Tuesday, July 27, 2010

குத்துநகரில் இன்ஷெப்ஷன்


கடந்த 33 வருடங்களாக குத்து நகரில் இடம்பெற்று வரும் கலை, இலக்கிய மோதல்கள், சர்ச்சைகள் மற்றும் குத்துச் சண்டைகளிற்கு எல்லாம் ஒரு முடிவு அண்மித்து விடும் காலம் நெருங்கி விட்டதாகவே தோன்றுகிறது. குத்து நகரின் இலக்கிய வம்பளப்பவர்களின் மனதை வேதனைப்படுத்தும் இம்முடிவு இவ்வளவு சீக்கிரமாக நெருங்கியதற்கு காரணமாக குத்து நகரில் அண்மையில் வெளியாகியிருக்கும் Inception திரைப்படத்தை சுட்டிக் காட்டுகிறார்கள் அனுபவஸ்தர்கள்.

இன்ஷெப்ஷன் திரைப்படமானது பிரபல இயக்குனர் Christopher Nolan அவர்களின் அட்டகாசமான திறமையில், ரசிகர்களை அசர வைக்கும் விதமாக அல்லது அவர்கள் மனங்களில் கேள்விகளை ஊற்றாக கசிய வைக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் அவர்கள் குத்து நகரின் நம்பர் 1 இயக்குனர் டைமண்ட் ஸ்டோன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்ஷெப்ஷன் திரைப்படத்தின் கதை மிகவும் எளிமையானது. மனிதர்களின் கனவுகளில் கன்னம்வைத்துப் புகுந்து, அவர்கள் மனங்களில் புதைந்திருக்கும் ரகசியங்களைத் திருடி விற்று காசு பார்க்கும் கோஷ்டி ஒன்று, இம்முறை ஒரு மனிதனின் மனதில் ஒரு எண்ணக்கருவை விதைக்க புறப்படுகிறது.

மிகவும் அமர்க்களமாக, குத்து நகர பெரும்புள்ளிகளும், இலக்கியவாதிகளும், கலைஞர்களும் நிரம்பி வழிய, இன்ஷெப்ஷன் திரைப்படத்தின் பிரிமியர் காட்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. திரைப்படம் முடிவடைந்ததின் பின்பாக படத்தைக் கண்டு களித்த பிரபலங்களிடம் இருந்து நாம் திரட்டிய கருத்துப் புஷ்பங்களை எம் வாசகர்களின் களங்கமற்ற பாதக் கமலங்களில் காணிக்கையாக சமர்ப்பிக்கிறோம்.

காருமேகப் புலவர்:

inception-2010-2507-193710427 இன்றுவரையில் என் எண்ணத்தில் தோன்றிய அற்புதமான சிந்தனைகள் எல்லாம் என்னால் எழுதப்படுவதற்கு முன்பாகவே பிறரால் எழுதப்பட்டு உலக மகா இலக்கியங்களாக விருதுகளும், புகழும் பெற்றதை எண்ணி நான் ஆவேசமும், ஆச்சர்யமும், கிலேசமும் அடைந்திருக்கிறேன். பல சந்தர்ப்பங்களில் இப்பிரபஞ்சத்தில் பல புலவர்கள் என்னைப் போலவே எழுதுகிறார்கள் என்பதை நான் எடுத்தியம்பியிருக்கிறேன். அந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் என்னை எள்ளி நகையாடிய சாம்பிராணிகளிற்கெல்லாம் ஒரு வன்கனவடுக்காக இத்திரைப்படம் அமைந்திருக்கிறது.

என் மனதில் புகுந்து, என் சிந்தனைகளையும், கருத்துக்களையும், ரகசியங்களையும் இந்த Cobb கோஷ்டிதான் திருடி பிரபஞ்சம் எங்கும் விற்று காசு பார்த்திருக்கிறது என்பது இத்திரைப்படம்வழி உறுதியாகிறது. மேலும் தன்னை ஒப்பற்ற இலக்கியவாதி என்று கூறி பிரபஞ்சத்தை ஏமாற்றிவரும் ஜில்ஜில் மோகினிக்கும் இந்த திருட்டில் பங்கிருக்கிறது என்பதும் நிச்சயம். இவ்வாறாக தன் கருத்துக்களை சீற்றமாக முன்வைத்த காருமேகப் புலவரிடம் இதற்கான ஆதாரங்கள் உங்களிடம் இருக்கிறதா என நாம் வினவியபோது, நான் என்ன சொன்னாலும் அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்பதை முதலில் நிறுத்துங்கள் என்று பாய்ந்த அவர், எண்ணத் திருடன் காப் கோஷ்டி தனது அரிய எண்ணங்களை திருடியபோது அங்கு தவறுதலாக விட்டுச் சென்ற ஒரு பனங்கிழங்கு தன் அறிவுஜீவித[ன]த்தை தினமும் தூண்டிப் பார்க்கிறது என்று பதிலளித்தார்.

என் புதிய நூலான மலபார் தேங்காய்களை நீங்கள் படித்தீர்களா? என எம்மிடம் வினவிய காருமேகப் புலவர், நாம் எம் தலையை இல்லை என்பதற்கு அடையாளமாக மேலும் கீழும் ஆட்டியபோது, என் புத்தகத்தைப் படிக்காது என்னிடம் கேள்வி கேட்க வருவதை நிறுத்தித் தொலையுங்கள் என்று கண்டிப்புடன் கூறினார்.

நாவற் குள்ளன்:

பிரபல ரவுடி நாசக்குத்து நாவலன் அவர்களின் பிஏவான நாவற் குள்ளனை நாம் அணுகியபோது, படத்தின் ஆரம்பக் காட்சிகள், கனவில் நுழைதல் மற்றும் வெளியேறல், கனவுகளின் செட் அமைப்புகள், கனவுகளில் காலவேக வேறுபாடுகள் என பல தகவல்களை செறிவாக உள்ளடக்கி இருப்பதாக குறிப்பிட்டார். கனவுகளே வராத மனிதர்கள், விலைகொடுத்து வாங்கும் கனவுகளில் தம் விழிப்பை காண்பது காலத்தின் பரிதாபம் என்பதை சுட்டிக் காட்டிய நாவற்குள்ளன், காப் கோஷ்டியானது பிஷ்ஷரின் மனதில் எண்ணக்கருவை விதைப்பதற்காக கனவில் நுழையும் காட்சியிலிருந்து படத்தின் முடிவுவரை திரைப்படமானது 1000 குதிரைகள் கட்டிய ரதத்தின் வேகத்தில் பாய்வதாக கூறினார்.

inception-2010-2507-1623576840 படத்தின் திரைக்கதையும் அதனை இயக்குனர் நோலன் திரையில் எடுத்துச் சொல்லியிருக்கும் விதமும் பார்வையாளர்களை நாவல் மரமொன்றில் காட்டுக் கயிறுகளால் கட்டிப்போடுவதைப்போல கட்டிப் போடுகிறது. மேலும் திரைப்படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களிற்குமுரிய சிறப்பான நடிகர் தேர்வு, கதைக்கேற்ப உருவாக்கப்பட்டிருக்கும் கிராபிக்ஸ் சித்துக்கள் போன்றவையெல்லாம் இயக்குனர் நோலனின் அற்புதமான கதை சொல்லும் முறையால் திரைப்படத்தில் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றன என்பதையும் நாவற் குள்ளன் அவர்கள் எம்மிடம் தெரிவித்தார்.

ஒரு கனவிலிருந்து பிறிதொரு கனவிற்கு பார்வையாளனை நாவற்பழம்போல் அலேக்காக தூக்கி வீசுகிறார் நோலன் என்பதாகக் கூறிய நாவற் குள்ளன், நோலன் வீசும் வேகத்திற்கு ஈடு கொடுக்காது போனால் ரசிகர்கள், கனவுகளின் மரண உலகில் தொலைந்து போகும் வாய்ப்பிருப்பதையும் சுட்டிக் காட்டினார். படத்தின் இறுதிப்பகுதியில் வரும் சில காட்சிகள் பார்வையாளர்களை கனிந்த நாவற்பழங்களைப் போல இளக வைப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

திரைப்படத்தின் முடிவில் பார்வையாளர்கள், எண்ணத்திருடன் காப் போலவே அவன் வாழும் வாழ்க்கை கனவா அல்லது நனவா என்ற ஒரு கேள்வியை எழுப்பியே ஆக வேண்டிய ஓர் நிலைக்கு இயக்குனர் நோலனால் எடுத்து வரப்படுவதையும், இன்றைய இயக்குனர்களில் மிகச் சிறந்த ஒரு படைப்பாளியாக கிறிஸ்டோபர் நோலன் பின்னியெடுத்திருப்பதாகவும் நாவற் குள்ளன் கூறி முடித்தார்.

நாசக்குத்து நாவலன்:

inception-2010-2507-1613136931 திரைப்படத்தில் பார்வையாளன் நுழையும் இரண்டாவது கனவானது மிகவும் சிறப்பான, நளினமான ஆக்‌ஷன்களால் நிரம்பியிருக்கிறது என்று ஆரம்பித்த நாவல் ரவுடி, அக்கனவின் நாயகனான நடிகர் Joseph Gordon- Levitt க்கும் காலம் சென்ற நடிகர் Heath Ledger க்குமிடையில் முகச்சாயலில் நிலவும் ஒற்றுமை குறித்தும் வியந்தார்.

நோலனின் கனவுகளில் நடிகர் லெஜ்ஜர் தோன்றுகிறார் என்பதாக நான் ஊகிக்கிறேன் என்ற ஹேஸ்யத்தையும் அவர் வெளிப்படுத்தினார். மேலும் புவியீர்ப்பு அற்ற அக்கனவின் ஆக்‌ஷன் காட்சிகள் தன்னை பெரிதும் கவர்ந்ததாகவும், தன்னை வீழ்த்திய பச்சைக்கண் எதிரிக்கு எதிராக வெகுவிரைவில் இந்த நுட்பங்களை தான் உபயோகிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார். திரைப்படத்தின் பரபரப்பிற்கும், வேகத்திற்கும் பரவசத்தை ஊட்டுவதுபோல் Hans Zimmer ன் இசை செயற்படுவதாக குறிப்பிட்ட நாசக்குத்து நாவலன், தன் மத்தள வாசிப்பில் நாவற் குள்ளன் இவ்வகையான பரவசங்களை தர முயன்றால் தன் நாசக்குத்து மெருகேற வாய்ப்பிருக்கிறது என்பதை தெரிவித்து நகர்ந்தார்.

குத்து நகர மன்னன் குத்தலகேசி:

வெண்திரையில் Mal பாத்திரமாக வேடமேற்றிருக்கும் அன்னப்பறவை போன்ற நடிகையான Marion Cotillard தோன்றும் ஒவ்வொரு கணமும் என் லேட் மகாராணியை எண்ணி என் விழிகள் கண்ணீர் மேகங்களாக மாறியதை என்னால் தடுக்க இயலவில்லை. நடிகை மரியோன் கோட்டிஆர் மிக முக்கியமான ஒரு பாத்திரத்தில் என் மனதை பிழிந்திடும் வகையில் நடித்திருக்கிறார். மேலும் காப்பிற்கும் அவரிற்குமிடையில் நிகழும் அந்த வலி நிறைந்த தருணங்களும், உச்சக்கட்ட உண்மையும் என் கண்களை தீராத நீர் கொண்ட அருவியாக மாற்றியடித்துவிட்டன. இதனைக்கூறிய குத்தலகேசியின் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென உதிர்ந்தது. இதனை அவதானித்துவிட்ட மந்திரி குத்துப்பிடி ஒரு மதுக்கிண்ணத்துடன் மன்னரை நெருங்கினார்.

inception-2010-2507-897568623 தன் கண்களை துடைத்துக் கொண்டு மதுக்கிண்ணத்திலிருந்து ஒரு சிப் இழுத்த மன்னர் குத்தலகேசி, நடிகை மரியோன் கோட்டிஆரை விரைவில் அரச விருந்தாளியாக குத்து நகரிற்கு தான் வரவழைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். தன் லேட் மனைவி மட்டும் இன்று உயிரோடு இருந்தால், இளவரசன் இலுமினாட்டி ஒரு காமக்கொடூரனாக மாறியிருக்க வாய்ப்பேயில்லை என்பதை தெரிவித்த மன்னர் குத்தலகேசி, நடிகை மரியோன் கோட்டிஆர் தன்னை மணக்க சம்மதித்தால் இளவரசன் இலுமினாட்டிக்கு ஒரு நல்ல தாயும், மறுவாழ்வும் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் இந்த செய்தி இளவரசன் இலுமினாட்டியை உவகை கொள்ள வைக்கும் என்பதில் தனக்கு எள்ளளவும் ஐயமில்லை என்றும் கூறினார். இதனைக் கூறியபோது உணர்ச்சிகளின் மிகுதியால் அவர் குரல் தழுதழுத்திருந்தது.

inception-2010-2507-1438311088 மொத்தத்தில் மிக அற்புதமான ஒரு படைப்பாக குத்து நகர சிட்டிஷன்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது இன்ஷெப்சன். ஒரு முறையல்ல, பல முறை பார்த்து தெளிவுற்று இன்புற வேண்டிய படைப்பு இன்ஷெப்சன் என்பதில் ஐயமில்லை. ஆனால் சர்ச்சைகள் ஓயும் என்று நம்பியிருந்த குத்து நகர மக்களின் வாயில் மண் விழுந்த கதையாக புதிய சர்ச்சை ஒன்று எரிமலையாக இங்கு வெடித்திருக்கிறது. குத்து நகரின் நம்பர் 1 இயக்குனரான டைமண்ட் ஸ்டோன், இன்ஷெப்சன் திரைப்படத்தின் கதையானது 10 வருடங்களிற்கு மேலாக தன்னால் உருவாக்கப்பட்டது என்றும், நோலன் அதனை எண்ணத் திருடர்கள் உதவியுடன் திருடி விட்டார் எனவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என வழமைபோலவே நாம் எம் கேள்வியை வீசியபோது, முதல் கனவில் இடம்பெறும் மழைக்காட்சிகளே அது யாரிடம் இருந்து திருடப்பட்டதற்கு ஆதாரம் என்று தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டே பாய்ந்த அவர், பொறுத்திருந்து பாருங்கள் என் கனவுப் படைப்பான அதிநரனைக் கூட தன் கதையென நோலன் படமாக்குவார் என்றவாறே தடுமாறினார். அவரை மேலும் வேதனைப் படுத்திடாது நாம் அங்கிருந்து அகன்றோம். [****]

குத்து டைம்ஸிற்காக கபால் வைரவ்

26 comments:

  1. மீ த செகண்டு...

    // இன்ஷெப்ஷன் திரைப்படத்தின் கதை மிகவும் எளிமையானது. //
    உலகிலேயே முதன்முதலில் இப்படி எழுதிய எங்கள் தலைவன் கனவுகளின் காதலன் வாழ்க...

    //அக்கனவின் நாயகனான நடிகர் Joseph Gordon- Levitt க்கும் காலம் சென்ற நடிகர் Heath Ledger க்குமிடையில் முகச்சாயலில் நிலவும் ஒற்றுமை குறித்தும் வியந்தார் //
    ஆமாங்க... ஹீத் லெட்ஜெர் மாதிரியேதான் இருக்காரு.. பேட்மேன் 3வது பாகத்துல ஜோக்கர் கிடையாது இல்லையா... புது வில்லன் “Riddler”-ன் கதாபத்திரத்துல வர்றதுக்கு Joseph Gordon-Levitt-ஐதான் தேர்ந்தெடுத்து இருக்கறதா செய்தி...

    ReplyDelete
  2. நன்று.இன்னொரு கனவிலிருந்து பிரதிவாதி பயங்கரம்

    ReplyDelete
  3. மஞ்சள் அழகியை பெண்டாள நினைத்த சண்டாளன் இவனோ?

    ReplyDelete
  4. //உலகிலேயே முதன்முதலில் இப்படி எழுதிய எங்கள் தலைவன் கனவுகளின் காதலன் வாழ்க.//

    இந்தப் படத்தில் அப்படி என்ன காம்ப்ளக்ஸ் இருக்கு?

    ReplyDelete
  5. // இந்தப் படத்தில் அப்படி என்ன காம்ப்ளக்ஸ் இருக்கு? //

    படம் பார்த்துட்டீங்களா? அப்ப ஒரு பதிவ போடுங்க... கும்மியடிக்க கேள்விக்கணைகளோட இருக்கேன்... என்னைத்தவிர படம் பார்த்த எல்லாரும் மெமெண்டோவை விட இது பரவாயில்லைன்னு சொல்லறாங்க...

    ஆனா எனக்கு வேற மாதிரி தோணுது... மெமெண்டோ முதல் தடவை பாதி கூட புரியாதுதான்.. ஆனா, ரெண்டாவது மூணாவது வாட்டி பாக்க பாக்க முழுசாவே புரிஞ்சுடும்...

    இது வேறவகை... முதல் தடவையே நிறைய புரிஞ்சுடுச்சு... (இல்லன்னா படம் box office hit ஆகாதே).. ஆனா, மூணு வாட்டி பார்த்தும், முதல் தடவை இருந்த சந்தேகங்கள் அப்படியே இருக்கு... ஏன்னா நிறைய discontinuity... எவ்வளவுதான் assume பண்ணிக்கறது...?

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி . விரைவில் பார்த்துவிடுகிறேன்

    ReplyDelete
  7. //படம் பார்த்துட்டீங்களா? அப்ப ஒரு பதிவ போடுங்க... //

    பொது நலனை கருத்தில் கொண்டு.. இனிமேல் பதிவு போட வேணாம்னு இருக்கேன். :) :)

    ReplyDelete
  8. படம் பார்த்து 4 நாள் ஆய்டுச்சி.

    ReplyDelete
  9. //ஹாலிவுட் பாலா said...

    //படம் பார்த்துட்டீங்களா? அப்ப ஒரு பதிவ போடுங்க... //

    பொது நலனை கருத்தில் கொண்டு.. இனிமேல் பதிவு போட வேணாம்னு இருக்கேன். :) :) //

    ஏன் பாலி பாலி... வேற எதுவும் வேலை வந்துருச்சா :)

    ReplyDelete
  10. காரு மேகப் புலவர்....
    யாருயா இந்தப் பீசு?
    படா தமாஷ் பேர்வழியா இருக்கும் போல இருக்கே?மஞ்சத் தண்ணிய ரெடி பண்ண வேண்டியது தான். :)

    //என் புத்தகத்தைப் படிக்காது என்னிடம் கேள்வி கேட்க வருவதை நிறுத்தித் தொலையுங்கள் என்று கண்டிப்புடன் கூறினார்.//

    அய்...ஆடு ரெடி.

    ReplyDelete
  11. நண்பர் கருந்தேள், முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் ஜெய், வாழ்கவிற்கு நன்றி, நன்றி :)) பேட்மேன் வரும் முன்பாக சூப்பர்மேனை நோலன் தயாரிக்கபோவதாக கூறியிருக்கிறார். சூப்பர்மேன் கதையையும் நோலனே எழுதினால் சிறப்பாக இருக்கும். இன்னமும் 3 வருடங்களில் தெரிந்து விடும் யார் ரிட்லர் என! தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் போகன், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    விஸ்வா, இது என்ன புதிதாக நாடக வசனங்களை எல்லாம் அள்ளி வீசுகிறீர்கள் :)) வசனத்திற்கு நன்றி.

    நண்பர் ஹாலிவூட் பாலா, பொதுமக்கள் நலன் பாராது அடித்து தூள் கிளப்பும்படி வேண்டுகிறேன்:)) கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் பனித்துளி சங்கர், தவறாது பார்த்திடுங்கள், வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி.

    நண்பர் ராமசாமி கண்ணன், தங்கள் வருகைக்கு நன்றி .

    நண்பர் இலுமினாட்டி, குத்து நகரின் இலக்கியப் புயல்தான் காருமேகப்புலவர். அவரை வீணாக சீண்டாதீர்கள். உங்கள் கொலைவெறி தீரவே தீராதா :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  12. //என் புதிய நூலான மலபார் தேங்காய்களை நீங்கள் படித்தீர்களா? //

    தலைவர் சுஜாதா வாழ்க !! அவரின் ஒரு நாவலில், வசந்த், இந்தப் பெயரில் ஒரு கதை படித்துக் கொண்டிருப்பான். கணேஷிடம் அதைச் சொல்லவும் சொல்லுவான்.. இதே பெயர்.. மலபார் தேங்காய்.. அது நினைவு வந்துவிட்டது.. ;-)

    ReplyDelete
  13. //தன் லேட் மனைவி மட்டும் இன்று உயிரோடு இருந்தால், இளவரசன் இலுமினாட்டி ஒரு காமக்கொடூரனாக மாறியிருக்க வாய்ப்பேயில்லை என்பதை தெரிவித்த மன்னர் குத்தலகேசி//

    அடப்பாவிகளா.. இது என்ன ஏதோ incest ரீதியில் செல்கிறதே ?? :-)

    ReplyDelete
  14. //நடிகை மரியோன் கோட்டிஆர் மிக முக்கியமான ஒரு பாத்திரத்தில் என் மனதை பிழிந்திடும் வகையில் நடித்திருக்கிறார்//

    ஆல் டைம் ஹாலிவுட் கனவுக்கன்னி மரியோன் வாழ்க !! அந்த .. அந்த... உருண்டு திரண்ட.. பூரிப்பான.. வழுவழுவென்ற.................. முகத்தை என்னால் மறக்கவே முடியவில்லையே... அய்யகோ !

    ReplyDelete
  15. //மஞ்சள் அழகியை பெண்டாள நினைத்த சண்டாளன் இவனோ? //

    இது கன்ஃபர்மாக ஏதோ பழைய நாடக வசனமே தான் ;-) விஸ்வா, பழைய ஆங்கிலப் படங்கள் பார்த்துவிட்டு, அரதப்பழைய தூரதரிசன நாடகங்களையும் பார்க்கிறார் என்று கபால பைரவ் என் கனவில் வந்து சொன்னார் ;-)

    ReplyDelete
  16. கருந்தேள்...

    ////மஞ்சள் அழகியை பெண்டாள நினைத்த சண்டாளன் இவனோ? //

    இது கன்ஃபர்மாக ஏதோ பழைய நாடக வசனமே தான் ;-) விஸ்வா, பழைய ஆங்கிலப் படங்கள் பார்த்துவிட்டு, அரதப்பழைய தூரதரிசன நாடகங்களையும் பார்க்கிறார் என்று கபால பைரவ் என் கனவில் வந்து சொன்னார் ;-)//

    நமச்சிவாயம்! தெளிவில்லாத மனம்... தெளியும்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  17. மிகச்சிறப்பான பார்வை நண்பரே,படம் இந்த வாரம் எப்படியும் பார்த்துவிடுகிறேன்.

    ReplyDelete
  18. குத்துநகரில் இன்ஸ்பெக் ஷனா இன்ஷெப்ஷனா தயவு செய்து விளக்கவும்

    ஏனென்றால் குத்துநகரில் ஏகப்பட்ட ................. நடக்கிறதென்று ஒரு செய்தி வந்தது
    .

    ReplyDelete
  19. //மஞ்சள் அழகியை பெண்டாள நினைத்த சண்டாளன் இவனோ? //

    இது சாண்டில்யனின் கடல் புறா வில் இருந்து எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன்

    அநேகமாக விஸ்வா அண்ணன் இப்பொழுது சாண்டில்யன் புத்தகம் படிக்கிறார் என்று நினைக்கின்றேன்

    .

    ReplyDelete
  20. நண்பர் கருந்தேள், அந்தக்கதை.. வசந்த் வசந்த்.. அப்புத்தகத்தின் பக்கங்களைவைத்தே கணேஷ், வசந்தைக் கண்டுபிடிப்பார் என்று எண்ணுகிறேன். அந்தக் கதையின் பெயர் மறக்கவில்லை இங்கு போட்டுக் கொண்டேன் :))

    இன்ஷெஸ்ட் என்பது பெரிய வார்த்தை :)) அன்பான தாயின், கனிவான வளர்ப்பின்கீழ் வளர்ந்திருந்தால் இலுமினாட்டி ஊர்போற்றும் பிரஜையாக வந்திருப்பார் என்பதே அவ்வரிகளின் நோக்கம் :)

    சந்தேகமேயில்லாமல்... விஸ்வா, பழைய நாடகங்களை ரீ மேக் செய்தாலும் ஆச்சர்யம் இல்லை :))

    தலைவரே, என்சாய் :))

    நண்பர் கீதப்ப்ரியன் அவர்களே தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் சிபி, குத்துநகரம் ஒரு ஜனநாயக சமுத்திரம் என்பதை இங்கு அறியத்தருகிறேன். கடல்புறாவில் தப்பித்தவறிக்கூட இப்படி சாண்டில்யன் எழுதியதாக நினைவில் இல்லை :)) இது நிச்சயமாக பழைய நாடகங்கள் அல்லது சினிமாவிற்கு எழுதப்பட்ட வசனங்களாக இருக்கலாம் :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  21. வித்தியாசமான விமர்சனம்..பார்த்து கனவுகளின் காதலரே...உங்கள் கனவுகள் திருடப்பட்டு விடப்போகிறது..ஜாக்கிரதை..

    http://rameshspot.blogspot.com

    ReplyDelete
  22. நண்பர் ரமேஷ், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  23. நண்பரே,

    உங்க விமர்சனமே படம் மாதிரி வித்தியாசமாதான் இருக்கு! எனக்கு கனவே கொல்லாதே”ன்னு ஒரு காமிக்ஸ் கதை இந்த படத்த பார்ததப்ப ஞாபகம் வந்துச்சு!
    கனவே கொல்லாதே கதை மட்டுமே எனக்கு ஞாபகமிருக்கிறது. மனோதத்துவ டாக்டர் ஒருவர் பிறரின் மன அலைவரிசையை??! தன்னிடம் உள்ள கருவி மூலம் பதிவு செய்து கொண்டு ஒரு மனிதனை அவர்களின் கனவில் உலவ விடுகிறார். அந்த மனிதனோ கனவிலேயே தனக்கு பிடிக்காதவர்களை கொல்கிறான். தூக்கத்திலேயே மரணம் என்று போலீஸ் கேஸை மூட, டிடெக்வ் கதாநாயகன் அதை கண்டுபிடிக்கிறார். முடிவு வித்தியாசமாக இருக்கும்.. இப்ப எனக்கு என்ன சந்தேகம்னா அந்த காமிக்ஸ் நான் நிஜத்துல படிச்சேனா இல்ல கனவான்னு குழப்பமா இருக்கு! ஏன்னா ஹீரோ பேரு தெரியாம கதை ம்ட்டும் எப்படி ஞாபகம் இருக்குனே தெரியல! :(

    ReplyDelete
  24. This movie is based on The Supreme Yoga: Yoga Vasistha Book

    ReplyDelete