Monday, November 23, 2009

அன்பு ததும்பும் வீட்டின் பிளாஸ்டிக் கனிகள்


பர்ட்டும்[BURT], வெரோனாவும் [Verona] ஒன்றாக வாழும் இளம் ஜோடிகள். பர்ட், வெரோனாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாலும் வெரோனா திருமணத்தில் நம்பிக்கை அற்றவளாக இருக்கிறாள். இருவரினதும் வேலைகளால் கிடைக்கும் வருமானமும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. அடிப்படை வசதிகள் குறைந்த நிலையிலேயே ஓர் வசதியற்ற வீட்டில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இருவரினதும் அன்பான வாழ்வின் மகிழ்ச்சிக் கீற்றாக வெரோனா கர்பமாகிறாள்.

தனக்கு அவசியமான வேளைகளில் தன் பெற்றோர் தனக்கு உதவுவார்கள் எனும் நம்பிக்கையிலும், பிறக்கப்போகும் தன் குழந்தைக்கு தன் பெற்றோர்களின் அரவணைப்பு கிடைக்கும் என்ற ஆசையிலும் பர்ட் தன் பெற்றோர்கள் வாழும் பகுதியிலேயே வசித்து வருகிறான். ஆனால் பர்ட்டின் பெற்றோர்கள் தாங்கள் பெல்ஜியத்திற்கு சென்று இரண்டு வருடங்கள் அங்கு வாழப்போவதாக திடீரெனத் தெரிவிக்கிறார்கள்.

எதிர்பாராத இத்தகவலால் அதிர்சியுறும் பர்ட், வெரோனா ஜோடி, தமக்கென யாரும் இல்லாத இடத்தில் இருப்பதை விட, தங்களை நேசிக்கக் கூடியவர்கள் யாரேனும் உள்ள, தங்களிற்கு பிடித்துக் கொள்ளக்கூடிய நகரொன்றில் பிரசவத்திற்கு முன்பாக குடியேறிவிட விருப்பம் கொள்கிறார்கள். இதன் பொருட்டு அமெரிக்காவின் வேறுபட்ட நகரங்களிலும், மாண்ட்ரியலிலும் வாழ்ந்து வரும் தங்கள் நண்பர்கள், உறவினர்களை சந்திக்கும் ஓர் நீண்ட பயணத்தை அவர்கள் ஆரம்பிக்கிறார்கள்…..

தங்களினதும், தங்களிற்கு பிறக்கப் போகும் பிள்ளைக்குமான சிறப்பான ஒர் எதிர்கால வாழ்வைத்தேடி ஓடும் ஓர் அன்புமிகு இளம் ஜோடியின் கதையை மென்மையுடன் நகைச்சுவை கலந்து நெகிழவைக்கும் விதத்தில் சொல்கிறது AWAY WE GO எனும் இத்திரைப்படம்.

இளம் ஜோடிகளின் பயணத்தில் வேறுபட்ட நகரங்களில் அவர்கள் சந்திக்கும் நண்பர்கள், உறவினர்களின் குடும்ப வாழ்க்கை புறத்தில் மகிழ்ச்சியும், வெற்றியுமாகக் காட்சியளித்தாலும் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஊமையான சோகமும், தீராத ஆசைகளின் ஏக்கமும், தோல்விகளின் வலியும் ஒளிந்திருப்பதை இளம் ஜோடிகள் கண்டுணர்ந்து கொள்வதை நகைச்சுவையுடன் கூறி நகர்கிறது கதை.

away-we-go-pic அவர்கள் சந்திக்கும் குடும்பங்களில் இல்லாமலிருக்கும் ஒன்றை தங்கள் வாழ்விலும் அவர்கள் இழந்து விடக்கூடாது எனும் அக்கறையும், அது தரும் பயமும் இளம் ஜோடிகளை அவர்கள் அன்பில் மேலும் இணைக்கிறது. திருமணம் எனும் பந்தம் சிலவேளைகளில் அனாவசியமான ஒன்று என்பதனையும், தாங்கள் கொண்ட அன்பின் மூலம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளல், விட்டுக்கொடுத்தல் என்பவற்றால் திருமணம் எனும் சொல்லைத்தாண்டியும் உறுதியான ஒர் உறவை அமைத்துக் கொள்ளலாம் என்பதனையும் அவர்கள் சந்திப்புக்கள் அவர்களிற்கு தெளிவாக்குகிறது.

படத்தில் வன்முறை என்பது துளியும் கிடையாது. வசனங்கள் அருமையான நகைச்சுவையுடன் பரிமாறப்படுகிறது. நடிகர்களின் இயல்பான நடிப்பு ஒர் வரப்பிரசாதம். துணைப் பாத்திரங்கள் சில நிமிடங்கள் வந்தாலும் கூட உள்ளம் கவர்கிறார்கள். அதிலும் ஹிப்பி தம்பதிகளாக வரும் ஜோடிகளின் அட்டகாசமான நடிப்பு சிறப்பாக இருக்கிறது. பர்ட் பாத்திரத்தில் கோபமே கொள்ளாத இளைஞனாக வரும் Jhon Krasinski, துறுதுறுப்பான வெரோனாவாக வரும் Maya Rudolph என்பவர்கள் அருமையான தெரிவு.

THE LIMITS OF CONTROL away-we-go-2009-16856-145443210 படத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் படம் நெடுகிலும் ஒலிக்கும் பாடல்கள். Alexis Murdoch எனும் கலைஞர் எழுதி இசையமைத்துப் பாடியுள்ள இப்பாடல்கள் மனதில் இனம்புரியாத ஒர் உணர்வையும் ஏக்கத்தையும் உருவாக்கி பார்வையாளனை உருக்குகின்றன. படத்திற்கு மென்மையான இசையமைத்திருப்பவரும் இவரே.

நீ குண்டானாலும் சரி, உன் மார்புகளின் அழகு குலைந்து போனாலும் சரி உன் பெண்ணுறுப்பை என்னால் கண்டு கொள்ள முடியும் என்ற வரிகளைக் கூட வக்கிரமாக்கிவிடாது பார்வையாளனை நெகிழவைக்க பயன்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர் Sam Mendes. அவருடைய முன்னைய படங்களான American Beauty, Revolutionary Road ஆகியவற்றில் அவர் எடுத்துக் கொண்ட கதைகள் குடும்பங்களை மையமாக கொண்டவையே. அப்படங்களில் இருந்த திரைக்கதையின் கனம், நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகர்கள் என்பவற்றிலிருந்து முற்றிலும் விலகி Dave Eggers, Vendela Vida ஆகியவர்கள் எழுதிய மென்மையான திரைக்கதையை அதிகம் அறிமுகமில்லாத நடிகர்களுடன் அவர் படைத்திருக்கிறார். அவரின் இத்திரைப்படம் ரசிகர்களிற்கு ஒர் புத்துணர்வை வழங்குகிறது. கட்டிடமொன்றின் கண்ணாடிகளில் ஒரு விமானம் நீலக்கடலில் டால்பின்கள் போல் நீந்திச் செல்வது கவிதை.

தங்கள் பயணத்தின் முடிவாக தங்களிற்குரிய ஒர் வீட்டை கண்டடைகிறார்கள் இளம் ஜோடிகள். வெறுமையாக இருக்கும் அவ்வீட்டினை தங்கள் அன்பால் அவர்கள் நிச்சயம் நிரப்புவார்கள். அன்பைத் தவிர்த்து வேறு பல செல்வங்களினாலும் நிரம்பியிருக்கும் வீடு வெறும் கூடுதான். அன்பு ததும்பும் வீட்டின் கண்ணீர் கூட அன்பின் சுவையைச் சார்ந்தே இருக்கிறது. பர்ட், வெரோனாவின் புதிய வீட்டின் முன்பாக நிற்கும் செடியில் தொங்குபவை பிளாஸ்டிக் கனிகளே என்றாலும் அவை அன்பால் விளைந்தவையாகவே இருக்கின்றன. [***]

ட்ரெயிலர்

Alexis Murdochன் அற்புதமான பாடல் கண்டிப்பாக கேளுங்கள்


Thursday, November 19, 2009

ஒரு Gகோலும் தென்னாபிரிக்காவிற்கு சில டிக்கட்டுக்களும்


நான் வீடு திரும்பிக் கொண்டிருந்த, களைப்பால் நிரம்பிய நிலக்கீழ் ரயில் Saint Michel ரயில் நிலையத்தில் தரித்து நின்றபோது பிளாட்பாரத்தில் ரயிலின் வருகைக்காக காத்து நின்றவர்கள் கும்பலாக ஏறி பெட்டியை நிறைத்தார்கள்.

ஏறியவர்களின் உடைகளைப் பார்த்ததும்தான் அடடே இன்றிரவு[18/11/2009] பிரான்ஸ்- அயர்லாந்து நாடுகளிற்கிடையிலான கால்பந்து மேட்ச் என்பது என் உணர்வில் விழித்தது. இன்றிரவு நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியே தென்னாபிரிக்காவில் 2010ல் நடைபெறும் உலக கிண்ணக் கால்பந்து போட்டிக்கு தெரிவாகும் என்பதே இந்த ஆட்டத்தின் சிறப்பு.

14/11/2009 அன்று அயர்லாந்தில் இடம்பெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அணி ஒரு கோல் போட்டு ஈட்டியிருந்த வெற்றி, கடந்தகாலங்களில் பிரான்ஸ் அணி சந்தித்து வந்திருந்த தோல்விகளின் வரலாற்றை அந்த அணியின் ஆதரவாளர்களிடமிருந்து சற்றே மறக்கச் செய்திருந்தது. பெரும்பாலான பிரான்ஸ் அணியின் ஆதரவாளர்கள் இம்முறையும் வெற்றி எங்கள் அணிக்கே என்று உள்ளூர நம்பினார்கள்.

அயர்லாந்தின் கால்பந்து அணியானது பிரான்ஸ் அணியுடன் ஒப்பிடும் போது ஆட்ட உத்திகளில் அது தேர்ந்த ஒர் அணி கிடையாது என்றே கூறப்பட்டது. அயர்லாந்து அணியின் வீரர்களும் பந்தா ஒட்டிக் கொள்ளா எளிமையுடன் தெரிந்தார்கள். இரவு நடக்கவிருக்கும் கால்பந்து ஆட்டம் பாரிசின் புகழ் பெற்ற STADE DE FRANCE விளையாட்டரங்கில் நடக்கவிருப்பதால் பிரான்ஸ் அணிக்கு அதன் ஆதரவாளர்களிடம் இருந்து கிடைக்கும் இதயபூர்வமான ஆதரவுக் கூச்சல்களே அதனை வெற்றிக்கு இட்டுச் செல்ல போதுமானதாக இருக்கும் என்றும் ரகசியமாக நம்பப்பட்டது.

ரயில் பெட்டிகளில் ஏறிய இரு அணிகளின் ஆதரவாளர்களினதும் களிப்பும், உற்சாகமும் ரயில் பெட்டிகளில் இருந்தவர்களில் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. வேலைக்களைப்பின் மரணத்திலிருந்து உயிர்பெற்ற சிறு புன்னகைகள் ரயில் பெட்டிக்குள் கண் சிமிட்ட ஆரம்பித்தன. ரயில் பெட்டியின் உள்ளே கூரையிலும், தரையிலும் தாளம் போட்டு ஆதரவாளர்கள் பாடிய பாடல்களும், அவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்ட கிண்டல்களும் அந்த தருணத்தை பாரம் நீக்கின.

நான் என் தரிப்பில் ரயிலை விட்டு கீழிறங்கி, ரயில் நிலையத்தை விட்டு வெளியேறினேன். வெளியே இலையுதிர் காலத்தின் ரகசியங்கள் நிறைந்த இரவு ரம்யம் காட்டியது. தெருவில் இருந்த உணவு விடுதியொன்றில் பொருத்தப்பட்டிருந்த ராட்சத தொலைக்காட்சித் திரையில் அல்ஜீரியாவிற்கும், எகிப்திற்குமிடையிலான கால்பந்தாட்டப் போட்டி ஒளிபரப்பாகி கொண்டிருக்க, உணவு விடுதியை அல்ஜீரிய இளம் சமுதாயத்தின் பிரதிநிதிகள் ஆக்கிரமித்திருந்தனர். விடுதிக்கு வெளியே நின்றபடியே சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த அல்ஜீரிய இளம் அழகொன்றை ரசித்தவாறே நான் வீடு நோக்கி நடந்தேன்.

வீட்டில் தொலைக்காட்சியை நான் போட்ட போது அதில் மாலைச் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தன. அல்ஜீரிய கால்பந்தாட்ட அணியானது எகிப்து அணியை வென்றது எனும் முடிவு அதில் அறிவிக்கப்பட்டது. இவ்வெற்றி மூலம் தென்னாபிரிக்காவில் நடைபெறவிருக்கும் உலக கிண்ணப் போட்டிக்கு அல்ஜீரிய அணி தெரிவாகியது.

பல கிலோ மீற்றர்களிற்கு அப்பால் இருக்கும் அல்ஜீரியாவின் வெற்றியின் உவகை நிறைந்த குரல்கள் தெருக்களிலும், அருகாமைக் கட்டிடங்களிலும் ஒலிக்க ஆரம்பித்தன. அல்ஜீரிய இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கார் ஹாரன்களை ஒலிக்க விட்டு இரவின் மெளனத்தைச் சீண்டினார்கள்.

வழமையான காலநிலை அறிவிப்பு, விளம்பரங்கள், எந்த அணிக்கு வெற்றி என முன்கூறும் அலசல்களைக் கடந்து தொலைக்காட்சியில் பிரான்ஸ்- அயர்லாந்து மேட்ச் ஒளிபரப்பாக ஆரம்பித்தது. விளையாட்டரங்கின் பெரும்பகுதியை பிரான்ஸ் அணியின் ஆதரவாளர்கள் நீலமாக ஆக்கிரமித்திருந்தார்கள். அயர்லாந்து ஆதரவாளர்களோ மைதானத்தின் புல்தரைக்கு தங்கள் பச்சை வண்ணத்தினால் தூதனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

69751_franceune ஆட்டத்தின் ஆரம்பத்தில் பந்து பிரான்ஸ் அணியிடம் சற்று அதிகமாக இருந்ததாகத் தெரிந்தது. ஆனால் ஆட்டம் மாறியது. உத்தியில் தேர்ந்த பிரான்ஸ் அணிக்கு செல்லும் பந்துகளை எல்லாம் ஓடி ஓடிச் சென்று பறித்தெடுத்தது அயர்லாந்து அணி. ஒர் கட்டத்தில் பிரான்ஸ் அணிக்கு பந்தே கிடைக்காதது போன்ற ஓர் பிரமை தொலைக்காட்சியில் மெல்ல எட்டிப்பார்த்தது.

33வது நிமிடத்தில் அயர்லாந்து அணியைச் சேர்ந்த வீரரான KEAN போட்ட அற்புதமான கோல், இரு மேட்ச் ஒப்பீட்டில் ஆட்டத்தை சமநிலைக்கு இட்டு வந்தது. அரங்கின் பச்சை அதிர்ந்தது, பாடியது, மகிழ்ந்தது. நம்பிக்கை துளிராக விரிந்தது. பிரான்ஸோ, அயர்லாந்தோ எந்த அணி தென்னாபிரிக்காவிற்கு செல்ல விரும்பினாலும் குறைந்தது ஒரு கோலாவது போட்டேயாக வேண்டிய நிலை. ஆட்டத்தின் முதல் பாதி எந்த வித கோல்களும் இன்றி முடிந்தது. பிரான்ஸ் அணியின் கோல் கீப்பர் Llorisன் அபாரமான திறமையே இதற்கு மூலகாரணம் என்பதே உண்மை.

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் பிரான்ஸ் அணிக்கு சற்று தெம்பு பிறந்திருந்தது. இரண்டாம் பாதியின் பின்பான ஆட்ட நீட்டிப்பில் 104வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் காப்டன் Thierry Henry வழங்கிய பந்தை தன் தலையால் தட்டி கோல் ஒன்றைப் போட்டார் William Gallas.

விளையாட்டரங்கமே வெடித்தது, மனிதர்கள் பிரான்ஸ் நாட்டின் மூவண்ணக் கொடிகளாக மாறிப்போனார்கள், நீலக்கடலின் அலைகள் போல் கொடிகள் அசைந்தன. பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் ஸ்பான்சர்கள் மனத்தில் ஷாம்பெய்ன் மழையாகப் பொழிந்தது. பிரான்ஸ் அணியின் வீரர்கள் வெற்றிக்களிப்பில் மிதந்தார்கள், மைதானத்தைச் சுற்றிப் பறந்தார்கள். இந்தக் களிப்பில் அயர்லாந்து அணியினர் தங்கள் கைகளைத் தொட்டுக் காட்டிக் கொண்டிருந்த அந்த சைகையை ஒரு கணம் எல்லாரும் மறந்திருந்தார்கள்.

1258633789 தன்னைக் கடந்து செல்லவிருந்த அந்தப் பந்தை Thierry Henry வளைத்து William Gallasஇடம் அனுப்பி வைத்த போது அவர் கால்கள் மட்டுமல்லாது அவரின் கைகளின் கறையும் அப்பந்தில் சேர்ந்தே பதிந்திருந்தது. பந்தை ஹென்ரி கைகளாலும் விளையாடினார் என்ற அயர்லாந்து அணியினரின் கூச்சல் தோற்றுப் போனது. போட்டியின் நடுவர், Gallas போட்ட கோலை உறுதி செய்தபடியால் கொண்டாட்டம் தொடர்ந்தது. ஆட்டம் முடிந்தபோது பிரான்ஸ் உலககிண்ணப் போட்டிகளிற்கு தெரிவாகி இருந்தது.

அயர்லாந்து அணியின் கண்ணியம் போற்றத்தக்கது. உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தும் இந்தப் போட்டியைப் பார்த்திருக்ககூடிய எந்த ஓர் உண்மையான கால்பந்தாட்ட ரசிகனிற்கும் உண்மையான வெற்றி யாரிற்கு கிடைத்திருக்க வேண்டும் என்பது தெரியும். போட்டியின் பின் அயர்லாந்தின் வீரர்களைப் பார்த்தபோது பெருமையாக உணர முடிந்தது.

ஆட்டம் முடிந்து மைதானத்தைச் சுற்றி ஓடி பிரான்ஸ் அணியினர் தங்கள் ஆதரவாளர்களிற்கு நன்றி செலுத்திக் கொண்டிருந்தார்கள். அம்மைதானத்தில் நடந்து சென்று கொண்டிருந்த Thierry Henryயின் மீது தொலைக்காட்சி கமெராவின் பார்வை வீழ்ந்த ஒவ்வொரு கணமும் அவர் தலை குனிந்தபடியே நடந்து சென்று கொண்டிருந்தார்.

“கை பட்டது வாஸ்தவம்தான் ஆனால் நான் நடுவரில்லை” இது ஹென்ரி ஊடகவியலாளர்களிற்குச் சொன்னது. அன்பின் ஹென்ரி, உலகக் கிண்ணப் போட்டிகளிற்காக நீங்கள் தென்னாபிரிக்காவில் சென்று இறங்கும்போது உங்கள் தோள்களின் பின்னால் சற்றே திரும்பிப் பாருங்கள், ஏனெனில் உண்மையான விளையாட்டு வீரனொருவனின் அவமானம் அங்கே உங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும்.

பார்க்க விரும்பினால்

Monday, November 16, 2009

அகச்சிறையின் இசை

ஆண்ட்ரே பிலிப்போவின் கரங்கள் நடனமிடும் ஒர் இறகைப்போல் காற்றில் அசைகின்றன. அவன் உள்ளம் அரங்கில் வழியும் இசையின் உன்னதத்தில் சங்கமித்து பயணிக்கிறது. மேடையில் இசைத்துக் கொண்டிருக்கும் இசைக்குழுவினை தானே அற்புதமாக வழிநடாத்திக் கொண்டிருப்பதாக தன்னை மறக்கிறான் ஆண்ட்ரே....

முப்பது வருடங்களின் முன்பு மொஸ்கோவின் பிரபலமான BOLCHOI கலையரங்கின் இசைக்குழுவினை வழி நடாத்துபவனாக[Orchestra Conductor] இருந்தவன் ஆண்ட்ரே. ரஷ்ய இசைமேதையான TCHAIKOVSKIன் இசை வடிவங்களை தன் இசைக்குழுவைக்கொண்டு உள்ளங்கள் உருகி வழியும் வகையில் இசைக்க செய்வதில் பிரபலமாக இருந்தவன். அவனுடைய இசைக்குழுவில் பங்குவகித்த பெரும்பாலான கலைஞர்கள் யூத இனத்தை சேர்ந்தவர்கள்.

ஆண்ட்ரேயின் இசைக்குழுவிலிருந்த யூத இனக்கலைஞர்களை அவன் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று LEONOID BREJNEV [சோவியத் ஒன்றியத்தின்அரசியல் தலைவர்-1964/1982] விடுத்த அதிகாரமான வேண்டுகோளை ஆண்ட்ரே நிராகரித்ததன் காரணமாக அவன் வகித்து வந்த பதவியிலிருந்து அவன் தூக்கி எறியப்படுகிறான் அவன் இசைக்குழுவும் அவனுடன் சேர்த்து வெளியேற்றப்படுகிறது.

ஆண்ட்ரேயின் வாழ்வும், அவனுடைய இசைக்குழுவின் கலைஞர்களுடைய வாழ்வும் இசையைத் தொலைத்துவிட்டு சாதாரண வாழ்வின் வேறுவகையான சாத்தியங்களை கண்டுகொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது.

தான் இசைக்குழுவை வழி நடாத்துபவனாக பணிபுரிந்த புகழ்பெற்ற பொல்ச்சொய் கலையரங்கிலேயே ஒர் துப்பரவுத் தொழிலாளியாக பணியாற்ற வேண்டிய நிலைக்கு வந்து விடுகிறான் ஆண்ட்ரே. மீண்டும் தனக்கு ஒர் வாய்ப்புத்தரும்படி அவன் வேண்டும் போதெல்லாம் அவன் வேண்டுகோள் தட்டிக் கழிக்கப்படுகிறது. அவமானம் தன்னுள் ஊறிய நிலையில் ஒதுக்கப்பட்டவனாக தன் வாழ்க்கையை தொடர்கிறான் ஆண்ட்ரே.

le-concert-2009-18222-1779609275 ஆண்ட்ரே கலையரங்கை சுத்தம் செய்யும் வேளைகளில் அங்கு இடம்பெறும் இசை நிகழ்ச்சிகளின் ஒத்திகைகளை ரகசியமாக ரசிக்கிறான். அந்த இசைக்குழுக்களையும் அவை இசைக்கும் இசையையும் தானே வழிநாடாத்துவதாக அவன் மனம் அவனைக் கற்பனையில் சுகம் காணச் செய்கிறது.

ஆண்ட்ரே கலையரங்கினை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடாது இசைக்கனவுகளில் லயித்திருப்பதைக் கண்டுபிடித்துவிடும் கலையரங்கின் இயக்குனர் அவனைக் கடுமையாகக் கண்டிக்கிறார். உடனடியாக தன் அலுவலகத்தை ஒழுங்கான வகையில் சுத்தம் செய்யும்படி ஆண்ட்ரேயிற்கு உத்தரவு இட்டுவிட்டு வெளியேறுகிறார் அவர்.

மறுப்பேதும் பேசாது இயக்குனரின் அலுவலகத்தை சுத்தம் செய்ய ஆரம்பிக்கிறான் ஆண்ட்ரே. இவ்வேளையில் இயக்குனரிற்கு ஒர் தொலைநகல் வந்து சேர்கிறது. இயக்குனர் அங்கு இல்லை எனும் தைரியத்தில் அத்தொலைநகலைப் படிக்க ஆரம்பிக்கிறான் ஆண்ட்ரே. பாரிஸின் புகழ்பெற்ற சாத்துலே கலையரங்கிலிருந்து [Théatre du Chatelet] வந்திருக்கும் தொலைநகல் அது என்பதை அவன் அறிந்து கொள்கிறான்.

லாஸ் ஏஞ்சல்ஸ் பில்ஹார்மொனிக் இசைக்குழு தங்கள் கலையரங்கில் நிகழ்த்தவிருந்த இசைநிகழ்ச்சியை ரத்து செய்து விட்டதால் இன்னமும் இருவாரங்களிற்குள் ஒர் இசைநிகழ்ச்சியை பொல்ச்சொய் கலையரங்கின் இசைக்குழு பாரிஸில் நடாத்தி தர முடியுமா எனும் கேள்வியுடன் அந்த தொலைநகலை அனுப்பி வைத்திருக்கிறார் சாத்துலே கலையரங்கின் இயக்குனர் துப்ளேசி.

தொலைநகலைப் படித்து முடிக்கும் ஆண்ட்ரே அதனை தன் சட்டைப்பையினுள் வைத்துக்கொள்கிறான். பொல்ச்சொய் கலையரங்கின் இயக்குனரின் கணணியிலிருந்து அத்தொலைநகலின் மின்னஞ்சல் வடிவத்தையும் அவன் அழித்து விடுகிறான். அவன் மனதில் ஒர் திட்டத்தை உருவாக்க ஆரம்பிக்கிறான் ஆண்ட்ரே.

le-concert-2009-18222-2110179862 கலையரங்கில் தன் வேலை முடிந்ததும் தன் நண்பன் ஷாஷாவைச் சென்று சந்திக்கிறான் ஆண்ட்ரே. ஷாஷா ஆண்ட்ரேயின் இசைக்குழுவில் ஒர் இசைக்கலைஞனாக இருந்தவன். தற்போது ஒர் ஆம்பூலன்ஸ் சாரதியாக பணியாற்றுகிறான் ஷாஷா.

கலையரங்க இயக்குனரின் அலுவலகத்திலிருந்து தான் அபகரித்து வந்த தொலைநகலை ஷாஷாவிற்கு காட்டும் ஆண்ட்ரே, கலையரங்கின் சோப்ளாங்கி இசைக்குழுவிற்கு பதிலாக தாம் பாரிஸ் செல்கிறோம் என்கிறான். ஆண்ட்ரேயிற்கு பித்து முற்றி விட்டதோ என்பதைபோல் அவனை நோக்குகிறான் ஷாஷா.

ஆண்ட்ரேயும், ஷாஷாவும் தங்கள் இசைக்குழுவின் நிர்வாகியாக முன்பு பணிபுரிந்த இவானைச் சென்று சந்திக்கிறார்கள்.

இவான் மொஸ்கோ கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிவேர்களில் ஒருவன். தங்கள் வாழ்க்கை இந்நிலைக்கு வர இவானும் ஒர் வகையில் காரணம் என்று அவனோடு சூடாக வாதிடும் ஆண்ட்ரேயும், ஷாஷாவும் இவானை இசைக்குழுவின் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய சம்மதிக்க வைத்துவிடுகிறார்கள்.

கேட்பவர்கள் எல்லாரையும் அவர்கள் மரணம்வரை சிரிக்க வைக்கும் தன் அட்டகாசமான பிரெஞ்சுமொழியில் சாத்துலே கலையரங்கை தொடர்பு கொள்ளும் இவான், தன்னை பொல்ச்சொய் கலையரங்கின் இயக்குனராக அறிமுகம் செய்து கொள்கிறான். தங்கள் இசைக்குழு பாரிஸில் இசைநிகழ்ச்சியை நடாத்துவதற்கான நிபந்தனைகளை அவர்களிடம் கண்டிப்பான தொனியில் விளக்கும் இவான், சாத்துலே கலையரங்கம் தன்னை தொடர்பு கொள்வதற்காக தன் கைத்தொலைபேசி இலக்கத்தையும் அவர்களிற்கு வழங்குகிறான்.

le-concert-2009-18222-651423408 இவானுடனான சந்திப்பின் பின் ஆண்ட்ரேயும், ஷாஷாவும் சிதறிப்போய்விட்ட தங்கள் இசைக்குழுவின் கலைஞர்களை ஒன்று கூட்டும் முயற்சியில் இறங்குகிறார்கள்.

அதில் பெரும்பாலான இசைக்கலைஞர்கள் பலவருடங்களாக இசைக்கருவிகளை தொட்டதில்லை. காலத்தின் நடையில் அவர்கள் தங்கள் இசைக்கருவிகளையும், இசைநிகழ்ச்சியின்போது அணியும் அழகான ஆடைகளையும் என யாவற்றையும் இழந்தவர்களாக இருக்கிறார்கள்.

இசைக்கலைஞர்கள் எனும் நிலையிலிருந்து பலவிதமான மாற்றங்களை நியாயமற்ற புறக்கணிப்பால் சந்தித்துவிட்ட அக்கலைஞர்களை பாரிஸ் இசைநிகழ்ச்சியில் கலந்துகொள்ள சம்மதிக்க வைக்கிறார்கள் நண்பர்களிருவரும்.

இவானின் நிபந்தனைகளை வேறுவழியின்றி ஏற்றுக்கொள்ளும் சாத்துலே கலையரங்கம், பொல்ச்சொய் இசைக்குழு என்ன இசை நிகழ்சியை பாரிஸில் வழங்கப்போகிறது என்பதை அறிய விரும்புகிறது.

கடந்த முப்பது வருடங்களாக தன் ஆன்மாவினுள்ளே என்றும் தான் இசைத்துக் கொண்டிருக்கும் சாய்க்கோவ்ஸ்கியின் Violin Concerto எனும் இசைவடிவை இசைக்கப் போவதாகக் தெரிவிக்கிறான் ஆண்ட்ரே. அத்துடன் அந்த இசைவடிவில் இடம்பெறும் பிரதான வாத்தியமான வயலினை இசைப்பதற்கு புகழ்பெற்ற இளம் பிரெஞ்சுக் கலைஞியான ஆன் மேரி ஜாக்கே மட்டுமே தனக்கு வேண்டும் என்பதையும் அறியத்தருகிறான். சாத்துலே கலையரங்கம் ஆன் மேரியை ஒப்பந்தம் செய்யத்தவறும் நிலையில் தன்னால் இந்த இசைநிகழ்ச்சியை நடாத்த முடியாது என்பதையும் ஆண்ட்ரே தெளிவாக்குகிறான்.

பிரபலமான வயலின் இசைக்கலைஞியான ஆன் மேரி, பெற்றோர்களற்ற ஒர் அனாதை. அவளை மிகச் சிரத்தையுடன் வளர்தெடுத்து அவள் இசைத் தொழிலையும் நிர்வகித்து வருகிறாள் கில்லென் எனும் பெண்மணி. தன் பெற்றோர்கள் குறித்து ஆன் மேரி அறிந்து கொள்ள விரும்பினாலும் அவர்கள் சம்பந்தமான எந்த தகவல்களையும் அவளால் பெற்றுக்கொள்ள இயலாமலிருக்கிறது.

le-concert-2009-18222-1635666421 தான் வழங்கும் இசைநிகழ்ச்சிகளில் அவள் இசைக்கும் இசையின் மூலமாக தன் பெற்றோர்களின் அரவணைப்பை கண்டடைய வேண்டும் என மனதில் ஏங்குபவள் ஆன் மேரி. சாய்க்கோவ்ஸ்கியின் இசைவடிவங்களை தன் வயலினில் இசைப்பதற்கு தயக்கம் கொண்டவளாகவும் அவள் இருக்கிறாள்.

சாத்துலே கலையரங்கம் அவளை தொடர்பு கொண்டதை அறியும் ஆன் மேரி இசைநிகழ்ச்சியை வழங்குவது ஆண்ட்ரே பிலிப்போவ், மற்றும் பொல்ச்சொய் இசைக்குழு என்பதால் அதில் கலந்து கொள்ள சம்மதிக்கிறாள்.

மொஸ்கோவில் உருவாகும் பல சிக்கல்களை சாமாளித்து பாரிஸ் வந்து சேர்கிறது ஆண்ட்ரேயின் பொல்ச்சொய் இசைக்குழு. தாங்கள் தங்கப் போகும் விடுதியை வந்தடைந்ததும் தங்களிற்கு உடனடியாக முன்பணம் வேண்டும் எனத் தகராறு செய்கிறார்கள் இசைக்குழுவின் கலைஞர்கள். அவர்களிற்கு முன்பணம் வழங்கப்பட பாரிஸின் இரவினுள் கலந்து போய்விடுகிறார்கள் அவர்கள்.

பாரிஸிற்கு இசைக்குழு வந்ததிலிருந்து எந்த ஒத்திகையுமே நடைபெறவில்லை என்பதால் கோபம் கொள்ளும் சாத்துலே கலையரங்கின் இயக்குனர் துப்ளேசி ஆண்ட்ரேயுடன் சினந்து கொள்கிறார். இசைக்கலைஞர்கள் கலையரங்கிற்கு சமூகமளிக்காவிடில் இசைநிகழ்ச்சியையே தான் ரத்து செய்வேன் என மிரட்டுகிறார். ஷாஷா அவரை சாந்தப்படுத்துகிறான்.

வயலின் கலைஞர்கள் நிரம்பி வழியும் பாரிஸில் தன்னை மட்டும் சிறப்பாக ஆண்ட்ரே ஏன் தெரிவு செய்தான் என்பதை அறிய விரும்பும் ஆன் மேரி அவனை இரவு உணவு விருந்துக்கு அழைக்கிறாள். அழகான ஒர் உணவு விடுதியில் சந்தித்துக்கொள்கிறார்கள் இருவரும். ஆனின் கேள்விகளிற்கு பதில் அளிக்க ஆரம்பிக்கிறான் ஆண்ட்ரே. முப்பது வருடங்களின் முன் தன் இசைக்குழுவில் வயலின் வாசிப்பவளாக இருந்த லியா எனும் பெண்பற்றிக் கூற ஆரம்பிக்கிறான் அவன்.

le-concert-2009-18222-1849931152 ஆண்ட்ரேயின் வலி நிறைந்த சொற்களை கேட்கும் ஆன் மேரி, ஆண்ட்ரேக்கு தேவையானவள் லியாதான் தானில்லை என்கிறாள். ஓர் மருத்துவனைப் பார்த்து ஆண்ட்ரே அவனைக் குணப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை தருகிறாள். ஆண்ட்ரேயின் இசை நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்பதனை ஆண்ட்ரேக்கு திட்டமாக அறிவித்துவிட்டு உணவு விடுதியை விட்டு வெளியேறுகிறாள் அவள்.

பல வருடங்களாக மது அருந்தும் பழக்கத்தை நிறுத்தியிருந்த ஆண்ட்ரே அன்று மீண்டும் மது அருந்த ஆரம்பிக்கிறான். வோட்கா மது அவன் உடலில் ஏற ஏற, தனியே அமர்ந்திருக்கும் ஆண்ட்ரேயின் விழிகளில் அவன் உள்ளத்தின் வலிகள் இசைக்கும் இசை கண்ணீராக வழிகிறது…

பாரிஸ் நகரில் எங்கென்று தெரியாது ஓடிப்போய்விட்ட பொல்ச்சொய் இசைக்கலைஞர்கள், இசைநிகழ்வில் இணைய மறுத்து விட்ட ஆன் மேரி, இசை நிகழ்ச்சியை ரத்து செய்வதாக மிரட்டும் துப்ளேசி, பின்பு எவ்வாறுதான் அந்த அற்புதமான இசை நிகழ்ச்சி நடந்தது என்பதை நீங்கள் அறிய விரும்பினால் Le Concert எனும் இந்தப் பிரெஞ்சுத் திரைப்படத்தைப் பாருங்கள்.

முப்பது வருடங்களாக ஒடுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்ட ஒர் இசைக்கலைஞனின் உள்ளத்தில் சிறைப்பட்டுக் கிடந்தவற்றின் விடுதலையையும், தன் அடையாளத்தை தேடிக் கொண்டிருக்கும் ஒர் இசைக்கலைஞியின் தேடலையும் இசையின் மூலம் ஒரே மேடையில் இணையவைக்கிறது திரைப்படத்தின் கதை.

படத்தின் பெரும்பகுதியை சிலாவிக் மக்களின் அலட்டிக் கொள்ளாத வாழ்க்கை முறையினால் உருவாகும் நகைச்சுவை ஆக்கிரமித்துக் கொண்டாலும் பின்பு கதையில் இணையும் ஆன் மேரி பற்றிய மர்மம் கதையைக் கனமாக்குகிறது.

le-concert-2009-18222-480178255 திரைப்படத்தின் முற்பாதியில் மொஸ்கோவில் சிதறிக்கிடந்த இசைக்குழுவை மீண்டும் ஒன்று சேர்ப்பதற்கும், அவர்களை பாரிஸ் அழைத்து வருவதற்கும் நடைபெறும் தகிடுதத்தங்கள் சிரிப்போ சிரிப்பு. அதிலும் இசைகுழு கலைஞர்களிற்கு விமானநிலையத்தில் வைத்தே போலிப் பாஸ்போர்ட்டுகளையும், விசாக்களையும் வழங்கும் அந்தக் காட்சி கொஞ்சம் ஓவர் என்றாலும் சிரிப்பை பார்வையாளர்களிடம் வஞ்சகமின்றி அள்ளுகிறது. படத்தின் பிற்பாதி மனதை நெகிழ வைக்கும் உணர்ச்சிகரமான தருணங்களால் பார்வையாளனை ஆக்கிரமிக்கிறது.

தன் மென்மையான நடிப்பால் மனம் கவரும் ஆண்ட்ரே(Alexi Guskov), மலைக்கரடிபோல் தோற்றமளிக்கும் குழந்தை மனம் கொண்ட ஷாஷா(Dimitri Nazarov), உச்சக் கட்ட இசைநிகழ்ச்சியின்போது தன் கண்களாலும், முகத்தில் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளாலும் அசர வைக்கும் ஆன் மேரி(Mélanie Laurent), படபட பட்டாசாக வெடிக்கும் துப்ளேசி(François Berléand) என பாத்திரங்களில் பெரும்பான்மையானோர் தங்கள் திறமையை அற்புதமாக நிரூபித்தாலும் எல்லாரையும் மீறி உள்ளத்தை அள்ளுபவர் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிவேரான இவான்(Valeri Barinov).

மொஸ்கோவில் இடம்பெறும் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டங்களிற்கு காசு கொடுத்து ஆட்களைச் சேர்த்தல், ஆளை அடித்து விழுத்தும் அட்டகாசமான பிரெஞ்சு உச்சரிப்பு, உலகை மாற்றியமைக்கப் போகும் கம்யூனிஸ்ட் கட்சி ஆவணங்களை!!! பாரிஸில் கம்யூனிஸ்ட் காம்ரேடிடம் கையளித்தல், உச்சக்கட்ட இசைநிகழ்வின்போது புதுமை ஒன்றை நிகழ்த்தச் சொல்லி கடவுளிடம் சவால் விடல், பாரிஸ் உணவு விடுதியில் இடுப்பு நடனம் பார்த்து ஏமாறுதல் என அவர் வரும் காட்சிகளை எல்லாம் சிரிப்பால் அதிரவைக்கிறார் அவர். [நேரில் அவரைக் கண்டால் அவரை இறுக அணைத்து அவர் கன்னத்தில் ஒர் முத்தம் வைப்பதாக நான் தீர்மானித்திருக்கிறேன்.]

le-concert-2009-18222-103395645 திரைப்படமானது இசைநிகழ்ச்சியை மையமாகக் கொண்டாலும் பார்வையாளனைக் கடைசித்தருணம்வரை ஏங்க வைக்கிறார் இசையமைப்பாளர் Armand Amar. ஏங்கிக்கிடந்த ரசிகனிற்கு இறுதியில் அவர்தரும் விருந்து அபாரம். இறுதிக்காட்சியில் இசைக்கப்படும் சாய்க்கோவ்ஸ்கியின் Violin Concerto, மெதுவாகத் திரையைவிட்டு அரங்கினுள் இறங்கி, பார்வையாளனை அருகில் நெருங்கி, அவனைத் தன் கரங்களில் தழுவி, அவனுள் நுழைந்து காட்சி இசை ரசிகன் என எல்லாவற்றையும் இசை எனும் ஒன்றாக்கிவிடுகிறது.

Le Concert எனும் இத்திரைப்படம் ஓர் மாபெரும் கலைப்படைப்போ அல்லது உலக மகா விருதுகள் வென்ற படைப்போ அல்ல ஆனால் சாதாரண ஓர் ரசிகனின் மனதை வருடிக் கொடுத்து அவன் மென் உணர்வுகளிற்கு புத்துயிர்ப்பு அளிக்கும் ஒர் படைப்பு. திரையரங்கை விட்டு வெளியேறும் ரசிகன் மனதில் ஒர் புன்னகையை தந்தனுப்பும் சாதாரணமான ஓர் படைப்பு. அதனை அற்புதமாக படைத்திருக்கிறார் இயக்குனர் Radu Mihaileanu.

உண்மையான இசைக்கலைஞன் ஒருவனின் ஆன்மாவினுள்ளே சிறைப்பட்டிருக்கும் இசை தன்னை விடுவிக்கும்போது அந்த இசைக்கலைஞனையும் அது விடுவித்துவிடுகிறது. இந்த இரு விடுதலைகளின் சங்கமத்தில் உருவாகும் விளைவானது இந்த உலகையே உன்னதத்தின் உச்சத்திற்கு இட்டுச் செல்லும் தன்மை கொண்டதாகவேயிருக்கிறது. [***]

பிரெஞ்சு ட்ரெயிலர்

செய்க்கோவ்ஸ்கியின் Violin Concerto- இரவின் அமைதியில் ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன்

Tuesday, November 10, 2009

ஒன்று, இரண்டு...XIII- மலைக்காட்டின் மரணக்காற்று


sd1 அமெரிக்காவின் ஜனாதிபதியைக் கடத்தி வந்து தன் திட்டமொன்றை வெற்றிகரமாக நடாத்தவிருந்த ஜெனரல் காரிங்டனின் முயற்சியானது அவரே எதிர்பார்த்திராத சம்பவங்கள் சிலவற்றால் வேறு திசையில் நகர்ந்து விடுகிறது. அமெரிக்க மண்ணில் தொடர்ந்தும் இருக்க முடியாத இக்கட்டான நிலையில் ஜெனரல் காரிங்டன், மேஜர் ஜோன்ஸ், கேணல் ஏமஸ் ஆகியோர் கோஸ்டா வெர்ட்டிற்கு அருகிலிருக்கும் சிறிய நாடான SAN MIQUELக்கு தப்பிச் செல்கிறார்கள். அங்கு அவர்களை தன் இல்லத்தில் தங்க வைத்து தஞ்சம் தருகிறான் வாழைத் தோப்புக்களின் அதிபதியான ஆர்மண்ட் என்பவன்.

தனது நலன் விரும்பிகளுடன் தப்பிச்செல்ல மறுத்து விடும் மக்லேன் ஜியோர்டினோவினால் NSAன் ரகசியக் கட்டிடம் ஒன்றில் அடைத்து வைக்கப்படுகிறான். மக்லேனை மிக ரகசியமாக விசாரிப்பதற்காக அமெரிக்க நாட்டின் உயர் மட்ட அதிகாரிகள் குழு ஒன்று தயாராகிறது. தேசத்தின் நலன் கருதி இவ்விசாரணையானது ராஜாங்க ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.

நியூயார்க் டெய்லியில் பயிற்சி பத்திரிகையாளானாக பணியாற்றுகிறான் இளைஞன் டேனி பின்கெல்ஸ்டீன். அதே பத்திரிகையில் பணியாற்றிய டேனியின் சகோதரனான ரொன்னும், ரொன்னின் சகாவான வரென் கிளாஸும் மூன்று ஆண்டு ஆய்வுகளின் பின்னணியில் மக்லேன் விவகாரம் குறித்த ஒர் துப்பறியும் அறிக்கையை* தயாரித்திருந்தார்கள்.[ * XIII MYSTERY, இக்காமிக்ஸ் தொடரின் 13வது ஆல்பம்]

ஆனால் மர்மமான முறையில் அந்த இரு பத்திரிகையாளர்களும் உயிரிழந்துவிட, அவர்கள் பாடுபட்டு தயாரித்த அறிக்கையும் எங்கென்று தெரியாமல் காணாமல் போய்விடுகிறது. தன் சகோதரனின் பணியை தொடரும் நோக்கில் NSAன் மறைவிடங்களை ரகசியமாகக் கண்காணித்து வருகிறான் டேனி. இதனைக் கண்டுபிடித்துவிடும் NSA அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி டேனியை நியூயார்க் டெய்லிப் பத்திரிகையின் வேலையிலிருந்து தூக்கி எறிந்து விடுகிறார்கள்.

யாருமே உதவ வழியற்ற நிலையில் NSAன் மரணப்பிடியில் இருக்கும் மக்லேன் மீதான ரகசிய உயர்மட்ட விசாரணை ஆரம்பமாகிறது. விசாரணையில் மக்லேனிற்கு எதிராக சாட்சியங்களும், வாதங்களும் வலுப்பெறுகின்றன. இது நாள் வரையில் தான் சிறிது சிறிதாக சேகரித்து வந்த தன் அடையாளம் மெல்ல மெல்ல ஒர் கேள்விக்குறியாக தன்முன் நிலைபெறுவதை கண்டு குழம்பிப் போகிறான் மக்லேன். உண்மைகள் வேஷமாக உருமாறும் அதிசயம் அவனை உடைக்க ஆரம்பிக்கிறது.

sd2 விசாரணையை முன்னின்று நடாத்தும் ஜியோர்டினோ, மக்லேன் உண்மையான மக்லேன் அல்ல என்று வாதிடுகிறான். விசாரணையின் முடிவில் ஷோன் ஓ நீல் எனப்படும் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த தீவிரவாதியாக நிரூபிக்கப்படும் மக்லேன், அமெரிக்க தேசத்திற்கு எதிராக அவன் இழைத்த பயங்கரவாதச் செயல்களிற்காகவும், அமெரிக்க நாட்டிற்கு அவன் ஒர் தொடர்ந்த அச்சுறுத்தல் என்றும் கருதப்பட்டு, அவன் வாழ்வின் எஞ்சிய நாட்கள் அனைத்தையும் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அரிசோனா சிறையில் கழிக்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

மக்லேனிற்கு வழங்கப்பட்ட தண்டனையையடுத்து, ஆயுதம் தாங்கிய அதிகாரிகள் அவனை ஒர் காரில் அரிசோனா சிறைக்கு அழைத்து செல்கிறார்கள். அந்தக் காரை பின் தொடர ஆரம்பிக்கிறான் இளைஞன் டேனி. செல்லும் வழியில் டேனியின் கார் மக்கர் பண்ண, அவன் உதவிக்கு வந்து சேர்கிறாள் அழகான பெண் ஜெசிக்கா. ஜெசிக்காவின் காரில் மக்லேன் ஏற்றிச் செல்லப்படும் காரை மீண்டும் பின் தொடர ஆரம்பிக்கிறான் டேனி, தன்னருகில் அமர்ந்து வரும் ஆபத்தை உணராமலே.

மக்லேனை ஏற்றிச் செல்லும் வண்டி, செல்லும் வழியில் ஆளரவமற்ற ஒர் பகுதியில் நிறுத்தப்படுகிறது. மக்லேனை சிறைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தீர்த்துக் கட்டி விடவேண்டுமென்பது ஜியோர்டினோவின் ரகசிய உத்தரவு. தப்பிச் செல்ல முயன்ற தீவிரவாதி சுட்டுக் கொலை என்று செய்தி வழங்குவது அவர்கள் திட்டம்.

காரிலிருந்து இறங்கிய மக்லேன், அவன் முன்னே சிரித்துக் கொண்டிருக்கும் மரணத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையை தொலைவிலிருந்து தொலைநோக்கி மூலம் அவதானிக்கும் டேனி கொதிக்கிறான். அரச அதிகாரிகளின் உரிமைகள் பற்றிய அவன் கருத்தினைக் கேட்கும் ஜெசிக்கா அவனிற்கு பதில் அளிப்பதற்காக தன் துப்பாக்கியை டேனியை நோக்கி உயர்த்துகிறாள்.

துப்பாக்கி முனையில் இளைஞன் டேனியையும் மக்லேன் நிற்கும் இடத்திற்கு அழைத்து வருகிறாள் அழகி ஜெசிக்கா. தான் தொடர்ந்தும் NSA ஏஜெண்டுகளால் கண்காணிக்கப்பட்டு வந்திருப்பதை தாமதாக அறிந்து கொள்கிறான் டேனி. இந்த வேளையில் அவர்கள் நிற்கும் இடத்தை நோக்கி பறந்து வருகிறது ஓர் ஹெலிகாப்டர்.

அந்தரத்தில் நிலைகொள்ளும் ஹெலியிலிருப்பவர்கள் ஒலிபெருக்கி மூலமாக தாம் FBI சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கிறார்கள். கீழே நிற்பவர்களை தங்கள் ஆயுதங்களை கைவிடும்படி அறிவுறுத்துகிறது ஒலிபெருக்கி குரல். ஹெலியின் கீழ் நிற்கும் நபர்கள் ஆயுதங்களை தரையில் வீசுகிறார்கள். மக்லேனை சிறைக்கு எடுத்து செல்லும் அதிகாரிகளில் ஒருவர் நிலைமையை தெளிவுபடுத்த விரும்பி ஹெலியை நெருங்குகிறார்.

ஹெலியில் இருந்த காமாண்டோக்களின் இயந்திரத் துப்பாக்கிகளின் இசை அப்பகுதியை நனைக்கிறது. மக்லேனை அழைத்து சென்ற அதிகாரிகளில் இருவர் அந்த இசைக்கு இரையாகிவிட எஞ்சியிருந்த ஒருவனை ஜெசிக்கா தீர்த்துக் கட்டுகிறாள்.

நடப்பது என்ன என்று அறிய விழையும் மக்லேனின் முகத்தில் மயக்க மருந்து தெளிக்கப்படுகிறது. ஜெசிக்கா, டேனி, நினைவிழந்த மக்லேன் சகிதம் அந்திச் சூரியனை நோக்கி பறக்க ஆரம்பிக்கிறது அந்த ஹெலிகாப்டர்.

sd3 நடந்த சம்பவத்தின் தகவல் ஜியோர்டினோவிற்கு தெரிய வருகிறது. தேசத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மக்லேனைக் காணும் இடத்தில் அவன் கதையை முடித்துவிடும்படி தன் வேட்டை நாய்களிற்கு உத்தரவு வழங்குகிறான் ஜியோர்டினோ.

ஹெலியில் மயங்கிய நிலையில் பயணித்த மக்லேன் அவன் நினைவு திரும்பும் போது தான் ஒர் பனாமாக் கப்பலில் இருப்பதை அறிந்து கொள்கிறான். தன்னை அங்கு கடத்தி வரச் செய்த நபர் யார் என்பதை அவன் அறியும்போது அவன் ஆச்சர்யம் மேலும் அதிகரிக்கிறது. தன் வசீகரமான கொலைப் புன்னகையுடன் மக்லேனை தன் கப்பலிற்கு வரவேற்கிறாள் இரினா.

தான் ஆரம்பித்திருக்கும் ஓப்பந்தக் கொலைகாரர்களிற்கான சர்வதேச வலைப்பின்னல் அமைப்பொன்றைப் பற்றி மக்லேனிற்கு அழகாக விளக்குகிறாள் ஒப்பந்தக் கொலைகளை உலக மயமாக்கிய இரினா. மிகவும் தேர்ந்த கொலைகாரியான ஜெசிக்கா, NSAவிற்காக டயான் எனும் பெயரில் பணியாற்றி வந்தாலும் அவள் தனக்காகவும் ரகசியமாகக் காரியங்களை ஆற்றுபவள் என்பதை மக்லேனிற்கு அவள் தெரிவிக்கிறாள். வரவிருக்கும் விடியலில் மக்லேன் தன் இருப்பினை சில மணிநேரம் நீடிக்க விரும்பினால் அவனுடைய முழுச்சக்தியும் அவனிற்கு இன்றியமையாத ஒன்றாகவிருக்கும் என புதிர் போடுகிறாள் அவள்.

அலைகளின் ஈரத்துடன் விடியும் மறுநாள் காலையில் கப்பலின் மேற்தளத்திற்கு அழைத்து வரப்படுகிறான் மக்லேன். மக்லேனுடன் தான் ஆடப்போகும் மரண விளையாட்டைப் பற்றி அவனிற்கு விரிவாகக் கூற ஆரம்பிக்கிறாள் இரினா.

இரினாவின் சர்வதேச ஒப்பந்தக் கொலைகாரர் அமைப்பில் இணைந்து கொள்ள விரும்புகிறார்கள் மூன்று புதிய கொலைகாரர்கள். அவர்களை தன் அமைப்பில் இணைத்துக் கொள்ளுவதற்கு முன்பாக அவர்கள் மூவரின் திறமைகளையும் எடை போட விரும்புகிறாள் இரினா.

மக்லேன் சரியாக காலை ஆறு மணிக்கு ஒர் சிறிய மோட்டார் படகில் கலிபோர்னியாவின் கரைகளை நோக்கி தப்பலாம். அச்சிறிய படகில் எரிபொருள் கரையை அடைவதற்கான தூரத்திற்கு அளவாகவே நிரப்பப்பட்டிருக்கிறது. அப்படகில் ஒர் வெடிகுண்டு ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. கரையை அடையும் தூரம் நெருங்கியதும் அவ்வெடிகுண்டு தானாகவே வெடித்து படகைச் சிதறடிக்கும். சரியாக மதியம் பனிரெண்டு மணிக்கு மூன்று புதிய கொலைகாரர்களும் மக்லேனை வேட்டையாடுவதற்காக கப்பலில் இருந்து ஒர் ஹெலிகாப்டரில் கிளம்புவார்கள்.

sd6 மக்லேனின் உயிரைக் கவர்வதற்கு அவர்களிற்கு அன்றிரவு ஒன்பது மணி வரை அவகாசம் வழங்கப்படும். ஆனால் அந்த நேர அவகாசத்தினுள் அவர்கள் மக்லேனின் இன்னுயிரை இழக்கச் செய்யாவிடில் அவர்கள் விட்ட இடத்திலிருந்து ஜெசிக்கா, மக்லேன் வேட்டையை தொடர்வாள். மக்லேன் ஒர் கில்லி என்பதை இரினா நன்கு அறிவாள் எனவே அவனின் வல்லமைக்கு ஒர் தடையாக இளைஞன் டேனியையும் சிறிய மோட்டார் படகில் அவனுடன் தப்பிச் செல்ல அனுப்பி வைக்கிறாள்.

sd6 டேனியனதும் மக்லேனினதும் கரங்கள் நீண்ட சங்கிலி ஒன்றில் இணைக்கப்பட்டிருக்கும் விலங்குகளில் மாட்டப்படுகிறது. தன் உயிரினைக் காப்பாற்ற வேண்டி கலிபோர்னியாவின் கரைகள் நோக்கி கடலோட ஆரம்பிக்கிறான் மக்லேன். தங்கள் கரங்களில் மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளினுள்ளே, அவர்கள் இருக்கும் இடத்தைக் காட்டித்தரும் ஒர் கருவி மிக ரகசியமாக தேர்ந்த கொலைகாரி ஜெசிக்காவினால் பொருத்தப்பட்டிருப்பதை அவன் அறிந்திருக்கவில்லை…..

XIII சம்பந்தமான கடந்த பதிவுகளில் நாங்கள் பார்த்த ஆல்பங்களில்[ 11, 12] மக்லேன் தன் கடந்த கால நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்காக பக்கங்களை தானம் செய்து விட்டு, கதைகளின் இறுதிக் கட்டத்தில் ஏதோ ஒர் மூன்று அல்லது நான்கு பக்கங்களில் அதிரடி ஆக்‌ஷனில் இறங்குவார். இவ்வாறு அதிரடி ஆக்‌ஷனில் இறங்கும் மக்லேன் எக்கச்சக்கமாக ஆபத்தில் மாட்டிக் கொண்டுவிட யாராவது வந்து கடைசி நேரத்தில் அவரைக் காப்பாற்றுவார்கள். அதிரடியில் இறங்கும் மக்லேனும் உயிர்களை அனாவசியமாக பறித்து விடக்கூடாது என்பதில் அக்கறை உள்ளவராகவே சித்தரிக்கப்பட்டிருப்பார்.

ஆனால் XIII காமிக்ஸ் தொடரின் 14வது ஆல்பமான Secret Defense மேற்கூறிய தன்மைகளிலிருந்து விடுபட்டு ஏறக்குறைய முழுமையான ஒர் திருப்பத்தை XIIIன் ரசிகர்களிற்கு வழங்குகிறது. 43 பக்கங்கள் கொண்ட இந்த ஆல்பத்தில் 15 பக்கங்கள் முற்று முழுதாக மக்லேனின் இடைவிடாத அதிரடி ஆக்‌ஷனிற்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. 1980களின் சர்வதேசக் காமாண்டோ ராம்போவே முக்காடு போட்டுக் கொள்ளும் அளவிற்கு ஆக்‌ஷன் திமிறிப் பாய்கிறது இந்தப் பக்கங்களில்.

sd4 மக்லேனிடமிருந்து நீண்டகாலமாக இவ்வகையான ஆக்‌ஷனிற்காக ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்கள் ஆல்பத்தை கீழே வைத்து விட்டு விசிலடிக்கலாம், கைதட்டலாம், பல்டி அடிக்கலாம். மக்லேன் உங்களை ஏமாற்ற மாட்டார். இந்தப் 15 பக்கங்களினுள் மூன்று உயிர்களிற்கு அவர் மோட்சத்திற்கு அப்பால் டிக்கட் புக் பண்ணி விடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தன் அடையாளம் குறித்த சந்தேகம் திரும்பி விட்ட நிலையில், மக்லேன் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடும் ஓட்டம் பரபரப்பாக ஆல்பத்தில் கூறப்படுகிறது. ஆல்பத்தில் நெகிழ்வான தருணங்கள் என இரு தருணங்களைக் குறிப்பிடலாம். ஒன்று ஷோன் முல்வே வழங்கும் ஒர் சாட்சியம். இரண்டாவது மேஜர் ஜோன்ஸ், மக்லேனுடன் தொலைபேசியில் உரையாடும் கட்டம். மேஜர் ஜோன்ஸ் தன் மனதில் ரகசியமாக வைத்திருக்கும் மக்லேன் மீதான மென்மையான அந்தக் காதலை எந்தவித ஆர்பாட்டங்களுமின்றி அழகாக சொல்லி விடுகிறது ஓரே ஓர் சிறிய சித்திரக்கட்டம். அந்த சித்திரத்தில் மேஜர் ஜோன்ஸின் கண்களைப் பார்க்க மறக்காதீர்கள்.

sd5 ஆல்பத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் மக்லேனின் எரிச்சல்தரும் விசாரணைக்காட்சிகள், முடிந்திருக்க வேண்டிய ஓர் தொடரை எவ்வாறு மேலும் சில ஆல்பங்களிற்கு வெற்றிகரமாக இழுத்தடிக்கலாம் என்று கதாசிரியர் வான் ஹாம் வாசகர்களிற்கு தரும் பாடமாக எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் அவர் சஸ்பென்ஸ் திருப்பங்களுடன் அமைத்திருக்கும் இந்தக் கதை வேகமான ஒன்று என்பதில் ஐயமில்லை. கதையின் முடிவில் கூட ஒர் சஸ்பென்ஸை வைத்து அடுத்த ஆல்பத்தின் எதிர்பார்ப்பை கூட்டுகிறார் அவர்.

ஓரிகன் எல்லைக்கு அருகாமையில் அமைந்திருக்கும் மேற்கு கலிபோர்னியாவின் மலைக்காடுகளில் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிகளில் தன் திறமையைப் பின்னிப் பிழிந்தெடுக்கிறார் ஓவியர் வான்ஸ். குறிப்பாக மலைக் குன்றின் உச்சியிலிருந்து மக்லேன் குளிரான காட்டாற்றுக்குள் பாயும் காட்சியை விரிக்கும் சித்திரங்கள் அருமை. அழகி ஜெசிக்கா மற்றும் இரினாவின் அழகிய உடல்களையும் வாசகர்களின் கண்களிற்கு விருந்தாக்குகிறார் வான்ஸ்.

நல்ல கதை ஒன்றை தேடுவதை மறந்துவிட்டு, பரபர விறுவிறு ஆக்‌ஷனிற்காகப் படித்தால் இந்த ஆல்பத்தை ரசிகர்கள் நிச்சயம் ரசிக்கலாம். ஆனால் கதையைப் படிக்கும் போது உங்கள் விரல்கள் உங்களையறியாமலே உங்கள் காதுகளை தடவிப் பார்க்க முயன்றால் அது இயல்பான ஒன்று என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். [***]

flowers-2



அன்பு நண்பர் ரஃபிக்கிற்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Thursday, November 5, 2009

வெள்ளை ரிப்பன்


நிகழ்காலத்தில் இருண்டிருக்கும் திரையிலிருந்து ஒலிக்கும் வயதேறித் தளர்ந்த குரல் ஒன்று, திரையின் மத்தியில் மெதுவாக ஒளிரத்தொடங்கும் கடந்த காலத்திற்குள் பார்வையாளனை அழைத்துச் செல்கிறது.

ஜெர்மனியில், 1913ம் ஆண்டின் வசந்தம் தன் பூரண அழகுடன் வீசிக்கொண்டிருக்கும் ஒர் சிறு கிராமம் பிரகாசமாக எம் கண்களில் தெரிகிறது. எம்மை அங்கே அழைத்துச் செல்லும் குரல் முன்பு அக்கிராமத்தில் பணியாற்றிய பள்ளி ஆசிரியனுடையதாகவிருக்கிறது.

கிராமத்தில் நடந்தேறிய சில விபரீதமான சம்பவங்களை பார்வையாளன் நன்கு அவதானிப்பதன் மூலம் ஜெர்மனியின் வரலாற்றில் கறுப்பாக படிந்திருக்கும் வரிகளை அவனால் ஓரளவாவது புரிந்து கொள்ள முடியும் என்கிறது ஒர் குரல்.

அக்கிராமத்தில் மிகுந்த அதிகாரமும் செல்வாக்கும் நிறைந்தவராக ஒர் பிரபு இருக்கிறார். அவரிற்கு ஒர் அன்பு மனைவி. மூன்று பிள்ளைகள். அக்கிராமத்தின் தலைவர் அவர்தான் என்று கூறிடலாம். கிராமத்தில் வசிக்கும் வறிய மக்கள் பிரபுவின் நிலங்களில் கூலி வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஜீவனத்தின் வழி பிரபு என்பதால் அவரின் அதிகாரத்திற்கு அடங்கி, அவர் மேல் மதிப்பு கொண்டவர்களாக அவர்கள் வாழ்கிறார்கள்.

பிரபுவின் பின் கிராமத்தின் மதிப்பும் கவுரவும் மிகுந்த குடும்பங்களாக கிராம மருத்துவர், மத போதகர், பிரபுவின் சொத்துக்களை பராமரித்துக் கொள்பவர் ஆகியோரின் குடும்பங்கள் திகழ்கின்றன. கிராமத்தின் பள்ளியில் பிள்ளைகளிற்கு பாடங்களையும், இசைப்பாட்டையும் கற்றுத்தருபவராக பணியாற்றுகிறார் ஆசிரியர். அவர் அந்தக் கிராமத்தை சேர்ந்தவர் அல்ல.

கிராமத்தின் மத போதகர் தன் பிள்ளைகளை மிகுந்த கண்டிப்புடனும், ஒழுக்கத்துடனும் வளர்ப்பவர். தீமை என்பது தன் பிள்ளைகளையோ அல்லது தன் பிள்ளைகள் தீமையையோ நெருங்கி விடக்கூடாது என்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார் அவர்.

le_ruban_blanc_4 தீமைகளை தன் பிள்ளைகள் எந்நேரமும் விலத்தியிருக்க வேண்டும் என்பதை அவர்களிற்கு நினைவூட்டுவதற்காக அவர்கள் கைகளிலும், தலை முடியிலும் வெள்ளை ரிப்பன் கட்டி விடுகிறார் அவர். வெள்ளை ரிப்பன் களங்கமின்மையையும், தூய்மையையும் அவர்களிடம் இருந்து பிரியாது கட்டி வைத்திருக்கும் ஒர் அடையாளமாக அவரிற்கு இருக்கிறது.

தன் குழந்தைகள் சிறிய தவறுகள் இழைத்தால் கூட அவர்களை அவர் கடுமையாக தண்டிக்கிறார். பிரம்பால் அடித்தல், பட்டினி போடல், கட்டிலில் தன் மகனின் கரங்களை கட்டிவிடுதல் என அவர் தண்டனைகள் தவறுகளிற்கேற்ப வேறுபடுகின்றன.

கிராம மருத்துவரிற்கு ஒர் மகள், ஒர் பையன் என இரு பிள்ளைகள். தன் மனைவி இறந்து விட மேடம் வாக்னர் எனப்படும் பெண்மணியின் உதவியுடன் தன் குழந்தைகளை வளர்த்து வருகிறார் மருத்துவர். மேடம் வாக்னர் மருத்துவரின் மருத்துவப்பணியிலும் அவரிற்கு உதவியாளராக செயற்பட்டு வருகிறார். மேடம் வாக்னரிற்கு மனநிலை சற்றுக் குன்றிய ஒர் மகன் இருக்கிறான்.

கிராமப் பிரபுவின் நிலத்தில் தன் குதிரையோட்டத்தை முடித்துக் கொண்டு தன் வீடு நோக்கி திரும்புகிறார் மருத்துவர். அவர் தன் வீட்டினை அண்மிக்கும் வேளையில் அவர் குதிரை கால் இடறி கீழே வீழ்கிறது. குதிரையுடன் கூடவே கீழே விழும் மருத்துவரிற்கு உடலில் நல்ல அடி படுகிறது.

le_ruban_blanc_6 கீழே விழுந்த மருத்துவர் சிகிச்சைக்காக கிராமத்திலிருந்து தொலைவிலிருக்கும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார். மருத்துவரின் குதிரை வீழ்ந்ததிற்கு காரணம் அது வரும் பாதையின் குறுக்காக கட்டப்பட்டிருந்த கம்பி ஒன்று என்பது தெரிய வருகிறது. ஆனால் அங்கு யார் அந்தக் கம்பியைக் கட்டியிருப்பார்கள் எனும் கேள்விக்கு யாரிற்குமே விடை தெரியவில்லை.

மருத்துவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்கள் கழிந்த பின், பரோனின் மர அரிவு ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த உடல் நலம் குன்றிய ஒரு பெண்மணி மர்மமான முறையில் விபத்துக்குள்ளாகி இறந்து போகிறாள். அப்பெண்ணின் மகன் தன் தாயின் மரணத்திற்கு பிரபுதான் காரணம் எனக் கோபம் கொள்கிறான். இது குறித்து மெளனமாக இருக்கும் அவன் தந்தையுடன் அவன் வாக்குவாதம் செய்கிறான். அவன் தந்தையோ அவனை எந்த எதிர்ப்பையும் காட்டாது அமைதியாக இருக்கும்படி கண்டிப்புடன் கேட்டுக் கொள்கிறார்.

கிராமத்தில் வசந்தமானது இலையுதிர்காலத்தை வரவேற்க தயாராக, கிராம மக்கள் அறுவடை விழாவைக் கொண்டாட ஆயத்தமாகிறார்கள். பிரபுவின் ஆசியுடன் அறுவடை விழாவானது களைகட்டுகிறது. பீரும், உணவு வகைகளும் தாராளமாக பரிமாறப்படுகின்றன. இசையும் நடனமும் கிராம மக்களின் துன்பங்களை மறக்கடிக்க செய்கின்றன. நல்ல ஒர் அறுவடை தந்திடும் மனநிம்மதியை கிராமத்தவர்கள் அனுபவிக்கிறார்கள். விழா நடந்து கொண்டிருக்கும் வேளையில் பிரபுவின் கோவா தோட்டத்தில் நுழையும் ஒருவன் அத்தோட்டதை சிதைத்து விடுகிறான்.

தனது கோவா தோட்டம் சிதைக்கப்பட்டதை அறிந்து கொள்ளும் பிரபு அதிர்ச்சியடைகிறார். இந்தக் காரியத்தை செய்தது யாராக இருக்கலாம் என்று கிராம மக்கள் தங்களிற்குள் கேள்விகளை எழுப்பிக் கொள்கிறார்கள். அன்றைய இரவு தன் மகன் வீட்டிலிருந்து காணாமல் போய்விட்டதையும் பிரபு அறிந்து கொள்கிறார்.

காணாமல் போன பிரபுவின் மகனைத் தேட ஆரம்பிக்கிறார்கள் கிராமத்தவர்கள். பீர் தந்த மயக்கமும், விழா தந்த களைப்புமாக இருளை எரிக்கும் தீப்பந்தங்களுடன் கிராமத்தில் தேடுதல் வேட்டை நடத்தும் அவர்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் சித்தரவதைக்குள்ளாகியிருக்கும் பிரபுவின் மகனைக் கண்டு கொள்கிறார்கள்.

ஞாயிறன்று கிராம ஆலயத்தில் கூடியிருக்கும் கிராமமக்களிடம் இந்தக் குரூரமான செயலை செய்தவர்களை கண்டுபிடிக்க தனக்கு உதவும்படி வேண்டுகிறார் பிரபு. தொடரும் சில வாரங்களின் பின் பிரபுவின் களஞ்சியம் ஒன்றும் மர்மமான முறையில் தீக்கிரையாக்கப்படுகிறது.

131948-3-le-ruban-blanc இச்சம்பவங்களின் பின் உடல்நலம் தேறி கிராமத்திற்கு திரும்புகிறார் மருத்துவர். அவர் கிராமம் திரும்பிய சிறிது காலத்தின் பின் மேடம் வாக்னரின் மனநலம் குன்றிய மகன் மிகவும் குரூரமான முறையில் தாக்கப்பட்ட நிலையில் கிராமத்தவர்களால் கண்டெடுக்கப்படுகிறான். அவன் அருகில் தந்தை செய்யும் பாவங்களிற்கு அவனுடைய சந்ததி தண்டிக்கப்படும் எனும் வேதாகம வசனம் எழுதப்பட்ட காகிதம் காணக்கிடைக்கிறது.

ஒரு நாள் மாலை தன் பணிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் போதகர், தன் அறையில் அவர் அன்பாக வளர்த்து வந்த குருவியின் இறந்த உடல், கத்தரிக்கோல் ஒன்று அதனுடலில் செருகப்பட்ட நிலையில், சிலுவையில் அறையபட்ட கிறிஸ்துவைப்போல் அவர் மேசையின் மீது கிடத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து போகிறார்.

தன் மகன் தாக்கப்பட்டு சில நாட்களின் பின், பள்ளி ஆசிரியருடன் பதட்டமாக உரையாடும் மேடம் வாக்னர், தன் மகன் தன்னை தாக்கியவர்கள் யாரென்று தனக்கு கூறியதாக கூறிவிட்டு கிராமத்திலிருந்து காணாமல் போய்விடுகிறாள். மேடம் வாக்னரின் கூற்றால் உந்தப்படும் பள்ளி ஆசிரியர் தன் சிறு விசாரணைகளின் பின் கிராமத்தில் நடந்த அசம்பாவிதங்களிற்கு காரணமாக இருக்ககூடியவர்கள் யார் என்பதன் சாத்தியத்தை ஊகித்து விடுகிறார்…..

ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும், மேற்பூச்சாக கொண்ட சமூகமொன்றின் உள்ளே தந்திரமாக வேடமிட்டிருக்கும் போலித்தனங்களையும், வன்மத்தையும், குரூரத்தையும் அழுத்தமாகக் காட்டுவதுடன் நின்றுவிடாது, இச்சமூகத்தின் துவேஷங்களையும், வெறிகளையும் உள்ளெடுத்தபடியே அச்சமூகத்தை விட மோசமாக உருவாகிக் கொண்டிருக்கும் புதிய சந்ததி ஒன்றின் தோற்றத்தையும் அதன் விளைவுகள் எவ்வாறாக இருக்கலாம் என்பதனையும் பார்வையாளனை நோக்கி அழுத்தமாக திருப்புகிறது Das Weisse Band எனும் இந்த ஜெர்மன் மொழித்திரைப்படம்.

வசதி படைத்தவன் வறியவன் மேல் கொண்டுள்ள அதிகாரம், ஆண் பெண்மேல் கொண்டுள்ள அதிகாரம், வளர்ந்தவர்கள் சிறியவர்கள் மேல் கொண்டுள்ள அதிகாரம், கடவுள் மனிதன் மேல் கொண்டுள்ள அதிகாரம் என்பவற்றைக் கேள்விக்குள்ளாக்கும் இத்திரைப்படம், அதிகாரத்தின் கீழ் அடக்கப்படுபவர்கள் திருப்பி அடித்தால் அதன் விளைவுகள் தரும் பாதிப்புக்களையும் காட்டுகிறது.

131948-1-le-ruban-blanc பார்வையாளனை படிப்படியாக திரைப்படத்தின் சம்பவங்கள் மூலம் தீமையின் தழுவலிற்குள் அகப்படவைத்து அவர்களை அதிர்ச்சியும், சங்கடமும் கொள்ள வைக்கிறார் ஆஸ்திரிய இயக்குனர் Michael Haneke. ஒர் தூய்மையான சமூகத்தின் பின் மறைந்திருக்கக் கூடிய தீமையின் சலனத்தை அவர் பார்வையாளன் மனதில் பதித்து விடத் தவறவில்லை.

மருத்துவரிற்கும் மேடம் வாக்னரிற்குமிடையிலான ரகசியக் காதல் முறிவடையும் காட்சியில் பேசப்படும் வசனங்களின் வன்மம் பார்வையாளனை ஊமையாக்கி அவன் உணர்வுகளை சாட்டை கொண்டு அடிக்கிறது. மருத்துவரின் வக்ரம் வெளிப்படும் தருணத்தில் தீமையின் பிரகாசத்தினுள் குறுகிப் போகிறான் பார்வையாளன்.

தான் கண்டெடுத்து ஆசையுடன் வளர்த்து வரும் குருவியை கண்டிப்பான போதகரான தன் தந்தைக்கு வழங்க முன்வரும் அந்த சிறுவனின் பாசம் கடவுளையே நெகிழ வைக்கும்.

திரைப்படம் கறுப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டுள்ளது. Christian Berger எனும் ஆஸ்திரிய ஒளிப்பதிவாளர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மிகுந்த இருண்ட கதை கொண்ட இத்திரைப்படத்தை வசந்தகாலம், அறுவடை விழா, பனிக்காலம் என பிரகாசமாகக் காட்டியிருக்கிறார் அவர். இருண்ட காட்சிகளின் தெளிவு வியக்க வைக்கிறது. இருளும் ஒளியும் அரவனைத்துக் கொள்ளும் காட்சிகள் அருமையாக படமாக்கப்பட்டிருக்கின்றன.

palme-d-or-2009-michael-haneke-pour-le-ruban-blanc_galerie_photo_big படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடிப்பவர்களின் நடிப்பு பார்வையாளர்களை வசியம் செய்து விடுகிறது. அதிலும் போதகரின் கடைக்குட்டி மகனின் புன்னகையை மறக்கவே முடியாது.

படத்தில் நிகழும் பெரும்பாலான குற்றங்களை செய்தவர்கள் யார் என்பதை பார்வையாளனையே ஊகிக்கும்படி அழைக்கிறார் இயக்குனர். முதாலாம் உலக யுத்தத்தின் அறிவிப்புடன் நிறைவடைகிறது படம். ஜெர்மன் மண்ணில் விளைந்திருந்த[இருக்கும்]எல்லாவகை துவேஷங்களினதும், வெறிகளினதும் ஆதிவேர்களின் ஊன்றலை ஒர் சிறிய கிராமத்தின் சமூகம் வழி தேட முயன்றிருக்கிறார் Michael Haneke. இத்திரைப்படம் அவரிற்கு CANNES திரைப்படவிழாவின் [2009] மிக உயர்ந்த விருதான Palme D’Or ஐப் பெற்றுத்தந்தது.

விளைநிலமொன்றில் தீமைகளை கலந்து விதைக்கும் போது விளைவதும் தீமையைத் தன்னுள்ளே கொண்டே இருக்கும். தீமைகளை விலக்குவதற்கு கட்டப்படும் ரிப்பன்கள் என்ன வண்ணத்திலிருந்தாலும், மனதில் தீமை விளைவிக்கும் கவர்ச்சியின் வண்ணத்தின் முன்பாக அவை பெரும்பாலும் வண்ணமிழந்தே போகின்றன. [***]

ட்ரெயிலர்

Sunday, November 1, 2009

ஒன்று, இரண்டு... XIII- கண்ணீர் கேட்கும் நீதி


judg1 பெண்டகனின் புற்தரையின் இளம் ஈரம் அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களின் காலணிகளை குளிர்வித்துக் கொண்டிருந்தது. புற்தரையின் ஒர் பகுதியில் அமைந்திருந்த ஹெலிபாட்டில் காற்றைக் கலக்கியபடியே வந்திறங்குகிறது அமெரிக்க ஜனாதிபதி வால்டர் ஷெரிடானை ஏந்திய ஹெலி.

ஹெலியிலிருந்து தன் சகாக்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கீழே இறங்கும் ஜனாதிபதியை விறைப்பான உடல்களுடன் வரவேற்கிறார்கள்- இன்னமும் சிறிது நிமிடங்களில் தன் பதவியிலிருந்து ஓய்வு பெறும் அமெரிக்க ராணுவ முப்படைகளின் கூட்டுத்தளபதியான ஜெனரல் பெஞ்சமின் காரிங்டன் மற்றும் அப்பதவிக்கு புதிதாக நியமனம் பெறவிருக்கும் ஜெனரல் ஜேம்ஸ் எல்ராய் விடேக்கர்.

ஜெனரல் காரிங்டனைப் பற்றிய புகழுரையை அங்கு குழுமியிருப்பவர்கள் மத்தியில் ஜனாதிபதி ஆற்றி முடித்த பின், பெண்டகனின் ரகசிய நிலவறையொன்றில் பதவி மாற்றத்தின் அதி ரகசிய பரிமாற்றங்களை நிகழ்துவதற்காகச் செல்கிறார்கள் இரு ஜெனரல்கள், ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோர்.

இவர்களுடன் கூடவே அந்த அறைக்கு ஓர் கறுப்பு சூட்கேஸும் செல்கிறது. இந்தக் கறுப்பு சூட்கேஸை பல ஹாலிவூட் படங்களில் நண்பர்கள் பார்த்திருப்பீர்கள். இப்பெட்டியில் உள்ள சில சங்கேத எண் பட்டன்களை தகுந்த முறையில் அழுத்தினால் உலகில் ஒர் மெகா அணு ஆயுத அழிவு ஏற்படும்.[ இதே போன்று ஓர் கறுப்பு சூட்கேஸை தமிழ் கூறும் நல்லுலகின் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் தன் படங்களில் உபயோகித்து இருக்கிறார்]

இந்தப் பரிமாற்றங்களின் பின் ஜனாதிபதி புதிதாகப் பதவியேற்றிருக்கும் ஜெனரல் விடேக்கரை வாழ்த்தி உரையாற்றுவார். இதனை எதிர்பார்த்து காத்திருக்கும் ஊடகவியலாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது பெண்டகணின் பிறிதோர் பகுதியிலிருந்து மேலே உயரும் ஹெலியின் சத்தம். பாதுகாப்பு அதிகாரிகளின் உள்ளுணர்வு ஏதோ நடந்திருக்கிறது என்பதை உணர்த்தி விட பெண்டகணின் ரகசிய நிலவறையை நோக்கி விரைவாக ஓடுகிறார்கள் அவர்கள்.

judg2 ரகசிய நிலவறையின் கதவுகளைத் திறந்து அதனுள் நுழையும் அதிகாரிகள் அங்கு ஜெனரல் விடேக்கரும், பாதுகாப்புத்துறை அமைச்சரும் மயங்கிக் கிடப்பதைக் காண்கிறார்கள். ஜனாதிபதி வால்டர் ஷெரிடானும், ஜெனரல் காரிங்டனும் நிலவறையில் இருந்து காணாமல் போயிருக்க அவர்களுடன் இணைந்து அணுப் பேரழிவை உலகிற்கு அள்ளி வழங்கிவிடக்கூடிய கறுப்பு சூட்கேஸூம் மறைந்து போயிருந்தது.

வாஷிங்டனிலிருந்து ஐம்பது கிலோ மீற்றர் தூரத்தில், ஜெனரல் காரிங்டன் ஜனாதிபதியைக் கடத்திச் சென்ற ஹெலி கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறது. ஹெலியின் இருக்கை ஒன்றில் ஓர் கடிதம் ஜம் என உட்கார்ந்திருக்கிறது. அக்கடிதத்தில் தான் மேஜர் ஜோன்ஸையும், மக்லேனையும் மட்டுமே சந்திக்க விரும்புவதாக ஜெனரல் காரிங்டனின் எழுத்துக்கள் கூறுகின்றன.

இதனையடுத்து வெள்ளை மாளிகையில் உயர்மட்ட அதிகாரிகளின் அவசரக் கூட்டம் ஒன்று ஏற்பாடாகிறது. கோஸ்டா வெர்டிலிருந்து உடனடியாக வரவழைக்கப்படும் மேஜர் ஜோன்ஸும், மக்லேனும் [XIII] இக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

ஜெனரல் காரிங்டன் எவ்வாறு ஜனாதிபதியைக் கடத்தி சென்றார் என்பதனையும், கறுப்பு சூட்கேஸ் தற்சமயம் காரிங்டனின் பிடியில் இருக்கிறது என்ற தகவலையும் அதிகாரிகள் வழி ஜோன்ஸூம், மக்லேனும் அறிந்து கொள்கிறார்கள். காரிங்டனையும், அவனது சகாக்களையும் ஜோன்ஸும், மக்லேனும் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அவர்களிடம் கேட்டுக் கொள்கிறார்கள்.

அதிகாரிகளின் வேண்டுகோளை நிராகரிக்கும் மக்லேனையும், ஜோன்ஸையும் நீண்டகாலம் சிறையில் போட வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறான் ஜியோர்டினோ. இதேவேளையில் ஜெனரல் காரிங்டன் அனுப்பி வைத்த ஒளிநாடா ஒன்று வெள்ளை மாளிகையை வந்தடைகிறது.

அந்த ஒளிநாடாவில் செவ்விந்தியன் செல்லுமிடத்தில் அவர்களை தான் சந்திப்பதாக ஜோன்ஸிற்கும், மக்லேனிற்கும் தகவல் தருகிறார் ஜெனரல் காரிங்டன். செவ்விந்தியன் செல்லுமிடம் என்பது என்ன என்று தெரியாது குழம்புகிறார்கள் அதிகாரிகள். ஜெனரல் காரிங்டனின் தகவல் முடிந்த கணமே அவர் அனுப்பிய ஒளிநாடாவும் வெடித்து சிதறுகிறது.

judg3 செவ்விந்தியன் செல்லுமிடத்தை நோக்கி கிளம்புகிறார்கள் அதிரடி ஜோடிகளான ஜோன்ஸும், மக்லேனும். விமானப் படை விமானத்தினை சமயோசிதமாக ஒர் சிறிய புயல் மண்டலத்தினுள் செலுத்தி தங்கள் பயணத்தை கண்காணிப்பவர்களின் கண்களிற்கு தண்ணி காட்டி விடுகிறாள் கறுப்பழகி ஜோன்ஸ்.

வீசிக் கொண்டிருக்கும் புயலினூடு விமானத்தை ஒர் பெரிய ஏரியின் மீது இறக்கி விடுகிறாள் அவள். அதன்பின் அவர்கள் இருவரும் ஒர் நீண்ட பயணத்தை மேற்கொண்டு இயற்கை அழகு அள்ளித் தழுவிக் கொள்ளும் கெலோனி ஏரிப் பிரதேசத்தில் இருக்கும் ஒர் மர வீட்டை வந்தடைகிறார்கள். ஆனால் அந்த வீட்டில் அவர்களிற்காக காத்திருப்பது ஜெனரல் காரிங்டன் அல்ல.

அழகிய இயற்கையின் தழுவலில் மயங்கிக் கிடக்கும் மரவீட்டில் அவர்களை வரவேற்கிறார் ஜெனரல் காரிங்டனின் சகாவான கேணல் ஏமஸ்.

ஜெனரல் காரிங்டனின் கணனியைக் கிளறும் அதிகாரி ஒருவன், கைவிடப்பட்ட நிலையிலிருந்த அணு ஆயுத தளமொன்றை ஜெனரல் காரிங்டன் ரகசியமாக புணரமைத்திருக்கும் தகவலை அறிந்து கொள்கிறான். நவீன வகை பாதுகாப்பு வேலிகள், செய்மதி வழித் தொலை தொடர்பு வசதிகள் என மிக நவீனமாக புணரமைக்கப்பட்டிருக்கிறது அத்தளம். இத்தகவல்களை அறியும் உயர் அதிகாரிகள் காரிங்டன் ஜனாதிபதியை அத்தளத்தில்தான் மறைத்து வைத்திருக்க வேண்டும் என்பதனை ஊகித்துக் கொள்கிறார்கள்.

தன் சமையல் திறமை மூலம் மக்லேனின் சுவையுணர்வையும் மறக்கடிக்க செய்து விடும் கேணல் ஏமஸ், காரிங்டன் எதற்காக ஜனாதிபதி வால்டர் ஷெரிடானைக் கடத்தினார் என்பதனை அவர்களிற்கு விளக்குகிறார். காரிங்டனின் திட்டம் வெற்றியடைய வேண்டுமானால் ஒர் முக்கியமான நபரை மக்லேனும், ஜோன்ஸும் கடத்தி வர வேண்டும் எனவும் அவர் கூறுகிறார். அவர்கள் கடத்தி வர வேண்டிய நபர் வேறு யாருமல்ல. அவன் பெயர் மங்கூஸ்ட்.

judg4 பஹாமாஸிலுள்ள ரம் கே எனும் தீவிற்கு கேணல் ஏமஸின் அறிவுறுத்தலின்படி வந்து சேர்கிறார்கள் மக்லேனும், ஜோன்ஸும். கடற்கரை அருகிலிருக்கும் பெரிய மாளிகையொன்றில் அழகிய கொலைகாரி இரினா, மற்றும் பாதுகாவலர்கள் சகிதம் இன்பமாக வாழ்க்கையை அனுபவித்து வருகிறான் மங்கூஸ்ட். மங்கூஸ்ட் கூட்டத்தின் நடவடிக்கைகளை வேவு பார்க்கும் மக்லேன், ஜோன்ஸ் ஜோடி அதிரடியில் இறங்கத் தயாராகிறது…

ஜெனரல் காரிங்டன் ஜனாதிபதியைக் கடத்தியதற்கான காரணம் என்ன? மேஜர் ஜோன்ஸும், மக்லேனும் கூலிக் கொலைஞன் மங்கூஸ்டைக் கடத்தி வருவதில் வெற்றி கண்டார்களா? ஜெனரல் காரிங்டனின் திட்டம் வெற்றி பெற்றதா?

XIII காமிக்ஸ் தொடரின் 12வது ஆல்பமான LE JUGEMENTன் கதையை, பாசம் நிறைந்த தந்தை ஒருவனின் கண்ணீர் கேட்கும் நீதி என ஒரு வரியில் கூறிவிடலாம்.

judg5 ஜெனரல் காரிங்டன் அமெரிக்க ஜனாதிபதையைக் கடத்தி சென்று ஒர் திட்டத்தை செயற்படுத்த விரும்புகிறார், அத்திட்டத்திற்கு தீர்ப்பு வழங்குவதற்கு அவர் அமெரிக்க நல்லுலகின் மக்களை அழைக்கிறார். இத்திட்டத்தை அவர் மக்களிடம் நேரடியாக எடுத்து செல்ல அமெரிக்காவின் பலம் பொருந்திய ஊடகங்களில் ஒன்றான தொலைக்காட்சியை தனக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்கிறார்.

1992ல் வெளியாகிய இந்த ஆல்பத்தின் இறுதிப் பகுதி, ஜெண்டில்மேன் இயக்குனரின் இயக்கத்தில் உலகநாயகன் நடித்து வெற்றி பெற்ற ஒர் திரைப்படத்தின் உச்சக்கட்டக் காட்சிகளை வாசகர்கள் மனதில் அலையடிக்க செய்யலாம்.

வழமை போன்றே விறுவிறு ஆக்‌ஷனிற்கு மக்லேன், ஜோன்ஸ் பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். கவர்ச்சிக்கு ஜோன்ஸ் மற்றும் இரினா [ சிங்கிள் சிங்கம் ஜோஸிற்காகவே இந்த வரிகள்] ஆனால் தமிழ் டப்பிங்கில் அவை வருமா என்பது தெரியவில்லை!! கதையின் நெகிழ்வான ஒரே ஒரு பக்கத்தை காரிங்டன் அபகரித்துக் கொள்கிறார். அப்பக்கத்தில் வான் ஹாம் மெளனம் காத்துவிட, தன் சித்திரங்களினால் மனத்தைக் கனக்க வைக்கிறார் வில்லியம் வான்ஸ்.

கெலோனி ஏரி மர வீட்டுக் காட்சிகளை திறக்கும் சித்திரங்கள் சிறப்பாக இருக்கின்றன. JVH என்றும் வேறு சில வகைகளிலும் வான் ஹாமின் பெயரை சித்திரங்களில் விளம்பரப்படுத்தியிருக்கிறார் வான்ஸ். கதையில் அமெரிக்க காமிக்ஸ் நாயகன் PUNISHERன் அடாவடி நடவடிக்கைகள் குறித்த மக்லேன் அடிக்கும் கமெண்ட் கூட உண்டு.

XIII தொடரின் முதல் சுற்றின் இறுதி ஆல்பம் இது எனக் கூறினால் அது மிகையானது அல்ல. ஆனால் கதையைப் படிக்கும்போது இதில் நடப்பவை எல்லாம் சாத்தியம்தானா என்று மனது ஒர் கண்டிப்பான காதலியைப்போல் கேள்விகளை எழுப்புகிறது. கேள்விகளை எழுப்பும் மனதினை தாலாட்டி தூங்க வைத்து விட்டு படித்தால் XIIIன் ரசிகர்களை இந்த ஆல்பம் திருப்திப்படுத்தும். [***]