Friday, July 17, 2009

ஆர்க்டிக் தேசம்


bs1 உயிருள்ளவர்களிற்கு மரணத்தின் மீதுள்ள ஆர்வம் சொல்லிலடங்காதது. லைன் எனும் நகரத்தின் தெருவில், விளக்குக் கம்பம் ஒன்றில் தூக்கிலிடப்பட்டிருக்கும் இந்தக் குடிகாரக் கழுகு கவர்ந்திழுக்கும் கும்பலைப் பாருங்கள். மரணத்தை வியப்புடன் ரசித்துக் கொண்டிருக்கும் அந்த உருவங்களைப் பாருங்கள். பெண்ணின் வாசத்தை போன்று மரணத்தின் வாசத்தில் அவர்கள் கிறங்கி நிற்பதைப் பாருங்கள். மரணத்தின் கவர்ச்சியை கண்டு கொள்ள முடிந்ததா ? ஒரு வேளை அவர்கள் மரணத்தினை அவர்களால் வேடிக்கை பார்க்க முடியாதே எனும் ஏக்கமாக கூட இது இருக்கலாம்.

நிறவெறி கொண்ட ஆர்க்டிக் தேசம் எனும் குழுவைச் சேர்ந்தவர்களின் கைங்கர்யமே இந்த தூக்கு. குடிகாரர்களையும், வெள்ளை இனத்தை சேராதவர்களையும் அழித்து வெண்பனித் தேசம் அமைப்பது அவர்களின் கனவு. அவர்கள் கனவு தேசம் இவ்வகையான செயல்களால் சுத்தமாக்கப்படுகிறது என்பது அவர்கள் நம்பிக்கை.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின், நகரிலிருந்த ஒர் விமான உற்பத்தி தொழிற்சாலை மூடு விழாக் கண்டதால் லைன் நகரத்தில் வேலைவாய்ப்பின்மையும், குற்றச்செயல்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆர்க்டிக் தேசம் குழு ஒர் புறம் எனில் கறுப்பு நகங்கள் எனும் கறுப்பர்களின் குழு மறுபுறம். குற்றங்கள் கும்மாளமிடும் நகரமென்றால் துப்பறிவாளர்களிற்கு கொண்டாட்டம் அல்லவா. எங்கள் கதாநாயகன் ஜான் ப்ளக்சாடும் இந்நகரத்திற்கு வந்து சேர்ந்தது அதில் பங்கு கொள்ளத்தான்.

தூக்கிலிடப்பட்டவரை பார்த்தவாறே குறிப்புக்கள் எழுதிக் கொண்டிருக்கும் ப்ளக்சாட்டை, ஒர் பத்திரிகை நிருபர் என எண்ணி நெருங்குகிறான் “என்ன செய்தி” பத்திரிகையைச் சேர்ந்த நிருபரான வீக்லி. ப்ளக்சாட் எந்தப் பத்திரிகையை சேர்ந்தவன் என அவனிடம் வினவுகிறான் வீக்லி. அவனை முறைத்துக் கொள்ளும் ப்ளக்சாட், அந்த இடத்தை விட்டு பூனை நகர்வது போல் நகர்கிறான். தன்னை நீயு லைன் நகரத்திற்கு வரவழைத்த மிஸ். கிரே எனும் பள்ளி ஆசிரியை காணச்செல்கிறான் அவன்.

bs2 தன் பள்ளியில் பயின்ற சிறுமி கெய்லி கானாமல் போன விவகாரத்தை, தூவும் மென் மழையினூடு ப்ளக்சாடிடம் விபரிக்கும் மிஸ். கிரே, சிறுமியின் தாய் கூட இதனைப் பற்றி பொலிசிடம் முறையிடாதது குறித்து வருந்துகிறாள். நகரப் பொலிசும் கறுப்பு நகங்கள் குழுதான் சிறுமியைக் கடத்தியிருக்க வேண்டும் என்று குற்றம் சாட்டுகிறது என்பதனையும் தெரிவிக்கிறாள்.

தான் வாழும் நகரத்தின் நிலை பற்றி வருந்தும் அவளிடம் சிறுமியைக் கண்டுபிடிப்பதற்கு தன்னாலான முயற்சிகளை செய்வதாக கூறி விடை பெறுகிறான் ப்ளக்சாட்.

இலைகள் சிதறிக் கிடக்கும் நகரங்களின் தெருக்களில் நடந்து செல்லும் ப்ளக்சாட்டை இழுத்து நிறுத்துகிறது ஆர்க்டிக் தேசம் குழுவை சேர்ந்தவர்களின் பிரச்சாரம். குழுவினர் யாவரும் வெள்ளை நிறத்தவர்கள். அவர்களை உன்னிப்பாக அவதானித்தவாறே விலகி நின்று அவர்களின் நிறவெறி பூசப்பட்ட உரையைக் கேட்கிறான் ப்ளக்சாட். ஹக் என்பவன் வெள்ளை நிற மகாத்மியங்களை மேடையில் நின்று உரக்க கத்திக் கொண்டிருக்கும் இச்சமயத்தில் ப்ளக்சாடை ரகசியமாக நெருங்கும் வீக்லி, எம் உடம்புகளை சூடாக்கி கொள்ள ஏதாவது பருகலாம் வா என அவனை அழைக்கிறான்.

bs3 அருகிலிருக்கும் உணவு விடுதி ஒன்றில் நுழைகிறார்கள் வீக்லியும், ப்ளக்சாடும். உணவு விடுதியில் கறுப்பு நிற மக்களிற்கு அனுமதியில்லை எனும் ஒர் அட்டை தொங்குகிறது. இதனைப் பொருட்படுத்தாது குடிப்பதற்கு பானங்களை ஆர்டர் செய்து பருகுகிறார்கள் இருவரும். இருவரும் பரஸ்பரம் உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில் ஹக்கின் தலைமையில் உள்ளே நுழைகிறது ஆர்க்டிக் தேசம் குழு.

உணவுவிடுதியில் சூதாட்ட இயந்திரத்தில் சில்லறைகளிட்டு தன் அதிர்ஷ்டத்தை குலுக்கி கொண்டிருக்கும் காட்டென் எனும் கருப்பு நிற முதியவனை அனுகும் அவர்கள், அவனிற்கு உணவு விடுதியில் என்ன வேலை என்று கேட்டு நையாண்டி செய்கிறார்கள். தூய்மையான இந்த நகரத்தை நீங்கி லாஸ்வேகாஸ் செல்வதற்காக தான் சூதாடிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறான் அம்முதியவன். பின்பு ப்ளக்சாட் இருக்கும் மேசையை நோக்கி வரும் குழு அவனிற்கு அட்டையில் எழுதி இருக்கும் அறிவிப்பை படிக்க தெரியாதா எனச் சீண்ட, தொடரும் மோதலின் விளைவாக, ப்ளக்சாடும், வீக்லியும் நகரத்தின் போலிஸ்அதிகாரி, ஹருப் முன் கொண்டு சென்று நிறுத்தப்படுகிறார்கள்.

ஹருப்பின் கடந்தகாலம் வினோதமானது. அவன் முதல் மனைவி ஒரு கருப்பினத்தவள், லைன் நகரில் அவர்கள் குடியேறிய பின், நகரத்தின் உயர்மட்ட சமூகத்தில் தானும் ஒருவனாகி விட வேண்டும் எனும் ஆசையிலும், நிறவெறி கொண்ட ஒல்ட்ஸ்மில் போன்ற பணக்காரர்களின் சகவாசத்தினாலும் அவன் நிற வெறி கொண்டவனாக மாறிவிடுகிறான். தன் முதல் மனைவியை விட்டு விலகி விடுகிறான். அழகான இளம் பெண்ணான ஜெஸபெல்லை பின்பு மணந்து கொள்கிறான். ஆர்க்டிக் தேசம் குழுவிற்கும் ஹருப்பிற்கும் தொடர்பு இருக்கிறது.

bs4 தன் முன்னே கொண்டு வந்து நிறுத்தப் பட்ட வீக்லியையும், ப்ளக்சாட்டையும் தீயுடன் மோதிப்பார்க்க வேண்டாம் எனவும் லைன் நகரில் அவர்கள் இருப்பதை தாம் விரும்பவில்லை என்றும் கூறி எச்சரிக்கை செய்து அனுப்புகிறான் ஹருப்.

ஹருப்பின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது தன் விசாரனையைத் தொடரும் ப்ளாக்சாட், காணாமல் போன சிறுமி கெய்லியின் தாயை அவள் பணிபுரியும் ட்ரைவ் இன் சினிமாவில் சந்திக்கிறான். தன் வேலை நேரம் முடிவடைந்த பின் கெய்லியின் தாயான டினா, ப்ளக்சாட்டுடன் உரையாடுகிறாள்.

வெள்ளை நிறத்தவரின் சட்டங்கள் மேல் தான் கொண்டுள்ள அவநம்பிக்கை காரணமாகவே தன் மகள் காணாமல் போனது குறித்து பொலிசில் முறையிடவில்லை என்பதை ப்ளக்சாடிடம் தெரிவிக்கும் டினா, வெளி நகரத்திலிருந்து வந்திருப்பவர்களிற்கு லைன் நகரின் உண்மைகள் புரியாது என்கிறாள். சில காலத்தின் முன்பு ஹருப்பின் வீட்டில் தான் பணிப்பெண்ணாக பணிபுரிந்ததையும், தன் மகளான கெய்லியை ஹருப் பார்த்த விதம் தன் இரத்தத்தை உறைய வைத்தது என்றும் கூறுகிறாள்.

bs5 ஹருப் மிக ஆபத்தானவன் என்று அவனிடம் தெரிவிக்கும் டினா, தான் போலிசாரின் உதவியை நாடப்போவதில்லை என்பதை தெரிவிக்கிறாள். தன் மகளின் நிலை என்னவாகவிருக்குமோ எனக் கண்ணீர் சிந்தும் அவளை ஆதரவாக தழுவிக் கொள்ளும் ப்ளக்சாட், டினாவிற்கும் செல்வந்தன் ஒல்ட்ஸ்மில்லின் மகனிற்குமிடையில் ரகசிய தொடர்பு இருந்தது உண்மையா என வினவ, ஆத்திரம் கொள்ளும் டினா ப்ளக்சாடின் கன்னத்தில் அறைந்து விடுகிறாள்.

பலசரக்கு கடை ஒன்றில் வீக்லியை சந்திக்கும் ப்ளக்சாட், டினாவின் ரகசியத்தொடர்பு பற்றி அவன் தனக்கு தந்த தகவலின் நம்பகத்தன்மை குறித்து வினவுகிறான். இவ்வேளையில் துப்பாக்கி சகிதமாக கடைக்குள் நுழையும் கறுப்பு நகங்கள் குழு குண்டர்கள், ரவுடிகளிற்கு கடையில் இடமில்லை எனக் கூறும் கடைச் சிப்பந்தியை தாக்குகிறார்கள், பின் வீக்லியை நெருங்கும் தடியன் ஒருவன் அவனை அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வண்ணக்குழம்பு டப்பாக்கள் மேல் தூக்கி எறிகிறான்.

bs6 வண்ணக் குழம்பு தலையில் வழிய கீழே கிடக்கும் வீக்லியை நெருங்கும் தடியன் வீக்லியின் வாயில் ஒரு தாளைச் செருகி, எமக்கும் சிறுமி காணாமல் போனதிற்கும் சம்பந்தமில்லை, ஒல்ட்ஸ்மில்லையும், அவன் கிறுக்கு மகனையும் ஹருப் இவ்விவகாரத்திலிருந்து பாதுகாக்கிறான் என்பதை செய்தியாக போடும் படி மிரட்டுகிறான். ப்ளக்சாட்டுடன் முறைத்துக் கொண்டபின் குண்டர் குழு கடையை விட்டு வெளியேறுகிறது.

சிறுமி காணாமல் போன விவகாரத்தில் ஹருப்பின் பங்கை அறிய வேண்டி வீக்லியை ஹருப்பின் வீட்டை வேவு பார்க்க சொல்லிக் கேட்கும் ப்ளக்சாட் பின் செல்வந்தன் ஒல்ட்ஸ்மில்லைக் காண்பதற்காக செல்கிறான்.

டென்னிஸ் மைதானத்தில் தன் அரைக்கிறுக்கு மகனுடன் டென்னிஸ் விளயாடிக்கொண்டிருக்கும் ஒல்ட்ஸ்மில்லை நெருங்கும் பளக்சாட், ஒல்ட்ஸ்மில்லிடம் கெய்லியின் விவகாரத்தில் அவன் மகன் பெயர் அடிபடுவதைக் கூறுகிறான். ப்ளாக்சாடிடம், தன் கிறுக்கு மகனை ஒர் முறை நன்றாக பார்க்க சொல்லும் ஒல்ட்ஸ்மில், இவனுடன் யாராவது படுக்க விரும்புவார்களா எனக் கேட்கிறான்.

bs7 சிறுமி கெய்லி, ஹருப்பின் மகளாக இருந்தால் அது தனக்கு ஆச்சர்யத்தை தராது எனக்கூறும் ஒல்ட்ஸ்மில், பின் நிறவெறி தெறிக்கும் கருத்துக்களை உதிர்க்க, அவனிற்கு சூடாக பதிலளித்து விட்டு அவ்விடத்தினை விட்டு நீங்குகிறான் ப்ளக்சாட்.

ஹருப்பின் வீட்டை மறைந்திருந்து வேவு பார்க்கும் வீக்லி, ஹருப்பின் மனைவி ஜெஸபெல்லிற்கும் ஆர்க்டிக் தேசம் குழுவைச் சேர்ந்த ஹக்கிற்கும் இடையில் ரகசிய உறவு இருப்பதை கண்டுபிடித்து விடுகிறான். அவர்களின் லீலா வினோதங்களையும் போட்டோ பிடித்து விடுகிறான்.

ப்ளக்சாட்டை சந்தித்து அவனிடம் இவ்விபரத்தைக் கூறும் வீக்லி, ஹக் வீட்டை விட்டுக் கிளம்பிய பின், ஜெஸபெல்லா, கெய்லியின் தாய் டினாவை ஒர் கபேயில் சந்தித்ததையும், டினா தன் மகள் துன்புறுவதை தன்னால் அனுமதிக்க முடியாது என அவளிடம் அழுதபடியே கூறியதையும் தெரிவிக்கிறான். ஹருப் மீது ப்ளக்சாட் கொண்ட சந்தேகம் இதனால் வலுக்க ஆரம்பிக்கிறது.

டினாவை மீண்டும் விசாரிக்க விரும்பி அவள் வீட்டிற்கு செல்லும் ப்ளக்சாட், அங்கு அவள் கொலையுண்டு கிடப்பதைக் கண்கிறான். ஹருப்பை அவன் செல்லும் ஆலயத்தின் வெளியே சந்திக்கும் ப்ளக்சாட் அவனை டினாவின் கொலையிலும், கெய்லியின் மறைவிலும் சேர்த்து குற்றம் சாட்டுகிறான், ஹருப்பின் மனைவி ஜெஸபெல்லும், ஹக்கும் ப்ளக்சாட்டை எதிர்த்துப் பேச ஆரம்பிக்க, ப்ளக்சாட், அவர்களின் ரகசிய உறவை நயமாக கோடி காட்டிப் பேசி விட்டு இடத்தை விட்டு விலகுகிறான்.

ஹருப்பை பற்றி வீக்லி, தன் பத்திரிகையில் தாறுமாறாக எழுதி விட, வீக்லியையும், ப்ளக்சாட்டையும் ஒர் வழி பண்ணுவதற்காக ஹக்கிடம் ஆர்க்டிக் தேசம் குழுவை ரகசிய இடத்தில் கூட்டச் சொல்கிறான் ஹருப். ஜெஸபெல்லாவிற்கும் தனக்கும் ப்ளக்சாட் கூறிய மாதிரி எதுவுமில்லை என ஹருப்பிடம் கூறும் ஹக்கை மோசமாகத் தாக்குகிறான் ஹருப்.

bs8 பத்திரிகை நிருபர் வீக்லி காணாமல் போய் விடுகிறான், முதியவன் காட்டென் மேல் சந்தேகம் கொண்டு அவனைத் தொடரும் ப்ளக்சாட், காட்டென், வீக்லியின் கமெராவை ரகசியமாக விற்க முயல்வதை கண்டு கொள்கிறான். காட்டெனை மிரட்டும் ப்ளக்சாட், வீக்லி எங்கிருக்கிறான் என்று கூறும்படி அவனிடம் கேட்க, ப்ளக்சாட்டை அவ்விடத்திற்கு தான் அழைத்து செல்வதாக கூறுகிறான் காட்டென். தனக்கு விரிக்கப்பட்டிருக்கும் சதி வலை பற்றி அறியாது காட்டெனை பின் தொடர்கிறான் ப்ளக்சாட்……

சிறுமி கெய்லி மீட்கப்பட்டாளா? வீக்லியின் கதி என்ன? டினாவைக் கொலை செய்தது யார்? தனக்கு விரிக்கப்பட்ட வலையிலிருந்து ப்ளக்சாட் தப்பித்தானா? போன்ற கேள்விகளிற்கு எதிர்பாராத திருப்பங்களுடனும், விறுவிறுப்பாகவும் விடை தருகிறது மீதிக்கதை.

1950களின் அலங்காரத்தில், நிறவெறி தெறிக்கும் சிறு நகர் ஒன்றில், மிகத் தந்திரமான வஞ்சம் தீர்க்கும் படலமொன்றை, ஆல்பத்தின் கடைசிப் பக்கங்கள் வரை மர்மத்தை வெளிப்படுத்தாது, தேர்ந்த ஒர் த்ரில்லராக ஆச்சர்யப்படுத்துகிறது BLACKSAD தொடரின் இரண்டாவது ஆல்பமாகிய ARCTIC NATION.

மிருகங்களின் தோற்றத்தில் தோன்றும் பாத்திரங்கள் மிகவும் சிறப்பாக படைக்கப் பட்டிருக்கின்றன [பாத்திரங்கள் மிருகங்களின் தோற்றத்தில் இருந்தாலும் காதாசிரியர் மனித சமூகத்தையே கதையில் குறிப்பிடுகிறார் என்பது தெளிவு ] , மர்மம், வன்முறை, செக்ஸ், நிறவெறி என கதையை சிறப்பாக சொல்லியிருக்கிறார் கதாசிரியர் JUAN DIAZ CANALES. அலட்டிக் கொள்ளாத ஆனால் அட்டகாசமான ஸ்டைலைக் கொண்ட துப்பறிவாளன் ப்ளக்சாட் போன்ற மிடுக்கான ஒர் பாத்திரத்தை படைத்ததிற்கு கதாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

bs9 கதையில் வரும் ஏனைய பாத்திரங்களிற்கும் அவர் சிறப்பான முக்கியத்துவம் அளித்திருக்கிறார். குறிப்பாக முதியவன் காட்டெனின் முடிவும், சிறுமி கெய்லியின் நிலையும் மனதை நெகிழ வைக்கும். டினா, ஜெஸபெல்லா, ஹருப், ஹக் என சகல பாத்திரங்களிற்கும் சிறப்பான பங்கை கதையில் அவர் தந்திருக்கிறார்.

கதாசிரியரின் பலமான கதையை தூக்கி நிறுத்துகிறது JUANJO GUARNIDOன் அசத்த வைக்கும் ஓவியங்கள். இவ்வளவு கம்பீரமாக பாத்திரங்களின் உணர்சிகளையும், அசைவுகளையும், உடல் பாஷையையும் வெளிப்படுத்தும் சித்திரங்களை நான் கண்டதில்லை. பக்கத்திற்கு பக்கம் அவரின் கடின உழைப்பு எங்கள் கண்களிற்கு விருந்து படைத்து நிஜப்பாத்திரங்களை கண் முன் உலவவிட்டுள்ளது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது

கதாசிரியரும், ஓவியரும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஜுவான் டயஸ் கனால், 1972ல் மாட்ரிட்டில் பிறந்தவர். பதினெட்டு வயதில் அனிமேஷன் பள்ளி ஒன்றில் சேர்ந்து கொண்டார். இங்கு அவரிற்கு ஜுவாஞோ குவார்னிடோவின் நட்பு கிடைத்தது. குவார்னிடோ பிறந்தது 1967ல்.

ஜூவாஞோ பின்பு பாரிஸில் உள்ள டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோவில் வேலையில் இணைய, கனால் ஸ்பெயினில் தங்கிக் கொண்டார். ஆனால் இப்பிரிவு ஒர் புதிய கனவின் பிறப்பின் முன் தடையாக நிற்கவில்லை. அக்கனவின் பெயர் ப்ளக்சாட். 1930களின் துப்பறியும் கதைகளின் பாணியில் கனால், ப்ளக்சாட்டை உருவாக்கினார்.

ப்ளக்சாட் தொடர் முதல் பிரெஞ்சு மொழியிலேயே வெளியாகியது. முதல் ஆல்பம் 2000ம் ஆண்டில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை மூன்று ஆல்பங்கள் வெளியாகியுள்ள ப்ளக்சாட் கதை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. முதலிரு ஆல்பங்களும் ஆங்கில பதிப்பாக வெளிவந்திருக்கின்றன. ப்ளக்சாட், தனக்கேயுரிய ஒரு பிரத்தியேக பாணியைக் கொண்டுள்ள காமிக்ஸ்களில் ஒன்று. அதன் வெற்றி தொடரும் என்பதில் சந்தேகமேயில்லை.


அன்பு நண்பர்களே, தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் அன்பான ஆதரவிற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், பதிவுகள் குறித்த உங்கள் கருத்துக்களை தயங்காது பதிந்து செல்லுங்கள்.

ஆல்பத்தின் தரம் [****]

ஆர்வலர்களிற்கு

BLACKSAD

ஆல்பங்கள்

Tuesday, July 14, 2009

எதிரி நம்பர் 1


1933களின் அமெரிக்கா. சிறையிலிருந்து வெளியேறிய ஜான் டிலிஞ்சர் [ Jhonny Depp ], தன் சகாக்கள் சிலரையும், ஒர் சிறை மீட்பின் மூலம் துணைக்கு சேர்த்துக் கொண்டு, சிக்காகோ பகுதிகளிலுள்ள வங்கிகளை கொள்ளையடிக்க ஆரம்பிக்கின்றான்.

பெடரல் அதிகாரியான எட்கார் கூவர், டிலிஞ்சரை மக்கள் எதிரி நம்பர் 1 ஆக அறிவித்து, அவனைக் கைது செய்வதற்கு பொறுப்பாக மெல்வின் பெர்விஸ் [Christian Bale] எனும் கண்டிப்பான பொலிஸ் அதிகாரியை நியமிக்கிறார்.

அமெரிக்காவின் மோசமான பொருளாதார சரிவிற்கு காரணமான வங்கிகளிற்கும், நிலைமையை சரிவரக் கையாளமலிருந்த அரசின் காவல் துறைக்கும் சவால் விட்டதன் மூலமாக மக்களின் மனதில் சிறிதளாவது இடம்பிடித்துக் கொண்ட குற்றவாளியாக இருக்கிறான் ஜான் டிலிஞ்சர்.

ஒர் சாதாரணக் குற்றவாளியிலிருந்து அவனை வேறுபடுத்திக் காட்ட முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் Michael Mann. பொலிசாரின் டிலிஞ்சர் தேடல் வேட்டையை, 1930களின் அமெரிக்காவை அப்படியே நுணுக்கமாக, கார்கள் முதல் துப்பாக்கிகள் வரை, எங்கள் கண்முன் கொண்டு வந்து காட்டியிருக்கிறார் அவர்.

டிலிஞ்சர் மனித உயிர்கள் மேல் மதிப்பு கொண்டவனாகவும், கொடுத்த வாக்கை காப்பாற்றுபவனாகவும் சித்தரிக்கப் பட்டிருக்கிறான். வங்கி கொள்ளை ஒன்றின் போது, அங்கு பணம் வைப்பிலிட வந்த ஆசாமியைப் பார்த்து நான் வங்கியின் பணத்தை கொள்ளையிடுபவன், உன் பணத்தை பத்திரமாக்கு என்று கூறும் காட்சி அவன் எப்படிப்பட்டவன் என்பதற்கு ஒர் சிறு உதாரணம்.

காவல் துறையால் தேடப்படும் ஒர் குற்றவாளியின் காதல் வாழ்க்கை கூட விரைவாக இருக்க வேண்டும் என்பது போல் டிலிஞ்சர், வில்லி [ Marion Cotillard ] இருவரிற்கும் இடையில் மலரும் காதல் வேகமானது. நம்பமுடியாதது. ஆனால் தன் இறுதி வரை தன்னுடன் அக்காதலை எடுத்துச் செல்லும் டிலிஞ்சரும், வில்லியும் நெகிழ வைக்கிறார்கள்.

வில்லி பாத்திரம் ஆரம்பத்தில் பெரிதாக தோன்றாவிடிலும், இறுதிக் கட்ட பொலிஸ் விசாரணைக் காட்சிகளில் அடி மேல் அடி வாங்கி சித்தரவதையுறும் அவர், தன்னை அடித்த பொலிஸ்காரனை கண்களில் பார்த்து பேசும் வசனங்களில் எங்கோயோ போய் விடுகிறார்.

public-enemies-bale_l மெல்வின் பெர்விஸ் என்ற கண்டிப்பான பொலிஸ் அதிகாரி பாத்திரத்தில் கிறிஸ்டியன் பேல், இறுகிய முகம், குறைவான பேச்சு என சிறப்பாக செய்திருக்கிறார். சட்டத்திற்கு புறம்பான முறைகளை கையாள வேண்டிய நிர்ப்பந்தங்களில் அவர் மெளனமாக உள்ளுக்குள் முறிவதை சிறப்பாக காட்டியிருப்பார். அடிவாங்கி நடக்க முடியாமல் இருக்கும் வில்லியை கழுவல் அறைக்கு அவர் தூக்கி செல்லும் தருணம் அற்புதம். கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் டிலிஞ்சரை நேரில் சந்திக்கும் தருணத்தில் கூட மிக அமைதியாக பண்பட்ட நடிப்பை வழங்குகிறார் பேல். தன் சக அதிகாரியை சுட்டுக் கொன்ற குற்றவாளியை ஒர் துரத்தலின் பின் துப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுட்டுக் கொல்லும் காட்சியும், அதற்கு முன்பான மோதலும் உறைய வைக்கும்.

ஜான் டிலிஞ்சர் பாத்திரத்தில் ஜானி டெப், அருமையாக செய்திருக்கிறார். வங்கிக் கொள்ளைகள், கைது செய்யப்படும் போது நிருபர்களிற்கு தரும் கூலான பேட்டி, தன் காதலி வில்லியை பொலிசார் கைது செய்து விடும் போது எதுவும் செய்ய இயலாமல் தவிக்கும் காட்சி. தன்னை கைது செய்ய நியமிக்கப்பட்டிருக்கும் விசேட பிரிவின் அலுவலகத்திற்குள் நுழைந்து, பேஸ் பால் ஸ்கோர் கேட்கும் காட்சி, இறுதியில் திரை அரங்கில் ஒர் படத்தின் வசனங்களில் ஆழ்ந்து போகும் காட்சி என அவர் வித்தியாசமான டெப்.

காவல் துறையின் பல வெற்றிகளிற்கு பின்னாக இருப்பது துரோகம் போலும். படத்தின் இறுதிக் காட்சியில் தெருவில் வீழ்ந்து கிடக்கும் அவ்வெற்றியை பார்த்தவாறே ஒர் துரோகம் மெளனமாக நடந்து செல்கிறது. உயிர் பிரியும் கடைசித் தருணத்தில் தன் காதலிக்காக டிலிஞ்சர் சொன்ன வார்த்தைகளை ,சிறையில் இருக்கும் வில்லியிடம் டிலிஞ்சரை சுட்ட பொலிஸ் அதிகாரி கூறுவதுடன் நிறைவடைகிறது படம். கண்களில் சற்று ஈரம் எட்டிப்பார்க்கும் முடிவு அது.

மைக்கல் மானின் மிகச்சிறந்த படம் எனக் கூற முடியா விடிலும் கூட, பாதிப் படம் கடந்த பின்னும் ஒர் பார்வையாளனை கதையுடன் ஒன்ற வைக்க முடியும் என்பதை நிருபித்திருக்கிறார் அவர். Heat க்கு பின்பாக அவரின் சிறந்த படம் இது என்பது என் கருத்து. ( *** )

Sunday, July 12, 2009

பனி யுகம்- 3

பூமியில் பனி யுகம் தன்னாதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. மனியின் [MANNY] ஜோடியான எலி [ELLIE] கர்ப்பமான நிலையில் பிரசவ காலத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. பிறக்கப் போகும் குட்டிக்காக ஒர் அழகிய பனிப்பூங்காவை உருவாக்குகிறான் மனி.

மனியின் நண்பனான டியாகோ, குடும்ப வாழ்க்கை என்பது தனக்கு ஒத்துப் போகாது என்று கூறி, தனியே தன் வாழ்வை தான் தொடரப் போவதாகக் கூறி பிரிந்து செல்கிறான்.

இவர்களின் நண்பனான சிட், தானும் ஒர் குடும்பத்தை உருவாக்கி மகிழ்வாக வாழ வேண்டும் என ஏங்குகிறான். பனிக்குகை ஒன்றில் தவறுதலாக விழும் சிட், அங்கு தனியே விடப்பட்டிருக்கும் மூன்று ராட்சத முட்டைகளை தன் குழந்தைகள் எனக் கூறி எடுத்து வந்து விடுகிறான்.

முட்டைகளை பாதுகாப்பாக தன்னிடத்திற்கு எடுத்து செல்லும் சிட் முட்டைகளுடன் செல்லம் கொஞ்சி விட்டு உறங்கிப் போகிறான். அவன் கண் விழிக்கும் போது முட்டைகள் பொரித்து வெளிவந்த மூன்று அழகிய டைனோசார் குட்டிகள் சிட்டை தங்கள் தாய் என எண்ணி பாச மழை பொழிகின்றன. அக்குட்டிகளை பொறுப்பாக வளர்க்க முடிவு செய்கிறான் சிட்.

இதற்கிடையில் மறைவிடத்தில் தான் இட்ட முட்டைகளை தேடி வருகிறது மம்மி டைனோசார். தான் முட்டைகளை இட்ட இடத்திலிருந்து அவை காணாமல் போனது கண்டு மம்மி டைனோசார் கோபம் கொள்கிறது. தன் வாரிசுகளைக் களவாடிய களவாணி யாரென்று அக்கம் பக்கத்தில் தேட ஆரம்பிக்கிறது மம்மி டினோசார்.

தேடல் வேட்டையின் போது சிட்டையும், மூன்று டைனோசர் குட்டிகளையும் கண்டு கொள்ளும் மம்மி டைனோசார், அவர்களை தன் வாயில் கவ்விக் கொண்டு தான் வாழும் பிரதேசத்திற்கு சென்று விடுகிறது.

தங்கள் அன்பு நண்பன் சிட்டைக் காப்பாற்ற நிறைக் கர்ப்பமாகவுள்ள எலியுடன் கிளம்புகிறார்கள் மனியும், டியாகோவும். அவர்களிற்கு அறிமுகமில்லாத டைனோசார்களின் புதிய உலகில் நுழையும் அவர்களிற்கு உதவிக்கு வந்து சேர்கிறான் பக் [BUCK].

ia2

ia1

ia3 ia4

ia5

ia6

ia8

ia7












வழமை போன்றே கூரான பற்கள் கொண்ட அணிலான ஸ்கிராட் ஒர் பருப்பை கைப்பற்றுவதற்காக எடுக்கும் பிரம்ம பிரயத்தனங்களுடன் ஆரம்பமாகிறது படம். இதில் அவரிற்கு போட்டியாக ஒர் பெண் அணிலை சேர்த்திருக்கிறார்கள், இவர்களிற்கிடையிலான மோதல்களும் பின்னர் அது காதலாக மாறுவதும் தனி டிராக். அவர்களின் டாங்கோ நடனம் செம சூடு.

குடும்பம், நட்பு, தாய்ப்பாசம் என செண்டிமெண்ட் பனியை அள்ளித் தூவியிருக்கிறார்கள். சிட் பாத்திரம் குடும்பத்திற்காக ஏங்கி, டைனோசார் குட்டிகளை பாசத்துடன் வளர்ப்பதும், மம்மி டைனோசாருடன் தன் வளர்ப்பு குழந்தைகளின் நற் பழக்கங்களிற்காக மோதுவதும், குட்டி டைனோசார்களின் மனதைக் கொள்ளை போட அவர்கள் இருவரும் போட்டி போடுவதும் அருமை. தன் குட்டிகளுடன் சேர்த்து சிட்டையும் தன் அரவணைப்பில் உறங்க வைக்கும் மம்மி டைனோசார் நெகிழ வைக்கிறார்.

படத்தில் அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விடும் பாத்திரம் பக். இலையால் மூடிய ஒற்றைக் கண், ருடி எனும் வெள்ளை டைனோசாரின் பல்லில் செய்த வாள் என ஜாக் ஸ்பாரோ கெட்டப்பில் கிறுக்குத்தனமான சேஷ்டைகளில் கதற அடிக்கிறார். காப்டன் ஆஹாப் மொபிடிக்கின் மேல் கொண்ட வஞ்சம் போல், முன்பு நடந்த ஒர் மோதலின் போது தன் ஒரு கண்ணை வாங்கி விட்ட கொடூர வெள்ளை டைனோசாரான ருடியின் மேல் பக் கொண்டுள்ள வஞ்சம், ருடியின் குரலைக் கேட்கும் போதெல்லாம் பக் தரும் ரியாக்‌ஷன் என தன் தனி ஸ்டைலால் மிகச்சிறந்த பாத்திரமாக மிளிர்கிறார் அன்பு நைனா பக்.

கிளைமாக்ஸ் காட்சிகளில் பிரசவ வேதனையில் துடிக்கும் எலி, அவளை கொன்று தின்று விட முன்னேறும் கொடிய சிறிய டைனோசார்கள், அவற்றினை தடுத்து தாக்கும் மனி, டியாகோ, எரிமலைக் குழம்பு ஆற்றில் தன் உயிரிற்காக போராடும் சிட், அவனைக் காப்பாற்ற, பறக்கும் டைனோசாரில் தன் எடுபிடி சிஷ்யர்களுடன் பறக்கும் பக் என இப்படியான ஒர் அசத்தல் ஆக்‌ஷனை சமீப காலத்தில் நான் பார்க்கவில்லை. அந்த பறக்கும் டைனோசார்கள் சேஸிங் காட்சி தூள்.

புதிதாகப் பிறக்கும் அந்த மமூத் யானைக்குட்டி அழகோ அழகு. பக் எடுக்கும் ஒர் கலக்கலான முடிவுடன் டைனோசார்கள் உலகை விட்டு தாங்கள் வாழும் பகுதிக்கு நண்பர்கள் திரும்புவதுடன் நிறைவடைகிறது படம். மகிழ்சியாலும், களிப்பாலும் எங்கள் மனமும் நிறைவடைகிறது. படத்தை சிறப்பாக இயக்கியிருப்பவர் CARLOS SALDANHA. பனி யுகத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிய அதே இயக்குனர்.

நண்பர்கள் யாவரும் பார்த்து மகிழ வேண்டிய சிறப்பான சித்திரம். (****)

கெட்ட ஆட்டம் போட

Thursday, July 2, 2009

காட்டில் ஒர் பியானோ

GetAttachment.aspx எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தன் வலைத்தளத்தில் சமீபத்தில் தான் படித்த மிக சுவாரஸ்யமான ஐந்து வலைப் பக்கங்களை தந்துள்ளார். அவற்றில் ஒன்றாக கனவுகளின் காதலன் வலைப்பூவும் இருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் பற்றி அறிந்த நண்பர்களிற்கு என் மகிழ்ச்சி எவ்வகையானதாகவிருக்கும் என்பதனைக் கூறத்தேவையில்லை.

நவீன தமிழ் இலக்கியம், சினிமா, நாடகம், குறும்படங்கள் என பல தளங்களில் செயற்படுபவர் அவர். தன் வசீகரிக்கும் எழுத்துக்களால் வாசகனின் அருகில் வந்து விடுபவர். சிறு வயது முதலே காமிக்ஸ் புத்தகங்களிற்கு ரசிகராகவும் அவர் இருக்கிறார். அவர் வலைத்தளத்தில் அவர் காமிக்ஸ் பற்றி எழுதியும் கூட இருக்கிறார். காமிக்ஸ் கதை ஒன்றை வெளியிட வேண்டும் என்ற ஆசையும் அவரிடத்தில் இருக்கிறது.

கனவுகளின் காதலனை அவர் படித்திருக்கிறார் என்பதே போதும் என்ற போது, அதனை தன் வலைத்தளத்தில் சிறப்பான பக்கம் என பரிந்துரை செய்ததை நான் ஒர் அற்புதம் என்பேன்.

என் வலைப்பூவிற்கு தொடர்ந்து ஆதரவு தரும் அன்பு நண்பர்களிற்கும், மதிப்பிற்குரிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கட்கும் என் அன்பு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கையில் காமிக்ஸுடன் எஸ்ரா அவர்கள் இருக்கும் இந்தப் படம் இளம் காளை விஸ்வா அவர்களினால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விஸ்வா ஒழுங்கு செய்திருந்த காமிக்ஸ் வாசகர்கள் ஒன்று கூடல் ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து சிறப்பித்திருக்கிறார் எஸ்ரா அவர்கள். விஸ்வாவிற்கு என் நன்றிகள்.





தன் பாட்டியின் உடல் நலம் சீர்குலைந்ததன் காரணமாக அவள் அருகில் சிறிது காலம் தங்கியிருக்க விரும்பும் தன் தாயுடன் டோக்கியோவிலிருந்து ஒர் சிறிய நகரத்திற்கு வந்து சேர்கிறான் சிறுவன் சுகே.

நகரிலிருக்கும் சிறு பள்ளியில் மாணவனாக இணைந்து கொள்ளும் சுகே, அவன் வகுப்பு மாணவர்கள் முன் தன்னை அறிமுகம் செய்து கொள்கையில், தான் சிறு வயதிலிருந்தே பியானோ கற்பதாக கூறுகிறான்.

புதிய வரவான சுகேயை சீண்ட விரும்பும் வகுப்பு மாணவர்கள், பள்ளியின் அருகிலுள்ள காட்டில் அனாதரவாக விடப்பட்டிருக்கும் பியானோவினை அவனால் இசைக்க முடியுமா எனக்கேட்டு தொந்தரவு தருகிறார்கள். அப்பியானோ யார் வாசித்தாலும் இசையைத் தருவதில்லை எனவே நீ முயன்று பார் என்று அவனைத் தூண்டுகிறார்கள்.

இவ்வேளையில் அங்கு வரும் கய் எனும் சிறுவன் சுகேயை சக மாணவர்களின் பிடியிலிருந்து காப்பாற்றுகிறான். காட்டின் மத்தியிலுள்ள பியானோவை தான் வாசிப்பதாகவும், அது நன்றாக இசையை வழங்கக் கூடிய ஒர் பியானோ என்றும் அவன் தெரிவிக்கிறான்.

பள்ளியில் அன்றைய வகுப்புகள் முடிவடைந்ததும் சுகேயை அருகிலிருக்கும் காட்டினுள் அழைத்து செல்கிறான் கய். பியானோ இருக்கும் இடத்திற்கு சுகேயை இட்டுச் செல்லும் கய், காட்டின் மத்தியில், தனிமையில் கம்பீரமாய் வீற்றிருக்கும் ஒர் பியானோவை அவனிற்கு காட்டுகிறான்.

அப் பியானோவைக் கண்டு மகிழ்ச்சியும், ஆச்சர்யமும் ஒருங்கே கொள்ளும் சுகே, அதனை இசைக்க விரும்புகிறான். பியானோவின் முன் அமர்ந்து தன் விரல்களால் அதனை இசைக்க முற்படுகையில் பியானோ இசைக்க மறுக்கிறது.

pianoforest01 இதனால் சற்றுக் குழப்பமுறும் கய், தான் முயன்று பார்ப்பதாகக் கூறி பியானோ முன்னமர்கிறான். அவன் விரல்கள் பியானோ மீது பட்டது தான் தாமதம், அவனை ஒர் மாயசக்தி அரவணைத்தது போன்ற ஒர் மயக்கத்தில் அப் பியானோவை அவன் வாசிக்க, பியானோவும் இனிய இசையை வழங்குகிறது. தான் கேட்கும் இசையில் மயங்கி, தன் நெஞ்சில் கைகளை வைத்துக் கொள்கிறான் சுகே.

கய் வசதியற்ற குடும்பத்தை சேர்ந்தவன், பியானோவை முறையாக கற்காதவன் என்பதை சுகே அறிந்து கொள்ளும் போது அது அவனை மேலும் வியப்புக்குள்ளாக்குகிறது. சிறுவன் கய்யை தன் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் சுகே.

சுகேயின் தந்தை ஒர் பிரபல பியனோக் கலைஞர். சுகேயின் தந்தையைப் போலவே அவன் ஒர் நாடு போற்றும் கலைஞனாக உருவாக வேண்டுமென்பது அவன் தாயின் அவா.

கய்யை தன் பாட்டியின் வீட்டிலிருக்கும் பியானோவை இசைக்க சொல்லி கேட்கிறான் சுகே. ஆனால் அப் பியானோவை முறைப்படி இசைக்க முடியாது கர்ணகடூரமான இசையை ஒலிக்க செய்கிறான் கய்.

கய் முறைப்படி பியானோவை இசைக்க கற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறான் சுகே. பியானோ தனக்கு ஒர் விளையாட்டு, மேலும் அதனைக் கற்றுக் கொள்ளுமளவிற்கு தான் வசதி படைத்தவன் அல்ல என்று கூறும் கய், சுகே அவனிற்கு பியானோ கற்றுத் தர முன் வந்த போதும் அதனைப் பிடிவாதமாக மறுத்து விடுகிறான்.

11-2_max சிறுவர்களின் பள்ளியில் இசை ஆசிரியராக பணிபுரிகிறான் அஜினோ. சுகேயின் தாய் மூலமாக அஜினோ ஒர் காலத்தில் ஜப்பானின் மிகவும் பிரபலமான ஒர் பியானோக் கலைஞனாக இருந்ததை சிறுவர்கள் இருவரும் அறிந்து கொள்கிறார்கள்.

அஜினோவைத் தன் மகனுடன் காணச்செல்லும் சுகேயின் தாய், சுகேவிற்கு அஜினோ பியானோ கற்பித்து தர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறாள். தான் முன்பை போல் பியானோ வாசிக்க கூடிய நிலையில் இல்லை என்று கூறும் அஜினோ, அவள் வேண்டுகோளை மறுத்து விடுகிறான். அஜினோவிடமிருந்து விடைபெறும் முன், கய் காட்டிலுள்ள பியானோவை பிரமாதமாக வாசிக்கிறான் என்பதை அஜினோவிடம் தெரிவிக்கிறான் சுகே. அஜினோவின் புருவங்கள் உயர்கின்றன.

அஜினோவிற்கு ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றினால் அவன் இடது கை முன்பு போல் இயங்க முடியாத நிலையில் அஜினோவின் பியானோக் கலைஞன் வாழ்க்கை உடைந்து போனது. அஜினோவிற்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பியானோவைக் கூட அவன் விற்று விடுகிறான். அப் பியானோவை வாங்கிய கபாரே மூடு விழாக் கண்டதால், அந்தப் பியானோவை கபாரேக்காரர்கள் காட்டில் தூக்கிப் போட்டு விடுகிறார்கள்.

பள்ளியின் அருகிலிருக்கும் காட்டின் மத்தியில் மெளனமாக அமர்ந்திருப்பது அவனுடைய பியானோ என்பதை அஜினோ அறிவான். அவன் இசைத்தாலும் அப்பியானோ இசை தருவதில்லை. இப்போது கய் அதனை வாசிக்கிறான் என்பது அவனிற்கு பெரும் ஆச்சர்யத்தை தருகிறது.

அன்றிரவு காட்டில் தன் பியானோவை தேடிச்செல்கிறான் அஜினோ. நிலவின் குளிர் ஒளி காட்டை நனைக்க, பியானோவினை அற்புதமாக கய் இசைப்பதை அவன் கண்டு கொள்கிறான். காடு முழுவதும் அந்த இசையை மயக்கத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறது. அந்த இசை தரும் பரவசம் அஜினோவின் கண்களில் ஊற்றாக வழிய, இசையை ரசித்துக் கேட்கிறான் அஜினோ.

2995597524_3843f09e93 கய் வாசிப்பதை நிறுத்தியதும் அவனை நெருங்கும் அஜினோ, எவ்வாறு கய் இப்படி பியானோ வாசிக்க கற்றுக் கொண்டான் என வினவ, சிறு வயது முதலே இந்தப் பியானோவுடன் விளையாடுவது தான் தன் பொழுது போக்கு என்கிறான் கய். அஜினோ, கய்க்கு தான் பியானோ கற்றுத் தருவதாக கூறுகிறான். ஆனால் கய்யோ என்னால் பியானோ கற்க முடியாது எனக் கூறி ஓடி விடுகிறான்.

பள்ளியில் ஒரு நாள் கய்யிற்கு BEETHOVAN, MOZART, CHOPIN, MENDELSHON ஆகியோரின் இசை வடிவங்களை இசைத்துக் காட்டுகிறான் அஜினோ. கய்யிற்கு இது வரை தெரிந்திராத இப் புதிய இசை வடிவங்கள் ஆச்சர்யத்தையும் அவற்றை உடனே இசைத்துப் பார்க்க வேண்டுமென்ற ஆவலையும் உண்டாக்குகின்றன.

காட்டிலுள்ள பியானோவில் அன்றிரவு இவ்விசை வடிவங்களை இசைக்க முயல்கிறான் கய். CHOPINன் “PETIT CHIEN” எனும் இசை வடிவம் மட்டும் அவனிற்கு வரவே மாட்டேன் என்கிறது.

அஜினோவைக் காணச் செல்லும் கய், தனக்கு CHOPINன் இசையை வாசிக்க கற்றுத் தர சொல்கிறான். மிக மகிழ்ச்சியுடன் ஒர் சாதாரணப் பியானோவில் கய்க்கு பியானோ கற்றுத்தர ஆரம்பிக்கிறான் அஜினோ.

சிறிது கால பயிற்சியின் பின், நிலவு பொழியும் ஒர் இரவில், கூரையில் பதித்திருந்த கண்ணாடி ஜன்னல் ஊடாக வழியும் நிலவின் கதிர்களில் ஊறியவாறே மெய்மறந்து CHOPINன் இசை வடிவத்தை பியானோவில் இசைக்கிறான் கய். அவனை மெளனமாக பார்த்து ரசிக்கும் அஜினோ, அவன் CHOPINன் இசை வடிவத்தைக் கற்றுக் கொண்டு விட்டதாக தெரிவிக்கிறான்.

அஜினோவிற்கு பதிலுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறான் சிறுவன் கய். ஜப்பானின் தேசிய பியானோப் போட்டிகளில் பங்கு பெறுவதற்காக நடைபெறும் வட்டார தெரிவுப் போட்டியில் கய் கலந்து கொள்ளல் வேண்டும் என கேட்கிறான் அஜினோ. முதலில் மறுத்தாலும் பின்பு அஜினோவிற்காக போட்டியில் பங்கு கொள்ள சம்மதம் தருகிறான் கய்.

இதே போட்டிக்காக, இரவு பகல் பாராது தீவிரமாக பயிற்சி செய்து கொண்டிருக்கிறான் கய்யின் அன்பு நண்பன் சுகே…..

எந்தவிதமான மிகைப்படுத்தல்களும் இன்றி, வேறுபட்ட இரு சிறுவர்களிற்கு இடையில் மலரும் நட்பை, அவர்கள் இருவரிற்கும் பொதுவாக உள்ள பியானோவைச் சுற்றி மென்மையாகப் பின்னியிருக்கிறார்கள். இரு சிறுவர்களின் நட்பும், அவர்களிற்கிடையில் தோன்றும் ஆரோக்யமான போட்டியும், தன்னை விட மற்றவன் சிறப்பாக செய்ய வேண்டும் என்று எண்ணும் அவர்கள் மனமும் பளிங்கு.

காட்சிகள் இயல்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன. பேசும் மிருகங்களோ, மரங்களோ படத்தில் இல்லை. அசர அடிக்கும் சித்திரங்களும் கிடையாது, ஆனால் கதை எங்களை இசை போல் மயக்கி தன்னுடன் எடுத்துச் செல்கிறது. படத்தில் இடம் பெறும் பியானோ இசை செவிக்கும், உள்ளத்திற்கும் இதமாக அமைகிறது.

சுகே, கய்யிடம் பியானோ என்பது தனக்கு ஒர் சாபம், பியானோவால் தான் இழந்தது அதிகம் என மனம் திறக்கும் கட்டம் நெகிழ வைக்கும். கய்யை மொசர்டின் ஆவிகள் கோஷ்டி கலாய்ப்பது, இறுதிப் போட்டியில் கய் சிறுமி டாகாகோவை உற்சாகப்படுத்தும் காட்சிகள் என்பன கலகல. இறுதிப் போட்டிக் காட்சி மிகச்சிறப்பாக இருக்கிறது. இசை, காட்சியமைப்பு என நெகிழ வைத்து விடுகிறது முடிவு.

MAKATO ISSHIKI என்பவரின் மங்கா படைப்பாகிய “PIANO NO MORI” கதையைத் தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை இயக்கி இருப்பவர் MASAYUKI KOJIMA. இசையமைத்திருப்பவர் KEISUKE SHINOHARA. பியானோ இசை வடிவங்களை பிரபல பியானோக் கலைஞர் VLADIMIR ASKHENAZY இசைத்திருக்கிறார்.

“உன்னை மட்டும் நான் சந்தித்திராவிடில் நான் பியானோவை வெறுத்திருப்பேன்” என்ற சுகேயின் வரிகளுடன் முடிவடைகிறது படம். மிகவும் அர்த்தமுள்ள வரிகள் இவை. பொறுமையுடன் பார்த்து ரசிக்க வேண்டிய படம்.

பிரெஞ்சு ட்ரெய்லர்

இசையை ரசிக்க

Friday, June 19, 2009

தேவர்களின் சிகரம்

lsd2

வணக்கம் அன்பு நண்பர்களே கடந்த பதிவுகளிற்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவிற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வழமை போன்றே உங்கள் கருத்துக்களிற்கான என் பதில்களை கருத்துப் பெட்டிகளில் நீங்கள் காணலாம்.

தவறவே விடக் கூடாத மங்கா கதை ஒன்றைப் பற்றிய பதிவுடன் இம்முறை உங்களிடம் வருகிறேன் நண்பர்களே. மங்கா கதை என்பதால் சித்திரப் பக்கங்களை வலமிருந்து இடமாக படிக்கவும். கதைக்குள் நுழையலாமா ?

மதிப்பிற்குரிய தலைவர் டாக்டர் செவனிற்கு….

“BECAUSE IT’S THERE”- G.MALLORY

நெடிதுயர்ந்த மலைச்சிகரங்களினூடு உயிரை சில்லிடச் செய்யும் காற்று வேகமாக ஓடிக் கொண்டிருக்க, கற்றையான முகில்களினூடு சூரியக் கதிர்கள் ஓடும் காற்றை எட்டித் தழுவிக் கொண்டிருக்கின்றன.

மலையின் 7900 மீற்றர் உயரத்தில் புவியியலாளன் நோயல் ஓடல், மலையில் காணப்படும் கற்களை எடுத்து ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். இது வரை யாரிற்குமே கிடைத்திராத வாய்ப்பு அது. அது அவன் மனதை குதூகலம் கொள்ளச் செய்தாலும், மலோரியும், இர்வின்னும் முதல் முதலாக மலையின் சிகரத்தை தொட்டு வெற்றி கொள்ளப் போகிறார்களே எனும் எண்ணம் அவன் மனதை பிசையவே செய்தது.

தீடிரென வீசும் பலமான காற்றில் மலைச்சிகரத்தை மூடியிருந்த முகிலாடை விலக, தன் முழுப் பிரம்மாண்டத்துடனும் உன்னதத்துடனும், அவன் கண்களில் விருந்தாக விரிகிறது எவரெஸ்ட் lsd3 மலையின் சிகரம். இந்த அற்புதக் காட்சியில் அவன் மனம் லயித்துப் போகிறது. சிகரத்தின் உயரத்தினை கூர்ந்து நோக்கும் அவன், அங்கு இர்வினையும், மலோரியையும் சிறு உருவங்களாக காண்கிறான். லிவர்பூலிலிருந்து கிளம்பி மூன்று மாதங்கள் ஓடி விட்டன, இர்வினை விடவும் மலைச்சுவாத்தியம் தனக்கு நன்கு பழகி விட்ட போதிலும், ஓக்சிஜன் கருவிகளின் நுட்பம் அறிந்த இர்வினை, மலோரி சிகரத்தின் உச்சியை வெற்றி கொள்ள தேர்ந்தெடுத்துக் கொண்டான்.

ஒர் காலத்தில் இச்சிகரங்கள் யாவும் கடலின் கீழ் ஆழ்ந்திருந்தன, எந்தச் சக்தி இவ்வளவு உயரத்திற்கு கடலை எடுத்து வந்திருக்கும் என்பதை யாரால் தான் உறுதியாகக் கூற முடியும்? மீண்டும் பலமாக வீசும் காற்றில், முகில்கள் வேகமாக சிகரத்தின் மேனியழகை மூடி விட, அவன் கண்களிலிருந்து மறைந்து போய் விடுகிறார்கள், இர்வினும், மல்ரோயும்..

8 ஜூன் 1924 அன்று, எவரெஸ்ட் சிகரத்தின் மீதான முதல் மனித ஏறலின் ரகசியத்தை தம் பின்னே விட்டு காணாமல் போனார்கள் அவ்விரு மலையேறிகளும்.

ஜூன் 1993 காட்மண்டு.

lsd4 ஒடுங்கிய தெருக்களில் கம்பளங்களை கூவிக் கூவி விற்கும் வியாபாரிகள், பிற தேசத்தவன் என்று தெரிந்ததும் அவனிற்கு கஞ்சா விற்க விரும்பும் நபர், ஆட்டோக்கள், மக்கள் யாவையும் மறந்து நகரத்தின் தெருக்களில் தொலைந்து விடத்துடிக்கிறான் புகாமச்சி. அவன் மனதின் வேதனையை அவ்விதத்திலாவாது குறைத்து விடலாமா எனும் ஆசை தான். காட்மண்டுவிற்கு அவன் நான்காம் முறையாக வருகை தந்திருக்கிறான். எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற விரும்பிய ஜப்பானியக் குழுவொன்றின் படப்பிடிப்பாளானாக அவன் இடம் பெற்றிருக்கிறான். அவன் மனதில் அந்த மலையேறும் நிகழ்ச்சியின் ஒர் தருணம் ஓட, அதனை மறக்க விரும்பி மேலும் தன் நடையை தொடர்கிறான்.

அவன் கால்கள் அவனை தாமல் எனப்படும் மலிவு விலை ஹாட்டல்களும், மலையேற்றத்திற்கு தேவையான பொருட்களை வாங்கவும் கூடிய பகுதிக்கு அவனையறியாமலே இட்டு வந்து விடுகின்றன. சகர்மாதா எனப்படும் பெயருள்ள கடையில் நுழையும் அவன், கடையை சுற்றிப் பார்க்கிறான். பல விதமான ஆடைகள், புத்தமதம் சார்ந்த பொருட்கள் இப்படியாக கடையிலுள்ள பொருட்களை பார்வையிடும் அவன் கண்களில் படுகிறது ஓர் பழைய கமெரா.

அக் கமெராவினை எங்கோ கண்ட ஞாபகம் அவனிற்கு இருந்தாலும் அவனால் அதனை உடனடியாக நினைவு படுத்தி விட முடியவில்லை. அக் கமெராவினை கண்ணாடிப் பெட்டியிலிருந்து வெளியே எடுத்து பார்க்கும் அவன், பேரம் பேசி அக்கமெராவை வாங்கி விடுகிறான். அந்த தருணத்தில் அக்கமெரா வழி ஒர் சந்திப்பு நிகழும் என்பதை அவன் அறிந்தானில்லை. ஆம், இமாலாயாவின் பிரம்மாண்டத்தில் மறைந்து வாழ ஆரம்பிக்கும் முன்பாக, மலையேறுவதில் வல்லவனும், பெயர்பெற்றவனும், முரடனுமான ஹபு ஜோஜியை அறிமுகம் கொள்ளப் போகிறான் புகாமச்சி.

தன் ஹோட்டல் அறைக்கு திரும்பும் புகாமச்சி, ஜப்பானிலுள்ள தன் நண்பனொருவனை தொடர்பு கொண்டு, அப் பழைய கமெரா பற்றிய விபரங்களை வேண்டுகிறான். நண்பனின் பதில் அழைப்பிற்காக காத்திருக்கும் வேளையில் இருவரைப் பலியெடுத்து விட்ட அந்த மலையேறும் சம்பவம் மீண்டும் அவன் மனதினை உறுத்த ஆரம்பிக்கிறது.

சில மணி நேரக் காத்திருப்பின் பின் தொலைபேசி மணி அடிக்க , அதனை ஆவலுடன் எடுத்து அவன் நண்பனுடன் பேசுகிறான் புகாமச்சி. எதிர்முனையில் இருக்கும் அவன் நண்பன், மலோரி 1924ல் தன்னுடன் எடுத்து சென்ற கமெரா, புகாமச்சி கடையில் வாங்கிய பழைய கமெரா வகையை ஒத்ததே என தெரிவிக்கிறான். தன் கையில் இருப்பது மட்டும் எவரெஸ்ட் மீது ஏறும்போது மலோரி தன்னுடன் எடுத்து சென்ற அதே கமெராவாகவிருந்தால் எவரெஸ்ட் மலையேற்ற சரித்திரமே மலையேற வேண்டியிருக்கும் என எண்ண ஆரம்பிக்கின்றான் புகாமச்சி.

சகர்மாதா கடைக்கு திரும்பவும் வரும் புகாமச்சி, கமெரா அக்கடைக்கு எப்படி வந்தது என விசாரிக்கிறான். கடையில் பொறுப்பாக நிற்கும் மணிக்குமார், தனக்கு அது குறித்து நினைவு வரும் போது புகாமச்சியை தொடர்பு கொள்வதாக கூறுகிறான். அவனிடம் ஒர் தொலைபேசி எண்ணை தந்து, கடையை விட்டு வெளியேறுகிறான் புகாமச்சி.

மணிக்குமார் பற்றி அவன் விசாரித்த இடங்களில், அவனைக் குறித்து எச்சரிகையாக இருக்க சொல்லி புகாமச்சிக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் சிகரமாக தன் அறைக்கு திரும்பும் அவன், தான் வாங்கிய பழைய கமெராவை யாரோ திருடி விட்டதை அறிந்து கொள்கிறான். அவன் சந்தேகம் மணிக்குமார் மேல் திரும்புகிறது.

மலோரி, மற்றும் இர்வின் மறைவு பற்றிய புத்தகம் ஒன்றைப் படித்தவாறே தூங்கிப் போகிறான் புகாமச்சி. மறுநாள் மாலை 3 மணிக்கு அவனிற்கு ஒர் தொலைபேசி அழைப்பு வருகிறது. மணிக்குமாரை அவன் கடைக்கு தேடிச்செல்லும் புகாமச்சிக்கு, தனக்கு கமெராவைக் கொண்டு வந்து தந்தவர் இவர்தான் என நாரதர் ராசேந்திராவை அறிமுகம் செய்கிறான் மணிக்குமார். நாரதர் தான் கமெராவை வாங்கியது மலையேற்றங்களில் பொதிகள் மற்றும் உபகரணங்களைச் சுமப்பவனாக பணியாற்றும் கோத்தமாவிடம் என்கிறான். கோத்தமாவை தேடிச் செல்கிறான் புகாமச்சி.

lsd5 பந்தயம் கட்டி விளையாடிக் கொண்டிருக்கும் கோத்தமாவை ஒர் மது பான விடுதிக்கு அழைத்து சென்று கமெரா அவனிற்கு எப்படிக் கிடைத்தது என வினவுகிறான் புகாமச்சி. உனக்கு இந்தப் பழைய கமெரா மேல் ஏன் இவ்வளவு அக்கறை என எதிர்க் கேள்வி கேட்கிறான் கோத்தமா. இதனால் உஷாரடையும் புகாமச்சி, பணத்தை காட்டி கோத்தமாவை மயக்கி, அவனிற்கு அக் கமெராவை தந்தது இன்னொரு ஜப்பானியனே என்ற உண்மையை அறிந்து கொள்கிறான்.

அவன் பெயரைத் தனக்கு கூறும்படி புகாமச்சி கேட்க, அவன் பெயர் பிக்கலு சான்ங் எனக் கூறுகிறான் கோத்தமா. அவன் ஜப்பானியப் பெயர் தனக்கு தெரியாது என்றும் கூறி விடுகிறான். அவன் எங்கே வசிக்கிறான் என புகாமச்சி வினவ, எதிரிலிருந்த கோத்தமாவின் கண்கள் பயத்தால் விரிகின்றன, மதுச் சாலையை குப்பெனத் தாக்கியது ஒர் மிருக வாடை, புகாமச்சி அமர்ந்திருந்த மேஜையை நோக்கி ஒர் மனித மலை போன்று வந்து கொண்டிருந்தான் பிக்கலு சான்ங்.

பிக்கலு சான்ங் தங்களை நோக்கி வருவதைக் கண்டது முதல் கோத்தமாவின் உடல் லேசாக நடுக்கம் கொள்ள ஆரம்பிக்கிற்து, அவர்களிடம் வந்த பிக்கலு, புகாமச்சியிடம் இடைஞ்சலிற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டு, கோத்தமாவிடம் கடுமையாக பேச ஆரம்பிக்கின்றான். தன் நண்பன் வீட்டில் இருந்து அவன் திருடிச் சென்ற பொருட்கள் எங்கே என அவனிடம் கேட்கிறான் பிக்கலு. முதலில் மென்று முழுங்கும் கோத்தமா, பிக்கலு தன் நண்பனுடன் போலிசில் சென்று முறையிடுவதாக கூறியதும் உண்மையைக் கக்கி விடுகிறான். புகாமச்சியின் மூளையோ பிக்கலுவை இதற்கு முன் தான் எங்கோ பார்த்திருக்கிறோமே என சிந்திக்க ஆரம்பிக்கிறது.

கோத்தமா, புகாமச்சி, பிக்கலு, அவன் நண்பன் என யாவரும் மணிக்குமாரை தேடிச்செல்கிறார்கள். சகர்மாதா கடையில் இவர்களை வரவேற்கும் மணிக்குமார், முதலில் விடயம் தனக்கு புரியாதது போல் நாடகமாடுகிறான், போலிசிடம் முறையிடப் போவதாக பிக்கலுவும் அவன் நண்பனும் அவனை மிரட்ட, அச்சமுறும் மணிக்குமார் பதுக்கி வைத்திருந்த பொருட்களை எடுத்து பிக்கலுவிடம் தந்து விடுகிறான்.

அப்பொருட்களின் மத்தியில் தன்னிடமிருந்து களவாடப்பட்ட பழைய கமெராவைக் கண்டு விடும் புகாமச்சி, அது குறித்து பிக்கலுவிடம் கேள்விகளை எழுப்ப, அக் கமெரா பற்றி தனக்கு எதுவும் தெரியாது என முரட்டுத்தனமாக மறுத்து விடுகிறான் பிக்கலு. புகாமச்சியோ பிடிவாதமாக கமெரா கண்டெடுக்கப்பட்ட போது இக் கமெராவினுள் ஏதேனும் படச்சுருள் இருந்ததா என பிக்கலுவை பின் தொடர, நடந்த சம்பவங்களையும், கமெராவையும் மறந்துவிடும்படி கூறி விட்டு விலகிச் செல்கிறான் பிக்கலு. பிக்கலுவின் முதுகைப் பார்த்துக் கொண்டு நிற்கும் புகாம்ச்சிக்கு, பிக்கலு தன் காலை சற்று நொண்டி நடப்பது அவன் மூளையின் தேடலிற்கு விடையை தந்து விடுகிறது.

ஹபு என உரக்க அழைக்கிறான் புகாமச்சி, முன்னே நடந்து சென்று கொண்டிருந்த பிக்கலுவின் முதுகில் ஓடிய நடுக்கம் அவன் கண்களில் தெளிவாக தெரிந்தது. தன் நடையை ஒரு கணம் நிறுத்தியிருந்த பிக்கலு சுதாரித்துக் கொண்டவன் போல் மீண்டும் விலகி நடக்க ஆரம்பிக்கின்றான். மலையேறிகள் வட்டத்தில் இருந்து கரைந்து போய் விட்ட ஹபு ஜோஜி நேபாளத்தில் என்ன செய்கிறான் எனும் கேள்வி புகாமச்சியின் மனதை குடைய ஆரம்பிக்கிறது.

டோக்கியோ, ஒரு வாரத்தின் பின்.

lsd6 டோக்கியோவிற்கு திரும்பும் புகாமச்சி, அங்கு ஹபு ஜோஜி பற்றி விசாரிக்க ஆரம்பிக்கின்றான். தன் நண்பன் ஒருவன் வழங்கிய புகைப்படமொன்றின் பிரதியிலிருந்து, நேபாளத்தில் பிக்கலுவாக இருப்பது ஹபு ஜோஜி என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் அவன், ஹபு ஜோஜி தலைமறைவாகும் முன் அங்கத்தவனாக இருந்த மலையேறுபவர்கள் சங்க தலைவரை சந்தித்து ஹபு ஜோஜி பற்றி அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறான்.

பெற்றோரை இழந்த இளம் அனாதையான ஹபு, எவ்வாறு தன் கடும் உழைப்பினாலும் முயற்சியாலும் மலையேறுவதில் வல்லவனாக மாறினான் என்பதை விளக்குகிறார் சங்கத் தலைவர். ஒரு தருணத்தில் மலையைத் தவிர வேறு எதுவுமே அவன் வாழ்வில் இல்லாதவனாகி விட்டதை அவர் விளக்குகிறார். ஹபுவிற்கு எல்லாமே மலையாக இருந்தது. அவன் மனதில், உயிரில் உயிராக மலை மட்டுமே இருந்தது, அவன் மலையுடன் மட்டுமே இருக்க விரும்பினான். இவ்வுலகில் அவனிற்காக மலை மட்டுமே இருந்தது.

lsd7 திறமைகளும், கனவுகளும் வசதி இல்லாத காரணத்தினால் முடக்கப்படுவது என்பது வாழ்வில் சகஜமான ஒன்று. ஹபு வசதியற்றவன், எனவே அயல் நாடுகளில் மலையேறச் செல்லும் குழுக்களில் இடம்பெற முடியாமல் மனம் வருந்துகிறான். அவன் பிரபலமாகாதவன் என்பதால் அவனிற்கு அணுசரனையாளர்களும் கிடைக்காது தவிக்கிறான்.

இந்த ஏமாற்றங்கள் அவனை ஏதாவது சாதனை செய்து தன் திறமையை நிரூபிக்க வேண்டுமென்ற நிலைக்கு உந்த ஆரம்பிக்கின்றன. மலையேறுபவர்கள் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவனுடன் இணைந்து ஒனி சுரா எனும் சிகரத்தின் உச்சியில் ஏறி சாதனை படைக்க விரும்புகிறான் ஹபு.

ஜப்பானின் ஒனி சுரா சிகரம் பேய்கள் [மனைவிமார்களின் தொல்லைகள் தாங்க முடியாது] தற்கொலை செய்யும் சிகரம் என பெயர்பெற்றது. ஐரோப்பிய சிகரங்களில் ஏறும் அனுபவத்தை வழங்க வல்லது. அச்சிகரத்தில் வசந்த காலத்தில் ஏறுவது என்பது ஏற்கனவே பல நபர்களால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதால், பனிக்காலத்தில் அச்சிகரத்தினை வெற்றி கொள்ள விரும்புகிறான் ஹபு. இதற்கும் தற்கொலைக்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது.

lsd8 தன் தளராத முயற்சியாலும், அவனின் உள்ளே இயல்பாகவே ஓடும் தந்திரமான மலையேறும் நுட்பங்களாலும் அந்த அசாத்தியாமான ஏறலை தன் சகாவுடன் இணைந்து சாதித்து விடுகிறான் ஹபு. ஒனி சுரா சிகரத்தில் பனிக்காலத்தில் முதன் முதலில் ஏறிய அணி எனும் சாதனையை உருவாக்குகிறான் ஹபு.

இச்சாதனையும் அணுசரனையாளர்களை அவனிற்கு பெற்றுத்தர தவறி விடுகிறது. ஐரோப்பிய, ஹிமாலாயச் சிகரங்களில் ஏறும் வாய்ப்புகள் அவனிற்கு வெகு தூரம் என்பதால், ஜப்பானின் மிகச்சிரமான மலைச் சிகரங்களில் ஏற ஆரம்பிக்கிறான் ஹபு. மலையேறும் போது ஹபு இலகுவான வழிகளை தேர்ந்தெடுப்பதில்லை, அவற்றை தவிர்த்து விட்டு கடினமான வழிகளின் மூலம் அவன் மலைச்சிகரங்களை வெற்றி கொள்ள விழைகிறான்.

ஹபு மலையேறுவதை பார்ப்பது, ஒர் வண்ணத்துப் பூச்சி மலையேறுவது போன்று அழகானது. அவன் ஏறும் வேகம் பிரமிக்கத்தக்கது. மிகச் சில மலையேறிகளில் மட்டுமே காணக்கூடிய ஒர் புனிதம், அவன் மலையேறும் முறைகளில் நிறைந்திருந்தது.

மலையின் முன்பாக ஹபுவிற்கு எதுவுமே தெரிவதில்லை. அவனிற்கென ஒர் நிரந்தர வேலை கிடையாது. பணி புரியுமிடத்தில் மலை ஏறுவதற்காக விடுப்புக்கள் தர மறுக்கும் பட்சத்தில் அவன் அவ்வேலையை ராஜினாமா செய்து விடுவான். அவனிற்கென ஒர் குடும்பமில்லை. அவன் ஒர் தனியன். மலையேறல் ஒன்றே அவன் மது, மதம் எல்லாம்.

ஹபுவின் தீவிரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமலும், கால ஓட்டத்தோடு வந்து சேரும் புதிய பொறுப்புக்களினாலும் மலையேறுபவர்கள் சங்கத்திலுள்ள சகாக்கள் அவனிடமிருந்து விலக ஆரம்பிக்கிறார்கள். ஹபு இணைந்து மலையேறுவதற்கு சகாக்கள் இல்லாதவனாகி விடும் நிலை ஏற்படுகிறது.

இச்சந்தர்பத்தில் தான் மலையேறுபவர்கள் சங்கத்தில் வந்து இணைகிறான், 18 வயது இளைஞனான கிஷி. சங்கத்தில் இணைவதிற்கு அவன் தந்த காரணம்- ஹபு ஜோஜி!

கிஷி, ஹபுவுடன் சேர்ந்து மலையேறுவதில் ஆர்வம் காட்டுகிறான். ஹபுவின் மேல் மிகுந்த மரியாதை கொண்டவனாக அவனிருக்கிறான். ஹபு ஆரம்பத்தில் அவனை ஒதுக்கி விட நினைத்தாலும், கிஷியின் உண்மையான அர்ப்பணிப்பு அவன் மனதை தொட்டு விடுகிறது. கிஷிக்கு மலையேறும் நுட்பங்களை கற்றுத் தர ஆரம்பிக்கின்றான் ஹபு. மலையேறுபவர்கள் சங்கத்திலுள்ளவர்கள் வியக்கும் விதமாக மலையேறுவதில் விரைவாக முன்னேற்றம் காண்கிறான் கிஷி. அவன் மலையேறுவதை பார்ப்பவர்கள் அது அப்படியே ஹபு மலையேறுவதைப் போலுள்ளது எனக்கூறி ஆச்சர்யப்படுகிறார்கள்.

ஹபுவுடன் மலையேற சம்மதம் தந்த சகா ஒருவன் இறுதி நேரத்தில் குடும்ப காரணங்களிற்காக மலையேற்றத்தில் இணையமுடியாது எனக் கூறிவிடுகிறான். மனம் வெறுத்துப் போகும் ஹபு வீட்டில் தனியாக இருந்தவாறே மனதை அலைபாய விடுகிறான். இவ்விடயத்தை தெரிந்து கொண்டு ஹபுவைத் தேடி அவன் வீட்டிற்கு வருகிறான் கிஷி. தான் அவனுடன் மலையேற வருவதாக அறிவிக்கிறான்.

இம்மலையில் ஏறுவது மிகவும் ஆபத்தானது. அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே இது முடியுமானது என ஆரம்பத்தில் மறுத்து விடும் ஹபு, பின் கிஷியின் பிடிவாதத்தினால் அவனைத் தன்னுடன் மலையேற அழைத்து செல்ல சம்மதிக்கிறான்.

lsd9 lsd10 மலையேற்றம் ஆரம்பிக்கிறது. சிரமங்கள் மிகுந்த ஏற்றம் அது. ஹபுவிற்கு ஈடு கொடுத்து ஏறுகிறான் கிஷி, ஆனால் களைத்துப் போகிறான். தன் களைப்பை வெளிக்காட்டி ஹபுவின் மலையேற்றத்தை தாமதிக்க அவன் விரும்பவில்லை.

தன் மாணவனின் மீது மனதில் பெருமை கொள்கிறான் ஹபு. மலையின் சிகரத்தை தொட்டு விடுவதற்கு இன்னும் சிறிதளவு உயரமே ஏற வேண்டிய நிலையில், ஹபுவை தொடர்ந்து ஏறிக்கொண்டிருந்த கிஷியின் கால்கள் வழுக்கி விட மலையிலிருந்து கீழே விழுகிறான் கிஷி.

அவன் உடல் மலையில் அடிபடுகிறது. மலையின் மடிப்பு ஒன்றை தாண்டி விழும் கிஷி, ஹபுவின் இடையில் இணைக்கப்பட்டுள்ள கயிற்றில், அரை உயிருடன் பாதாளத்தின் மேல் ஊசலாடுகிறான்.

நடந்த சம்பவத்தின் தீவிரம் ஹபுவிற்கு உறைக்க, கிஷி என உரக்க கத்தும் அவனிற்கு பலவீனமான குரலில் பதிலளிக்கிறான் கிஷி, அவனால் எதுவுமே செய்ய இயலாத நிலை.

உடலில் பட்ட அடிகள் அவனை மரணத்தின் சுவையை பருகச்செய்து கொண்டிருந்தன. கிஷியின் உடல் பாரம் ஹபுவை கீழே இழுக்கிறது. கீழே தொங்கும் கிஷி, ஹபுவிடம் தான் தொங்கிக் கொண்டிருக்கும் கயிற்றை அறுத்து விடச் சொல்கிறான். இதனால் இரு உயிர்கள் பறிபோவது தவிர்க்கப்படும் என்று கூறும் அவனை, மேலும் பேச வேண்டாம் என வேண்டுகிறான் ஹபு.

மலையில் ஆணியொன்றை அறைந்து, அதில் தன் உடலைத் தனியே பிரித்து பொருத்திக் கொள்ளக்கூடிய அமைப்பொன்றை ஏற்படுத்துகிறான் ஹபு. பின் மேலும் ஆணிகளை மலையின் சுவரில் பொருத்தி, அதில் வளையங்களை மாட்டி, கிஷியை தாங்கி கொண்டிருக்கும், தன் இடையில் இணைக்கப்பட்டுள்ள, பிரதான கயிற்றை தன் இடையிலிருந்து விடுவித்து அவ்வளையங்களில் இணைத்து விடுகிறான்.

கிசியின் உடல் பாரம் ஹபுவிடமிருந்து நீங்கியதால், மலையின் சுவர்களில் கால்களை ஊன்றி, உடலை வெளிநீட்டி தன் கீழ் தொங்கும் கிஷியை எட்டிப்பார்க்கும் ஹபு, கிஷியின் நிலையைக் கண்டதும் உடைந்து போகிறான். கிஷிக்கு நடக்கப் போவது என்ன என்பது அவனிற்கு தெரிந்திருந்தது.

கீழே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கிஷியின் குரல் வலிமை இழந்து கொண்டே போகிறது. தன் இரு கைகளாலும் கிஷி இணைக்கப்பட்டுள்ள கயிற்றை மேலே நோக்கி இழுக்கிறான் ஹபு. ஆனால் அதில் தோல்வியடைந்து விடுகிறான். இரண்டு மணி நேரமாக தொடரும் இப்போராட்டத்தினால் ஏற்படும் களைப்பு, மற்றும் கடும் குளிர் என்பன ஹபுவின் கண்களையும், உடலையும் சற்று அயரச் செய்து விடுகின்றன. இச்சமயத்தில் கிசியை தாங்கி கொண்டிருந்த கயிறு மலை மடிப்புடன் தொடர்ந்து உராய்ந்ததன் காரணமாக அறுந்து விட கீழே வீழ்கிறான் கிஷி.

அயர்ந்த நிலையிலிருந்து திடுக்கிட்டு மீளும் ஹபு, காற்றில் ஆடிக் கொண்டிருக்கும் அறுந்த கயிற்றைப் பார்க்கிறான். சற்று நேரத்திற்கு முன்பாக அக்கயிற்றின் மறு முனை தாங்கி நின்ற உயிரும் கூட அவனை விட்டு அறுந்து போயிருந்தது.

lsd12 அறுந்த கயிற்றை மேலே எடுத்து, அதன் உதவியுடன் மலையின் சிகரத்தை அடையும் ஹபு, மலையிலிருந்து இறங்கும் வழியாக கிஷியைத் தேடிக் கீழே செல்கிறான். மலையின் வெண்பனி போர்த்திய கல் மெத்தை ஒன்றில், ஹபுவில் தான் கொண்ட மதிப்பு சிறிதும் கசங்காது சிதறிப் போய்க்கிடக்கிறான் கிஷி. அவன் ஏற விரும்பிய மலைகளில் எல்லாம் இனி ஹபு அவனிற்காக ஏறுவான். கிஷியும் தளராது அவனைப் பின் தொடர்வான்.

இவ்விபத்தின் பின் அமைதியாகி விடுகிறான் ஹபு. மலையேறுபவர்கள் சங்கத்திலுள்ளவர்கள் தன் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஹபு தான் கயிற்றை அறுத்திருக்க வேண்டும் என அவன் முதுகின் பின் பேசுகிறார்கள். சங்கத்தை விட்டு விலகுகிறான் ஹபு. காலம் ஓடுகிறது. மலையேறுபவர்களிற்கான உடைகள் மற்றும் உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்கிறான் ஹபு.

நிறுவனம் ஒழுங்கு செய்யும் மலை ஏறும் நிகழ்வுகளில் வழிகாட்டியாகவும் அவன் பங்கு கொள்கிறான். மற்றவர்களிற்கு ஆபத்தாய் அமையும் எவ்வகையான மலையேற்ற முயற்சிகளையும் அவன் கைவிட்டு விடுகிறான்.

lsd11 இதே காலப்பகுதியில் ஜப்பானில் மலையேறுவதில் பிரபலம் அடைய ஆரம்பிக்கிறான் ஒருவன். அவன் மலையேறும் பாணியில் காற்றில் ஒளிந்திருக்கும் புத்துணர்ச்சி கலந்து இருக்கிறது.

பல நிறுவனங்களின் அணுசரனை மற்றும் உதவிகளுடன் அவன் நிகழ்த்தும் மலையேற்றங்கள் மூலம் அவன் உலகப் புகழ் பெற ஆரம்பிக்கிறான்.

ஹபு ஏற்கனவே நிகழ்த்திய ஒனி சுரா சிகரத்தினை பனிக்காலத்தில் ஏறும் சாதனையை, அவன் ஒற்றை ஆளாக ஏறி சாதனை புரிகிறான்.

அவன் தனி நபராக நிகழ்த்தும் சாதனைகளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பிக்கிறான் ஹபு. அப்புதியவனின் சாதனைகளை தான் தனியாளாக முறியடிக்க வேண்டுமென்ற கனல் மெதுவாக அவனில் மலர ஆரம்பிக்கிறது. அவன் வாழ்வையே புரட்டிப் போடப் போகும் அப்புதியவனின் பெயர், ஹாஸ் ட்சுனியோ……




lsd13 ஹாஸ் ட்சுனியோவின் சாதனைகளை ஹபு முறியடித்தானா? புகாமச்சி எண்ணுவது போல் அந்தப் பழைய கமெரா மலோரியுடையதா? அக் கமெரா ஹபுவின் கைக்கு எங்கணம் வந்து சேர்ந்தது? காட்மண்டுவில் ஹபு, பிறர் அறியாமல் மறைந்து வாழ்வதன் காரணம் என்ன? ஹபுவை புகாமச்சி மீண்டும் சந்திப்பானா? எவரெஸ்டின் சிகரத்தினை முதலில் வெற்றிகண்டவர்கள் யார்? எனும் கேள்விகளோடு நிறைவு பெறுகிறது LE SOMMET DES DIEUX எனும் மங்காவின் முதல் பாகம்.

மலைகள், மலையேறும் முறைகள் மற்றும் நுட்பங்கள், அதிலுள்ள சிரமங்கள், மலையை வெற்றி கொள்ள பாடுபடும் மனிதர்கள் என ஒர் வித்தியாசமான உலகிற்கு எம்மை இட்டுச்செல்கிறது கதை. மிக விறுவிறுப்பாகவும், நுணுக்கமான தகவல்களுடனும் உணர்ச்சிகளை நெகிழ வைக்கும் சம்பவங்களுடனும் நகர்கிறது கதை.

இம் மங்கா முதலில் KAMIGAMI NO ITADAKI எனும் நாவலாக வெளிவந்தது. நாவலை எழுதியவர் ஜப்பானின் புகழ்பெற்ற எழுத்தாளரான YUMEMAKURA BAKU ஆவார். நாவலை மங்காவிற்காக தத்தெடுத்து, அதனை ஒர் காவியமாக்கியிருப்பவர் செட்டொனும் லிங்ஸ் பூனையும் புகழ் ஜிரோ டனிகுச்சி.

ஜிரோ டனிகுச்சியின் சித்திரங்கள் எம்மை உலகின் மலைச்சிகரங்களிற்கெல்லாம் அழைத்து செல்கின்றன. சிறப்பான கதைசொல்லலையும் அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார். மலையேறும் போது பாத்திரங்களுடன் கூட நாங்களும் கூடவே ஏறுவது போன்ற படபடப்பு நிச்சய அனுபவம். தன் வாழ்க்கையையே மலைக்கு தந்து விடுகின்ற ஒரு மனிதனின் கதையை எந்தவித ஜோடிப்புகளும் இன்றி யாதார்த்தமாகவும், வாசகனின் உணர்ச்சிகளை நுட்பமான ரசனையின் புள்ளிக்கு இட்டுவரும் விதமாகவும் தந்திருக்கிறார் டனிகுச்சி. கதையின் ஐந்து பாகங்களையும் படித்து முடிக்கும் போது ஹபு எனும் மனிதன் எங்கள் மனதை விட்டு நீங்கா இடத்தை பிடித்து விடுவான். ஜிரோ டனிகுச்சியும் தான். எங்களை காதலுடன் அழைத்து நிற்கும் மலைச் சிகரங்களாக!

மங்காவின் தரம் ******

ஆர்வலர்களிற்கு

LE SOMMET DES DIEUX

ஆங்கிலப் பதிப்பு

Sunday, June 14, 2009

பயணங்கள்


டோக்கியோவில் இசைக்குழுவொன்றில் Violoncellist ஆக இருக்கிறான் டாய்கோ (Masahiro Motoki). ஒரு நாள் இசை நிகழ்ச்சி ஒன்று முடிவடைந்த பின் அவன் பணியாற்றிய இசைக்குழு கலைக்கப்பட்டு விட்டது என்பதை அறிந்து அதிர்சியடைகிறான் அவன். இதனையடுத்து ஜப்பானின் மேற்குப் பகுதியிலிருக்கும் யமகட்டா எனும் தன் பிறந்த ஊரிற்கு தன் மனைவியுடன் திரும்புகிறான் டாய்கோ.

ஊரில் இறந்து விட்ட தன் தாய் தனக்கு விட்டுச் சென்ற வீட்டில் வசிக்கும் டாய்கோ, பத்திரிகைகளில் வேலைவாய்ப்பு விளம்பரங்களில் தனக்கு பொருத்தமாக ஏதாவது வேலை கிடைக்குமா என தேடுகிறான். ஒரு விளம்பரத்தில் வயது, முன்னனுபவம் எதுவும் தேவையில்லை, குறைந்த வேலை நேரம், நல்ல சம்பளம் பயண ஏஜென்சியில் வேலைக்கு ஆள் தேவை எனும் ஒர் அறிவிப்பைக் காணும் அவன் அந்த எஜென்சிக்கு வேலை தேடிச் செல்கிறான்.

ஏஜென்சியில் அதன் முதிய பாஸுடன்(Tsutomu Yamazaki) நிகழும் உரையாடலிலிருந்து அது உண்மையில் ஒர் பயண ஏஜென்சி அல்ல மாறாக ஜப்பானிய முறைப்படி இறந்தவர்களின் உடல்களை பெட்டிக்குள் வைக்கும் முன் அவ்வுடல்களை அவர்கள் நிகழ்த்தப் போகும் பயணத்திற்காக அலங்காரம் செய்து அழகுபடுத்தும் ஏஜென்சி என்பதை அவன் அறிந்து கொள்கிறான்.

இவ்வேலையை ஏற்பதற்கு டாய்கோ சற்று சங்கடப்படுவதை உணர்ந்து கொள்ளும் முதியவர், டாய்கோவை சில நாட்கள் தன் உதவியாளனாக பணிபுரிந்து பார்க்கும்படி கேட்கிறார். அதற்கு அரை மனத்துடன் சம்மதிக்கிறான் டாய்கோ.

ஆரம்பத்தில் தயக்கத்துடனும், சந்தேகத்துடனும் வேலையை ஆரம்பிக்கும் டாய்கோ காலத்தின் ஓட்டத்தில் சிறந்த, அர்பணிப்பு மிகுந்த கலைஞனாக உருமாற ஆரம்பிக்கிறான்.

19076844 வேலையின் முதல் நாளில், ஒரு விவரண படத்திற்காக டாய்கோவையே ஒர் பிணமாக நடிக்க சொல்லி விடுகிறார் முதியவர். அதிலிருந்து ஆரம்பிக்கும் நகைச்சுவை, மரணத்தை சுற்றியிருக்கும் பிரிவு, வலி, ஏமாற்றங்கள், உடைந்த கனவுகள் என மெதுவாக மாற்றம் உற்று எங்களையும் சிரிக்கவும், நெகிழவும் வைக்கின்றன.

இறந்தவர்களின் வீடுகளில் அலங்கார நிபுணர்கள் எதிர் கொள்ளும், குடும்பத்தவர்களின் எதிர்பாராத செயல்களை, அவர்கள் தங்கள் தொழில் திறமையாலும், அர்பணிப்பாலும் வென்றெடுப்பது நெகிழ்வாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒர் சமயம் இறந்த வீட்டிற்கு ஐந்து நிமிடங்கள் தாமதாக முதியவரும் டாய்கோவும் வந்து சேர்வார்கள் அதற்காக அவர்களை கடிந்து கொள்வார் இறந்த மனைவியின் கணவர். நிகழ்வின் முடிவில் தன் மனைவியின் உடலை முதியவர் அவள் உயிருடன் இருந்த காலத்திலும் பார்க்க அழகாக்கி விட்டதாக அவர் கூறி நெகிழும் காட்சி, மரணித்துவிட்ட திருநங்கை ஒருவரின் உடலை பெண் போன்று டாய்கோ அழகாக அலங்கரித்து முடித்து அவ்வீட்டை விட்டு வெளியேறும் போது, உங்கள் அலங்காரத்தில் என் பையனின் புன்னகையை கண்டேன் என அவர்களை தரையில் வீழ்ந்து வணங்கும் தகப்பன் என மனதை தொடும் காட்சிகள் நிறைய உண்டு.

ஆனால் இறந்த உடல்களை அலங்கரிக்கும் தொழில் சமூகத்தால் தீட்டுப்பட்ட வேலை என்று பார்க்கப்படுவதையும் காட்டி விடுகிறார் இயக்குனர். டாய்கோவின் நண்பன் அவனுடன் பேசுவதற்கே தயங்குகிறான், அவன் மனைவி அவனை விட்டு பிரிந்து சென்று விடுகிறாள். மரணம் பற்றி அல்ல அதனுடன் எப்போதும் அருகிலிருக்கும் வாழ்வையும் அதனை எப்படி வாழ்வது என்பதனையும் கண்டடைகிறான் டாய்கோ.

இவ்வருடம் சிறந்த அயல்நாட்டுப்படத்திற்கான ஆஸ்காரை வென்ற இப்படத்தை இயக்கியிருப்பவர் Yojiro Takita. அழகான காட்சியமைப்பு, [குறிப்பாக உடல்களை அலங்கரிக்கும் காட்சிகள் யாவும் ஓவியங்கள் போல் தீட்டப்பட்டிருக்கின்றன.] இனிய இசை, நடிகர்களின் அலட்டிக் கொள்ளாத நடிப்பு – அதிலும் முதிய பாஸின் நடிப்பு என சிறப்பாக உள்ள ஒர் படத்தில், அதன் நீளம் சற்றே இடிக்கிறது. மிக மெதுவாகவே படம் நகர்வதால் இதனைப்பார்த்து முடிக்க சற்று பொறுமையும் தேவைப்படும். ஆனால் உங்கள் பொறுமை உங்களை நிச்ச்சயம் ஏமாற்றாது. சிறந்த ஒர் படத்தினை பார்த்த அனுபவத்தை அது உங்களிற்கு வழங்கும். டாய்கோவின் தகப்பனின் கைக்குள்ளிருக்கும் அந்தக் கூழாங்கல்லை போல.

( ***** )


படத்தின் இசை என்னை மிகவும் கவர்ந்தது அதில் ஒரு சிறிய பகுதி கீழே, கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன். இசையமைத்திருப்பவர் KITANAO, MIYAZAKI ஆகியோரின் திரைப்படங்களில் பணிபுரிந்துள்ள JOE HISAISHI.

ட்ரெய்லர்

Friday, June 12, 2009

டெர்"டப்பா"மினட்டர்


வணக்கம் அன்பு நண்பர்களே,

சென்ற பதிவிற்கு நீங்கள் வழங்கிய அன்பான ஆதரவிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் மேலான கருத்துக்களிற்கு என் பதில்களை நீங்கள் அப்பதிவின் கருத்துப் பெட்டியில் காணலாம்.

மதிப்பிற்குரிய தலைவர் டாக்டர் 7 அவர்களிற்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று இச்சொற்களை நான் எழுதிக்கொண்டிருப்பதற்கு காரணம் அவர்தான். அவர் வலைப்பூவின் கருவறையில் பூத்ததுதான் கனவுகளின் காதலன்.

இங்கு காணப்படும் எல்லாப்பதிவுகளுமே அவரிற்குரியவைதான். அவர் மேல் நான் கொண்டுள்ள மதிப்பு என் மனதறியும்.

அவரிற்கென ஒரு பதிவு நிச்சயம் இடம் பெறும் அது வரையில் டீசராக இப்பதிவு.

terminator-salvation-bale மனிதகுலத்தின் இறுதி நம்பிக்கையான ஜான் கானரின் தலைமையில், டெர்மினட்டர்களின் தலைமையகமான ஸ்கைநெட் கோட்டையின் மீது இறுதி தாக்குதல் ஒன்றை நடாத்த திட்டமிடுகிறது போராளிகளின் கூட்டமைப்பு. ஆனால் ஸ்கைநெட்டின் ரகசியத்திட்டமோ ஜான் கானர், மற்றும் கைய்ல் ரீஸ் இருவரையும் ஒழித்துக்கட்டுவதோடு மட்டுமல்லாது போராளிகளின் கட்டளை அமைப்பையும் சிதைத்து விட, அவதானமாக வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தினை முறியடிக்க ஜான் கானரிற்கு உதவ முன் வருகிறான் புதியவனான மார்குஸ்…….

ஹெலிகாப்டர் ஒன்று டெர்மினட்டரின் தலையின் மீது தரையிறங்க, ஹெலியிலிருந்து கீழே இறங்கும் ஜான் கானர் [ கிறிஸ்டியன் பேல்] அகப்பட்டுக்கொண்ட டெர்மினட்ரின் தலையில் தோட்டாக்களைப் புதைத்து அதன் கதையை முடிக்கிறான். இந்த முதல் காட்சியில் நிமிர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள் நண்பர்களே, திரைப்படத்தினை தொடர்ந்து பார்க்கப் போகும் ரசிகர்களின் கதியும் இதேதான் என்பதை சிம்பாலிக்காக எடுத்துக் காட்டிய இயக்குனர் McG யின் புத்திசாலித்தனத்தினை பாராட்டியே ஆக வேண்டும்.

நீர், நிலம், ஆகாயம் என டெர்மினட்டர்களை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். உளவு பார்த்தல், துரத்தல், அழித்தல், கொல்லுதல் என அவைகள் செய்யாத சாகசங்களே இல்லை எனலாம். பேசாமல் ஒர் லோக்கல் டச்சாக பான்பாராக் விற்கும் ஒர் பெட்டிக்கடை டெர்மினட்டரையும் சேர்த்திருக்கலாம்.

Terminator-4-1714 கிறிஸ்டியன் பேல், சாம் வார்திங்டன் [ மார்குஸ் ] ஆகிய இரு நடிகர்களுமே ரொம்ம்ப நல்லவர்கள். இப்படியொரு டப்பாக் கதையில் மனம் வந்து நடித்திருக்கிறார்களே!!

சண்டைக்காட்சிகள் யாவும் சலிப்பையே தருகின்றன. ஒரு காட்சி கூட ரசிகர்கள் மத்தியில் பிரமிப்பை ஏற்படுத்த தவறிவிடுகிறது. தலையில் துண்டு கட்டிக்கொண்டு காவல் காக்கும் டெர்மினட்டர் மட்டும் நினைவில் நிற்கிறார்.

திரைப்படத்தின் உச்சக்கட்ட மோதல் காட்சிகளில் அம்மணமாக வந்து பங்கேற்கும் கலிபோர்னியாவின் கவர்னர் உருவம் கூட எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடவில்லை. ஒர் ஹாலிவுட் மயிலை அக்காட்சியில் போட்டிருந்தாலாவது கொஞ்சம் சூடாகியிருக்கலாம்!!!

இறுதிக்கட்டம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும், இது அக்காட்சியால் வந்த கண்ணீரல்ல, அப்பாடா படம் முடிந்ததே என்பதால் சொரிந்த ஆனந்தக் கண்ணீர்.

திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன் ரசிகர்களிற்கு கிடைக்கும் விடுதலை உணர்வு மட்டும் தான் இப்படத்தின் மூலம் கிடைக்கும் உண்மையான இரட்சணியம்!!! (*)