Thursday, March 11, 2010

நிழல் எழுத்தாளன்


இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ஆடம் லாங் [Pierce Brosnan] அவர்களின் சுயசரிதையை எழுதி வரும் எழுத்தாளரான மைக் மக்காரா, அமெரிக்காவில் ஆடம் லாங் தங்கியிருக்கும் வீட்டிற்கு அருகிலிருக்கும் கடற்கரையில் கரை ஒதுங்கிய பிணமாக கண்டெடுக்கப்படுகிறார். அவரது மரணம் ஒரு விபத்து அல்லது தற்கொலையாக இருக்கலாம் என்று முடிவாகிறது.

மைக் மக்காராவின் மரணத்தையடுத்து, ஆடம் லாங்கின் சுயசரிதையை வெளியிட உரிமை பெற்றிருக்கும் நிறுவனமானது, இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிழல் எழுத்தாளனை [Ewan McGregor] ஆடம் லாங்கின் சுயசரிதையை எழுதும் பணியில் நியமிக்கிறது.

அப்பணியை ஏற்பதற்கு முதலில் அந்த நிழல் எழுத்தாளன் தயங்கினாலும், அதன் மூலம் கிடைக்கும் பெருந்தொகைப் பணம் அவனை ஈர்க்க, ஆடம் லாங்கின் நினைவுகளை எழுத்தில் பதிப்பதற்காக அவன் அமெரிக்காவிற்கு கிளம்பிச் செல்கிறான்.

விமான நிலையத்தில் அமெரிக்கா நோக்கி செல்லும் விமானத்திற்காக காத்திருக்கும் நிழல் எழுத்தாளன், பார் ஒன்றில் விஸ்கியைச் சுவைத்தவாறே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்திகளைப் பார்க்கிறான். அச்செய்தி அறிக்கையின் வழி, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ஆடம் லாங், CIAன் சட்ட விரோதமான ஆட்கடத்தலிற்கு துணைபோனார் எனும் சூடான தகவல் வெளியாகியிருப்பதை அவன் அறிந்து கொள்கிறான்.

நீண்ட விமானப் பயணத்தின் பின், அமெரிக்காவின் ஒரு சிறு தீவில் அமைந்திருக்கும் ஆடம் லாங்கின் கடற்கரையோர வீட்டை வந்தடைகிறான் நிழல். நிழலை ஆடம் லாங்கின் வீட்டில் வரவேற்கும் ஆடம் லாங்கின் உதவியாளர், அவனது பணி குறித்த விபரங்களை அவனிற்கு அறியத் தருகிறாள். பின்பு உதவியாளர் ,மைக் மக்காரா எழுதிய பக்கங்களை நிழலைப் படித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்கிறாள்.

the-ghost-writer-2010-16251-1185583270 மைக், எழுதிய பக்கங்களைப் படித்துப் பார்க்கும் நிழல், அது வாசகர்களைக் கவரும் வகையில் எழுதப்பட்டிருக்கவில்லை என்று கருதுகிறான். சுயசரிதையை மீண்டும் புதிதாக எழுத ஆரம்பிக்க வேண்டுமெனத் தீர்மானிக்கிறான். அன்றிரவு விமான நிலையத்தில் வைத்து அவனிற்கு ஆடம் லாங் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார். இந்நிகழ்வின் பின் தீவில் அமைந்திருக்கும் விடுதி ஒன்றில் தனக்கென ஏற்பாடாகியுள்ள அறைக்குச் சென்று பயணக் களைப்பு காரணமாக நன்றாக உறங்கிப் போகிறான் நிழல்.

மறுநாள் காலை ஆடம் லாங்கின் வீட்டில் அவரைச் சந்திக்கும் நிழல், சுயசரிதையை தன் பாணியில் எழுத ஆரம்பிக்கிறான். இவ்வேளையில் சர்வதேச நீதிமன்றம் ஆடம் லாங்கிற்கு எதிராக போர்க் குற்றங்கள் சம்பந்தமான ஒரு விசாரணைக்கு உத்தரவிடுகிறது. இங்கிலாந்து அரசாங்கம் இவ்விசாரணைக்கு தன் பூரண ஒத்துழைப்பை வழங்க சம்மதம் தெரிவிக்கிறது. ஆடம் லாங்கினால் பதவி நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஒருவர் ஆடம் லாங்கிற்கு எதிராக சாட்சியம் கூற முன் வருகிறார்.

இத்தகவல்கள் யாவும் ஆடம் லாங்கிற்கு அதிக அழுத்தத்தை தருகின்றன. நிழல் மீது அவர் சீறிப்பாயும் சந்தர்பங்களையும் ஏற்படுத்துகின்றன. இருப்பினும் இவற்றைச் சகித்துக் கொண்டு தன் பணியைத் தொடர்கிறான் நிழல்.

the-ghost-writer-2010-16251-2145878922 ஆடம் லாங் குறித்த புதிய தகவல்கள் மனித உரிமை ஆர்வலர்களை அவர் வீட்டிற்கு முன்பாக ஆவேசமான ஆர்ப்பாட்டத்தில் குதிக்க வைக்கின்றன. சர்வதேச செய்தி சேனல்களில் ஆடம் லாங்கின் தலை பகடைக் காயாகிறது. இவ்வேளையில் இங்கிலாந்திற்கு திரும்பிச் சென்றால் அங்கே தான் கைது செய்யப்படுவதற்கு சாத்தியங்கள் உண்டு என்ற நிலையில், அமெரிக்க அரசிடம் தனக்கு ஆதரவு வேண்டுவதற்காக நியூயார்க் நகரத்திற்கு உடனடியாகப் பயணமாகிறார் ஆடம் லாங்.

விடுதியில் தங்கியிருக்கும் நிழலிற்கு, மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் போன்றவர்களால் ஏற்படக்கூடிய தொல்லைகளைத் தவிர்ப்பதற்காக அவனை ஆடம் லாங்கின் வீட்டிலேயே தங்கிக் கொள்ளச் சொல்கிறாள் ஆடம் லாங்கின் உதவியாளர். நிழல் தங்கிக் கொள்வதற்கு கடலில் மூழ்கி இறந்து போன மைக் மக்காராவின் அறை ஒதுக்கப்படுகிறது.

பணியை ஏற்றுக் கொண்ட நாள் முதலே, மைக் மக்காரா எழுதிய சுயசரிதை குறித்த ஒரு சந்தேகமான உணர்வைத் தன்னுடன் கொண்டிருக்கும் நிழல், மைக் மக்காராவின் அறையை ஒரு நாள் சோதனை செய்யும் போது, சில போட்டோக்களையும், ஆடம் லாங்கின் ஆரம்ப கால கட்சி உறுப்பினர் அட்டையையும் ஒரு மறைவிடத்திலிருந்து கண்டுபிடிக்கிறான்.

மைக் மக்காரா எழுதிய சுயசரிதையின் சில பக்கங்களையும், ஆடம் லாங்கின் கட்சி உறுப்பினர் அட்டையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் நிழல், அவற்றில் ஒரு வித்தியாசம் இருப்பதைக் கண்டு கொள்கிறான். இந்நிகழ்வுகள் தரும் உந்துதலில் மைக் மக்காராவின் உடல் கரை ஒதுங்கிய கடற்கரைப் பகுதியைத் தேடிச் செல்கிறான் நிழல். வழியில் அவனிற்கு கிடைக்கும் சில தகவல்கள் மைக் மக்காராவின் மரணம் விபத்தோ அல்லது தற்கொலையோ அல்ல எனும் ஐயத்தை அவன் மனதில் விதைக்கிறது. தொடரும் அவன் தேடல்கள் அதிர வைக்கும் ஒரு உண்மையின் திசையை நோக்கி வேகமாக அவன் நிழலை நகர்த்த ஆரம்பிக்கின்றன….

l-homme-de-l-ombre-2009-16251-1081491977 பிரபல எழுத்தாளர் Robert Harris எழுதிய The Ghost எனும் நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது The Ghost Writer எனும் இத்திரைப்படம். சமகால உலக அரசியல் நிகழ்வுகளை மையமாக வைத்து பின்னப்பட்டிருக்கும் திரைக்கதையின் மூலம் சிறப்பான ஒரு அரசியல் த்ரில்லரை வழங்கியிருக்கிறார் இயக்குனர் Roman Polanski .

பிரபலங்களின் சுயசரிதைகளை எழுதும் பெரும்பாலான நிழல் எழுத்தாளர்களின் பெயர்கள் வெளியே வருவதில்லை என்பதைப் போலவே இத்திரைப்படத்திலும் நிழலின் பாத்திரத்திற்கு பெயர் வழங்கப்படவில்லை!!

அரசியல் உள்குத்தல்கள், பழிவாங்கல்கள், அந்தர் பல்டிகள் என அரசியல் சூழலைக் கூறு போடும் திரைக்கதை, ஈராக் போர், அதன் விளைவுகள், அகில பிரபஞ்ச நாட்டாமையான CIAன் சட்ட விரோத நடவடிக்கைகள் என்பவறையும் தன்னுடன் அணைத்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச நீதிமன்றத்தின் கையாலாகத்தனம் குறித்து நிழல் வழியாக சூடான விமர்சனம் ஒன்றையும் தயங்காமல் அது முன் வைக்கிறது.

ஈராக் போரில் அமெரிக்காவுடன் தோள் கொடுத்து நின்ற இங்கிலாந்துப் பிரதமர் டானி பிளேயரை நோக்கி கலைஞன் ரோமான் பொலான்ஸ்கி எழுப்பும் ஒரு கேள்வியாகவும் இத்திரைப்படம் உருப்பெறுகிறது. திரைப்படத்தில் பியர்ஸ் புரொஸ்னான் ஏற்றிருக்கும் ஆடம் லாங் பாத்திரத்தின் அசல், டானி பிளேயர் என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல.

திரைப்படத்தில் நிழல் எழுத்தாளனாக வரும் இவான் மக்கிரகோரின் பாத்திரம் அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத ஒன்றாகும். அதனை அழகான முறையில் நடித்துக் காட்டியிருக்கிறார் மக்கிரகோர். ஆனால் ஆடம் லாங் பாத்திரத்தில் வரும் பியர்ஸ் புரொஸ்னான் பின்னி எடுத்திருக்கிறார். நீண்ட நாட்களின் பின் அவரின் முக்கியமான வேடமாக ஆடம் லாங் பாத்திரத்தைக் கூறலாம்.

l-homme-de-l-ombre-2009-16251-1027734208 மனைவியால் வெறுக்கப்பட்டு, மனித உரிமை ஆர்வலர்களால் கொலைகாரன் எனத் தூற்றப்பட்டு, தன் சொந்த நாட்டிற்கே திரும்பிச் செல்ல முடியாத நிலையிலுள்ள ஒரு முன்னாள் பிரதமர் பாத்திரத்திற்குரிய அழுத்தம், கோபம், வெடிப்பு என்பவற்றைப் பிரமாதமாக திரையில் கொணர்கிறார் பியர்ஸ் புரொஸ்னான். தன் ஜெட் விமானத்தில் வைத்து தன்னைக் குற்றம் சாட்டும் நிழல் மீது அவர் சீறிப்பாயும் பாய்ச்சல், ஆவேசமான புலிப் பாய்ச்சல்.

திரைப்படத்தின் முன்பாதி மிகவும் நிதானமான வேகத்துடனேயே நகர்கிறது. இருப்பினும் சந்தேகங்களையும், மர்மங்களையும் பார்வையாளன் மனதில் திரைக்கதை விதைத்துக் கொண்டே செல்கிறது. மைக் மக்காராவின் மறைவிடத்தில், நிழல், போட்டோக்களைக் கண்டெடுத்த பின் படத்தில் வேகம் தொற்றிக் கொள்கிறது.

கதையின் ஒரு தருணத்தில் ரசிகர்கள் மர்ம முடிச்சை அவிழ்த்து விடுவதற்கு தோதாக ஒரு வாய்ப்பை வழங்குவார் இயக்குனர். ரசிகர்களும் நிழலைவிட வேகமாக தரவுகளைத் தொடர்புபடுத்தி மர்ம முடிச்சை தாங்கள் அவிழ்த்து விட்டதாக புளகாங்கிதம் அடைவார்கள். அவ்வகை ரசிகர்களிற்கு இறுதியாக பொலான்ஸ்கி வைக்கும் ஆப்பு. வெரி நைஸ் ஆப்பு.

இறுதிக் காட்சி வரை மர்மத்தை வெற்றிகரமாக எடுத்துச் செல்வதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர். இறுதிக் காட்சி கசப்பானாது. மனதைக் கனக்க செய்வது. உண்மைக்கு அருகில் அது ஏளனச் சிரிப்பைச் சிந்தியபடியே நிற்கிறது. The Ghost Writer திரைப்படம் நிதானமாக ரசிக்கபட்டு அதன் முழுச் சுவையுடன் சுவைக்கப்படவேண்டிய ஒரு சிறப்பான அரசியல் த்ரில்லர். [***]

ட்ரெயிலர்

Saturday, March 6, 2010

தனி மனிதன்


லாஸ் ஏஞ்சலேஸில் இருக்கும் கல்லூரி ஒன்றில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருகிறான் ஜார்ஜ். மிகவும் உன்னிப்பான ஒழுங்கு முறை நிறைந்த நடவடிக்கைகளை கொண்ட அவனிற்கு ஜிம் எனும் காதலன் இருக்கிறான். ஜிம்மை விட ஜார்ஜிற்கு வயது அதிகம் என்றாலும் அவர்கள் வாழ்க்கை அன்பாலும், காதலாலும் நிறைந்ததாக இருக்கிறது.

a-single-man-2010-17686-1745181199 ஒரு நாள் தன் தாயாரைக் கண்டு வருவதற்காக காரில் பயணம் கிளம்பும் ஜிம், பனி அடர்ந்த தெருக்களில் விபத்துக்குள்ளாகி, ஸ்தலத்திலேயே உயிரிழக்கிறான். இந்த தகவலை அறியும் ஜார்ஜ் உடைந்து போகிறான். ஜிம்மின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள விரும்பும் ஜார்ஜ்ஜிற்கு, ஜிம்மின் குடும்பத்தினரால் அதற்குரிய அனுமதி மறுக்கப்படுகிறது. தன் நெருங்கிய தோழியான சார்லொட்டிடம் ஒடிச் சென்று தன் மனதின் வேதனைகளை கண்ணீரால் வடிக்கிறான் ஜார்ஜ்.

ஜிம் இல்லாத ஜார்ஜின் வாழ்க்கையானது அதன் அர்த்தமும், சுவையும் இழந்த ஒன்றாகி விடுகிறது. திட்டமிட்ட காரியங்களை ஆற்றும் ஒரு யந்திரம் போன்று தன் வாழ்வை நகர்த்துகிறான் ஜார்ஜ். தொடரும் வாழ்க்கையில் சலிப்படையும் அவன், தன் வாழ்வை முடித்துக் கொள்வது எனத் தீர்மானிக்கிறான். புதிய காலை ஒன்றில் தன் வாழ்வின் இறுதி நாளை ஆரம்பிக்கிறான் ஜார்ஜ்.

தான் பணியாற்றும் கல்லூரிக்குச் செல்லும் ஜார்ஜ், கல்லூரி அலுவலகத்தில் இருக்கும் காரியதரிசியுடன் இனிமையாக உரையாடுகிறான். வழமையாக தன்னுடன் அதிகம் பேசாத ஜார்ஜ்ஜின் இந்த மாற்றம் அவளிற்கு வியப்பை அளிக்கிறது. ஜார்ஜ்ஜை ஆச்சர்யம் நிரம்பிய விழிகளால் பார்க்கிறாள் அவள்.

a-single-man-2010-17686-1563298612 தன் வகுப்பறைக்கு செல்லும் ஜார்ஜ் தன் வழமையான முறையிலிருந்து விலகி, தன் மனதிற்கு நெருக்கமான வகையில் மாணவர்களிற்கு பாடம் எடுக்கிறான். ஆனால் மாணவர்கள் இந்த மாற்றத்தினால் உவகை கொண்டவர்களாக மாறிவிடவில்லை. கெனி எனும் மாணவன் மட்டும் பாடம் முடிவடைந்த பின் ஜார்ஜை தேடி வந்து உரையாடுகிறான். ஜார்ஜ் பாடம் நடத்திய விதம் தனக்கு மிகவும் பிடித்திருந்தது எனக் கூறுகிறான். ஜார்ஜ் தன்னுடன் ஏதாவது பருக வேண்டுமென அழைப்பு விடுக்கிறான். அந்த அழைப்பை மறுத்து விடுகிறான் ஜார்ஜ்.

தன் முன்னை நாள் காதலியும் இன்னாள் நண்பியுமான சார்லொட்டை கடைசியாக ஒரு தடவை சந்திக்க விரும்புகிறான் ஜார்ஜ். சர்லொட், மதுவில் தன் சுவையற்ற வாழ்வின் சுவையைக் கண்டு பருக முயல்பவளாக இருக்கிறாள். மது, அவள் வாழ்வில் அவளிற்கு மிகவும் நெருங்கிய ஒன்றாக இருக்கிறது.

சார்லொட்டிற்காக ஜின் போத்தல்கள் சிலதை வாங்க ஒரு அங்காடிக்குச் செல்லும் ஜார்ஜ், அங்கு கார்லோஸ் எனும் அழகிய ஆண் விலை மகனைக் கண்டு கொள்கிறான். கார்லோஸுடன் உரையாடும் ஜார்ஜ், அந்த உரையாடல் மனம் திறந்த ஒரு உரையாடலாக அமைந்திருப்பதை உணர்ந்து ஆச்சர்யம் கொள்கிறான்.

a-single-man-2010-17686-514618539 அங்காடியின் கார் பார்க்கிங்கில் தன் காரில் சாய்ந்தவாறே அழகான சூரிய அஸ்தமனஸ்தை கார்லோஸுடன் சேர்ந்து ரசித்துப் பார்க்கிறான் ஜார்ஜ். தன் வாழ்க்கையில் சாதாரண தருணங்களைக் கூட அவன் ரசிக்கத் தவறியிருப்பது அவனிற்கு புரிகிறது. ஜார்ஜின் மென்மையான, கண்ணியமான குணத்தைக் கண்டு அவனிற்கு சில சேவைகளை செய்ய முன் வருகிறான் கார்லோஸ். ஆனால் ஜார்ஜ் அதனை மறுத்து தன் வீடு திரும்புகிறான்.

தன் வீட்டிற்கு திரும்பும் ஜார்ஜ், தற்கொலைக்கான ஆயத்தங்களை செய்ய ஆரம்பிக்கிறான். தனக்கு நெருக்கமானவர்களிற்கு கடிதங்களை எழுதி அவற்றை மேசையின் மீது ஒழுங்காக வைக்கிறான். தன் காரின் சாவி, பத்திரங்கள், சொத்து ஆவணங்கள் போன்றவற்றையும் அம்மேசையில் அழகாக பரப்புகிறான். தன் வீட்டில் பணி புரியும் பணிப்பெண்ணிற்கு ஒரு தொகைப் பணத்தை குளிர் பதனப் பெட்டியினுள் வைக்கிறான்.

தன் வாயில் ஒரு கைத்துப்பாக்கியை வைத்து, எந்த நிலையில் உடலை இருத்தி தற்கொலை செய்ய வேண்டுமென்பதை முயன்று பார்க்கிறான் ஜார்ஜ். இவ்வேளையில் சார்லொட்டிடமிருந்து தொலைபேசி அழைப்பு வர, சார்லொட்டிற்காக வாங்கிய ஜின் போததல்களுடன் அவளைக் காண கிளம்பிச் செல்கிறான்.

சார்லொட்டின் வீட்டில் ஜார்ஜ் அவளுடன் மதுவைச் சுவைக்கிறான், உணவருந்துகிறான், நடனமாடுகிறான். ஜார்ஜ், இறந்து போன ஜிம் மீது தொடர்ந்து கொண்டிருக்கும் அன்பினால் பொறாமை கொள்ளும் சார்லொட் அவனுடன் வாக்குவாதம் செய்கிறாள். தன்னுடன் அவன் வாழலாம் என்கிறாள். பின் தன் செயலிற்காக மன்னிப்புக் கேட்கிறாள். தன் வாழ்க்கையில் இப்படி ஒரு அன்பு தனக்கு கிடைக்கவே கிடைக்காது என வருந்தும் அவளைத் தேற்றும் ஜார்ஜ், அவளை லண்டனிற்கு திரும்பிச் செல்லும் படி கூறி அவள் வீட்டிலிருந்து விடை பெறுகிறான்.

a-single-man-2009-17686-371598782 தன் வீட்டில் இறுதியாக ஒரு ஸ்காட்ச்சை சுவைக்க விரும்பும் ஜார்ஜ், ஸ்காட்ச் போத்தல் காலியாக இருப்பதைக் காண்கிறான். தான் வழமையாகச் செல்லும் மதுபான விடுதிக்கு சென்று ஒரு போத்தல் ஸ்காட்ச்சை ஆர்டர் செய்கிறான். இவ்வேளையில் அந்த மதுபான விடுதியின் உள்ளே நுழைகிறான் ஜார்ஜின் மாணவனான கெனி.

கெனியைக் காணும் ஜார்ஜ் தன் வாழ்வை முடிக்கும் முன்பாக கெனியுடன் உரையாட விரும்புகிறான். ஸ்காட்ச் போத்தல் ஆர்டரை ரத்துச் செய்து விட்டு இரண்டு ஸ்காட்சுகளிற்கு ஆர்டர் செய்கிறான்.

ஸ்காட்சை சுவைத்தவாறே இருவரும் உரையாடுகிறார்கள், உரையாடல் அவர்களை நெருக்கம் ஆக்க ஆரம்பிக்கிறது. ஜார்ஜ் ஒரு மென்மையான மனிதன் என்பதனை கெனி அறிந்து கொள்கிறான். இதன் பின் விடுதிக்கு அருகிலிருக்கும் கடலில் இருவரும் நீந்துவதற்காக செல்கிறார்கள்.

தங்கள் உடைகளைக் களைந்து பிறந்த மேனியாக இருவரும் அலைகளில் மூழ்கி மகிழ்கிறார்கள். அலைகளுடன் விளையாடி முடிந்ததும் ஜார்ஜின் வீட்டிற்கு இருவரும் திரும்புகிறார்கள். வீட்டிலும் பீர்களை அருந்தியவாறே அவர்களின் உரையாடல் தொடர்கிறது. இரவு அமைதியாகக் கழிகிறது. கெனியுடன் பேசியவாறே மது தந்த அயர்ச்சியில் மயங்கிப் போகும் ஜார்ஜ் சில மணிநேரம் கழித்து விழித்து எழுகிறான்.

a-single-man-2010-17686-639625431 வீட்டின் வரவேற்பு அறையிலிருக்கும் சோபாவில் கெனி சுருண்டு படுத்திருப்பதை ஜார்ஜ் காண்கிறான். கெனி அவன் கைகளில் ஜார்ஜ்ஜின் துப்பாக்கியோடு தூங்கிப் போயிருக்கிறான். சோபாவை நெருங்கி கெனியின் கைகளிலிருந்து துப்பாக்கியை எடுக்கும் ஜார்ஜ், கெனியை போர்வையால் ஆதரவோடு போர்த்து விடுகிறான். மரணம் என்பது இனி அவனிற்கு தேவையற்றது. அவன் புதிய வாழ்வை ஆரம்பிக்க விரும்புகிறான்… ஆனால்!? அந்த மனதை நெகிழ வைக்கும் முடிவைத் திரைப்படத்தில் காணுங்கள்.

Christopher Isherwood என்பவர் எழுதிய நாவலைத் தழுவி A Single Man எனும் இந்த மென்மையான உணர்வுகள் உயிர்க்கும் படத்தை இயக்கியிருக்கிறார் பிரபல Fashion Designer ஆன Tom Ford. 1962களில் கதை நிகழ்கிறது. தன் அன்பின் பிரிவால் வாழ்வின் சுவையை இழந்த மென்மையான மனிதன் ஒருவனின் இறுதி நாளை மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறது கதை. தன் மரணத்தை நோக்கி அவன் செல்ல செல்ல, வாழ்க்கையானது அதன் ரகசிய ருசியை அவனிற்கு புகட்ட ஆரம்பிப்பதை மேகம் போன்ற மென்மையுடன் காட்டியிருக்கிறார்கள்.

படத்தின் உரையாடல்கள் மிகவும் அருமையாக உள்ளன. அதே போல 1960களை இவ்வளவு அழகுடனும், மோஸ்தருடனும் ரசிக்கக்கூடிய வகையில் காட்சிப்படுத்தியிருப்பதை இதுவரையில் நான் திரையில் கண்டதில்லை. ஒவ்வொரு காட்சியும், அதில் வரும் ஒவ்வொரு பொருளும் தன் அழகை பூரணமாக வெளிப்படுத்தும் விதமாக காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். மரணத்தைக்கூட அழகுடன் இணைத்தே காட்ட விழைந்திருக்கிறார் இயக்குனர் டாம் ஃபோர்ட். இக்காட்சிகளுடன் ஒட்டிக் கொள்ளும் இனிமையான திரை இசையானது மனதை அனுமதியின்றிக் கொள்ளை கொள்கிறது.

a-single-man-2010-17686-2098016876 ஜார்ஜ் பாத்திரத்தில் ஒன்றியிருக்கும் நடிகர் Colin Firth க்கு இயக்குனர் டாம் ஃபோர்ட் படத்தில் வழங்கியிருக்கும் வாய்ப்பு மிக முக்கியமானது. படத்தில் தனித்து தெரிகிறார் காலின் ஃபேர்த். மென்மையான குணம் கொண்ட ஒரு ஒரினச் சேர்க்கையாளன் பாத்திரத்தில் பாந்தமாக நடித்துச் செல்கிறார் அவர். அவரது உடல் மொழி முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. படத்தில் அவரின் தோற்றத்தையே அசர வைக்கும் ஆடைகளுடன் படு ஸ்டைலாக காட்டியிருக்கிறார்கள். நான் பார்த்து ரசித்த காலின் ஃபேர்த்தின் பாத்திரங்களில் ஜார்ஜ் பாத்திரம் சிறப்பானது என்பதில் ஐயமில்லை. அவரது சிகையலங்காரமும், அழகான மூக்குக் கண்ணாடி வழி அவர் வீசும் மென்மையான பார்வையும் வசீகரிக்கிறது.

காலின் ஃபேர்த்தும் அவர் காதலனும் தோன்றும் ப்ளாஷ் பேக் காட்சிகள் சிறப்பாக இருக்கின்றன. சார்லொட் பாத்திரத்தில் தோன்றும் ஜூலியான் மூர் சிறிது நேரம் காட்சிகளில் தோன்றினாலும் மனதைக் கவர்கிறார். கதை நடந்த காலத்தில் பரபரப்பாகவிருந்த கியூபா ஏவுகணை விவகாரம் மனித மனங்களில் அரசு இயந்திரம் எவ்வாறாக பயத்தை விதைத்து அதன் வழி சிறுபான்மைக்கு எதிராக வெறுப்பை வளர்க்கிறது என்பதை கோடிட்டுக் காட்டுகிறது.

மிகச் சிறப்பான ஒளிப்பதிவுடன், 1960களின் உணர்வுகளை ரசிகனின் மனதில் பதிக்கும் வண்ணங்களுடன் படமாக்கப்பட்டிருக்கும் இத் திரைப்படத்தின் அழகே, திரைப்படம் தர வேண்டிய உணர்வுகளிலிருந்து பார்வையாளனை சற்று விலகிச் செல்லவும் வைத்து விடுகிறது. காட்சியில் விரியும் அழகின் செறிவு அந்த தருணத்தில் பார்வையாளனைக் கட்டிப் போட்டாலும், படைப்பு உருவாக்கும் உணர்வுகள் மனதில் ஆழமாக இறங்குவதற்கு அதுவே தடையாகியும் விடுகிறது. இருப்பினும் டாம் ஃபோர்ட்டின் முதல் முயற்சி, மென் உணர்வுகளை உள்ளடக்கிய நல்லதொரு படைப்பாகவே அமைகிறது. [***]

ட்ரெயிலர்

Wednesday, March 3, 2010

பஷீருடன் ஒரு நடனம்


valse1 இஸ்ரேலின் குளிர் நிறைந்த ஜனவரியின் இரவொன்றில் அரியின் நண்பன் பாவோஸ் அவனைத் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறான். தன் நண்பனின் அழைப்பை ஏற்று மதுபான விடுதி ஒன்றில் அவனைச் சந்திப்பதற்காக செல்கிறான் அரி.

விடுதிக்கு வெளியே குளிர்காலத்தின் மழை சோம்பலுடன் தெருக்களை ஈரமாக்கிக் கொண்டிருந்தது. இடையிடையே தெறித்த மின்னல்கள், விடுதியின் மென்னிருளை நொடிநேரம் பிரகாசிக்க செய்து மறைகின்றன.

சிகரெட் ஒன்றைப் புகைத்தவாறே தான் தொடர்ந்து கண்டு வரும் வித்தியாசமான கனவு பற்றி அரியிடம் கூறுகிறான் பாவோஸ். கடந்த இரு வருடங்களாக தன்னை அழுத்தும் அந்தக் கனவில் வெறிநாய்க் கூட்டம் ஒன்று தன் உயிரை எடுப்பதற்காக தன்னை வெறியுடன் தேடியலைவதை அவன் அரிக்கு விபரிக்கிறான்.

1982ல் இஸ்ரேலியப் படையில் தான் பணியாற்றிய வேளையில், நள்ளிரவுகளில் இஸ்ரேலிய ராணுவத்தால் தேடப்படும் பாலஸ்தீனியர்களை தேடிக் கிராமங்களில் தேடுதல் வேட்டை நடத்துகையில், தங்கள் அரவம் கேட்டு எழுந்து, குலைத்து, கிராம மக்களை உஷார் படுத்திவிடும் நாய்களை சுட்டுக் கொல்வது தனக்கு பணியாகத் தரப்பட்டது என்பதையும், தன் துப்பாக்கியின் குண்டுகள் பாய்ந்து தரையில் வீழ்ந்த அந்த நாய்களின் கடைசிப் பார்வைகளை தன்னால் இப்போதும் நினைவுகூற முடியும் என்றும் அரியிடம் கூறுகிறான் பாவோஸ்.

பாவோஸ் கூறுவதைப் பொறுமையாகக் கேட்கும் அரி, பாவோஸ் ஒரு உளவியல் நிபுணனைச் சென்று காண வேண்டும் என அவனிற்கு ஆலோசனை கூறுகிறான். அதற்குப் பதிலாகவே நான் உன்னுடன் பேச விரும்பினேன் என்று அதற்குப் பதில் தரும் பாவோஸ், அரிக்கு போர் குறித்த நினைவுகள் வருவதில்லையா என வினவுகிறான்.

சற்று நிதானிக்கும் அரி, தனக்குப் போர் குறித்த நினைவுகள் திரும்புவதில்லை எனப் பதிலளிக்கிறான். சிறிது நேரத்தின் பின் நண்பர்களிருவரும் மதுபான விடுதியிலிருந்து கிளம்பி விடைபெற்றுப் பிரிகிறார்கள். காற்றில் கோடுகள் போடும் மழையினூடு அருகிலிருக்கும் அலைகள் பரவும் கடற்கரை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பிக்கிறான் அரி.

valse2 அந்த இரவில், முப்பது வருடங்களிற்குப் பின்பாக, லெபனான் போர் குறித்த சில நினைவுகள் அவனிற்கு திரும்புகின்றன. லெபனான் குறித்த நினைவுகள் மட்டுமல்ல, ஒரு பேரழிவு இரவின் நினைவு, அந்த அகதி முகாம்களில் நிகழந்த படுகொலைகளின் நினைவு என்பன மெல்ல அவன் மனதை தட்டிப் பார்க்கின்றன. ஆனால் அந்நினைவுகள் முழுமையானவையாக இல்லை.

மறுநாள் காலை உளவியலாளனான தன் நண்பன் ஒரியைக் காணச் செல்கிறான் அரி. லெபனான் போர் குறித்த தன் நினைவுகள் திரும்புவதற்கு, பாவோஸின் நாய்கள் பற்றிய கனவு தனக்கு ஏன் தேவைப்பட்டது என ஒரியிடம் அவன் வினவுகிறான். மனித மனம் குறித்த ஆச்சர்யமான தகவல்களை அரிக்கு விளக்கும் ஒரி, அரியின் நினைவுகள் நிஜமானவைதானா என்பதை அரி உறுதிப்படுத்த விரும்பினால், அரியுடன் லெபனானில் அந்தச்சமயம் பணியாற்றியவர்களிடம் அரி அது குறித்து விசாரிக்க வேண்டும் என்கிறான்.

இதனையடுத்து அரி, லெபனான் போரில் பணிபுரிந்த சில நபர்களை சந்திக்கச் செல்கிறான். தன் நினைவுகளில் விழுந்திருக்கும் விரிசல்களை அந்த நபர்களின் நினைவு மீட்டல்கள் மூலம் நிறைவு செய்ய முயல்கிறான். அவன் முழுமையாக்க விரும்பும் போர் குறித்த நினைவுகள், மனதின் ஆழத்திலிருந்து எடுத்து வரும் அந்த உண்மை, எந்த மனிதனையுமே அது குறித்த நினைவுகளை மறந்திடவே தூண்டும்….

valse3 அரி எனப்படும் Ari Folman, 1982ல் லெபனானிற்குள் நுழைந்த இஸ்ரேலிய துருப்புகளில் பங்கு வகித்தவர். முப்பது வருடங்களின் பின்பாக அப்போர் குறித்த தன் நினைவுகளை முழுமையாக மீட்கும் அவரின் முயற்சியே Waltz With Bashir எனும் கதையாக விரிகிறது.

அரி, இந்தக் கதையை முதலில் ஒரு Animmated Documentary திரைப்படமாகவே உருவாக்கினார். அப்படத்திற்கு கதையை எழுதி தயாரித்து இயக்கியவரும் அரிதான். இத்திரைப்படம் 2008ல் முதன் முதலாக கேன் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது, விமர்சகர்களிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. கோல்டன் குளோப் விருதொன்றையும் இத்திரைப்படம் வென்றிருக்கிறது.

திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட மூலச் சித்திரங்களைக் கொண்டே சித்திர நாவல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சித்திர நாவலின் உருவாக்கத்தை அரி ஃபோல்மேனும், திரைப்படத்தின் கலை இயக்குனருமான David Polonskyயும் மேற்பார்வை செய்திருக்கிறார்கள்.

லெபனான் போர் குறித்த, குறிப்பாக பெய்ரூத்தின் Sabra மற்றும் Chatila அகதி முகாம்களில் நிகழ்ந்த படுகொலைகள் குறித்த தன் நினைவுகளை முழுமையாக மீட்டெடுக்க முடியாத நிலையில் அரி, உளவியலாளர்கள், யுத்த முனையில் பணிபுரிந்த நண்பர்கள், சக வீரர்கள், ஒரு தொலைக் காட்சி நிருபர் ஆகியோரைச் சந்தித்து உரையாடுகிறார்.

valse4 உளவியலாளர்கள் மனித மனதின் விசித்திர ஆட்டங்கள் குறித்து அரிக்கு விளக்குகின்றனர். ஏனையோர் யுத்த முனை சம்பந்தமான தமது நினைவுகளை அரியுடன் பகிர்ந்து கொள்கின்றனர். இதன் வழி, படிப்படியாக பெய்ரூத்தில் நடந்த அந்தப் படுகொலைகளை நோக்கி, அழிவால் வரையப்பட்ட போர்ச் சித்திரங்களினூடு வாசகனை கரம் பற்றி அழைத்துச் செல்கிறது சித்திர நாவல். அந்தப் பயணம் வாசகனின் மனதைக் கனக்க வைக்கும் ஒன்றாகவே அமைகிறது.

1982ல் லெபனானின் ஒரு பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த வேளையில் அந்நாட்டின் ஜனாதிபதியாக குறுகிய காலம் பதவியில் இருந்த Bashir Gemayel, அவரது கட்சி அலுவலகத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்நிகழ்விற்கு பழிவாங்கத் துடித்த அவரின் தீவிர ஆதரவாளர்களான, லெபானான் கிறிஸ்தவர்களைக் கொண்ட ஆயுதக்குழுக்கள், பெய்ரூத்தில் அமைந்திருந்த ஸாப்ரா மற்றும் சட்டிலா ஆகிய பாலஸ்தீனிய அகதி முகாம்களில் தமது கொலைவெறியைக் கட்டவிழ்த்து விட்டன.

valse5 இந்த இரு அகதி முகாம்களும் அவ்வேளையில் இஸ்ரேலியத் துருப்புக்களால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வெறிபிடித்த அந்த ஆயுதக் குழுக்களின் கோர ஆட்டத்தைக் கண்டும் காணாமல் கைகட்டி வேடிக்கை பார்த்தது இஸ்ரேலிய ராணுவ உயர் மட்டம். இக்கோரச் செயலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன அப்பாவி முஸ்லிம்களின் எண்ணிக்கை 300லிருந்து 3000 வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த சமயம் இவ்விரு முகாம்களிற்கும் அருகாமையிலிருந்த அரியின் குற்றவுணர்வு கொண்ட மனச்சாட்சியின் வெளிப்பாடாகவும் கதை இருக்கிறது.

கதையில் இஸ்ரேலியப் படை வீரர்கள் நாயகர்களாக சித்தரிக்கப்படவில்லை. ஆசைகளும், கனவுகளும், தமது உயிர் மீது ஆசையும் கொண்ட சாதாரண இளைஞர்களாகவே அவர்கள் காட்டப்பட்டிருக்கிறார்கள்.

இஸ்ரேலிய ராணுவ அதிகாரம் எவ்வாறு தனது படை வீரர்களை எந்தவித அக்கறையுமின்றி உயிரற்ற பொம்மைகள் போல் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதையும் கதை உணர்த்துகிறது.

valse6 எதிரிகளை வெல்வது என்பதை விட தாம் உயிர் பிழைக்க வேண்டுமே எனும் எண்ணம் பெரும்பான்மையான இஸ்ரேலிய இளம் வீரர்களிற்கு இருந்திருக்கிறது. அகதிமுகாம்களில் நிகழ்ந்த படுகொலைகளை கண்களால் கண்ட சாட்சியங்களாக அவர்கள் இருந்த போதும், அதனைத் தடுக்க ஏதும் செய்ய முடியாத நிலையில் அவர்களின் உயரதிகாரம் அவர்களை முடக்கிப் போட்டிருந்ததையும் அறிய முடிகிறது. [ ஆரியல் ஷாரோன் அப்போது இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்]

valse7 பெய்ரூத் தெருவொன்றில் அமைந்திருக்கும் உயர்ந்த கட்டிடங்களிலிருந்து இஸ்ரேலிய வீரர்களை நோக்கி சினைப்பர் குண்டுகள் பாய்கின்றன. எங்கும் நகர முடியாதபடி முடக்கப்படுகிறார்கள் இஸ்ரேலிய வீரர்கள். இந்நிகழ்வு தரும் அழுத்தத்தில் உந்தப்படும் ஒரு இஸ்ரேலிய வீரன் தன் யந்திரத் துப்பாக்கியால் சாரமாரியாக சுட்டவாறே, நடுத்தெருவில், கட்டிடங்களிலிருந்து சீறி வரும் சினைப்பர் தோட்டாக்களிற்கு மத்தியில் சுழன்று ஆட ஆரம்பிக்கிறான். அவன் பின்னனியில், ஒரு சுவரில் இறந்த ஜனாதிபதி பஷீரின் உருவம் வரையப்பட்டிருக்கிறது. தன்னைச் சூழ்ந்து வெடிக்கும் மரணத்துடன் ஒரு உயிர் ஆடும் நடனம் எனும் இந்நிகழ்விலிருந்தே கதையின் அல்லது திரைப்படத்தின் தலைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

மனித மனம் புதைக்க விரும்பும் நினைவுகள் குறித்தும், அதற்காக மனம் செய்யக்கூடிய தந்திரங்கள் குறித்தும் உளவியல் ரீதியாக கதையில் கூறப்படும் விளக்கங்கள் ஆச்சர்யம் கொள்ள வைக்கின்றன. கதை அகதிகளின் படுகொலைகள் நோக்கி நகர்ந்தாலும் யுத்த நிகழ்வுகளில் இஸ்ரேலியத் தரப்பு விளைவித்த சேதம் குறித்து கதை அடக்கியே வாசித்திருக்கிறது.

அசர வைக்கும் சித்திரங்கள், கவித்துவமான கதை சொல்லல், உணர்வுகளை உயிர்க்க வைக்கும் வண்ணத் தெரிவுகள் என சித்திர நாவல் பிரியர்களிற்கு தரமான ஒரு வாசிப்பனுபவத்தை தரக்கூடிய படைப்பாக Waltz With Bashir சித்திர நாவல் அமைந்திருக்கிறது என்பதில் ஐயம் எதுவும் இல்லை. சித்திர நாவலைப் படிக்கும் வாய்ப்பு உடனடியாக கிடைக்காவிடிலும் திரைப்படத்தையாவது நண்பர்கள் பார்த்திட வேண்டுமென்பது என் தாழ்மையான வேண்டுகோள் ஆகும். [***]

திரைப்படத்தின் ட்ரெயிலர்

Saturday, February 27, 2010

ஷட்டர் ஐலண்ட்

யு. எஸ் மார்ஷல்களான டெடி டானியல்ஸும் [Leonardo DiCaprio], சக்கும் [Mark Ruffalo] பெரி கப்பல் ஒன்றில் ஷட்டர் தீவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஷட்டர் தீவில் அமைந்திருக்கும் குற்றவாளிகளிற்கான மனநல மருத்துவமனை ஒன்றிலிருந்து காணாமல் போய்விட்ட பெண் கைதியான[நோயாளியான] ரேச்சலின் மறைவு குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுவதே அவர்களின் நோக்கம்.

தீவை வந்தடையும் அவர்கள் மருத்துவமனையின் பிரபலமான டாக்டர் கோ[வ்]ளியை [Ben Kingsley] சந்தித்து உரையாடுகிறார்கள். டாக்டர் கோளியும் காணமல் போன ரேச்சல், தன் மூன்று குழந்தைகளையும் ஏரியில் அமிழ்த்திக் கொலை செய்தவள் எனும் தகவலை அவர்களிடம் தெரிவிக்கிறார்.

டெடி டேனியல்ஸ், சக் சகிதம் மருத்துவமனையில் தனது விசாரணைகளை ஆரம்பிக்கிறான். தொடரும் விசாரணைகளும், டெடியை சுற்றி நிகழும் நிகழ்வுகளும், அவன் தேடல்களும், ஷட்டர் தீவில் அமைந்திருக்கும் மனநல மருத்துவமனையில் மிகவும் நிழலான சங்கதிகள் இடம்பெறுகின்றன எனும் அவன் சந்தேகத்தை உறுதிப்படுத்துகின்றன.

சக கைதிகளுடான தன் விசாரணையின்போது லாடிஸ் என்பவன் குறித்து அவர்களிடம் கேள்விகளை எழுப்புகிறான் டெடி, இது குறித்து அறிய விரும்பும் சக்கிடம் தன் மனைவி மரணமாகக் காரணமாக இருந்தவன் லாடிஸ் என்பதை தெரிவிக்கிறான் டெடி……

Shutter Island திரைப்படத்தின் மிக முக்கியமான பாத்திரமான டெடி நம்புவது மேற்கூறியவற்றைத்தான். கதையின் அசர வைக்கும் இறுதித் திருப்பம் வரையில் இத்திரைப்படத்தின் இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்செஸி, திரைக்கு முன் உட்கார்ந்திருக்கும் ரசிகர்களை நம்ப வைக்க விரும்புவதும் இவற்றைத்தான். அதில் அவர் வெற்றி கண்டாரா?!

shutter-island-2010-16142-498014340டெனிஸ் லுஹென் எழுதிய நாவலை அல்லது அதனைத் தழுவி உருவாகிய சித்திர நாவலைப் படித்து அதில் மயங்கி திரைப்படத்தைக் காணச் சென்ற ரசிகர்கள், ஸ்கோர்செஸியின் ரசிகர்கள், டிகாப்ரியோவின் ரசிகர்கள், கதை+ நடிகர்+ இயக்குனர் எனும் முக்கூட்டணியின் விளைவாக உருவாகும் ஒரு திறமையான படைப்பை எதிர்பார்த்துச் சென்ற சினிமா ரசிகர்கள்: இவர்களில் முழு விருந்து உண்டு, பிராந்தி ஒரு பெக் அடித்து, பீடா போட்டு வயிற்றைத் தடவிவிடும் அதிர்ஷ்டம் கிடைத்த பாக்கியசாலிகள், டிகாப்ரியோவின் ரசிகர்கள். அடுத்து வருபவர்கள் முக்கூட்டணியின் ரசிகர்கள். ஸ்கோர்செஸியின் ரசிகர்களை திரைப்படம் முழுமையாக திருப்தி செய்யுமா என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றாகும்!!

அலைகளின் மேல் உலவும் வெண்புகாரைக் கிழித்துக் கொண்டு பெரி கப்பலானது ஷட்டர் தீவை நோக்கி வந்து கொண்டிருக்கும் போதே காட்சிகள் ரசிகர்களைக் கவர ஆரம்பித்து விடுகின்றன. அவ்வேளையில் கப்பலிலிருந்து ஒலிக்கும் ஹாரன் ஒலியே பின்னனி இசையாக மாறி மிரட்டுகிறது. டெடியின் விசாரணைகள், அவன் கண்டுபிடிக்கும் தகவல்கள், அவனின் ரகசியத் தேடல்கள் என பரபரப்பாக நகர்கிறது திரைப்படம்.

டெடி, ப்ரீன் எனும் நோயாளியை விசாரணை செய்யும் தருணத்தில், ப்ரீன் அவனிற்கு கூறும் தகவல்களால் கொதிக்க ஆரம்பிக்கும் டெடி, தன் நோட்டுப் புத்தகத்தில் பென்சிலால் கிறுக்க ஆரம்பிப்பான். அவனின் உள்ளத்தில் வெடிப்பதற்காகத் துடிக்கும் அழுத்தம் மிகுந்த அந்த வன்முறையை ஸ்கோர்செஸி, பென்சில் கிறுக்கலில் உள்ள வன்மம், மற்றும் அந்தக் கிறுக்கல் எழுப்பும் ஒலி வழியாக அசத்தும் விதத்தில் காட்டியிருப்பார்.

shutter-island-2009-16142-2039497793 இவ்வகையான சில காட்சிகளைத் தவிர டெடியின் விசாரணைக்காட்சிகளும், தேடல்களும் ரசிகர்களை தமது பிடிக்குள் வைத்துக் கொள்ள சிறிது சிரமப்படவேண்டியிருக்கிறது.

பின்பு வரும் திரைப்படத்தின் உச்சக் கட்டக் காட்சிகள் லாவகமாக ரசிகர்களை மீண்டும் தமது அணைப்பிற்குள் எடுத்துக் கொள்கின்றன. இதற்குப் பிரதான காரணம் டிகாப்ரியோவின் அசர வைக்கும் நடிப்பு.

மிகவும் கனமான, சிக்கலான பாத்திரத்தை அற்புதமாக விளையாடியிருக்கிறார் டிகாப்ரியோ. உச்சக் கட்டக் காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு இதுவரை அவர் திரையில் வழங்கியவற்றிலேயே மிகவும் சிறப்பானது என்பதை உறுதியாகச் சொல்லலாம். படத்தையே தூக்கி வைத்திருப்பது அவர்தான் என்று யாராவது கூறினால்கூட அது மிகையற்ற ஒன்றே. தன் சிஷ்யனை, பட்டை தீட்டோ தீட்டென தீட்டியிருக்கிறார் ஸ்கோர்செஸி.

டிகாப்ரியோவுடன் ஒப்பிடுகையில் பென் கிங்ஸ்லி, மார்க் ரூஃபலோ ஆகியோரின் பாத்திரங்கள் திரைப்படத்தில் அடங்கிப் போய்விடுகின்றன. இருப்பினும் மிகக் குறைந்த நேரமே படத்தில் தோன்றினாலும் டாக்டர் நேரின்ங்[Max Van Sydow], மற்றும் மனநோயாளியான ஜார்ஜ் நொய்ஸ்[Jackie Earle Haley] ஆகியோர் மனதில் இலகுவாகப் பதிகிறார்கள்.

1950களில் மனநோயாளிகள் மீது சுமத்தப்பட்ட மிருகத்தனமான சிகிச்சை முறைகளிலிருந்து அவர்களை விடுவிக்க, உளவியல் மருத்துவத்தின் நவீன முறைகளை பயன்படுத்த விரும்புபவராக முன்னிறுத்தப்படுகிறது டாக்டர் கோளியின் பாத்திரம். தந்திரமும், மென்மையான மர்மம் சூழ்ந்ததுமான ஒரு பாத்திரமாக கதையில் அறியப்படும் இம்முக்கிய பாத்திரம் திரைப்படத்தில் முழு நிறைவை அடைந்து விடவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இப்பாத்திரத்தை ஏற்றிருக்கும் பென்கிங்ஸ்லி அசரடிக்க தவறுகிறார்.

shutter-island-2010-16142-922656245 அணைக்க வேண்டிய தருணத்தில் அணைத்து, மிரட்ட வேண்டிய வேளையில் மிரட்டி, உருக்க வேண்டிய கணங்களில் உருக்கி அசத்துகிறது Robbie Robertsonன் மேற்பார்வையில் ஒலிக்கும் இசை. புயல் அடிக்கும் தீவு, இருளான, நிழலான மர்மம் உறையும் வராந்தாக்கள், அறைகள், பளீரெனப் பிரகாசிக்கும் கற்பனைக் காட்சிகள் என சிறப்பாக இருக்கிறது Robert Richardsonன் ஒளிப்பதிவு. திரைப்படத்தில் வரும் உள் அலங்காரங்கள் மிகுந்த ரசனையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஆக எஞ்சுபவர்கள் கதையை ஏற்கனவே படித்து, அந்த இறுதி திருப்பத்தை அறிந்து கொண்டு, ஸ்கோர்செஸியின் கைகளில் இக்கதை எவ்விதமாகப் பரிமாறப்படும் என்பதை ஆவலுடன் திரையில் காணச் சென்ற ரசிகர்கள். அவர்களை ஸ்கோர்செஸி ஏமாற்றி விடவில்லை. டிகாப்ரியோவின் கவர்ச்சிப் புலத்திற்குள்ளும் அவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள் [உம்- அடியேன்]

shutter-island-2010-16142-1584043848 கதையின் முடிவை அறிந்தவர்களிற்கு இயக்குனர் ஸ்கோர்செஸி வழங்குவது என்ன? டெடி டானியல்ஸ் எனும் பிரதான பாத்திரத்தை சுற்றி இருக்கும் ஏனைய பாத்திரங்களின் செயல்களும், நகர்வுகளுமே அவர்களிற்கு விருந்தாக அமைகிறது. கதையின் முடிவைத் தெரிந்து கொண்டு, டெடியைச் சூழ இருப்பவர்களின் ரியாக்‌ஷன்களை காண்பது ஒரு வேறு வகையான அனுபவம். அதில் தன் திறமையைத் தவறாது காட்டியிருக்கிறார் இயக்குனர். எனவேதான் இத்திரைப்படமானது இரு தடவைகள் பார்த்து ரசிக்க வேண்டிய படமாகிறது. முதல் தடவை கதையின் முடிவை தெரியாது படத்தைப் பார்த்தவர்கள் திரைப்படத்தை மீண்டும் காணும்போது அந்த காட்சிகள் தரும் அர்த்தம் வேறாக இருக்கும். எனவே அந்த அனுபவத்தை தவற விடாதீர்கள்!

கிழட்டுப் புலி ஸ்கோர்செஸி 16 அடிகள் பாயவில்லை ஆனால் 14 அடிகள் வரை பாய்ந்திருக்கிறது. மேலும் டிகாப்ரியோவின் அருமையான நடிப்பிற்காகவாவது எல்லா ரசிகர்களும் பார்க்க வேண்டிய படமாக இது அமைகிறது. டிகாப்ரியோ என்ன பெரிய கொம்பனா என்று நீங்கள் எண்ணியிருப்பீர்கள் எனில் இத்திரைப்படம் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ள உதவும். [***]



ட்ரெயிலர்

Monday, February 22, 2010

ஒரு நரியின் கதை


ஒரேயொரு ஊரில், ஒரு நரி தன் காதல் மனைவி பெலிசிட்டியுடன் இன்பமான வாழ்வை வாழ்ந்து வருகிறது. நரியின் தொழில் திருடுதல் என்பது எமது சிறு வயது முதலே பிரபலமானதொரு வடைக் கதை மூலம் எம் மனதில் பதிக்கப்பட்டிருக்கிறது. திருவாளர் நரியும் தன் உயிர் வாழ்தலிற்காக திருட்டுத் தொழிலைக் கன கச்சிதமாக செய்து தன் வாழ்க்கையை ஓட்டுகிறார். இவ்வேளையில் தான் கர்ப்பமுற்று இருப்பதை நரியாரிடம் தெரிவிக்கிறாள் அவர் அன்பு மனைவி பெலிசிட்டி.

நரியார் திருட்டுத் தொழிலைக் கைவிட்டு விட்டு வேறு ஏதாவது வேலையொன்றைத் தேடிக் கொள்ள வேண்டுமென அவரிடம் வேண்டுகோள் வைக்கிறாள் பெலிசிட்டி. வருடங்கள் ஓடுகின்றன. தன் திருட்டுத் தொழிலைக் கைவிட்டு, அதிக வருமானம் தராத, பத்திரிகைகளில் பத்தி எழுதும் வேலை பார்க்கிறார் நரியார்.

அவரின் மகனான ஆஷ் அவரின் எதிர்பார்புகளிற்கு ஏற்ற வகையில் இல்லை எனும் ஒரு குறை அவர் உள் மனதில் வளை தோண்டி இருக்கிறது. ஆஷும் தன் தந்தையை சற்று முறைத்துக் கொள்பவனாகவே இருக்கிறான்.

தாங்கள் தற்போது வசித்து வரும் சிறிய வளையிலிருந்து வசதியான இடமொன்றிற்கு மாற விரும்பும் நரியார், வக்கீலான தன் நண்பண் வளைக்கரடியை சந்தித்து ஒரு மரத்தை வாங்குவது குறித்துப் பேசுகிறார்.

வக்கீலான வளைக்கரடியோ அம்மரம் பொகிஸ், பன்ஸ், பீன் ஆகிய பொல்லாத மூன்று பண்ணையார்களின் பண்ணைகளின் எல்லைக்கருகில் இருப்பதைச் சுட்டிக்காட்டி அம்மரத்தை வாங்குவது நல்ல திட்டமல்ல என ஆலோசனை வழங்குகிறது. இதனால் நரியாரிற்கும், அவர் வக்கீல் வளைக்கரடியாரிற்குமிடையில் சில கர் புர் உரையாடல்கள் உருவாகின்றன. இருப்பினும் இறுதியில் அம்மரத்தையே வாங்குவது என முடிவாகிறது.

the-fantastic-mr-fox-2009-13384-1861116550 தான் வாழ்ந்து வந்த வளையை நீங்கி, தன் குடும்பத்துடன் புதிய மரத்தின் கீழுள்ள வசதியான இடமொன்றில் குடி புகுகிறார் நரியார். அழகான வீடு, ஓவியங்கள் வரையும் மனைவி, அமைதியான வாழ்க்கை என நாட்கள் நகர்கிறது. இவ்வேளையில் பெலிசிட்டியின் சகோதரனின் மகனான கிறிஸ்டோபர்சன், நரியாரின் வீட்டில் சில நாட்கள் தங்கிச் செல்வதற்காக வந்து சேர்கிறான்.

நரியாரின் வீட்டிற்கு வந்த கிறிஸ்டோபர்சனின் நடவடிக்கைகள் கலக்கலாக இருக்கின்றன. தியானம், யோகா, கராத்தே, விளையாட்டு என அதிரடிக்கிறான் அவன். இதனால் நரியாரிற்கு கிறிஸ்டோபர் மீது ஒரு தனி மரியாதை ஏற்பட்டு விடுகிறது. இது ஆஷிற்கு பொறாமையை உருவாக்கி விடுகிறது. இது போதாதென்று ஆஷின் பெண் நண்பியும் கிறிஸ்டோபரின் மீது காதல் வயப்பட்டு விடுகிறாள். இவையெல்லாம் சேர்ந்து ஆஷை கிறிஸ்டோபர் மீது எரிந்து விழ வைக்கின்றன.

இவ்வாறாக நாட்கள் நகர்கின்றன. ஆனால் நரியாரோ இரவுகளிற்காக காத்திருக்கிறார். அவர் மனதில் ஒரு மாஸ்டர் பிளான் கருக்கொண்டு இருக்கிறது. இந்த மாஸ்டர் பிளானை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக கைலி எனும் பைக்கீரியை அவர் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்.

fantastic-mr-fox-2010-13384-1761536942 இரவின் அமைதியில் வீட்டிலிருந்து யாரிற்கும் தெரியாமல் நழுவும் நரியாரும், கைலியும் முதல் இரவு பண்ணையார் பொகிஸ் அவர்களின் பண்ணையில் தடைகளைத் தாண்டிப் புகுந்து தங்கள் கைவரிசையைக் காட்டுகிறார்கள். பொகிஸின் கோழிகளை அமுக்குகிறார்கள். பின்வரும் இரவுகளில் பன்ஸின் பண்ணையில் வாத்துக்கள், பீன்ஸின் பண்ணையில் வான்கோழி, ஆப்பிள், ஆப்பிள் மது [Cider] போன்றவற்றையும் அள்ளிக் கொள்கிறார்கள்.

தன் வீட்டில் வந்து குவியும் உணவுப் பொருட்களைக் கண்டு சந்தேகம் கொள்ளும் நரியாரின் மனைவி பெலிசிட்டி, நரியாரை எச்சரிக்கிறாள். ஆனால் அவளிடமிருந்து உண்மையை மறைக்கும் நரியார், தான் புத்தக வெளியீட்டு விழாவிற்கு செல்வதாகக் கூறி தன் திருட்டுக்களைத் தொடர்கிறார். தொடரும் இரவுகளில் கிறிஸ்டோபர்சனையும் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்.

பொகிஸ், பன்ஸ், பீன் ஆகிய மூன்று பண்ணையார்களும் தங்கள் பண்ணைகளில் நடந்து வரும் திருட்டுக்களால் கொதித்துப் போயிருக்கிறார்கள். அவசரக் கூட்டமொன்றைக் கூட்டும் அவர்கள் இந்தக் கொடுமையான திருட்டுச் செயல்களிற்குப் பொறுப்பான களவாணியை போட்டுத் தள்ளுவது என முடிவெடுக்கிறார்கள்.

தங்கள் பண்ணைகளினைச் சுற்றி தேடுதல் வேட்டை நடாத்தும் பண்ணையார்கள் மரத்தின் கீழ் அமைந்திருக்கும் நரியாரின் வீட்டைக் கண்டு பிடித்து விடுகிறார்கள். புதர்களிற்குப் பின் துப்பாக்கிகளுடன் மறைந்திருக்கும் அவர்கள், நரியார் தன் வீட்டிலிருந்து வெளியே வரும் வேளையில் அவரை நோக்கிப் பலத்த துப்பாக்கிப் பிரயோகம் செய்கிறார்கள்.

பறந்து வந்த துப்பாக்கிக் குண்டுகள் நரியாரின் வாலைக் கொத்தி எடுக்கின்றன. வாலிழந்த நரியாக தன் வீட்டிற்குள் ஓடுகிறார் நரியார். தரையில் வீழ்ந்து கிடக்கும் நரியாரின் வாலை எடுத்து அதனை ஒரு கழுத்துப் பட்டி போல் அணிந்து கொள்கிறார் பண்ணையார் பீன். ஊடகங்களில் இந்த வேட்டை சூடான செய்தியாகிறது. நேரடி ஒளிபரப்புகள் ஆரம்பமாகின்றன.

fantastic-mr-fox-2010-13384-931378523 தன் வீட்டிற்குள் ஓடி ஒளிந்த நரியாரை ஒழித்துக் கட்டாமல் ஓய்வதில்லை எனும் வைராக்கியத்தோடு மரத்தின் கீழ் நிலத்தைக் கிண்ட ஆரம்பிக்கிறார்கள் பண்ணையார்கள்….. நரியாரை ஒழித்துக் கட்டுவதில் அவர்கள் வெற்றி கண்டார்களா, தன் வாலை நிலத்தில் வீழ்த்திய பண்ணையார்களை நரியார் தோற்கடித்தாரா என்பதை நீங்கள் அறிய விரும்பினால் Fantastic Mr.Fox திரைப்படத்தினைப் பாருங்கள்.

Roald Dahl என்பவர் எழுதிய சிறுவர் நாவலைத் தழுவி இந்த Stop Motion அனிமேஷன் திரைப்படத்தை முழுமையாகத் தன் பாணியில் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் Wes Anderson.

ஸ்டாப் மோஷன் அனிமேஷன் ஆனது நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் உருவாகும் அனிமேஷன் படங்களுடன் ஒப்பிடுகையில், அதன் அசைவுகளில் ஒரு நிறைவற்ற தன்மை கொண்டதாகவே தோற்றம் தரும். ஆனால் இத்திரைப்படத்தின் உண்மையான நிறைவே அந்த நிறைவற்ற தன்மையிலேயே அடங்கியிருக்கிறது என்பதை படைப்பினை முழுமையாக பார்க்கும்போது ஒருவரால் புரிந்து கொள்ள முடியும்.

உலோகங்களால் உருவாக்கப்பட்ட பொம்மை என்புகளின் மேல் மிருகங்களின் ரோமத் தோல்கள் போர்த்தி அவற்றின் அசைவுகளைப் படமாக்கியிருக்கிறார்கள். ரோமச் சிலிர்ப்பும், கண்களுமே பாத்திரங்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளை காட்டுபவையாக அமைந்திருக்கின்றன.

19187416.jpg-r_760_x-f_jpg-q_x-20091022_033317 நரியின் வாழ்க்கையை அவதானித்தால் அது மனித வாழ்க்கையை சித்தரித்திருப்பதை நாம் உணர முடியும். அதே போல் நரியாரிற்கும் கொடுமையான பண்ணையார்களிற்குமிடையில் நடக்கும் போராட்டமானது, வாழ்வதற்காக திருட வேண்டிய நிலையிலுள்ள ஒரு வர்க்கத்திற்கும், திருடப்பட்ட- வசதி படைத்த வர்க்கத்திற்குமிடையிலான ஒரு போராட்டமாகவே உருப்பெறுகிறது. இவ்வர்க்கப் போராட்டம் முடிவற்ற ஒன்று என்பதனை திரைப்படம் சூசகமாக தெரிவிப்பதில் வெற்றி காண்கிறது.

படத்தின் இறுதிக் காட்சிகளில் வரும் அந்த ஓநாய்க்கு, நரியார் பேசும் ஆங்கிலமோ, லத்தீனோ புரிவதில்லை. ரஷ்ய மொழியில்! அதனை நோக்கி சில வசனங்களை வீசுகிறார் நரியார். ஓநாய் அதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. பாட்டாளிகள் தம் முஷ்டியை இறுக்கி, தம் கைகளை உயர்த்தி சைகை செய்வது போல நரியார் ஓநாயைப் பார்த்து சைகை செய்கிறார். பனிபடர்ந்த மலைகளைப் பிண்ணனியாக கொண்டு நிற்கும் அந்த கறுத்த ஓநாய் பதிலுக்கு தானும் அதே சைகையை செய்து விட்டு கம்பீரமாக நடந்து மறைகிறது. இது படத்தின் பாட்டாளிகள் டச்.

திரைப்படத்தின் வசனங்கள், இசை என்பன மிகச் சிறப்பாக இருக்கின்றன. கதை ஓட்டத்துடன் ஆங்கில பாப் பாடல்களை ஒலிக்க விட்டிருக்கிறார் இயக்குனர். பண்ணையார் வீடுகளில் திருடப் போகும் சமயம் வரும் பின்னனி இசை எகிறிக் குதிக்கிறது. கூர்மையான, நகைச்சுவை கலந்த வசனங்கள் காட்சிகளிற்கு சுவையை அதிகரிக்கின்றன.

the-fantastic-mr-fox-2009-13384-1624721018 அனிமேஷன் ஒரு புறமிருக்க அதற்குப் பின்னனியாக வரும் காட்சிகள் மிகுந்த ரசனையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஆரம்பக் காட்சியில் ஆப்பிள் மரமொன்றில் சாய்ந்தபடியே நரியார் ஒரு ஆப்பிளை ஸ்டைலாக கடிக்க, அவரைச் சுற்றியுள்ள இடத்தையெல்லாம் அந்திச் சூரியன் தன் செங்கதிர்களால் செங்குழம்பாக அடித்துவிடும் காட்சி அருமை.

fantastic-mr-fox-2010-13384-301723013 குரல், ஒரு பாத்திரத்திற்கு எவ்விதமாக உயிரூட்டக்கூடும் என்பதற்கு மிகச் சிறப்பான சான்று நரியாரின் பாத்திரமாகும். நரியாரிற்கு குரல் வழங்கியிருப்பவர் பிரபல நடிகர் George Clooney. ஏற்றம், இறக்கம், வேகம், மென்மை, கிண்டல் என கலந்து கட்டி நரியாரை, க்ளுனியாக மாற்றி அடிக்கிறது திறமை வாய்ந்த அந்தக் கலைஞனின் குரல். பெலிசிட்டிக்கு நடிகை Meryl Streepம், வளைக்கரடிக்கு நடிகர் Bill Murrayம், காவல் கார எலிக்கு நடிகர் Williem Dafoeம் குரல் வழங்கி உயிர்ப்பித்திருக்கிறார்கள். மெரில் ஸ்டிரீப்பின் குரலில் பெலிசிட்டி ஐஸ்க்ரீமாகப் பேசுகிறார்.

அன்பான கணவனாக, தந்திரமான திருடனாக, மகனுடன் பொருதும் தந்தையாக, பண்ணையார்களை எதிர்த்துப் போராடும் போராளியாக நரியார் பாத்திரம் வெளுத்து வாங்குகிறது. நரியாரின் ட்ரேட் மார்க்கான விசிலடியும், நாக்கைச் சுருட்டி அவர் எழுப்பும் ஒலியும் கலக்கலாக இருக்கிறது.

நரியார் தனது முக்கியமான திட்டங்களை எல்லாம் பைக்கீரிக்கு விளக்கும்போது பைக்கீரியின் கண்கள் சொருகிக் கொள்ளும் தருணங்கள் அட்டகாசம். இளைய தலைமுறையின் பிரதிநிதிகளாக ஆஷும், கிறிஸ்டோபர்ஸனும் அலட்டிக் கொள்ளாமல் அசத்துகிறார்கள்.

fantastic-mr-fox-2010-13384-1654698214 படத்தின் பிரதான பாத்திரங்களைத் தவிர்த்து என மனதைக் கவர்ந்து கொண்டவர் பண்ணையார் பீனின் ஆப்பிள் மதுக் களஞ்சியத்தின் காவற்காரனாக வரும் எலியார். குறைந்த நேரமே படத்தில் வந்தாலும் செக்க சிவந்த கண்களுடன், தனது விரல்களை சொடுக்கியவாறே, படு ஸ்டைலான ஒரு நடையுடன், வில்லுக் கத்தியால் அந்த எலி செய்யும் வில்லத்தனம் மயக்குகிறது. தன் வாழ்வின் தேடல் என்ன என்பதை அறியாது, எஜமான விசுவாசத்திற்காக தன் உயிரை விடுகிறது அப்பாத்திரம். எலியாரின் உயிர் பிரியும் வேளையில் அவரிற்கும் நரியாரிற்கும் இடையில் இடம் பெறும் அந்த சிறு உரையாடல் மனதைத் தொட்டு விடுகிறது.

நரியார் திரைப்படத்தில் அணியும் செம்பழுப்பு வண்ணம் கொண்ட வெல்வெட் கோட் சூட் இயக்குனர் ஆண்டர்சனிடமும் இருக்கிறது என்றால் நம்புவீர்களா! ஆனால் அதுதான் உண்மை. தனது வழமையான பாணியிலிருந்து விலகாது [ பிரச்சினைகள் கொண்ட குடும்பம், தகராறு நிறைந்த தந்தை மகன் உறவு, இவற்றில் ஏற்படும் மாற்றங்கள்] அவர் இயக்கியிருக்கும் இந்த அனிமேஷன் திரைப்படம் ஆழமான பார்வைக்குரிய ஒன்றாக இருந்தபோதிலும், குடும்பத்துடன் ஜாலியாக நேரத்தை கழிக்க கூடியதொரு படைப்பாகவும் அமைந்து விடுவது அதன் சிறப்பம்சம். வெஸ் ஆண்டர்சன் ஒரு தந்திரமான இயக்குனர்- நரியாரைப் போலவே! [****]

ட்ரெயிலர்

Friday, February 19, 2010

பிலிப் மொரிஸின் காதலன்


ஒரினச் சேர்க்கையாளர்களின் வாழ்க்கையைக் குறித்த திரைப்படங்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே வெகுஜன சினிமா ரசிகர்களின் பார்வைக்கு முன்வைக்கப்படுகின்றன. இவ்வரிகளை எழுதும்போது என் வலிமையற்ற நினைவாற்றல் மூலம் Philadelphia, The Birdcage ஆகிய இரு திரைப்படங்களையே என்னால் மீட்டெடுக்க முடிகிறது.

பிலடெல்பியா, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஒரினச் சேர்க்கையாளன் தான் பணிபுரிந்த நிறுவனம் தனக்கெதிராக இழைத்த அநீதிக்கு எதிராகப் போராடுவதையும், அந்நோயால் பாதிக்கப்பட்ட ஒருவன் மீது சமூகம் கொண்டுள்ள பார்வையையும் நெகிழ வைக்கும் விதத்தில் கூறுகிறது.

The Birdcage, ஓரினச்சேர்க்கை தம்பதிகளின் மகன் ஒருவனின் திருண ஏற்பாடுகளின்போது நிகழும் கலாட்டாக்களை சிறந்த நகைச்சுவையுடன் திரையில் கொணர்ந்தது.

இவ்விரு திரைப்படங்களும் வெகுஜனப் பார்வையில் சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொண்ட திரைப்படங்களாகும். இருப்பினும் ஒரினச்சேர்க்கையாளன் வாழ்வு குறித்து இவை மேலோட்டமாகவே பேசுகின்றன. அவ்வகையில் I Love You Phillip Morris திரைப்படம் நகைச்சுவை, சென்டிமெண்ட் கலந்து ஒரினச் சேர்க்கையாளன் ஒருவனின் காதலிற்கான போராட்டத்தை வெகுஜனரசனை சினிமாவில் சற்று ஆழமாக காட்டுவதில் வெற்றி கண்டிருக்கிறது.

தன் அன்பு மனைவி, செல்ல மகள் என நல்லதொரு குடும்பத்திற்கு முன்னுதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான் ஸ்டீவன் ரஸ்ஸல். கார் விபத்து ஒன்றில் அதிர்ஷ்டவசமாக தப்பித்துக் கொள்ளும் ஸ்டீவன், தன் பொய் முகத்தைக் கிழித்து விட்டு தான் மனதில் விரும்பும் வாழ்வை வாழ தீர்மானம் எடுக்கிறான்.

i-love-you-phillip-morris-2010-15302-18733554 தன் குடும்பத்தைப் பிரியும் ஸ்டீவன். இதுவரை தான் ரகசியமாக மறைத்து வாழ்ந்த ஒரினச்சேர்க்கையாளன் எனும் தன் நிஜ அடையாளத்தை வெளி உலகிற்கு வெளிப்படையாக்குகிறான். எந்தக் கவலையுமின்றி ஒரினச்சேர்க்கையாளனாக தன் வாழ்வை வாழ ஆரம்பிக்கிறான்.

ஒரினச் சேர்கையாளனின் வாழ்க்கை மிகையான செலவுகள் நிறைந்தது. சொகுசான கடலோர விடுமுறைகள், விலையுயர்ந்தப் பரிசுப் பொருட்கள், பகட்டான ஆடைகள், ராஜ போக வாழ்க்கை முறை என்பவற்றை தயக்கமின்றி நாடும் ஸ்டீவனிற்கு அவன் செய்யும் வேலை மூலம் கிடைக்கும் வருமானம் இவற்றை தீர்ப்பதற்குப் போதுமானதாக இருப்பதில்லை. எனவே ஸ்டீவன் வேறு வழிகள் ஏதும் இல்லாத நிலையில் பணத்திற்காக மோசடிகளில் ஈடுபட ஆரம்பிக்கிறான்.

காப்புறுதி மோசடி, கடன் அட்டை மோசடி என மோசடிகளில் அவன் ஒர் கைதேர்ந்த கில்லாடியாகிறான். தொடரும் மோசடிகள் அவனைச் சிறையின் கதவுகளிற்குப் பின் பூட்டி வைக்கின்றன.

சிறையில் தன் வாழ்வைக் கழிக்கும் ஸ்டீவன், தற்செயலாக பிலிப் மொரிஸ் எனும் சக கைதியைக் காண நேரிடுகிறது. பிலிப் மொரிஸ் மேல் அவன் கண்கள் விழுந்த முதல் கணமே பிலிப் மொரிஸால் கவரப்படுகிறான் ஸ்டீவன். பிலிப் மொரிஸை அணுகும் ஸ்டீவன் அவனுடன் உரையாட ஆரம்பிக்கிறான்.

தன்னை ஒரு வக்கீல் என பிலிப் மொரிஸிற்கு அறிமுகம் செய்யும் ஸ்டீவன், தன் தகிடு தித்த நடவடிக்கைகளால் மொரிஸிற்கு உதவிகள் புரிந்து மொரிஸின் மனதை வெல்ல ஆரம்பிக்கிறான். இருவரிற்குமிடையில் காதல் பற்றிக் கொள்கிறது.

i-love-you-phillip-morris-2010-15302-1842613726 தன் தண்டனைக் காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியேறும் ஸ்டீவன், வக்கீல் போல் பல மோசடிகள் செய்து பிலிப் மொரிஸை சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்து விடுகிறான். இருவரும் இணைந்து ஒரு புதிய வாழ்வை ஆரம்பிக்கிறார்கள்.

ஸ்டீவன், போலி ஆவணங்களை வழங்கி ஒரு புதிய வேலையில் இணைந்து கொள்கிறான். புதிய பணியில் கிடைக்கும் ஒரு வாய்ப்பை பயன்படுத்தி அங்கும் ஒரு நிதி மோசடியில் ஈடுபட ஆரம்பிக்கிறான் ஸ்டீவன். பணம் மழையாகக் கொட்டுகிறது. பங்களா, கார், என பிலிப் மொரிஸிற்கு ஒரு கனவு வாழ்க்கையை வழங்குகிறான் ஸ்டீவன்.

ஸ்டீவனிற்கு கிடைக்கும் பணம் குறித்து அவனிடம் சந்தேகக் கேள்விகளை எழுப்புகிறான் பிலிப் மொரிஸ். பணம் தனக்குப் பிரதானமில்லை, ஸ்டீவனின் காதல்தான் முக்கியம் என்று கூறும் மொரிஸ், ஸ்டீவன் தவறாக ஏதும் செய்தால் அதனை நிறுத்தச் சொல்கிறான். ஆனால் ஸ்டீவன் அப்பாவியான பிலிப் மொரிஸை தன் புத்திசாலித்தனமான பதில்களால் சமாளித்து விடுகிறான்.

துரதிர்ஷ்டவசமாக ஸ்டீவன் செய்யும் மோசடி அம்பலப்படுத்தப்படுகிறது, இதனை அறிந்து பிலிப் மொரிஸுடன் தப்பி ஓட விரும்புகிறான் ஸ்டீவன், ஆனால் பிலிப் மொரிஸோ தன்னை ஸ்டீவன் ஏமாற்றி விட்ட ஆத்திரத்தில் அவனை விட்டு சென்று விடுகிறான். தப்பி ஓடும் ஸ்டீவனை மடக்கிப் பிடித்து சிறையில் அடைக்கிறது காவல் துறை.

i-love-you-phillip-morris-2010-15302-441727459 ஸ்டீவன் தன்னிடம் பொய்களைக் கூறி ஏமாற்றினான் எனும் காரணத்திற்காக பிலிப் மொரிஸ் அவனை வெறுக்க ஆரம்பிக்கிறான். ஆனால் ஸ்டீவனோ பிலிப் மொரிஸ் மேல் கொண்ட காதலால் சிறையிலிருந்து தப்பி வந்து அவனைக் காண, அவன் கரங்களில் கரைய ஓடி வருகிறான். தன் மனதை பிடிவாதமாக இறுக்கிக் கொள்ளும் பிலிப் மொரிஸ், ஸ்டீவனை திருப்பி அனுப்புகிறான். மீண்டும், மீண்டும் பொலிஸிடம் மாட்டிக் கொள்கிறான் ஸ்டீவன்.

இந்நிலையில் ஸ்டீவன், பிலிப் மொரிஸின் பெயரில் ஆரம்பித்த ஒரு வங்கிக் கணக்கு காரணமாக ஸ்டீவனின் மோசடியில் பிலிப் மொரிஸையும் உடந்தையாகக் கருதி அவனை மீண்டும் சிறையில் அடைக்கிறது அதிகாரம். சிறைக்கு தான் திரும்பிச் செல்வதற்கு ஸ்டீவனே காரணம் என்பதை எண்ணி மனம் உடைந்து போகும் பிலிப் மொரிஸ், ஸ்டீவனுடன் உள்ள எந்த உறவுகளையும், தொடர்புகளையும் தூக்கி எறிகிறான். ஸ்டீவன் அன்புடனும், ஏக்கத்துடனும் பிலிப் மொரிஸை தொடர்பு கொள்ள எடுக்கும் நடவடிக்கைகள் யாவும் மடிந்து போகின்றன.

நாட்கள் நகர்கின்றன, தனது சிறையறையில் தனியாக இருக்கும் பிலிப் மொரிஸை அணுகும் சக கைதி ஒருவன் ஸ்டீவன் எய்ட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டு, உயிரை விடுவதற்காக தன் வேதனையான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறான் எனும் தகவலை மொரிஸிடம் சொல்லிச் செல்கிறான். பின்பு நடந்தது என்ன…..

சிறு வயதில் பெற்ற தாயே தன்னை தத்துக் கொடுத்தாள் எனும் பாதிப்பில், தன்னை நெருங்கியிருக்கும் அன்பான உறவுகள் தன்னை விட்டு பிரிந்து செல்லக் கூடாது என்பதற்காக தன்னைச் சுற்றி பொய்களை விதைத்து, பொய்களாலான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, அவ்வாழ்க்கையில் தான் யார் என்பதையே தொலைத்து விடும் ஒருவன், காதலினால் மீட்சி அடைய முயல்வதை காமெடி, உணர்ச்சிகரமான தருணங்கள் மூலம் சிறப்பாக I Love You Phillip Morrisல் திரைப்படுத்தியிருக்கிறார்கள் இயக்குனர்கள் Glenn Ficarra & John Requa ஆகியோர்.

Steven Jay Russell எனும் நபரின் வாழ்வைத் தழுவி Steve McViker எழுதிய நூலைத் தழுவி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஸ்டீவன் மோசடிகளில் கில்லாடி. சிறையிலிருந்து தப்பித்தல் இவரின் சிறப்பம்சம் என்பதால் இவரிற்கு கூடினி எனும் பட்டப் பெயர் வந்து சேர்ந்தது.

i-love-you-phillip-morris-2010-15302-1312940598 வெகுஜனரசனையைக் குறிவைத்து திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தாலும் ஒரினச் சேர்க்கையாளரின் அந்தரங்கங்களை தயங்காது எவ்வித வக்கிரமுமின்றி அதன் அன்புடனும் காதலுடனும் படமாக்கியிருக்கிறார்கள். இருப்பினும் சில காட்சிகள் பார்வையாளர்களை அதிர்ச்சியடையவே வைக்கின்றன.

படத்தில் ஒரினச் சேர்கையாளர் ஸ்டீவன் பாத்திரத்தை Jim Carrey யும், பிலிப் மொரிஸ் பாத்திரத்தை Ewan McGregor ம் ஏற்றிருக்கிறார்கள். நம்ப முடியவில்லை இல்லையா. ஆனால் அந்தந்த வேடங்களில் அசத்தியிருக்கிறார்கள் இரு பண்பட்ட நடிகர்களும்.

நீண்ட நாட்களிற்குப் பின் ஜிம் கேரி, தன் முழு சக்தியுடனும் களத்தில் இறங்கியிருக்கிறார். பொலிஸ் துறையில் பணியாற்றுகையில் தன் நிஜமான தாயின் அடையாளத்தைக் கண்டுபிடித்து, அவரின் வீடு தேடிச் சென்று, வீட்டு வாசலில் வைத்து ஜிம் கேரி செய்யும் கூத்து அட்டகாசம்.

போலி ஆவணங்களைத் தந்து, நிறுவனமொன்றின் பொறுப்பான பதவியைக் கொத்திக்கொண்டு, அப்பதவியில் தன் குறுக்குப் புத்தியால் அவர் உயர்வு பெற்றுச் சென்று தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களை வாய் பிளக்க வைப்பது செம ஸ்டைல்.

ஒவ்வொரு முறை சிறையிலிருந்து அவர் தப்பிப்பதும், பின் மாட்டிக் கொள்வதும் காமெடிக் கதம்பம். காதல் காட்சிகளில் எவ்வித தயக்கமுமின்றி விளாசியிருக்கிறார் ஜிம். இறுதிக் காட்சிகளில் எயிட்ஸ் நோயாளியாக அவர் நடிக்கும் அமைதியான நடிப்பு சிறப்பாக இருக்கிறது. படத்தில் தான் வரும் ஒவ்வொரு தருணத்திலும் ஓய்வெடுக்காது பின்னுகிறார் ஜிம் கேரி.

i-love-you-phillip-morris-2010-15302-1591902415 ஆனால் ஜிம் கேரிக்கி, பெண்மையின் மறு உருவாய் எதிர் பின்னல் பின்னுகிறார் நடிகர் இவான் மக்கிரெகோர். பெண்களிலேயே இவ்வளவு நளினங்களைக் காணமுடியாது. தன் பெண்மை நிறைந்த உடல் மொழியால் பிரம்மிக்க வைக்கிறார் மக்கிரெகோர். ஜிம் கேரியை சீண்டும் காதலியாக, அக்கறையுடன் கடிந்து கொள்ளும் மனைவியாக! தன்னை ஸ்டீவனே ஏமாற்றி விட்டானே என கதறும் இடங்களிலும், எயிட்ஸ் நோயாளியான தன் காதலனை பார்ப்பதற்கு துடியாய், துடிக்கும் கணங்களிலும் அசத்துகிறார் மக்கிரெகோர்.

திரைக்கதையை தொய்வின்றி நகர்த்துகிறார்கள் இயக்குனர்கள். கதை சில வேளைகளில் காலத்தில் முன்னிற்கும், பின்னிற்குமாகப் பயணிக்கிறது. அதன் வழியே பார்வையாளர்களிற்கு ஆச்சர்யங்களைத் திறக்கும் உத்தியை திரைப்படத்தில் கையாண்டிருக்கிறார்கள் அவர்கள். இறுதிக் காட்சியிலும் புத்திசாலித்தனமாக இந்த உத்தியை உபயோகித்து ரசிகர்களை அசரடிக்கிறார்கள்.

ஒரினச் சேர்கையாளனை பரிதாபத்திற்குரியவனாகவோ, காமெடிக் கோமாளியாகவோ காட்டாது, அன்பிற்காகவும், காதலிற்காகவும், உறவுகளிற்காகவும் ஓடுபவனாகச் சித்தரித்திருக்கிறார்கள். அதிகாரத்தினதும், சட்டங்களினதும் நிர்வாக ஓட்டைகள் வழி பலன் தேடிக் கொள்ளும் புத்திசாலியான சட்ட விரோதியாக காட்டியிருக்கிறார்கள். இந்த நேர்மையான பார்வையே இத்திரைப்படத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது. அதன் முழுச் சுவையோடும் ரசிக்கவும் வைக்கிறது.

காதலானது எதிர் பால்களிற்கிடையில் முகிழ்ந்தாலும், ஒத்த பாலைச் சேர்ந்தவர்களிற்கிடையில் மலர்ந்தாலும் அதற்கான தேடலும், ஓட்டமும், அன்பும், உணர்வுகளின் வெளிப்பாடுகளும் வேறுபடுவதில்லை. [***]

ட்ரெயிலர்