் ஆவேசமாய் நுரைத்து ததும்பும் கடலில் சற்று சரிந்தே நிற்கும் நிலை. கருமை சூல் கொண்டு உடன் பிரசவிக்க பரிதவிக்கும் வானம். யாவும் வாசகர்களை எதிர்பார்க்க வைக்கிறது. என்னவாக இருக்கலாம் என கேட்க தூண்டுகிறது. மேலுள்ள இரு அட்டைப்படங்களிலும் உள்ளது வில்லியம் வான்ஸின் கையொப்பம்தான், இருபதாம் ஆல்பத்திற்குரிய அட்டைப்படத்தையும் அதில் ஒரிரு பக்கங்களையும் நட்புக்காக வரைந்து தந்திருப்பவரும் வான்ஸ்தான். ஆனால் புதிய தொடரிற்கு கதை மற்றும் சித்திரங்கள் வான்ஸ், வான்ஹாம் கூட்டணி அல்ல. புதிய அணிதான். கதைக்கு பொறுப்பாக Yves Sente. சித்திரங்களிற்கு பொறுப்பாக Youri Jigounov.

mf1fr-10142011PremiredecouvExclusiveXIIIT20ஈவ்ஸ் சென்ட்டிற்கு வான் ஹாம் ஆரம்பித்து வைத்து விலகிச் சென்ற காமிக்ஸ் தொடர்களை தன் கையில் பொறுப்பேற்பது என்பது புதிதல்ல. வான் ஹாமின் Thorgal தொடரை அவர் பொறுப்பு ஏற்று இதுவரை நான்கு ஆல்பங்களில் பணியாற்றியிருக்கிறார். இப்போது XIII அவர் கைகளிற்குள் வந்திருக்கிறது. Blake and Mortimer, Le Janitor ஆகிய பிரபலமான தொடர்களில் பணியாற்றியிருக்கிறார். இதில் Le Janitor அவர் கற்பனையில் உருவாகிய தொடராகும். யூரி ஜிகுனொவ் Alpha எனப்படும் சமகால உளவுத்தொடரிற்கு வரைந்த சித்திரங்கள் மூலம் பிரபலமானவர். ஈவ்ஸ் செண்ட் லொம்பார்ட் பிரசுரத்தின் ஆசிரியர் குழுவின் முக்கியமான பொறுப்பில் இருந்தபோது மொஸ்கோவில் இருந்து வந்த யூரி ஜிகுனொவ்வில் ஒரு நல்ல கலைஞனைக் கண்டுகொண்டு அவரை உள்ளெடுத்துக் கொண்டார். ஆல்பாவின் அசத்தல் ஓவியங்கள் ஜிகுனொவ்வின் திறமைக்கு சான்றாக திகழ்கின்றன. காமிக்ஸ் ரசிகர்களால் அதன் அழகிற்காக பெரிதும் விரும்பப்படுகின்றன.

கடலிற்கும் மக்லேனிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நினைவிழந்த நிலையில் கடற்கரையில்தான் மக்லேனின் கதை ஆரம்பித்தது. அவனைக் காப்பாற்றிய ஏப் மற்றும் சலி ஸ்மித் தம்பதியினர் வாழ்ந்திருந்த அதே Bar Harbor கடற்கரை வீட்டில் வசிப்பவனாக கதையில் அறிமுகமாகிறான் மக்லேன். தன்னால் மீட்டப் படமுடியா நினைவுகளை மீட்டெடுக்க அவன் உளவியல் மருத்துவரும் அட்ரா சக்க எனச் சொல்லக்கூடிய அழகை கொண்டவருமான டாக்டர் சூசான் லெவின்சனிடம் ஆலோசனைகளை பெற்றுக் கொள்கிறான். சூசான் லெவின்சனிற்கு மக்லேன் மாமாமேல் ஒரு ஈர்ப்பு இருப்பதாக காட்டப்படுவதன் மூலம் எதிர்வரும் ஆல்பங்களில் ஒன்று அவர் தியாகச்சாவையோ அல்லது பயங்கரமான துரோகத்தையோ நிகழ்த்துபவராக மாறிடலாம் என்பதை வாசக மனம் உருச்செய்யலாம். மக்லேனிற்கு மச்சம்ம்பா. அனுபவிக்க போகிறார். ஆனால் பாவம் இந்த ஆல்பத்தில் அனுபவிக்க கதை அவரை விடவில்லை.

உளவியல் டாக்டர் சூசான் அத்துறையில் பிரபலமான புரபசர் டக்ளஸின் சிகிச்சை மூலமாக மக்லேனிற்கு விமோசனம் கிடைக்குமா என முயல ஆரம்பிக்கும் அதே வேளையில் சூப்பர் பிகருப்பா இது எனக்கூறிடும் வகையில் அழகான சிட்டு, அல்வாவில் செய்த மொட்டு யூலியானா, கடற்கரை வீட்டில் மக்லேனை வந்து சந்திக்கிறார். தம் ரகசிய அமைப்பில் இணைந்து கொள்ளுமாறு மக்லேனை நட்புடன் அழைக்கிறார். ஆனால் மக்லேன் அந்த அழைப்பை ஏற்க மறுக்கவே யூலியானா அங்கம் வகிக்கும் USAFE எனப்படும் அமைப்பை சேர்ந்தவர்களால் மக்லேன் மாமாவின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவது தொடர்கிறது. அவன் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. எவ்வழியிலாவது மக்லேனை தம் அமைப்பிற்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் எனும் ஒரு தீவிரத்துடன் செயற்படுகிறார்கள் USAFE குழுவினர்.

mf2புரபசர் டக்ளஸ் பெரியமனது வைத்து மக்லேனிற்கு சிகிச்சை தர முன்வருகிறார். மக்லேனின் மூளையில் மின் தூண்டல் மூலம் அவன் மறந்து போன நினைவுகளை மீட்க முடியுமா என அவர் முயல்கிறார். அவர் சிகிச்சையில் ஒரு சிறிய வெற்றி கிடைக்கிறது. மக்லேனிற்கு அவன் பால்ய கால நண்பனான ஜிம் ட்ரேக் என்பவன் பற்றிய சில நினைவுகள் திரும்புகின்றன. மதுவிடுதி ஒன்றில் தன் கவர்சியான மார்புகளை காட்டியவாறு நிற்கும் பரிசாரகியினை சட்டை செய்யாது புட்வெய்சர் பீரைக் குடிக்கும் மக்லேன், பின் தன் மீனவ நண்பன் ஒருவனின் உதவியுடன் பேஸ்புக்கில் ஜிம் ட்ரேக்கை தேடி, கண்டு பிடித்தும் விடுகிறார். ஜிம் ட்ரேக்கை தொடர்பு கொள்ளும் மக்லேன் அவனை சந்திக்க தான் ஆவலாக உள்ளதை தெரிவிக்கிறான். ஜிம் ட்ரேக்கும் அதே மனநிலையில் இருப்பதை கதையின் ஓட்டம் தெளிவாக்குகிறது. ஆனால் மக்லேன் மாமாவிற்கு அவரின் கடந்தகால நினைவுகள் திரும்பிவிடக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கும் USAFE தன் அதிரடி நடவடிக்கைகளில் இறங்குகிறது…. பென்டகனும், FBI யும் மக்லேனை தீவிரமாக தேடும் வகையில் அது சதிகளை நிகழ்த்த ஆரம்பிக்கிறது….. கொலைக்குற்றம், மனநிலைபிறழ்ந்தவன் இவ்வகையான அபாண்டங்களை சுமந்து கொண்டு தன் நினைவுகளை மீட்க ஓட ஆரம்பிக்கிறான் மக்லேன்…. அடுத்த கட்ட ஓட்டம் ஆரம்பம். இந்த ஓட்டம் எத்தனை ஆல்பம் நீடிக்கும் என்பது வசூலிற்கே வெளிச்சம்.

மெய்னிலிருக்கும் அகுஸ்டாவில் ஆரம்பமாகும் கதை, ப்லிமுத், அரிசோனா பாலைவனம், பிரான்ஸின் அழகிய கிராமப்புறம், மேன்ஹாட்டன் என வேகம் பிடிக்கிறது. ஒவ்வொரு நிலப்பரப்பினதும் அழகை ஜிகுனொவ்வின் சித்திரங்கள் அழகுடன் தீட்டிச் செல்கின்றன. இந்த ஆல்பத்தின் மிகப்பெரிய பலம் ஜிகுனொவ்வின் சித்திரங்கள்தான். வான்ஸ் தந்த வரிகளை அப்படியே தத்தெடுத்தாலும் தன் பாணியில் அருமையாக இந்த ஆல்பத்திற்கான சித்திரங்களை ஜிகுனொவ் வழங்கியிருக்கிறார். இத்தொடரை இளமையாக கொண்டு செல்ல அவர் கைத்திறன் நிச்சயம் கைகொடுக்கும். கதையில் வரும் சிட்டுக்களை அவர் கவர்சியுடனும் அழகுடனும் படைத்திருக்கிறார். ஆனால் டார்கோட் படுபாவிகள் ஒரு சிட்டைக்கூட எதையும் காட்ட விடவில்லை. சூசானாவின் பாதங்களையும், யூலியானாவின் த்த்த்த்த்திரண்ட தயிர் போன்ற மார்பகங்களின் வெட்டையும் காட்டினால் மட்டும் போதுமா. ஆல்பத்தின் எட்டாம் பக்கத்தில் மேஜர் ஜோன்ஸ் கவர்ச்சி உடையுடன் கட்டிலில் சரிந்திருந்தவாறு மக்லேனிற்கு ஒரு தகவல் விடுப்பார். அழைப்பு எனலாம். எதற்கு எனக் கேட்டால் நீங்கள் உண்மையிலேயே நல்ல மனிதர்தான். வழமைபோலவே மக்லேனின் உலகம் அழகான பெண்களால் சூழப்பட்டிருக்கிறது.

ஆனால் கொலைஞர்களின் உலகம் அழகிய பெண்களால் நிறைந்திருக்கிறது. அறிமுகமாகும் USAFE குழு ஒவ்வொன்றிலும் அழகிய கொலைஞி ஒருவர் இருக்கிறார். ஏன் மக்லேனை தன் பக்கம் இழுத்துவிட இந்த அமைப்பு துடிக்கிறது என்பது கதையில் படிப்படியாக தெளிவாகிறது. இங்குதான் மேஃப்ளவர் கப்பலின் வரலாறு முக்கியமான ஒன்றாக ஆகிறது. அது என்ன என்பதை கதையிலேயே நண்பர்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். அதற்கும் மக்லேன் மாமாவின் கதைக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதுதான் இந்த ஆல்பத்தின் முக்கியமான மர்மமாக இருக்கிறது. கதையை தொய்வில்லாமல் சொல்லியிருக்கிறார் ஈவ்ஸ் செண்ட். ஆனால் புதுமையான மாற்றங்கள் ஏதுமின்றி XIII மரபை அவர் தவறாது தொடர்ந்து வந்திருக்கிறார். ஜெனரல் காரிங்டன், மேஜர் ஜோன்ஸ், பெட்டி போன்றவர்கள் கவுரவ வேடத்தில் வருவது போல் வருகிறார்கள். பெண் கொலைஞிகளின் மனதிலோ அல்லது முகத்திலோ தழும்புகளை உருவாக்க மக்லேன் தவறுவதில்லை. இந்த ஆல்பத்திலும் அது உண்டு. இன்னொரு இரினா.

இந்த ஆல்பத்தில் வண்ணம் வழங்கும் பணியை செய்த Bérengère Marquebrecuq பாராட்டப்பட வேண்டியவர். கண்களிற்கு கவர்ச்சியான விருந்தாக அமைந்திடும் வண்ணம் சித்திரங்களிற்கு அவர் வண்ணங்களை தெரிவு செய்திருக்கிறார். அதிரடிகள் அதிகம் இல்லாத அதே போல் அலட்டல்கள் அதிகம் இல்லாத ஆல்பம் இது. பெண் கொலைஞிகள் உறுதியான பாத்திரங்களாக சித்தரிக்கப்படும் ஆல்பம் இது. வான்ஹாம்ன், வான்ஸ் அணி விட்டுச் சென்ற பணியை XIII ன் பாரம்பரியத்தை புதிய அணி செவ்வனே செய்திருக்கிறது. XIII ன் இருபதாவது ஆல்பம் நல்லதொரு ஆரம்பம். டார்கோட் ஈட்டிய வசூலிற்கு. மக்லேன் மாமாவின் கம்பேக்கிற்கு. [***]

Saturday, December 10, 2011

காமத்தின்முன் கீழ்விழல்


காமம் எனும் அடிப்படையான மனித இச்சை குறித்த உங்கள் நேர்மையான பார்வைதான் என்ன? நாம் வாழும் சமூகம் கொண்டுள்ள மதிப்பீடுகளிற்கு அஞ்சி, ஒருவரின் பாலியல் இச்சை என்பதானது மறைத்து வைக்கப்படவேண்டிய ஒன்றாகிறதா? தீராப்பசிபோல தீராத காமம் என்பது இயல்பானதா இல்லை இயல்பை மீறியதா? பாலியல் இச்சை என்பது அடக்கப்படவேண்டிய ஒன்றா அல்லது அணையற்ற வெள்ளத்தினுள் முங்குதல்போல் அனுபவித்து தீரவேண்டி முடியாமல்போகும் ஒன்றா? நீடிக்கும் உறவுகள் மீது நம்பிக்கையற்ற ஆணொருவன் தன் உடலின் பசியை ஆற்றுவதென்பது உங்கள் பார்வையில் எவ்வகையில் மொழிபெயர்க்கப்படுகிறது? இவ்வாறாக தன் உடலின் இச்சையை கட்டுப்படுத்த இயலாத மனிதனொருவனின் அந்தரங்கம் என்பது பொதுவெளியில் சித்திரமாக்கப்படும்போது அதன் பெயர் அவமானம் என விழிக்கப்படுமா? சமூகம் அவமானம் என்பதை அந்த ஆண் உணர்தல் நியாயமானதா? தன்னைப்போலவே பிறிதொரு ஆளுமைமீது இவ்வகையான ஒரு மனிதன் கொண்டிருக்ககூடிய பார்வைதான் என்ன? சமூகத்தின் முன்பாகவும், நாம் போற்றிடும் கலாச்சாரங்கள், பண்பாடுகள் முன்பாகவும் நாம் மேற்கூறிய கேள்விகளிற்கு அளித்திடும் நேர்மையான பதில்கள் எம்மை அவமானம் கொள்ள செய்யுமா இல்லை விழுமியங்களை போற்றியொழுகும் மனிதர்களின் அவமானம் நிறைந்த பார்வையை நாம் எம்மீது சுமந்துகொள்ள வைக்குமா? முடிவேயற்று நீண்டு செல்லக்கூடிய கேள்விகளைப் போலவே பார்ப்பவன் மனதில் சிந்தனைகளை எழுப்பி உக்கிரமாக மோதுகிறது இயக்குனர் Steve Mcqueen இயக்கியிருக்கும் Shame திரைப்படம்.

பிராண்டன் எனும் மனிதனின் அடக்க இயலா காமத்தை மையமாக கொண்டு அவனைச்சுற்றியிருக்கும் மனிதர்களின் மீதும், பிராண்டன் மீதும் காமம் அணிந்திருக்கக்கூடிய வெவ்வெறு கவுரவமான முகமூடிகளை கிழித்துக் போட்டுக் கொண்டேயிருக்கிறது கதை. ஒவ்வொரு முகமூடியின் வீழ்வின் பின்பாகவும் காமம் கிண்டலுடன் மனிதர்களை பார்த்து சிரித்துக் கொண்டே முன்னகர்ந்து செல்கிறது. பெண்ணுடனான உடலுறவோ, சுய இன்பமோ, போர்னோ தளங்களோ, பாலியல் தொடர்பாடல்களோ இல்லாமல் தன் வாழ்க்கையை கழிக்க முடியாத பிராண்டனின் ஆவேசம் அவன் இச்சையில் சக்தியாக மறுவுரு எடுத்து அவனை அக்கினியாக எரித்துக் கொல்கிறது. தன் இச்சை மீது அவன் கொண்டுள்ள குற்றவுணர்வானது தன் காமம் குறித்து எவரும் அறிந்திடக்கூடாது என்பதில் பிடிவாதமாக உருமாறியிருக்கிறது எனவேதான் அவன் பணியிடத்தின் கழிவறையில் சுய இன்பத்தில் ஈடுபடும் முன்பாககூட கழிவறையிருக்கையை சுத்தமாக துடைத்து போடுவதில் அவதானமாக இருக்கிறான்.

அவனது குடியிருப்பின் மறைவிடங்களில் அவனின் இச்சையின் அந்தரங்கங்கள் ஒளிந்திருக்கின்றன. அவனைத் தேடிவரும் விலைமாதுவின் சிறு அசைவிலும் தன் இச்சையின் தணிக்கவியலா தாகத்தை தணிக்க வழி தேடுகிறான் பிராண்டன். அவன் தினந்தோறும் புணர்ந்தெழும்போதும் தொலைபேசியின் பதில்விடு கருவியில் அவன் சகோதரியின் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. தொலைபேசியை எடுத்து தன்னுடன் உரையாடு என அதில் அவன் சகோதரி சிஸ்ஸியின் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. சிஸ்ஸியின் அழைப்புகளிற்கு அவன் பதில் அளிப்பதில்லை. தன் சகோதரியின் தகவல் குறித்த எந்த சலனமுமின்றி தன் வாழ்க்கையை தொடர்கிறான் பிராண்டன். இவ்வாறான நிலையில் அவன் குடியிருப்பிற்கே வந்து சேர்ந்துவிடுகிறாள் சிஸ்ஸி. தன் காமத்தை பொத்தி வைத்த அந்தரங்ககூட்டில் ஆக்கிரமிப்பான ஒன்றாக இதை உணர்கிறான் பிராண்டன். இதனாலேயே பின்பு தன் சகோதரியுடன் கடினாமன சொற்களை அவன் பரிமாறிக் கொள்கிறான். காமத்தின் முன்பாக ரத்த உறவுகூட தூக்கியெறியப்படும் கணம் சற்றும் அதிர்ச்சி தருவதாக இல்லை. பிராண்டன் கூறுவதில் என்ன தவறு இருக்கமுடியும் என்றே முடிவிற்கு வரமுடிகிறது.

shame-2011-12016-286421857சிஸ்ஸி தன் காதலனுடன் உறவை சிக்கலாக்கி கொண்டே பிராண்டனின் குடியிருப்பிற்கு வந்து சேர்கிறாள். பிராண்டன் காதுகளில் விழுமாறே அவள் காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக தன் காதலனை தொலைபேசியில் இரஞ்சுகிறாள். பாடகியான அவள் பாடும் பாடலில் துணையொன்றிற்கான ஏக்கம் கலந்தே ஒலிக்கிறது. துணையொன்றுடன் இணைந்து வாழும் வாழ்க்கை ஒன்றின் மீதான கனவுகள் அவள் பாடலில் ஏக்கமான குரலாக ஒலித்து ஒழுகுகிறது. அப்பாடலை தன் தோல்வியாகவும் தன் சகோதரி மீது கொண்டுள்ள அன்பாகவும் உள்ளெடுக்கும் பிராண்டன் விழிகளில் கண்ணீர் வழிகிறது. ஆனால் பார்வையாளன் முகத்தில் எதிர்பாராமல் அறைவதுபோல் பிராண்டனின் முதலாளியான டேவிட்டுடன் அன்றிரவே உடலுறவு கொள்கிறாள் சிஸ்ஸி. இதை பிராண்டனால் தாங்கிக் கொள்ளவே முடிவதில்லை. அவன் அறையில் அவர்கள் உறவுகொள்ள ஆரம்பிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத அவன் தெருவில் இறங்கி ஓட்டப்பயிற்சியில் ஈடுபட ஆரம்பிக்கிறான். தினந்தோறும் காமத்திற்கு வடி இல்லாது உறங்கமுடியாத ஒருவன் பிறர் காம இச்சை முன்பாக குறிப்பாக அவன் சகோதரியின் காம இச்சை முன்பாக படும் அவமானம் அதிர வைக்கிறது. ஓடி முடிந்து களைத்து வீடு வந்து உறங்கச் செல்லும் அவனை அன்புடன் அணைக்கும் சிஸ்ஸியுடன் அவன் சீறும் சீற்றம் அவன் தன்னுள் கொண்டு வாழும் அவமானத்தின் தாண்டவப் பரிமாணம்.

பிராண்டனின் முதலாளியான டேவிட் மணமானவன். குழந்தையும் உண்டு. சிஸ்ஸியைக் கண்ட அரைமணிநேரத்தில் தன் குடும்பத்தையே மறந்து உடலுறவிற்கு தயாராகிவிட்ட அவன் பிராண்டனின் கணிணியிலிருந்த போர்னோ சரக்குகளை குறித்து ஒரு நீதிமான்போல் பேசுகிறான். காமம் என்பது தனக்குரிய தேவை எனும்போது அது குறித்த எந்த அருவருப்போ அல்லது அறமீறல்கள் குறித்த பிரங்ஞையோ மனிதரிடமிருந்து காணமல் போய்விடுகிறது என்பது வியப்பளிப்பாதாக இல்லையா. இதே வியப்புடன்தான் டேவிட்டின் அலுவலக அறையை விட்டு அவன் உரையாடலை பாதியில் விட்டு செல்கிறான் பிராண்டன். கணிணிக்குள் ஒளிந்திருக்கும் காமத்தினை கண்டுகொள்ள முடிகிறது மனதினுள் ஒளிந்திருக்கும் காமத்தை கண்டுகொள்ளத்தான் வழி இல்லையோ. தன் காமம் வடிந்த மனிதம் என்ன வேடமும் அணிந்திட தயக்கம் கொள்வதேயில்லை.

தான் சுய இன்பம் செய்வதை சிஸ்ஸி தற்செயலாக பார்த்துவிடுவதனால் தன்னை மாற்றிக் கொள்ள முயல்கிறான் பிராண்டன் ஆனால் அவன் இயல்பு அவனை விட்டு நீங்குவதாக இல்லை. நீடிக்ககூடிய உறவொன்றிற்காக முனையும் அவன், அலுவலகலத்தில் பணிபுரியும் சகாவான மரியானுடன் உறவுகொள்ள முனைகிறான். ஆனால் அவனால்அவளுடன் உடலுறவு கொள்ள முடிவதில்லை. அவள் உடலின் முன்பாக அவன் காமம் செயலிழந்து நிற்கிறது. நீடித்து நிற்கும் உற்வொன்றின் மீதான சந்தேகம் அவன் உணர்ச்சியை நீர்த்துவிடச்செய்கிறது. அவளை ஹோட்டல் ரூமிலிருந்து அனுப்பி வைக்கும் பிராண்டன், தான் மரியானை உணவுவிடுதியொன்றில் சந்திக்கும் முன்பாக தெருவில் உலாச்சென்றபோது கண்ட ஒரு உடலுறவு நிலையை ஒரு விலைமாதுவுடன் நிகழ்த்தி தன் காமத்தை வடித்துக் கொள்கிறான். மேற்குறிப்பிட்ட உணவு விடுதிச் சந்திப்பில், நீடிக்கும் உறவு ஒன்றிற்கான தேடலின் வடிவாக மாரியானும், உடல் இச்சையை ஆற்றிக்கொள்ள புதிய உடல்களை ஓயாது தேடும் காமத்தின் வடிவாக பிராண்டனும், இவ்வகையான தேடல்களினூடே எந்தவித லஜ்ஜையுமின்றி நகர்ந்து செல்லும் வாழ்க்கையின் வடிவமாக உணவுவிடுதிப் பரிசாரகனும் தோன்றுகிறார்கள்.

டேவிட் தன் விரலில் திருமண மோதிரம் அணிந்திருந்தை நீ அவதானிக்கவில்லையா என சிஸ்ஸியிடம் கோபம் கொள்வான் பிராண்டான், ஆனால் இதே பிராண்டன் கையில் திருமண மோதிரம் அணிந்த ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து செல்ல தயங்குவதில்லை. அவன் ஆளுமையின் முரண்தன்மையை திரைப்படம் நெடுகிலும் ஒரு ரசிகன் அவதானித்திட முடியும். தன் இயல்பை கட்டுப்படுத்த முடியாதவனாக அவன் இச்சையை தீர்ப்பதற்காக அவன் அலைந்து சென்று கொண்டேயிருக்கிறான். அதற்காக அவன் அவமானங்களை ஏற்றுக் கொண்டேயிருக்கிறான். இச்சை அவனை விடுதலை ஆக்க ஆக்க அவனுள் நுழையும் அவமானம் அவனை குறுக வைத்துக் கொண்டே செல்கிறது. காமம் எனும் பெரும்சக்தியின் முன்பாக வெற்றி பெறவியலாத பெரும்பாலான சாதாரண மனிதர்களைப் போன்றே அவனும் அதன்முன்பாக மண்டியிட்டுக் கொள்கிறான். ஆனால் சிஸ்ஸியோ தீவிரமான ஒரு முடிவை தேடிச்செல்கிறாள். விரலில் திருமண மோதிரம் அணிந்த அதே பெண்ணை மீண்டும் அவன் ரயிலில் காண்கிறான். அவளும் அவனை அழைப்புடன் பார்க்கிறாள். பிராண்டன் காமத்தை வெல்வானா என்பதற்கு விடையில்லை. காமத்தை வென்றவன் என்று யாருமில்லை. மிகவும் உக்கிரமான இப்படம் ரசிகனின் உள்ளத்தை சற்று ஆட்டிப்பார்த்துதான் விடுகிறது. பிராண்டன் வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் Michael Fassbender, அவரின் சகோதரி சிஸ்ஸியாக வேடமேற்றிருக்கும் நடிகை Carey Mulligan ஆகியோர் மிகவும் அருமையாக நடித்து சென்றிருக்கிறார்கள். திரைப்படத்தின் இசை காமத்தின் வேகத்தையும், இன்பத்தையும், தந்திரத்தையும், வலியையும், அவமானத்தையும் ஒலிக்க விடுகிறது. அதிர்ச்சியும் நேர்மையுமான இப்படைப்பை பக்குவமான உள்ளங்கள் பார்த்து ரசிக்கலாம். [***]

ட்ரெய்லர்

Saturday, December 3, 2011

பேச மறுத்த கலைஞன்


1927ல் ஹாலிவூட் ஊமைப்படங்களில் மிகப்பிரபலமான நாயகனாக திகழ்கிறான் ஜார்ஜ் வலண்டைன். சினிமா எனும் கலைக்கு இன்றியமையாத துணையான தொழில்நுட்பத்தின் வளர்ச்சி Talkies எனப்பட்ட பேசும் படங்களை நோக்கி முன்னேற ஆரம்பிக்கையில் அந்தப் பாதையில் தன் பாதங்கள் படாது கலை செய்ய விரும்புகிறான் ஜார்ஜ் வலண்டைன். இதேவேளையில் அவனுடன் ஒரு படத்தில் துணைப்பாத்திரமாக நடித்து அவன் மனதை சலனகலனம் செய்த பெண்ணான பெப்பி மில்லர், பேசும் படங்களில் மிகப்பிரபலமான நாயகியாக உருவாக ஆரம்பிக்கிறாள்…..

The Artist திரைப்படத்தின் ஆரம்பம், ஒரு ஒற்றன் சிறையிலிருந்து தப்பிக்கும் சாகசத்துடன் ஆரம்பமாகிறது. அந்த ஒற்றனின் சாகசம் The Russian Affaire எனும் திரைப்படத்தின் இறுதித் தருணமாக அமைகிறது. அத்திரைப்படத்தை வெள்ளையும் கறுப்புமாக ஆடம்பர ஆடையணிந்த ஆடவரும் பெண்டிரும் கண்டு களித்துக் கொண்டிருக்கிறார்கள். திரையரங்கின் திரையின் முன்பாக ஒரு ஆர்கெஸ்ட்ரா திரைப்படத்திற்கான பின்னணி இசையை நேரடியாக இசைத்து வழங்கிக் கொண்டிருக்கிறது. 1927களில் காட்சிகளுடன் இசை கோர்த்துக் கொள்ளாத திரைப் படைப்பொன்றினை அந்த அரங்கில் ரசிகர்கள் ரசித்து மகிழும் தருணத்தை இக்கால ரசிகர்களிடம் கொண்டு வருகிறார் திரைப்படத்தின் இயக்குனரான Michel Hazanavicius. ஒரே ஒரு வித்தியாசம். எமக்கு முன்பாக இசைக்குழு இல்லை என்பதுதான். பேசும் படங்கள் திரையுலகை புரட்டிப்போட்டு ஆட்சியை கைப்பற்றும் முன்பாக சினிமாதுறையை கலக்கிய ஊமைப்படங்கள் பாணியில் கறுப்பு வெள்ளையில், நடிகர்கள் வாய் அசைவின் பின்பாக கறுப்பான திரையில் தோன்றும் வெள்ளை நிற வசனங்களுடனும், பிரகாசமான ஒளி அமைப்புக்களுடனும் நகைச்சுவையாக ஆரம்பிக்கிறது திரைப்படம். ஊமைப்படங்களிற்கு தற்கால பிரெஞ்சு இயக்குனர் ஒருவர் வழங்கியிருக்கும் கவுரமாகக்கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.

இயக்குனர் மிசேல் ஹசானாவிசியுஸிற்கு பிரபலத்தை பெற்றுத்தந்தது அவர் இயக்கிய OSS 117 திரைப்படங்கள்தான். ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தை கிண்டல் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட பாத்திரம்தான் OSS 117. அப்பாத்திரத்தை ஏற்று நடித்தவர் பிரெஞ்சு நடிகர் Jean Dujardin. முதல் பாகம் பெரு வெற்றி பெற்று இரண்டாம் பாகமும் வெளியாகி நல்ல வசூல் கண்டது. இந்த திரைப்படத்தில் ஜார்ஜ் வலண்டைன் எனும் ஊமைப்பட நாயகனாக பாத்திரமேற்றிருப்பவரும் அவரே. நகைச்சுவையை வெளிப்படுத்தும் கலைஞராக அறிமுகமான ஜான் டுஜார்டானிற்கு இத்திரைப்படத்தின் கலகலப்பான ஆரம்பக் காட்சி நிகழ்வுகள் இலகுவாக கைவந்திருக்க வேண்டும். மிகவும் அனாசயமாக அப்பகுதிகளை ரசிகனை மென்சிரிப்புடன் கடந்து செல்ல வைக்கிறது அவரின் திறமை. ஊமைப்படம் என்பதால் முகபாவனைகளும், உடல் அசைவுகளும்கூட ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமையவேண்டும் என்பதற்காக அவர் முகமும் உடலும் திறமையுடன் இழைகோர்த்து சென்றிருக்கிறது.

ஆனால் ஜான் டுஜார்டான் ஏற்றிருக்கும் ஜார்ஜ் வாலன்டைன் பாத்திரம் கலகலப்பை மட்டுமே கொண்ட ஒன்றல்ல. மனைவியை புரிந்து கொள்ளவியலாத ஒரு கணவனாக, தன் காதலை வெளிப்படுத்த முடியாத ஒரு காதலனாக, பேசும் படங்களின் முன் தன் பெருமையை இழக்க விரும்பாத பிடிவாதமான கர்வம் கொண்ட ஒரு கலைஞனாக, மனித நேயத்தின் ஒரு சில வரிகளாவது ஓடும் ஒரு மனிதனாக, பேசும் சினிமாவின் வெற்றியால் யாவற்றையும் இழந்து நொடிந்து போகும் ஒருவனாக அப்பாத்திரம் பல அடுக்குகளை கொண்டிருக்கிறது. மிகை நடிப்பு, மிகையுணர்வு வெளிப்படுத்தல் என அடையாளப்படுத்தக்கூடிய வகையில் ஒரு ஐந்து வருடகால வாழ்க்கையை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் நடிகர் ஜான் டுஜார்டான். ஆனால் அவரின் இவ்வகையான நடிப்பைவிட லக்கி லூக் எனப்படும் கவ்பாய் பாத்திரமே எனக்கு பிடித்திருக்கிறது. இவ்வகையான நடிப்பை தமிழ் சினிமாவில் அதிகம் பார்த்து பழகிப்போனதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் கேன்ஸ் அவரின் இப்பாத்திரத்திற்கு சிறந்த நடிகரிற்கான விருதை வழங்கி கவுரவித்ததையும் இங்கு நான் எழுதியாக வேண்டி இருக்கிறது.

the-artist-2011-21224-435674912ஜார்ஜ் வாலண்டைனினால் திரைப்படங்களில் துணை நடிகையாக தன் தொழில் வாழ்க்கையை ஆரம்பிக்கும் பாத்திரம் பெப்பி மில்லர். அவர்கள் இருவரும் முதலில் சந்திக்கும் நிகழ்ச்சியே பெப்பி மில்லரின் போட்டோவை தினசரி ஒன்றின் முதல் பக்கத்தில் வர வைத்து விடுகிறது. அதன் வழியே ஆரம்பமாகும் பெப்பி மில்லரின் சினிமா வாழ்க்கையின் புகழும் வெற்றியும், ஜார்ஜ் வாலண்டைனின் வீழ்ச்சியும் திரைப்படத்தில் ஒருங்கே பயணிக்கின்றன. நடனத்தில் ஆரம்பமாகும் அவர்கள் கலைப்பயணம், அருமையான ஒரு நடனத்துடனேயே நிறைவு பெறுவது அழகான பொருத்தம்.

ஜார்ஜ் வாலண்டைனிற்கான தன் காதலை வெளிப்படுத்தாதவாறு அவன் நலனை பேணி அவனை மீட்டெடுக்க விழையும் பெப்பி மில்லர், அவன் தோல்விகள் ஒவ்வொன்றிலும் அவனிற்காக வருந்துபவளாக இருக்கிறாள். அவன் கலை மீதும் அவன் மீதும் அவள் கொண்ட பற்றை அவள் ஒரு போதும் இழப்பதேயில்லை. வெற்றியின் களிப்பில் அவள் வார்த்தைகளில் சறுக்கி விட்டபோதும் வீழ்ந்து விட்ட ஜார்ஜ் வாலன்டைனிற்கு அது வலிக்ககூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறாள். படத்தின் இயக்குனரின் வாழ்க்கை துணையான நடிகை Bérénice Bejo சிறப்பாக தன் வேடத்தை ஆற்றியிருக்கிறார். ஜார்ஜ்ஜும், பெப்பியும் ஆடும் நடனம் அழகானது. திரை இசையும் இனிமையானது. ரசிகர்களின் உணர்வுகளை உருக்க வேண்டி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்குமேயாயின் கொளுத்தி வைக்கப்படாத மெழுகுவர்த்திகூட சில சமயங்களில் உருகிப்போகும் அளவு உருக்கமான சம்பவக் கோர்வைகளிற்கு கதையில் பஞ்சம் என்பதே இல்லை என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகிறது.

ஆனால் இவ்வகையான காதல் கதைகளை ஏற்கனவே பார்த்து விட்ட ஒரு உணர்வு மேலோங்கி செல்வதை தடுக்க முடியாமல் இருக்கிறது. வழமையாக பார்த்து பழகிய காட்சிகள் வேறு ரூபத்தில் வந்துவிட்டது போல ஒரு பிரமை கண்ணாடி மீது வழுகிச்செல்லும் நீர்துளியாக நழுவுகிறது. ஒரு வருடம் சம்பளம் தராவிடிலும் விசுவாசமாக வேலை பார்க்கும் கார் சாரதி, காதலிற்காக காதலன் அறியாது அவனிற்கு உதவிகள் செய்யும் ஒரு பெண், முன்னாள் நட்புகள் கைவிட நொடிந்து தனியனாகப் போகும் ஒரு முன்னாள் பிரபலத்தின் சோக சரிதம் என பல திக்குகளிலும் பார்த்த நினைவுகள் கண்சிமிட்டுகின்றன. இருப்பினும் பார்த்து ரசித்திட அருமையான மனதைத் தொடும் நுட்பமான காட்சி தருணங்கள் படத்தில் உண்டு. மிகையான பாராட்டுக்களிற்கும், எதிர்பார்ப்புக்களிற்கும் உள்ளாக்கப்பட்டிருக்கும் இப்படம் ஒரு நல்ல படம். மகோன்னத படம் அல்ல. அல்லது ஊமைப்படக் கலைஞன் பேச மறுத்தது போலவே படமும் என்னுடன் பேசமறுத்து விட்டது போலும். [** ]

ட்ரெய்லர்